Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Wednesday 15 June 2016

இறந்தது போல இருந்தது இல்லை இறந்தது

மாறா மரபு - முன்னுரை


ஒருவேளை இப்போதே இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என யோசித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு அப்படி ஒரு நினைப்பு வந்து இருக்கத் தேவை இல்லைதான்.

இறப்பு பற்றிய நினைப்பு  ஒன்று வேதனைபடுபவனுக்கும்  மற்றொன்று சந்தோசத்தில் துள்ளிக்குதிப்பவனுக்கும் வந்து சேர்கிறது.

இவ்வுலகில் நிறைய விசித்திரங்கள் நடைபெறுவது உண்டு. பொருள் பணம் என எதுவும் இல்லாதவன் கூட இறப்பது குறித்து யோசிப்பது இல்லை. எப்படியேனும் வாழ்நாளை கழித்து விட வேண்டும் எனும் அக்கறை மட்டுமே இருக்கும். பொருள் பணம் இருந்தும் இறப்பது குறித்த சிந்தனை கொண்டவர்களும்  உண்டு.

இந்த உலகில் மரணத்தை வென்று விடும் ஒரு அரிய  வாய்ப்பு கிட்டிவிடும் எனில் அதைவிட மிகச் சிறந்த ஒரு விஷயம் இருக்கவே இயலாது. ஆனால் எத்தனை பேர் இந்த உலகில் வாழ வேண்டும் என பிரியம் கொள்கிறார்கள்.

இன்னும் அவன் யோசித்துக் கொண்டு தான் இருந்தான். தான் பெற்ற பெயர், படிப்பு, நட்பு, உறவு என என்னவென்னவோ அவனது மனதில் வந்து நிழலாடியது. அவனுக்கு இன்னமும் திருமணம் ஆகி இருக்கவில்லை.

இத்தனையும் விட்டுவிட்டு இறந்து போய்விட்டால் என்ன செய்வது எனும் சிந்தனையுடன் அவனது பொழுது கழிந்து கொண்டு இருந்தது.

அப்பொழுதுதான் அவனது யோசனை மரபணுக்கள் மீது உட்கார்ந்து கொண்டது. இந்த மரபணுக்களில் மாற்றம் செய்துவிட்டால் மரணத்தை வென்றுவிடலாம் எனும் ஒரு யோசனை. அதன்படி அவனது சிந்தனை இன்ட்ரான் மீது சென்று அமர்ந்து கொண்டது.

இன்ட்ரான் எக்சான் எல்லாம் மரபியலில் ஒரு முக்கிய கூறு, அவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, ஆனால் அவனது எண்ணம் இரண்டுமே வெவ்வேறு என்று எண்ணத் தோனியது. அவனைச் சொல்லி ஒரு குற்றமும் இல்லை. இன்ட்ரான்கள் இல்லாது போனால் மனிதன் நோயின்றி வாழ இயலும் என கணித்து வைத்தான்.

பிறவா வரம் வேண்டும் என பாடி வைத்தவர்கள் பலர். இறவா நிலை வேண்டும் என துடிதுடித்தவன் அவன். அவனது சிந்தனையும் செயலும் அதைச் சுற்றியே இருந்தது.

எதுவெல்லாம் சாத்தியம் இல்லையோ அதுவெல்லாம் கற்பனை ஆகிறது. எப்போது கற்பனை சாத்தியம் ஆகிறதோ அப்போது அது சாதனை ஆகிறது. அவனது கற்பனை சாத்தியமா என அவனால் கூட சொல்ல இயலாது. ஆனால் சாதிக்கப்போவதாகவே அவன் எண்ணிக்கொண்டு இருந்தான்.

அவன் இப்படித்தான் பிரபலமாக சொல்லிக் கொண்டான். உலகில் நோயற்ற மனித இனத்தை உண்டு பண்ணுவதே என்  வாழ்வின் இலட்சியம். கேட்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

மனிதன் நோயினால் மட்டுமே மரணம் அடைவது இல்லை என அவன் சிந்திக்க மறந்து இருந்தான்.

எத்தனையோ உயிரினங்கள் தோன்றியும், அழிந்தும் போன இந்த பூமியில் இறந்தது போல இருந்தது இல்லை... இறந்தது. 


நன்றி

அன்புடன்
வெ. இராதாகிருஷ்ணன்
இலண்டன்
  

Tuesday 16 February 2016

மாறா மரபு - 3

5 இவன்கண்

ஜெகன் தந்து கணினியை திறந்து பார்த்தபோது எல்லா பைல்களும் திறக்கமுடியாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். இது யாருடைய விஷமம் என அவனால் ஓரளவுக்கு யூகிக்கமுடிந்தது. நிச்சயம் டாக்டர் ராம் எவரையோ வைத்துதான் இதைச் செய்து இருக்க முடியும் என முடிவு செய்தான். நேராக தனது அலுவலகம் சென்று கணினி திறந்து பைல்கள் திறக்க முயற்சித்தபோது அதே பிரச்சினை கண்டு அவனுக்குள் எரிச்சல் கோபம் கொப்பளித்துது.

நேரடியாக தனது சூப்பர்வைசரை சென்று பார்த்தான்.

‘’நான் எனது ஊருக்கு ஒரு மாத விடுமுறையில் செல்ல வேண்டும், எனக்கு மனது சரியில்லை’’

‘’நான் திட்டினது உனக்கு கோபமா ஜெகன், என்னிடம் அனுமதி இல்லாமல் நீ என்ன என்னவோ ரீஏஜென்ட்ஸ் வாங்கி இருக்கிறாய், இதனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. எவ்வளவு பண விரயம், கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் செய்து இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. நீ தாராளமாக போய்விட்டு வா, நான் பேசி சமாளித்துக் கொள்ளவேண்டியதுதான். அதற்கு முன் எனக்கு நீ சில விசயங்களை சொல்ல வேண்டும்’’

‘’இனிமேல் அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’’

‘’அது இருக்கட்டும் அப்படி என்னதான் அந்த ரீஏஜென்ட்ஸ் வைத்து செய்தாய் என நான் தெரிந்து கொள்ள வேண்டும்’’

‘’நான் இன்ட்ரான் சம்பந்தபட்ட நமது ஆராய்ச்சிதான் செய்தேன்’’

‘’இல்லை ஜெகன், என்னிடம் நீ மறைக்க முயலாதே. நீ உபயோகப்படுத்திய சில ரீஏஜென்ட்ஸ் நமது ஆராய்ச்சிக்கு சம்பந்தமே இல்லாதது. அதுவும் அவை சற்று விலை கூடுதல் வேறு’’

‘’இன்ட்ரான் ரிமூவ் பண்ண வேண்டிதான் வாங்கினேன். வாங்கும் முன்னர் உங்கள் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது எனது தவறுதான்’’

‘’அதற்கு என்சைம் போதுமே, எதற்கு இந்த ரீஏஜென்ட்ஸ்?’’

‘’என்சைம் கிடைக்கவில்லை அதனால் இதை வாங்கினேன்’’

‘’இனிமேல் இதுபோன்று செயல்படாமல் இரு, நீ இப்போ ஊருக்கு போறது கூட எனக்கு நல்லதுதான். அப்படியே நான் சொன்னபடி திருச்சியில் அந்த வேலையை சேர்த்து முடித்துக்கொண்டு வந்துவிடு. எப்படியும் இரண்டு மாதங்கள் அங்கே ஆகும். நான் டாக்டர் புருசோத்தமனிடம் பேசிவிடுகிறேன். உன்னால் அடுத்த மாதம் அங்கு போக இயலும்தானே’’

‘’பிரச்சினை இல்லை சார் ’’

‘’நீ ஒரு நம்பத்தகுந்தவன் என்ற முறையில் தான் இம்முறை மன்னித்து அனுப்புகிறேன், கவனமாக இரு’’

ஜெகன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தான். வீடு வந்து சேர்ந்தபோது அப்பாடா என்று இருந்தது. தன்னிடம் இருந்த மெமரிஸ்டிக்  பத்திரமாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டான். தங்கராஜ் ஜெகனைப் பார்க்க வந்து இருந்தான்.

‘’ஜெகன் எங்க போயிருந்த, ஆளையேக் காணோம் உன்னோட மொபைல் கூட இன்னைக்கு காலையில் இருந்து வேலை செய்யலையே’’

‘’சென்னை வரைக்கும் போயிருந்தேன், வரப்ப ஏர்போர்டில மொபைலை தொலைச்சிட்டேன், பக்கத்தில வைச்சிருந்தேன், எவனோ எடுத்துட்டுப் போயிட்டான் ’’

‘’இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்ப. என்ன விசயமாகப் போன’’

‘’டாக்டர் ராம் அப்படின்னு ஒருத்தரைப் பார்க்க போயிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. முன்னரே என் சார் சொன்னமாதிரி நான் இன்னைக்கே பஞ்சாப் போக வேண்டி இருக்கு’’

‘’என்ன விசயம்’’

‘’லேப் சம்பந்தமா வேலை ஒரு மூணு மாசத்திற்கு இருக்கு’’

‘’அப்போ டில்லி?’’

‘’மூணு மாசம் பிறகு வருவேன், இந்த வேலையைத்தான் அங்க செய்ய வேண்டி இருக்கு’’

‘’சரி நான் கிளம்பறேன்’’

‘’அதுக்குள்ளே கிளம்பிட்டே’’

‘’உன்னோட ரூம் திறந்து இருந்தது ஒருவேளை நீ வந்து இருப்பியோனு பார்க்க வந்தேன். வந்தப்ப நீ காணலை. நீ வேலைக்குப் போனியா’’

‘’போனேன் உடனே சார் என்னை கூப்பிட்டு பஞ்சாப் போகச் சொல்லிட்டார். அதான் அப்படியே திரும்பி வந்துட்டேன். ஆமா என்னோட ரூம் மேட் நீ பாத்தியா’’

‘’நேத்து இருந்தானே, அவன்தான் ஆறு மணிக்கு எல்லாம் வேலைக்குப் போறவன் ஆச்சே’’

‘’அவன் வந்தா நான் பஞ்சாப் போயிருக்கிறதா சொல்லு, புது மொபைல் வாங்கித்தான் அவனுக்கு தகவல் சொல்லணும். உனக்கும் நம்பர் அனுப்பறேன்’’

‘’பத்திரமாப் போயிட்டு வா, டிக்கட் லேப்டாப் மூலமா புக் பண்ணப் போறியா. உன்கிட்ட மெமரி ஸ்டிக் இருக்கா’’

‘’அது என்னோட சார் கிட்ட கொடுத்துட்டேன். அதில அவரோட வேலை சம்பந்தமான விசயங்கள் மட்டுமே இருந்தது. எதுக்கு கேட்ட. டிக்கட் இங்க புக் பண்ண நேரமில்லை, லேப்டாப் இங்கேயேதான் விட்டுட்டுப் போகப் போறேன். எதுக்கு தேவை இல்லாத சுமை. அலமாரில பூட்டி வைச்சிட்டேன் சாவி என்கிட்டதான் இருக்கு’’

‘’என்னோட பைல் மாத்தணும் வேலை இடத்தில வைச்சிட்டு வந்துட்டேன் அதான். சரி, நீ கவனமாப் போயிட்டு வா’’

தங்கராஜ் டாக்டர் ராமிற்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். அவசரத்தில் வந்து இருந்ததால் ஜெகன் எந்த சந்தேகமும் இல்லாதமாதிரி இருந்ததாக லேப்டாப், அலுவலக கணினி குறித்து எதுவும் பேசவில்லை என சொன்னான். டாக்டர் ராம் சந்தோசம் கொண்டார். அவனது புதிய எண் தந்ததும் தனக்குத் தரச் சொன்னவர்  மூணு மாசம் எனக்குப் போதுமானது என டாக்டர் ராம் தங்கராஜிற்கு நன்றி சொல்லிக்கொண்டார்.

ஜெகனுக்கு தங்கராஜ் மீது கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். நிச்சயம் இவனது வேலையாகத்தான் இருக்கும் என உறுதி செய்து கொண்டான். டாக்டர் ராம் தன்னை சந்தித்தபோது இவனை சந்தித்து இருக்கக்கூடும் என எண்ணம் கொண்டான். அப்போதே தேவையான பொருட்கள் எடுத்துக்கொண்டு டில்லி விமான நிலையம் விரைந்தான். சென்னைக்கு செல்ல அவனுக்கு ஒரு பயணச்சீட்டு கிடைத்தது. மொபைல் தொலைந்து போனதை தங்கராஜ் நம்பி இருக்க நிறைய சாத்தியங்கள் இருந்தன என எண்ணியவன் தனது தொலையாத மொபைலுக்கு அப்போதே வேறு ஒரு சிம்கார்டு வாங்கிக்கொண்டான். மெமரி ஸ்டிக் தப்பித்த விஷயம் தங்கராஜிற்கு தெரியப்போவது இல்லை என்பதே நிம்மதியாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்படியே திருச்சி சென்று விட வேண்டும் என திட்டம் போட்டான். சிவாவிடம் பேசினால் நல்லது என தோணியது.

‘’சிவா, நான் ஜெகன் பேசறேன். நீ நாளைக்கு ஸ்ரீரங்கம் வர முடியுமா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இன்னைக்கு நைட் கிளம்பினா நாளைக்கு வந்துருவதானே’’

‘’என்ன விஷயம் ஜெகன்’’

‘’இன்ட்ரான் பத்தியது. உன்கிட்ட நான் பேசி ஆகனும். தயவு செய்து வந்துரு. இந்த நம்பருக்கு போன் பண்ணு. யாருக்கும் நீ சொல்லாத’’

‘’ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் பக்கத்தில் வந்து நிற்கிறேன். அங்க வந்துரு’’

சிவராம் ஜெகனின் தொலைபேசி அழைப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் ஏதும் பிரச்சினை இருக்கும் என யூகித்தது சரியாகிவிட்டது. சுபா வேறு கேப்ஸ்யூல் கிடைக்காத நிலையைச் சொல்லி இருந்தாள். சுபாவுக்கு தகவல் சொன்னால் டாக்டர் ராம் சந்தேகம் கொள்ள சாத்தியம் இருப்பதாக எண்ணிக்கொண்டான்.

ஜெகன் சென்னைக்கு  மாலையில் வந்து இறங்கியதும் திருச்சிக்கு பேருந்தில் அங்கிருந்தே பயணம் செய்தான். ஜெகனுக்கு தான் செய்து கொண்டிருப்பது சரியா என புரியவில்லை. தான் ஸ்ரீரங்கம் வந்து இருப்பதுவோ சென்னையில் வேலை செய்ய இருப்பதுவோ டாக்டர் ராமிற்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது யோசனையாக இருந்தது. திருச்சி வந்தடைந்து அங்கிருந்து ஸ்ரீரங்கம் வீட்டிற்கு சென்றபோது இரவு பன்னிரண்டு மணி ஆகி இருந்தது.

மக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொண்டு இருந்தனர். ஸ்ரீரங்கத்து கோபுரம் அந்த இரவிலும் பளிச்சென இருந்தது. ஜெகனை அவனது வீட்டில் எவருமே எதிர்பார்க்கவில்லை. காவிரி ஆற்றில் ஓடும் சிறிது  நீர் கொண்டு வீசிய காற்று சில்லென்று வீசியது. தன்னை வீட்டில் எப்படி எதிர்கொள்வார்கள் என ஜெகன் அப்போதும் யோசித்து இருக்கவில்லை.

அப்பா பூரணசந்திரன், அம்மா பூரணி. இருவருமே ஆசிரியர் வேலை பார்த்து வருபவர்கள். ஜெகனுக்கு ஒரு தங்கை சத்யபாமா. மதுரை மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறாள். இந்த ஸ்ரீரங்கம் தான் அவர்களது பூர்வீகம் எல்லாம். இரண்டு பிள்ளைகள் பிறந்த போதும் தனியாக அவர்கள் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்து ஸ்ரீரங்கநாதர் அவர்களுக்கு துணை. மாலை, சனி ஞாயிறுகளில் கோவில் வாசம் அவர்களுக்கான வேண்டுதல், விரும்புதல்.

வீட்டின் அழைப்பு மணி அழுத்த வீட்டில் விளக்கு எரிய சில நிமிடங்கள் மேல் ஆனது. பூரணசந்திரன் தூக்க கலக்கத்துடன் வந்து கதவின் பக்கம் வந்து நிற்க ஜெகனைக் கண்டதும் ஆச்சரியம் ஏற்பட்டது. வேகமாக கதவைத் திறந்தார். ஜெகன் உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

‘’வாப்பா, என்ன ஒரு தகவலும் சொல்லாம வந்து நிக்கிற’’

‘’ஒரு முக்கியமான லேப் விசயமாக வந்தேன். இன்னும் இங்கேதான் ஒரு மூணு மாசம் இருக்கப் போறேன்ப்பா’’

அதற்குள் ஜெகனின் அம்மாவும் வந்து நின்றார்.

‘’எதுவும் சாப்பிட்டியாப்பா?’’

‘’ம்ம் சாப்பிட்டேன்மா, காலையில ஒரு ஆறு மணிக்கு எழுப்பமுடியுமா. இப்ப தூங்குறேன்’’

‘’காலையில் பேசிக்கிறலாம், தூங்குப்பா’’ என பூரணசந்திரன் சொன்னார்.

அன்று இரவு பத்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பேருந்து நிலையத்தில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்துவிட்டு பதினோரு மணிக்கு ஸ்ரீரங்கம் நோக்கி சிவராம் பயணம் செய்யத் தொடங்கினான்.

பேருந்தில் எங்கேயும் எப்போதும் படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த படத்தினை பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டான். சுபா மனதில் வந்து போய்க்கொண்டு இருந்தாள்.

‘சிவா, டாக்டர் ராம் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. குழந்தைகளோட வாழ்க்கையில் விளையாடுறார்’ என்ற வரிகள் அவனது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருளை பொருட்படுத்தாது பேருந்து வேகமாக சென்று கொண்டு இருந்தது. எங்கேயும் எப்போதும் படம் போல ஆகிவிட்டால் எனும் எண்ணம் அவ்வப்போது அவனுக்குள் வந்து போனது. சரியாக ஐந்து மணிக்கு எல்லாம் திருச்சி வந்து பாதுகாப்பாக இறங்கியாகிவிட்டதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஜெகன் ஐந்து மணிக்கு தானாகவே எழுந்து இருந்தான். ஆறுமணிக்கு எழுப்ப சொல்லிட்டு ஐந்து மணிக்கே எழுந்திட்டியா என அம்மா சொன்னார். திருச்சி வந்துவிட்டதாக சிவராம் தகவல் சொல்லி இருந்தான். ஜெகன் அவசரம் அவசரமாக கிளம்பினான். தனது நண்பர் ஒருவர் வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நேராக அம்மா மண்டபத்தில் சென்று ஜெகனை அழைத்துக்கொண்டு தனது வீடு வந்தான். சிவராமினை தயாராகச் சொன்னான் ஜெகன். அதற்குள் காலை உணவு எல்லாம் தயாராகி இருந்தது.

‘’என்னப்பா முன்னமே சொல்லி இருந்தா நாங்க லீவு போட்டு இருப்போமே’’

‘’அம்மா நீங்க வேலைக்குப் போங்க, இங்கதானே இருக்கப்போறேன், மதியம் நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன்’’

‘’சாதம் வடிச்சி வைச்சிருக்கேன்ப்பா’’

‘’சரிம்மா’’

அதிகாலை எழுந்து எல்லாம் தயார் செய்து வேலைக்கு செல்வது இன்று நேற்றல்ல பல வருட பழக்கம். அனைவரும் காலை உணவு உண்டார்கள். ஜெகன் சிவராமினை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

‘’சிவா நான் ஒரு பிரச்சினையில் மாட்டி இருக்கேன். டாக்டர் ராம் என்னை மிரட்டுறார்’’

‘’எந்த டாக்டர் ராம்’’

‘’பாக்யா வருணன் கிளினிக்ல வேலை செய்றார். டெஸ்ட் டியூப் பேபி பண்றவர்’’

‘’முந்தாநாள் பார்க்க வந்தியே அவரா’’

‘’ஆமா, அவரை நான் டில்லியில் வைச்சி சந்திச்சேன். என்னோட ஆராய்ச்சி பத்தி பேசிட்டு இருந்தோம். அப்போதான் இன்ட்ரான் ரிமூவல் ப்ரம் ஸ்பெர்ம் அண்ட் எக் பத்தி பேசினார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. என்னைப்பத்தி சில ஆர்டிகல்ஸ்ல படிச்சி இருக்கேன்னு சொன்னார். என்னை மெனக்கெட்டுப் பார்க்க வந்தது போல இருந்துச்சி. ஆனா ஒரு மருத்துவ விசயமா வந்தேன்னு சொல்லிட்டு இருந்தார். நானும் தாராளாம பண்ணிரலாம்னு சொல்லிட்டேன். இட் இஸ் வெரி காம்ப்ளிகேட்டட் ஐடியா. ஆனா ரொம்ப சாதாரணமா சொன்னார்.  அண்ட செல், விந்து செல் இவற்றில் இருந்து இன்ட்ரான் நீக்கிட அவை இன்ட்ரான் அற்ற செல்களாக உருவாகும். பின்னர்  அவைகளை ஒன்று சேர வைத்தால் இன்ட்ரான் இல்லாத குழந்தை உருவாகும் அந்த குழந்தை எப்படி நடந்துகொள்கிறது என அறியலாம். இது என்னுடைய சிந்தனை. நீ ஒத்துழைப்பு தந்தால் நாம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அதை நீ எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. இது எனது கனவு. என்னால் தனியாக செய்ய இயலாது நீ இந்தவேலையில் இருப்பதால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உன்னை சந்தித்து ஒப்பந்தம் போட நினைக்கிறேன். என்ன சொல்கிறாய்? (Remove all introns from those gametes, then you will have intron free gametes. Make them fuse together, you will have a child without introns then you see how a child behaves. This is my idea, if you agree to help me we can sign an agreement and you should not breach this at any cost. This is my dream. I could not do this on my own, when I saw you are working on this field I took this opportunity to see you and make an agreement. What do you say?) நானும் யோசிக்காமல் சரி என சொல்லிட்டேன். ஒப்பந்தம்தனில் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்’’

‘’சரி ஆனா எப்படி இன்ட்ரான் நீக்குறது என்ன ரீஏஜென்ட்ஸ் (reagents) உபயோகம்  பண்றதுன்னு அவர் எழுதித் தந்தாரா?’’

‘’இல்லை. அது எல்லாமே என்னோட ஆராய்ச்சி. நான் திட்டமிட்டு பண்ணினது. நான் உருவாக்கி இருக்கிற  அந்த மூலக்கூறு நேரடியா ஸ்பெர்ம், எக் செல்களை அட்டாக் பண்ணும். ஐ மேட் திஸ் கான்செப்ட் டு அட்டாக் 23 குரோமொசொம்ஸ் செல்கள். ( I made this concept to attack those 23 choromosomes cells)’’

‘’ரிப்ளிகேஷன் (replication) ப்ராசெஸ் ட்ரான்ஸ்லேசன் (translation) ப்ராசெஸ் பத்தி யோசிச்சியா’’

‘’எஸ், எல்லாம் யோசிச்சி அட்டெம்ப்ட் பண்ணி இருக்கேன். இட் வில் ஒர்க் அவுட்’’

‘’அப்ப என்னதான் பிரச்சினை’’

‘’அக்ரீமென்ட். என்னால இதை உருவாக்கி வேற ஒருவருக்கு தர முடியாது. டில்லியில் ஒரு டாக்டர்கிட்ட பேசினேன். அவருக்கு ஆர்வம் வந்தது. ஆனா கேப்ஸ்யூல் கொண்டு வந்து தா நான் பரிசோதிச்சிட்டு உனக்கு இதைப் பண்ண மேற்கொண்டு பணம் தரேன்னு சொன்னார். அதை வாங்கத்தான் வந்தேன். ஆனா டாக்டர் ராம் தர முடியாது, இது என்னோட கனவு எல்லாமே நான் பண்ணினது நீ இல்லைனு சொல்லிட்டார்.’’

‘’அக்ரீமென்ட் ரீட் பண்ணாமலா கையெழுத்துப் போட்ட’’

‘’எனக்கு அப்ப அந்த யோசனை இல்லை. நிறைய பணம் தரேன்னு சொன்னார்’’

 ‘’இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லு’’

‘’லுக் நான் எல்லா விபரங்களும் தரேன். நீ அதை இங்கே உருவாக்கு. எனக்கு நீ அனுப்பி வை. நான் அந்த டில்லி டாக்டர்கிட்ட கொடுத்து அடுத்த ப்ரோஜெக்ட்க்கு பணம் வாங்கிருவேன். நாம சேர்ந்து நிறைய செய்யலாம். நீ பண்ண ஆரம்பிச்சதும் பேடன்ட் உன்னோட பேருல அனுப்பிருவோம். டாக்டர் ராம் எதுவும் பண்ண முடியாது. அவர் என்ன பண்ணினார் தெரியுமா? என்னோட லேப்டாப்,வொர்க்  சிஸ்டம் இருந்த என்னோட டாட்டா எல்லாம் தங்கராஜ் அப்படின்னு ஒருத்தன் மூலமா இன்பெக்ட் பண்ண வைச்சிட்டார். அவன் ஒரு கம்ப்யூட்டர் வித்தகன். ஆனா நான் எல்லா விபரத்தையும் இந்த மெமரி ஸ்டிக் ல வைச்சி இருக்கேன். என்ன சொல்ற?’’

‘’எஸ். நான் உனக்கு உதவி பண்றேன், இது நமக்குள்ள இருக்கட்டும்’’

‘’ஐ  ஆம் சோ கேப்பி சிவா. பை த வே டோன்ட் சே டூ தட் கேர்ள் டூ. ஒரு நிமிஷம் இரு. உனக்கு எப்படி என்ன மூலக்கூறு எப்படி குரோமோசோம் எல்லாம் அட்டாக் பண்ணி இன்ட்ரான் ரிமூவ் பண்றதை காமிக்கிறேன். இட் இஸ் ஜஸ்ட் மிராக்கிள் ஹவ் திஸ் ஹுயூமன் ஸ்பீஸிஸ் டெவெலப்ட் யூ நோ’’

‘’ம்ம்’’

‘’ஆமா எப்படி பணத்திற்கு, ரீஏஜென்ட்ஸ் மேனேஜ் பண்ணுவ’’

‘’அதை நான் பாத்துக்கிறேன், ஐ வில் மில்க் சம் மணி பார் திஸ்’’

‘’அப்படின்னா நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டு வைச்சிக்கிருவோம்’’

‘’இல்லை ஜெகன் அது சரிப்பட்டு வராது. நானும் நீயும் இதில் சம்பந்தம் அப்படின்னு தெரிஞ்சா ராம் நம்ம மேல கேஸ் போட வாய்ப்பு இருக்கு. ஆமா ராம் கிட்ட இந்த வொர்க் காப்பி எதுவும் இருக்கா. எதுக்கு டெலிட் பண்ண சொல்லணும்’’

‘’எதுவும் இல்லை’’

‘’இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு ஜெகன். எப்படியும் இது சம்பந்தமான பைல் எல்லாம் தங்கராஜ் சேவ் பண்ணிட்டுதான் இன்பெக்ட்  பண்ணி இருக்க முடியும். நாளைக்கு இதே விஷயத்தை செய்யணும்னா எப்படி ராம் உடனே செய்ய முடியும். இது என்னோட முயற்சி அப்படின்னு எப்படி உரிமை கொண்டாட முடியும்’’

‘’இல்லை. குழந்தை உருவானா போதும். சக்செஸ் ஆயிருச்சினா என்கிட்டே பணம் கொடுத்தே பண்ண முடியும். வேற யாருகிட்டயும் போக வாய்ப்பு இல்லை. அக்ரீமென்ட் வில் வொர்க் பார் கிம். இப்போ என்னை மிரட்டி வைச்சி இருக்கார். நான் அதை யாருக்கும் தரக்கூடாது அதுதான் அவரோட திட்டம். இப்போ நான் சொன்ன ஐடியா வைச்சி நீ கேமிட்ஸ்ல இன்ட்ரான் ரிமூவ் பண்ண முடியாதா? கொஞ்சம் யோசிச்சா போதும். யூ கேன் டூ இட்’’

‘’இல்லை ஜெகன். என்னால யோசிக்க முடியலை’’

‘’சரி இதோ காட்டுறேன்’’


சிவராம் பேரார்வத்தில் அமர்ந்து இருந்தான். அப்போது சுபாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

(தொடரும்)  

Wednesday 3 February 2016

தட்சாயினியும் கல்யாண உறவும் - 2

''என்ன தம்பி சௌக்கியமா இன்னைக்கு காய்கறி பக்கம் காணோமே'' அப்பா அருணைத்தான் விசாரித்தார் 

''வாழை இலை போட வந்தேன். நாளனைக்குத்தான் பறிக்கனும்யா''

''தம்பியைத் தெரியுதாம்மா உன்னோட படிச்ச தம்பிதான் அப்பவே எனக்கு நல்ல பழக்கம்''

''ம்ம் தெரியும்ப்பா''

அருண் அப்பாவோடு நல்ல பழக்கம் என்பது இதுவரை எனக்குத் தெரியாது. எனது காதலுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருப்பது இதுவும் ஒரு காரணமோ என நான்அந்த கணத்தில் எண்ணினேன். அருண் என்னைப் பார்க்க மறுத்தான். பொங்கல் நன்றாகத்தான் இருந்தது. சாப்பிடத்தான் பிடிக்கவில்லை. 

ரொம்ப நல்ல தம்பி என அருண் குறித்து அப்பா சொன்னார். அருணின் அப்பா அம்மா, விவசாயம், அவனது தங்கை என பேசினார். இவ்வளவு எல்லாம் என்னோடு அப்பா பேசியது இல்லை.

அம்மாவிடம் விபரங்கள் சொன்னேன். உங்கப்பாவுக்கு வேறு வேலை இல்லை சும்மா ஏதாச்சும் பேசுவார் என்றார் அம்மா. இது எனக்குப் புரியவில்லை. அருணின் ஊருக்குச் செல்லலாம் என தைரியம் வளர்த்துக்கொண்டேன். அடுத்தநாள் அருணின் ஊருக்குள் சென்றேன் மனம் படபடத்தது. யாரைப் பார்க்கனும் எனக் கேட்டார். ஒருவர். என்னோட தோழி ஒருத்தி என பொய் சொன்னேன் தப்பு செய்வதாக நாம் நினைக்கும்போது பொய் சொல்ல ஆரம்பிக்கிறோம் அதான்மா எந்த புள்ளை அது என்றார்.

என்னோட படிச்ச பொண்ணு என சொன்னபோது எனது கண்ணில் அருண் தென்பட்டான் ஒரு கைதிக்கு கிடைத்த விடுதலை போல உணர்ந்தேன் அதோ அங்கே இருக்காங்க என நான்அவரிடம் சொல்லிவிட்டு அருணை நோக்கி நடந்தேன். வீதியில் வேறு எவரும் இல்லை எனினும் பலர் என்னைப் பார்ப்பது போல ஒரு பிரமை உண்டாகியது. தட்சா என அழைத்த அருண் குரல் எனக்கு தந்த மகிழ்ச்சி நிறைய. நல்லா இருக்கியா என்ன இந்தப்பக்கம் என்றான். உன்னைப் பார்க்கவே வந்தேன் என்றதும் சிரித்தான்.

வா வீட்டுக்குப் போகலாம் என அழைத்துச் சென்றான். நான் மதிய வேளையில் சென்று இருந்தேன். வெயில் ஒன்றும் அவ்வளவாக இல்லை. ஊர்ல யாரையும் காணல என சொன்னபோது எல்லாம் வெளியூர் வேலை என்றான். 

அருண் என் காதலுக்கு நீ பதில் சொல்லலையே என்றேன் புன்னகைத்தவன் வீடு வந்துருச்சு என்றான். எங்க வீடு போன்று இருந்தது. 

யாருப்பா இது என்றது அருணின் அம்மாவாக இருக்கும் என நினைத்தேன். மரக்குளம் முத்தையா ஐயா பொண்ணு. முத்தையா மகளா வாம்மா என்று சொன்னபோது ஏதோ நெருங்கிய உறவு போல உணர்ந்தேன் உட்கார வைக்கப்பட்டதும் மோர் கொண்டு வந்து தந்தார். என்ன பண்றம்மா என எல்லாம் விசாரித்தார். உங்க அப்பா வியாபார சம்பந்தமா இங்க வருவாரு போவாரு. அப்பத்தான் இவனோட அப்பாவுக்கு பழக்கம் என்றார். எங்க மூலமாத்தான் எதுவும் இந்த ஊரில செய்வார் என்றதும் சரியெனக் கேட்டுக்கொண்டேன். என்ன விசயமா வந்தம்மா என்றதும் அருணின் மீதான எனது காதலை சொல்ல நினைத்தேன். ஊர் சுத்திப்பார்க்க வந்ததாக பொய் சொன்னேன். இங்க என்ன கிடக்கு, ஊரே காலியாகிரும்போல. இவன் ஒரு வேலைக்குப் போனா எல்லாம் வித்துட்டு கூடப் போயிரலாம்னு இருக்கோம் என்றதும் எனக்கு திக்கென்றது. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன் மொபைல் எண் கூட அருண் என்னிடம் தரவில்லை, நானாகத்தான் கேட்டேன்.

என் அம்மாவிடம் எனக்குத் திருமணம் முடிந்த பின்னர் ஊரை விட்டுச் செல்வீர்களாக எனக்கேட்டபோது இதே மண்ணுலதான் எங்க கட்டை வேகும் என்றார்கள். அருண் வீட்டிற்கு சென்று வந்ததை மறைத்து வைத்தேன் விற்பனை இடத்துக்கு அப்பாவுடன் சில சனிக்கிழமைகள் சென்று வர ஆரம்பித்தேன் எதுக்கும்மா சிரமம் என்றதால் செல்வதை நிறுத்திவிட்டேன். 

வேலை சம்பந்தமாக ஒரு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. அங்குதான் என் சகோதரனை சந்தித்தேன். என்னைப் பார்த்தவன் ஏதும் சொல்லாமல் போனான். அண்ணா என அழைத்து அவன் முன் நின்றதும் யார் நீ என்றான் நான் தட்சாயினி உன்னோட கூடப்பிறந்த தங்கை என்றேன் அது உறவு முறிச்சி வருசமாச்சி என்றான். அம்மாவை அண்ணி அடிச்சதால என்னால பொறுத்துக்க முடியலை என்றதும் போயிரு என விறுவிறுவென நடந்து போய்விட்டான்.

தாயை விட மனைவி ஆண்களுக்கு மிகவும் முக்கியமாகப்போய்விடுகிறது. அன்று நடந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் உடல் உள்ளம் கொந்தளிக்கிறது. நான் செய்தது சரிதான் என இதுவரை எண்ணி இருக்கிறேன். அன்பில்லாத உறவு அவசியமற்றது. போலித்தனமான வாழ்வில் என்ன இருக்கப்போகிறது. கிளம்பி வரும் போது எதிரே வந்தான். நான் அவனை காணாத மாதிரி கடந்தேன். தட்சா நில்லு. நின்றேன். என்னைப். பார்த்ததை அப்பா அம்மாகிட்ட சொல்லாத. அம்மா அப்பா என்றில்லாமல் அப்பா அம்மாவாம்.

முகத்தைப் பார்க்காமல் தலையாட்டிவிட்டு நடந்தேன். எத்தனை பாசமாக இருந்தான். தட்சா உனக்குத்தான் எல்லாம் முதலில் என அழ வைக்காமல் இருந்த அந்த அண்ணனா இவன். திரும்பிப் பார்த்தேன் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தான். அப்போதுதான் ஈரம் என் கண்களை நனைத்தது. வேகமாக நடந்து வெளியேறினேன். ந்த உலகம் எனக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. புரியவும் புரியாது. அன்று அம்மாவிடம் அண்ணன் வந்தா ஏத்துப்பியா என்றேன். நான் எங்க அவனை ஒதுக்கி வைச்சேன். அவன்தான் நம்மளை ஒதுக்கி வைச்சி பாசத்தில் விளையாடறான், நீ அன்னைக்கு பொறுமையா இருந்து இருக்கனும்மா ஆனா நீ பண்ணினது சரிதான் போறான் விடு. எங்கேயாச்சிம் நல்லா இருக்கட்டும். எங்களுக்கு கொள்ளி போட உன் மகன் வருவான் என்றதும் கல்யாணம் பண்ண வேண்டியதின் அவசியம் சற்று புரிந்தது.

வேலை இடத்தில் நன்மதிப்பை பெற ஆரம்பித்து இருந்தேன். இந்த நேரத்தை எவராலும் பிடித்து வைக்க முடிவதில்லை. அருண் வீட்டிற்கு சென்றது அண்ணனைப் பார்த்தது எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. அப்பாதான் அருணுக்கு வேலை கிடைத்த விசயத்தை என்னிடம் சொன்னார். அப்பாவுக்கு அருணை மிகவும் பிடித்து இருக்க வேண்டும். அவர்கள் ஊரைவிட்டுப் போயிருப்பார்களோ என நினைத்தேன் அருணுக்கு எந்த ஊரில் வேலை என அப்பாவிடமும் கேட்கவில்லை.

இந்த உலகில் ஒன்று மட்டும் நிச்சயம். இதுதான் சரி என எதையும் எவராலும் நியாயப்படுத்திப் பேசிவிட முடியும் வலி என்பது நேரடியாக பாதிக்கப்பட்டவர்க்குத்தான் எனக்கு கதைகள் படிக்கப் பிடிக்கும். ஓவியம் வரைவது, பாடுவது, ஆடுவது என ஓரளவுக்குத் தெரியும் கற்றுக்கொள்ள ஊக்கம் தந்தது பக்கத்து ஊரில் பாடல் சொல்லி தந்த ஆசிரியை கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்கள் பிறரிடம் எதுக்கு கல்யாணம் என விட்டேத்தியாகப் பேசுவார்கள் என்னிடம் அப்படி சொன்னது இல்லை. ஒருவேளை நானும் அவரைப்போல கல்யாணம் பண்ணாமல் வாழ்வேனோ எனும் அச்சம் உள்ளூர அருண் தந்தது உண்டு. அருண் தான் அம்மையப்பனைத் தாண்டிய உலகம் என எண்ணி இருக்கிறேன் பாடல் ஆசிரியையிடம் கேட்கலாம் என நினைத்தேன் என்ன வாழ்வு இது அன்று மதியம் அவர்கள் இறந்து போனதாக தகவல் ஊருக்குள் வந்தது.

அதிர்ச்சியும் பயமும் ஒட்டிக்கொண்டது. அவருக்கு வயது 52 தான். அம்மா அப்பா நான் அங்கு இரவு சென்றோம். என்னால் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. உறவுகள் என அவர் சொல்லித்தந்த பிள்ளைகள் குடும்பம் தான் வந்து இருந்தனர். மூச்சடைத்து இருந்ததாக சொன்னார்கள். எவரோடும் அன்போடு இருக்க பழகிட வேண்டும் என அவர் சொன்னதுதான். ஊர்ப்பெரியவர் ஆசிரியை எழுதித்தந்த விபரங்கள் வாசித்தார் தனது சொத்து பணம் வீடு இல்லாத மக்களுக்கு சேரட்டும் என அவர் வாசித்தபோது எனக்கு அழுகை அதிகமானது. உறவுகளை நேசியுங்கள் இது தவிர வேறு எதுவும் இல்லை உலகில் என்றே முடித்து இருந்தார்கள் எனக்கு அப்படி ல்யாணம் எதற்கு எனப் பேசிய ஆசிரியையா என ஆச்சரியம். ஒருவேளை கல்யாணம் உறவுகளை சிதைக்கும் என நினைத்தாரோ. நாட்கள் கழிந்தது அவரது மரணம் மனதில் நிழலாடுகிறது.

வெள்ளி அன்று அண்ணனின் நிறுவனம் சென்றேன் அண்ணா நான் அண்ணியைப் பார்க்க வேண்டும் என்றேன் தட்சா எதுவும் வேணாம் போ என விரட்டினான். அண்ணனின் வீட்டு முகவரி ஒருவரிடம் வாங்கிக்கொண்டு அங்கு சென்றேன். கதவைத் திறந்த அண்ணியிடம் என்னை மன்னிச்சிருங்க அண்ணி என்றேன் வா தட்சா என உள்ளே அழைத்தார். எனது தயக்கம் எப்படியானது என நான் சொல்ல இயலாது. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றபோதும் மன்னிப்பு கேட்பது என்னஒரு செயல். உள்ளே சென்று அமர்ந்தேன். தண்ணீர் கொண்டு வந்தார். குடித்தேன். அண்ணி குழந்தை எங்கே என்றேன். இன்னும் பாக்கியம் இல்லை தட்சா என்றபோது அவருக்குள் சோகம் இருந்தது அத்தையை நான் அவமதிச்சி இருக்கக்கூடாது அந்த பாவம்தானோ என்னவோ நீ எப்படி இருக்க என் அம்மா கூட நீ பண்ணினது சரினு சொன்னாங்க அண்ணி, பெத்த அம்மா அதுவும் எப்படி எல்லாம் வளர்த்தாங்க என சொன்னபோது எனக்கு கண்ணீர் எட்டிப்பார்த்தது வீட்டுக்கு வாங்க அண்ணி என அழைத்தேன். உன் அண்ணன் நீ வந்தது பார்த்தது எல்லாம் சொன்னார். அன்னைக்கு நிறைய அழுதார். மனசில பூட்டி வைச்சி இருந்துருக்கார். வரோம் என அண்ணி சொன்னபோது சந்தோசப்பட்டேன் எதையும் மனசில வைச்சிக்க வேணாம் என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

இந்த பிரபஞ்சம் அழகிய மனிதர்களால் மட்டுமே என்றும் அலங்கரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் மட்டும் எப்படி இருக்கும். அண்ணியின் கோபம் இரண்டு விசயங்களால் மாறி இருக்கிறது ஒன்று பிள்ளைப்பேறு மற்றொன்று அண்ணனுடைய என் மீதான பாசம் அண்ணி அம்மாவை அடித்த போது அம்மா என்னை மன்னிச்சிரு தாயி என்றுதான் சொன்னார் நான் தான் அண்ணியை அறைக்குள் அழைத்துச் சென்று என் ஆதங்கம் தீரும்வரை அடித்து துவைத்தேன். உலகில் அவமானங்களோடு வாழப் பழகாதீர்கள் அன்புக்காக விட்டுத்தாருங்கள் தவறில்லை. என் அம்மா பொறுமையின் சிகரம். பொறுமைதான் அன்பின் வலிமை. அன்பு நிறைந்த மனிதர்கள் உலகில் காயப்படுத்தப்படுகிறார்கள். அன்பை அவமதிக்கும் போது நிராகரிக்கும் போது உள்ளூர மனம் குமுறும். அருண் விசயத்தில் நான் வமதிக்கப்பட்டதாக நினைக்கவில்லை. அனுமதிக்காக காத்திருந்தேன் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. வாரம் சில ஆகியும் அண்ணன் அண்ணி வரவில்லை.

அம்மாவிடம் சொன்னபோது விரிசல் விழுந்தது விழுந்ததுதான் போல என்றார் அண்ணனைப் பார்க்க வரமறுத்தார் அருணை ஒருமுறை சந்தித்தேன் அண்ணி விசயத்தை சொன்னேன் அவன் தட்சா பெருமையா இருக்கு என்றான் பெரியவர்களை மதிக்காதவங்க இருந்து என்ன பிரயோசனம் என்னோட காதலுக்கு பதில் இல்லையா என்றேன் என்னோட தங்கைக்கு கல்யாணம் இருக்கு இன்னும் ஆறு மாசம் தான் அதற்கு பிறகு நம்ம கல்யாணம் பத்தி பேசலாம் என்றான் நான் காதல் பற்றி சொன்னேன் அவன் கல்யாணம் பற்றி சொன்னான் காதல் பண்ணினால் கல்யாணத்தில் முடியனும்னு நினைக்கிறாங்க கல்யாணம் பண்ணினப்பறம் காதலை மறந்துருராங்க என்றான் என்ன சொல்ற என்றேன்.

காதல் பண்றேனு சொல்லிட்டு வேற பெண்ணை கல்யாணம் பண்றது தப்புதானே என்றான் ஆமா அருண். கல்யாணம் பண்ணிட்டு பிரியறது தப்புதானே என்றான். ம்ம்.கல்யாணம் பண்ண முன்னால் யோசிக்கலாம் கல்யாணம் பண்ணிட்டு யோசிக்கக்கூடாது என்றவனை வியப்புடன் பார்த்தேன் இப்படி அவன் பேசி கேட்டது இல்லை காதல் அதிகமானது ஆசை வார்த்தைகள் பேசி காதல் என சொல்லி கொச்சைப்படுத்தும் வகையில் அருண் இல்லை மகிழ்ச்சியாக இருந்தது இந்த உலகம் இப்படியானது இல்லை.

பெண்ணை ஒரு உலகம் எப்படி நடத்தும் என நான் அறியாதது இல்லை கேட்டால் இயற்கை என பேசுபவர்களை கண்டது உண்டு மதிப்பு கௌரவம் இல்லாத ஒன்று எதற்கு
மோசமான விசயம் பிடித்துவிட்டால் மனம் அதை கேவலமாக எண்ணுவது இல்லை அருண் நான் காத்து இருக்கவா என்றேன் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன் தட்சா என்றபோது இந்த பிரபஞ்சமே எனக்குத்தான் என்று இருந்தது அருண் பற்றி அப்பா பெருமையாகப் பேச ஆரம்பித்தார் விவசாயம்தனை விடமா வேலைக்குப் போற பையன் என்றபோது எனக்கு சந்தோசம் அருண் அவனது அப்பா ஒருநாள் வீடு வந்தார்கள் தங்கையின் திருமண பத்திரிக்கை தந்தார்கள் கல்யாணத்துக்கு சென்றோம் அருண் என்னைப்பற்றி அவர்கள் வீட்டில் சொன்னான் அடுத்த கல்யாணம் என எங்களுக்கு என்றார்கள்.

இப்போது ஒன்றை மிகவும் யோசிக்கத் தொடங்கினேன் காதல் என்பது அவசியமா? காதல் என்பது உண்மையா? காதல் அனுமதி பெற்றுத்தான் நடக்குமா? காதலின் வெற்றி கல்யாணம் தானா? அண்ணன் அண்ணி இன்னும் வரவே இல்லை எனது திருமணம் தேதி குறிக்கப்பட்டு அண்ணனுக்கு நானும் அப்பாவும் பத்திரிக்கை தரப் போனோம். வருகிறோம் என்றான் வந்தான் கல்யாணம் உறவை சிதைக்கக்கூடாது அண்ணியின் பிள்ளைப்பேறுக்காக ஒரு கிளினிக்தனை அறிமுகம் செய்தேன் எந்த பாவமும் இல்லை என புரியட்டும் அருண் என்னை காதலிக்கத் தொடங்கி இருந்தான்.

ஆமாம் அண்ணி ஏன் அம்மாவை அடித்தார்? அது ஒரு தனிக்கதை.

(முற்றும்)

Tuesday 23 June 2015

மனைவியின் வாரிசு ( சிறுகதை )


                                                     மனைவியின் வாரிசு ( சிறுகதை )

இதோ நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போது அடுத்த குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் சொல் என கேட்கும்போதெல்லாம் இதுவரைப் பெற்றுக் கொண்டது போதாதா என்றே பதில் அளித்துக்  கொண்டு இருந்தாள்.

''நாலுதானே பெத்து இருக்கோம், இன்னும் ஒன்னே ஒன்னு பெத்துக்கிரலாம்''

''ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுக, போதாதா. ஊரு உலகத்தில் நம்மளைப் பத்தி என்ன பேசுறாங்க தெரியுமா?''

''எவன் என்ன பேசினா என்ன, அவனா வந்து நம்ம வீட்டில உலை வைக்கிறான்''

''நீங்க என்ன சொன்னாலும் சரி, என்னால இன்னொரு புள்ளைப்  பெத்துக்க முடியாது, இதுகளை சமாளிக்கவே எனக்கு சீவன் போதலை. இதுல இன்னொன்னு வேறயா''

''அந்த காலத்தில...''

''வாயை மூடுங்க, போதும் உங்க அந்த காலப் புராணம், ஆசை வார்த்தை சொல்லி சொல்லி அதை வாங்கித்தாரேன் இதை வாங்கித்தாரேன் சொல்லி புள்ளைக வாங்கித் தந்ததுதான் மிச்சம். மூத்தவனுக்கு இன்னும் ரண்டு வருஷம் போனா கல்யாணம், இந்த லட்சணத்தில இன்னொன்னு கேட்குதா''

''நீ என்ன வேணும்னா சொல்லு, எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை. எனக்கு உடனே ஒரு புள்ளை  நீ பெத்து தரனும்''

''குடும்ப கட்டுபாடுனு  ஒன்னு இருக்கே அதை எல்லாம் பண்ணித் தொலைக்கக்கூடாதானு போகிற இடத்தில பேசுறாளுக, மானம் போகுது''

''நாம பேசாம ரஷ்யா போயிரலாம், அங்கன நிறைய புள்ளைக  பெத்தா வரிவிலக்கு எல்லாம் இருக்கும். வேற ஒன்னும் செய்வோமா நாம பேசாம மதம் மாறிட்டா என்ன''

''புள்ளை  பெக்கிரதுக்கு யாராச்சும் மதம் மாறுவாகளா''

''கல்யாணம் பண்ணுறதுக்கு மதம் மாறுற ஆளுகனு  ஊருல பேச்சு இருக்கு, அது எல்லாம் இப்ப எதுக்கு, எனக்கு இன்னொரு புள்ளை  வேணும்''

''நான் வீட்டுக்கு இனிமே தினமும் தூரம்''

''கிறுக்கச்சி  மாதிரி பேசித் தொலையாத அப்புறம் இன்னொரு புள்ளைப்  பெத்துக்க வேற ஒருத்தியைத்தான் நான் தேடணும்''

''ச்சீ என்னப்  பேச்சு பேசறீங்க, இதெல்லாம் மானங்கெட்ட பொழப்பு, பேசாம தள்ளிப்படுங்க, நாம பேசறது யாருக்காச்சும் கேட்கப்போகுது, ரெண்டாமவன் சொல்றான் இன்னொரு பிள்ளை பெத்துக்கம்மா இல்லைன்னா எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கிக்கொடுனு சொல்றான். குழந்தைக பொம்மைன்னு நினைச்சிட்டான்''

''அவன் கேட்டத நாம நிறைவேத்தி வைக்க வேணாமா சொன்னா கேளு. இதுதான் கடைசி''

''நீங்க மொத பிள்ளையில் இருந்த இப்ப நாலாம் பிள்ளை வரைக்கும் இதேதான் சொன்னீங்க. எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க''

''அப்ப நான் வேற ஒருத்தியைத் தேட வேண்டியதுதான்''

''இன்னொருதடவை அப்படி பேசினீங்க, அப்புறம் கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன். சொல்லிட்டேன். பேசாம படுத்துத் தொலைங்க. எப்பப்பாரு பிள்ளை பிள்ளைனுட்டு''

வழக்கம் போல நன்றாகத் திட்டு வாங்கி உறங்கினேன். காலையில் எழுந்ததும் வீடு பரபரப்பாக இருந்தது. பெரியவன் முதற்கொண்டு சிறியவள் வரை பள்ளி கல்லூரி என இங்கும் அங்கும் அலைமோதிக் கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் ஒழுங்கு பண்ணி வியர்க்க விறுவிறுக்க  வேலை செய்து கொண்டு இருந்தாள்.

''மாமா, பெரியவனுக்கு ஒரு நூறு ரூபா கொடுங்க. சின்னவளுக்கு ஒரு ஐம்பது கொடுங்க, நேத்தே கேட்க மறந்துட்டேன்''

இப்படி இவள் ஆடி ஓடி உழைத்து எத்தனை வருடங்கள் கழிந்து விட்டன. இன்று விடுமுறை போட்டு இருந்தேன். எப்படியும் அடுத்த பிள்ளை தயாராக வழி செய்ய வேண்டும் என.

''இன்னைக்கு வேலைக்குப் போகலையாங்க''

''போகலை, அசதியா இருக்கு''

''அப்படினா ரண்டாமவனை ஸ்கூல்க்கு போய்  விட்டு வாங்க''

''நீ ரெடியா இரு''

''எங்கேயும் வெளியில கூப்பிட்டுப் போறீங்களா''

''இல்லை, அடுத்த பிள்ளைக்கு...''

''அப்பா, அம்மாவை எப்போதுமே தொந்தரவு பண்ணிட்டேதான் இருப்பிங்களா''

பெரியவள் வந்து சத்தம் போட்டுப் போனாள்.

''கேட்டுக்கோங்க, பிள்ளைக வளர்ந்துட்டாங்க''

ரண்டாமவனையும் சின்னவளையும் அழைத்துப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். நானும் அவளும் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினோம். சப்பாத்திதான் செய்து இருந்தாள்.

அவளது சிறு வயது காலங்கள் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தாள் அதைக் கேட்டுக்கொண்டு இருந்த நான் என்னையும் அறியாமல் முகம் மலர்ந்தேன்.

கொலுசுகள் வாங்கிட்டு வரலாமா என்றவுடன் எதுவும் மறுப்பு சொல்லாமல் வா போகலாம் என கொலுசுகள் வாங்கி கொண்டு வந்து வீட்டில் அமர்ந்தோம். காலையிலேயே மதிய சாதம் சமைத்துவிட்டதால் அதிக வேலை இல்லை. ஒவ்வொரு அறையாக சென்று மகன்கள்  மகள்களின் அறைகளை சுத்தம் செய்தாள். எல்லா துணிகளை ஒழுங்கா மடித்து வைத்தாள்.

''பிள்ளை பெறலாம் வா''

''நீங்க வேலைக்குப் போங்க, நொய்  நொய்யுனுட்டு''

''நான் ஒரு கனவு நேத்து கண்டேன்''

''என்ன கனவு''

''அது வந்து ஒரு பொண்ணு இருவத்தி அஞ்சி வயசு இருக்கும், என்கிட்டே வந்து உங்களோட ஒரு புள்ளை பெத்துக்கிட்டா எனக்கு சாகா வரம் கிடைக்கும். அதோட மட்டுமில்லாம அந்த பையன் இந்த உலகத்தையே ஆளும் வல்லமை கொண்டு இருப்பான். உங்களுக்கும் சாகா வரம் கிடைக்கும்னு  சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகிருச்சி, குழந்தைக இருக்காங்கனு சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு அது எல்லாம் தெரியும். அவங்களுக்கும் சாகா வரம் கிடைக்க ஏற்பாடு பண்றேன். எனக்கு உங்க குழந்தைதான் வேணும் அப்படின்னு அடம் பிடிச்சிச்சி. வேற யாருமே உலகத்தில வேணாம் அப்படின்னு சொல்ல எனக்கு என்ன ரோதனையாப் போச்சுனு  அதெல்லாம் முடியாது, என்னோட பொண்டாட்டிக்கு துரோகம் பண்ண மாட்டேன் அப்படின்னு சொன்னேன்''

''அப்புறம் என்ன ஆச்சுங்க''

''பாத்தியா நான் உனக்கு கனவுல கூட துரோகம் செய்யலை''

''மீதி கதை என்ன ஆச்சுன்னு சொல்லுங்க''

''பாவிபுள்ள நான் குழந்தை தரமுடியாதுன்னு சொன்னதும் செத்துப் போச்சு''

''ஹாஹாஹா ஹாஹாஹா நீங்க ரொம்ப குறும்புங்க''

'சரி வா நாம...''

''இப்படி எல்லாம் உங்களுக்கு ஒரு நினைப்பு உண்மையிலே இருந்து இருக்கு அதுதான கனவு வந்துருக்கு''

அந்த வார்த்தைகள் கேட்டு நான் சற்று மிரண்டேன்.

 ''இல்லை அந்த பொண்ணு உன்னோட வாரிசா வர நினைச்சி இருக்கும்''

''உங்களுக்கு மதியம் சோறு கிடையாது, பட்டினியா கிடங்க''

இப்போதெல்லாம் நான் கனவு கண்டதாக எந்த ஒரு கதையும் அவளிடம் சொல்வதே இல்லை.

(முற்றும்)

பின்குறிப்பு: சிறுகதை என குறிப்பிட்டு இருப்பதால் உங்க சொந்த அனுபவமோ என எவரேனும் என்னைப் பார்த்து கேட்டீங்க அப்புறம் உங்களுக்கு சோறு கிடையாது, தண்ணி கிடையாது.






Saturday 17 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 2

அங்கே சில இடங்களில் விசாரித்துவிட்டு ஒருவரின் வீட்டை அடைந்தோம். வாசற்கதவை தட்டினோம். அவரது வீட்டின் வெளியில் ஒரு திண்ணை இருந்தது. உயரமான நல்ல நிறத்துடன் ஒருவர் கதவை திறந்து நின்று கொண்டிருந்தார். நெற்றியில் நாமம் இட்டு இருந்தார்.

''வணக்கம்''

''யார் நீங்க?''

''கர்நாடக இசை கத்துக்க வந்து இருக்கோம்''

''என்ன சாதி?''

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீட்டின் வெளியிலே நின்று கொண்டிருந்தோம். உள்ளே கூட அழைக்காமல் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறாரே என எனக்குள் வருத்தமாக இருந்தது. சங்கீதம் தெரிந்தவர் இங்கீதம் கூட தெரியாமல் இருக்கிறாரே என மனதில் புலம்பினேன். நான் பதில் சொல்லும் முன்னர் கருத்தபாண்டி பதில் சொல்லிவிட்டான்.

''நான் பறையர், இவன் தேவர்''

''கீழ் சாதிக்காரங்களுக்கு எல்லாம் நான் சங்கீதம் கத்து தரது இல்லை. இது பாரம்பரிய மிக்க இசை, பிராமணர்கள் மட்டுமே கத்துக்க வேண்டிய இசை. நீங்க போகலாம்''

''புரந்தரதாசர் அப்படி நினைக்கலையே''

''புரந்தரதாசர் பத்தி என்ன தெரியும் உனக்கு''

''தியாகராஜ பாகவதர் கூட இப்படி சொல்லலையே''

''அவங்க ரண்டு பேரு பேரை சொன்னா உங்களை உள்ள விட்டுருவேனா''

பட்டென கதவை சாத்தினார் அவர். கருத்தபாண்டி என்னை முறைத்து பார்த்தான்.

''கதவை உடைக்கட்டுமா''

''வேணாம் விட்டுரு''

''யாரு புரந்தரதாசர், யாரு தியாகராஜ பாகவதர்''

''கர்நாடக இசை மாமேதைகள், புரந்தரதாசர் கர்நாடக இசை தந்தை''

''ஓ...''

கருத்தபாண்டிக்கு இவர்களைத் தெரியாமல் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏமாற்றத்துடன் அவரது வீட்டில் இருந்து கிளம்பினோம். இவர் மிகவும் சிறந்த கர்நாடக இசை ஆசிரியர் என சொன்னதால் மீண்டும் ஒருமுறை கதவை தட்டுவோம் என திரும்பினோம். இந்த முறை கதவை தட்டியதும், திறந்தார்.

''நாங்கள் வெளியில் இந்த திண்ணையில் இருந்து கற்று கொள்கிறோம்''

''நான் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லை''

அடுத்த நிமிடமே கருத்தபாண்டி அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் எறிந்தான். அலறலுடன் அவர் தலையை பிடித்தவாறு கீழே விழுந்தார். அவரது தலையில் ரத்தம் கொட்டியது. வீட்டில் எவரும் இல்லை என புரிந்தது. நான் எனது சட்டையை கிழித்து அவரது தலையில் கட்டினேன். வீட்டு கதவை சாத்திவிட்டு மயக்கத்தில் இருந்தவரை மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் தூக்கி கொண்டு சென்றோம். அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். கருத்தபாண்டியை திட்டி தீர்த்தேன். அவனோ இது போன்ற ஆட்களுக்கு இதுவே தண்டனை என்பது போல் பேசாமல் நின்று கொண்டிருந்தான். கண் விழித்து பார்த்தவரை சென்று பார்த்தோம்.

''எங்களை மன்னிச்சிருங்க ஐயா''

எங்கள் இருவரையே பார்த்து கொண்டிருந்தார். போ போ என கையை அசைத்தார்.

''கர்நாடக இசை...''

''நா ன் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்ல''

இனிமேல் அங்கே நின்று பிரயோசனம் இல்லை என கிளம்பினோம்.

''கொன்னு போட்டு இருக்கனும்''

''விடுறா''

''என்ன மனுசங்க''

''மண்ணில் வந்த உடம்பு, மண்ணில் போகும் உடம்பு, ஒருவர் எந்த சாதி என்றால் என்ன, ஒருவர் எந்த நிலையில் இருந்தால் என்ன, இசை எல்லாருக்கும் பொதுவானது''

''நான் பாட்டுக்கு பேசாம தப்பட்டையை தட்டிகிட்டே இருந்து இருப்பேன், நீ என்னவாச்சும் பண்ணு''

கருத்தபாண்டி என்னை தனியாக விட்டுவிட்டு கிளம்பி போனான். எத்தனை எத்தனையோ மனிதர்கள் கண்டேன். அவர்கள் எல்லாம் என்னை என்ன சாதி என்றே கேட்க வில்லை. உணவகத்தில் உணவு அருந்தினேன். அவர்கள் என்ன சாதி என நானும் கேட்கவில்லை. சாப்பிட்டு கொண்டு இருந்தபோது கர்நாடக இசை கற்று தருபவர் பற்றி எனக்கு எதிரில் அமர்ந்து இருந்தவரை கேட்டேன். தெரியாது என்றார். மேலும் சிலரிடம் விசாரித்து ஒரு முகவரி வாங்கி கொண்டு சென்றேன்.

வீட்டு வாசலை தட்டினேன். உயரமான ஒருவர் வாசற்கதவை திறந்தார். 

''நான் தேவர் சாதி, கர்நாடக இசை கத்துக்கிரனும்''

''புரந்தரதாசர் காலத்தில் இருந்தே இந்த சாதி கொடுமையை எதிர்த்து போராடி இருக்காங்க, இன்னுமா சாதி பத்தி பேசற, உள்ளே வா''

எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. வீட்டிற்குள் இருந்த திண்ணை ஒன்றில் அமர சொன்னார். வீட்டினுள் சென்று பழங்கள் கொண்டு வந்தார். அவரது துணைவியாரும், அவரது மகளும் உடன் வந்தார்கள். அவர்களுக்கு வணக்கம் சொன்னேன்.

''கர்நாடக இசை கத்துக்க வந்துருக்கான்''

புன்னகை புரிந்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

''இதுக்கு முன்னால எங்கேயாவது சங்கீதம் கத்து இருக்கியா''

''இல்லை''

''எத்தனை ராகம், எத்தனை தாளம் எல்லாம் தெரியுமா?''

''கொஞ்சம்''

''கர்நாடக சங்கீதம் பாடுறது, அது இதை வைச்சி தட்டுறது இல்லை''

''புல்லாங்குழல், மிருதங்கம், வீணை எல்லாம் உபயோகம் பண்ணுவாங்களே''

''ஆமா, ஆனா நீ பாட கத்துக்கிற போறியா, இல்லை இசைக்கருவிகளை இசைக்கப் போறியா''

''பாட கத்துக்கிறேன், அதோட இசைக்கருவிகளும்''

''என் பேரு ஆதிராஜன், உன் பேரு''

''ஆதி''

''இதோ பழங்கள் எடுத்து சாப்பிடு''

''இதே ஊருல ஒருத்தர் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லைன்னு சொன்னார்''

''யாரு, சீர்மலைவேதிகரா''

''பேரு கேட்கலை''

''உயரமா நாமம் போட்டுண்டு... அவா அப்படித்தான், சிலரை திருத்த முடியாது''

''இப்படி இருந்தா எப்படி கர்நாடக இசை வளரும்''

''இனிமே யாரு கர்நாடக இசைக்கு மாறப் போறா, கொஞ்ச பேரு என்கிட்டே படிக்க வராங்க. ஆனா என் பொண்ணு சினிமாவுல பாடப் போறா''

''அப்படின்னா இந்த இசை''

''தெரியலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குன்னு எத்தனையோ புரட்சி வந்தது உண்டு,  ஒடுக்கப்பட்ட இசைக்கு இசை புரட்சி எதுவும் வரலை, வெஸ்டர்ன் இசை எல்லாம் வந்துருச்சு, எதோ அங்க அங்க இசை கச்சேரி நடத்துறா, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுல இருக்காங்க. நானே என் பொண்ண கர்நாடக இசையில இருக்க வைக்க முடியல''

''எனக்கு கத்து தாங்க, நான் நிறைய பேருக்கு கத்து தாரேன்''

''ம்ம்''

கற்று கொள்ள ஆரம்பித்தேன். கடினமாகவே இருந்தது. ஸ்ருதி, லயம் எல்லாம் சரி செய்ய வேண்டும் என சொன்னார். பணம் வேண்டாம் என மறுத்து விட்டார். மாலை நேரத்தில் நம்பிக்கையுடன் ஊர் வந்தேன். கருத்தபாண்டியை தேடி சென்றேன். அவன் முழுவதுமாக மறுத்துவிட்டான். அம்மாவும் அப்பாவும் எனக்காக காத்து இருந்தார்கள். அப்பாதான் சொன்னார்.

''ஆதி, ஒரு முக்கியமான சேதிடா. நம்ம ஊரு முதலாளி விவசாய நிலத்தை எல்லாம் பட்டா போட்டுட்டு வரார், நிறைய வீடு கட்ட போறாங்களாம்''

''அப்போ விவசாயம்...''

''எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்''

இருளாகிப் போனதைக் கண்டு மனம் விம்மியது.

(முற்றும்)

Thursday 8 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 1

எனக்கு இப்போது பதினெட்டு வயது. கருகருவென கருத்த முடி போன்றே எனது கருத்த தேகம். கொழுப்பு இல்லாத தசை என சொல்லும்படியான உடல்வாகு. பளபளக்கும் கண்கள், கூரிய காதுகள். விவசாயம்தான் எனது தொழில். பெரிய நகரம் என்று சொல்லாவிட்டாலும், நகரத்து தொனியுடன் உள்ள ஊர்தான் என்னுடையது. தனித்தனியாக இருந்த கிராமங்கள் எல்லாம் இந்த இருபது வருடத்தில் ஒன்றாகிப் போனது. சிறுவயதில் இருந்தே இசை பற்றிய ஆர்வம் அதிகம் இருந்தது. எனது இசை குறித்த ஆர்வம் கண்டு இசை குறித்த புத்தகம் ஒன்றை எனக்கு ஆறு வயது இருக்கும்போது எங்கள் ஊர் டில்லி தாத்தா தந்தார். நான் ஐந்து வயதில் அவ்வளவு நன்றாக தமிழ் வாசிப்பேன் என்று அம்மா பெருமையாக சொல்வார். அவர் உயிரோடு, ஊரோடு இருந்து இருந்தால் எனக்கு இசையை கற்று தந்து இருந்திருப்பார். அந்த வாய்ப்பு கிட்டாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.

இப்போதெல்லாம் கூட என்னிடம்  நீ இந்த படத்தோட பாட்டு கேட்டியா, அந்த படத்தோட பாட்டு கேட்டியா என நண்பர்களின் அன்புத் தொல்லை என்னை இலகுவாக விடுவதில்லை. நான் சினிமா பாடல்கள் எல்லாம் கேட்பது இல்லை என்று சொன்னால் என்னை கேலி செய்வார்கள் என்று கருதியே நான் மனம் நிறைந்து அவர்களிடம் ஆமாம் கேட்டேன் என பொய் சொல்லி விடுவதுண்டு. பத்து வயதில் இருந்து இதுவே பழக்கம் ஆகிப் போனது. இசை என்பது இரைச்சல் சத்தம் போலவே கேட்டது எனக்கு. பாடல் பாடுபவர் காட்டு கத்தல் கத்துகிறார் என்றே எண்ணம் இருந்தது. எனக்கு எட்டு வயது இருக்கும்போது உன்னை லூசுன்னு ஊருல பேசிக்கிறாங்க என ஒரு அண்ணன் சொன்னபோது எனக்கு அன்று முதன் முதலில் கண்ணீர் வந்தது. ஒரு தாளம், ஸ்ருதி, ராகம் இல்லாம் என்ன பாடல், என்ன இசை என்றே நான் நினைத்துக் கொண்டேன், இன்னமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சிறு வயதில் இருந்து நான் பார்த்தது என்னவெனில் எவரேனும் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதையும் மீறி, பேருந்தில் பயணம் செய்தாலோ அல்லது சாலையில் நடந்து செல்லும்போதோ, தேநீர் கடையில் தேநீர் பருகும்போதோ சினிமா பாடல்கள் வந்து எனது காதில் எனது அனுமதி இல்லாமல் நுழைந்து விடுகின்றன.  என்னமா மியூசிக் போட்டுருக்கான் பயபுள்ள என இசை மாமேதைகள் போன்றே ஒவ்வொரு நண்பரும் பேசிக்கொள்ள எனக்குள் 'குபுக்' என சிரித்து கொள்வதுண்டு. இசையை பற்றி என்ன கற்று கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்?

எனது பால்ய பருவத்தில் இருந்தே எனது வீட்டில் கூட என் அம்மா பக்கத்து வீட்டு ரேடியோவில் இருந்து வரும் பாட்டு கேட்காமல் சமைப்பதே இல்லை. எனக்கு கூட ஆராரோ பாடியே வெறும் தரையில் தூங்க வைத்ததாக பாட்டி முதற்கொண்டு கதை சொல்வார்கள். எனக்கு அந்த ஆராரோ எல்லாம் காதில் விழுந்ததாக நினைவில் இல்லை. அதைவிட  வயல் வரப்புகளுக்கு போனால் அங்கே வக்கணையாக பேசிக்கொண்டு ஏலேலோ ஐலசா என அலுப்பு தீர பாடிக் கொண்டதை கண்டது உண்டு, அதை நாட்டுப்புற பாடல் என்றே சொல்லி வைத்து இருந்தார்கள். ஆனால் அவை எல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பிடித்தமானதாக இல்லை. நினைத்த நினைப்புக்கு இழுத்துக் கொண்டு பாடுவது என்ன பாடலா?

நிலா நிலா ஓடிவா, கை வீசம்மா கை வீசு தாண்டி பாபா பிளாக் சீப் என்றெல்லாம் பள்ளியில் படித்தபோது எரிச்சலாகவே இருந்தது. நீ எல்லாம் என்ன ஜென்மமோ என்றே அம்மா பலமுறை திட்டியதுண்டு. ஒரு நல்ல பாட்டு கேட்கமாட்டேன்கிற என்றே அலுத்து கொள்வார்கள். பாரதியார் பாட்டு  கூடவா உனக்கு பிடிக்கவில்லை என்றே அம்மா ஒருநாள் என்னை அடியடி என அடித்து விட்டார்கள். ஒருமுறை பூனை சட்டி உருட்டுவதில் இசை இருக்கிறது என அம்மா சொன்னபோது எங்கே என்ன தாளம் என சொல்லும்மா பார்க்கலாம் என்றே அம்மாவிடம் சண்டை போட்டது உண்டு. ஆனால் வீட்டில் இருந்த வறுமை காரணமாக பாடல் சொல்லித் தரும் பாட்டு ஆசிரியர் எவரும் சுற்று வட்டாரத்தில் இல்லை என்றே என் அம்மாவும் அப்பாவும் என்னை பாடல் கற்றுக் கொள்ள அனுமதி மறுத்து விட்டார்கள்.

ஊரில் நடக்கும் கல்யாணத்துக்கு என மேளம், நாதஸ்வரம் என வருபவர்களிடம் என்ன தாளத்தில் மேளம் இசைக்க இருக்கிறீர்கள், என்ன ராகத்தில் பாட இருக்கிறீர்கள் என கேட்டபோது இது பரம்பரை ஞானம், இதில் தாள கதி, ராகம் எல்லாம்  என்ன தேவை இருக்கிறது என்றே முறைத்து பார்ப்பார்கள். நாதஸ்வரம் வாசிக்க வருபவர்கள் வாசிப்பதை கேட்டு எனக்கு இருப்பு கொள்ளாது. 

பறை இசை என்றே எனது நண்பன் கருத்தபாண்டி ஒருமுறை அடிக்கும்போது என்ன தாளம் சொல்லு என்றே நான் கேட்க எனது கையில் குச்சிகள் கொடுத்து அடி தாளம் வரும் என்றான். அவனது அப்பாதான் யாரேனும் எங்கள் ஊரில் இறந்துவிட்டால் அவரது குழுவோடு வந்து பறை இசை அடிப்பார். என்ன நடை, என்ன தாளம் என்றே அவரிடம் ஒருமுறை கேட்டேன். என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு தெரியலைப்பா, பரம்பரையா அடிச்சிட்டு வரோம் என்றே சொல்லி விட்டார். அவரைப் போலவே கருத்தபாண்டியும். இப்படி நான் தாளம், ராகம் என்றெல்லாம் கேட்பதை கண்டு அம்மாவிடம் வந்து உன் வீட்டு பையனுக்கு புத்தி பேதலிச்சு போச்சோ என்றே சிலர் திட்டிவிட்டு போவார்கள். அம்மாவும் ஏன்டா இப்படி இருக்க என்றே கோபம் கொள்ளாத நாள் இல்லை.

அஞ்சாம் வகுப்பு வரை தான் என்னால் படிக்க முடிந்தது. அதற்கடுத்து படிக்க எனக்கு வாய்ப்பே அமையவில்லை என்பதை விட வறுமை என்னை வறுத்து எடுத்து விட்டது. காடு வேலைகள், வீட்டு வேலைகள் என எடுபிடியாகிப் போனேன். ஒரு நூலகம் செல்ல வேண்டும் என்றால் வேறொரு ஊருக்கு நான் ஒன்றரை மணி நேரம் நடந்து போனால் தான் உண்டு. எவரேனும் சைக்கிளில் சென்றால் தொத்திக் கொள்வேன். இந்த இருபது வருடங்களில்  நான் நூலகம் சென்ற தினங்கள் மிக மிக குறைவுதான். இசை பற்றிய புத்தகங்கள் தேடினால் ஒன்றுமே கிடைக்காது. அதன் காரணமாகவே எனக்கு ஆர்வம் குறைந்து போனது. மேலும் நிறைய வேலை இருக்கும், வேலை முடித்ததும் அலுப்பு வந்து ஒட்டிக் கொள்ளும்.

எப்போது பள்ளி செல்வதை நிறுத்தினேனோ அப்போதே எவரிடமும் தாளம், ராகம் பற்றி எல்லாம் கேட்பது இல்லை. ஒருமுறை காலண்டரில் இருந்த சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையை பார்த்து கண்கள் கலங்கி நின்றேன். 'எவர் ஒருவர் வீணையை கற்றுக் கொண்டு அதை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார்களோ  அவர்களுக்கு மோட்சம் கிட்டும்' என்றே படித்து இருக்கிறேன். வீணை கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன், மோட்சத்திற்காக அல்ல!

எனக்கு பதினைந்து வயது இருக்கும். ஒருமுறை நூலகத்தில் நாச்சியார் திருமொழி என ஒன்று படித்தேன். அதில் கனாக் கண்டேன் என நாச்சியார் எழுதியதை படித்தேன்.

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்.

நானும் அப்போது கனவில் மிதந்தேன். மத்தளம் எந்த தாளத்தில் கொட்டி இருப்பார்கள். எந்த நடையை பயன்படுத்தி இருப்பார்கள். சங்கு என்ன ஜதியில் ஒலி த்து இருக்கும், இதையெல்லாம் எதற்கு நாச்சியார் விவரிக்காமல் போனார் என்றே ஆதங்கப்பட்டேன். மந்திரங்கள் என்ன ராகத்தில் அமைந்து இருக்க கூடும், அதை எப்படி ஓதி இருப்பார்கள் என்றே அன்று யோசித்தேன்.

ஒருமுறை 'சுத்த கர்நாடகமா இருக்கானே உன் பையன்' என அம்மாவிடம் ராஜு மாமா சொன்னது எனக்கு வலித்தது. இத்தனை வருடங்கள் உழைத்ததில் அக்காக்களின் திருமண செலவுக்கே பணம் செலவழிந்தது. அம்மா, அப்பாவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் எனும் கனவு அவர்களுக்கு வயதாக வயதாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போனது.

இன்று எப்படியும் எனது இசை பற்றிய கனவை அம்மாவிடம் பேச வேண்டும் என்றே முடிவு செய்தேன்.

''இப்போதான் வரியா இருடா காபி போட்டு வரேன்''

''அம்மா 'காபி' அப்படிங்கிறது ஒரு ராகம் தெரியுமாமா?''

அம்மா என்னை ஒரு முறை முறைத்துவிட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்தார்கள். சிறிது நேரத்தில் பாலில்லாத காபி போட்டு வந்தார்கள்.

''அம்மா என் பேரு எதுக்கு ஆதி அப்படின்னு வச்சீங்க. ஆதி ஒரு தாள வகைம்மா''.

சட்டென சிந்தாமல் சிதறாமல் காபியை வைத்துவிட்டு என்னை முறைத்தார்கள்.

''என்ன தவம் செய்தனை யசோதா 
என்ன தவம் செய்தனை 
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மாவென்றழைக்க''

நான் முதன் முதலில் அம்மாவிடம் வரிகள் வாசித்தேன். முறைத்து பார்த்த அம்மா அப்படியே என் அருகில் அமர்ந்தார்கள்.

''நான் இசை கத்துக்கிறனும்மா''

அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டேன்.

''யார் சொல்லித் தருவாடா''

''பரப்பிரம்மம்''

''யாருடா  அவரு?''

அம்மாவின் அந்த கேள்வி என்னுள் என்ன பதில் சொல்லிவிட உன்னால் முடியும் என்றே கேட்பது போலிருந்தது. பையில் இருந்த தாளினை எடுத்தேன். வாசித்தேன்.

''போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 
கங்காதர சங்கர கருணாகர 
மாமவ பவ சாஹர தாரக 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

நிர்குண பரம்ப்ரம்ஹ் ஸ்வரூப 
கமா கம பூத பிரபஞ்ச ரஹித 
நிஜ குஹ நிஹித நிதாந்த 
ஆனந்த அதிசய அக்ஷய லிங்கா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ 

திமித திமித திமி திமி கிட தக தோம் 
தோம் தோம் தரிகிட தரிகிட கிட தோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா 
நித்ய நிரஞ்சன ந்ருத்ய நடேசா 
ஈசா, சபேசா, சர்வேசா 
போ சம்போ சிவசம்போ ஸ்வயம்போ' 

வாசித்து முடித்ததும் அம்மாவின் முகத்தை பார்த்தேன். நான் வாசித்தது பாடியது போன்றே அம்மாவிற்கு இருந்து இருக்க வேண்டும்.

''நல்லா பாடுறடா, வரி ஒண்ணுமே விளங்கலியே. யாராவது பாட்டு சொல்லி கொடுக்கிறவங்க இருந்தா போ சேர்ந்துக்கோடா''

''நிசமாத்தான் சொல்றியாம்மா''

''ஆமாடா, உனக்கு பாட்டு எதுவுமே பிடிக்காதேடா, இப்போ எப்படிடா''

மீண்டும் ஒரு தாளை எடுத்தேன். வாசித்தேன்.

''உனையல்லால் வேறே கதி இல்லை அம்மா 
உலகெலாம் ஈன்ற அன்னை 
உன்னையல்லால் வேறே கதி இல்லை அம்மா''

''டேய் ஆதி, ரொம்ப நல்லாருக்குடா''

சந்தோசம் என்னில் பொங்கியது. அம்மா தந்த காபியை அருந்திவிட்டு கிளம்பினேன்.

'போ, சம்போ சிவசம்போ ஸ்வயம்போ''

இந்தியாவில் ஹிந்துஸ்தானி இசை, கர்நாடக இசை என்ற பாரம்பரியமிக்க இசை உண்டு. இந்த கர்நாடக இசையை ஒரு சாரர் மட்டுமே கற்று கொள்ளும் அளவுக்கு தனிப்படுத்த பட்டது. பறை இசை அடிக்கும் கருத்தபாண்டியை கூப்பிட்டேன்.

''என் கூட வரியா''

''எங்கே''

''இசை கத்துகிருவோம்''

தப்பட்டையை எடுத்தான். அடித்தான்.

''இதைவிட என்ன கத்துக்கிரனும்''

''நிறைய இருக்கு, வா என் கூட''

''இரு சொல்லிட்டு வரேன்''

நானும் கருத்தபாண்டியும் ஒரு நகரம் நோக்கி விரைந்தோம். நான் வைத்து இருந்த ஐந்து பாடல் தாள்களில் ஒன்று மட்டும் காற்றில் பறந்து கொண்டிருந்தது. என்ன பாடல் உடைய தாளாக இருக்கும் என்றே பார்த்தேன். பறந்து கொண்டிருந்த தாளில் எழுதிய வரிகள் 

''உன்னைத் தேடி - இசையே 
 உன்னைத் தேடி தேடி 
உன்னை காணாமல் இளைத்தேன்'' 

இறைவனை மாற்றி இசை என்றே குறித்து வைத்தேன். 

(தொடரும்)