Monday 2 November 2009

விழுதுகள் நாங்கள்

தமிழ் மொழி தந்த அடையாளம்
தரணியெங்கும் பெயர் சொல்லும்
தமிழ்தனை மொழியாகக் கொண்டதால்
சொந்த நாட்டில் இடமின்றி போகுமோ?

விதையது விதைத்த நிலம்
புதையுண்டு போகுமோ எங்கள் பலம்
கதையதை பிறிதோர் பேசிட
பதைபதைக்குமோ எங்கள் நெஞ்சம்

உலகமெலாம் பரந்து விரிந்தோம்
உள்ளூரில் எங்கள் உயிர் துறந்தோம்
வேர்தனை வெட்டி வீழ்த்திட்டாலும்
விழுதுகளாய் எம்மினம் தாங்கி நிற்போம்

கேடுகளால் நலிந்தது எங்கள் மனம்
ஆறுதலற்றுப் போயினும், எம் சனம்
தேடுதலைத் தொலைத்திடாது
தமிழ் ஈழமே எங்கள் கவனம்

உயிர் கொல்லப்படலாம் எம் இனமே
உரிமையது கொல்லப்பட விடுவோமா
அதர்மம் வென்றது போன்றே தோன்றும்
கொண்ட தர்மம் அது வென்றே தீரும்

எமது குரல்கள் உலகமெலாம் ஒலித்திடும்
எமது ஈழத்து கனவு பலித்திடும்
எமது மரக்கிளைகள் ஒருபோதும் பட்டுவிடாது
விழுதுகளாய் நாம் தாங்கி நிற்போம்

பிஞ்சு குழந்தைகள் என்ன செய்தன
நஞ்சை ஊட்டியே நசியச் செய்தனன்
நெஞ்சம் கசிந்து எம் இனம் அலறினும்
அஞ்சி ஒளியோம் அறிந்து கொள்ளடா

எமக்கென்று ஓரிடம் உன்னிடம் கேட்க
தமக்கென்று எல்லாம் வைத்துக் கொண்டாய்
எமதிடத்தை உனதிடமாக்கிய உனது
கள்ளத்தனத்தைத் தூள் தூளாக்குவோம்

ஒரு கை மட்டும் அல்ல உதவிட
ஓராயிரம் கைகள் உண்டு எம்மிடம்
உன் மூச்சுத் திணறலைப் பார்த்திடும்
நேரம் நெருங்கியே விரைவில் வந்திடும்

எங்கள் இனத்தை நீ நசுக்கிட
போடும் வேசங்கள் எத்தனையோ
எங்கள் இனமது மீண்டிடும்
விழுதுகளாய் இருந்தே காக்கின்றோம்

வேரோடு அழித்திட நீ புறப்பட்டாய்
சேறினை முகத்தில் நீ பூசிக்கொண்டாய்
வீரம் விளைந்த நெஞ்சத்து
விழுதுகள் கொண்டே ஜெயித்திடுவோம்

எத்தனை கொடிய அரக்கன் நீ
அத்தனைக்கும் உனக்கு பதிலிருக்கு
எட்டப்பர்கள் யாவரும் உன்னிடமே
உன்னை குட்டிக் குட்டியேக் குலைத்திடுவார்

தமிழ்ஈழம் எங்கள் கனவு
தமிழ்ஈழம் எங்கள் வாழ்க்கை
தமிழ்ஈழம் எங்கள் பயணம்
தமிழ்ஈழம் அடைந்தே தீர்வோம்.

Wednesday 28 October 2009

ஆன்மிகம் என்றால் சைவமா? யோகன் ஐயாவிற்கான பதில்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஆன்மிகம் என்பது உள்ளுணர்வு எனக் கொள்வதோடு மட்டுமின்றி, வாழ்க்கையில் நேர்மையாகவும், நியாயமாகவும், நீதி தவறாமலும், ஒழுக்கமாகவும், அமைதியாகவும், தன் மற்றும் பிற உயிரினங்களின் மேல் அன்பு செலுத்தக்கூடியதாகவும் இருப்பது. //

மிக அருமையான முத்தாய்ப்பு...என்னை வெகுநாட்களாக குடையும் கேள்வி!


நான் அசைவம் உண்பவன். எனவே" குருவிக்கு அரிசியைப் போட்டுவிட்டு"; மற்றைய உயிர்கள் மேல் அன்பு செலுத்துகிறேனெனச் சொல்வது சுத்த பொய்.

//ஒரு உண்மையை மிகவும் தைரியமாகச் சொன்னதற்காக எனது பணிவான வணக்கங்கள் ஐயா. நீங்கள் அசைவம் உண்பது என்பது தங்களின் உணவுப் பழக்க வழக்கம் என எடுத்துக் கொள்ளலாம் //

இதே வேளை ஆத்மீக வாதியாக வாழ ;

அன்புடையவனாக வாழ ;

ஒழுக்க சீலனாக வாழ;

உண்மைபேசுபவனாக வாழ;

உழைத்து உண்பவனாக வாழ..

அவன் சைவ உணவுதான் உண்ண வேண்டுமா? ஆமெனில் துருவத்தில் வாழும் மக்கள், இந்தோனேசியக் காட்டுவாசிகள்; அமேசன் காட்டு வாசிகள், வேடர்கள் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவர்களா? அவர்களிடம் ஆத்மீகம் இல்லையா?


//சைவ உணவு உண்பவர்கள் மட்டுமே மேற்கூறப்பட்ட குணநலன்களுடன் வாழ்கிறார்கள் என வரையறுத்துவிட இயலாது என்பதுதான் உண்மை. அதே வேளையில் மேற்கூறப்பட்ட குணநலன்களுடன் அசைவ உணவு உண்பவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சைவ உணவுப் பொருட்களை உண்டு ஒரு உயிரினத்தால் வாழ இயலும் எனச் சூழ்நிலைச் சந்தர்ப்பங்கள் இருக்கும்போது ஏன் அசைவ உணவு வகைகளை உண்டு வாழும் நிலையை உருவாக்கிக் கொண்டோம் எனச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும். அசைவ உணவு உண்பவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் எனச் சொல்ல இயலாது, அவர்களிடம் ஆன்மிகம் இல்லை எனவும் மறுக்க இயலாது. எனினும் இதன்படி நடந்தால் சிறப்பு என்று மட்டுமே ஒரு விசயத்தைச் சுட்டிக் காட்ட இயலும், ஏன் அதன்படி நடக்காமலும் சிறப்பாக இருக்க இயலாதா எனக் கேள்வி கேட்டால் இரு சிறப்புகளுமே வெவ்வேறு அர்த்தம் கொண்டவை என்று மட்டுமேச் சொல்ல இயலும் //


எனவே இந்த மற்றும் உயிர்மேல் அன்பென்பது ஒரு இடைச்செருகல்... குறிப்பாக இடைக்கால இந்தியாவில் உள்னுளைந்த சமாச்சரமோ? ஆடையே இல்லாமல் வாழ்ந்த மனிதன் ஆடைகட்டி; இப்போ மானம் காக்கிறோம்; என்று சொல்வது போல்.


//காலப்போக்கில் எல்லாமே மாற்றம் கொள்ளும் நிலையை அடைந்தது. உயிர் கொன்று வாழும் மனித இனங்களே முன்னாலிருந்தது. நரபலி கொடுக்கும் மனிதர்களும், நரமாமிசம் சாப்பிடுவோர்களும் வாழ்ந்து வந்தனர். எதையுமே சாப்பிடும் சீனர்கள் என ஒரு பொது கருத்தும் உண்டு. பிற உயிர்களை கொலை செய்வது என்பது மட்டும் பார்க்கப்படவில்லை, பிற உயிர்களை வதைத்து வேலை வாங்கும் தன்மையும் கண்டு இளகிய மனம் படைத்தோர் உருவாக்கிய எண்ணம் எனக் கொள்ளலாம். பிற உயிர்கள் என்பது சக மனிதரையும் குறிக்கும் என்பது முக்கியம். //


அதனால் ஆத்மீகத்துக்கும் மற்றைய உயிர் கொல்லாமல் வாழ்வதற்கும்;சைவ உணவுப் பழக்க வழக்கத்துக்குமான தொடர்பு வெறும் இட்டுக்கட்டலா? அதனால் மற்றைய உயிர்களின் மேல் அன்பு செலுத்த முடியாத; அசைவமுண்ணும் நான் ஆத்மீகத்துக்கு உகந்தவனில்லை எனக் கருதுகிறீர்களா?


// ஆன்மிக உணர்வு என்பது எந்தத் தீங்கும் விளைவிக்காது இருப்பது. சைவ உணவுப் பழக்கமும், ஆன்மிகமும் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடையதாகக் கருத வேண்டிய நிர்பந்தம் எதுவுமில்லை. ஆனால் பிற உயிர்களின் மேல் அன்பு செலுத்துவது என்பது ஒரு பொது நலம் கருதிய செயலாகக் கருதலாம், அதுவே ஆன்மிகம் எனவும் கொள்ளலாம். அசைவம் உண்ணும் தாங்கள் ஆன்மிகத்துக்கு உகந்தவரா என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மருத்துவ ஆராய்ச்சியில் உயிர் கொன்று பணி புரியும் நான் என்னை ஒரு ஆன்மிகவாதியாக எப்போதுமே எண்ணிக் கொண்டதில்லை. //


என் மனம் கத்தரிகாய்ப் பிஞ்சுக்கும்; முளைக்கீரைக்கும் உயிர் இருக்கிறது. அதையும் வெட்டி; அவித்து; பொரித்து, வறுத்து உண்பதுகூட பாவமாகத்தான் படுகிறது. ஆனால் நான் வாழ வேண்டும் எனும் சுயநலம் என்னைத் தடுக்கிறது. அதனால் அது பாவம் இல்லை;இது பாவம் என சால்சாப்பு தேடுகிறது.


//அசைவம் உண்பவர்கள் இதை ஒரு கருத்தாகக் கொள்வது உண்டு. தாவரங்கள் தானே உணவு உற்பத்தி பண்ணும் திறன் உடையவை. மரத்திலிருந்து பழம் பறித்து உண்பது என்பது கொலையாகாது, ஆனால் அந்த மரத்தையே வெட்டுவது கொலையாகக் கருதப்படும் எனக் கொள்ளலாம். மேலும் கத்தரிக்காய்தனை அப்படியே விட்டுவிட்டால் அழுகிப் போய்விடும். எனவே அவையெல்லாம் கொலை எனவோ, பாவம் எனவோ கருதுவது கூடாது. தாவரங்கள் அல்லாத பிற உயிர்கள் தாவரத்தை முதல் உணவாகக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமே. தானாக இறந்த விலங்குகளை உண்பது தவறில்லை எனக் கொள்வது சரியென சொல்வாரும் உண்டு. ஆனால் ஒரு உயிரைக் கொன்று அதை உண்பது பாவப்பட்ட செயலே ஆகும். இதில் தாவர இனங்கள் உட்படா //


ஆத்மீகவாதிகளும், அறிவு படைத்தோரும் தமக்கு வசதியானதைக் கூறி அதையே பொது விதி ஆக்குவார்கள்.என்னைப் போன்ற பரதேசிகள் ஏற்கவேண்டும்; அல்லது சாகவேண்டும்.
அந்த பொது விதியில் தான்....ஒபாமாவுக்கு நோபல் பரிசும் கொடுத்தார்கள்.


//அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஐயா. பொது விதி என்பது பொதுவான விசயத்திற்காக வைக்கப்பட்டது. அவரவர் வசதிற்கேற்ப வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்வதுதான் நடந்து கொண்டு வருகிறது. 'எது உனக்குச் சரியாகப்படுகிறதோ, அதை நீ சந்தேகமின்றி, சந்தோசமாகச் செய்து கொண்டு வா' என்பது கூட ஒரு பொது விதி தான். அப்படியெனில் கொலைகாரர், கொள்ளைக்காரர் எல்லாம் தனது செயல் சரியே என வாதிடக் கூடும். எது எப்படியோ, இந்த உலகம் இருளும் வெளிச்சமும் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. //




Friday 16 October 2009

கடவுள் = ஏழேழு உலகம் = ஒன்றுமில்லை

உலகம் எப்படி உருவாகி இருக்கும்?

பலருக்கும் தெரிந்திருக்கும், புரிந்திருக்கும்.

ஞானிகள் சொல்லி வைத்தது உண்மையென நம்பிடச் சொல்லும் அறிவியல்.

சூன்யத்திலிருந்துதான் எல்லாமேத் தொடக்கம்.

அந்த சூன்யம் எதில் தொடக்கம்?

சூன்யம், சூன்யத்தில் இருந்துதான் தொடக்கம்.

பெரு வெடிப்புக் கொள்கை தான் மிகச் சரியான கொள்கை என அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதே. பிறகு ஏன் தேவையில்லாமல் மற்றொரு சிந்தனை உலகம் எப்படி உருவாகி இருக்குமென!

ஒரு உலகம் என்றுதானே எல்லோரும் நினைத்து இருப்பார்கள். அதுதானே மிகவும் சரியாகக் கருதப்படுகிறது. இல்லையில்லை, பல உலகம் என சொல்லி வைத்திருக்கும் வேதங்கள் சொன்னதுதான் சரியெனச் சொல்லும் அறிவியலாளர்களும் உண்டு.

பெரு வெடிப்புக் கொள்கை பல விசயங்களை ஒழுங்காக விளக்குவதில்லை, அந்த ஒழுங்காக விளக்கப்படாத விசயங்களை விளக்கி இந்த உலகம் எப்படித் தோன்றியிருக்கும் என எந்த எதிர் கேள்விகளுக்கும் வாய்ப்பில்லாமல் செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டதுதான் பழுக்கம் கொள்கை.

ஆனாலும் இந்த பழுக்கம் கொள்கையை நிரூபிக்கக் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் பழுக்கம் கொள்கைக்கு மட்டும் தான் என எடுத்துக் கொள்ள முடியாது எனச் சொன்னதும் இந்த பழுக்கம் கொள்கையை உருவாக்கிய அறிவியலாளர்களான கூத், லிண்டே, ஸ்டெயின்ஹார்ட், மற்றும் ஆல்ப்ரெஹ்ட் மனதில் புழுக்கம் கொண்டனர்.

(தொடரும்)