Showing posts with label நாவல் - நுனிப்புல் பாகம் 1. Show all posts
Showing posts with label நாவல் - நுனிப்புல் பாகம் 1. Show all posts

Wednesday 11 June 2014

நுனிப்புல் - அணிந்துரை கண்ணபிரான் ரவி சங்கர் (KRS)


நுனிப்புல்” = இஃதொரு இலக்கிய வசவு;
அதுவே இப்படைப்பின் பெயரும் கூட!

இப்படைப்பு மட்டுமல்ல..
உலகின் எல்லாப் படைப்பும் நுனிப்புல் தானோ?
இந்த நாவலின் அடிநாதம் முழுக்க ஊடாடுகிறது, இந்தச் சிந்தனை!

நுனிப்புல் மேயாதே-ன்னு சொல்லுறோம்;
நுனிப்புல் என்று சொன்னாலே.. “அரைகுறை, மேலோட்டமான, ஆழமற்ற, ஆய்வுப் போக்கு இல்லாத” என்ற ஓவியத்தையே, நம் மனம் வரைகிறது.
ஆனா, நுனிப் புல்லின் மேன்மையை நாம் அறிவோமா?

நுனிப்புல்லில் தான் பனித்துளி தூங்குகிறது!
அந்தத் தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே!

பனித் துளி போல் நம் வாழ்க்கை;
நம் வாழ்க்கையை வாங்கும் ஏதோவொரு இயற்கைச் சக்தி!

நாம் நுனிப்புல்லில் தான் பனிநீராய்த் தூங்கிக் கொண்டு இருக்கிறோம்;
நாம் மட்டுமா? உலகின் படைப்பினங்கள் அனைத்தும்!
இந்த நுனிப்புல் பனித் தூக்கம் = ஞாலத்தின் இரகசியம்!
இனி யாரையேனும், “நுனிப்புல்லன்” என்று சொல்வீர்களா?:)

நுனிப்புல் நாவலின் ஆசிரியர், திரு. இராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி;
அவரும் ஒரு நுனிப்புல்லர் தான்-னு சொன்னால், என்னிடம் அவர் சினந்து கொள்ள மாட்டார்-ன்னு நினைக்கிறேன்:)
நுனிப்புல்லில் பனித்துளியாய், ஞாலத்தை நாவல் வழியே நோக்குகிறார்..

திரு. இராதாகிருஷ்ணன் பற்றி நான் அதிகம் அறியேன்; அவர் ட்விட்டர் வாயிலாக ஓர் அறிமுகம் மட்டுமே!
அதனால் அவர் தனிப்பட்ட நம்பிக்கைகள், சாற்றமுறைகள் பற்றிய முன்முடிவு ஏதுமின்றி இந்த நாவலை வாசித்தேன்; கலக்கியுள்ளார் மனிதர்!

இறைமை-உயிர்மை என்பதை மையமாக வைத்து எழுதப்படும் நாவல்கள் மிகவும் குறைவு;
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அவற்றுள் சிகரம்!
நுனிப்புல்லின் கதைக்களமும் அத்தகையதே; ஆனால் அத்துணை அடர்த்தி இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒன்றாய், பலவாய்…

பெரியவர் விநாயகம், வாசன், பாரதி,
மாதவி, கோதை, பெருமாள், திருமால்..
என்று பல பாத்திரங்கள், நம் அன்றாட வாழ்வில் வலம் வருபவர்கள் தான்!
சிலருக்கு அந்த வலம் குறைவு; சிலருக்கு வலம் கூடுதல்; அவ்வளவே!

கதையினூடே கவிதை சொல்வது என்பது மெய்யியல்/ மீபொருண்மை (Metaphysics) நாவல்களுக்கு, “அல்வா” சாப்பிடுவது போல;
இராதாகிருஷ்ணனும் அதையே செய்கிறார்;

“சுருக்கம்” பற்றிய ஆரம்பக் கவிதையே அசத்தல்!
ஏழு சொற்களில் எழுதப்பட்ட திருக்குறளில்
விவரிக்க முடியாச் சுருக்கம்,
பதினைந்து பிள்ளை கொண்ட குடும்பம், ஒரு பிள்ளையோடு ஒடுங்கியது
நிலத்தின் சுருக்கம்,
மனிதனின் மனம் = எதனின் சுருக்கம்?

தரவு கொண்டு விளக்க முடியாததை, உறவு கொண்டு விளக்கி விடும் கவிதை!
சுந்தரன்-பாரதி காதலும், அப்படியொரு பரிமாணமே, இந்த மெய்யியல் நாவலில்!

நாவலின் ஒரு சிறிய குறை: உரையாடல்கள்!
பலரும் உரையாடிக் கொள்வதே இல்லை! ஆசிரியரே, கதை மாந்தர்கள் வழியாகப் பேசி விடுகிறார்..
அது தான் உண்மை எனினும், அப்படி வெளியில் தெரியக் கூடாது என்பதே ஒரு கதைசொல்லியின் வெற்றி!

கதையின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சூடு பிடிக்கிறது!
அதில் உரையாடல்களும் உலா வருகின்றன! இயல்பு நிலை உரையாடல்கள்!

கருவாகி நிக்குற பொண்ணு, வயித்துக்கு, மேல கைய வச்சாப் பொண்ணு, கீழே கைய வச்சா ஆணு”
-போன்ற பாட்டிக் கதைக் குறிப்புக்கள் அறியாமையழகு:)

“Cloning-இல் எந்த Nucleus-ஐ வைக்கிறோமோ, அதே போல் தான் பிறக்கும்!
பெருமாளின் Nucleus பெருமாளாகவே பிறக்கும்”
-போன்றவை நாவலின் ஊடாடு உண்மைகள்!

ஆசிரியர் இராதாகிருஷ்ணன், தன் நொறுங்கிய/ நெருங்கிய தேடல்களையெல்லாம் ஆங்காங்கே தூவுகிறார்;
ஆனால் புல் தூவாமலேயே வளர வல்லது! அதுவே புல்லின் மகிமை!

குளத்தூர் கிராமத்தில் வளரும் இந்த “நுனிப்புல்லை”, நானுமொரு பனிப்புல்லாய் வாழ்த்துகிறேன்!
சிரமம் பாராது, படித்துத் தான் பாருங்களேன்! நுனிப்புல் அழகை உணர்வீர்கள்…

- முருகு பொலிக! அன்புடன்,
Kannabiran Ravi Shankar (KRS)

New York
Jun 9th, 2014


----------------

மிக்க நன்றி தமிழ் பெருந்தகையே 

Tuesday 12 January 2010

நாச்சாரம்மாள்

நாச்சாரம்மாள் வண்ணமயமான தெருவினில் நின்று கொண்டு மனதினில் நாராயணப் பெருமாளை நினைத்து வழிபட்டு கொண்டு இருந்தாள். ஊரில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டு இருந்தனர்.

நடு இரவு ஆகியும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அந்த அதிசய நிகழ்வினை காண்பதற்கு காத்துக் கொண்டு இருந்தனர். ஊரின் நாட்டாமையும் ஊரின் பூசாரியும் தகதகவென நெருப்பாய் பிரகாசித்துக் கொண்டு இருந்த நெருப்புக் கோளங்களை ஒரு சட்டியில் எடுத்து வரச்சொன்னார்கள். எரிக்கப்பட்ட கட்டையானது நெருப்புத் துண்டுகளாய் மாறி நெருப்புக்கோளங்கள் போன்று இருந்தது. நாச்சாரம்மாள் வழிபாட்டினைத் தொடர்ந்து கொண்டு இருந்தார். மூதாட்டிகள் அவரைச் சுற்றி ஒரு வளையம் மூன்று அடிகள் தள்ளி அமைத்து இருந்தனர்.

நாச்சாரம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டாய் தரையில் விழுந்தது அது பூமியினை பெரும் குளிர்ச்சி அடையச் செய்தது. பூசாரி நெருப்புக் கோளங்களை நெருப்புக் கடத்தா பொருளின் உதவியுடன் வாங்கிக் கொண்டு வளையம்தனை விளக்கி நாச்சாரம்மாளின் முன் வந்தார். ‘’தாயே சேலையைப் பிடிச்சி மடி ஏந்து’’ என்று சொன்னதும் ஊரில் உள்ள அனைவரும் கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, நாராயணா, நாராயணா, பெருமாளே பெருமாளே, பெரூமாளே என கோஷம் இட்டனர். பூசாரியின் கைகள் நடுங்கியது. அந்த அரும்பெரும் காட்சியினைக் காண ஒருவரையொருவர் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டு கால்களை சிறகுகளாக மாற்றிகொண்டு இருந்தனர். முன் இருப்பவரின் தோள்களில் கைகள் வைத்து அழுத்தியது கூட உணராமல் மற்றவர்கள் தாங்கிக் கொண்டு இருப்பதைக் காணும்போது இந்நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது.

நாச்சாரம்மாள் சேலையின் மடியினை தாங்கிப் பிடித்தார், இம்முறை ஒவ்வொருவரும் அமைதியாய் பெருமாளே பெருமாளே என வேண்டிக் கொண்டு இருந்தனர், பூசாரி நெருப்புக் கோளங்களினை சேலையின் மடியில் போட்டார். 'கோவிந்தா' என்னும் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெருப்புக்கோளங்களை தனது சேலையில் நாச்சாரம்மாள் இன்னும் தாங்கிக் கொண்டு இருந்தார். ஒரு நெருப்புக் கூட சேலையினை எரிக்கவில்லை தரையில் விழவும் இல்லை. அந்த நிகழ்வினைக் கண்டு அனைவரும் 'தாயே' என விழுந்து வணங்கினர். பூசாரியும் விழுந்து வணங்கினார். ‘’நம்ம ஊர்ல தெய்வம் குடி இருக்கு’’ என அனைவரும் கூறினர். பூசாரி நெருப்புக் கோளங்களினை சட்டியில் வாங்கிக் கொண்டார். ஊரெல்லாம் நாச்சாரம்மாளினை தெய்வம் என கொண்டாடியது. மறுநாள் காலையில் நாச்சாரம்மாள் வைகுண்டப் பதவி அடைந்தார். ஊரெல்லாம் சோகத்தில் மூழ்கியது.

Thursday 27 August 2009

நுனிப்புல் பாகம் - 1 (2)


வாசன் வீட்டின் வாசலில் ஏறியதும், ‘’என்னப்பா இவ்வளவு நேரமா? பொழுது சாயும் முன்னே வீடு வர்ரதுதானே?’’ என தாய் ராமம்மாள் வாசனை செல்லமாக கடிந்து கொன்டு, வந்ததும் வராததுமா கதை சொல்லப் போறேன்னு போகாத, சாப்பிட்டுப் போ என வார்த்தைகள் வீசினார். வாசன் நேசித்தான். ‘’சரிம்மா’’ என்றவாறே ‘’அப்பா இன்னும் வரலையாம்மா’’ என கேட்டான் வாசன். ‘’வரலைப்பா’’ என்றாள் தாய். பதிலில் ஒருவிதமன சலிப்பு தென்பட்டது.


வாசனின் தாய் 3ம் வகுப்பு வரைதான் படித்து இருந்தார். தோட்டத்து வேலை மற்றும் வீட்டு வேலையென வாழ்க்கையில் தன்னை ஒடுக்கிக் கொண்டவர். முதல் வாசன், இரண்டாவது தேவகி.

வாசன் சுருக்கம் பற்றிய கவிதை வாசிக்கலானான்.


"
ஏழு வார்த்தைகளில்

எழுதபட்ட ஒவ்வொரு திருக்குறளில்

கருத்துக்கள் பரந்துகிடக்கும்

விவரிக்கமுடியாத சுருக்கம்

நடந்து செல்லும் தூரம்

அடையும் காலம் விட

பரந்து செல்லும் தூரம்

அடையும் காலம்

விவேக விஞ்ஞானத்தின் சுருக்கம்

ஒரு மைல் கல் தொலைவில்

கத்தியும் செல்லாத சப்தம்

கடல் தாண்டி சென்றடையும்

கண்ணுக்கு உட்படாத சுருக்கம்

இலக்கணம் தாங்கிய

மரபு கவிதை

கருத்துக்கள் தாங்கிய

புதுக்கவிதை போய்

வந்த ஹைக்கூ

வார்த்தைகளின் சுருக்கம்

பதினைந்து பிள்ளைகள்

கொண்ட குடும்பம்

ஒரு பிள்ளையொடு ஒடுங்கிபோனது

நிலத்தின் சுருக்கம்

அட விரிந்து பரந்த உள்ளம்

கொண்ட மனிதன் மனது

எதனின் சுருக்கம்?"


‘’
கவிதை புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிச்சிட்டியா’’ என அம்மா அவனை சாப்பிட வரச் சொன்னார்.


வாசனின் தந்தை வியாபரம் செய்பவர். 5வது வரை படித்து இருந்தார். தோட்டத்தில் விளையும் காய்கறி பொருட்கள் காலை மாலை என பக்கத்து கிராமத்து, நகரத்து கடைகளுக்கு விற்பனை செய்பவர். அவர் பலரை அறிந்து வைத்து இருந்ததால் வாசனை அவர் வியாபாரத்திற்கு ஒருபோதும் அனுப்புவது இல்லை. தந்தையின் பெயர் ராமமூர்த்தி.


'நான் அப்பா வந்ததும் வந்து சாப்பிட்டுக்கிறேன்மா' என வெளியே நடந்தான் வாசன். அம்மா வார்த்தைகளை இறைந்தார் 'கேளுப்பா' இது தாய், 'வரேன்மா' இது வாசன். வாசனுக்கு இன்னும் பெரியவரின் வாசகம் பெரும் யோசனையாக இருந்தது. வாசன் குழந்தைகளுக்கு ஒரு சின்ன கதை சொன்னான். கவிதையின் விரிவாக்கம் அது. மனிதாபிமானம் என்ற சொல்லின் விதை அன்று குழந்தைகளின் நெஞ்சில் விதைக்கப்பட்டது.


‘’
என்னம்மா வாசன் கதை சொல்லிட்டு இனியும் வரலையா’’ என்றவாறே ராமமூர்த்தி வீட்டினில் நுழைந்தார். வாசன் வீடு நுழையும் போதெல்லாம் ராமமூர்த்தி காத்து இருப்பதில்லை. ராமமூர்த்தி வீடு நுழையும் போதெல்லாம் வாசன் வீட்டில் இருப்பதில்லை. இது அவர்களிடையே ஒரு மாலை நேர ஒப்பந்தமாக இருக்கும்.


‘’
வரேன்னு சொல்லிட்டு சாப்பிடாம கூட வெளியில போனான், இன்னைக்கு தோட்டத்திலே இருந்து தாமதமாகத்தான் வந்தான். அது சரி, என்னங்க இன்னைக்கு வியாபரம் எப்படி’’ என்றவளிடம், ‘’இன்னைக்கு நல்ல வியாபரம்தான்’’ என கூறி பணத்தை எடுத்துப் பத்திரபடுத்தச் சொன்னதுடன் கிணற்று அடிக்கு முகம் அலம்ப சென்றார்.


வாசனின் வீடு ஊருக்கு தெற்கே இருந்தது. கிழக்கு பார்த்த வாசல். சின்னதாய் வரவேற்பு அறை. பெரியதாய் ஒரு அறை. தனித் தனி அறைகளாய் பூஜை அறை ஒன்று, சமையல் அறை ஒன்று. மாடியில் மூன்று அறைகள். வீட்டின் பின்புறம் சின்னதாய் தோட்டம். ஒரு கிணறு. வாசன் தினமும் காலையில் கிணற்றில் தன் முகம் பார்க்கும் வழக்கம் உண்டு. சலனமில்லாத நீரினை ரசிக்க ஆரம்பித்து இரவு தூங்கும்முன் வரை அமைதியினை ரசிக்க நினைப்பவன்.


வாசன் வந்தான். ‘’அப்பா இப்பதான் வந்தீர்களா, சாப்பிடலாம்பா’’ என்றான் வாசன். உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடும்போது ராமமூர்த்தி எப்போதும் பேசுவதில்லை. என்ன தேவையோ அதை கேட்கவே பேசுவார், மற்றபடி விவாதங்களில் ஈடுபட விரும்புவதில்லை. வாசன் இதை நன்கு அறிவான். உண்டு முடித்ததும் ‘’அப்பா வினாயகம் பெரியவர் நம்ம தோட்டத்தை விலைக்கு கேட்டார் அதாவது கரிசல எடுத்துக்கிட்டு அதே அளவுக்கு செவல எடுத்துக்க சம்மதமான்னு சொன்னார்’’. ராமமூர்த்தி தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் முன்னர் தன் மகன் பேச்சைக் கேட்டதும் இவை இரண்டையும் எப்படி ஜீரணிப்பது என அயர்வுற்றார்.


‘’
வாசா நீ என்ன பதில் சொன்ன’’ என கேட்டார். தன்னை கலந்து ஆலோசித்து முடிவுதனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினாரோ என்னவோ உணராமல் தன் மகனைக் கேட்டார். ‘’நான் உங்களைக் கேட்டு சொல்றதா சொல்லியிருக்கேன்பா' என அவனது தந்தையின் முக்கியத்துவம் சொன்னான் வாசன்.


‘’
நான் கேள்விபட்டேன் அவரு அங்கு இருக்கிற நிலத்தை எல்லாம் விலைக்கோ இல்லை மாற்றுக்கோ கேட்டுக்கிட்டு இருக்காருனு’’ என்றார் தந்தை. ‘’அவரும் கணேசன் நிலத்தை மாத்திட்டேன்னு சொன்னாருப்பா. என்ன விசயத்திற்கு இப்படி செய்றீங்கனு கேட்டேன் ஒண்ணும் பதில் இல்லை, நாளைக்கு பேசுவோம்னு போய்ட்டார். நம்ம வடக்கு நிலம் ஒட்டி இருக்க காசி நிலம் கூட தர சம்மதம்னு சொல்லிட்டதா சொன்னார்’’ வாசன் வாக்கியம் நீண்டு கொண்டே போனது. வாசன் கூறிய விசயத்தில் இருந்து இந்த நிலத்தை விற்றுவிடுவோம் என சொல்லாமல் சொல்லும் வாசகம் போல் இருந்தது.


‘’
அதான் எனக்கும் புரியலப்பா, ஏகப்பட்ட நிலம் வைச்சிருக்கார், எதுக்கு கரிசல் நிலம் வேணும்னு கேட்கிறார்னு தெரியல விவரம் சொன்னாலாவது சரி செவல் கிடைக்குதுனு விடலாம். சரி பேசிப்பாரு’’ என நிலமாற்றம்தனை சம்மதம் தந்து விட்டது போல கூறினார். ‘’என்ன சொல்றீங்க, இதே பூமியில விளையற விளைச்சல் செவல்ல விளையுமா, இது தனிமதிப்புனு சொல்வீங்களே’’ என குறுக்கே பேசிய தாய் நிலம் மாற சம்மதிக்கமாட்டாள் எனப்பட்டது வாசனுக்கு.


‘’
யோசிக்க வேண்டிய விசயம்தான் ஆனா நிலத்துக்கு நிலம் பணமும் தந்தா வேணாம்னு சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். உழைக்கிற உழைப்பை உண்மையாகவும் உறுதியாகவும் உழைச்சா பலைவனத்துல கூட பசுமை புரட்சி செய்யலாம்’’ என்றார் தந்தை.


‘’அப்படின்னா பெரியவர்கிட்ட நாளைக்கு பேசி எல்லாம் முடிச்சிருவோம்' என மகன் கூறியதை தந்தை ஆமோதிப்பதுக் கண்டு தாய் சின்னக் கோபம் கொண்டார். ‘’என்னங்க சிலருக்கு, அவரு கேட்டாருன்னு பணம் அதிகம் வாங்கி நிலமாத்துரது சரியில்லை, என்னதான் இருந்தாலும் அது நாம பாடுபடுற பூமி’’ தாய் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.


சிலருக்கு சில விசயங்கள் சரியோ தவறோப் பிடித்து விடுகிறது, மாற்றங்கள் அவசியம் எல்லை என பழைய விசயங்களில் ஊறிப்போய் புதிய விசயம் திணிக்கப்படுவதை அறவே வெறுக்கிறார்கள். இதன் அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.


‘’
வாசா உன் அம்மாவை நீ சம்மதிக்க வை அப்புறம் இது பத்தி பேசலாம்’’ தன்னால் பேசுவதில் ஒரு உபயோகம் இல்லை, மனைவியையும் பேசிப் புரிய வைத்து ஒரு முடிவுக்கு கொண்டுவர எண்ணமில்லாதவராக அவரது பேச்சு இருந்தது. தாய் யோசிக்கலானார்.