Friday 12 June 2009

இறைவனும் இறை உணர்வும் - 1

இறைவனும் இறைஉணர்வும் – 1


இத்தொடரைத் தொடங்கிட கடவுள் வாழ்த்து எழுத வேண்டும், ஆனால் இப்பொழுது எந்த இறைவனுக்கு வாழ்த்துச் சொல்லி எழுதுவது? எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இறைவன்கள் எல்லாம் எனக்கு மனிதர்களாகவேத் தெரிகிறார்கள் அல்லது இறைவனே மனிதவடிவில் கடவுளராக வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். மொத்தத்தில் இறைவன் இறைவனாகவே வந்ததாக எனக்கு பாடம் எவருமே நடத்தவில்லை அதாவது அப்படியொரு பாடத்தை நான் இதுவரை கற்றத் துணிந்தது இல்லை என எழுதுவதே மிகச்சரியாக இருக்கும். அசரிரீ என்றெல்லாம் கேள்விபட்டு, மனதில் உள்ளே குரல் ஒலிக்கிறது என்றெல்லாம் சொல்லிவிடும் தருணம் எதுவாக இருப்பினும் இறைவனின் குரல் இதுநாள்வரை நான் கேட்டதே இல்லை. இது இப்படியிருக்க எங்ஙனம் இறைவன் வாழ்த்துத் தொடங்குவது?.

தெய்வப்புலவர் எனப் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய கடவுள் வாழ்த்து போல் எழுதினால் திருவள்ளுவர் சமணர், இந்து என அவர் மீது சமய, மத முலாம் பூசுவது போல் இந்த எழுத்துக்கு ஆகிவிடும், அவரது அரிய கருத்துக்கள் பேச்சுப்போட்டிக்கும், கட்டுரைப்போட்டிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பது போல எனது எழுத்தும் ஆகிவிடும் எனும் அச்சமெல்லாம் எனக்கு இல்லை. என் பெயரைப் பார்த்ததும் வைணவன் என அவரவராக முடிவு கட்டிக்கொள்வார்கள், ஒருவேளை எனது எழுத்துக்களைப் பார்த்து இறைநம்பிக்கை அற்றவன் என முடிவுக்கும் பலர் வரக்கூடும்.


ஒருவருக்கு இறை நம்பிக்கை இருக்கிறதா? இறை நம்பிக்கை இல்லையா? என்பதா நமது வாழ்க்கையில் முக்கியம் என்பது பலருக்குத் தெரியாது என எழுதும்போதே அவரவருக்கு அததது முக்கியமாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுவிட்டேனெனில் மிகச் செளகரியமாக இருக்கும். இதைச் சொல்வதற்குக் காரணம் இறைவன் அவரவர் செளகரியத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டார் என்றால் எவரேனும் மறுப்புத் தெரிவித்து விடுவீர்களோ என எண்ணுவதற்கெல்லாம் இடமே இல்லை. எங்கேயும் இறைவன் இறைவனாக காட்சித் தருவதில்லை, ஆனால் காட்சிப் பொருளாகக் காட்டப்படுகிறார் அது வெற்றிடமாக இருப்பினும் கூட! இறைவன் மேல் அலாதிப் பிரியம் எனக்கு உண்டு. ஆகவே எந்த இறைவனுக்கு வாழ்த்துச் சொல்வது என்பதை ஒரு பொருட்டாக கருதாமல் அனைத்துலகுக்கும் சொந்தமான இறைவனுக்கு ஒரு வாழ்த்து எழுதுவதே முறையாகும்.


இறைவன் வாழ்த்து.


மறைந்திருக்கும் உண்மையே நீயாவாய்

மறைமூலம் வெளிப்படுத்தப்பட்ட உண்மையும் நீயாவாய்

உண்மையாய் இருப்போர்க்கே உண்மையராய்

உம்மையும் எமக்கு அறிவித்தார் இப்பாரினில்

முதலாய் முடிவாய் இருப்பவராய்

இடையில் எம்மை இருந்திடச் செய்தீரோ

புதையலாய் எங்கு புதையுண்டீர்

தடையின்றி உள்ளத்தில் இருப்பீராம் அறிவித்தார்

ஆக்கிட அழித்திட முடியாது

அணுவின் சிறப்பைப் போல நீயிருப்பாய்

நீக்கமற நிறைந்திருக்கும் சிந்தையே

பணிவுடன் யாம் வாழ்த்துவோம் உம்மை.


உண்மையாய் இருப்போர்க்கே உண்மையினைப் பற்றித் தெரிய வாய்ப்புண்டு. அதாவது உண்மை என நம்பிக்கைக் கொண்டோர்க்கு என அர்த்தப்படுத்திக் கொள்வதேச் சாலச் சிறந்தது. மனிதர்களாகிய ஞானிகள் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் பொருட்டு தாங்கள் அறிந்தவற்றை பேசியதன் மூலம் இறைவனை வெளிக்கொண்டு வர முயற்சித்தார்கள். பின்னர் எழுத்துக்கள் மூலம் எழுதி இறைவனை உலகுக்கு அறிமுகம் செய்தார்கள். இறைவன் அவரவருக்கு மட்டுமேத் தெரிந்த உண்மையாக இருப்பதாகக் காட்டப்பட்டது. அனைவருக்கும் தெரிந்த உண்மையாக இறைவனைக் கொண்டுவர வேண்டுமென எழுதப்பட்டதுதான் மறை நூல்கள்.


இந்த மறை நூல்கள் மறைந்திருக்கும் உண்மையை வெளிச்சொல்ல வந்ததேயெனினும் இறைவன் இரகசியமானவனாகவே இருந்து வருகிறான், இல்லையெனில் இறைவன் மறுப்புக்கொள்கை ஒன்று தோன்றியிருக்கவே இருக்காது, மேலும் ஒரு இறைவனைச் சொல்ல பல வேதங்கள், மதக் குருமார்கள், ஞானிகள் என அவசியமே இருந்திருக்காது. எல்லா மக்களும் இறைவன் என நிம்மதியாய் இருந்திருப்பார்கள். மனிதர்களுக்கு இறைவனின் அவதாரங்கள், தூதர்கள் என இறைவனை வலியுறுத்திய வசனங்களுக்குத் தேவை ஏற்பட்டிருக்காது. இறைவனை அடைய பல வழிகள் என இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் சரியே என சொற்பொழிவு ஆற்ற வழியின்றிப் போயிருந்திருக்கும். மேலும் இதுபோன்ற காரியங்களால் மட்டுமே இறைவன் தனிமைப்படுத்தப்பட்டு உண்மை அறிவு சாதாரண பார்வைக்கு மறைந்தே இருப்பது போல் தோற்றம் அளிக்கிறது.


அப்படியெனில் இறைவன் யாராக இருக்கக் கூடும்? என்றே கேட்டு வைத்தேன். கொஞ்சம் கூட யோசிக்காமல் எதைப் பற்றியும் சிந்திக்காமல் உடனடியாக பதிலும் வந்து விழுந்தது, இறைவன் யாராகவும் இருக்கக் கூடும். உண்மையிலேயே இறைவன் யாராகவும் இருக்கக் கூடுமோ?!


(தொடரும்)

Thursday 4 June 2009

இறைவனும் இறை உணர்வும்

முன்னுரை:

ஒருநாள் திடீரென என் அன்னையிடம் கேள்வி கேட்க ஆசையாக இருந்தது.

''அம்மா, எங்கே இருக்காரம்மா இறைவன்?''

''இறைவன், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்''

''சகல இடங்களிலும் வியாபித்து இருப்பானாம்மா இறைவன்?''

''ஆமாம்பா, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பான்''

''எனக்கு இறைவனை காட்ட முடியுமாம்மா உங்களால்?''

''உன் எதிரில் நிற்கிறேனப்பா, உன் கண்ணுக்குத் தெரியவில்லையா''

விழிகளில் கண்ணீர் வடியக் கட்டிக்கொண்டேன் என் அன்னையை. என் அன்னையும் ஒருநாள் இறந்து போனார். அழுகை பீறிட்டு வந்தது. இப்பொழுதெல்லாம் எவரிடமும் நான் இறைவன் எங்கே இருக்கிறார் எனக் கேட்பதே இல்லை. இதை எழுதும்போதே எனது கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது.

என் அன்னை, நான் இந்தத் தொடர் எழுதிடும் வண்ணத்தை வானத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டேயிருப்பார் என்கிற அசட்டுத்தனமான நம்பிக்கையுடனும், இத்தொடரை எழுத எழுத என்னிடம் அவர் வந்து ''நல்லா எழுதியிருக்கேடா'' எனச் சொல்லும் குரலையும் கேட்பேன் என்கிற நழுவி விடாத நம்பிக்கையுடனேத் தொடங்குகிறேன்.

மனநிலை பிறழ்வு என அறிவியல் இத்தொடருக்கு விளக்கம் சொன்னாலும் சொல்லும். அதையும் மறுக்காது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இருநிலை மனோபாவம் என அறிவிற் சிறந்தோர்கள் சொல்லக்கூடும், அதையும் ஏற்றுக்கொண்டே இதை எழுதுகிறேன்.

''அம்மா, நீ இதைக் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறாய்?''

என் அன்னை எனக்கு பதில் சொல்லவில்லை, ஆனால் மனதில் ஒரு மூலையில், எனது மூளையின் ஒரு பாகத்தில் ஒரு குரல் சன்னமாக ஒலித்துவிட்டுச் செல்கிறது.

''எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான், எப்பொழுதும் கவனித்துக் கொண்டேதான் இருக்கிறான்''

(தொடரும்)

Friday 8 May 2009

பழங்காலச் சுவடுகள் - அத்தியாயம் 6

கதவு தட்டும் சப்தம் கேட்டதும் சின்னச்சாமி கதவைத் திறந்தார். பிரம்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார். தெரிந்த ஆங்கிலத்தில் பேசினார்.

''உள்ளே வாங்க''''நீங்க இன்னும் தயாராகவில்லையா''
''இதோ கிளம்பிட்டே இருக்கோம், கொஞ்சம் காத்திருக்க முடியுமா''
''சீக்கிரம் வாங்க''

அகிலாவும் சின்னச்சாமியும் தயாரானார்கள். பாஸ்போர்ட் மற்றும் விமான சீட்டு எல்லாம் பத்திரப்படுத்தினார்கள். இராமபிரானை வேண்டிக்கொண்டாள் அகிலா. வாகனத்தில் அமர்ந்து பிரம்ட் இருக்கும் பகுதிக்கு வந்தார்கள். மாலை நேரம் ஆகியிருந்தது. ஒரே சத்தமாக இருந்தது. பிரம்ட் பதட்டமடைந்தான். வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டின் முன் கூட்டமாக இருந்த மனிதர்களை நோக்கி சென்றான்.

''என்ன நடக்குது, ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள்''
மரியா பிரம்ட் நோக்கி வந்தார்.
''என்னை ஏமாற்றியா நீ இந்த திருமணம் செய்ய துணிந்தாய்?''
''யார் சொன்னது"
''இதோ உனது இளவல் தான் சொன்னான், அந்த சிந்து பெண் திருமணம் ஆனவள் எனவும் அந்த மனிதர் அவரது கணவர் எனவும் சொன்னான், ஏன் இப்படி காரியம் பண்ண துணிந்தாய்''

''நீங்கள் நினைப்பது போல எந்த ஒரு பெண்ணும் எங்கள் ஐவரையும் மணக்க சம்மதிக்கப் போவது இல்லை நாங்கள் காலம் காலமாக இப்படியே இருக்க வேண்டியதுதான்''
''நீ தேடாமல் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வரலாம்''
''நான் உங்கள் பேச்சுப்படி நடக்கப் போவது இல்லை''

கூட்டத்தில் இருந்தவர்கள் வாளினை எடுத்தார்கள். பிரம்ட் நோக்கி வந்தார்கள். பிரம்ட் வாகனம் நோக்கி ஓடினான். மரியா பிரம்ட் ஐ விட்டுவிடச் சொன்னார். ஆனால் கூட்டம் அவனை துரத்தியது. மற்ற நான்கு சகோதரர்களும் வாளினை எடுத்துக்கொண்டு அந்த கூட்டத்தை விரட்டினார்கள். ஓடியவர்கள் திரும்பினார்கள். அகிலாவும் சின்னச்சாமியும் அதிர்ச்சி அடைந்தார்கள். வாள் சண்டை நடந்தது. மரியா கூட்டத்தினரை நோக்கி சண்டையை நிறுத்துமாறு சத்தமிட்டார். ஆனால் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பிரம்ட் சண்டை நடக்கும் இடத்திற்கு ஓடி வந்தான்.

''என்னை வாளால் வெட்டுங்கள்''

சண்டையிட்டவர்கள் அப்படியே நின்றார்கள். மரியாவும் அந்த இடத்திற்கு வந்தார். கூட்டமாக அனைவரும் வந்து சேர்ந்தனர். கூட்டத்தினர் மரியாவை மனம் மாறச் சொன்னார்கள். மரியா தான் தனது கணவருக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் இப்படித்தான் என் பிள்ளைகள் இருக்க வேண்டும், அவர்கள் இதை மீறிச் செல்லக்கூடாது என பிடிவாதமாக இருந்தார். சிறிது நேரத்தில் மயக்கமாகி விழுந்தார். அவரைத் தூக்கிக்கொண்டு ஒரு கூட்டம் சென்றது. கூட்டத்தில் இருந்தவர் பிரம்ட் நோக்கி சொன்னார்.

''எல்லாவற்றிற்கும் நீயே காரணம், உன்னை பலியிட்டால் தான் சரியாகும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உங்கள் குடும்பமே விளையாட இருந்தது''
''இது எங்கள் பிரச்சினை, நீங்கள் ஏன் இப்படி தலையிடுகிறீர்கள்''
''இது இந்த பகுதி பிரச்சினை, எங்களுக்கும் உனது தாய்க்கும் நடக்கும் பிரச்சினை, உனது தாயின் ஆசை நிறைவேற்ற இதுபோன்று இங்கிருந்து செய்ய வேண்டாம், ஒரு பொழுது தருகிறோம், இடத்தை காலி பண்ணுங்கள்''

பிரம்ட் விவிட் நோக்கிச் சென்றான். ஏன் இப்படிச் செய்தாய் எனக்கேட்டான். விவிட் சொபிட் பற்றி குறிப்பிட்டான். பிரம்ட்க்கு ஆத்திரமாக வந்தது. அனைவரும் பேசிதானே செய்தோம், அதற்குள் ஏன் இப்படி முடிவு செய்தீர்கள் எனக் கேட்டான். அதற்குள் சொபிட் வாளால் அப்பகுதியைச் சார்ந்த ஒருவன் கையை வெட்டினான். சொபிட்டை விரட்டினார்கள். பிரம்ட் வீட்டுக்குள் சென்று தாயை தூக்கிக்கொண்டு வாகனம் நோக்கி ஓடினான். மற்ற மூவரும் வாகனம் நோக்கி வந்தார்கள். சொபிட் தனியாக விடப்பட்டான், அவனை மட்டுமே கூட்டம் குறி வைத்து ஓடியது. வாகனத்தை விரைவாக எடுத்தான் பிரம்ட். அகிலாவும் சின்னச்சாமியும் பயத்தில் உறைந்து போனார்கள். வாகனம் விடுதி செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றது. சொபிட் தொலைவில் ஓடுவது தெரிந்தது. வாகனத்தை சொபிட் நோக்கி செலுத்தினான் பிரம்ட். வாகனம் அருகில் வந்ததும் சொபிட் தாவி ஏறினான். மற்றவர்கள் வாளை வீசினார்கள். சொபிட் கையை குறிபார்த்தது ஒரு வாள். சொபிட் அலறினான். துணியால் கட்டுப்போட்டார்கள். வாகனத்தை விரைவாக செலுத்தினான் பிரம்ட். வாகனம் பிரமிடுகள் பகுதியை அந்த அந்திமாலையில் அடைந்தது. ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தினான் பிரம்ட். ஐந்து பேரும் தனியாக சென்றார்கள். பிரம்ட் சொன்னான்.

''மடையர்களாக நீங்கள் நடந்து கொண்டீர்கள்''
''தவறு பண்ணிவிட்டோம் மன்னியுங்கள்''
''அத்தனை பொருளும் இழக்க வேண்டியதாகிவிட்டது உங்கள் நடத்தையினால், பாதாள அறையின் சாவி யாரிடம் இருக்கிறது''
''நான் வைத்திருக்கிறேன்''
''சரி இன்று இரவே செல்வோம், பாதாள அறையில் இருக்கும் அந்த பழங்கால பொக்கிஷங்களை பாதுகாக்க வேண்டும்''
''யோசனையில்லாமல் நடந்து கொண்டுவிட்டோம்''
''இனி பேசி பயனில்லை, தாயை குணப்படுத்த ஒரே வழி ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதுதான்''

வாகனத்துக்கு திரும்பினார்கள். அகிலாவையும் சின்னச்சாமியையும் பிரமிடுகளுக்கு அருகில் அமரவைத்தார்கள். மரியாவும் விவிட்டும் உடன் இருந்தார்கள். நால்வரும் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். விவிட் சொன்னான்.
''இதோ இந்த பிரமிடுக்கு முன்னால் நின்றுதான் மாவீரன் அலெக்ஸாண்டர் தனக்கு இதுபோல ஒன்று கட்ட வேண்டும் என சொன்னான்''
''ஏன் இப்படி சண்டை நடந்தது''
''எங்கள் மேல் அந்த பகுதி மக்களுக்கு வெறுப்பு அதிகமாகிவிட்டது, எங்களிடம் பழங்கால பொக்கிஷங்கள் இருக்கிறது, எனது அம்மா பழங்காலத்தில் நடந்த ஒரு மாபெரும் போர் சரித்திரத்தினை கருத்தில் கொண்டு எங்களுக்கு ஒரு பெண்ணை முடித்து வைக்க முடிவெடுத்தார்கள், அதுதான் அவர்களது வெறுப்புக்கு உச்சம்''
''எந்த போர் சரித்திரம்''
''சிந்து நாட்டில் நடந்தது அது''
''இந்தியாவா''''ஆமாம்''
''எப்படி இதெல்லாம் தெரியும்?''
''எங்களிடம் பழங்கால பொக்கிஷங்கள் இருக்கிறது, மாவீரன் அலெக்ஸாண்டர் தனது கேடயத்தை எனது முப்பாட்டனாரிடம் கொடுத்துச் சென்றான்''
''வீட்டில் ஒன்றும் தெரியவில்லையே''
''ஆறு அறைகளுக்கு கீழே பெரிய பாதாள அறை இருக்கிறது, அங்கேதான் நிரப்பி வைத்திருக்கிறோம், ஒழுங்காக அடுக்கப்பட்டு இருக்கிறது வேத சாஸ்திரங்கள் முதற்கொண்டு அங்கே இருக்கிறது. கிரேக்க நாட்டில் பலவருடங்கள் முன்னர் கட்டப்பட்ட நூலகம் ஒன்று அழிந்து போனது, ஆனால் அந்த நூலகத்தில் இருந்த நூல்களின் பிரதிகள் எல்லாம் எங்களிடம் இருக்கிறது''
''எப்படி உங்களுக்கு கிடைத்தது''
''எங்கள் முப்பாட்டனாருக்கு முப்பாட்டனார் முதல் வழிவழியாக வந்தது'' ''உங்கள் தந்தை எங்கே?''

மரியா விழித்துப்பார்த்தார். பிரமிடு பகுதியில் இருப்பதைக் கண்டு பதட்டமடைந்தார். விவிட் நடந்ததை சொன்னான். அகிலாவைப் பார்த்து மரியா வணங்கினார். மன்னிக்குமாறு வேண்டினார். பிரமிடுகளில் காற்று மோதி ஒருவித சப்தத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. விவிட் பழங்கள் எடுத்து அனைவருக்கும் தந்தான். தந்தையை பற்றி எதுவும் பேசாமல் இருந்தான் விவிட். அகிலாவும் சின்னச்சாமியும் தேன்நிலவுதனை நிலவின் வெளிச்சத்தில் அன்று கொண்டாடினார்கள். வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரம்ட் சற்று தள்ளி நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றான். மூவரும் உடன் சென்றார்கள். ஊர் அமைதியாய் இருந்தது. இருளில் நிலவு வெளிச்சம் மட்டுமே இருந்தது. வீடு பாதிப்பு அடையாமல் இருப்பது கண்டான். வீட்டை திறந்து உள்ளே சென்றான். உள்புறமாக பூட்டிவிட்டு பாதாள அறைக்குச் சென்றான். மூவரும் மேல்தளத்தில் இருந்தார்கள். பாதாள அறையில் விளக்கு ஏற்றினான். அனைத்தையும் எப்படி எடுத்துச் செல்வது என புரியாமல் விழித்தான். வெளியில் பெரும் சப்தம் கேட்டது பாதாள அறையில் எதிரொலித்தது.(தொடரும்)