Friday 22 July 2016

கபாலி - ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி

எப்போதாவதுதான் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டும், அதுவும் ரஜினி படம் என்றால் எப்போதாவது வரும் என்பதால் எளிதாக தியேட்டருக்குச் சென்றுப் பார்க்கலாம். கபாலி திரைப்படத்தை பார்க்க இதுவரை சென்று இராத ஒரு தியேட்டரை தேர்வு செய்து முன்பதிவு பண்ணியாகிவிட்டது. அதிக விலை எல்லாம் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட விலை தான்.

அரைமணி நேரம் முன்னதாகவே தியேட்டர் சென்றால் அங்கே கூட்டமே இல்லை. நிம்மதியாக இருந்தது. கூட்டம் என்றாலே ஒருவித அலர்ஜி போலாகிவிட்டது. கூட்டம் என்பது ஒரு ஒழுங்கின்மையைக் குறிக்கிறது. கூட்டம் என வந்துவிட்டால் மக்கள் செயல்பாடுகள் மாறிவிடுகிறது.

உண்பதற்கு அருந்துவதற்கு என வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் முன்னர் தியேட்டருக்குள் சென்றால் நான்கு நபர்கள் மட்டுமே இருந்தார்கள். மகிழ்ச்சி. பின்னர் ஒவ்வொருவராக வரத்தொடங்கி கணிசமான கூட்டம் சேர்ந்துவிட்டது. நல்லவேளை பெரும் விசில் அடித்து ஆரவாரம் செய்யும் நபர்கள் இல்லாது இருந்தனர். ஒரு புத்தகம் வாசிக்கும் போதோ அல்லது ஒரு சினிமா பார்க்கும் போதோ தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டும் என எண்ணுவது உண்டு. இருப்பினும் விசில் அடிக்கும் மிகச் சிறிய  கூட்டம் இருந்தது.

ரஜினி. என்னைப் பொருத்தவரை ஒரு மந்திரச்சொல். எவர் என்ன சொன்னாலும் எத்தனை பேசினாலும் அது குறித்து கவலைப்படுவது இல்லை. சில பாடல்கள், விளம்பரங்கள் என முடிந்து படம் தொடங்குகிறது. உள்ளுக்குள் ஒருவித உணர்வு. ரஜினிக்கான உணர்வு அது. வார்த்தைகளில் சொல்ல இயலாது. ரஜினியின் அறிமுக காட்சி என ஆரம்பிக்கும் முன்னர் ஒரு கதைச்சுருக்கம் சொல்லப்படுகிறது. படிப்பறிவு நிறைந்த சமூகம் என முடிவு கட்டிவிட்டார்கள். மலேசியா. மலேய மொழி.

வன்முறை காட்சிகளுடன் தொடங்குகிறது. படத்தோடு நம்மை ஒன்றிவிடும்படியாக அடுத்தடுத்து என காட்சி நகர்கிறது. ஒரு மெல்லிய காதல் இழையோடிக்கொண்டே இருக்கிறது. ஒரு இழப்பினைத் தாங்க இயலாமல் தவிக்கும் இரக்க மனது. ஒரு கட்டத்தில் ரஜினி படமா என நினைக்கும் அளவுக்கு காட்சிகளின் தொகுப்பு. மகிழ்ச்சி. ஒரு படைப்பாளியின் பார்வையில் அந்த படைப்பு வித்தியாசமான ஒன்றாகவே இருக்கும். அப்பா என அழைத்து மனம் உருக வைக்கும் காட்சிகள். எதிர்பாராத திருப்பங்கள் என மிகவும் அருமையாக முதல் பகுதி நகர்கிறது. படைப்பாளி என்ன சொல்ல வருகிறார் என புரிந்துகொள்ளும் போது காட்சிகள் மிகவும் அழகாகின்றன. சலிப்பின்றி படம் நகர்கிறது. துரோகம், அடிமைத்தனத்தில் இருந்து மீளல் என பல விசயங்கள். தமிழ்நேசன் நல்ல பெயர்.

இடைவேளைக்குப் பின்னர் அதே வேகத்தில் நகரும் படம் காதலை மீண்டும் தன்னுள் எடுத்துக்கொள்கிறது. அன்பில் உலக உயிர்கள் வாழும். ஏதேனும் நடக்குமோ என நினைக்கும்படியான காட்சிகள். இசை, ஒளிப்பதிவு, வசனங்கள் இயக்கம் என களைகட்டிவிட்டது படம். பாடல்கள் கதையோட்டத்தோடு இணைகின்றது இடைஞ்சலாகவே இல்லை.

கடைசியாக வழக்கமான தமிழ் சினிமாவாக மாறிவிடுகிறது. எப்போதும் போல ஹீரோ வெற்றி பெறுகிறார். ஆனால் எழுதப்பட்ட வசனங்களை உற்று கவனித்தால் தமிழ்நாட்டின் சாபக்கேடு உலகின் சாபக்கேடு புரியும். கடைசியில் அப்படியே படமும் முடிகிறது ஏதோ ஒரு வெறுமை ஒட்டிக்கொண்டது போல இருந்தது. இனியும் இந்த படம் தொடராதா எனும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியது.

இதுவரை எந்த ஒரு படத்தையும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என  விரும்பியது இல்லை. ஏனோ கபாலி அப்படியொரு எண்ணத்தை ரஜினிக்காகவே விதைத்துச் செல்கிறது. ஆங்கில மொழி  சரளமாக படத்தில் ஆங்காங்கே வருகிறது. சரி சரி எல்லாம் படித்தவர்கள்தான். ஆனால் முட்டாள்கள் போலவே செயல்படுவார்கள் என முடிகிறது படம். உலகின் சாபக்கேடு அது.

நல்ல நல்ல கதாபாத்திரங்கள், நல்ல படைப்பு. வித்தியாசமான ரஜினி. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

கபாலி ஒரு வேதனை கலந்த மகிழ்ச்சி.