Thursday 31 December 2009

சென்னை புத்தக கண்காட்சி கடை எண் 402




தமிழ் அலை வடிவமைப்பில் வலைமொழி பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்ட 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது கவிதைத் தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் அறிவுமதியின் 'வெள்ளைத்தீ எனும் நூலுடன் கிடைக்கப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தமிழ் அலை நிறுவனத்தாருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

மிகவும் நன்றி இஷாக்.

Wednesday 16 December 2009

எழுத்துக்கு என்ன வயது?

பல வருடங்களாக எழுதிக்கொண்டே இருந்தாலும் எழுத்து என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

1994ல் எழுதின ஒரு கவிதையை என்னோட சின்ன சகோதரி படிச்சிப் பார்த்துட்டு 'என்னடா எழுதுற' எனத் திட்டிய 'திரும்பிப் பார்' கவிதைத் தொலைக்கப்படவே இல்லை. எனது சிந்தனைகள் தொலைக்கப்படவும் இல்லை.

வலைப்பூவில் எனது எழுத்துகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் பெற்ற நண்பர்கள் சிலர். சிங்கையைச் சார்ந்த நண்பர் கோவியாரை இலண்டனில் சமீபத்தில் சந்தித்தேன். அவர் வலைப்பூவில் நான் பின்னூட்டம் எழுதும்போது என்னை 'ஐயா' என்றே விளித்து வந்தார். எனக்குக் காரணம் தெரியாது. எனது வயதோ, புகைப்படமோ அவர் பார்த்தது இல்லை.

ஒரு உணவகத்தில் குடும்பத்தாருடன் இனிய சந்திப்பு நிகழ்ந்தது. என்னை முதன்முதலில் பார்த்த அவர் ஏமாற்றம் அடைந்துவிட்டார் என்பதை நேரடியாகவேச் சொன்னார்.

'உங்க எழுத்துகளைப் பார்த்து உங்களை ரொம்ப வயசானவருனு நினைச்சிட்டேனே' என்றார்.

என்னை நேரில் பார்த்தாலும் வயது அதிகமாகத்தான் தெரிவேன் என்பது வேறு விசயம். அதை நிரூபிக்கும் வகையில் அவரது கேள்வியும் இருந்தது.

'உங்களுக்கு ஒரு 43 இருக்குமா?' என்றார்.

'இல்லை 34' என்றேன்.

எழுத்துக்களைப் பற்றிப் பொதுவாக பேசினோம். பலர் என்னை வயதானவனாகவே நினைக்கிறார்கள். மேலும் நான் எழுதுவது புரியும்படியாக இல்லை எனும் குறைபாடும் உண்டு என சொன்னேன்.

எனக்குள் எழுந்திருக்கும் சில கேள்விகள், எனக்கு வயதாகிக் கொண்டே இருப்பதால் இன்னும் சில பல வருடங்களில் எனது எழுத்துக்கும் எனக்கும் ஒரே வயது எனும் நிலை வருமோ? அதிசயிக்க வைத்த அப்பர், திகைக்க வைத்த திருஞானசம்பந்தர், தமிழ் ஆட்சி செய்த ஆண்டாள் என எழுதியவர்களின் எழுத்துக்கும் வயது உண்டோ?! உங்கள் எழுத்துக்கும், உங்கள் வயதுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டோ?

Saturday 12 December 2009

தமிழ்மணம் விருதுகள் - ஏக்கத்துடன் என் பதிவுகள்.

சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு இருந்த நேரம் அது. சிறுகதை எழுதிவிடலாம் என தலைப்புகள் எல்லாம் தயார் செய்து காத்துக்கொண்டிருந்த நேரம் அது.

எனது கதை ஒன்றைப் பாராட்டி வித்யா அவர்கள் விருது வழங்கிய நேரம் அது. என்னை கோவியார் சந்தித்துச் சென்ற தருணமும் அது. இப்படி பல தருணங்கள் ஒன்றாய் சேர்ந்திருக்க இதையெல்லாம் தாண்டிய ஒரு தருணமும் என்னை நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்காக கொஞ்சம் எழுத்துப் பணியைத் தள்ளிவைத்துவிடலாம் என எண்ணம் கொண்டு தமிழ் உலகத்தையே சற்று மறந்துவிட்ட காலங்கள் என ஒரு மாதம் ஓடிப் போய்விட்டது.

இவ்வேளையில் என்னைச் சந்திக்க விரும்பிய மூத்த பதிவர் சீனா அவர்களைக்கூடத் தொடர்பு கொள்ள இயலாத வகையில் காலமும் நகர்ந்து போனது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்மணம் விருதுகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். அதில் எனது பதிவுகளை இணைக்க நினைத்தபோது எதுவுமே இணைக்கமுடியாதபடி எல்லாம் வேறொரு இணையதளத்தில் வெளியானவை என நினைத்தபோது விருதிற்கு பரிந்துரை செய்ய தகுதியற்றுப் போனது என் பதிவுகள்.

இந்த சூழலில் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'வெறும் வார்த்தைகள்' அச்சிடப்பட்டு வெளியீடு செய்யப்படக் காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த முறை விருதுக்கென பரிந்துரை செய்யும்வகையில் சில பதிவுகளும் எழுதிவிடலாம் எனும் எண்ணம் எழாமல் இல்லை.

விருதுகள் பெற்றிட அனைவரையும் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.