Tuesday 30 June 2009

வேத நூல் - 3

சாங்கோ மிபலோவிடம் விளக்கம் சொல்ல சொன்னான். மிபலோ விளக்கம் தெரியாது என்றான். பிறகு ஏன் அந்த வார்த்தையைச் சொன்னாய் என்றான் சாங்கோ. அந்த வார்த்தையைக் குறித்துத்தான் நான் இத்தனை நாட்களும் சிந்தனை செய்து கொண்டிருக்கிறேன் என்றான் மிபலோ. சாங்கோவுக்கு கோபம் வந்தது. ஏன் எண்ணங்கள் தயார் என்றாய் என்றான் சாங்கோ.

சாங்கோ கோபம் அடைந்ததைப் பார்த்த குவ்விலான் சில வரிகள் எழுதினான். ''கடவுள் - எந்த ஒரு சுவடும் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கும்''. குவ்விலான் எழுதியதைப் பார்த்த சாங்கோ கடும் கோபம் கொண்டான். குவ்விலானைப் பார்த்து கிழித்துப் போடு எனக் கத்தினான்.

மிபலோ என்ன சொல்கிறானோ அதை மட்டுமே நாம் எழுத வேண்டும், நீ சொல்ல நினைப்பதை தனியாக எழுதிக் காட்டு, இப்படி ஒன்றுடன் ஒன்று கலக்காதே என சீறிட்டான். இதையெல்லாம் கேட்டு மிபலோ பொறுமையாகவே இருந்தான். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டான் சாங்கோ மறுபடியும். அப்பொழுது மிபலோ சொன்னான். ''அர்த்தமற்று இருக்கும், ஆனால் அர்த்தம் பொதிந்து இருக்கும், எனக்கு அர்த்தம் தெரியாது'' என்றான் மிபலோ.

சாங்கோ எரிச்சல் அடைந்தான். சாத்தான் என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் எழுதுவது என முழித்தான். சரி மேலே சொல்லு என்றான் சாங்கோ. ''கடல், ஆகாயம் நமக்குக் கிடைத்த ஆதாயம்'' என்றான் மிபலோ. அவன் சொன்னதைக் கேட்டதும் குவ்விலானிடம் எழுதிக்கொள், எழுதிக் கொள் இவனைப் பெரிய சிந்தனையாளன் என நினைத்தேன், சரியான முட்டாளாக இருக்கிறான் என்றான் சாங்கோ. சொல்லிக்கொண்டே கடல் ஆகாயம் சாத்தானால் உருவானது என எழுதினான் சாங்கோ. மிபலோ சிரித்துக்கொண்டு நாளைத் தொடரலாம் என எழுந்தான். இவ்வளவுதானா? என்றான் சாங்கோ. நிறைய இருக்கிறது என நடந்தான் மிபலோ. அப்படியென்றால் இன்னும் சொல் என்றான் சாங்கோ.

சாங்கோவை நோக்கி ''என் சிந்தனையை வெல்ல உன் சிந்தனைக்கு எப்படி வலிமை வந்தது'' என்றான் மிபலோ. சாங்கோ அதிர்ச்சி அடைந்தான். குவ்விலானுக்கு ஒன்றும் புரியவில்லை. சாங்கோவின் கையில் இருந்ததை பறித்த குவ்விலான் அதைப் படித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ''நான் சொன்னதை மாற்றி எழுதுகிறான் இவன்'' என்றான் மிபலோ. மிபலோ சொன்னதை கேட்டதும் ஆம் எனத் தலையாட்டினான் குவ்விலான்.

''இருவரின் கை அசைவுகளும் எழுத்து வடிவமும் வேறாக இருப்பது கூடவா எனக்குத் தெரியாது'' என சொன்னான் மிபலோ. சுதாரித்துக் கொண்ட சாங்கோ நான் சரியாகவே எழுதுகிறேன், இவனே மாற்றி எழுதுகிறான் என சொன்னான் சாங்கோ. மிபலோ சாங்கோ சொன்னதை நம்பிட தயாராக இல்லை. ''இனிமேல் என் சிந்தனைகள் நீ எழுதாதே, குவ்விலானே எழுதட்டும்'' என மிபலோ சொன்னதும் சாங்கோ கோபத்துடன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

மிபலோ குவ்விலானிடம் ''நீ நான் சொல்வதை அப்படியே எழுதுவாய் என்ற என் நம்பிக்கையை சிதறடித்துவிடாதே'' என்றான். குவ்விலான் கண்கள் பணித்தான். இருவரும் சாங்கோவைத் தேடிச் சென்றார்கள். சாங்கோ சிரகமெராவிடம் இவ்விருவரைப் பற்றிக் கத்திக் கொண்டிருந்தான். சிரகமெரா சமாதனம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

''சாங்கோ நீ எங்களுடனே எப்போதும் போல் இருக்க வேண்டும் நீ எப்படி வேண்டுமெனினும் எழுது'' என்றான் மிபலோ. குவ்விலான் மன வருத்தம் கொண்டான். ஆனால் வெளிக்காட்டாமல் இருந்து கொண்டான். சாங்கோவின் தந்தை அன்றே தான் கடல்வழிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக சொன்னதும் சாங்கோ தானும் வருவதாக சொன்னான். மிபலோவும் இணைந்து கொள்வதாக சொன்னான். குவ்விலான் வேறு வழியின்றி சேர்ந்து கொண்டான்.

எந்த திசை செல்லலாம் என சாங்கோவே முடிவை எடுத்தான். மிபலோ சிந்தனைகளை மேலும் மெருகேற்றத் தொடங்கினான். அன்றே பயணத்திற்கான நாளைக் குறித்தார் சாங்கோவின் தந்தை ரேண்ட்டர். சிரகமெரா சாங்கோவிடம் தன்னையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டாள். சாங்கோ மறுப்பு தெரிவிக்க சிரகமெரா ஆர்பாட்டம் பண்ணினாள். சரி என்றான் சாங்கோ.

(தொடரும்)

என் கூட வா!

உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.


மழை சொட்டு சொட்டாக பூமியில் பொட்டு வைத்துக்கொண்டிருந்தது. தனது சட்டையிலும் பொட்டு வைத்ததை உணர்ந்ததும் வெகுவேகமாக ஓட நினைத்தான் சிவபாலன். அவன் வெகுவேகமாக ஓட நினைத்தபோதே மழையும் வேகமாக வந்து சேர்ந்தது. எங்கே நனைந்துவிடுவோமோ என அதிவேகமாக ஓடினான். மூச்சு இறைத்தது. மழை அவனை நனைக்கும் முன்னர் சிவதாசினியின் வீட்டின் கதவைத் தொட்டான் சிவபாலன்.


கதவைத் தட்டினான், சிவதாசினியின் தந்தை கதவைத் திறந்தார். அவரது தந்தையை எதிர்பாராதவனின் மூச்சு மேலும் இறைக்கத் தொடங்கியது.


‘’என்ன வேணும்’’


‘’சாரி சார், தப்பான அட்ரஸுக்கு வந்துட்டேன், மழை வேற பெய்யுது’’


எதுவும் பேசாமலேயே கதவைச் சாத்திவிட்டுச் சென்றார் சிவதாசினியின் தந்தை. கால்களை மழை நனைக்க ஆரம்பித்தது. காற்றினால் வீசப்பட்ட சில தூறல்களும் முகத்தில் பட்டுச் சென்றது. ஓடிவந்ததில் உடலில் ஏற்பட்ட உஷ்ணம் வெளிப் பறக்க சில்லென்றே உணர்ந்தான். சற்று நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டினான். இம்முறை சிவதாசினியின் தாய் வந்து கதவைத் திறந்தார்.


‘’யாரைப் பார்க்கனும்?’’


‘’சிவதாசினியோட வீடு…’’


‘’இதுதான், நீ யாரு?’’


‘’அவளோட கூடப் படிச்ச பெரண்டு, ஒன்னாப் படிச்சோம, அவளைப் பார்க்கனும்’’


‘’அவ இங்க இல்லை’’


சிவபாலனின் பதிலை எதிர்பார்க்காமல் சிவதாசினியின் தாய் கதவைச் சாத்திவிட்டுச் சென்றாள். சிவபாலனுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. மழையில் நனைந்து கொண்டே யோசனையுடன் திரும்பி நடந்தான்.


தனது நெருங்கிய நண்பன் சுப்புராஜன் தகவல் சொல்லியிருக்காவிட்டால் அவன் சிவதாசினியைத் தேடி டில்லியிலிருந்து இத்தனை அவசரமாக வந்திருக்கமாட்டான். கைப்பேசியின் மூலம் சிவதாசினியைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அந்த எண் உபயோகத்தில் இல்லை என அறிந்ததும் பதட்டம் கொண்டான்.


சிவபாலன் சுப்புராஜனைத் தொடர்பு கொண்டு பேசினான். அந்த ஒரு விபரத்தைத் தவிர சிவதாசினி எங்கு போனாள், என்ன ஆனாள் எனத் தனக்குத் தெரியாது, தெரிந்தால் சத்தியமாக தகவல் சொல்கிறேன் என்றான் சுப்புராஜன்.


பிறரிடம் விசாரித்தபோது எங்களுக்கெல்லாம் எந்த ஒரு தகவலும் தெரியாது, அப்படியா? என அனைவருமே ஆச்சரியமாகக் கேட்டதும் மனமுடைந்து போனான் சிவபாலன்.


இரண்டு நாட்களானது. சிவதாசினியைத் தேடி அலைந்து திரிந்தவன் தனது வீட்டில் இரவில் மாடியில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் தவறாகப் போகவே மீண்டும் எண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது வீட்டுக் கதவினைத் தட்டும் சப்தம் கேட்டு வெகுவேகமாக ஓடி வந்தான்.


வெளியே சுப்புராஜன் நின்று கொண்டிருந்தான். சுப்புராஜனின் முகமெல்லாம் வியர்த்து இருந்தது, உடலில் ஒருவித நடுக்கம் தெரிந்தது.


‘’சிவதாசினியைப் பார்த்தேன்டா’’


‘’எங்கேடா இருக்கு அவ வீடு’’


‘’அவ புருசன் அவளை வைச்சித் தொழில் நடத்துறான்டா’’


‘’சீ… இன்னுமாடா அந்தப் பழக்கத்தை நீ விடலை’’


‘’மாத்திக்க முடியலைடா, இதுதா அட்ரஸூ நீ போய் பார்த்துக்கோ, என் செல் புது நம்பர் மாத்திட்டேன்’’


வார்த்தை குளறி குளறிப் பேசிய சுப்புராஜன் இருட்டில் சென்று மறைந்தான். முகவரியினை சென்று அடைந்தான் சிவபாலன். கதவைத் தட்டினான். கதவைத் திறந்தவன் சற்று வயதானவன் போல இருந்தான்.


‘’லேட்டாயிருச்சி, நாளைக்கு வா’’


‘’கூடப் போட்டுத் தரேன்’’


உள்ளே அனுமதித்தான். சிவதாசினியைக் கண்டான். சுப்புராஜன் தகவல் சொல்லியே வந்ததாகவும் தன்னுடன் வந்துவிடுமாறும் கெஞ்சிக் கூத்தாடி அவளை அழைத்துக்கொண்டு திறக்கப்படாதப் பெட்டியுடன் அவசரமாக டில்லிக்கு சிவதாசினியுடன் கிளம்பிச் சென்றான் சிவபாலன். டில்லி வரும்வரை அவளிடம் அவன் எதுவும் கேட்கவில்லை, அவளும் எதுவும் சொல்லாமல் அழுத விழிகளுடனே இருந்தாள்.


காணாமல் போனவளை காவல் நிலையத்திலும் சொல்ல வழியின்றி அவளால் வந்த பணத்தையெல்லாம் கொண்டுபோய் விலைமகள் ஒருவளிடம் தந்து அழுது கொண்டிருந்தான் சிவதாசினியின் கணவன்.


டில்லியில் தனது அறையில் சிவதாசினியை அமர வைத்துவிட்டு பெட்டியைத் திறந்து சேலைகள், சுடிதார்கள், நகைகள் என எல்லாம் காட்டி அவளை குளித்துவிட்டு, பிடித்த சேலை, நகைகள் எல்லாம் போடச் சொன்னான். மனம் மரத்துப் போனவளாய் அவன் சொன்னவாறே சிவதாசினி செய்தாள்.


‘’இப்போதான் என் சிவதாசினி மாதிரி இருக்க’’


‘’சுப்புராஜன் கூட தெரிஞ்சே என்னை….’’


விக்கித்து அழுதாள். துடிதுடித்துப் போனான் சிவபாலன்.


(முற்றும்)

Monday 29 June 2009

வேத நூல் - 2

அத்தியாயம் 2.

''என்ன யோசனை'' என்றான் சாங்கோ. மிபலோ தான் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதாகக் கூறினான். சாங்கோ சிரித்தான். ''உன் ஆழ்ந்த சிந்தனைக்கு வழி செய்கிறேன்'' என சொல்லிவிட்டு தான் ஒரு வார்த்தைச் சொல்லி அதற்கான எழுத்தை வரைந்தான் சாங்கோ. குவ்விலான் அதே போல மணலில் எழுதிக் காட்டினான். மிபலோவை எழுதச் சொன்னபோது அதிலெல்லாம் ஆர்வமில்லாதவன் போல சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்த்தையில் உள்ள எழுத்துக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தான் சாங்கோ. ஒரு எழுத்துக்கு ஒரு வடிவம் என்பதிலே கவனமாக இருந்தான். இப்படியாக தினமும் இவர்கள் இவ்வாறு செய்ய சாங்கோவின் தந்தை சாங்கோவின் எண்ணம் அறிந்து பாராட்டினார். சில எழுத்துக்கள் உருவாக்கிய பின்னர் அந்த எழுத்தை வைத்தே சிரகமெராவுக்கு ஒரு கவிதை எழுதினான் சாங்கோ.

''காதல் மனதோடு களிக்கும்'' என அர்த்தம் தந்தது அந்த மூன்று வார்த்தை கவிதை. சாங்கோ அதை குவ்விலானிடம் வாசித்துக் காட்ட குவ்விலான் ''காதல் கண் காண்பதில்லை'' என எழுதினான். அதில் வந்த ஒரு எழுத்தைப் புரியாத சாங்கோ என்ன எனக் கேட்டான். ''புது எழுத்து'' என எழுதினான் குவ்விலான். சாங்கோ கோபம் கொண்டான். ''நான் உருவாக்குவது மட்டுமே எழுத்து, நீயாக உருவாக்குவது எனில் நீயே செய்து கொள், ஏன் நான் உருவாக்கவேண்டும்'' என கோபத்துடன் கூறினான். பக்கம் பக்கமாக எழுத இயலாமலேயே இருந்தது. மிஞ்சிப் போனால் பத்து வார்த்தைகளையே எழுத முடிந்தது.

சாங்கோவும் குவ்வில்லானும் எழுத்து வடிவத்தை பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். வயதும் ஆகிக் கொண்டிருந்தது. தனது கவிதை என சிரகமெராவிடம் சாங்கோ ஒருமுறை சொல்ல சிரகமெரா தனது கண்களை மூடியும் திறந்து காட்டிவிட்டு ''கண் பேசாதோ காதல்கவிதை'' என சொல்லிவிட்டு ஓடினாள். சாங்கோ துள்ளினான். குவ்விலானிடம் ''காதல் கண் காண்பதில்லை, கண் காதல் பேசும்'' என சொன்னதும் குவ்வில்லான் கைதட்டி ஆரவாரம் செய்தான். ஆனால் மிபலோ சீரிய சிந்தனையிலேயே அமர்ந்து இருந்தான். பதினைந்து வயது ஆகி இருந்தது. ஓரளவுக்கு எல்லா எழுத்துக்கும் வடிவம் கொடுத்து வைத்தான் சாங்கோ. அத்தனையும் பத்திரமாக சேமித்தான். குவ்விலான் சாங்கோ சொன்னதிலிருந்து எழுத்தை உருவாக்கவில்லை, ஏனெனில் என்ன எழுதுகிறோம் என புரியாது என விட்டுவிட்டான்.

ஒருநாள் மிபலோ ''எழுத்துக்கள் தயாரா? என் எண்ணங்கள் தயார்'' என சொன்னான். ''கொஞ்சம் நாளாகட்டும்'' என்றான் சாங்கோ. குவ்விலான் தனது மனதில் தோன்றுவதை ஒவ்வொருமுறை எழுதிக் காட்டினான். ஒருமுறை ''சிரகமெரா எனக்குப் பிடித்தமானவள்'' என குவ்விலான் எழுதி வைக்க சாங்கோ கோபத்தின் உச்சத்திற்கேப் போனான். ''உன்னை வேட்டையாடி விடுவேன் அவள் எனக்கானவள்'' என்றான் சாங்கோ. குவ்விலான் ''நான் அவ்வாறு அர்த்தம் கொள்ளவில்லை'' என எழுதிவிட்டு அன்றிலிருந்து எழுதுவதையே விட்டுவிட்டான். சாங்கோ தினமும் கடும்பயிற்சி மேற்கொண்டான். குவ்விலான் எழுத்து வடிவம் மறக்க ஆரம்பித்தான்.

குவ்விலானிடம் சாங்கோ மன்னிக்குமாறு கூறியவன் எழுத்து வடிவம் கற்றுக்கொண்டு மனதில் உள்ளதை எழுது என சொன்னான் சாங்கோ. குவ்விலான் அதன்பின்னர் எழுத்து வடிவம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். சிரகமெராவிடம் குவ்விலான் எழுதியதை ஒருநாள் சாங்கோ விளையாட்டாக சொல்ல சிரகமெரா குவ்விலான் மேல் பரிவு கொண்டாள். தினங்கள் நகர பதினெட்டு வயதை அடைந்தார்கள். மிபலோ பொறுமையிழக்காது இருந்தான். சாங்கோ ஆச்சரியமாக மிபலோவிடம் கேட்டான் ''உனக்குப் பொறுமை போகவில்லையா?'' மிபலோ சொன்னான், ''நீ தயாராக இருந்தால்தானே என் எண்ணங்கள் சொல்ல முடியும், உன்னை அவசரப்படுத்த எனக்கு விருப்பமில்லை, என் சிந்தனைகள் மேலும் மெருகேறும்'' என்றான் மிபலோ. அப்போது குவ்விலான் ''நான் எழுதுகிறேன், நீ சொல்'' என்றான். இதுதான் தருணம் என நினைத்த சாங்கோ ''நாம் இருவரும் எழுதலாம்'' என்றான்.

எட்டு வருடத்தில் எழுத்தை எழுத பலவிதமாக முயன்று எழுதுகோலும், மையும் உருவாக்கி இருந்தார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என யாருமே கண்டுகொள்ளவில்லை. யாருக்கும் அக்கறை இல்லை. சிரகமெரா குவ்விலான் எழுத்தைப் போற்ற ஆரம்பித்து இருந்தது சாங்கோவுக்கு எரிச்சல் தர ஆரம்பித்து இருந்தது, ஆனால் தனது மனதில் கொண்ட திட்டம் நிறைவேற சாங்கோ வெளிக்காட்டாது அமைதியாக குவ்விலான் என்ன எழுதினானோ அதையே சிரகமெராவுக்கும் மிபலோவுக்கும் வாசித்துக் காட்டினான். குவ்விலான் எழுத்து வடிவம் அழகாக இருந்தது.

மிபலோ முதல் வார்த்தை சொன்னான். ''கடவுள்'' மிபலோ சொன்னதும் குவ்விலான் ''கடவுள்'' என எழுதினான். சாங்கோ ''சாத்தான்'' என எழுதி வைத்தான்.

(தொடரும்)

வேத நூல் - 1

அத்தியாயம் 1.

கி.மு 10400.

பேச மட்டுமே வழக்கத்தில் இருந்த மொழி. எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்படாமல் இருந்த காலம். ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள ஒரே விதமான ஒரே மொழி. ஒரு வார்த்தைக்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே. இப்படிப் பேசும் மொழியை முதலில் எழுத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தவன் சாங்கோ.

சாங்கோவின் நண்பர்கள் மிபலோ, குவ்விலான். குவ்விலானுக்கு பேச வராது. வெறும் சைகை மட்டுமே. இதனால் குவ்விலான் மனதில் இருக்கும் விசயங்களை அவன் சொல்வதற்கு ஏற்றபடி எழுத்தை உருவாக்க வேண்டும் என எட்டு வயதாக இருக்கும்போது சாங்கோவுக்கு ஒரு எண்ணம் உருவானது.

சாங்கோ இருந்த இடம் தானேஸ்ரா என அப்பொழுது அழைக்கப்பட்டது. மொத்தக் குடும்பங்கள் பதினெட்டு. இது தற்போதைய கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இடமாகும். அந்த ஊரில் இருப்பவர்கள் கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டு வருவதும், காட்டில் சென்று வேட்டையாடி வருவதும் தான் முக்கியத் தொழில்.

மிபலோ எப்பொழுதும் அமைதியாகவே இருப்பவன். அவனது ஆழ்ந்த சிந்தனையைக் கண்டு சாங்கோ பொறாமைப்படுவான், ஆனால் நண்பர்களாக இம்மூவர் மட்டுமே சேர்ந்து இருந்தனர். விளையாட்டு, உறக்கம் இதுதான் அந்த ஊர்ச் சிறுவர்களின் தொழில். ஆனால் சாங்கோ, மிபலோ, குவ்விலான் மூவரும் தங்களது தந்தையர்களுடன் வேட்டையாட, மீன் பிடிக்கச் செல்வார்கள்.

குரு என்றால் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. அன்னையும் தந்தையும் மட்டுமே குருவாக விளங்கினர். மிகவும் அச்சத்துடனே வாழ்ந்து வந்தவர்கள், அச்சத்தை எதிர்த்துக் கொள்ள ஆயுதம் செய்து வைத்துக் கொண்டனர். இந்த ஆயுதங்கள் எல்லாம் மிபலோவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. சாங்கோவிடம் இப்படி உயிர் வதைப்பதை நிறுத்த வேண்டும் என சிறு வயதிலேயே சொல்வான் மிபலோ. மிபலோ தனது பெற்றோர்களிடம் இவ்விசயத்தைக் கூறியபோது பயந்தால் ஒன்றும் நடக்காது, வீரமுடன் இருக்க வேண்டும் எனச் சொல்லி அடக்கி வைத்தார்கள்.

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல ஒரு மாத காலம் ஆகும். எனவே ஊர்த் தொடர்பு எல்லாம் ஒரு சில ஊர்களுக்கு மட்டும் தான். சிரகமெரா எனும் சிறுமிக்கு சாங்கோவை மிகவும் சிறு வயதிலேயேப் பிடித்து இருந்தது. சிரகமெராவைக் கண்டால் மகிழ்ச்சியில் துள்ளுவான் சாங்கோ.

எழுத்தை உருவாக்கும் முயற்சியில் சாங்கோ இறங்கியபோது அவனுக்கு பத்து வயதாகி இருந்தது. ஒருநாள் மிபலோ ஆர்வத்துடன் நீ எழுத்தை உருவாக்கி விடுவாயா, அப்படி உருவாக்கினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றான். அதற்கு சாங்கோ நிச்சயம் உருவாக்குவேன் எனக்கு குவ்விலான் மனதில் இருப்பதை அறிய ஆவல், அவனது சைகை எனக்குப் புரியமாட்டேன்கிறது என்றான்.

குவ்விலானுக்கு மட்டும்தான் எழுத்தை உருவாக்குகிறாயா, எனக்காக உருவாக்கமாட்டாயா? எனக் கேட்டான் மிபலோ. ஏன் நீதான் பேசுகிறாயே என்றான் சாங்கோ. நான் பேசுகிறேன் ஆனால் எனது ஆழ்ந்த சிந்தனைகள் அனைத்தையும் ஒன்றாக எழுதி வைக்க வேண்டும் என்றான் மிபலோ. அப்படியெனில் நீயே உருவாக்கிக் கொள் என்றான் சாங்கோ. எனக்கு எழுத வராது, மணலில் நான் வரைந்த படம் எல்லாம் பார்த்தாயா எப்படி இருந்தது என பரிதாபமாகச் சொன்னான் மிபலோ. அது மணல் அழியத்தான் செய்யும் என்று சொன்ன சாங்கோ எழுத்தை உருவாக்கலாம் ஆனால் அதை எதில் எழுதுவது என யோசித்தான்.

என்ன யோசனை எனக் கேட்டான் மிபலோ. எதில் எழுதுவது என்றான் சாங்கோ. இந்த விசயத்தையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த குவ்விலான் அவர்களை அழைத்துச் சென்று பெரிய இலையைக் காட்டினான். சந்தோசமானான் சாங்கோ. பக்கத்தில் இருந்த ஒரு மரத்தை பிடித்து பழங்களை உலுக்கினான் குவ்விலான். பழங்களை சாறாக்கினான். சாறு கருப்பாக இருந்தது. ஒரு சின்னக் குச்சியை எடுத்து அச்சாறில் தொட்டு இலையில் ஒரு கோடு போட்டான் குவ்விலான். சாங்கோ உற்சாகமானான். மிபலோ ஆழ்ந்த சிந்தனையில் அப்பொழுதே அமர்ந்தான்.

(தொடரும்)

கள்ளிப்பாலின் கயமை

முன்னுரை:

கள்ளிப்பால் என சொன்னதும் உசிலம்பட்டி எனும் தமிழக வரைபடத்திலே இல்லாத ஒரு கிராமம் அனைவருக்கும் நினைவில் வந்து செல்லும், அந்த பச்சிளம் குழந்தைகளின் வேதனைகள் மனதை நீங்காமல் வட்டமிட்டு இருக்கும். கள்ளிப்பால் மருந்தாகவும் பயன்படக்கூடியது, மேலும் கள்ளிப்பால் தரும் கள்ளிச்செடி தன்னைக் காத்துக்கொள்ள முட்கள் எல்லாம் வைத்து இருக்கும். இப்படி மருந்தாக பயன்படக்கூடியதை மரணத்திற்காக பயன்படுத்தியது கள்ளிப்பாலின் கயமைத்தனம் என்றால் இல்லை என்று சொல்லலாம். மாறாக இதனை இப்படி உபயோகப்படுத்தலாம் என மனிதர்களின் கயமைத்தனம்தனை வன்மையாக கண்டிக்கலாம்.

இளைஞர்(ஞி)களும் கள்ளிப்பாலும்

'ஆசை ஆசையாய் புள்ளை பிறக்க வேணுமின்னு
அய்யனாருக்கு படையல் வைச்சி வருசம் பல
காத்திருந்து கண் விழிச்சி காத்திருக்கையிலே
பிறந்த புள்ளை பொட்டை புள்ளையாய் போச்சுதுன்னு
இறந்த சேதி சொல்ல கள்ளிப்பாலு கொடுத்தாளே பாட்டி'

எனும் நாட்டுப்புற பாடலில் இருக்கும் அகற்றமுடியாத சோகம் ஒவ்வொரு மனித உயிரையும் உலுக்கி வைக்கும். இந்த கள்ளிப்பால் நிலையில் தான் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் இருக்கிறார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்டு, படித்தபின்னர் இவர்கள் தனது சொந்த சிந்தனையை தொலைத்து போதைப் பொருளுக்கும், சிற்றின்ப விசயத்திற்கும் விலை பேசாமலே இவர்களை தாங்களே விற்றுவிடுகிறார்கள். கள்ளிச்செடியின் முள்ளானது ஓரளவிற்கு எதிர்ப்பு தர முடியும், ஆனால் இந்த இளைஞர்கள் கூட்டம் தகர்க்க முடியாத எதிர்ப்பை தர முடியும். அப்படி இருக்கும் இந்த இளைஞர்கள் இப்படி வீணாகிப்போவது இவர்களது கயமைத்தனத்தையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களது திறமையை உலகம் முழுவதும் அறிய வேண்டி செயலாற்றுதல் மிகவும் முக்கியமான செயலாகும்.

தனக்கு தீங்கிழைக்காத செயல்கள் மட்டுமின்றி, பிறருக்கு தீங்கிழைக்காத செயலையும் செய்யாது இருப்பது போற்றத்தக்கது. நல்ல விசயங்களை மட்டுமே நாம் தாங்கிக்கொண்டு வந்து இருந்தால், தீமையைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்காது. கள்ளிப்பால் நல்ல விசயத்துக்கு மட்டும் என இருந்து இருந்தால் தீமைக்கு துணை போயிருக்க வேண்டியிருக்காது. ஆனால் இப்படி இயற்கையாய் அமைந்து விட்ட விசயம்தனில் 'அல்லவை தேய நல்லவை நாடி வரும்' என போராடி தீய விசயங்களை அகற்றி செயலாற்றுதல் சிறப்பு.

உயிர்களின் சிறப்பு:

'பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது' 'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என நம்பிக்கையூட்டும் விசயங்கள் இருந்தாலும் எல்லா உயிர்களும் நன்மை தீமை என அனைத்தையும் தன்னுடன் இணைத்தே வைத்திருக்கிறது.

நுண்ணுயிர்கள் நமது உடலுக்கு தீங்கிழைக்க கூடியதுதான், ஆனால் அவை நமது உயிர் காக்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரும் கொண்டுள்ள பண்புகளால் அவை கயமைத்தனம் கொண்டவை என கருதமுடியாது. எப்பொழுது ஒரு உயிர் தீயனவாக செயல்படுகிறதோ அப்பொழுதுதான் அந்த உயிர் கயமைத்தனம் உடையதாக கருத முடியும். 'இருந்தும் இல்லாதிருப்பது' என்பது இங்கே சரியாகப் பொருந்தும். தீய விசயங்களுக்கு ஆட்படாமல் உயிர்களின் சிறப்பை நிலை நாட்டும் வண்ணம் நற்பண்புகளுடன் செயல்புரிவது அத்தியாவசியமாகிறது.

முடிவுரை:-

'இவ்வுலக படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் எதுவுமில்லை, ஏனோ மனிதன் பார்த்த பார்வையில் ஏற்றம் கூட தாழ்வாகிப் போனது'

அனைத்தும் சமமாக இருந்திட இன்னல்கள் இல்லாத சமுதாயம் உருவாக்கிட நமது கயமைத்தனம் அகற்றி நல்ல பார்வையுள்ள மனிதர்களாக வாழ்ந்து சிறப்போம்.

Sunday 28 June 2009

கலையாத கனவும் விளங்காத இயல்பும்

முன்னுரை:

கனவும், இயல்பும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகத் தோன்றும். இயல்பாக நடக்கும் விசயத்தை இது கனவா என எண்ணும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவருக்குள் கேள்விக்குறியை ஏற்படுத்திவிட்டுப் போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. கனவு சாதாரணமாக கலைந்து போகும் நிலைத்தன்மையற்றது. நடக்கின்ற விசயத்தின் அடிப்படையில், இயல்பு சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியும் தன்மை உடையது. ஆனால் அப்படி இல்லாமல் கலையாத கனவாகவும், விளங்காத இயல்பாகவும் இருக்கும் இறைத்தன்மை முரண்பட்ட இரண்டு விசயங்களை ஒன்றாக்கி வைத்து இருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது.

கனவுலகில் சஞ்சரிப்பவர்கள்:

இப்பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து இந்நாள்வரை இந்த உலகம் எப்படி தோன்றியது என்பது எவரும் அறியாத நிலையில் 'அவனின்றி ஒரு அணுவும் அசையாது' என சொன்னதின் அர்த்தம், கலையாத கனவின் அடிப்படை, விளங்க முடியாத இயல்பின் துவக்கம் என கொள்ளலாம்.

இருந்ததை எண்ணி, நடக்கின்ற இயல்பின் அடிப்படையை வைத்து 'தகுதியுள்ள இனமே வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ளும்' என சார்லஸ் டார்வினின் விளக்கமும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மிகவும் பிரபலமான சக்தி, நிறை மற்றும் ஒளி தொடர்பான வாய்ப்பாடும், கிரிகரி மெண்டலினின் மரபியல் தத்துவமும் என ஒவ்வொரு மனிதரும் இருக்கின்ற இயல்பை விளங்கிக் கொண்டனரேயன்றி எவராலும் இதுவரை முதல் கனவை கலைக்க இயலவில்லை எனலாம்.

மொத்த மனித இனமும் விதவிதமாக கண்ட அந்த இறையை பற்றிய கனவு கலைந்து போவதற்கு வழியற்றுப் போனது. உண்மையான கனவு என்பது தானாக வருவது, ஆனால் இந்த கனவு வாழையடி வாழையாய் காணாமலே கண்டது போல் ஆகிப் போனது. விழித்த நிலையில் காணும் கனவு என சொல்வது போல் ஆனது. இப்படி கலையாத கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்களாக நாம் இருப்பது விளங்கிக் கொள்ள முடியாத இயல்பாகிறது.

இதை மாணிக்கவாசகர் அருமையாக தனது திருவாசகத்தில் பாடுகிறார்.

'புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிப்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய்ச்
செல்லாய் நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்'

வெடித்துச் சிதறிய வேதாந்தம்:

பூமியும், சூரியனும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த மனித இனத்திற்கு, எண்ணற்ற நட்சத்திரங்களும், நட்சத்திரங்களுக்கான கோள்களும் கண்டு இது எப்படி சாத்தியமானது என எண்ணிக் கொண்டு இருக்காமல் ஒரு அற்புதமான கனவு காணத் தொடங்கியதன் விளைவாக 'நட்சத்திரம் வெடித்துச் சிதறியது' என கண்ட கனவு ஒரு கலையாத கனவுதான். வெஞ்சினரின் 'எல்லா நிலப்பரப்பும் ஒன்றாக இருந்தது' எனும் கனவும் கலையாத கனவுதான், ஆனால் இவை விளங்க முடியாத இயல்பாக இருக்கின்றன.

இந்த விளங்க முடியாத இயல்பை விளக்கிக் கொள்ள எண்ணற்ற பொருட்செலவில் நடக்கும் ஆய்வுகளும், வெளி கோள்கள் மற்றும் வெளி நட்சத்திரங்கள் நோக்கியப் பார்வைகளும் பெரும் ஆர்வத்தை நம்மிடையே ஏற்படுத்தி இருக்கின்றன. இயல்புநிலை விளங்கிக் கொண்டதன் காரணமாக பல கனவுகள் தகர்ந்து போயின. எழுத்தாளர்களின் அதீத கற்பனை வளமும், கிடைக்கும் சிறு விசயத்தை வைத்து அறிவியலாளர்கள் காணும் கனவும் சாதாரண மனிதனை கனவு காணும்படி வைத்துள்ளது. இந்த கனவுகள் கலையாமல், விளங்கிக் கொள்ள முடியாமல் தொடர்வது ஒரு இலக்கைத் தொட்டுவிட உதவும், அந்த இலக்கோடு நிற்காமல் தொடர்ந்து பயணிக்க கலையாத கனவுகள் மிக அவசியம். வேறு கிரகத்தில் உயிரினங்கள், அதிக அறிவுள்ள உயிரினங்கள் என காணும் இந்த கனவுகள் நனவாக வேண்டும் என்ற எந்த ஒரு அத்தியாவசியமும் இல்லை. அது ஒருவகையில் அநாவசியம் கூட.

'எந்நிலை கொண்டு என்னை விளக்கும் முயற்சியில்
தன்னிலை மறந்து வாழும் மனிதருள்
ஒளியாக கண்டிடும் காணும்
ஒளியால் பிறிதொரு
உலகமது'

இறைவனான என்னை விளங்கிக் கொள்கின்ற இந்த முயற்சியில், ஒளியாய் என்னை உள்ளத்துள் காண்பது போல், ஒளியினை அடிப்படையாக கொண்டு பிறிதொரு உலகத்தை இம்மனிதர்கள் காண்பார்கள் என்பது இக்கவிஞனின் கலையாத கனவு, ஆனால் விளங்க முடியாத இயல்பு.

முடிவுரை:

'கனவுகள் இல்லையேல் வாழ்வு சுகப்படாது' என்பது என் மொழி. கலைந்து போகும் வீணான கனவுகளை கண்டு வேதனைப்படுவதைவிட, இருக்கின்ற இயல்பின் அடிப்படையில் நாம் காணும் கனவு நிச்சயம் நனவாகி மகிழ்வைத் தரும். இறைவன் எனும் கலையாத கனவுடனும், விளங்கிக் கொள்ள முடியாத இயல்புடனும் நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நமது அன்றாட கனவானது உலகம் செழிப்புற இருக்க வேண்டுமென ஒவ்வொருவரும் நனவாக்க பாடுபட்டு இருப்போமெனில், நமது இயல்பு நிலை விளக்கம் பெறும், அந்த இறைவனும் மகிழ்ச்சி கொள்வான்.

ஒரு நாவல் என்ன செய்துவிட முடியும்?!

புத்தகமாக இன்னும் வெளிவராத ஒரு நாவலுக்கு (நுனிப்புல் பாகம் 2) எழுதிய முன்னுரை:

காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது. இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.

என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள். ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.

அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை. ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.

இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது. நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா? தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? அப்படியெல்லாம் விடமுடியாது, இனியும் ஐம்பது வருட காலகட்டத்திற்குள் இந்த மொத்த பூமியும் ஒரு அமைதி நிலையும், கலியுகத்திலேயே சத்யயுகமும் இருக்கும் என நிரூபிக்காமல் போகப்போவது இல்லை.

'என்ன கதை சொல்ல வருகிறாயா, நாங்கள் கூட என்னமோ ஏதோனு நினைச்சிட்டோம்' எனும் இந்த மனப்பான்மையை அகற்றுவோம்.

கதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே!


ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் எனில் அனைவரையும் கவரும் வண்ணம், அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும் என சொல்லலாம். மேலும் கதை எழுதும் முன்னர் கதைக்கான கரு, கதாபாத்திரங்களின் குணநலன்கள், சூழல்கள் என பல விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். திட்டமிடுதல் மிகவும் அவசியமாகிறது. எந்த காலகட்டத்தில் கதையானது நடந்தது என்பதையும் அந்த காலகட்டத்தில் மக்களின் பழக்கவழக்கங்கள் என பலவிசயங்களை உள்ளடக்கி சிறந்த தமிழ் கொண்டு வளம் நிறைந்து எழுதப்படும்போது அந்த கதை இலக்கிய உலகில் இடம்பெற்றுவிடுகிறது.

மனித உணர்வுகளை அடிப்படையாக வைத்தும், கற்பனையை மையமாக வைத்தும், நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தும், காதலை அடிப்படையாக வைத்தும், சமூக நலனை கருத்தில் கொண்டும், மற்றும் வரலாற்று விசயங்களை அடிப்படையாக வைத்தும் எழுதப்படும் கதைகள் என பிரித்துக்கொண்டே செல்லலாம்.

கதை எழுதுவதற்குத் தேவை மிகச் சிறந்த கதை. ;) ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையானது சிறந்த கதையாக இருந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும்!

இதுவரை நான் எழுதிய கதைகள் எப்படிப்பட்டவை எனில் எழுத்துப்போக்கில் எழுதப்பட்டவை எனலாம். நுனிப்புல் முதற்கொண்டு தற்போதைய கதைகள் வரை எதுவுமே திட்டமிடப்படாமல் எழுதப்பட்டவையே. எழுதும் கதையில் அவசரம் அவசியமில்லை என்ற கருத்தினைக் கொண்டபோதும் லெமூரியாவும் அட்லாண்டீஸும் அவசரகதியில் முடிக்கப்பட்ட ஒன்று. சில அத்தியாயம் தாண்டியதும் நிறுத்துவது சரி எனப்பட்டது. பழங்காலச் சுவடுகள் எந்த ஒரு சுவடும் இன்றி தொடரப்பட்டது, அவசரத்தில் அந்த கதையும் முடிக்கப்பட்டது. சில்வண்டுகளில் எப்படியெல்லாம் மனிதர்கள் சச்சரவுடன் வாழ்கிறார்கள், ஆனால் அதுவே சிறந்த வாழ்க்கை முறை எனச் சொல்லும் முழு அத்தியாயம் எழுதப்படாமலே அவசர அவசரமாக முடிக்கப்பட்ட கதையே.

நுனிப்புல் பாகம் 1 அவசரமாக முடிக்கப்படவில்லையெனினும் நுனிப்புல் பாகம் 2 மிக அவசரமாக முடிக்கப்பட்ட ஒன்று. மரபியலும், நரம்பியலும் உள்ளே திணிக்கப்படும் அபாயமும், சாத்திரம்பட்டி சரித்திரம் எழுத வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட அதிவேகமாக கதையை முடிக்க வேண்டி வந்தது. நூல் வெளியிடும் முன்னர் அவைகளை இணைத்துவிடலாமா என எண்ணமும் எழுவது உண்டு. இப்படி எழுத வாய்ப்புக் கிடைத்த காரணத்தினாலேயே எழுதிய கதைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இந்த கதைகளை பிறர் படித்து என்ன நினைக்கிறார்கள் எனும் அறியும் வாய்ப்பும் குறைவே. நூலாக வெளியிடும் வரை காத்திருப்பதா அல்லது தமிழ் நூல்களை விரும்பிப் படிப்பவரிடம் தந்து கருத்துக்கள் அறிந்து கொள்வதா எனத் தெரியவில்லை.

இலக்கியத்தரம் என்னவென்பது எனக்குத் தெரிகிறதோ இல்லையோ, கதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே என்னால் பல கதைகள் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன, வாழ்க்கை எதுவெனத் தெரியாமல் நாம் வாழ்ந்து முடித்துவிடுவது போல ;)

Saturday 27 June 2009

இதுவா அங்காடித் தெரு?

பேகன் நடைபாதை வழியாக பல வருடங்கள் கழித்து அன்று செல்ல வேண்டியிருந்தது. நடைபாதையில் நடப்பதற்கு இடமில்லாமல் இருபுறங்களிலும் கடைகள் வைத்து பொருட்களை விற்றுக் கொண்டு இருந்தார்கள். பேகனின் கண்கள் நேராக பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. கடைகளில் என்ன வைத்து இருக்கிறார்கள் என்று கூட அவருக்கு பார்க்கத் தோணவில்லை.

கடையில் பொருட்களை கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

'சார் சார் இந்தாங்க சார் வாங்கிக்கோ சார்'

பேகனின் முகத்தின் முன்னால் ஒரு பொம்மையை காட்டினார் ஒரு கடைக்காரர். அந்த கடைக்காரரை சட்டை செய்யாமல் பேகன் நடந்து கொண்டிருந்தார்.

''ஆப்பிள் ஆப்பிள், ஆரஞ்சு நாலு ஐம்பது பைசா ம்மா '

''பெல்ட்டு இது சாதா பெல்ட்டு இல்ல, லெதர் பெல்ட்டு இரண்டு ரூபாதான் சார்''

பலருடைய பேச்சுக்கள் மொத்தமாக கேட்டதால் ஒன்றும் உருப்படியாக பேகனுக்கு கேட்கவில்லை. கேட்காதது போல் தலையசைக்காமல் நடந்து சென்றார் பேகன். ஒவ்வொரு கடையிலும் குழுமியிருந்த மக்களை வேறு விலகிச் செல்ல வேண்டியிருந்தது. இந்த பாதையை கடந்து செல்லும் முன்னர் நா வறண்டு, கால்கள் பின்னிக்கொள்ளும் போலும் என நினைத்துக் கொண்டு முகத்தில் புள்ளியிடத் தொடங்கிய வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு நடந்தார்.

''கர்சீப் நாலு ஒரு ரூபா சார், புதுசா வாங்கிக்கோ சார் இதுல மல்லிகை வாசனை வரும்''

என்றபடியே கட்டாக இருந்த கைக்குட்டைகளை பேகனிடம் காட்டினார் மற்றொரு கடைக்காரர். பதில் எதுவும் அளிக்காமல் பாதையில் நடப்பதையே குறிக்கோளாக வைத்துக் கொண்டார் பேகன். அடிக்கின்ற வெயிலைப் பொருட்படுத்தாது வியாபாரம் பண்ணிக் கொண்டு இருந்தவர்களின் நிலையை பற்றி சிந்தனை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்தார் அவர்.

''சார் நீங்க கட்டியிருக்க வாட்ச் பழசு, அதைத் தூக்கிப் போட்டுட்டு இது ரோலக்ஸ் வாட்ச்சு நூறு ரூபாதான், எடுத்துக்கோங்க சார்'

பேகனுக்கு முதன்முதலாக கோபம் முணுக்கென்று எட்டிப் பார்த்தது. கோபத்தை சட்டை செய்யாமல் பதில் அளிக்காமல் ஒருவழியாய் அந்த நடைபாதையை கடந்தார். அந்த நடைபாதை கடைசியில் ஒரு குளிர்பானக் கடை இருந்தது. தாகமாக இருந்தது அவருக்கு. ஒரு நல்ல கடை கண்ணுக்கு எட்டும் தொலைவில் கூட இல்லை. அப்பொழுது அந்த குளிர்பான கடைக்காரர் பேகனைப் பார்த்து சொன்னார்.

''இதமா ஒரு இளநீர் குடிச்சிட்டுப் போங்க சார்''

பேகன் நின்றுவிட்டார்.

''இனாமாத் தருவியா?''

''இல்லை சார், இரண்டு ரூபாதான்''

''இனாமாத் தருவியா, மாட்டியா''

''தரமாட்டேன் சார்''

பேகன் கடைக்காரரிடம் எதுவும் பேசாமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

''பாக்கறதுக்கு பெரிய இடத்து ஆளு மாதிரி இருக்கு, ஒரு இரண்டு ரூபா கொடுத்து இளனி வாங்கிக் குடிக்க வக்கில்ல''

கடைக்காரர் முணுமுணுத்தார். பேகன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வீடு போய் சேர்ந்தார்.

''அப்பப்பா, நடக்கிற பாதையில கடையை வச்சிக்கிட்டு பொருள் விற்கிறாங்க, யாருதான் அதை வாங்குவாங்க''

பேகன் சலித்துக் கொண்டார். பேகனின் தந்தை கடிந்து கொண்டார்.

''பேசுவடா, வசதி வாய்ப்புனு வந்துட்டா ரோட்டில விற்கிற பொருள் எல்லாம் சீயினுதான் இருக்கும், ஒரு காலத்தில ரோட்டில விற்கிற பொருளை வாங்கித்தான் குடும்பம் நடத்துனேன் அதை மறந்துராத, ரோட்டுல விற்கிற பொருளை நம்பி வாழுற குடும்பங்கள் இன்னும் எத்தனையோ நம்ம நாட்டுல இருக்கு''

உழைக்கும் வர்க்கத்தினை நினைக்கையில் பேகனுக்கு சுர்ரென்றது.

முற்றும்

குறிஞ்சிப் பூ

குறிஞ்சிப் பூ

இளந்தென்றல் வீசும் மலையோரத்தில் ஓலைக் குடிசையில் மதி எழுதிக் கொண்டிருந்தான்.

''பெண்ணினமே!
வீறு கொண்டு உன் தன்
பேதைமையை அகற்று

விழியற்றுக் கிடக்கும் கண்ணை
ஓங்கி ஒலித்தும் கேளா செவியை
மாற்றிட புறப்படு

அதோ பழித்துக் கொண்டிருக்கும்
பகல் வேசக்காரர்களை
உலகு காண
பறைசாற்றிட கிளம்பு

நீ எழும் வேகத்தில்தான்
உன் எதிர்ப்பு அடங்கும்
எழு! போராடு!

உன்னைக் காக்க
உன் இனத்தை
தூசு தட்டிக் கொள்
அப்பொழுதுதான் தூய்மைப் பிறக்கும்''

கவிதையை அருவிபோல் கொட்டினான், அதனை வார இதழுக்கு அனுப்ப எழுந்து சென்றான் மதி.

இந்தியாவின் சிறந்த தொழிலும் மூத்த தொழிலுமான விவசாயம்தனை அவனது தாய் தந்தையர் செய்து வந்தனர். மதி நகரின் வாசலை அடைந்தான். அவனது விழிகள் ஒரு மதியை நோக்கியது. அது வானத்து மதியல்ல, மண்ணகத்து மதி.

இவனைக் கண்டு அவள் புன்னகைத்தாள். மறுபதிலாய் இவனும் புன்னகைத்தான். அறிமுகம் புன்னகையில் ஆரம்பமானது. இவனது எழுத்துக்கள் பல அவளை கவர்ந்திருக்கின்றன. அந்த எழுத்துக்கள் போல் இவனும் அவளுக்குப் பிடித்திருந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல.

ஆனால் அவள் செல்வந்தருக்கு செல்லச் சிட்டு, காதலை எப்படி அனுமதிப்பார் மனம் விட்டு. அவள் ஆதரவற்ற பூவையருக்கும் வழி தெரியா பெண்களுக்கும் நல்வாழ்வு மையம் நடத்தி வந்தாள். தந்தையின் பேருதவியால் தரணி போற்றுமளவு செயல்பட்டு வந்தாள்.

மதியின் கால்கள் நகரத்து வாசலை பலமுறை நாடின. நங்கையும் இவனை நாடினாள். புன்னகை சந்திப்பானது.

முதல் வார்த்தை ''நீங்க எழுதற கவிதைகளை நான் நிறைய இரசிப்பேன்'' என்றாள் ரதி.

''உங்க நல்ல செயலை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்'' என்றான் மதி.

காலம் கடந்தது, காதலும் வளர்ந்தது. காதலைச் சொன்னான் மதி. மறுப்பேதும் சொல்லவில்லை தந்தை. மதியை முழுதாய் தெரிந்தவர் அவர். ஆனால் ரதியின் தந்தையோ தடையாய் நின்றார்.

காதலை தடுக்க களவு முறைகள் கையாளப்பட்டும் வானைப் போல் உயர்ந்து வளர்ந்தது. ரதியின் தந்தை இறுதியாய் ஓர் அஸ்திரத்தை ஏவினார்.

''இங்க பாரும்மா, நான் சொல்றதை நீ கேட்கலைன்னா நல்வாழ்வு மையம் நாளைக்கே மூடியிருக்கும், யோசனை செஞ்சுக்கோ'' என்றார்.

அவள் துடியாய் துடித்தாள், மறுமலர்ச்சி ஏற்பட மறுக்கும் பூமியில் புதியதாய் தோன்றும் மறுமலர்ச்சி மசிவதா? கண்ணீர் அருவியானது.

''உனக்கு ஒரு வாரம் அவகாசம் தாரேன்'' என்று காலக்கெடு விதித்தார் தந்தை ரதியை நோக்கி.

விதியை நோவதா, வளர்ந்த இடத்தை நோவதா மதியை நேசித்ததை நோவதா ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் வேளையில் மதியை காண ரதி விரைந்தாள். மதி ஏற்கனவே காத்திருந்தான். விசயத்தைக் கூறினாள் விம்மலுடன். என்ன செய்வது எனக் கேட்டாள். அவனோ பதிலேதும் கூற முடியாது வானம் நோக்கினான்.

''காரணம் சொல்லுங்கள், நம் காதலை விட நான் செய்யும் காரியம் உயர்ந்ததா இல்லையா'' என்றாள் ரதி.

''என்ன சொல்வது, எனக்கே விளங்கவில்லை'' என்றான் மதி.

''முடிவைச் சொல்லுங்கள், மூன்று முடிச்சு முக்கியமா? முப்பத்து முப்பது பெண்களின் நல்ல நிலை முக்கியமா? விம்மலுடன் வந்த வார்த்தைகள் காற்றில் கரைந்தது.

''என்னை மறந்து விடு'' உள்ளத்தில் இடியாய் இறங்கியது அவனது வார்த்தை.

''காதலையா மறக்கச் சொல்கிறீர்கள், நினைவுகளையா இழக்கச் சொல்கிறீர்கள். முடியாது, என்னால் முடியாது'' அவளது வார்த்தையின் உள்ளன்பு இமயத்தின் உயரத்தைத் தொட்டு விம்மியது.

''பின் அவர்கள் வாழ்வு'' தன்னை தன் காதலை இழக்க தைரியம் அற்றவனாய் விக்கித்து கேட்டான், ஆனாலும் உறுதியாய் இருந்தான்.

''அர்த்தமற்றதாய் போகட்டும், நம் காதல் அர்த்தமாக வேண்டும்'' என்றாள் அர்த்தமே புரியாதவளாய்.

''நம் காதல் அர்த்தமுடையதாக வேண்டுமெனில் நீ நல வாழ்வு மையத்தை தவிர்த்தலாகாது செல்'' என்றான் உறுதி கொண்டவனாய். அவள் ஒன்றும் பேச முடியாதவளாய் அமைதியானாள். சில விநாடிகள் அடுத்து ''நம் காதல்'' என்றாள் தனக்கு இவன் இதயம் இல்லாது போகுமோ? என்ற அச்சத்துடன்.

''காதல் தெய்வீகமானது'' என்று ஆறுதல் அளித்தான். அது அவளுக்கு உறுதியாக தெரிந்து இருக்க வேண்டும், நல வாழ்வு மையத்தின் நலன் உறுதியாக புரிந்து இருக்க வேண்டும்.

நடந்தாள், நம்பிக்கையுடன் நடந்தாள் ரதி. இருள் சூழ இருந்த நலவாழ்வு மையத்தினை காத்திட்ட மகிழ்ச்சியில் தனக்கு அவள் இல்லாது போன கவலையினையும் மறந்து? நடந்து கொண்டு இருந்தான் மதி.

முற்றும்

Friday 26 June 2009

பொதுவாத்தான் சொல்றேன்

பொதுவாத்தான் சொல்றேன் (உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)

மேலப்பட்டி அரசுநடுநிலைப் பள்ளிக்கு அருகில் தான் பாலர் பள்ளியும் அமைந்து இருந்தது. மேலப்பட்டியில் எல்லா சாதியினரும் இருந்தார்கள், அதில் ரெட்டியார்கள் அதிகம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சக்கிலியர்கள் குறைவாகவே இருந்தாலும் அவர்களுக்கென ஊரில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கேதான் அவர்கள் வாழ வேண்டும். ஊருக்குள் எல்லாம் வீடு கட்டி வாழ முடியாது.

இந்த சாதிய முறை எப்படி உருவானது, எதனால் கொண்டு வரப்பட்டது, எத்தனையோ முன்னேற்றங்களை தொழில்நுட்பத்தில் அடைந்தபோதிலும் இன்னமும் பல கிராமங்களில், நகரங்களில் என ஏன் அழியாமல் செழித்தோங்கி இருக்கிறது என ஆராய்ச்சியெல்லாம் செய்து அதற்கு மாற்று வழி கொண்டு வந்துவிட முடியாது. சாதிகளை முற்றிலும் ஒழித்துவிட வழியில்லாமலே இருக்கிறது. மொழி எதிர்ப்பு போராட்டம் வந்தது போல சாதி எதிர்ப்பு போராட்டத்தை ஒருவரும் கூட்டக் காணோம். திரைப்படங்களில், நாடகங்களில், கவிதைகளில், காவியங்களில் என சாதியை எதிர்த்து எழுதப்பட்டதும், கலப்புத் திருமணம் என காதல் திருமணங்கள் பெரிதாகப் பேசப்பட்டதுடன் அப்படியே நின்றுபோய்விட்டது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொன்னதுபோல சாதியில்லாத ஊரிலே வாழ்ந்திருக்கவும் வேண்டாம் என எண்ணுமளவுக்கு ஆகிப்போய்விட்டது. மேலப்பட்டி இதற்கு விதிவிலக்கு அல்ல.

பாலர் பள்ளியில் சேர்ப்பதற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பில் சக்கிலியர் பிரிவினைச் சார்ந்த மாரியப்பன் தனது மகன் வேல்முருகனுடன் தனியாய் ஓரிடத்தில் நின்றான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சிலர் தங்களது குழந்தைகளுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’ என குடும்பக் கட்டுப்பாடு எண்ணம் கொள்ளும்வகையில் இது இருந்தாலும், பலர் தங்களது குழந்தைகளை பணம் கொடுத்து தல்லாநகரில் உள்ள பள்ளியில் சென்றுச் சேர்த்திருந்தனர்.

வரிசையில் நிற்காமல் தனியாய் நிற்கும் வேல்முருகனைப் பார்த்து பாலர் பள்ளியில் சேர இருந்த இலட்சுமி எனும் சிறுகுழந்தை ‘வா’ என கையைக் காட்டி அவனை அழைத்தது. வேல்முருகனும் ஆசையுடன் அங்கே ஓட எத்தனிக்க அவனைப் பிடித்துக்கொண்டான் மாரியப்பன். ‘’இங்கனயே நில்லு’’ என அதட்டினான் மாரியப்பன்.

வேல்முருகன் மறுபேச்சு பேசாமல் அப்படியே நின்றான். இலட்சுமி தன் தந்தையிடம் ‘’கூப்புடுப்பா, கூப்புடுப்பா’’ என மழலையில் கெஞ்சியது. ‘’செத்த சும்மா இரு’’ என அதட்டினார் இலட்சுமியின் தந்தை இராமசாமி. மற்றவர்கள் இலட்சுமியைப் பார்த்தனர். குழந்தைகளைச் சேர்த்துவிட்டு பெற்றோர்கள் திரும்பிய போது சிலர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள். வேல்முருகன் பள்ளியில் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அது. பள்ளியில் சேர்த்துவிட்டுச் சற்று தாமதமாகத் தோட்ட கூலி வேலைக்குச் சென்றான் மாரியப்பன். தோட்ட முதலாளி கணேஷமூர்த்தி மாரியப்பனைப் பார்த்து சத்தமிட்டார்.

‘’இதுதான் வேலைக்கு வர நேரமாடா’’

‘’பையனை ஸ்கூலுல சேர்த்துட்டு வரேன் சாமி’’

‘’ஸ்கூலுக்குப் போயிட்டா அப்புறம் இங்க உனக்கப்பறம் யாரு வேலைப் பார்க்குறது’’

‘’அந்த யோசனை உங்களுக்கு முன்னமே இல்லாமேப் போச்சே சாமி’’

‘’பேசுவடா பேசுவ, பேச்சுல ஒன்னும் குறைச்சலில்ல, போயி வேலையக் கவனி’’

கணேஷமூர்த்திக்கு இரு மகன்கள், ஒரு மகள். அனவைரும் நன்றாகப் படித்து இருந்தார்கள். விவசாய நிலத்தை கூலிக்கு ஆட்கள் வைத்து அவரேப் பராமரித்து வந்தார்.

அன்று மாலையில் பள்ளியைவிட்டு வந்த வேல்முருகன் ‘அ’ என தரையில் கரித்துண்டால் எழுதிக் காட்டினான். ‘என் பிள்ளைக்குப் படிப்புல அக்கறை இருக்கு’ என மாரியப்பன் தனது மனைவி மூக்காயியிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டான். படித்தே வளர்ந்தான் வேல்முருகன்.

அதே பள்ளியில் மூன்று வரைப் படித்த தனது தங்கை பூங்குழலி படிப்பை பாதியிலெயே நிறுத்திவிட்டாள். வேல்முருகன் வற்புறுத்தியும் அவள் படிக்க விருப்பம் இல்லாமல், தாயுடன் தோட்டத்துக்கும், முள் பறிக்கவும் சென்றாள். மாரியப்பன் பலமுறைக் கண்டித்தும் அவள் கேட்பதாக இல்லை. படிக்காமலே வளர்ந்தாள் பூங்குழலி.

வேல்மூருகன், தொட்டு விளையாடும் விளையாட்டுக்களில் எல்லாம் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தாங்கள் தீண்டத்தகாதவர்கள் எனவும் ‘ஹரிஜன்ஸ்’ எனவும் அவன் வளர வளர அவனுக்குப் புரிந்துப் போனது.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ வரியைக் கேட்கும்போது அவனுக்கு வேதனையாக இருந்தது. இலட்சுமிக்கும், வேல்முருகனுக்கும் பள்ளியில் அதிக போட்டி இருந்தது. இலட்சுமியே எல்லா த் தேர்விலும் முதல்நிலை மாணவியாக வந்தாள். வேல்முருகனுக்கு முதல்நிலை நிராகரிக்கப்பட்டே வந்தது. எட்டாவது வரை அங்கேயே படித்தார்கள்.

வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த முதல் மகனுக்கும், இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடத்தி அழகுப் பார்த்த கணேஷமூர்த்தி தன் கடைசி மகனுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து வைத்தார். கல்யாணத்தை வெகுச் சிறப்பாகச் செய்ய ஏற்பாடு செய்து இருந்தார்.

மாரியப்பன் தனது மகனின் மாற்றுச் சான்றிதழழைப் பள்ளியில் பெற்றுக் கொள்ளச் சென்றான். பள்ளி தலைமையாசிரியர் நடராசன் மாரியப்பனிடம் பேசினார்.

‘’பையனை நல்லாப் படிக்க வைச்சிட்ட, பொண்ணு ம் படிச்சி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’’

‘’ஏதோ அவன் பொழப்பைப் பார்த்துக்குவானுட்டுதான் படிக்க வைக்கிறேன் சாமி, இந்த வேகாத வெயிலுல படாதபாடு பட்டாலும் கா வயிறுக்குத்தானே கஞ்சி கிடைக்குது, போடறதுக்கு ஒரு துணி எடுக்க முடியுதா சாமி’’

’குருவி சேர்க்கறதப் போல சேர்க்கனும், நீங்க எடுக்கற சம்பளத்துல பாதிய குடிச்சித் தீர்த்துறீங்க, கால காலமா அடிமைப்பட்டேத்தானே கிடக்குறீங்க, உங்களுக்கு போராடுறேனு கொடி கட்டிக்கிட்டு அவனவன் வயித்தை நிரப்பிட்டுத் திரியறானுக, உங்களுக்குத் தேவையின்னா நீங்கதான போராடனும், படிக்க எவ்வளவோ வாய்ப்பு இருக்கு, வேலைக்கு வாய்ப்பு இருக்கு, எத்தனையோ வசதிக செஞ்சு கொடுத்தும் நீங்க எப்பவும் இப்படித்தானே இருக்குறீங்க, இந்த அடையாளத்தை முதல மாத்தனும், நீங்க தாழ்த்தப்பட்ட பிரிவினரா காட்டிக்கிற அடையாளத்தைப் போக்கனும், எல்லோரோடையும் சமமா இருந்தாத்தான் ஒரு தன்னம்பிக்கை வரும், வளரும். ஆனா அது நடக்காது நடக்கவும் விடமாட்டீங்க. இப்படியே இருந்தா ஒரு வேல்முருகனோ, ஒரு பால்பாண்டியோ மட்டும்தான் முன்னேறுவான்’’

‘’சாமி தப்பா எடுத்துக்காதீக, இன்னைக்குதான் எங்கிட்ட இவள பேசறீக சாமி. முதல்ல நம்ம ஸ்கூலுல இருக்கிற வேறுபாட்டை நீங்க மாத்திட்டாலே பெரிய விசயம் சாமி, எம் பையன் எங்கன உட்கார்ந்து படிச்சான், எப்படி விளையாடுனான் அவன் மனசுல ஆறாத ரணமா இருக்கு சாமி’’

‘’அது இந்த ஊர் கட்டுப்பாடுனு இருக்கு’’

‘’அதேன் சாமி, இந்த நாட்டுக் கட்டுப்பாடும், எதைச் செய்யனுமோ அதைச் செய்யமாட்டாக, வீராப்பா பேசிக்கிருவாக, தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சிங்கோங்க சாமி, அடக்கத்தைக் கூட அடிமைத்தனமாப் பார்க்குற பூமியிது’’

நடராசன் எதுவும் பதில் பேசாது இருந்தார். பள்ளி மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு வேல்முருகனுடன் வெளியேறினான் மாரியப்பன். வேல்முருகனை காரியனேந்தலில் ஒன்பதாம் வகுப்புச் சேர்த்துவிட்டான் மாரியப்பன். இலட்சுமியும் அங்கேயே சேர்ந்தாள்.

கணேஷமூர்த்தியின் கடைசி மகன் திருமணம் பெரும் பொருட்செலவில் நடந்து முடிந்தது. மாரியப்பனுக்கும் மூக்காயிக்கும் வழக்கம்போல சேலை, வேஷ்டி எடுத்துக் கொடுத்திருந்தார் கணேஷ மூர்த்தி.

கணேஷமூர்த்தியின் மூத்த மகன் விநாயகபிரபு மாரியப்பனிடம் ‘’நம்ம ஊருல சாதிப் பிரச்சினை, வெளியேப் போனா இனப் பிரச்சினை, மனுசனுக்கு மனுசன் வெறுப்போடதான் வாழுறாங்க, எங்கே நம்ம சொத்தை அள்ளிட்டுப் போயிருவானோனு கெளரவம் பார்த்துட்டுதான் இருக்காங்க, இனத்துக்காரனு இல்லாம மனுசனா யாருமே நினைக்க மாட்டாங்க, ஏன்னா இனம் பெரிசுனு பேசிட்டு தன் இனத்தையே அழிக்க வழி செய்வாங்க. அது இருக்கட்டும், பையன் படிப்புச் செலவுக்குத் தேவைப்பட்டா எனக்கு தகவல் சொல்லு மாரியப்பா, எப்படி கேட்குறதுனு இருந்திராதே’’

‘’முதலாளி தருவாரு சாமி, தரலைன்னா கேட்கறேன் சாமி’’

‘’நீ எப்போதான் இந்த சாமியை விடப்போற, வெளியிலேப் போய் பாரு நீயும் நானும் வேற ஊருல நடந்தா நீ இந்த குலம், நா அந்த குலம் னு நாம நடந்துக்கிற முறையும், போட்டுக்கிற உடையும் தான் அடையாளம் காட்டும், யாருமே உன்னை தாழ்த்தப்பட்டவராவோ என்னை மேல் சாதிக்காரனாவோப் பார்க்கமாட்டாங்க, எல்லாம் இந்த ஊருக்கு மட்டுந்தான், எதுலயும் சாதியை முன்காட்டி எதையும் செய்யாத, அப்படி செய்யாம இருந்தாலே சாதி செத்துரும். ஆனா இங்க சாதியை வைச்சித்தான் எல்லாம் நடக்குது. மதத்தையும் தனக்கு அடையாளம் காட்டிக்கிர மனுசங்களும் ரொம்ப அதிகம், உம்பையன் டாக்டரா வரட்டும், இந்த ஊரிலேயே ஒரு ஆஸ்பத்திரி கட்டித் தரேன்’’

வேல்முருகன் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கினான். இலட்சுமியும் அதிக மதிப்பெண்கள் வாங்கினாள். இருவருக்குமே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டியது. தன்னிடம் பணம் இல்லாத குறைதான் பெரிதாக மாரியப்பனுக்குப் பட்டது. மாரியப்பன் கணேஷமூர்த்தியிடம் பண உதவிக்காக நின்றான்.

கணேஷமூர்த்தி தன்னிடம் கொடுப்பதற்கு இல்லை கல்யாணத்திற்கு அதிக செலவு பண்ணிவிட்டேன் என மறுத்து விட்டார். விநாயகபிரபுவிடம் பணம் கேட்டான் மாரியப்பன். சொன்னதுபோலவே விநாயகபிரபு பணத்தை உடனே அனுப்பி வைத்தான். சிலநாட்களுக்குப் பின்னர் இந்த விசயம் கணேஷமூர்த்திக்குத் தெரியவர மூத்தமகன் மேல் கடுங்கோபம் கொண்டார். மாரியப்பனை வேலையை விட்டு நிறுத்திவிட நினைத்தாலும் அவனைப் போல் உழைக்க ஆளில்லை என பேசாமல் இருந்துவிட்டார்.

வேல்முருகனும், இலட்சுமியும் நன்றாகப் படித்து மருத்துவராக வெளிவந்தார்கள். பூங்குழலிக்கு வெளியூரில் அவன் வசதிற்கேற்ப திருமணம் முடித்து வைத்தான் மாரியப்பன்.

விநாயகபிரபு தனது சொந்த செலவில் மேலப்பட்டியில் மருத்துவமனை ஒன்றைக் கட்டினான். இதைக் கண்டு கொதித்துப் போனார் கணேஷமூர்த்தி. அதே மருத்துவமனையில் வேல்முருகனையும், இலட்சுமியையும் மருத்துவராகப் பணியாற்றுமாறுக் கேட்டுக் கொண்டான் விநாயகபிரபு.

அருகிலிருந்த ஊர்க்காரர்களெல்லாம் மருத்துவம் பார்க்க வந்தார்கள். எந்த மருத்துவரைப் பார்ப்பது என்பதில் அவர்கள் பேதம் பார்க்கவில்லை. ஆனால் உள்ளூர்காரர்கள் வேல்முருகனிடம் செல்வதைத் தவிர்த்தார்கள். இலட்சுமி ஒரு வேலை விசயமாக சில நாட்கள் வெளியூர் சென்று இருந்தாள்.

அப்பொழுது கணேஷமூர்த்தி மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் வேல்முருகன் மட்டுமே இருப்பதை அறிந்த கணேஷமூர்த்தி தன்னை நகர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொன்னார். நிலைமை மோசமாக இருக்கவே வேல்முருகன் அவரை அந்த ஊரின் மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சைப் பார்க்கச் சொன்னான். அருகிலிருந்த மாரியப்பன் சொன்னான்.

‘’சாமி நான் வேலைப் பார்த்த விவசாய நிலம் தானே சாமி சோறு போட்டுச்சு, அதை நீங்க வேணாம்னு ஒதுக்கலையே, மோட்டாரு தூக்கி வைக்கறப்ப, மூட்டைத் தூக்கறப்ப உங்க கையை என் கையி உரசுச்சே சாமி, இப்போ அவ என் மகன் இல்லை சாமி, இந்த ஊரு டாக்டரு’’

கணேஷமூர்த்தி மயக்கநிலையை அடைந்தார். வேல்முருகன் எதையும் யோசிக்காமல் உடனடி சிகிச்சைத் தந்தான். சில மணி நேரங்களுக்குப் பின்னர் கண்விழித்துப் பார்த்தபோது கணேஷமூர்த்தியின் கண்களில் ‘’கணேஷமூர்த்தி பொது மருத்துவமனை, மேலப்பட்டி’’ எனும் வாசகம் மிகவும் பிரகாசமாக தெரிந்தது.

முற்றும்

பழங்காலச் சுவடுகள் - 11 (நிறைவுப் பகுதி)

பழங்காலச் சுவடுகள் - 11

சிறிது நேரத்திற்கெல்லாம் மழை ஓய்ந்தது. இருவரும் ஒளி கற்கள் கோபுரத்தை அடைந்தனர். கோபுரத்தில் உள்ளே செல்வதற்காக அனுமதி பெற்று நுழைந்ததும் இருவரும் ஒருவித அமைதியை உணர்ந்தனர். மனம் இலேசாகியது. அங்கேயே பல மணி நேரம் கழிந்தது. புத்தம் புதிய உலகத்தில் இருப்பது போன்று இருந்தது.

மாலை நேரம் வந்ததும் பெருவின் இயற்கை அழகை ரசித்தபடியே பல இடங்களை சுற்றி பார்த்தனர். நேராக கோவிலில் சந்தித்தவரின் வீட்டிற்குச் சென்றனர். இவர்களின் வரவை எதிர்நோக்கியவாறே மெகாய்ட் காத்து இருந்தார்.

''வாங்க வாங்க''

''நல்ல மழை பெய்தது''

''எங்கும் தண்ணீர் தேங்கியிருக்காதே''

''இல்லை, மிகவும் துடைத்துவிட்டது போன்று இருந்தது''

''அமருங்கள், என்ன சாப்பிடுகிறீர்கள்''

''வெளியில் சாப்பிட்டுவிட்டோம்''

''பழரசமாவது அருந்துங்கள்''

''ம்ம் சரி''

பழரசங்கள் எடுத்து வந்தார் அவர். தானும் குடிக்க எடுத்துக்கொண்டார். அப்பொழுது ஒருவர் அங்கே வந்தார்.

''இதோ இவன் பெயர் ஜொவியன், மற்றொரு கோவிலில் தலைமை பூசாரியாக இருக்கிறான்''

''காலையில் சந்தித்தோம், என்மீது தெரியாமல் மோதிவிட்டார்''

''ஓ சந்திப்பு நடந்துவிட்டதா, நாங்கள் இருவர் மட்டுமே இங்கே தங்கி இருக்கிறோம்''

''திருமணம் ஆகவில்லையா''

''இருவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம், அதே கோவிலில் பணிபுரிவதே எங்கள் கடமையாக கருதுகிறோம்''

''ஒளிகற்கள் கோபுரம் சென்று இருந்தோம், மனம் இலேசாகியிருந்தது''

''பூமி எல்லாமே இப்படித்தான் இருக்கும், ஆனால் ஒரு இடத்தில கோபுரத்தைக் கட்டி அங்கே அமைதியான உணர்வும், கடவுள் உணருர தன்மையும் இருக்கிறதா பழங்காலத்தில உருவாக்கின காரணம் எப்பவும் சண்டையும் சச்சரவுமா இருக்கிறவங்களை அமைதிபடுத்தத்தான்; மொத்த பூமியும் அப்படித்தான் இருக்கும்னு உணருர மாதிரி சுவடுகளை எந்த ஒரு மனித நாகரிகமும் வளர்க்கலை, அதுதான் இன்னமும் பிரிவினைக்கெல்லாம் காரணம், இதெல்லாம் அழிஞ்சி மொத்த பூமியும் தெய்வீக உணர்வை உணருமாறு ஒரு புது நாகரிகம் தோன்றனும், அந்த நாகரிகம் எல்லாரையும் வசப்படுத்தனும், இல்லைன்னா இந்த பழங்காலச் சுவடுகள் மனசில வலியை உருவாக்கிக்கிட்டே இருக்கிற வடுக்களாகத்தான் இருக்கும்''

''எங்க நாட்டிலயும் பல கோவில்கள், சிற்பங்கள், சிந்து சமவெளி நாகரிங்கள்னு எல்லாம் சிதைந்து போயிருக்கு''

சின்னசாமி பேசி முடித்ததும் அகிலா சொன்னாள்.

''இரகசியங்கள் பத்தி சொல்லுங்க''

அப்பொழுது அந்த இரவில் ஒரு சிலர் அங்கே வந்தார்கள். வந்தவர்கள் நேராக மெகாய்ட்டிடம் இரகசியங்களைத் தருமாறு கேட்டார்கள். மெகாய்ட் மறுத்தார். வந்தவர்கள் இதோடு பலமுறை வந்துவிட்டதாகவும் இனிமேலும் பொறுமை காக்கமுடியாது என்றும் கோபத்துடன் கூறினார்கள். அகிலாவையும் சின்னசாமியையும் பார்த்தார்கள். இவரிடம் இரகசியங்கள் பெற வந்திருக்கிறீர்களா எனக் கேட்டுக்கொண்டே இரகசியங்கள் பெற்று இருந்தால் உடனடியாகத் தருமாறு கேட்டார்கள். அகிலாவும் சின்னசாமியும் இல்லையென சொன்னார்கள். ஜோவியன் அவர்களை அங்கிருந்து போகுமாறு கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் இந்த முறை இரகசியங்கள் பெறாமல் செல்வதில்லை என மேலும் சொன்னார்கள்.

சின்னசாமி மெகாய்ட்டிடம் இரகசியங்கள் தந்துவிடுமாறு கூறினார். மெகாய்ட் ஒரு சின்னதாளில் எழுதி அந்த மனிதர்களிடம் கொடுத்தார். பூமியில் எல்லா இடமும் அமைதியானது என்பதை உணர்த்தும் வகையில் எந்த ஒரு நாகரிகமும் தோன்றவில்லை அதுவே இந்த பூமியின் இந்த கொடூர நிலைக்கு காரணம் இதுவே ஒவ்வொருவரும் அறிய வேண்டிய இரகசியம் என்பதை வாசித்ததும் வந்தவர்களின் ஒருவன் மெகாய்ட்டின் தலையில் ஓங்கி அடித்தான். தடுக்க வந்த ஜோவியனை மற்றொருவருன் தாக்கினான். பலமாக இருவரையும் அடித்துவிட்டு அகிலாவையும் சின்னசாமியையும் ஒன்றும் செய்யாது ஓடினார்கள். மெகாய்ட் முனகினார். அகிலாவும் சின்னசாமியும் செய்வதறியாது பயத்தில் உறைந்து போயினர். மெகாய்ட் கோவிலில் கிழக்குப்பகுதியில் ஒரு சுரங்க அறை ஒன்று இருப்பதாகவும் அங்கேதான் எல்லா உலக ரகசியங்கள் இருப்பதாகவும் எப்படியாவது இந்த நாட்டில் தங்கிவிடுமாறும் கூறிக்கொண்டே சாவியினை சின்னசாமியின் கைகளில் தந்து மரணம் அடைந்தார். ஜொவியன் முன்னரே மரணமடைந்து இருந்தான்.

காவல் அதிகாரிகள் வந்தனர். அகிலாவும் சின்னசாமியும் நடந்ததை சொன்னார்கள். சுரங்க அறைக்கான சாவியை தந்தார்கள். இருவரின் நேர்மையை காவல் அதிகாரிகள் போற்றினார்கள். உடனே எந்த கூட்டம் இதற்கான பின்னணியில் இருக்கும் என கண்டுபிடித்து அந்த இரவோடு இரவே அவர்களை சிறையிலடைத்தனர். மறுநாள் கோவிலில் அகிலா சின்னசாமியை வைத்தே சுரங்க அறையை திறந்தனர். அங்கே சூரியன் ஒளி தருவது போன்று சுவரெல்லாம் வரையப்பட்டு இருந்தது. மொத்த பூமியும் ஒன்றான நிலப்பரப்பாக இருந்தது போன்ற வரைபடம் எல்லாம் இருந்தது. எகிப்தியர்கள் மாயன்கள் இடத்திற்கு வந்து போனதாகவும் ஆரியர்கள் எகிப்துக்கு வந்து சென்றதாகவும் குறித்து இருந்தது. லெமூரியர்களும் மாயன்களும் அட்லாண்டிஸுகளும் தொடர்புடையவர்களாக காட்டி இருந்தது. அஜ்டெக்குகளும் இன்கா சமூகமும் தொடர்புடையவை என குறித்து இருந்தது. அந்த அறையின் சுவர்களிலே இந்த விபரங்கள் மட்டும் குறிக்கப்பட்டு இருந்தது.

அறையில் இருந்த இரும்பு பெட்டிகளை திறந்தபோது ஏடுகள் இருந்தது. அதை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அகிலாவும் சின்னசாமியும் உடன் இருந்தனர். நாம் அறியாத ஒரு நாகரிகம் பற்றி குறிப்பிட்டு இருந்தது. மேலும் மாயன்கள் இன்கா அஜ்டெக்குகள் எகிப்தியர்கள் பயன்படுத்திய நாட்காட்டிகள் இருந்தது. பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வாய்மொழியாகவே விசயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன என்பதை மறுக்கும் வண்ணம் பல இலட்ச வருடங்கள் முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்பதை பறைசாற்றும் வண்ணம் அந்த ஏடுகள் இருந்தது. அந்த எழுத்துக்களைப் பார்த்து அகிலாவும் சின்னசாமியும் பரவசமடைந்தனர். அனைத்து ஏடுகளும் தமிழ் மொழியிலே எழுதப்பட்டு இருந்தது. எழுத்துக்கள் இந்திய எண்களே என பறைச்சாற்றும் வண்ணம் பூச்சியம் எல்லாம் இருந்தது. கடைசியாக எழுதப்பட்ட வருடம் 129304 என குறிக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு வருடத்திற்கு ஒரு பக்கம் மட்டுமே எழுதி இருந்தது. ஒரு வருட நிகழ்வுகளை மொத்தமாக குறிப்பிட்டு இருந்திருக்கக்கூடும் என சின்னசாமி யோசனை சொன்னார். அகிலாவும் வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திப் பார்த்தார், கடைசி எழுதிய வருடங்களில் இருந்த குறிப்புகள் நாம் அறிந்த நமக்குத் தெரிந்த வரலாற்று குறிப்புகளுடன் தொடர்புடையதாக எதுவும் இல்லை. முதல் பக்கத்தில் சூரியன் வரையப்பட்டு சின்ன சின்ன துகள்கள் போன்று வரைந்து இருந்தது. இரண்டாம் பக்கத்தில் உலக ரகசியம் உரைக்கப்பட்டு இருந்தது. மேலும் சில பகுதிகள் மட்டும் வாசித்துப் பார்த்ததில் உலகம் யாவும் அமைதியாகவே இருந்து இருக்கிறது. ஒரே நாகரிகம் தான் இருந்து இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. மனிதன் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பான் என கையில் கத்தியும் வேலும் கொடுத்தது நமது கொடூர எண்ணங்களேயன்றி அதையே கருத்தில் கொண்டு கொடுங்கோலர்களாய் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருப்பது நமது குற்றமேயன்றி மனிதர்கள் மனிதத்தோடு வாழ்ந்தார்கள் என ஒரு நாகரிகம் இருந்தது என்பதை எந்த ஒரு சுவடும் இல்லாமல் ஆக்கியது நாமே என அறிய முடிந்தது.

தனித்தனி நாகரிகங்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தது, அது அந்த அந்த நாகரிக சம்பந்தபட்ட மொழி தொடர்புடையதாக இருந்தது. நாம் அறிந்த தெரிந்த வரலாறும் அந்த சுரங்க அறையில் இருந்தது. தமிழ் சம்பந்தபட்ட விசயங்கள் மட்டும் பெற்றுத்தருமாறு அரசிடம் கோருமாறு இருவரும் வேண்டினர். அரசு அதனை நகல் எடுத்து தருமாறு உடனே உத்தரவிட்டது. இவையெல்லாம் எப்படி கோவிலில் வந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க அரசு காவல்துறைக்கு ஆணையிட்டது. இதை ஒரு செய்தியாக வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர். மெகாய்ட் மற்றும் ஜொவியன் முன்விரோதத்தினால் கொலை என மொத்த விசயத்தையும் அரசு கட்டளைப்படி மறைத்தது.

அகிலாவும் சின்னசாமியும் பெரு நாட்டிலிருந்து தேன்நிலவு முடித்து தமிழகம் வந்தனர். சின்னசாமியின் தந்தை அகிலாவை அன்புடன் வரவேற்றார், சிலவாரங்களில் அவர் விமான நிலையத்தில் என்ன சொன்னார் என்பதையே மறந்து இருந்தார்.

அந்த மொத்த எழுத்துக்களையும் புத்தகமாக எழுதி வெளியிட இருவரும் திட்டமிட்டனர். அதற்கான தலைப்பும் தேர்ந்தெடுத்தனர். அந்த பழங்காலச் சுவடுகள் மூலம் உலகத்திற்கு ஒரு புதிய நாகரிகத்தை அவர்கள் காட்டிட எண்ணினார்கள். அந்த நாகரிகத்தை பற்றி தெரியவந்தால் இந்த மொத்த மனித குலமும் மனிதம் என்பதை பற்றி உணரும் என நம்பிக்கை கொண்டார்கள். அகிலா முதல் வரி எழுதினாள். இன்றைய மனிதர்கள் தலைகுனிந்தார்கள்.

முற்றும்.

பழங்காலச் சுவடுகள் - 10

''மாயன்கள் அஜ்டெக்குகள் கலாச்சாரம் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த மனிதர்களும் கடவுள் வழிநடத்துவதாக தங்களுக்கென கடவுளை கொண்டாடி வந்தனர். சிற்பக்கலை போன்ற கலைகளில் மிகவும் கை தேர்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்கள் இருந்த பகுதி மெக்ஸிகோ பகுதியாகும். குவாட்டமேலா, ஹோண்டுராஸ் பகுதிகளில் மாயன்கள் வாழ்ந்தனர். அஜ்டெக்குகள் கட்டிய பிரமிடும் உருவாக்கிய நகரமும் மிகவும் பிரபலமானவை. இந்த மனிதர்கள் தங்களது அரசை போரிட்டு விரிவாக்கிக் கொண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் எப்பொழுது கால் எடுத்து வைத்ததோ அப்பொழுதே இந்த கலாச்சாரம் அழிவுக்கு வித்திட்டது''

அகிலா கேட்டாள்.

''ஒற்றுமையின்மையினால் தானே அழிந்தார்கள், பெருவில் இது போன்று இருந்தார்களா''

''பெருவில் நாஜ்கா, இன்கா என மனித கூட்டம் இருந்தது. இங்கே சூரியக்கடவுள்தான் பிரசித்தம். ஏனைய கடவுள்கள் இருந்தாலும் சூரியனே எல்லாம். நீங்கள் இங்கே மச்சு பிச்சு பகுதியைப் பார்க்கலாம். ஆண்டிஸ் எனப்படும் மலைப்பகுதியில் அந்த நூற்றாண்டிலேயே இத்தனை பெரும் வியப்புகளை ஏற்படுத்தியது இன்கா வம்சவழியினர். மாயன்கள் அஜ்டெக்குகள் போன்றே விவசாயம் தான் இவர்களுக்கு எல்லாம்''

''எல்லா இடங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்ல முடியுமா''

''என்னால் வர இயலாது, எனக்கு இங்கே வேலை இருக்கிறது, ஒரே ஒரு இடம் அதை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். ஒளிக் கற்களால் ஆன ஒரு கோபுரம் இருக்கிறது. அங்கே சென்றால் அத்தனை சக்தியும் நமக்குள் வந்துவிடும் போன்ற உணர்வு ஏற்படும். இதை இன்கா வம்சத்தினர் அஜ்டெக்குகளிடம் இருந்து திருடினார்கள் என சொல்வார்கள். ஆனால் அன்றைய மக்கள் கடவுளுடன் தொடர்பு கொள்வதையே பெரும் பேறாக கருதினார்கள்''

''இன்கா சமுதாயம் என்ன ஆனது''

''மாயன் அஜ்டெக்குகள் சின்ன கூட்டங்களாக இருந்தார்கள், அதைப்போல இன்கா வும் கூட்டங்கள்தான். மாயன், அஜ்டெக்குகளை வெற்றி கொண்டதை கண்ட அதற்கடுத்த வந்த தளபதி பெருவின் மேல் கண் வைத்தான், இன்கா சமுதாயத்தை வெற்றி கொண்டான்''

''இவர்களது கலாச்சாரம் வழிமுறைகள் என்ன ஆனது''

''ஸ்பெயின் தளபதிகள் கத்தோலிக்கத்தை முற்றிலும் விதைத்தனர், மாயன்களும் அஜ்டெக்குகளும் தங்களது சுயம்தனை இழந்தார்கள், ஆனால் இன்கா சமுதாயத்தினர் தங்களது வழிமுறையை வைத்துக்கொண்டார்கள், இந்தியர்களைப் போல''

'வேதம் என பெயரைச் சொல்லி சமுதாயத்தை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்' விவிட் சொன்னது அகிலாவின் காதுகளில் ஒலித்தது. சின்னசாமி திக்கிக்கொண்டே கேட்டார்.

''கலாச்சாரம் தொலைந்தது ஆனால் கலாச்சார சின்னங்கள் இருக்கிறதா''

''மாயன்கள் அஜ்டெக்குகள் உருவாக்கிய நகரம் சின்னபின்னமானது, முற்றிலும் மாறிவிட்டது. டெக்னிக்குவான் இடத்தை அஜ்டெக்குகள் உருவாக்க கடவுளே கட்டளையிட்டார் என சொல்வார்கள், இப்பொழுது உருக்குலைந்து இருக்கிறது, மாயன் பெண்மணி நோபல் பரிசு எல்லாம் வென்று இருக்கிறார் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர். குவாட்டமேலா பெரும் சர்ச்சைக்குரியதாக இப்பொழுது இருக்கிறது, இன்கா அமைத்த பெரிய சாலைகள் கோவில்கள் எல்லாம் இங்கே அப்படியேதான் இருக்கிறது''

''இரகசியங்கள் என சொன்னீர்களே என்ன''

''எனக்கு வேலை இருக்கிறது, நீங்கள் எத்தனைநாள் இங்கே இருப்பீர்கள், முகவரி தருகிறேன், இரவு வீட்டிற்கு வாருங்கள், நான் விடுதிக்கெல்லாம் செல்வதில்லை''

அகிலாவும் சின்னசாமியும் நன்றி சொல்லிக்கொண்டு பெரு நகரத்தை வலம் வந்தார்கள். இந்தியாவில் இருப்பது போன்று உணர்ந்தார்கள்.

''ஒளிக்கற்கள் கோபுரம் போகலாமா''

''இந்த ஊரிலேயே இருக்கலாம் போல இருக்கு''

''ஏன் சண்டையிட்டே வாழ்ந்து இருக்காங்க, ஒருத்தரை தன்வசப்படுத்திதானே பெரும் சாம்ராஜ்யம் உருவாக்கி இருக்காங்க, அடிமைகளா நடத்தி இருக்காங்க, ஆனா தெய்வீக உணர்வு மட்டும் தன்னோட வச்சிகிட்டாங்க''

''நம்ம ஊருல மட்டும் என்னவாம், ஜைனர்களை ஆறாம் ஏழாம் நூற்றாண்டில வேட்டையாடுனவங்கதானே நாம, எத்தனை பேரை கொன்னோம், மாற்றத்தை உருவாக்க பலியாக்கப்பட்ட மனிதம்தான் எத்தனை, அதான் விவிட் சொன்னானே கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைபவர்கள்''

''நல்ல விசயத்தை ஏன் எடுத்துக்கலை யாரும்''

''நல்ல விசயத்தை மட்டுமே ஏன் போதிக்கலை எவனும்''

சின்னசாமியின் மேல் ஒருவன் மோதினான். மோதியவன் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு விலகி நடந்தான். சற்று தூரத்திற்குச் சென்றவன் திரும்பினான்.

''வலிக்கிறதா''

''இல்லை''

''வலி குறைந்திருக்கும் என்றே சற்று தொலைவு சென்று திரும்பினேன்''

சின்னசாமியும் அகிலாவும் புன்னகைத்தனர். அந்த மனிதரும் புன்னகைத்தார். தனது பெயர் ஜொவியன் என அறிமுகப்படுத்திக் கொண்டுவிட்டு சென்றார்.

''உலகம் எத்தனை அமைதியாக இருக்க வேண்டியது''

''நம்மளை நாமே தொலைச்சிட்டோம்''

''உன்னை தொலைக்க வேண்டாம்னு சொல்றியா''

அகிலா சிரித்தார். பெரு வில் பெரும் மழை கொட்டத் தொடங்கியது.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 9

விவிட்டிடம் அகிலா பேசினாள். இனிமேலாவது ஒரு சமுதாயம் உருவாக்கும்போது அன்பே உருவான சமுதாயமாக உருவாக்குமாறு கேட்டுக்கொண்டாள். விவிட் சிரித்தான். அது மட்டும் ஒருபோதும் உருவாக்கப்போவதில்லை என்றான். பொக்கிஷங்கள் எல்லாம் வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் வளர்க்கக்கூடியதாக இருப்பதாக கூறினாள். வேதநூல்கள் சொல்லும் நல்வழியை பின்பற்றுமாறு அறிவுறுத்தினாள். ஆனால் விவிட் எதையுமே கேட்பதாக இல்லை. அனைவருக்கும் அங்கே சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்து நாம் விடுதிக்கு செல்வது என நல்லது என கூறினார். இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். வாகனத்தில் வாகன ஓட்டி காத்துக்கொண்டிருந்தான். விடுதியை அடைந்தனர். சின்னச்சாமி நிம்மதியாய் உணர்ந்தார்.

''உலகம் எவ்வளவு மாறிவிட்டது, இப்படி பழமையிலே ஊறிப்போய் ஒருவரையொருவர் எப்படி வெட்டிக்கொண்டு வாழ்கிறார்கள்''

''வாழ்கிறார்களா? சாகிறார்களா? ம்ம் நீயும் தான் முதலாம் பானிபட் போர், இரண்டாம் பானிபட் போர் இன்னும் சொல்லித்தந்து கொண்டிருக்கிறாய், போரினால் ஏற்பட்ட விளைவுகளைச் சொல்லி இனிமேல் போர் என்பதே நடக்கக்கூடாது என எந்த வரலாறு புத்தகமாவதுச் சொல்லித் தருகிறதா? இந்த மனிதர்கள் எப்பொழுது மூன்றாவது உலகப்போர் வரும் என விஷ விதைகளை தூவிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் போரினால் படும் அவலநிலைகள் என ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான், இலங்கை என நாடுகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம், விவிட் சொன்னதுபோல் மனிதம் அற்றவர்களாக நாம் தான் இருக்கிறோம், பழங்காலத்தில் நடந்தது இன்று அதிக அளவில் தொடர்ந்து நடைபெறுகிறது என்பதை நீயும் நானும் மறுக்க முடியுமா''

''தேன்நிலவுக்குத்தான் வந்தோம் ஆனால் இப்படி கொடூரமான வாழ்க்கை முறையை கண்டதும் இனிவரும் சந்ததியினர் பற்றி அச்சமாக இருக்கிறது''

''அன்பை போதிக்கும் முறை அழிந்து போய்விடுமோ என அச்சமாகவும் இருக்கிறது, அதே மனிதர்களிடம் நான் எப்படி நடுங்கிக்கொண்டே இருந்தேன் தெரியுமா, ஒன்று பேசுவதற்குள் ஒன்றாக நின்றுகொண்டே வாளினை எடுக்கிறார்கள், எதிரெதிர் நின்று கொள்கிறார்கள் பார்க்கவே உயிர் பறந்து போய்விடும் போலிருக்கிறது''

''பெரு நாட்டிற்குச் செல்ல வேண்டுமா''

''செல்லத்தான் வேண்டும்''

எகிப்தில் சிலநாட்கள் இருந்து பிரமிடுகள், கோவில்கள் எல்லாம் பார்த்தார்கள். நைல்நதியின் ஓரத்தில் செல்லவே அச்சமாக இருந்தது. ஆனால் பெரு செல்லும் நாளன்று வாகன ஓட்டியை விவிட் இருக்கும் பகுதிக்கு வாகனம் செலுத்தச் சொன்னாள். அங்கே அதே இடத்தில் சில குடிசைகள் முளைத்திருந்தன. பெரிய அழிவு நடந்ததிற்கான ஆதாரமே இல்லாது போன்று இருந்தது. ஒரு சுவடும் தெரியாமல் அழித்துவிட்டார்களே, ஆனால் என்றோ நடந்த போர்கால சரித்திரங்களை மட்டும் இன்னும் பாதாள அறையில் பாதுகாத்து வருவது ஏனோ என எண்ணிக்கொண்டே இருக்க விமானநிலையம் வந்து அடைந்தார்கள். வேதநூல்களும், நூலக நூல்களும் வைத்திருப்பதை நினைக்கையில் அகிலாவுக்கு மனம் என்னவோ செய்தது.

பெரு நாட்டினை அடைந்தார்கள். தென் அமெரிக்க நாடுகள் பெரும்பாலும் ஸ்பெயின் ஆதிக்கத்தில் இருந்தவை. பெரு நாட்டினை அடைந்ததும் கோவில்கள் தென்பட்டன. அனைவரு்ம் புன்னகை புரிந்தார்கள். என்ன உதவி வேண்டும் என தேடி வந்து கேட்டார்கள். வணங்கினார்கள். அகிலா ஆச்சரியம் அடைந்தாள்.
விடுதியை அடைந்தபோது விடுதியில் இருந்தவர்களும் மிகவும் அன்போடு உபசரித்தார்கள்.

சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு ஒரு கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே இருந்தவர் பல உலக ரகசியங்கள் இங்கே புதைந்து இருப்பதாக சொன்னார். இந்தியாவுக்கும் பெருவுக்கும் பெரிய தொடர்பு இருப்பதாக கூறினார். கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. மாயன்கள் அஜ்டெக்குகள் பற்றி சொன்னார். அவர் சொல்ல சொல்ல ஆர்வமாக கேட்கத் தொடங்கினார்கள்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 8

இருவரும் ஒருவழியாய் விடுதியை அடைந்தார்கள். பிரமை பிடித்தது போல் இருந்தது. இனிமேல் இப்படி ஒரு தவறை செய்யக் கூடாது என சின்னசாமி எச்சரிக்கை செய்தார்.

''விவிட் அம்மா இறக்கும்போது இந்தியா இந்தியா என சொன்னார்களே''

''இப்ப என்ன வேணும் உனக்கு, இப்பதான் உயிர் தப்பிச்சி வந்திருக்கோம்''

''விவிடோட அப்பா எங்க இருக்காருனு சொல்லலையே''

''இப்ப என்ன வேணும் உனக்கு''

''நாளைக்கு அந்த இடத்துக்கு நாம போகனும்''

''உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அகிலா''

''போய்த்தான் ஆகனும்''

''பெரு நாட்டுக்கு கூட போக வேண்டாம், நாளைக்கே நாம இந்தியா போவோம்''

''நீங்க போங்க நான் வரலை''

''இங்க இருந்து என்ன பண்ண போற, நானே பயத்துல செத்துகிட்டு இருக்கேன்''

''பயம் தற்காப்புனு என்ன என்னமோ சொன்னீங்க''

''நீ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிட்ட''

''பொக்கிசங்கள் பாக்கனும்''

''தீயில போட்டு பொசுக்கப் போறான்''

அகிலா பிடிவாதம் பிடித்தாள். சின்னசாமி கோபம் அடைந்தார். ஆனால் அகிலா விடாமல் அடம்பிடித்தாள். இரவெல்லாம் யோசித்தார் சின்னசாமி. காலை முதல் வேலையாய் விடுதியை காலி பண்ணும் திட்டத்துடன் உறங்கினார். ஆனால் அகிலா வேறு திட்டம் வைத்து இருந்தாள். காலையில் எழுந்ததும் அகிலா தனது விருப்பபடியே நடக்க வேண்டும் என கூறினாள். ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சின்னசாமிக்கு. சாவது என முடிவாகிவிட்டது என மெத்தையில் பொத்தென விழுந்தார் சின்னசாமி. அகிலா அவசரப்படுத்தினாள்.

வாகன ஓட்டி யாரும் வர மறுத்தார்கள். பெரும் சேதம் நடந்து இருப்பதாகவும் அந்த இடத்துக்கு செல்வது ஆபத்து எனவும் கூறினார்கள்.

''காவல் துறை எதுவும் செய்வதில்லையா''

''அப்பகுதியில் வாழும் மக்களிடம் யாரும் தொடர்பு வைத்து கொள்வதில்லை. இது போன்று இவர்களுடன் சேர்த்து மொத்தம் மூன்று கூட்டமைப்பு இருக்கிறது. அது அவர்களின் தனி பிரதேசம். இம்முறை பெரிய சேதம் நடந்துவிட்டதாகத்தான் தெரிகிறது. நைல் நதியை ரத்த நதியாக்கும் கூட்டங்கள். இந்நேரம் மற்ற இரு கூட்டங்களும் அங்கே வந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது''

''சற்று தொலைவில் எங்களை விட்டு விட்டு வாருங்கள்''

சின்னசாமி மிகவும் எரிச்சல் அடைந்தார்.

''அதான் வரமாட்டோம்னு சொல்றாங்கள இனி உன் பாடு''

''...''

ஒரு வாகன ஓட்டி சம்மதம் சொன்னார். சற்று தொலைவில் இறக்கிவிடுவதாக அழைத்துச் சென்றார். அகிலா வற்புறுத்தவே சற்று அருகிலேயே கொண்டு நிறுத்தினார்.

''காத்திருக்க முடியுமா''

''என்னை யாராவது தாக்காமல் இருந்தால் இங்கேயே இருப்பேன்''

சின்னசாமி திட்டிக்கொண்டே நடந்தார். அகிலா அப்பகுதியை அடைந்தாள். மக்கள் நடமாட்டம் இருந்தது. இடம் சுத்தமாக்கப்பட்டு இருந்தது. அருகில் நடந்து சென்றபோது இவர்களை நோக்கி ஒருவன் ஓடிவந்தான். சின்னசாமி தைரியம் வரவழைத்துக் கொண்டார். விவிட் அவன் பின்னால் ஓடி வந்தான். ஓடி வந்தவன் திரும்பி பார்த்து நின்றான். விவிட் அகிலாவிடம் கேட்டான்.

''இப்போ எதற்கு இங்கே வந்தீர்கள்''

''பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''...''

''என்ன நடக்கிறது இங்கே''

''எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது''

''நேற்றுதானே அமங்கலம் நடந்தது''

''நேற்று இன்றைய கணக்கில் வருவதில்லை''

''இவர்கள் எல்லாம் யார்''

''எங்கள் உறவினர்கள்''

''நேற்று நடந்தது பற்றி கவலை இல்லையா''

''பழையதை பற்றி பேச வேண்டாம்''

''அப்படியெனில் எதற்கு பொக்கிசங்கள் காக்கப்படுகிறது''

விவிட் திணறினான்.

''நீ சிந்து பெண்ணல்லவா அதுதான் இப்படி பேசுகிறாய்''

''நாங்கள் பெரு நாட்டுக்கு செல்ல வேண்டி இருக்கிறது, பொக்கிசங்கள் பார்க்க வேண்டும்''

''சரி வாருங்கள்''

விவிட் அகிலாவையும் சின்னசாமியையும் பற்றி சொன்னான். ஒருவன் வாளை எடுத்தான். மற்றொருவனும் வாளை எடுத்தான். விவிட் கத்தினான். இரண்டு கூட்டமும் தனித்தனியாய் வேக வேகமாக நின்றது.

''என்னை பார்க்க வந்து இருக்கிறார்கள், விடுங்கள்''

அகிலாவுக்கு சுய நினைவில் இருப்பது போன்று எதுவும் தெரியவில்லை. சின்னசாமி முகம் வெளிறிப் போனது. சின்னசாமியின் கைகளைப் பிடித்தாள் அகிலா.

''அப்பவே சொன்னேன் கேட்டியா, சாமி வந்தது போல குதிச்ச''

''...''

பாதாள அறைக்குள் நுழைந்தார்கள். இருவரின் முகம் ஆச்சரியத்தில் அப்படியே கண்களை நிலை குத்தி நிற்க வைத்தது.

''இவை எல்லாம் சிந்து பகுதியையும் அதன் அருகில் இருக்கும் பகுதியையும் சார்ந்ததுதான், இதுதான் அலெக்சாண்டர் தந்த கேடயம்''

''உங்கள் தந்தை எங்கே''

''சிந்து பகுதிக்கு சென்று இருக்கிறார் அவர் வர ஒரு வருட காலம் ஆகும்''

''இவை வேத நூல்கள் அல்லவா''

''ஆம் எனது தந்தை மொழி பெயர்த்து எழுதியது அதோ அங்கே இருக்கிறது''

''மரண செய்தி கேட்டால் அவரின் நிலை''

''அதற்கெல்லாம் கவலைப்படமாட்டார்''

''நீங்கள் மானிட பிறவிகள் தானா''

''நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''வேத நூல்கள் வைத்து இருக்கீர்கள் ஆனால் மனிதம் அற்றவர்கள் என சொல்கிறீர்கள்''

''ஆம் மனிதம் அற்றவர்கள் நாங்கள்''

''வேதம் படித்தவர்களுக்கு நீங்கள் செய்வது இழுக்கு அல்லவா''

''மேலே வாளுடன் இருக்கிறார்கள் அவர்களிடம் சொல்லுங்கள்''

''என்ன பைத்தியகாரத்தனம் இது''

''இந்த சமவெளியில் நாங்கள் நன்றாகத்தான் இருந்தோம் எங்களிடம் துவேசத்தை நிரப்பினார்கள். நாகரிகம் வளர்த்த எங்களை மனிதம் அற்றவர்கள் ஆக்கியவர்கள் வேதம் என வேசம் போடுகிறார்கள்''

''புரியவில்லை''

''கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைகிறார்கள்''

''ஒரு சமுதாயமே அழிந்ததன் காரணம் நீங்கள்''

''ஒரு சமுதாயம் மட்டும் தான் அழிந்ததை பார்த்தீர்கள், மொத்த சமுதாயத்தையும் வேதம் பெயர் சொல்லி அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்''

''நீங்கள் பேசுவது தன்னையே அழித்துக்கொண்டு பிறரை குற்றம் சாட்டுவது போல இருக்கிறது''

''இதைப் பாருங்கள்''

அகிலா அதிர்ச்சியில் உறைந்து போனாள். சின்னசாமி சின்னாபின்னமாகிப் போனார்.

''இது ரோமப் பேரரசு. இது கிரேக்கப் பேரரசு. கிரேக்கன் காட்டிய கடவுளையெல்லாம் ரோமன் பெயர் மாற்றி காட்டினான் எங்கு பார்த்தாலும் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றனர் இவையெல்லாம் ரத்தம் தோய்ந்த ஆடைகள்''

''...''

''இதோ வாளுடன் புறப்பட்ட மனிதமே அற்றவர்கள், தலையை சீவினார்கள். உங்கள் சிந்து பகுதியில் எடுத்தது''

''...''

''அடுத்தவர்களை வெட்டிக் கொல்வதிலே மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்ட கூட்டம் அதுதான் சொல்கிறேன் நாங்கள் மனிதம் அற்றவர்கள்''

''இப்பொழுது மாறிவிட்டது அல்லவா''

''ஆம் வாளுக்கு பதில் வான வேடிக்கை நடக்கிறது நாங்கள் வாளுடன் மட்டுமே இருக்கின்றோம்''

''மனிதம் வளர்க்கலாம் அல்லவா''

''என் தந்தை சொல்வார். நிறம் பார்த்து வெட்டிக் கொல்லும்் கூட்டம் இருக்கிறதாம். இனம் வேறுபாடு பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நிலை பார்த்து வெட்டிக் கொல்லும் கூட்டம் இருக்கிறதாம். நாங்கள் அழிய வேண்டும் என வெட்டிக் கொள்பவர்கள்''

''சிந்து பகுதிக்கு ஏன் சென்று இருக்கிறார்''

''ரத்தம் தோய்ந்த ஆடைகள் எடுக்க''

''...''

''பொக்கிசங்கள் பார்த்தாகிவிட்டதா''

''பார்க்க சகிக்கவில்லை''

''வேத நூல்களிலும் ரத்தம் படிந்து இருக்கிறது பாருங்கள்''

''துடைத்து தூய்மையாக்குங்கள்''

''எழுத்துக்கள் சேர்ந்து அழிந்து போகும்''

அகிலாவும் சின்னசாமியும் மேலே வந்தார்கள். பெண் தயாராக இருந்தார். விவிட் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டான். பாதாள அறைக்கு மேல், வீட்டினை உடனே எழுப்பினார்கள். குடிசையாய் தான் வெளியில் தெரிந்தது. உள்ளே குகையாய் அமைத்தார்கள். அகிலா அசையாமல் நின்று கொண்டிருந்தாள். சின்னசாமி மனிதம் பற்றி யோசிக்கலானார்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 7

சப்தம் கேட்டதும் பாதள அறையிலிருந்து பிரம்ட் மேல் தளத்துக்கு வந்தான். மற்ற இருவரும் பயத்துடன் பிரம்ட் ஐ பார்த்தார்கள்.

''என்ன ஆனது''

வாகனம் எரிந்து கொண்டிருப்பதை பிரம்டுக்கு காட்டினார்கள். கிரக் மிகவும் ஆத்திரம் கொண்டவனாக காணப்பட்டான். இவன் இரண்டாமவன். சொபிட் தனது கையில் போட்டிருந்த துணியை அவிழ்த்து மருந்து வைத்து எதுவும் நடக்காதது போல அமர்ந்து இருந்தான்.

''எல்லாம் இவனால் வந்தது''

மிக்கட் சொபிட்டை நோக்கிச் சொன்னான். கிரக் ஒரே பாய்ச்சலாக ஓடி சொபிட்டை உதைப்பதற்கு காலை தூக்கினான். சொபிட் இதை எதிர்பார்த்தவன் போல கிரக் காலினை பிடித்து சுழற்றிவிட்டான். கிரக் எதிர்பாராவிதமாய் கீழே விழுந்தான். இச்செயலை பார்த்த பிரம்ட் கத்தினான்.

''நாம் அழியப் போகிறோம்''

''பாதாள அறைக்குள் ஒளிந்து கொள்ளலாம்''

கிரக் எழுந்தவன் சொபிட்டை முறைத்தப்படியே பாதாள அறைக்குள் நுழைந்தான். பாதாள அறையை உள்புறமாக பூட்டினான் பிரம்ட். பிரம்ட் சொன்னான். மிக்கட் மட்டுமே பதில் பேசினான்.

''அனைவரும் நமது உறவுக்காரர்கள்''

''இனி உறவு கொண்டாட முடியாது''

''வாகனம் எரித்தவர்கள் நம்மை எரிக்காமல் விடமாட்டார்கள்''

''நாம் சில காலங்கள் கழித்து திரும்பியிருக்க வேண்டும்''

பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டின் கதவு நொறுங்கும் சத்தம் கேட்டது. அறையெல்லாம் தேடினார்கள்.

''பாதாள அறைக்குள் இருப்பார்கள், கல் கதவை உடைத்து நொறுக்குங்கள்''

''இது முறையல்ல என அப்பொழுதிருந்தே நாங்கள் சொல்லி வருகிறோம் நீங்கள் நடந்து கொள்வது முறையில்லை''

சொன்னவரை முறைத்தார் அவர். பிரம்ட் ஒரு முடிவுடன் பாதாள அறையை விட்டு வெளியே வந்தான். பிரம்ட் ஐ கண்டதும் ஒருவன் வாளால் வெட்டப் பொனான். அவனை தடுத்து நிறுத்தியவர் பிரம்ட்டிடம் கேட்டார்.

''சொபிட் எங்கே, அவனை எங்களிடம் விட்டுவிட்டு நீ செல்லலாம்''

அதற்குள் பாதாள அறைக்குள் சிலர் இறங்காமலே குதித்தார்கள். வெளிச்சம் ஏற்ற உதவிய தீ அதி வேகமாக எரிந்தது. பிரம்ட் அப்படியே நின்றான். சொபிட் வெளியே இழுத்து வரப்பட்டான். பிரம்ட் பாதாள அறையை மூடச் சொன்னான். பாதாள அறைக்குள் சென்று வந்தவன் சொன்னான்.

''மரியாவையும் விவிட்டையும் காணவில்லை''

''அவர்களை விடு, இவன் தானே கையை வெட்டினான்''

சொபிட்டை ஓங்கி ஒரு அறை விட்டார். ஒருவன் உதைத்தான். சொபிட் கீழே விழுந்தான். பிரம்ட் கெஞ்சினான்.

''எங்களை விட்டு விடுங்கள் இனிமேல் நாங்கள் இப்பகுதிக்கு வரமட்டோம்''

''இப்படித்தான் உனது குடும்பம் ஒவ்வொரு முறையும் ஏதாவது செய்து தப்பித்து விடுகிறது. இம்முறை அது சாத்தியமில்லை''

''சொபிட் மட்டுமே குற்றவாளி மற்றவர்களை விட்டுவிடுவோம்''

''சொன்னது யார்''

''நானே சொன்னேன்''

''அப்படியென்றால் அவர்களுக்காக நீ மரணமடைய தயாரா உனது கூட்டம் இன்னமும் இவனுக்கு உதவியாக ஏன் பேசுகிறது முதலில் உங்களை வெட்ட வேண்டும்''

சலசலப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் ஆரம்பித்தது. ஒருவருக்கொருவர் சண்டையிட தொடங்கினார்கள். பிரம்ட் வாளினை எடுத்தான். கிரக்கும் மிக்கடும் வாளினை எடுத்தார்கள். சொபிட் அறையில் தீயை வைத்தான். இரு பிரிவுகளாக பெரும் சண்டை நடந்தது. வீட்டினில் தீ பரவிடவே வெளியே வந்தார்கள். வாகனம் எரிவதை பார்த்து விட்ட வந்த அந்த பகுதி மக்கள் எல்லாம் குவிந்தார்கள். குழந்தைகள் கதறின. பெண்கள் வாளினை எடுத்தார்கள். நிலவு வெளிச்சமும் தீ வெளிச்சமும் போதவில்லை.

பிரம்ட் பல நபர்களை வெட்டினான். சற்று நேரத்திற்கெல்லாம் பெரும் சேதம் நடந்தது. அனைவருமே கீழே விழுந்தார்கள். தீ வேகம் வேகமாக பரவியது. அவ்விடத்தை விட்டு தப்பித்தவர்கள் வெகு சிலரே. ஆனால் அதையும் பொறுக்காமல் காயங்களோடு அனைவரையும் வெட்டினான் கிரக். தீ முழுவதும் பரவியது. அந்த இடமே சாம்பலாகியது.

விவிட் பதட்டமடைந்தான். சென்றவர்களை காணவில்லையே என கலக்கமுற்றான். அகிலா கேட்டாள்.

''நடு இரவு தாண்டி விட்டது, இங்கிருந்து எப்படி செல்வது''

''வாகனங்கள் காலையில் வரும், சென்றுவிடலாம், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது''

பயத்துடன் இரவினை கழித்தார்கள். காலையில் வாகனங்கள் தென்பட ஆரம்பித்தன. ஒரு வாகனத்தை பிடித்து தனது பகுதிக்கு விரைந்தான் விவிட்.

அருகே செல்ல செல்ல எரி வாசனை அடித்தது கண்டு வாகன ஓட்டி அச்சமுற்றார். விவிட் ஓட்டச் சொன்னான். மொத்த பகுதியும் எரிந்து சாம்பலாகி கொண்டு இருந்தது. விவிட் ஓ வென அலறினான். மரியா மயக்கமுற்றார். அகிலாவும் சின்னச்சாமியும் பயத்தால் நடுங்கினர். வாகன ஓட்டி அவர்களை இறக்கிவிட்டு பணம் கூட வாங்காமல் வாகனத்தை எடுத்து சென்றார். மரியாவுக்கு மயக்கம் தெளிவித்து அப்படியே அமர்ந்துவிட்டான் விவிட்.

''என்ன கொடுமை இது இப்படி செய்து விட்டார்களே''

''பேசாமல் இரு அகிலா''

விவிட் சொன்னான்.

''நீங்கள் உங்கள் விடுதிக்கு செல்லுங்கள். நாம் வந்த இடத்தை அடைய இரண்டு மணி நேரம் ஆகும், அங்கிருந்து வாகனம் பிடித்து செல்லுங்கள்''

''நீங்கள் வரவில்லையா''

''தீ குழம்புகள் இருக்கின்றன, இதை தாண்டி உள்ளே செல்வது எளிதில்லை. மொத்த வம்சமும் அழிந்துவிட்டது''

மரியா பேச முடியாமல் இந்தியா இந்தியா என சொல்லிக்கொண்டே இறந்து போனார். அகிலாவும் சின்னசாமியும் அடக்கி வைத்திருந்த அழுகையை அடக்கமுடியாமல் கதறினார்கள். விவிட் ஓ என அலறினான். உடனே தாயை தூக்கிக் கொண்டு தீ குழம்புகள் பொருட்படுத்தாது ஓடினான். சின்னஞ்சிறு தீயில் போட்டான். தீயை மூட்டினான். உடல் எரிய தொடங்கியது. அகிலா மயக்கமானாள். சின்னசாமி கதறினார். விவிட மறுபுறம் ஓடினான். கற்கள் எடுத்தான். அதன் மேல் நடந்து தனது வீடு அடைந்தான். எல்லாம் எரிந்து அடங்கியிருந்தது. பாதாள அறையை ஒரு வழியாய் கண்டுபிடித்தான். திறந்து உள்ளே இறங்கினான். எதுவும் எரியாமல் அப்படி அப்படியே எல்லாம் இருந்தது.

அகிலா மயக்கம் தெளிந்தாள். விவிட் கண்ணுக்கு தெரியவில்லை. அங்கேயே அமர்ந்து இருந்தார்கள். விவிட் சிறிது நேரத்திற்கு எல்லாம் வந்தான்.

''பழங்கால பொக்கிசங்கள் எதுவும் சேதம் ஆகவில்லை''

''இவ்வளவு பேர் இறந்து விட்டார்களே, உனக்கு கவலை இல்லையா''

''தானே அழிவை தேடிக் கொண்டவர்கள் பற்றி எனக்கு என்ன கவலை''

''என்ன செய்யப் போகிறாய்''

''ஒரு பெண்ணை மணமுடித்து ஒரு சமுதாயம் இங்கே மீண்டும் உருவாக்கப் போகிறேன், இதுதான் சில ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னால் நடந்தது, பொக்கிசங்கள் காக்கப்படும் நீங்கள் கிளம்புங்கள்''

அகிலாவும் சின்னசாமியும் மெதுவாக பிரமிடுகள் நோக்கி நடந்தார்கள்.

''என்ன பொக்கிசங்கள் பார்க்கலாமா''

''அத்தனை பேரு செத்து கிடக்காங்க பொக்கிசங்கள் பாக்கப் போறியா, நம்மளை தீயில் போடாம விட்டானே''

''பெரு நாட்டுக்கு போக முன்னால இங்க வரனும்''

''ம்ம் தொலையனும்னு ஆசைப்படுற, நம்மால ஒரு சமுதாயமே தொலைஞ்சி போயிருச்சு''

''....''

கவலையில் கரைந்து கொண்டே நடந்தனர்.

(தொடரும்)

அறிவுரைக்கு

''இந்த உலகத்துல எல்லாரும் எப்படி இருக்கனும், எப்படி இருக்கக்கூடாதுனு வரையறை இருக்கானு பார்த்தா இருக்கு, ஆனா இல்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நினைப்பு வைச்சிட்டு வாழ்ந்துட்டு வராங்க, ஆனா எல்லாரும் ஒரே நினைப்பா இருக்காங்களானு பார்த்தா இருக்கு, ஆனா இல்ல. இப்ப நான் கூட இந்த உலகத்திலே இருக்கேனானு கேட்டா, இருக்கேன் ஆனா இல்ல. ம்ம் என் பேச்சை யாரு கேட்கப் போறா, நானும் இப்படி திண்ணையில உட்கார்ந்துட்டு தினமும் என்பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் வர்ரவன் போறவன் எல்லாம் இந்த கிழம் எப்போ போய்ச் சேருமோனு மனசு கூசாம, வாய் கோணாம பேசிட்டே போறான். ம்ம் எப்பத்தான் விடிவு காலம் பொறக்குமோ?''

''தாத்தா பொலம்ப ஆரம்பிச்சாச்சா? இந்தா இந்த கஞ்சியை குடிச்சிட்டு படு''

''எனக்கு எதுவும் வேணாம்டா, பச்சை தண்ணிகூட குடிக்காம பட்டினியா கிடந்தாச்சும் இந்த உசிரை எமன் எடுத்துட்டுப் போவட்டும்''

''தாத்தா சாகறதைப் பத்தியே நினைச்சிட்டு இருக்கியே, வாழனும்னு ஆசை இல்லையா''

''ஏண்டா உன் வயசுல வாழ ஆசை இருக்கும், என் வயசுல சாக ஆசை இருக்கும், கஞ்சியை வச்சிட்டுப் போடா''

''குடிச்சிட்டுப் படு தாத்தா''

''பதினைஞ்சி வயசு ஆகுது, படிக்கிறானாம் படிப்பு. வீட்டுக்கு காவலுக்கு இருக்கிற மாதிரி வெளியே படுக்கையை போட்டுக்கொடுத்துட்டான் இவன் அப்பன், இவ அம்மா கஞ்சி வந்து கொடுத்தா அவ ஆயுசை நா எடுத்துருவேனேன்னு பயம், இந்த கஞ்சியை நா குடிச்சி போற உசிரை பிடிச்சி வைக்கவா''

''கஞ்சி எல்லாம் பலமா இருக்கு?''

''யாரு இது? ரோசாப்பூவா, இந்தாடா எடுத்துக் குடிச்சிட்டுப் போ, பலமா இருக்குனு எதுக்கு பீடிகை போடுற. எப்போ கஞ்சி வைப்பானு பார்த்து அதுல பங்கு போட வந்துருவியே, குடி குடி மிச்சம் வைக்க மனசு இருந்தா வையி, இல்லைன்னா முழுசும் துடைச்சிட்டுப் போ''

''என்னதான் இருந்தாலும் உனக்கு மிச்சம் வைக்காம குடிப்பேனா, ஊறுகாய் வைக்கலையா பொடிப்பைய, ஒரு அப்பளம் வைக்கக்கூடாது''

''ஊறுகாயாவது உன் வீட்டுல இருந்து எடுத்துட்டு வரவேண்டியதுதானே, வக்கனையாப் பேசற''

''நீயே கஞ்சிய குடி, இன்னைக்கு இது வேணாம். என் வீட்டை எதுக்கு ஞாபகப்படுத்துற நீ உசிரோட இருந்தா எனக்கு ஒரு வாய் கிடைக்கும்''

''நீ குடிச்சிட்டுப் போ, இல்லைன்னா உன்னைப் பத்தியே கவலையா இருக்கும்''

''பாவம் இவனுக்கும் தான் நாலைஞ்சு புள்ளைக, இங்க வந்து ஒட்டிட்டுப் போறான், இவனுக்காகத்தான் நா சாகாம இருக்கேனோ என்னவோ''

''என்ன தாத்தா குடிச்சிட்டியா, ரோசாப்பூ தாத்தா குடிச்சாரா''

''ஏண்டா உன் அம்மாவுக்கு தெரியாம எங்க ரெண்டு பேருக்கு ஊத்திட்டு வருவியா''

''அம்மாதான் ஊத்திக்கொடுக்கும், உள்ள வந்து படுத்துக்கோ தாத்தா''

''திண்ணைதாண்டா எனக்கு லாயக்கு ஓயாம இப்படி சொல்லாதே''

''உன்னை ஒதுக்கி வைச்சிருக்கோம்னு ஓயாம நினைக்காதே தாத்தா''

''இந்த இருட்டு மட்டும் இல்லாமலிருந்தா இன்னும் என்ன என்னமோ பேசிட்டே இருக்கலாம், இனி எவனும் இந்த பாதை பக்கம் நடக்கமாட்டான். இனி நான் பேசறதை நானே தான் கேட்டுக்கனும் வயசாயிட்டா வாழ்க்கையே இல்லைனு ஆகுறமாதிரில நினைக்கிறானுக. நானும் பாரு காலையில தோட்டத்துப்பக்கம் வரவங்க போறவங்ககிட்ட நக்கலு, மதியானம் ஒரு தூக்கம், அப்புறம் சாயந்திரம் புது புது பேச்சுனு சொகுசாத்தானே இருக்கேன். இப்படி வயசு இருக்கறப்ப இருந்து இருந்தா பேரு புகழு இதைப் பத்தியெல்லாம் கவலை வந்துருக்குமா, அது வேணும் இது வேணும் அந்த வீடு வேணும் இந்த வீடு வேணும், அவனை விட நான் முன்னுக்கு வரனும்னு ஓயாம ஓடி இப்போ உட்கார்ந்து பேசறச்சே ஒரு ஜீவன் கஞ்சி குடிச்சிட்டுப் போகுது மத்ததெல்லாம் எப்போ போகும்னு கேட்டுட்டுப் போகுது''

''தாத்தா நா படிக்கனும் நீ பேசறது என் காதை அடைக்குது தூங்கு''

''போடா போ, படி, படி உலகத்துல நீ மட்டும் தான படிக்கிற! படி நாலு விசயம் புலம்பறதுக்காச்சும் படி''

தாத்தா உறங்கினார். திடீரென கொட்டுச் சத்தம் கேட்டது. விழித்தார்.

''தூங்கின எனக்குத்தான் கொட்டு அடிக்கிறானுகளா''

''அப்பா, உங்க நண்பர் ரோசாப்பூ செத்துட்டார்''

''டேய் டேய் என்னடா சொல்ற, ரோசாப்பூ போய்ட்டானா, டேய் எனக்கொரு உதவி செய்டா இன்னும் கொஞ்ச நேரத்தில நானும் செத்துருவேன் என் பொணத்தை தூக்கிப் போடற செலவுல பாதி செலவு செஞ்சி அவ பொணத்தை தூக்கிப் போட்டுருடா இனி இந்த உசிரு தங்காதுடா''

''அப்பா, என்னப்பா பேசறீங்க''

''அதோடமட்டுமில்லைடா, கதை எழுதுறேனு ஒருத்தன் வந்து என் கதையை கேட்டு அதை அப்படியே எழுதியும் வைப்பாண்டா, என்னமோ உலகத்துல இல்லாததை இவன் பாத்துட்டானு, அவன்கிட்ட என் கதையும் சொல்லி அதுல பாதிய ரோசாப்பூ பத்தியும் எழுதச் சொல்லுடா''

''அப்பா.....''

அழுகை விண்ணை முட்டியது. கொட்டு சத்தம் பாதி பாதியாய் பிரிந்து கேட்டது.

முற்றும்.