Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday 16 May 2017

ஆட்டுக்கு வளைகாப்பு

ஆடு கர்ப்பமாக இருக்கிறது என அறிந்து பெரு மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் ஓடிச் சென்றேன்.

''அம்மா அம்மா ஆட்டுக்கு வளைகாப்பு பண்ணுவோம்மா''

அம்மா என்னை முறைத்துப் பார்த்தார்கள்.

''ஏன்டா இப்படி இருக்க ஊருல என்ன பேசுவாங்க தெரியுமா''

''ஆட்டோட கர்ப்பத்துக்கு நம்ம தலைவர் வீட்டு கிடாதான் காரணம் அதையும் கூட்டி வரலாம்மா, தயவு செஞ்சி சரினு சொல்லும்மா''

''என் வயித்துல எப்படிடா நீ வந்து பொறந்த, நீயெல்லாம் ஆட்டுக்குப் பொறக்க வேண்டியவன், போயிரு''

அம்மாவின் கோபம் எனக்கு எரிச்சல் தந்தது. அம்மாவுக்குத் தெரியாமல் வளைகாப்பு விழா ஏற்பாடு பண்ண வேண்டும் என திட்டமிட்டு வரும் ஞாயிறு அன்று விழா நடத்த ஒரு சின்ன அரங்கம் பிடித்தேன். ஆட்டிடம் செய்தி சொன்னேன். ஆடு என்ன சொல்றான் இவன் என்பது போல என்னைப் பார்த்தது.

கால்கள் மட்டுமே உள்ள ஆட்டுக்கு கொலுசு போலத்தான் வளையல் போட இயலும் என அறுபது வளையல்கள் அதன் நான்கு கால்களுக்கு அளவெடுத்து வெளியூரில் உள்ள கடையில் சொன்னேன்.

''யாருக்குவே''
.
''ஆட்டுக்குண்ணே''

''புத்தி கெட்டுப் போச்சாலே, அவனவன் பெத்த புள்ளைக்கே வளைகாப்பு செஞ்சி வைக்கமாட்டீங்கா இவனைப் பாருவே, கலிகாலம். சரி சரி கொடுத்துட்டு போ நாலு நாளுல செஞ்சி வைக்கேன்''

''சனிக்கிழமை வேணும்''

''சரிவே, வெள்ளிக்கிழமை வந்து வாங்கிக்கோ''

பூக்கடையில் சென்று நின்றேன். ஆட்டுக்கு மாலை போட்டால் மாலை தரையில் தட்டக்கூடாது. அந்த ஆடு தன்னை வெட்டப் போகிறார்களோ என எண்ணவும் கூடாது என யோசித்தேன்.

''என்ன தம்பி, என்ன வேணும்''

''சந்தனம், குங்குமம் வேணும்''

''வேற''

''ஆட்டுக்கு ஒரு நல்ல மாலை செஞ்சி தாங்க''

''என்ன கிடா வெட்டா''

''இல்லை ஆட்டுக்கு வளைகாப்பு''

''முன்னமே சொல்ல வேண்டிதான தம்பி, தப்பா பேசிட்டேனே, சரி ஆடு எவ்வளவு உயரம்''

எப்போது ஆட்டின் உயரம் அளந்து இருக்கிறேன். கால் அளவு அளந்த எனக்கு ஆட்டின் உயரம் தெரியவில்லை.

''என்னோட தொடை உயரத்துக்கு இருக்கும்ணே''

தான் உட்கார்ந்த இடத்தில் இருந்து எட்டிப்பார்த்தார்.

''இப்பவே கட்டித்தரவா''

''சனிக்கிழமை வேணும்''

அங்கிருந்து நேரடியாக துணிக்கடைக்குப் போனேன். எனக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா அல்லது ஆட்டுக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா என யோசித்தபடி உள்ளே சென்றேன். சந்திரன் அண்ணனை அங்கே பார்ப்பேன் என நினைக்கவில்லை. அவர் கண்ணில் படாமல் ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டேன்.

சந்திரன் அண்ணனுக்கு ஒரே ஒரு மகள் தான். அந்தப் பெண் கூட பக்கத்து ஊர்ப் பையனை காதல் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் முன்னர் ஓடிப்போய்விட்டாள். சில வாரங்கள் கழித்து வந்த அவர்களை இந்த சந்திரன் அண்ணன் வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். அந்தப் பையன் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. என் மாமன் பையன் கணேசன் தான் சற்று தொலைவில் உள்ள பூச்சிக்காட்டில் ஒரு வீடு தந்து அடைக்கலம் தந்து இருக்கிறான். அந்த பெண் கூட மாசமாக இருப்பதாக கணேசன் சொன்னான். நான் பூச்சிக்காடு எல்லாம் போனது இல்லை. இந்த வளைகாப்புக்கு அவனை அழைக்கலாம் என்றால் வேலை காரணமாக டில்லி செல்வதாக போன வாரம் சொல்லி இருந்தான்.

ஆடு கருப்பு நிறம். அதற்கு என்ன நிறம் பொருத்தம் என கடையில் சேலை எடுக்க அமர்ந்தேன். துணியாக எடுத்து தைக்கலாம் என்றாலும் சேலையாக எடுத்தால் நல்லது என எண்ணினேன். நீல நிறத்தில் பச்சை நிறம் கலந்தது. சேலையில் இது முன்புறம் வருவது, ஜாக்கெட் பீஸ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு காட்டிக் கொண்டு இருந்தாள் அந்தப் பெண்.

''சேலை ஆட்டுக்குத்தான்''

''ஆட்டை கல்யாணம் கட்டியிருக்கிகளா''

என்னவொரு சேட்டை அந்தப் பெண்ணுக்கு என நினைத்தேன். அவளது கழுத்தை கவனித்தேன். தாலி ஒன்றும் தட்டுப்படவில்லை. மெல்லிய செயின் ஒன்று போட்டு இருந்தாள்.

''ம்ம்ம் நான் வளர்க்கிற ஆடு அது. கட்டினா உங்களைத்தான் கட்டிக்கிறலாம்னு இருக்கேன்''

''ஆமா காத்துக்கிட்டு இருக்காக''

சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்ததால் அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச்சு கொடுக்கக்கூடாது என சேலையை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். அந்தப் பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. யார் எவர் என பிறகு விசாரிக்க வேண்டும். பக்கத்தில் கிடாவுக்கு ஒரு வேட்டியும் சட்டையும் வாங்கினேன்.

சேலையுடன் தையல்கார கோமதி அக்கா வீட்டுக்கு வந்தேன்.

''ஒரு சத்தியம் பண்ணுக்கா''

''என்னடா வந்ததும் வராததுமா சத்தியம் பண்ண சொல்ற''

''இப்போ ஒரு சேலை கொடுப்பேன் அதை என்னோட ஆட்டுக்கு தைச்சி கொடுக்கணும்''

''நீ லூசுன்றது சரியாத்தான்டா இருக்கு''

பட்டென என்னை லூசு என அந்த அக்கா சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.

''சரிடா சேலையைக் கொடு''

சேலையை வாங்கிப் பார்த்ததும் அக்காவின் முகத்தில் ஏகப்பட்ட ஆச்சரியம்.

''டேய் இது விலை உசந்த பட்டாச்சேடா, கொடுத்து வைச்ச ஆடுதான்''

''ஆட்டோட அளவுக்கு தைச்சிக் கொடுக்கா, யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சொல்லுக்கா''

''போடா ஆட்டுக்கு சேலை தைக்கிறேன்னு சொன்னா யார் என்கிட்டே தைக்க கொடுக்கமாட்டாங்க. யார்ட்டயும் சொல்லலை. இன்னைக்குப் போய் ஆட்டுக்கு அளவு எடுத்துக்கிறேன்''

''அப்படியே இதை கொஞ்சம் வெட்டிக்கொடுக்கா''

''என்னடா இது''

''கிடாவுக்கு சட்டை வேட்டி''

''சரிடா''

''அளவு''

''போடா நான் பாத்துக்கிறேன்''

குங்குமம், சந்தனம் இவற்றை ஆட்டுத் தொழுவத்தில் ஒளித்து வைத்தேன்.

வளைகாப்பு பத்திரிக்கை அடிக்க வேண்டும் என வெள்ளையாபுரம் சென்றேன்.

''யாருக்கு வளைகாப்பு''

''ஆட்டுக்கு''

''ஆடுனு மட்டும் போட்டு இருக்கு, ஆட்டுக்குப் பேரு இல்லையா''

''ஆட்டுக்கு பேரு ஆடுதான், இது ஆடு, கிடா படம்''

நான் எழுதிக் கொடுத்த தாளினை தலையில் அடித்துக் கொண்டார்.

''எவ்வளவு காப்பி வேணும்''

''முன்னூறு, இல்லையில்லை முன்னூற்றி மூணு''

''இந்த ஞாயிற்றுக்கிழமைனு போட்டு இருக்கு, இப்ப வந்து தர, இன்னைக்கு செவ்வாய்க்கிழமை''

''சும்மாதானே இருக்கீங்க''

''எகத்தாளம்''

''வெள்ளிக்கிழமை காலையில வரேன்''

''சரி அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போ''

அங்கேயே ஒரு உணவுக்கடையில் வளைகாப்புக்கு வருபவர்களுக்கு புளிசாதம், தயிர்சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், பருப்பு சாதம் என உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

தலைவரிடம் சென்று விபரத்தைச் சொன்னேன். கலகலவென சிரித்தார்.

''முட்டாப்பய வேலை எல்லாம் நீ செய்ற, சரி வந்து சனிக்கிழமை சாயந்திரம் பத்திட்டுப் போ''

''ஐயா யார்கிட்டயும் வெள்ளிக்கிழமை வரைக்கும் சொல்ல வேணாம்''

''ரகசிய வளைகாப்பா''

''ஊரறிய வளைகாப்பு தான்''

மீண்டும் சிரித்தார்.

எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. சேலையை அட்டகாசமாக கோமதி அக்கா தைத்து இருந்தார். ரவிக்கை கூட தைத்து இருந்தார். வேட்டி சட்டை எல்லாம் எப்படி துல்லியமாக வெட்டினாரோ தெரியவில்லை.

வெள்ளையாபுரம் சென்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கை வாங்கி வந்தேன். அவருக்கே முதல் பத்திரிகை. வளையல்களை வாங்கிக்கொண்டு ஒரு பத்திரிக்கையை அங்கே தந்தேன். நேராக துணிக்கடைக்கு சென்று அந்தப் பெண்ணைத் தேடிப் போய் பத்திரிகை தந்தேன்.

''நிசமாலுமா''

''ம்ம்''

''வராம இருந்துராதீங்க''

''கட்டாயம் வரேன்''

அவளது பெயர் வனிதா. பூச்சிக்காடுதான் சொந்த ஊரு. பெண்ணின் பெற்றோர்கள் விவசாயம் பார்க்கிறார்கள். கணேசனுக்கு தெரிந்த பெண் தான். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வீடு வந்து சேர்ந்தேன்.

''அம்மா இன்னைக்கு எல்லோருக்கும் வளைகாப்பு பத்திரிகை தரனும்''

''உனக்கு அறிவே இல்லையா, என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற, உனக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு ஊரெல்லாம் பேசப் போறாங்க''

அம்மா பத்ரகாளியானார். நான் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன். அப்பா சத்தம் கேட்டு வந்தார்.

''உங்க புள்ள என்ன காரியம் பண்ணி இருக்கு பாருங்க''

எனது கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தார்.

''நல்ல காரியம் பண்ணி இருக்கான். நம்ம பேரைக் கூட போட்டு இருக்கான்''

''உங்க ரெண்டு பேரை என்ன பண்றது''

''நீங்க வர வேண்டாம், நானே பத்திரிகை போய் வைக்கிறேன்''

''அதுதான் முறை''

''என்னங்க முறை கிறைங்கிறீங்க''

''போகட்டும்''

நானாக மட்டும் சென்று ஒவ்வொரு வீடாக பத்திரிக்கை தந்தேன். என்ன நினைத்தார்களோ வரோம்பா என்றார்கள். சந்திரன் அண்ணன் முகத்தில் மட்டும் பெரும் சோகம் நிறைந்து இருந்தது போல எனக்குத் தென்பட்டது.

சனிக்கிழமை அன்று மாலை வாங்கி வந்தேன். அன்று முழுவதும் மிகவும் படபடப்பாக இருந்தது. தலைவர் வீட்டில் சென்று அன்று மாலையில் கிடாவை அழைத்து வந்தேன். நன்றாக ஆடு மற்றும் கிடாவை குளிப்பாட்டினேன். ஆட்டுத் தொழுவத்தில் தான் அன்று உறங்கினேன்.

மறுநாள் காலை ஆட்டிற்கு ரவிக்கை சேலை அணிவித்தேன். கிடாவுக்கு சட்டை வேட்டி அணிவித்தேன். என் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. ஊரெல்லாம் வளைகாப்பு பற்றிய பேச்சாக இருந்தது. வீட்டுக்கு ஒருவர் என பெண்கள் கிளம்பிவிட்டார்கள்.

முதலில் ஆடு, கிடா சற்று மிரண்டது. பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியது. ஆடு என்னைப் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பார்த்தேன். கிடா தன்னை வீரன் என எண்ணிக்கொள்ளத் தொடங்கியது.

வனிதா தனது பெற்றோர்களுடன் வந்து இருந்தாள். என் அப்பா அம்மாவிடம் அவர்களை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் பேசிக்கொள்ள தொடங்கினார்கள். வனிதா என்னுடன் வந்தாள்.

''எவ்வளவு கூட்டம்''

''அன்பை போற்றும் மனிதர்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்காங்க, எதையும் ஒரு தெய்வ நிலையில் பார்க்கும் மனம் அவங்களுக்கு இருக்குங்க''

அம்மாயிதான் முதலில் ஆட்டுக்கு சந்தனம் குங்குமம் வைத்தார். அதன் பின் அப்பத்தா வந்தார். அவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து பெருமிதம் கொண்டார்கள். அம்மாவும் வந்தார்கள். இப்போது என்னவோ அவர்களிடம் பெரும் மகிழ்ச்சி இருப்பது போல தோனியது. என்னிடம் நேராக வந்தார். வனிதா பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

''யாரும் உனக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்கனு நினைச்சேன், என் தப்புதான்''

அம்மா என்னிடம் அப்படி சொல்லிவிட்டு வனிதாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டுப் போனார்.

வனிதாவின் முகத்தில் வெட்கம் கண்டேன்.

ஆடு, குங்குமம் சந்தனம் என தன்னை நிரப்பிக் கொண்டு இருந்ததை பார்த்தபோது ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவே எனக்குத் தென்பட்டது.

எல்லோரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். வந்தவர்களில் ஒருவர் வருமானத்துக்கு வைக்கிற விழானு நினைச்சேன் ஆனா யார்கிட்டயும் காசு கொண்டு வரக்கூடாதுனு சொல்லிட்டியேப்பா என ஆயிரம் ரூபாய் எடுத்துத் தந்தார். வேண்டாம் என மறுத்தாலும் அவர் கேட்பதாக இல்லை. சாப்பாட்டின் சுவையை விழாவின் சிறப்பை பெருமை பேசாதவர்கள் ஊரில் இல்லை.

அன்று இரவு களத்துமேட்டில் அமர்ந்து இருந்தேன். சந்திரன் என்னைத் தேடி வந்தார். வந்தவர் என் கைகளைப் பிடித்தபடி கலங்கி நின்றார்.

''என் கண்ணைத் தொறந்திட்ட தம்பி''

காதல் செய்து ஓடிப்போன சந்திரன் அண்ணன் மகளின் திருமண வரவேற்பு மற்றும் வளைகாப்பு என அதே அரங்கத்தில் ஒரு சேர பத்து நாட்கள் கழித்து வெகு விமரிசையாக நடந்தது.

முற்றும்

Monday 3 April 2017

பத்து ரூபாய்

விருதுநகர் பேருந்து நிலையத்தில் ஊருக்குச் செல்வதற்காக ஆறு மணி பேருந்துக்கு காத்திருந்தேன். எங்கள் ஊருக்குச் செல்லும் நபர்கள் ஆங்காங்கே தென்பட்டார்கள். எப்படியும் கூட்டம் கூடிவிடும். இந்த ஆறு மணி பேருந்தை விட்டுவிட்டால் வரலொட்டியோ மில்லோ சென்று அங்கிருந்து நான்கு மைல்கள் நடந்து போக வேண்டும்.

ஏபிஆர் அவர்களை இன்றுதான் கணக்கு பார்ப்பது சம்பந்தமான வேலை குறித்து சந்தித்துவிட்டு வந்தேன். நாளை வரச் சொன்னார். எங்கள் ஊர் ஆடிட்டர் மாமாதான் இந்த வேலையை எனக்கு ஏற்பாடு செய்து இருந்தார். ஏபிஆர் வியாபார மண்டி என்றால் விருதுநகரைச் சுற்றி இருக்கும் கிராமத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும்.

பேருந்துகள் வருவதும் மக்கள் ஏறிக்கொள்வதும் போவதுமாக இருந்தன. சில பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் வெளியே நின்று போவதாகவும் இருந்தன. இந்த விருதுநகர் என்றால் வியாபாரம், வெயில், ஐந்தாம் திருவிழா, காமராசர் என்றே ஊர் பெருமை பேசும்.

மல்லாங்கிணர் எம் எஸ் பியில் தான் படித்துவிட்டு அருப்புக்கோட்டை எஸ் பி கே கல்லூரியில் அக்கவுன்டசி படித்துவிட்டு உடனே வேலை கிடைக்கும் என்று யாரும் எதிர்ப்பார்க்க முடியாது. ஒரு வருடம் சில இடங்கள் ஏறி இறங்கி ஆடிட்டர் மாமாவிடம் சம்பளமின்றி உதவியாளனாக இருந்தேன். வாய்ப்பு வரப்ப சொல்றேன்பா என்றே சொல்லி சொல்லி மாதங்கள் ஓடிப்போயிருந்தன.

இந்த பேருந்து நிலையத்தைச் சுற்றி இரண்டு தியேட்டர்கள், புரோட்டா கடைகள் மருத்துவமனைகள், மர வியாபாரம் என பல இருக்கிறது. ஏபிஆர் கடையில் இருந்து மர வியாபார கடையைத் தாண்டித்தான் இந்த பேருந்து நிலையத்திற்கு வர முடியும். அப்படி இல்லாது போனால் ரத்னா போட்டோ ஸ்டூடியோ வழியாகவும் வரலாம். எல்லா பேருந்துகளும் நிரம்பி வழியும்.

பேருந்து வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மனிதர்களை சுற்றிப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தேன். என்னை நோக்கி வருவது போல வந்து விலகிச் சென்ற மனிதர்களும் இருந்தார்கள்.

மழை பெய்ய வேண்டும் என வேண்டாத நாளில்லை. பேருந்து நிலையம் எனில் பேருந்துகளின் இரைச்சல் சத்தம் அதுவும் ஒலி  அழைப்பான் சத்தம் எல்லாம் காது கிழியும். அதையும் தாண்டி மனிதர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். பேருந்து நிலையத்தில் கழிவறையும் உண்டு. இதுவரை பல முறை பேருந்து நிலையம் வந்து இருந்தாலும் ஒருநாள் கூட அந்த கழிவறைக்குள் சென்றது இல்லை.

''அப்படி ஓரமா நிக்கிறது'' அடையாளமே தெரியாத ஒருவர் என்னை நோக்கித்தான் சத்தம் போட்டாரா என்று கூட தெரியவில்லை.

''எனக்கு ஒரு உதவி வேனும்''

எனது உயரத்திற்கு என்னைப்போலவே ஒல்லியாக மாநிறத்தில் ஒரு பெண் வந்து என்னிடம் தான் கேட்டாள் . அவளது தோழிகள் எவரேனும் விளையாடுகிறார்களா என சுற்றி பார்த்தேன். எங்கேனும் கேமராக்கள் இருக்கின்றவா என்ற தேடலும் அப்போது இருந்தது.

''பணத்தைத் தொலைச்சிட்டேன் ஒரு பத்து ரூபா தாங்க''

இதே பேருந்து நிலையத்தில் சில தடவை ஊருக்குப் போக காசில்லை என சிலர் ஏமாற்றித் திரிபவர்களை கண்டு இருக்கிறேன். ஆனால் இந்தப் பெண் பார்த்தால் அப்படி தெரியவில்லை. பாம்பு வடிவ போட்டு ஒன்று வைத்து இருந்தாள். இந்த ஸ்டிக்கர் பொட்டு  எல்லாம் எந்த மடையன் கண்டுபிடித்தானோ என்றே நினைத்தேன்.

''இருந்தா கொடுங்க''

பையில் ஐம்பது ரூபாய் இருந்தது. அப்படியே எடுத்து அவளிடம் தந்தேன். பணத்தை வாங்கியவள் ஒரு நிமிஷம்  என ஒரு கடையை நோக்கிப் போனாள். அவள் நீல நிறத்தில் சேலை அணிந்து இருந்தாள் . நான் நீல நிறத்தில் சட்டை அணிந்து இருந்தேன். அப்போதுதான் நீல நிற சேலைகளும் சட்டைகளும் அங்கே நிறைய தென்பட்டன.

பணத்தைத் தந்துவிட்டு அப்படியே நின்று கொண்டிருந்தேன். என்ன நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது என என்னால் கொஞ்சம் கூட யூகிக்க இயலவில்லை. நாற்பது ரூபாய் திருப்பித் தந்தாள்.

''உங்க மொபைல் நம்பர் தாங்க''

கொஞ்சம் கூட யோசிக்காமல் மொபைல் நபரைத் தந்தேன். குறித்து கொண்டவள் நன்றி என்று சொன்னபோது அவளது கண்களில் நிம்மதி இருந்தது.

திருமங்கலம் செல்லும் பேருந்தில் சென்று ஏறிக்கொண்டாள். அவள் என்னைப்  பார்ப்பது போலவே இருந்தது. சிறிது நேரத்தில் எனது மொபைல் போனில் பண உதவிக்கு நன்றி - சபிதா என்று வந்தது.

இவ்வுலகில் ஏமாற்றுக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பது பொய். இப்படித்தான் மதுரை பேருந்து நிலையத்தில் சென்ற வருடம் ஒருமுறை என்னிடம் ஒரு நடுத்தர வயதுமிக்கவர் தம்பி உன் அப்பா எனக்குத் தெரியும் எனக்கு ஒரு ஐம்பது ரூபாய் தா உங்க அப்பாகிட்ட கொடுத்துருறேன் என்றதும் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே பணம் இல்லையினா மூட்டையை வண்டியில் ஏத்தமாட்டாங்க அவ்வளவு பணம் இல்லை கொடு தம்பி என்றதும் மரமண்டைத்தனமாக பணத்தை எடுத்துக் கொடுத்தேன். பெயர் கூட வாங்கி கொள்ளவில்லை. அந்த நிகழ்வை அப்பாவிடம் சொன்னபோது கடுமையாகத் திட்டினார். இரக்கம் இருக்கலாம் ஏமாற மட்டும் கூடாது என அறிவுரை சொன்னார்.

இன்று ஐம்பது ரூபாயை எடுத்துத் தந்தேன். அவள் அப்படியே ஓடிப்போய் இருந்தால் என்ன ஆவது. இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த சமயம் நான் ஊர் செல்லும் பேருந்து எனது ஊருக்கு பேருந்து நிலைய வாயிலை விட்டு கிளம்பிப் போய்க்கொண்டு இருந்தது.

இனி ஓடிப்போய் பிடிக்கவும் முடியாது. ஊருக்கு நடந்துதான் போக வேண்டும். பேராலி ட்ரிப் இன்னைக்கு கட்டாம் அதான் வக்காலி வேமா வந்துட்டுப் போயிட்டான் என ஒருவர் அவரது ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டு இருந்தார். காரியாபட்டி செல்லும்  பேருந்து வந்து நின்றது.

ஓட்டுநரிடம் சென்று வேகமாக செல்ல முடியுமா என கேட்க வேண்டும் போலிருந்தது. சில வேளைகளில் இந்த அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு போகும். எப்படியும் கலெக்சன் பார்க்க வேண்டும் என அவர்களுக்குள் இருக்கும் போட்டியினால் சாலை சீர் கெட்டதுதான் மிச்சம்.

மில்லில் இறங்கி நீர் அற்ற ஓடையை கடந்து வீட்டுக்குப் போனேன். அதற்குள் அவளிடம் இருந்து இன்னொருசெய்தி வந்தது.

'நாளை விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு மாலை ஐந்து மணிக்கு வந்தால் பணத்தைத் திருப்பித் தருகிறேன் - சபிதா ' என்று இருந்தது.

'சரி- சபேசன்' என பதில் அனுப்பினேன்.

அவளது முகமும் பாம்பு பொட்டோடு நினைவுக்கு வந்தது. எங்கள் ஊரில் சிலரது முகமும் பாம்பு பொட்டோடு வந்து போனது. வெள்ளையம்மாள் அக்கா எப்போதும் பாம்பு பொட்டு வைத்திருக்கும். தன்  புருசனோடு  சண்டை போடாதே நாளே இல்லை. ஒருநாள் நான் கூட எதுக்குக்கா இப்படி எப்பப் பார்த்தாலும் மாமா கூட சண்டை போடுற என சொல்லி இருக்கிறேன். அப்போது அதற்கு அந்த கடன்கார மனுசனை பத்தி என்கிட்ட பேசாதே என சீறியதில்  இருந்து நான் கேட்டதே இல்லை.

இந்த குட்டிப்பெண் சுகி கூட பாம்பு பொட்டு  வைத்து இருப்பாள். ஒருமுறை சோழிங்கன் மாமா தொலைக்காத பணத்தை தொலைத்துவிட்டதாக அழுது புலம்பியபோது வீட்டுக்குள் தவறுதலாக வைத்துவிட்டுப் போயிருந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுத்து தந்தாள் சுகி. தொலைப்பது வேறு. ஏமாறுவது வேறு.

எதற்கு இந்த பாம்பு பொட்டு  எல்லாம் வைக்கிறார்கள். பாம்பு எல்லாம் விசுவாசம் கொண்டது இல்லை. இந்த உலகில் எந்த ஒரு உயிரினங்களும் விசுவாசம் கொண்டது இல்லை. எலும்புத் துண்டுக்காக வாலை  ஆட்டும் நாயைத்தான் நன்றியுள்ளது என சொல்லி வருகிறோம்.

''போன காரியம் என்னாச்சுப்பா?''

''நாளைக்கு வர சொல்லி இருக்காருமா''

''இன்னைக்குப் போக வேணாம்னு சொன்னேன் கேட்டியா''

அம்மா சொல்லியும் கேட்காமல் நான் சென்றது சபிதாவை சந்திக்கத்தானா என்பது போலிருந்தது.

''கிடைக்கிற வேலையில் சேர்ந்துரு பிறகு பாத்துக்கலாம், நீயும் எத்தனை நாளு இப்படியே இருப்ப''

''சரிம்மா''

அப்போதுதான் அப்பாவும் வந்து இருந்தார்.

''நான் கல்குறிச்சி அழகர்கிட்ட  சொல்லி இருக்கேன். இங்கே கிடைச்சா பாரு இல்லைன்னா அங்க போ''

அப்பாவும் எனக்காக வேலை தேடிக்கொண்டு இருந்து இருக்கிறார் என சிலர் சொன்னபோது தெரிந்தது. உங்கப்பாரு சொன்னாரு என்றே சொல்லி இருக்கிறார்கள், ஆனால் வேலைதான் தந்தபாடில்லை.


என் அம்மாவும் என் அக்காவும் பாம்பு பொட்டு வைத்துக் கொண்டதே இல்லை. என் அக்கா திருமணம் ஆகிப் போனதுடன் சரி. மீண்டும் பாப்பா பிறந்தபின் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றாள். இந்த மண்ணில் விளையாடிய காலங்களை எல்லாம் மறந்து போய்விட்டாள் என்றுதான் நினைத்தேன்/

ஒருமுறை அக்காவைப் பார்க்கச் சென்றபோது எங்களை எல்லாம் மறந்துட்டியாக்கா என்றே கேட்டு வைத்தேன். நோய்வாய்ப்பட்ட மாமியாரைப் பார்க்க வேண்டும் அதனால் அவரை விட்டு எங்கும் என்னால் வர முடியாது என வளைகாப்பு கூட அங்கேயே வைத்துக் கொண்டாள். அவளது நியாயம் சரியாகத்தான் இருந்தது.

விசுவாசம், தேவைகள் இருப்பின் விசுவாசம். மச்சான் உன் அக்காவை கட்டியது என்னோட அதிர்ஷ்டம் என்பார் மாமா. இதே அக்கா தனிக்குடித்தனம் போக வேண்டும் என அடம்பிடிக்கும் அக்காவாக இருந்தால் என்ன செய்து இருப்பார் என்றே யோசித்தேன். ஆள் வைச்சிக்கிற வேண்டிதானேக்கா என்று சொல்ல நினைத்து சொற்களை விழுங்கி இருக்கிறேன்.

இரவு எல்லாம் சபிதா குறித்தே நினைத்து இருந்தேன். அவள் எதற்கு என்னிடம் வந்து கேட்க வேண்டும். இந்த உலகில் சில விசயங்கள் எதற்காக நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாது போலிருந்தது.

காலையில் எழுந்து மில் வரை நடந்து வந்து பின்னர் விருதுநகர் வந்து ஏபிஆர் அவர்களை சந்தித்தேன். வேலையில் அன்றே சேர்ந்தேன். மனது கொண்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. அப்போதும் சபிதா பற்றியே எண்ணம் இருந்தது. அவளிடம் இருந்து எந்த செய்தியும் வந்து இருக்கவில்லை. இன்று வருவாயா என கேட்க நினைத்து வேண்டாம் என விட்டுவிட்டேன்.

வேலை அத்தனை கடினமான ஒன்றாக இல்லை. அப்போது வந்த ஒருவர் பையன் புதுசா மளமளன்னு வேலையை செய்றாப்ல என சொன்னபோது இன்னும் சந்தோசமாக இருந்தது. மதிய  வேளை  உணவு கருவாடும் தயிர் சாதமும் கொண்டு வந்து இருந்தேன். அங்கேயே சாப்பிட்டேன். எப்போதும் காத்தாடி சுற்றிக்கொண்டே இருந்தது.

அந்த கடைக்கு முன்னால் ஒரு அரச மரம் இருக்கிறது. பிள்ளையார் இல்லாத அரச மரத்தை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் ஊரில் கூட ஒரு அரச மரம் இருக்கிறது. ஆனால் பிள்ளையார் உண்டு.

''இந்தாணே டீ'' சரியாக மூனு  மணிக்கெல்லாம் டீ  மேசைக்கு வந்து சேர்ந்தது. டீ  வைத்த பையனை  ராமர் டீ ஸ்டாலில் வைத்துப் பார்த்து இருக்கிறேன்.

''எப்படிடா இருக்கே''

''புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கியாணே''

''ம்ம் எப்படிடா இருக்கே''

''நல்லா இருக்கேணே''

அங்கே சென்று டீ குடிக்கும்போதெல்லாம் இவன் தான் கொண்டு வந்து தருவான். அவனது சிரித்த முகமும் நன்றாக துவைத்து அயர்ன் போட்ட சட்டை டவுசரும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒருவரை அறிவாக பார்க்கிறோமோ இல்லையோ அழகாக பார்க்க விருப்பம் கொள்கிறோம்.

அங்கே வருபவர்கள் அவனை பெரிய கலெக்டர் உத்தியோகம் பாக்குற டிப்டாப்பா இருக்கே என கேலி பண்ணுவார்கள். இவனும் பதிலுக்கு விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் ஒன்னும் தப்பில்லை சார் என்பான். அவனை அந்த கடையில் பார்க்கும்போது எப்படிடா இருக்கே என்பதுதான் அவனிடம் நான் கேட்கும் கேள்வி. அவன் என்னணே இன்னும் வேலை கிடைக்கலையா என்பான்.

எண்ணெய், சூடு என இருந்தாலும் அவனது வேகம் கண்ணைப் பறிக்கும். எட்டு வரைப் படித்து இருக்கிறான். அவனிடம் படிக்கிறயா என்று கேட்டபோது படிக்க  வசதி இல்லைணே எனும் சொற்களில் என்னை நினைத்துக் கொள்வேன். என் அப்பா அம்மா தோட்ட வேலை காட்டு வேலை என கடினமாக உழைத்து சேர்த்த பணம்இல்லையெனில் நானும் படித்து இருக்க முடியாது.  கொஞ்சம் பணம் இருந்தா தாணே நானே ஒரு கடை போட்டு காட்டுறேன் என்று ஒருமுறை சொன்னான். அப்போதுதான் நான் வேலை தேடும் விசயத்தை  அவனிடம் சொல்லி வைத்தேன்.

இன்னும்  கொஞ்சம் நேரத்தில் பஜ்ஜி, போண்டா என ராமர் டீ ஸ்டால் களைகட்டிவிடும். 

கடை நாலு மணிக்கு எல்லாம் மூடிவிட்டோம். ஏழு மணிக்கு ஆரம்பித்து நாலு மணிக்கு முடியும் வேலை. சரியாக நாலு மணிக்கு வந்து டீ  கிளாஸ் எடுத்துட்டுப் போனான்.

''உனக்கு வேலை கிடைச்சது எனக்கு சந்தோசமா இருக்குணே''

அவனது கண்களில் நிறைய சந்தோசம் இருந்தது. அவனிடம் நான் சம்பாதிச்சு பணம் தரேன் கடை போடுடா என சொல்ல வேண்டும் போலிருந்தது.

''இனி தினமும் உன்னைப் பார்ப்பேன்டா''

''ஆமாணே''

அவனுக்குள் எத்தனை உற்சாகத்தை என்னால் தந்து இருக்க முடிந்து இருக்கிறது. என்னிடம் என்ன தேவையை அவன் எதிர்பார்க்கிறான். நான் சந்தோசமாக இருப்பதைத் தவிர அவனுக்கு வேறு என்ன தேவை என்னிடம் இருக்க இயலும். நான் சம்பாதித்து அவனுக்கு கடை போடும் அளவுக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்பதை ஒன்றும் அவன் அறியாதவன் இல்லை.

அவனுடனே நடந்து போனேன்.

''இருணே, பஜ்ஜி கட்டித் தரேன். அம்மாவுக்கு கொடுணே''

என்னவேண்டுமெனிலும் சொல்லிக்கொள்ளுங்கள் இந்த உலகில் அன்பு போன்ற ஒரு உன்னதமான விசயம் எதுவும் இல்லை.

ஒரு பையில் போட்டு வந்து தந்தான்.

''எவ்வளவுடா?''

''என் கிப்ட்ணே, கொண்டு போணே''

பத்து ரூபாயை வலுக்கட்டாயமாக அவனது கையில் திணித்துவிட்டு நடந்தேன். அவனுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என மனம் நினைத்துக் கொண்டே இருந்தது. யார், எங்கு இருக்கிறான் என்ற எந்த விபரமும் அறியாத ஒருவனிடம் நான் கொண்டு இருக்கும் இந்த அன்பு எனக்கு விளங்கிட முடியாமலே இருந்தது. ஒரு பள்ளிக்குச் செல்லும் பையன் போலவே அந்த கடையில் அவன் எனக்குத் தென்படுவான். பெருமாள் என்றே பெயரை ஒருமுறை சொல்லி இருக்கிறான்.

பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். சபிதா சரியாக ஐந்து மணிக்கு வந்தாள்.

''இந்தாங்க பத்து ரூபாய்''

வாங்கிக்கொள்ள மனம் மறுத்தது.

''என்னை ஏமாத்துக்காரினு  நினைச்சீங்களா, கடன்காரியாக்க வேணாம்''

வாங்கி சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். வெவ்வேறு நிற உடையே அணிந்து இருந்தோம். இன்று அழகாக பொட்டு  வைத்து இருந்தாள். ஸ்டிக்கர் பொட்டு  இல்லை. வரிசையாக அமைந்த வெள்ளைநிறப் பற்கள். ஒரு அழகுப் பொம்மை போலவே தென்பட்டாள்.

''எங்கே வேலை பாக்கிறீங்க?''

நான் இந்த கேள்வியை அவளிடம் எதற்கு கேட்டோம் என்றே இருந்தது. அதற்குள் அவள் லைஸாண்டர் ஹாஸ்பிடல் ரிசெப்ஷனிஸ்ட் என்றாள். சரளமான பேச்சு தெளிவான குரல். நான் இன்னைக்குத்தான் அக்கவுண்ட் செக்சன்ல ஏபிஆர் கடையில் சேர்ந்து இருக்கிறேன் என்றேன்.

''என்கிட்ட எதுக்கு பணம் கேட்டீங்க?''

நானா இந்த கேள்வியை கேட்கிறேன்.

''உங்களை பார்த்தப்போ பணம் கிடைக்கும்னு தோனிச்சி''

''பாம்பு பொட்டு  எதற்கு வைச்சி இருந்தீங்க''

''பிடிச்சி இருந்துச்சி வைச்சி இருந்தேன்''

அவளுடன் நிற்பது பெருமிதமாக இருந்தது. அவளது ஊர் திருமங்கலம் கள்ளிக்குடி என்று சொன்னாள். அதற்குள் மதுரை செல்லும் பேருந்து சில கடந்து போயிருந்தது. எனது ஊர் கீழப்பட்டி என சொல்லி வைத்தேன்.

தினமும் அவளை சந்திக்க வேண்டும் போலிருந்தது.

சபிதா, பெருமாள், சபேசன் என்கிற நிழல் மனிதர்களோடு உண்மை போல எண்ணி அவர்களுடனே தொடர்ந்து வாழ்வதற்கு எவனோ ஒருவன் இந்த உலகில் பிறந்து இருக்கக்கூடும்.

(முற்றும்)






Tuesday 14 February 2017

ஆட்டிற்கும் அன்பிற்கும் நன்றி - முன்னுரை

முன்னுரை 

அசைவம் சாப்பிடுபவர்கள் அன்பு செய்ய தகுதி அற்றவர்கள். 

இதை எழுதியதுதான் எழுதினேன். இது தவறான கருத்து என பல நண்பர்கள், தோழிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தவறான கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என நான் பேசாமல் இருந்து இருக்கலாம், அன்பு என்ற சொல் இல்லையென்றாலும் அருள் அதாவது கருணை என்ற சொல் வடிவம் கொண்டு இருப்பதால் இது வள்ளுவர் சொன்னது என ஒரு குறளை மனதில் நினைத்துக் குறிப்பிட்டுவிட்டேன்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் 

வள்ளுவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அவரவருக்கு எது சௌகரியமோ அதைத்தான் சரியென்று சொல்வார்கள்.

அதைவிட ஒருபடி மேலே போய் இதை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி அதன் அருகில் சென்று அமர்ந்துகொள்ள வேண்டும்  என ஒருவர் சொல்லிவிட்டார். மேலும் ஒருவர் என்னவொரு புத்திகெட்ட வாக்கியம் இது என கேட்டுவிட்டார்.

பல்வேறு கருத்துக்களைக்  கொண்ட மனிதர்கள் எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் சிலர் மென்மையானவர்களாகவும், பலர் வன்மையானவர்களும் என இருக்கிறார்கள். என்னால் இந்த வன்மையானவர்களின் சொற்கள் தரத்தை எல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை.

தனது சிந்தனைக்கு, தனது கருத்துக்கு மாற்று கருத்து சொல்லிவிடக்கூடாது என மிகவும் கடினமான சொற்களை கையாள்கிறார்கள். அவர்களின் தரத்துக்கு நாம் செல்வது என்பது அவசியம் இல்லை. இல்லையனில் அன்பை வலியுறுத்தும் தகுதி நமக்கில்லை என்றாகிறது.

ஆனால் இந்த அசைவம் சாப்பிடுபவர்கள் குறித்து ஏதேனும் கருத்தைச் சொன்னால் உடனே மூளை பலருக்கும் அதீதமாக வேலை செய்து விடுகிறது. இதற்குப் பின்னணி என்னவென்று யோசித்துப் பார்த்தால் சாதீய கருத்து ஒன்று இருக்கிறது என்பது எனது மனதுக்கு தெரியாமல் போய்விட்டது. அன்பு செய், அசைவம் உண்ணாதே என்றால் பார்ப்பனீயத்திற்கு குடை பிடிப்பதாக கருதிக்கொள்ளும் மடத்தனம் எல்லாம் எனக்குப் புரிவதற்கு சில நாட்கள் ஆனது.

அதிலொருவர் சைவம் சாப்பிட்ட ஹிட்லர் ஒரு கொடுங்கோலன், எனவே இந்த வாக்கியம் தவறானது என்கிறார். ஹிட்லரின் ஆணைக்கு கீழ் படிந்த பலரும் மூளை கெட்டுப் போன அசைவக்காரர்கள் என்றெல்லாம் மறுத்துப் பேச எனக்கு விருப்பம் இல்லை. ஹிட்லர் ஆரம்பத்தில் அசைவம் சாப்பிட்டவர் என்பது வேறு வரலாறு.

மனிதர்களை பலியிடுவது எத்தனை கொடுங்குற்றமோ அதைப்போல விலங்குகளை பலியிடுவது கொடுங்குற்றமே 

இப்படியெல்லாம் நான் சொல்வதினால் என்னை விலங்கினப் பிரியன் என்றோ, அசைவம் வெறுக்கும் சைவப் பிரியன், அன்பை வலியுறுத்தும் சமணப் பிரியன் என்றோ நீங்களே கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டாம்.

அன்பு காட்டுபவர்களை வெறுக்கச் செய்வதே பலரது பணி

இந்த அன்பையும், அன்பின் வழி சொன்ன ஆடும் என்னோடு சேர்ந்து உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கும்.





Wednesday 12 October 2016

தேடலும் தரிசனமும் - அகநாழிகை பொன். வாசுதேவன்

மக்கள் பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மரபுகள் இயங்குகின்றன. பண்பாட்டை எடுத்துரைக்கும் பல கூறுகளில் மரபும் ஒரு கூறாகும். 

பழக்க வழக்கம் என்பது தனி மனித செயல் மட்டுமன்று. அது மரபணுக்களின் வழியாக நம் முன்னோர்களின் எச்சமாக நமக்குள் வந்து கொண்டிருப்பது. மனித இனம் எத்தனையோ அறிவியல் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அடிப்படை மனித கூறுகளான குணங்கள் குறைந்து கொண்டே வந்தாலும் அது முற்றிலுமாக தீர்ந்து போய்விடவில்லை. மனித அடிப்படை நற்குணங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் மரபணுக்களின் பங்கு அதிகம்.

 'மாறா மரபு' எந்த இந்த நாவலில் மரபு என்பதைத் திருத்தியும், மாற்றியும் அமைப்பதன் வாயிலாக வளர்ச்சியை, மாற்றத்தை, முன்னேற்றத்தை எய்தலாம் என்ற நம்பிக்கையோடு மருத்துவத்தின் வாயிலாக அதைச் சாதித்துவிட முடியும் என்று நம்புகிற ஆய்வின் மர்ம முடிச்சுகளையொட்டி கதைக் கரு அமைந்துள்ளது.

 'கத்தி மேல் நடப்பது போன்ற சிக்கலான போக்குடைய இந்தக் கதைக் கருவை மிகவும் லாவகமாகவும், சுவாரசியத்துடன் அளித்துள்ளார் எழுத்தாளர் வெ. இராதாகிருஷ்ணன். அவர் ஒரு அறிவியலாளராகவும், சிந்தனையாளராகவும் இருப்பதால் இந்தத் திறன் அவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. 

பொதுவாகவே, இராதாகிருஷ்ணன் எடுத்துக்கொள்கிற எல்லாக் கதைகளின் கருவும், அறிவியலையும், வாழ்வியலையும் இணைத்து அதிலிருந்து எழுகிற கேள்விகளுக்கு விடை காண முற்படுபவையாக இருந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற அடிப்படை மனித மனக் கேள்விகளுக்கான விடை தேடல்களே இராதாகிருஷ்ணனின் எழுத்துகளின் உள்ளாழ்ந்த பொருள். இந்தத் தத்துவத் தேடல்களினூடாக அவர் கண்டடைகின்ற தரிசனங்களை, உள்ளொளியை நாமும் அவரது படைப்புகளை வாசிப்பதன் வாயிலாக உணர்ந்தறிய முடிகிறது. 

தனித்துவமான கதை சொல்லல் பாணி, எழுத எடுத்துக்கொள்கிற பேசு பொருள், உள்ளடக்கம், எளிமையான நடை என எல்லாவிதத்திலும் நம்மை ஈர்க்கின்றன. வெ.இராதாகிருஷ்ணனின் படைப்புகளைத் தொடர்ந்து பதிப்பிக்கிற வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் எழுத்துலகில் அவர் தொடர்ந்து எழுதித் தடம் பதிக்க எனது நல்வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்

பொன்.வாசுதேவன்
அகநாழிகை பதிப்பகம்
pon.vasudevan@gmail.com

------------------

தங்களின் நல்வாழ்த்துகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், நன்றிகளும். நிறைய வாசிப்பு அனுபவமும், எழுத்தாளராக, தினமலரில் உதவி ஆசிரியராக, சட்ட வல்லுநராக இருக்கும் தங்களின் மூலம் எனது எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

Tuesday 2 August 2016

காதலினும் கல்யாணம் பெரிது

காதல் பருவம் எது என்று கேட்டால் காதல் வரும் பருவம் தான் காதல் பருவம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. காதல் எப்படியும் கல்யாணத்தில்தான் சென்று முடிய வேண்டும் என்பதெல்லாம் இல்லை ஆனால் காதல், கல்யாணத்தில் சென்றுதான் முடிய வேண்டும் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

இன்று அலுவலகத்திற்கு  நடந்து செல்லும்போது ஒரு தேநீர் கடையில் நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள் என்ற பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. இதுவரை அப்படி எவரையும் சந்திக்கவே இல்லை என்பதுதான் ஒரு வேதனையாக இருந்தது. வேறு ஒருவரை உற்றுப்பார்த்தல் அநாகரிகமான செயல் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அழகிகள் அழகன்கள் எல்லாம் தெருவில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் உற்றுப்பார்த்தால் நம்மை நோக்கிய அவர்களின் கண்களும், புருவங்களும் சுளுக்கிக்கொள்ளும். அதற்காகவே எதற்கு இந்த வீண் வம்பு என மரம் பார்ப்பதும், செடி பார்ப்பதும், மண் பார்ப்பதும், வானம் பார்ப்பதும் என அவ்வப்போது அவர்களை பார்ப்பதும் என சாலையில் நடக்கும்போது பொழுது போய்க்கொண்டு இருக்கிறது.

திடீரென மேலதிகாரி சுரேஷ் மாயதேவன் அழைத்தார். உள்ளே சென்றதும் அங்கே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு ஒரு யுவதி அமர்ந்து இருந்தாள். என்னோடு வேலை பார்த்தவனின் காலி வேலைக்குத்தான் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என யூகித்துக் கொண்டேன்.

''இவங்கதான் தீபா ராமநாதன், நம்ம அலுவலகத்தில் புதுசா இன்னைக்கு ஜாயின் பண்ணி  இருக்காங்க. உன்னோட புராஜக்ட்லதான் இவங்க ஒர்க் பண்ண இருக்காங்க. உன்னோட அறையில் இருக்கிற பக்கத்து சீட் இவங்களுக்கு அரேஞ் பண்ணி இருக்கு.

தீபா, இவர் தான் தீபக் சொக்கநாதன். இந்த அலுவலகத்துல ரெண்டு வருசமா வேலை பார்க்கிறார். இவரோடதான் உங்க புராஜக்ட் ஒர்க். எல்லாம் இவர் உங்களுக்கு சொல்வார். நீங்க இவர்கிட்ட ரிப்போர்ட் பண்ணினா போதும். அவர் எனக்கு அப்டேட் பண்ணுவார்''

''சரிங்க  சார்''

மழலையின் குரலை விட மங்கையரின் குரலே அழகு என ஒரு திருக்குறள் எதற்கு எழுதவில்லை என தோனியது. திருவள்ளுவர் காதல் எல்லாம் புரிந்து இருக்கமாட்டார், நேராக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்றுதான் இருந்து இருப்பார் என நினைக்கத் தோனியது.

''தீபா இதுதான் உங்க சிஸ்டம், டேபிள் சேர் எல்லாம்''

''சரிங்க தீபக்''

சார் என்று அழைப்பாள் என்று பார்த்தால் நேரடியாக பெயர் கொண்டே அழைத்துவிட்டாள்.

''இந்த அலுவலகம் எல்லாம் சுத்திப் பார்த்துட்டீங்களா?''

''இது ஏன்னா சுற்றுலாத்தளமா, சுற்றிப் பார்க்க''

''எது எது எங்க இருக்குனு தெரிஞ்சிக்கலாமே''

''எல்லாம் சொல்லிட்டாங்க, இருக்கிறதே மூணு புளோர். புராஜக்ட் எதுவரைக்கும் போயிருக்கு''

''பத்து பெர்சென்ட் கூட ஆரம்பிக்கலை, இந்த ப்ரொஜெக்ட் சேன்க்சன் ஆன நேரம் அவன் வேலையை விட்டுட்டுப் போயிட்டான்''

''எதுக்குப்  போனார்?''

''ம்ம் கல்யாணம் பாரின் பொண்ணு, இனி அவன் பாரின் செட்டில்''

''பொறாமையா இருக்கீங்க போல''

இத்தனை சகஜமாக பேசுவாள் என்று எவர் எதிர்பார்த்தது.

''பொறாமைப்பட்டுக்கிட்டாலும், இதுக்கு முன்ன வேற எங்க வேலைப்  பார்த்தீங்க?''

''இதுதான் முதல் வேலை''

''ஒரு பயம் எல்லாம் இல்லையா''

''ஏன் இங்க சிங்கம், புலி, பாம்பு, பல்லி எல்லாம் வேலை செய்யுதா?''

''இல்லை''

அதற்குப் பின்னர் எதுவும் பேசாமல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய கேள்விகள் வேலையைப் பற்றி கேட்டாள். என்னைப் பற்றி, என் குடும்பம் பற்றி எதுவுமே விசாரிக்கவில்லை.

உணவு கொண்டு வந்து இருந்தாள். மத்தியானம் நேராக உணவு உண்ணும் இடத்திற்குச் சென்றாள். வழக்கம்போல வெளியில் உள்ள கடையில்  வாங்கிக்கொண்டு உணவு உண்ணும் இடம் வந்து அமர்ந்தேன். அங்கு சாப்பிட்டுக் கொண்டு  இருக்கும் பதினைந்து நபர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தாள். அலுவலகத்தில் மொத்தம் 19 பேர்தான். பெரிய அலுவலகம் எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்த அலுவலகம் ஆரம்பித்தே ஐந்து வருடங்கள்தான் ஆகிறது. அங்கு இருந்த அனைவருக்குமே கல்யாணம் ஆகி இருந்தது. கழுத்தில் தாலி இல்லை இருந்தாலும் இந்த தீபா பற்றிதான் தெரியவில்லை. சிலர் தம்பதி சமேதரராக வேறு வேலையில் சேர்ந்து இருந்தார்கள். சில காதல் திருமணம், சில பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம். அவர்களை எல்லாம் பார்க்கும்போது சந்தோஷமாகவே இருந்தார்கள்.

''தீபக், உனக்குத் துணைக்கு இதோ தீபா. இன்னும் கல்யாணம் ஆகலை. யாருக்கு முதலில் கல்யாணம் ஆகுதுனுப் பார்ப்போம்''

இந்த தர்மலிங்கத்திற்கு இதுவே வேலை.

''தீபாவுக்குத்தான் முதலில் ஆகும், அவங்கதான் பொண்ணு''

இது சுந்தரமூர்த்தியின் அடுத்த யூகம்.

''என்னோட கல்யாணம் காதல் கல்யாணம் தான். நமக்குப்  பிடிச்ச நம்மைப் பிடிச்சவர் தான் வாழ்க்கைத் துணை அப்போதான் நம்மளப்  பெத்தவங்கள  சந்தோசமா வைச்சிக்கிற முடியும்''

தீபாவின் இந்த வார்த்தைகள் அங்கு இருந்த அனைவரையும் சற்று ஆச்சரியத்துடன் பாராட்ட வைத்தன.

''சூப்பர் தீபா, உங்க மனம் போல பையன் அமைய வாழ்த்துக்கள்''

தர்மலிங்கமும், சுந்தரமூர்த்தியும் ஆசிர்வாதம் செய்தார்கள். அவர்கள்தான் இந்த அலுவலகம் ஆரம்பிக்கும்போது சேர்ந்த மூத்த பணியாளர்கள். மேலதிகாரிக்கு நண்பர்கள் என்று கூட சொல்லிக்கொள்வார்கள்.

ஒரு வருடம் போனதே தெரியவில்லை. புராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தது. இத்தனைக்கும் தீபாவின் கடின உழைப்புதான் காரணம் என்று சொல்ல வேண்டும். தீபாவை மிகவும் பிடித்து இருந்தது. தீபாவின் மனதில் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. மேலதிகாரி என்னை அழைத்து வேறொரு புராஜக்ட் கொடுத்து தீபாவுடன் சேர்ந்து செய்யுமாறு கூறினார். சந்தோசமாக சம்மதம் சொல்லிவிட்டு வந்தேன்.

''அடுத்த புராஜக்ட் கூட நாம ரெண்டு பேரும்  சேர்ந்து பண்ணனும்னு சொல்லி இருக்கார்''

''சக்ஸஸ் கொடுத்தாச்சு, இனிமே எல்லா புராஜக்ட் நாம சேர்ந்துதான் பண்ண வேண்டி இருக்கும்''

''என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?''

''என்ன கேட்டீங்க''

''என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களா?''

அறையில் பெரும் நிசப்தம் நிலவியது. சில நிமிடங்களுக்குப் பின்னர் தீபா பேசினாள்.

''தீபக், பெண்கள் தேவதைகள் அல்ல, ஆணின் தேவைகள் அப்படினு நினைக்கிற கிறுக்கர்கள் இருக்கிற இந்த உலகத்தில நீங்க  நிறையவே வித்தியாசமாத்தான் இருந்தீங்க . இந்த ஒரு வருச  பழக்கத்தில உங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன். உங்களோட அம்மா, அப்பா, அக்கா அப்படினு உங்களோட குடும்பம் உங்களுக்கு எத்தனைப் பெரிசுன்னு புரிய எனக்கு நிறைய நாட்கள் ஆகலை. என்னோட குடும்பத்தைப் பத்தி உங்ககிட்ட  நான் எதுவும் சொன்னது இல்லை.

என்னோட அண்ணன் காதல் கல்யாணம்தான். அண்ணியோட அம்மா அப்பா கல்யாணத்தை ஏத்துக்கலை. எங்க குடும்பம் ஏழைக்குடும்பம் தான் ஒரு காரணம். ஆனா வீட்டுக்கு வந்த அண்ணி ஒரே மாசத்துல என்னை, எங்க அம்மா, அப்பாவை வீட்டைவிட்டு வெளியே போகச் சொல்லிட்டாங்க. நாங்க எந்த பிரச்சினையும் பண்ணாம வேறு வீட்டிற்கு வாடகைக்கு வந்துட்டோம். ஒரு ஆறு மாசம் கழிச்சி அண்ணி தன்னோட தப்பை உணர்ந்து எங்களை கூப்பிட்டாங்க. ஆனா நாங்க போகலை. வாரம் ஒருதரம் அவங்களைப்  பார்க்கிறதோட சரி. அவங்க அம்மா அப்பா கூட அவங்களை மன்னிச்சிட்டு ஏத்துக்கிட்டாங்க. இதுவே என் அண்ணன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணாமலோ அல்லது அந்த பொண்ணு என் அண்ணனை கல்யாணம் பண்ணாமலோ போயிருந்தா இந்த காதல் எல்லாம் பண்ணினது ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆகி இருக்காது.

காதல்னு சுத்திக்கிட்டு இருக்கிறதைவிட இப்படி எதுவுமே காதல் அது இதுனு சொல்லாம தனக்குப் பிடிச்சி இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கறது கூட நல்லா இருக்கு.

இந்த புராஜக்ட் உங்களோட சிந்தனை, முழு உழைப்பு. ஆனா நான்தான் எல்லாம்  பண்ணின மாதிரி ஒரு தோற்றம் நீங்க  உண்டாக்கின போதே உங்களோட மனசில நான் இருக்கேனு தெரிஞ்சிக்கிட்டேன். ஐ லவ் யூனு சொல்ல உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிறப் போகுது.

காதல்னு சொல்லிட்டு அதை கேவலப்படுத்தறதை விட கல்யாணம்னு சொல்லி ஒரு உறவுக்குள்ள உரிமையோட போறது எனக்கு உங்களைப் பார்த்தபிறகுதான், பழகின பிறகுதான் தெரிஞ்சது. முதமுத காதல் கல்யாணம்தான் பண்ணுவேன்னு சொன்னதை கூட மாத்திக்கிட்டேன். ம்ம் நிச்சயம் உங்களை கல்யாணம் பண்ணிக்குவேன், நிறைய காதல் இருக்கு''

நான், அப்பா, அம்மா, அக்கா, மாமா, அக்காவின் குட்டிப்பையன் என தீபாவின் வீட்டிற்குச் சென்றோம்.  தீபாவின் அப்பா மிகவும் தயங்கினார். தீபாவின் அம்மா கூட எங்களால நிறைய செய்ய முடியாது. கல்யாணம் ஆனப்பறம் பிரச்சினை எதுவும் இதனால வந்துரக்கூடாது என்று  சொன்னபோது என் உறுதியோடு என் அம்மாவும் அப்பாவும் அப்படியொரு நிலை வராது என உறுதி அளித்தார்கள். அப்பா அதோடு நில்லாமல் மேலும் தொடர்ந்தார்.

''கல்யாணம் பண்ணுறது பெரிசு இல்லை, இந்த காலத்தில கடைசி வரைக்கும் சேர்ந்து சந்தோசமா வாழுறதுதான் குதிரைக்கொம்பா இருக்கு. கல்யாணம் ஆனபிறகு அவங்களை நாம தொந்தரவு பண்ணக்கூடாதுனு நினைக்கிறாங்க''

''அவங்க விருப்பம் போல இருக்கட்டும்''

கல்யாணத்திற்கான ஏற்பாடு எல்லாம் செய்து தேதி குறித்தாகிவிட்டது.

''தீபக், நம்மளோட என் அம்மா, அப்பா சேர்ந்து உங்க வீட்டுல உங்க அம்மா அப்பாவோட வந்து இருக்கட்டுமா?''

இப்போதைய வீட்டினை விட ஒரு பெரிய வீடு ஒன்று பார்க்க தீபாவுடன் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்.












Wednesday 16 March 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 1

எனது ஊருக்கு மேற்கே காடுகள் அடர்ந்த ஒருபெரிய மலை ஒன்று இருந்தது அந்த மலைக்கு அருகில் எவரும் சொல்லமாட்டார்கள் குறிப்பிட்ட எல்லையுடன் நின்று விட வேண்டும் என்பது ஊர் விதித்த கட்டளையைவிட அவரவர் விதித்துக்கொண்ட கட்டளைதான் எவரையுமே எல்லை தாண்டவிடவில்லை. சிறு வயது முதல் அந்த எல்லையை தாண்டிவிட வேண்டும் எனும் பேராவல் இருந்தது, அதுவும் குறிப்பாக மலை மீது ஏறி மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது எனப் பார்க்கும் துடிப்பானது ற்றும் குறைந்தபாடில்லை. என் மூளைக்கு என்ன பிரச்சினையோ எனக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை. ஒரொன்னா ஒன்பது என்பேன். நன்றாக கையில் அடி வாங்கி இருக்கிறேன். மதிய சாப்பாட்டிற்காக அந்த அடிகளைத் தாங்கிக்கொள்வேன். நிறைய விசயங்கள் நினைவில் இல்லை. மலை குறித்து பலர் பேசியது அங்குமிங்கும் நினைவு இருக்கிறது. பேய் மலை, ஆவி மலை என கதை சொல்வார்கள். எனக்கு அந்ந கதைகளில் இஷ்டம் இல்லை. படிப்பு வராமல் போனதால் பள்ளிக்கு வரக்கூடாது என திட்டினாலும் மதிய உணவு க்காக வெட்கமின்றி போவேன். அதையும் தடுத்தார்கள். ஒருவனிடம் வாங்கித்தரச் சொல்லி திருடி உண்டேன். 

அதுவும் சில வாரங்கள் நின்றுபோனது. வீட்டில் உணவு இருந்தால் இப்படி எதற்கு அலையப்போகிறேன் நான் பிறந்த சில மாதத்தில் நொப்பாவும் நொம்மாவும் நோயில் செத்துப்போனார்கள் நொம்மாவின் தொம்பிதான் என்னை வளர்த்தார். கழுதை எங்கன போய் திங்கட்டும் என எனக்குத் திட்டு விழும் காலை இரவு ஏதேனும் கொஞ்சம் தின்ன கிடைக்கும்படிப்புதான் வரலைல பள்ளிக்கூடம் போகலைல, போய் வேலை பாத்து காசு கொண்டா என மொமா அடித்து விரட்டினார் அன்றிலிருந்து தோட்ட வேலை என போகத் தொடங்கி மதியம் கொஞ்சம் உண்ண கிடைத்தது. தோட்டத்திலேயே பொழுதன்னைக்கும் கிடப்பேன். காலை இரவு நன்றாக சாப்பிட கிடைத்தது. மொமா எனைத் தேடவில்லை காட்டின் தோட்டத்தின் பொள்ளை ஆனேன் எப்படியாவது மலைக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். என்னடே பேசற, பொட்டுல அடிச்சேன் புட்டுக்குறவ ஒழுங்கா கிட என தோட்டத்து நொண்ணன் சொன்னதால் பேசாமல் இருந்துவிட்டேன் எடேய் அந்த மலைக்குப் போனவுக யாருமே உசிரோட திரும்புனது இல்லையாம் என் பாட்டி சொன்னிச்சி என புல் பிடுங்க வர ஒருத்தன் கதை சொன்னான், எடுவட்ட பயலே உன் பொட்டிக்கு யாரு சொன்னதாம் என அவன் தலையில் நங்குனு கொட்டினேன், என் தாத்தா கூட அப்படித்தான் செத்தாராம் என அவன் சொன்னதும் எந்த தொத்தாடா என்றேன் பாட்டியோட அப்பா என்றான் பொட்டியைப் பார்க்கப் போனேன் ஏய் பொட்டி உன் நொப்பா மலைக்குப் போயா செத்தாரு என்றேன் ஆமா என பொட்டி தலையை ஆட்டிச்சி எப்படி எனக் கேட்டேன் எல்லையைத் தாண்டி போனாரு போனவருதான் என பொட்டி அழுதது.

அந்த மலையைப்பற்றி பொட்டி வேறு எதுவும் சொல்ல மறுத்தது. அன்று இரவு எனக்குத் தூக்கமே வரலை. என் தொத்தா பொட்டி எல்லாம் யாரென எனக்குத் தெரியாது. இந்த மாயஜால கதைகள் மாந்த்ரீக கதைகள் எல்லாம் ஒரு ஏமாற்று வித்தைகள் எப்போது இந்த எல்லையைப் போட்டார்கள் என்று கேட்டால் அது எப்பவோ போட்டதுடேஎன்றே சொல்வார்கள். ஒரு பயலுக்கும் அந்த மலையைப்பற்றித் தெரியாது ஆனால் அங்கு போனால் செத்துப்போவாக என்பது மட்டுமே அறிந்து இருந்தார்கள் சாக எவர்தான் ஆசைப்படுவார்கள். அங்கனப்போன செத்த என்பதே பெரும் பயம் தான் எனக்கு உள்ளுக்குள் நமநம எரிச்சல். செத்தாலும் பரவாலை என நினைத்தபடி அந்த மலை மீது எனக்கு ஒரு கண் இருந்தது சீவாத முடி மண் பூசிய சட்டை டவுசர் என திரிந்தேன் மலைப்பக்கம் போக ஆள் சேர்த்தால் அடிக்காத குறைதான் படிப்பு. வந்து இருந்தாலவது நாலு வார்த்தை படிச்சி இருக்கலாம் ஒரு எழுத்து கூட எழுதப்படிக்க மனசே வரலை மறந்து போனது மறந்து போனதுதான் எனக்கு வயசு இப்ப இருக்கும்னு ஒரு நொண்ணனிடம் கேட்டப்ப நீ ஆவணில பொறந்த உனக்கு இப்போ 15 என்றது 15 வயசா என ஆவெனப் பார்த்தேன் மலையைப்பற்றி இத்தனைவருசமாகவா நானுநினைச்சிட்டு இருக்கேன் என அன்னைக்கு ராத்திரி பயத்தோட மலையை நோக்கி நடந்தேன் கொஞ்சம் பயமாக இருந்தது அஞ்சு பாறாங்கல் தூரம் நடக்க மனசுக்கு படபடனு இருந்தது எவடே இந்நேரத்தில இங்குட்டு என ஒரு மொமா கத்தியது நான் தான் மொமா மலைச்சாமி என கத்தினேன் டார்ச் வெளிச்சம் என்மீது பட்டது சே காவக்காரன் மாதிரி நிக்கறான் என நடந்தேன் நில்லுடே மலைப்பக்கம் போகுற உனக்கு புத்திகெட்டுப் போச்சா என மொமா கத்தியது இல்லே மொமா உப்ப திரும்பி போயிருவேன் என சொன்னாலும் தரதரவென எனது கைகளைப் பற்றி இழுத்து அவர் தோட்டத்தில் கொண்டு இட்டார் எடே இன்னும் நாலு பாறாங்கல் இந்த தோட்டம் அதைத் தாண்டிப் போனா கொஞ்ச தூரம் காடு அந்தகாட்டைத் தாண்டித்தான் மலை நீபாட்டுக்குப்போற என சொல்லி சப்புனு ஒரு அறை விழுந்தது மொமா அடிக்கிற வேலை நீ வைச்சிக்காத அப்புறம் கல் எடுத்து கொன்னேப்புடுவேன் சாவுக்கு நான் பயப்படலை மலைக்குப் போனா செத்துப் போயிருவாகனு கதையை நம்ப சொல்றயா என்னடே நீ ஓவராப் பேசற போடே போய் சாவு அப்பன் ஆத்தாளை காவு வாங்கினவதான நீனு என எட்டி உதைத்தார் வலி விர்ரென்று இருந்தது அந்த வார்த்தை என்னை ஒருமாதிரி ஆக்கியது.

மொமா நீ ஒரு தடிமாடு சின்னப்பயல உதைக்கிற எனகத்தினேன் சொல்லிட்டே இருக்கேன் பேசிட்டு இருக்க என ஓங்கி அடிக்க வந்தார் போடே போ நிக்காத மலைக்குப் போக மனசு இல்லை தோட்டம் வந்து படுத்துக்கொண்டேன் என் நொம்மா நொப்பா சாக நான் எப்படி காரணம் என மனசு பதைபதைத்தது என் சோட்டுப்பயக கூட இப்படி சொன்னது இல்லை இந்த மொமாவுக்கு என் மேல என்ன அக்கறை அடிக்கிறான் உதைக்கிறான் என் நொம்மாவோட தொம்பி கூட இப்படி இல்லை நாளைக்கு ஊருல இவன் என்னைப்பத்தி என்ன சொல்வானு தெரியாதே எனநினைத்தபடி வலியுடன் தூங்காமல் தூங்கினேன் எடே எந்திரு நைட்டு மலைப்பக்கம் போனியா என தோட்டத்து நொண்ணன் கேட்டார் இல்லண்ணே தூக்கம் வரலை சும்மா நடந்தேன் அந்த மொமா என்னை அடிச்சாக என்றேன் ஊர்ப்பக்கம் நடக்க வேண்டிதானே எதுக்கு அங்குட்டுப் போன பல்ல விலக்கிட்டு காபியக்குடி இட்லி இருக்கு பொறவு சாப்பிடு வடக்கால தண்ணி பாய்ச்சு மலைப்பக்கம் போவாத இன்னைக்கு யாரும் களை எடுக்க வரலை நானு பொறவு
வரேன் இங்கே வாடே என்னடே கன்னத்தில வீங்கி இருக்கு என தொட்டார் அடிச்சாகனு சொன்னனில காபி குடிடே கூட வாடே என இருந்தார் செங்கல் பொடியால் பல் விலக்கி காபி குடித்து நொண்ணனோடு ஊருக்குள் போனேன் நேராக அந்த மொமா வீட்டுக்குப் போனார் எவனைக்கேட்டு வெண்ணை இவனை அடிச்ச வகுந்துருவேன் என்னமோ நீசோறு போட்டு வளர்க்கற மாதிரி அடிச்சிருக்க அந்த மொமா இல்லை ராசு அவன் பேசின பேச்சு என இழுத்தார் எல்லாம் சொன்னான் அவன் மேலே தப்பு இல்லை இனி அவன் விசயத்தில தலையிட்ட மனுசனா இருக்கமாட்டேன் பாத்துக்க காவாலித்தனத்தை வேறு எவன்கிட்ட வேணா காமி ஊரே கூடியது விடுயா ராசு என விலக்கினார்கள்.

எடே நீ தோட்டத்துக்கு போ என்றதும் எனக்கு சாதிச்சது போன்று இருந்தது அந்த நொண்ணனோட எனக்கான கோபம் என்னவென இப்பதான் பார்த்தேன் வலி ஏதுமில்லை
எனக்குனு ஒருத்தர் இருக்காரு என்பதான தைரியம் நினைக்கவே நன்றாக இருந்தது கொஞ்ச நாளைக்கு மலைக்குப் போக வேண்டும் என எண்ணம் வரவில்லை எதுக்குப் படிப்பு வரலைனு யோசிக்க முடியலை ஆனா இந்தமுறை விளைச்சல் பரவாயில்லை புதுத்துணி கிடைச்சது அதைப்போட்டுக்கிட்டு சும்மா ஊருக்குள்ளார சுத்தினேன்மலைச்சாமி என என் மொமா கூப்பிட்டு காசு இருந்தா கொடுடே எனக் கேட்டார் பையில் இருந்த பத்து ரூபா தாள் கொடுத்தேன் எடே கூடக்கொடு என்றதும் இல்லை என தோட்டம் வந்தேன் மலையை நோக்கி பார்க்கத் துவங்கினேன் நொண்ணன் கிட்ட சொல்லி செய்யலாம் என சாயந்திரம் கேட்டேன் ஏன்டே இப்படி மலைக்கு நீ அலையற போனா உசுரோட யாரும் திரும்ப மாட்டாங்க சொன்னா கேளுடே திரும்பிருவேன் என்றதும் வேணாம்டே அப்புறம் உன் இஷ்டம் என போய்விட்டார் எனக்கு மனசுக்குள் ஒரு தைரியம் வந்தது அன்று இரவு மலையை நோக்கி நடந்தேன் காட்டினை நெருங்கினேன் காட்டுக்குள் பாதைஎன எதுவும் இல்லை நெடு மரங்கள் அசைந்தன சிறுசிறு செடிகள் இருந்தன புதர்கள் போன்றே காட்சி அளித்தது இதுவரை இருந்த நிலவு வெளிச்சம் மறைந்து இருட்டாக இருந்தது டார்ச் அடித்தேன் பகலில் வந்து இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் திரும்ப மனமில்லை அங்கேயே இருந்தேன் அதிகாலையில் சிறு வெளிச்சம் வர உள்ளூர பயமற்று நடந்தேன் மர வாசனையில் நான்மயங்கி விடுவேனோ என நினைத்தேன்

(தொடரும்)

Wednesday 2 March 2016

மாறா மரபு - 6

8. மனிதனே மகானுபாவன் 

‘’இங்க பாரு ராம், உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு நான் வேறு எங்காச்சும் போயி வேலைப் பார்த்துகிறேன், இப்படி என்னை கொலை பண்ணுவேன்னு மிரட்டுறது நல்லா இல்லை. நீ டாக்டருக்குத்தான் படிச்சியா இல்லை கொலைகாரனாகப் படிச்சியா. நீ நல்லது செய்றேன்னு நினைச்சித்தான் நான் சரின்னு சொன்னேன். வேற உள்நோக்கம் எதுவும் இல்லை. நீ இதை முறையா செஞ்சா என்ன? உனக்கு அனுமதி கிடைக்காதுன்னு தெரிஞ்சிதான் இப்படி கள்ளத்தனம் பண்ற. இனிமே என்னை மிரட்டின அப்புறம் நான் என்ன பண்ணனுமோ அதை பண்ண வேண்டி இருக்கும்’’

‘’டாக்டர் சுபா, கோபப்படாத, நான் இது என்னோட லட்சியம் மாதிரி செய்றேன். இதுக்கு இடையூறா எது வந்தாலும் அலட்சியப்படுத்த முடியாது. அதனால் தான் அப்படி ஒரு வார்த்தையை விட்டுட்டுட்டேன். உன்னை நம்பறேன். மனப்பூர்வமா நம்பறேன்’’

‘’சரி ராம், என்னை மிரட்டி அடிபணிய வைக்க மட்டும் ஒருபோதும் கனவு காணாத’’

சுபா டாக்டர் ராமிடம் சொல்லிவிட்டு தனது அறையில் சென்று அமர்ந்தாள். கண்ணீர் எட்டிப்பார்க்க எத்தனித்தது. இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும் தான் நன்றாக வாழ வேண்டும் என ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த அந்த உயிரினங்கள் அதன்பாட்டுக்கு இருப்பின் எவ்வித நெருக்கடியும் இல்லை, எதனுடனும் போட்டி இடாதவரை அதன் இயல்பை தொலைப்பதும் இல்லை.

பிறரை மிரட்டி அடிபணிய வைக்கும் போக்கு இந்த உலகில் நிறையவே நடந்து வருகிறது. இதற்கு எல்லாம் எந்த மரபணு காரணம் என மருத்துவ உலகம் கண்டுபிடித்து விட்டதா என்ன. நோய் என வந்தால் மட்டுமே அதற்கு என்ன காரணிகள், அதற்கு எந்த மரபணு எனத் தேடித் திரியும் மருத்துவ உலகம் ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும் என்ன அடிப்படை என புரியாமல்தான் இருக்கிறது. சுபா எப்படியும் இந்த வாரம் ஸ்ரீரங்கம் சென்று வர வேணும் என திட்டமிட்டாள்.

‘’டாக்டர், பேசன்ட்ஸ் வெயிட் பண்றாங்க, வரச் சொல்லட்டுமா?’’

‘’ம்ம், வரச் சொல்லுப்பா’’

ஒவ்வொருவராக பார்த்து அனுப்பி வைக்கையில் மாலை மணி ஆறு ஆகிவிட்டது. வழியில் டாக்டர் ராம் வந்து பார்த்தார்.

‘’என்ன டாக்டர் சுபா, ஆர் யூ ஆல்ரைட்?’’

‘’எஸ் ராம், நல்லா இருக்கேன்’’

‘’நான் சொன்னது எதுவும் மனசில வைச்சிகிரலையே’’

‘’ராம், அதுபத்தி பேச வேணாம், திரும்பவும் எனக்கு அதை நினைவுபடுத்தி என்னோட இரவுப்பொழுதை கெடுத்துறாத’’

‘’சரி டாக்டர் சுபா’’

சுபா வீட்டிற்கு போனதும் குளித்துவிட்டு சமையல் அறையில் அருகில் இருந்த மேசையில் அமர்ந்தாள்.

‘’சுபா, உன் அண்ணன் ரகு போன் பண்ணி இருந்தான்’’

‘’என்ன விசயம்மா’’

‘’உன் அண்ணி லட்சுமியோட சொந்தக்கார பையன் ஒருத்தன் இருக்கானாம். அவனும் டாக்டர் தானாம். உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னான்’’

‘’எதுக்கும்மா இப்ப அவசரம். அப்படியே கல்யாணம் பண்ணினாலும் நான் சிவராம் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுத்தான் பண்ணுவேன்மா, அவன் என்னை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டா பிறகு யோசிக்கலாம்மா’’

‘’யாரு அந்த சயின்டிஸ்ட் பையனா’’

‘’ஆமாம்மா’’

‘’உன் அப்பாவுக்கு தெரிஞ்சது அப்புறம் என்ன ஆகும்னு நான் சொல்ல வேண்டியது இல்லை’’

‘’நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்மா, நீ எதுவும் சொல்ல வேண்டாம்’’

‘’அதுக்கில்லை சுபா’’

‘’அம்மா ப்ளீஸ் என்னை விட்டுடு. எனக்கே தலை வலிக்கிற மாதிரி இருக்கு’’

‘’ஒரு நிமிஷம் இரு, சப்பாத்தி செஞ்சி தரேன், எங்களை மீறி நீ எதுவும் செய்யமாட்டல’’

‘’செய்யலைம்மா’’

மூன்றே சப்பாத்திகள் சாப்பிட்டுவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்தாள். இன்ட்ரான் பற்றி புரட்ட ஆரம்பித்தாள். படித்துக்கொண்டே இருந்தவள் சட்டென யோசித்தாள். எப்போது செல்லில் கரு உருவாகத் தொடங்கியதோ அப்போதுதான் இந்த இன்ட்ரான்கள் உருவாகத் தொடங்கி இருக்கும். அப்படியெனில் ஈஸ்ட்டில் இன்ட்ரான்கள் உண்டா எனும் கேள்வி அவளுக்குள் எழுந்தது. இந்த ஈஸ்ட்கள் செல்லில் கரு கொண்டுதானே இருக்கிறது. சிவராமிற்கு போன் செய்தாள்.

‘’சிவா ஈஸ்ட்ல இன்ட்ரான் இருக்கா?’’

‘’என்ன சுபா, எந்த திசைக்கு இன்ட்ரான் இருக்கு, ஒரு திசைக்கும் இன்ட்ரான் இல்லை’’

‘’இதுக்கு நான் சிரிச்சி வைக்கட்டுமா?’’

‘’ஓ நீ ஈஸ்ட் செல் பத்தி கேட்டியா, அது இருக்கட்டும். எனக்கு வீட்டில பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பொண்ணு பார்க்கவே ரொம்ப நல்லா இருந்தா. பேரு கூட ராகினி, சாப்ட்வேர் எஞ்சினியர்’’

‘’சிவா ஈஸ்ட் செல்லுக்கு இன்ட்ரான் இருக்கா இல்லையா’’

‘’இருக்கு சுபா, ஏன் கேட்கிற?’’

‘’பாக்டீரியாவுக்கு இல்லாத இன்ட்ரான் எப்படி ஈஸ்ட்க்கு வந்துச்சி. ஈஸ்ட்ல நியூக்ளியஸ் இருக்கிறதுதானே காரணம்’’

‘’சுபா, உனக்கு எப்படி இந்த யோசனை வந்துச்சி’’

‘’கேட்கறதுக்கு பதில் சொல்லு சிவா’’

‘’ஆமா சுபா. எதுக்கும் ஜூலியோட ஆர்டிக்கில் படிச்சிப் பாரு. உனக்கு நான் லிங்க் அனுப்புறேன்’’

‘’தேங்க்ஸ் சிவா. சிவா, என்னோட அம்மாவும் எனக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு சொன்னாங்க. நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன். அதான் இப்ப உனக்கு பொண்ணு பாத்துட்டாங்கள வீட்டில எனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருறேன்’’

‘’சுபா என்ன சொல்ற’’

‘’ஆமா சிவா’’

‘’சுபா நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட இதுபத்தி பேசினது இல்லையே, திடீருன்னு ஏன்?’’

‘’சிவா, எனக்கு காதல் அப்படின்னு எதுவும் எண்ணம் இல்லை. கல்யாணம்னு வந்தா உன்கிட்ட கேட்டுட்டு செய்வோம்னு இருந்தேன். அதுவும் நீ ஒரு மாப்பிள்ளை இருக்கேன்னு என் வீட்டில சொல்ல சொன்ன நினைவு இருக்கா. அதிருக்கட்டும் அவ்வளவுதான், இப்போதான் எல்லாம் தெளிவாயிருச்சி’’

‘’சுபா, என்னை மன்னிச்சிரு. நான் அன்னைக்கு சொன்னது உண்மைதான்’’

‘’இதில என்ன மன்னிப்பு வேண்டி இருக்கு. என் மனசில பட்டதை சொன்னேன், மறக்காம அந்த லிங்க் அனுப்பு இப்போ’’

‘’ம்ம் அனுப்புறேன் சுபா’’

சிவராம் சுபாவிடம் பேசியபின்னர் மிகவும் மனம் சஞ்சலத்திற்கு உள்ளானான். சுபா மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என அவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. தான் விளையாட்டாக பேசியதை அவள் மனதில் உண்மை என்றே எண்ணி இருக்கிறாள் என நினைத்தபோது சற்று கஷ்டமாக இருந்தது. எது என்றாலும் தன்னைத் தேடி வரும் சுபாவை நினைத்தபோது அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து உட்கார்ந்தது. வேகமாகத் தேடி அந்த இணைப்பை சுபாவுக்கு சிவராம் அனுப்பி வைத்தான்.

Deletion of Many Yeast Introns Reveals a Minority of Genes that Require Splicing for Function

எல்லாவற்றையும் படித்து பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. பாலூட்டி வகையின் செல்களில் இந்த இன்ட்ரான்கள் முக்கியத்துவம் நிறைந்தது என்ற வரிகளை வாசித்தபோது தான் டாக்டர் ராம் மீது ஒரு இனம் புரியாத கோபம் வந்து சேர்ந்தது. அதோடு தனது ஆசையை தொலைந்து போகச் செய்த சிவராம் மீதும் சற்று வெறுப்பு வந்து சேர்ந்தது.

எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணும் சராசாரிக்கு உட்பட்டு இருப்பார்கள் என்பதை புரியாத போது காதல் வந்துவிடுகிறது. ஆல்டர்நேடிவ் ஸ்பிலிசிங் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும் எனும் பயம் மீண்டும் சுபா மனதில் வந்து அமர்ந்து கொண்டது. மேலும் மேலும் படித்துக் கொண்டே வந்த போது செல்லின் வளர்ச்சியில் இந்த இன்ட்ரான்கள் நீக்கப்படுவதால் எவ்வித மாற்றம் உண்டு பண்ணுவதில்லை என அறிந்ததும் குழப்பம் அடைந்தாள். எப்படி இருந்தாலும் இந்த இன்ட்ரான்கள் நீக்கப்படுவதால் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டாகவே செய்யும் என தெளிவாக முடிவு ஒன்றை எடுத்தவளாக அறைக்குள் சென்றாள். ஏதோ ஒரு ராம் தனது உறக்கத்தை இன்று கெடுக்க வேண்டும் போல் இருந்து இருக்கிறது என எண்ணினாள்.

அடுத்த நாள் அப்பாவிடம் சிவராம் குறித்து பேசினாள். அவரும் உனக்கு என்ன விருப்பமோ அதன்படி செய்மா.

‘’நாங்க ஒரு மாப்பிள்ளை பாத்து உனக்குப் பிடிக்காம போச்சுனா எங்களுக்கும் தான் கஷ்டம்’’

‘’என்ன பேசறீங்க, ஒரு பொண்ணு உங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னா, நாங்க பாக்கற பையனை கட்டுன்னு சொல்லாம என்ன இது’’

‘’டாக்டர் விருப்பப்படி செய்யட்டும்’’

தனக்கு தரப்பட்ட சுதந்திரம்தனை பயன்படுத்த முடியாமல் தவித்தாள் சுபா. சிவராமிடமே சென்று என்னை திருமணம் பண்ணிக்கொள் என கேட்கலாமா என்று கூட ஒரு கணம் நினைத்துவிட்டாள். பிறகு நடப்பது நடக்கட்டும் என அந்த வாரம் முழுவதுமே எப்படியோ கடத்திவிட்டாள். அந்த வாரம் முழுவதுமே சிவராமிடம் அதிகம் பேசவில்லை. இன்ட்ரான்கள் பற்றிய எண்ணம் கூட பின்னோக்கி போய் இருந்தது. வெள்ளிக்கிழமை காலையில் தான் அம்மாவிடம் தான் ஸ்ரீரங்கம் செல்ல இருப்பதாக சொன்னாள்.

‘’என்ன விஷயம்’’

‘’ஒருத்தரை வேலை விசயமா பாக்கணுமா’’

‘’எங்க தங்கப்போற?’’

‘’நாளைக்கு காலையில போயிட்டு நைட்டே வந்துருவேன்மா’’

‘’சுபா, நீ ஒரு மாதிரியா இருக்கியேம்மா’’

‘’அதெல்லாம் ஒண்ணும் இல்லைமா’’

எப்பொழுது நாம் நேசிப்பவர்கள் நம்மை நேசிக்கவில்லை என தெரிகிறதோ அப்போதே நாம் பாதி இறந்து விடுகிறோம். அதற்குப் பின்னர் நம்மை குறித்து ஒரு பெரிய கேள்விக்குறி ஒன்று எழுகிறது. இந்த உலகில் நமக்கு என்று எதுவும் இல்லை என்றது போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. சுபா அடுத்தநாள் ஸ்ரீரங்கம் நோக்கிப் போனாள். அவள் அதிகாலை எழுந்து கிளம்பி மதியம் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தாள். நேராக கோவில் சென்று மூடும் முன்னர் வணங்கிவிட்டு வந்தபோது அவளுக்குள் ஒருவித தெளிவு உண்டாகியது. இதே ரெங்கமன்னாரை தான் அடைய வேண்டி தவம் இருந்த ஆண்டாள் குறித்து எண்ணிப்  பார்த்தாள். தான் ஒன்றை அடைய வேண்டி இருக்கும் தவத்தின் வலிமை அந்த ஒன்றை நிச்சயம் தனக்கு கொண்டு வந்து சேர்க்கும். இந்த டாக்டர் ராம் அப்படித்தான். அவன் இருப்பது ஒரு தவம். இந்த மனித குலமே ஒவ்வொரு மாற்றத்திற்கு என ஒரு மாபெரும் தவம் இருக்கிறது. ஒன்றை புரியாது எனில் அது புரியாது என தவம் இருக்கும் மனிதர்கள் ஒதுங்கிப் போவது இல்லை. அதைப் புரியும் வரை அந்த தவத்தின் வலிமையை அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்களே அன்றி குறைத்துக் கொண்டது இல்லை. அதே எண்ணத்துடன் ரெங்கநாதனை தேடிச் சென்றாள்.

குடிசையின் வெளியில் அமர்ந்து இருந்தார் ரெங்கநாதன். அவர்தான் என அடையாளம் கொண்டவள் போல அவர் அருகில் சென்றாள்.

‘’நீங்க ரெங்கநாதன்’’

‘’அவனை சேவிச்சிட்டு வரேளா’’

‘’யாரை’’

‘’வேறு யாரை, அந்த ரெங்கன்தான்’’

‘’ஆமா தாத்தா’’

‘’என் வீட்டில சேரு இல்ல, இப்படி கீழ உட்காருவேளா’’

சுபா அமர்ந்தாள். சிவராம் சொன்ன அனைத்து விசயங்களையும் சொல்லி முடித்தாள்.

‘’மனுசா எல்லாம் மகானுபாவன். அவாளுக்கு எல்லாம் தெரியும். இந்த ஜீவராசிகளில் மனுசா மட்டும் தான் இந்த பிரபஞ்சத்தை அலசி ஆராய முற்பட்டா. ஒளி வைச்சி இந்த லோகத்துக்கு ஒளி கொடுக்கிறவா இந்த மனுசா தான். இதே போல ஒரு பூமியை இந்த மனுசா உருவாக்கும் அளவுக்கு திறமை  படைச்சவா, பிரசாதம் சாப்பிட்டேளா’’

‘’ம்ம், நீங்க சிவா கிட்ட சொன்னது எல்லாம் நடக்குமா தாத்தா’’

‘’அந்த இன்ட்ரான்கள் குழந்தைகளா. உம்ம கையால்தானே தொடக்கம்’’

‘’அது வந்து... உங்களுக்கு எப்படித் தெரியும்’’

‘’நான்தான் சொல்றேனில்லையோ, இந்த மனுசா மகானுபாவன்’’

‘’மகானுபாவன் அப்படின்னா?’’

‘’ஒரு பேரறிஞன்,  பிறர் போற்றிட சிறந்தவன், மாபெரும் ஞானி, தனக்கென்று இல்லாமல் பிறருக்கு என குணம் கொண்ட  கொடைப்பண்பினன்''

‘’அப்படி இருக்காங்களா?’’

‘’நிறைய இருக்கா, ஒரு வட்டத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறா. எல்லாம் இந்த இன்ட்ரான்கள் நீக்கிட்டா சரியாகிரும்’’

‘’நமது சிந்தனைக்கும் இன்ட்ரான்களுக்கும் என்ன சம்பந்தம்’’

‘’நிறைய இருக்குனு சொல்வா. நினைக்க நினைக்க நடுக்கமும், சந்தோசமும் உண்டாகும்னு எழுதி வைச்சிருப்பா. நாராயண ஸ்தோத்திரம் கேட்டது உண்டோ’’

‘’இல்லை’’

‘’ஊருக்கு திரும்பிப் போறப்ப அதை வாங்கிட்டுப் போங்கோ, தினமும் கேளுங்கோ’’

‘’ ம்ம்’’

’அச்சலோத்ருதி சஞ்சல்கரா, பக்தனுக்ரக தல்பார நாராயணா’’ இதோட அர்த்தம் என்ன தெரியுமோ. அதாவது ஒரு மலையையே தூக்கிய  வலிமை கொண்டவனே, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆர்வம் கொண்டவனே நாராயணா அப்படின்னு பொருள், மலையை தூக்கினது யாரு. அந்த பரந்தாமன். பரந்தாமன் வடிவிலா தூக்கினார். இல்லையே மனுஷ ரூபத்தில் தூக்கினார். அதான் மனுசனே மகானுபாவன். ஒரு தனிப்பட்ட மனுசாளோட உடல் வலிமையை விட மன வலிமை புத்தி கூர்மை ரொம்ப பெரிசுனு இப்ப சொல்றா’’

சுபா தன்னை அறியாமல் அவரை நோக்கி வணங்கினாள் (தொடரும்)
9. மனம் மயங்குதல்


சுபா ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பியதில் இருந்து ரெங்கநாதன் குறித்து சிவராமிடம் நிறைய பேசிக்கொண்டே வந்தாள். எல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது குறித்தும் அவள் சொன்னதும் சிவராம் மறுத்தான். சிவராம் தனக்கு நிறைய நம்பிக்கை இருப்பதாக கூறினான்.

நாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. சுகுமார் தீபா தம்பதிகளின் விந்தணுக்கள், அண்ட செல்களை பெற்றுக் கொண்டாகிவிட்டது. டாக்டர் ராம் முக்கிய வேலையாக இருந்தார். டாக்டர் சுபா அவற்றை நுண்ணோக்கியில் பார்த்துவிட்டு மயக்கம் போடாத குறையாக டாக்டர் ராமிடம் வந்தாள்.

‘’ராம், அந்த செல்கள் எல்லாம் உருப்படியாகவே இல்லை, வந்து பார்’’

‘’என்ன சுபா, விளையாடுறியா’’

‘’இதில் என்ன ராம் விளையாட வேண்டி இருக்கு’’

டாக்டர் ராம் அவசர அவசரமாக வந்து பார்த்தவர் நெற்றி எல்லாம் வியர்க்கத் தொடங்கி இருந்தது.

‘’தெய் டோன்ட் லுக் நார்மல்’’

‘’இப்ப என்ன பண்றது ராம்’’

‘’ஃப்யூஸ் தெம்’’

‘’நோ’’

‘’டூ வாட் ஐ சே, டோன்ட் டூ எனிதிங், ஜஸ்ட் ஃப்யூஸ் தெம். யூஸ் இன்ஜெக்சன் புரொசிஜர்’’

‘’ஐ கான்ட், தெய் வில் ஃபெயில்’’

‘’ஜஸ்ட் டூ இட். ஒன் டூ ஒன், செலக்ட் வாட் யூ தின்க் பெஸ்ட்’’

டாக்டர் ராம் தனது தலையில் அடித்துக் கொண்டார்.

‘’சுபா, சொன்னதை செய்துட்டு வா, எனக்கு மயக்கம் வருவது போல இருக்கு’’

சுபா ஒரு விந்து செல் எடுத்து ஒரு அண்ட செல்லுடன் ஊசி முறையில் இணைத்தாள். இப்படியாக மூன்று விந்து செல்களை மூன்று அண்ட செல்களுடன் தனித்தனியாக இணைத்தாள்.


ஆய்வகத்தில் அவைகளை வைத்துவிட்டு டாக்டர் ராமினை சந்திக்க வந்தாள்.

‘’ராம், இணைத்து பண்ணியாச்சு’’

‘’தீபாவுக்கு ஹார்மோன் கொடுத்தாச்சா’’

‘’இன்னும் இல்லை ராம்’’

‘’என்னதான் நடக்குது சுபா, அவங்க கிளம்பி போயிருந்தா என்ன பண்ணுவ. இன்னும் ஆறு நாளில் அவங்களுக்கு நாம இந்த கருவை உள்ளே வைச்சாகனும். நாளைக்கு வந்து கருத்தரிச்சி இருக்கான்னு பாரு’’

‘’எனக்கு நிறைய சந்தேகமா இருக்கு ராம்’’

‘’ஒன்னு நடக்கிற முன்னாடி சந்தேகம் எல்லாம் பட வேண்டாம், நீ முதல போயி தீபாவுக்கு ஹார்மோன் கொடுத்து ஆறு நாள் கழிச்சி வரச் சொல்லு’’

சுபா, தீபாவிடமும் சுகுமாரிடமும் நடந்த உண்மையை மறைத்து எல்லாமே நன்றாக நடக்கும் என்று நம்பிக்கை சொன்னவள் தீபாவின் கருப்பையை தயார் செய்ய ஹார்மோன் ஊசி போட்டாள். தீபா சுபாவின் முகத்தில் ஒருவித பயம் இருப்பதை கண்டார்.

‘’டாக்டர் உங்க முகமே சரியில்லையே, எதுவும் பிரச்சினையா?’’

‘’ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு இருபது மணி நேரத்தில கரு உருவாகிரும், அப்புறம் ஒரு ஆறு நாள் அதை நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்து வருவோம். அப்புறம் ஆறு நாள்  பிறகு வந்தீங்கனா உங்க கருப்பையில கருவை வைச்சிரலாம்’’

‘’எத்தனை கரு உருவாக்குவீங்க டாக்டர்’’

‘’மூனு உருவாக்கி இருக்கோம், உங்க விருப்பபடி உங்க கருப்பையில வைக்கிறோம்’’

‘’மூனும் வைச்சிருங்க டாக்டர்’’

‘’மூனுமே நல்லா இருந்தா வைக்கலாம். ஆனா மூனு வேண்டாம், இரண்டு மட்டும் வைப்போம், உங்க உடம்பு தாங்கனும் இல்லையா’’

‘’சரி டாக்டர்’’

சுபா, தீபாவும் சுகுமாரும் செல்லும் வழியினைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ராம் அங்கே வெகுவேகமாக வந்தார்.

‘’டாக்டர் சுபா, அவங்க போயிட்டாங்களா’’

‘’போயிட்டாங்க ராம்’’

‘’எனக்கு வந்து அந்த செல்களை காட்டு, ஐ வான்ட் டு மேக் சுயர்’’

சுபா, ராமிற்கு அந்த செல்களை காட்டினாள்.

‘’வெல் டன் சுபா, இட்ஸ் மிராக்கிள்’’

‘’என்ன ராம்’’

‘’இந்த செல்கள் எல்லாம் சாதாரண செல்களா, இல்லையே அப்புறம் எப்படி நார்மலா இருக்கும், நீ கொஞ்சம் கூட யோசனை இல்லாம என்கிட்டே வந்து சொல்ல நானும் பயந்து சே ஒரு அரைமணி நேரம் என்னை பாடாபடுத்திட்டியே டாக்டர் சுபா’’

‘’இல்லை ராம், அப்நார்மல் செல்கள் அது’’

‘’அதேதான், நாம கொடுத்த கேப்ஸ்யூல் வேலை செஞ்சி இருக்கு, நீ எதுக்கும் ஒரு கருவை நாளைக்கு எடுத்து ஜீன் டெஸ்டிங் பண்ணிரு, மீதி ரெண்டு மட்டும் வளரட்டும். அந்த ரெண்டு மட்டும் கருப்பையில் வைச்சா போதும்’’

‘’சரி ராம்’’

‘’இன்னைக்கு உன்னை நான் ஒரு ரெஸ்டாரன்ட் கூப்பிட்டு போகப் போறேன், என்னோட ஆராய்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தரும் உனக்கு சின்ன பார்ட்டி’’

‘’எதுவும் வேண்டாம் ராம், எனக்கு இன்னும் திக் திக்னு மனசு அடிச்சிக்கிது’’

‘’கவலைப்படாதே சுபா, இட் வில் வொர்க். அப்போ நீ வரலை’’

‘’இல்லை ராம், நாளைக்கு இந்த கருவை வந்து பாக்கிறவரை எனக்கு நிம்மதி இல்லை. அவங்க நம்பிக்கையை நாம தகர்த்துரக்கூடாது’’

‘’சரி சுபா, நான் மட்டும் போயி இந்த நாளை கொண்டாடப் போறேன்’’

அன்று இரவு சுபா சரியாக சாப்பிடவில்லை. அம்மா அப்பாவுக்கு காரணம் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சிவராமிடம் இந்த விஷயத்தை சொல்லவும் மனம் வரவில்லை.

‘’சுபா’’

‘’என்னம்மா’’

‘’அந்த பையன் கிட்ட பேசினியா’’

‘’இல்லம்மா, அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டான், சாதாரணமா பழகினான், பேசினானாம்’’

‘’அப்போ பையன் பாக்க சொல்லவா’’

‘’இப்ப இதைப் பத்தி பேசனுமாம்மா, எனக்கு வேலை இடத்தில நடந்ததை நினைச்சே கவலையா இருக்கு’’

‘’என்னம்மா என்ன ஆச்சி’’

‘’ஒன்னுமில்லைம்மா’’

‘’சொல்லு சுபா, சரியாவும் நீ சாப்பிடலை’’

சுபா தனது அம்மாவிடம் நடந்த விஷயத்தை சொன்னதும் எல்லாம் நல்லாவே நடக்கும், அதுபத்தி கவலைப்படாதம்மா என்று ஆறுதல் சொல்லிவிட்டு கல்யாணம் குறித்து யோசிக்க சொன்னார்

இரவு மிகவும் மெதுவாக கடந்து கொண்டு இருந்தது. ரெங்கநாதன் சொன்னது போல நாராயண ஸ்தோத்திரம் கேட்க ஆரம்பித்தாள். எல்லா வரிகளுமே புரியாததாக இருந்தன. எதையாவது அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டவாறே குரலின் இனிமையை ரசித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவளது செல்பேசி ஒலித்தது.

‘’டாக்டர் சுபா, எல்லாவற்றையும் பாதுகாப்பாகத்தானே வைச்சிட்டுப் போன, அது பக்கத்தில வேறு எந்த ஒரு பொருளும் இல்லையே. எனக்கு திடீருன்னு ஒரு சந்தேகம்’’

‘’இல்லை ராம், எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கு’’

‘’நீ இல்லாத ஒரு குறைதான் சுபா, பார்ட்டிக்கு நாலைஞ்சி பேரு வரவைச்சிட்டேன்’’

‘’சரி ராம், குட் நைட்’’

மீண்டும் பாடல் கேட்க ஆரம்பித்தாள். தான் செய்வது சரிதானா எனும் ஒரு உணர்வு தன்னை கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. எவருமே இப்படி ஒரு காரியத்திற்கு துணை போயிருக்கமாட்டார்கள் என்றே எண்ணினாள். தனக்கு புகழ் அடைய விருப்பமா அல்லது ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் தந்த தைரியமா என தெரியாது அப்படியே அசதியில் உறங்கியவள் நடுசாமத்தில் முழித்தாள்.

பிறந்தவுடன் இறந்த குழந்தையைப் பார்த்த நினைவுகள் வந்து போயின. இப்படி இயற்கையை மீறிய செயல் ஒன்றை செய்வது சரியா என யோசித்தாள். எப்படியாகினும் நாளை விடிய வேணும் எனும் எண்ணத்தில் உறங்க நினைத்தாலும் உறங்க இயலவில்லை.
அதிகாலையில் உறங்கியவளை அவளது அம்மாதான் எழுப்பி விட்டார்.

‘’அம்மா குழந்தை குழந்தை’’

‘’என்ன சுபா’’

‘’பயமா இருக்குமா, கெட்ட கனவு ஒன்னு’’

‘’நீ மனசைப் போட்டு குழப்பாதே’’

சுபா குளிக்கும்போது அவளுக்கு அழுகை தானாக வந்தது. அவசர அவசரமாக கிளம்பினாள். மிகவும் தாமதமாகவே கிளினிக்கிற்கு சென்றாள், டாக்டர் ராம் அங்கே இருந்தார்.

‘’குட் மார்னிங் டாக்டர் சுபா’’

‘’வணக்கம் ராம்’’

‘’எவரிதிங் இஸ் சக்சஸ்’’

‘’ராம்’’

‘’ஆல் ஆர் பெர்டிளைஸ்ட், லுக்கிங் குட்’’

‘’தேங்க்ஸ் ராம்’’

‘’எல்லாம் உன்னால நடந்தது டாக்டர் சுபா’’

‘’ஜீன் டெஸ்டிங் பண்ணவா’’
‘’வேண்டாம்’’

‘’நேத்து பண்ண சொன்ன ராம்’’

‘’இல்லை வேண்டாம்’’

‘’உறுதிபடுத்திக்கிட்டா நல்லதுதானே’’

‘’இல்லை சுபா, ஆறு நாட்கள் ஆகட்டும். அன்னைக்கு பண்ணுவோம். எப்படி ஒவ்வொரு நாள் வளரும்னு நமக்கு தெரியாது. ஒன்னாவது நிச்சயம் நல்லா இருக்கனும். நாம எடுக்கிறது நல்லதா இருந்து பிரச்சினை ஆகிட்டா என்ன பண்றது. லெட் அஸ் பீ சேப்’’

‘’சரி ராம்’’

‘’யூ கேன் கோ அன்ட் லுக். அவங்களுக்கு தகவல் சொல்லிருங்க’’

சுபா அவற்றை எல்லாம் பார்த்து ஆச்சரியம் கொண்டாள். எப்படி இவை நல்ல செல்களாக மாறிக்கொண்டன என புரியாமல் இருந்தது. அப்போதே தீபா சுகுமார் தம்பதிகளுக்கு தகவல் சொன்னாள். அவர்கள் சந்தோசத்தில் நிறைய பேசினார்கள்.

தினமும் செல்களை பார்ப்பதும் அவைகள் குறித்து எழுதுவதுமாக சுபா இருந்தாள். மூன்றாம் தின மாலை அன்று சிவராம் சந்திக்க வேண்டும் என சொன்னதால் அவனை சென்று பார்த்தாள்.

‘’என்ன சிவா’’

‘’சுபா உன்னை நான் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன், உனக்கு சம்மதமா’’

‘’சிவா’’

‘’பரிதாபமோ, குற்ற உணர்வோ இல்லை’’

‘’உண்மையா சிவா’’

‘’ஆமா சுபா. உன்னை அறிய முயன்றபோது என்னை அறிந்து கொண்டேன்’’

‘’கவிதையா சிவா’’

‘’உன்னை போற்றி ஆராதிக்க என்னைவிட எவரும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை எனும் பேரகந்தை எனக்கு எப்போதும் உண்டு’’

‘’எங்கே இதை எல்லாம் மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்த’’

‘’நீ தொலைத்ததாய் நினைத்த ஒன்று நீ என்னிடத்தில் இன்னும் இருக்குமென்று நீ எதிர்பார்த்து இருக்கமாட்டாய். ஒருவேளை உன்னை மீண்டும் உள்ளுக்குள் நினைத்துப் பாத்திராவிட்டால் எனக்கு காதல் என்றால் என்னவென தெரியாமல் போயிருக்குமோ? அன்று உன்னிடம் நான் பேசியதை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கவே நான் விருப்பம் கொள்கிறேன்’’

‘’வாவ் அசத்தல் சிவா. நீதான் எழுதினியா’’

‘’உண்மையானவர்கள் ஒருபோதும் ஒளிந்து கொள்வதில்லை’’

‘’போதும் போதும் சிவா, நீ சொன்னதே எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு. எங்கே எனக்கு நீ இல்லாம போயிருவியோனு ஒருவித மனக்கலக்கம் இருந்துட்டே இருந்துச்சி. அப்புறம் மூனு கருக்கள் அருமையா வளர்ந்துட்டு இருக்கு. ராம் கூட என்னை பார்ட்டிக்கு கூப்பிட்டாரு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’’

‘’மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தபோது நான் உன்னை காதலிக்கத் தொடங்கினேன்’’

‘’சிவா. இந்த உலகத்திற்கு வா’’

‘’சுபா இன்னும் நிறைய சொல்லணும் போல இருக்கு. உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு எனக்கு துணையாக கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். நல்லவேளை உன்னை இழக்க இருந்தேன். எல்லா கருவுமே நல்ல நிலையில் இருக்கா’’

‘’இருக்கு, ஜெகன் பேசினாரா’’

‘’தினமும் பேசிட்டு இருக்கோம். இன்னும் மூனு நாளுல ஆரம்பிக்க போறோம்’’

‘’சிவா நாங்களும் கருவை மூனு நாளில் வைக்கப் போறோம்’’

சந்தோசம் நிலைத்து இருக்க வேண்டி மழை பெய்யத் தொடங்கி இருந்தது. (தொடரும்)

பகுதி 10 பிரபஞ்சத்தின் கூறு 

அடுத்த இரண்டு தினங்களில் இரண்டு கருக்கள் சிதைந்து போயின. டாக்டர் ராம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சுபாவை அழைத்து கடுமையாக சத்தம் போட்டார். சுபா தான் என்ன செய்ய இயலும் என்றே வருத்தம் தெரிவித்தாள். ஆனால் டாக்டர் ராம் சுபாவின் மீது பழியை சுமத்தினார். அன்று தன்மீது சுமத்தப்பட்ட பழியை எவரிடம் சொல்வது என வாடிய முகத்துடனே இருந்தாள். மிச்சம் இருக்கிற அந்த ஒரு கரு பிழைக்க வேண்டுமே எனும் கவலை சுபாவை மிகவும் வாட்டியது. டாக்டர் ராம் சுபாவின் அறைக்கு வந்தார். 

''சுபா அந்த கருவை வேறு ஒரு மீடியாவுக்கு மாத்திரு, இந்த கரு மட்டும் சிதைஞ்சதுன்னா என்னோட கனவு எல்லாம் சிதைஞ்சிரும். உன்னை சத்தம் போட்டது எல்லாம் மனசில வைச்சிக்காதே. என்னோட கோபம் எல்லாம் உன் மேல தான் என்னால காட்ட முடியுது. சாரி சுபா. உனக்கேத் தெரியும் நான் இதற்காக எவ்வளவு போராடுறேனு. எனக்கு நிறைய படபடப்பா இருக்கு சுபா''

''ராம் நான் என்ன பண்ணுவேன். எல்லாம் சரியாத்தான் இருந்தது. எல்லாம் சிதைஞ்சி இருந்தா என்ன பண்றது. நாளைக்கு தீபா வந்துருவாங்க. இந்த கருவை இப்போ வேற மீடியாவுக்கு மாத்தி ஏதாவது ஆச்சினா என்ன செய்றது. இப்படியே இருக்கட்டும். நீ என்னை திட்டினதை எல்லாம் என்னால ஈசியா எடுத்துக்க முடியலை. நீ ஒரு டாக்டர் மாதிரி நடந்துக்கிற மாட்டேங்கிற. உனக்கு புகழ் பெருமை தான் ஒரே குறிக்கோள். தனிப்பட்ட மனுஷரோட எண்ணத்திற்கு நீ எப்போ மதிப்பு தந்து இருக்க சொல்லு''

''இல்லை சுபா. எனக்கு கைகால்கள் ஓடலை, சரி நீ சொன்னமாதிரியே மாத்த வேணாம். நான் வெளில போறேன். நாளைக்கு நல்ல முறையில் இந்த கருவை வைச்சிரு''

''எங்க போற ராம்''

''பிரார்த்தனைப் பண்ணப் போறேன்''

''நல்ல புத்தி கொடுக்கச் சொல்லி பிரார்த்தனை பண்ணு ராம். அப்படியாவது உபயோகமா இருக்கும்''

டாக்டர் ராம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். 

சுபா இந்த மூன்றாவது கரு சிதையுமோ என்றே பயந்தாள். 

சிவாவை ஜெகன் சந்தித்தான். 

''என்ன சிவா எல்லாம் தயார இருக்கா''

''எல்லாம் தயார் பண்ணிட்டேன், நீ எனக்கு பணம் கொடுத்தா நான் எல்லாம் ஆர்டர் பண்ணி இன்னும் ஒரு மாசத்தில வேலையை ஆரம்பிச்சிருவேன். நாளைக்கு நீ பணத்தை எனக்கு அனுப்பிரு''

''நான் உன்னோட யுனிவேர்சிட்டிக்கு வரேன். என் கண் முன்னால நீ ஆர்டர் பண்ணு''

''என்ன ஜெகன் என் மீது உனக்கு நம்பிக்கை  இல்லையா''

''அதில்லை சிவா, எனக்கு திருப்தியா இருக்கும். நீ சரியானதைத்தான் ஆர்டர் பண்றியானு எனக்கும் தெரியும். தப்பா நினைக்காதே''

''இப்படி இதுவரை நீ சொல்லலியே ஜெகன்''

''வேலைன்னு வந்திட்டா அப்படித்தான் சிவா''

மறுநாள் சிவாவின் ஆய்வகத்திற்குச் சென்றான் ஜெகன். சிவாவிற்கு சிறிது பணத்தை மாற்றினான் ஜெகன். அவனுக்கு முன்னாலேயே சிவா தேவையான காரணிகளை ஆர்டர் செய்தான். ஒவ்வொன்றின் விலையை பார்த்தபோது இது எல்லாம் தேவையா என்றே சிவா மனதில் நினைத்துக் கொண்டான். ஜெகனை சிவா தனது சூப்பெர்வைசரிடம் அறிமுகம் செய்து வைத்தான். இதை ஜெகன் கொஞ்சமும் விரும்பவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளதவன் போலவே இருந்தான். 

''இங்க பாரு சிவா, நீ இந்த காரணிகள் எல்லாம் வந்ததும் பத்திரமா எடுத்து வை. நீ எப்போ ஆரம்பிக்கப் போறியோ அப்போ சொல்லு நான் வரேன்''

''ஜெகன் நீ வந்தா நல்லதுன்னு நானே நினைச்சேன்''

''நீ ரொம்ப சந்தேகத்தோடு இருந்ததால நான் வர வேண்டி இருந்தது. இல்லைன்னா நான் இதில் தலையிட வேண்டியது இல்லை. அதுவும் என்னை அந்த டாக்டர் ராம் பார்த்தா என்னோட நிலைமை என்னாகிறது''

''எதுக்கு ஜெகன் இப்படிப் பயப்படுற''

''சிவா நான் கிளம்பறேன். எல்லா காரணிகள் வந்ததும் தகவல் சொல்லு''

''சரி ஜெகன்''

ஜெகன் சிவாவின் மீது நம்பிக்கை இல்லாதவனாக தென்பட்டான். இவன் நிச்சயம் குழப்பிவிடக்கூடும் என்றே அவனது மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் வெளியே சென்றபோது சிவாவின் சூப்பர்வைசர் அழைத்தார். இதை ஜெகன் எதிர்பார்க்கவில்லை. நிறைய விசாரித்தார். ஜெகன் வேறு வழியின்றி தனது பணியிடம் குறித்து சொல்ல வேண்டியதாகிவிட்டது. அதற்கு அவர் தன்னிடம் ஒரு புராஜக்ட் இருப்பதாகவும் விருப்பம் இருப்பின் சொல்லவும் கூறினார். ஜெகன் தான் பரிசீலனை செய்வதாக சொல்லிவிட்டு வெளியே வந்தான். 

இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவே திட்டமிட்டான். ஆனால் டாக்டர் ராம் மீதான அச்சம் அவனை யோசிக்கவிடாமல் தடுத்தது. 

சுபா வேண்டாத தெய்வம் இல்லை. அவளின் முகம் கலக்கத்துடன் இருந்தது. இரவு எல்லாம் சரியாகவே உறங்கவில்லை. சுபாவின் அம்மா சுபாவின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினார். அதிகாலையில் கிளம்பி கிளினிக் வந்து அடைந்தாள். அவளுக்குள் இருந்த பதட்டம் அவள் அறியாதது. தனது அறையில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு வேகமாக ஆய்வகத்தில் நுழைந்தாள். கரு இருந்த மீடியாவை எடுத்து நுண்ணோக்கியில் பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்

டாக்டர் ராமை அழைத்து தகவல் சொன்னாள். டாக்டர் ராம் எவ்வித பதிலும் சொல்லாமல் இருந்தார். சுபா மீண்டும் பேசியபோது கருவை வைத்தபின்னர் அது எப்படி வளருமோ அதைப் பொறுத்தே எதுவும் சொல்ல இயலும் என்றார். டாக்டர் ராமின் குரல் உடைந்து இருந்தது. சுபாவுக்கு கொஞ்சம் இருந்த நிம்மதியும் இப்போது போய்த் தொலைந்தது. தீபா தம்பதியினர் வந்து சேர்ந்தார்கள். 

தீபாவை சுபா நன்றாக பரிசோதனை செய்துவிட்டு டாக்டர் ராம் வரட்டும் என்றே காத்து இருந்தாள். ஆனால் டாக்டர் ராம் வெகு நேரமாகியும் வரவில்லை. டாக்டர் ராமிடம் சுபா பேசியபோது தனக்கு வர விருப்பம் இல்லை அதை சுபாவையே செய்ய சொன்னார். சுபா கருவை தீபாவின் கருப்பையில் வைத்துவிட்டு கவனமாக இருக்கும்படி பல ஆலோசனைகளை வழங்கினாள். தீபாவின் எல்லையில்லா சந்தோசம் கண்டு மகிழ்ந்தாலும் உள்ளுக்குள் அச்சம் தலைவிரித்தாடியது. 

''எப்போ வரட்டும் டாக்டர்''

''ஒரு வாரம் கழிச்சி வாங்க, நிறைய கவனமா இருங்க''

''இரண்டு கருவுல ஒன்னு தப்பிச்சிரும்ல டாக்டர்''

''ம்ம் தப்பிச்சிரும்’’ தான் ஒன்றுதான் வைத்தேன் என சொல்லாமல் மறைத்தாள் சுபா.

அன்று முழுவதும் டாக்டர் ராம் வரவில்லை. சுபாவின் மனம் நிறைய வருத்தத்தில் இருந்தது. ஒவ்வொரு தினமும் எப்படி கடந்தது என அவளால் விவரிக்க இயலவில்லை. டாக்டர் ராம் சுபாவிடம் அதிகம் பேசவும் இல்லை. 

''ராம் என்ன ஆச்சு''

''டாக்டர் சுபா, நான் தப்பு பண்ணிட்டேனோ''

''என்ன ராம்''

''இதை பண்ணியிருக்கக் கூடாதுன்னு மனசில ஒரு யோசனை''

''முன்னமே சொன்னேன் ராம் நீதான் கேட்கலை''

''அந்த இரண்டு கரு சிதைஞ்சது என்னை என்னமோ பண்ணுது டாக்டர் சுபா, அதுவும் இந்த கரு நிலைக்குமானு ஒரே பயம்''

''இதுவரைக்கும் அவங்க ஒன்னும் சொல்லலை ராம்''

''நாலு நாள் தான் ஆயிருக்கு, முழு குழந்தை உருவாகி பிறந்து என்னால தோல்வியை ஏற்க முடியாது டாக்டர் சுபா''

''ராம்''

ராம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினார். ஒரு மனிதனின் முயற்சிக்கு ஏற்படும் தோல்வி ஒருவரை துவளவே செய்யும். 

சுபா ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்று ரெங்கநாதனை சந்தித்தாள். ரெங்கநாதன் சுபாவை பார்த்ததும் என்னோட ஞாபகம் வந்துருச்சா என்றார். சுபா ரெங்கநாதனிடம் எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தாள். ரெங்கநாதன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தான் என்ன செய்ய வேணும் என்றார். 

''இந்த குழந்தை நல்லபடியா பிறக்குமா தாத்தா''

''நான் என்ன ஜோசியக்காரானா''

''நீங்க சொன்னதே எனக்கு தைரியம் தந்தது தாத்தா''

''பிறக்கும் பிறக்கும், என்னை பெரிய சாமியாரா ஆக்கிராதேள்''

''தாத்தா உங்களப் பாத்து மனசு தைரியம் அடையலாம்னு வந்தேன்''

''கவலைப்படவேணாம், எல்லாம் நல்லா நடக்கும்னு நம்புங்கோ''

அவர் அப்படி சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பினார். சுபா தான் எதற்கு வந்தோம் என்கிற உணர்வு எதுவும் இன்றி அப்படியே உறைந்து நின்றாள். அவரை பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என மனம் எண்ணி பின் தொடர்ந்தாள். ரெங்கநாதன் கோவிலுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். 

''தாத்தா''

''நீங்க ஊருக்குப் போங்கோ, எல்லாம் நல்லபடியா நடக்கும், நான் இப்போ ரெங்கனோட பேச வந்து இருக்கேன், நீங்க ஸ்தோத்திரம் கேளுங்கோ''

''வரேன் தாத்தா''

கோவிலில் சென்று வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள். சுபாவின் பெற்றோர்கள் சுபாவிடம் நிறைய நேரம் பேசினார்கள். சுபா எல்லா விபரங்களையும் சொல்ல வேண்டிய சூழல் வந்தது. ஆனால் ரெங்கநாதன் குறித்து சொல்லி விஷயத்தை மாற்றினாள். 

ஒரு வாரம் கழித்து தீபாவை பரிசோதித்தபோது எவ்வித பிரச்சினை இல்லாமல் இருந்தது சுபாவுக்கு திருப்தியாக இருந்தது. டாக்டர் ராமிடம் சொன்னபோது தான் கவலைப்படுவது போலவே ராம் காட்டிக்கொண்டார். இப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்தது. 

ஜெகன் சிவாவின் ஆய்வகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். சிவா அதிர்ச்சி அடைந்தான். 

(தொடரும்) 






 11. துரோகம் சிலரின் இயல்பு

‘’என்ன ராஜ் சொல்ற, ஜெகன் வேலையை விட்டுட்டானா? இப்போ எங்கே இருக்கான்’’

‘’டாக்டர், அவன் பஞ்சாப் போறதா சொல்லிட்டுப் போனான்ல, அப்புறம் வந்து பஞ்சாப்பில் வேலை உறுதி ஆயிருச்சினு எல்லாம் காலிபண்ணிட்டுப் போயிட்டான்’’

‘’அவனோட நம்பர் இருக்கா’’

‘’இல்லை டாக்டர்’’

‘’அவன் என்னமோ விளையாடுறான் ராஜ், நீ பஞ்சாப்புக்கு வேலை மாத்திப் போக முடியுமா?’’

‘’அவன் எங்கே இருக்கானு தெரியாம எப்படி மாத்திப் போறது டாக்டர்’’

‘’நீ அவனோட சூப்பர்வைசர்கிட்ட அவனைப்பத்தி விசாரிச்சி இப்பவே சொல்லு’’

‘’டாக்டர் இருங்க இப்பவே கேட்டுட்டு வரேன்’’

தங்கராஜ் சென்று சூப்பர்வைசரிடம் விசாரித்தபோது எதுவும் என்னால் ஜெகனைப் பற்றி சொல்ல முடியாது. அவன் ஒரு துரோகி. அவனுக்கு துரோகம் இழைப்பதே பழகிப்போய்விட்டது. விடுமுறை என போனவன் எனக்கு எந்த தகவலும் அவன் சொல்லவே இல்லை. எங்கு போனான் என்ன ஆனான் எனத் தெரியாது. எல்லாத் தொடர்புகளையும் துண்டித்து வைத்து இருக்கிறான் என்ற செய்தி தங்கராஜிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘’டாக்டர் அவன் வேலை விசயமா போகலை’’

‘’ராஜ், அப்படின்னா அவன் சொந்த ஊருக்குப் போயிருக்கனும்’’

‘’எல்லா சோசியல் நெட்வொர்க் அவன் டீஆக்டிவேட் பண்ணி இருக்கான் டாக்டர்’’

‘’நீ எதுக்கும் சென்னைக்கு கிளம்பி வா. உன்னோட வேலையை இங்கப் பாத்துக்கிரலாம்’’

‘’டாக்டர், அங்கே வேலை கிடைச்சப்பறம் சொல்றேன் டாக்டர்’’

‘’ராஜ், நீ கிளம்பி வா’’

‘’ஒரு மாசம் டைம் கொடுங்க டாக்டர்’’

‘’சரி வந்து சேரு’’

ஜெகன் தன்னை ஏமாற்றுவது போன்று உணர்ந்தார் டாக்டர் ராம். தான் உண்மையில் பயப்படுவது போல குழந்தை பிறக்கும் வரை டாக்டர் சுபாவிடம் நடிக்க வேண்டும் என முடிவு செய்தவருக்கு ஜெகனின் பிரச்சினை புதியதாக இருந்தது.

‘’ஜெகன், எப்படி நீ இந்த ஆய்வகத்தில் சேர்ந்த’’

‘’எல்லாம் நீ செய்துவைத்த அறிமுகம் சிவா’’

‘’என்ன புரோஜக்ட்’’

‘’பிறகு சொல்றேன், எல்லா வேலையும் நானே செய்துக்கிறேன். இதில் நீ தலையிட வேண்டாம்’’

‘’ஜெகன், உன்னால எப்படி இப்படி நடக்க முடியுது, டாக்டர் ராம் கண்ணில் நீ பட்டால் என்ன ஆகும்னு தெரியுமா. பயந்துட்டு இருந்தியே’’

‘’என்ன ஆகும், எல்லாத் திருட்டும் அவன் பண்ணிட்டு இருக்கான், நான் எதுக்குப் பயப்படனும்’’

‘’ஜெகன், உன்னால என்னோட வேலைக்குப் பாதிப்பு வந்துராம பாத்துக்கோ, இல்லை நான் பொல்லாதவன் ஆயிருவேன்’’

‘’அது நீ சூப்பர்வைசரிடம்தான் போய் பேசனும், என்னைப் பிடிச்சி இருந்தது சேர சொல்லிட்டார்’’

‘’உன்னோட டில்லி சூப்பர்வைசர்கிட்ட சொன்னியா’’

‘’எதுக்கு, நான் கொடுத்த ரெபெரேன்ஸ் வேற, அவருக்கு நான் எங்க இருக்கேன்னு தெரியாது. நீ என்னோட விசயத்தில் இனிமே தலையிடாத, அப்படி பண்ணின அவ்வளவுதான்’’

சிவா ஜெகனின் குணம் கண்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தான்.

‘’ஜெகன் இனிமேல் இந்த விசயத்தில் நான் தலையிட மாட்டேன்’’

‘’வெல்டன் சிவா’’

சிவா சூப்பர்வைசரிடம் சென்று ஜெகன் பற்றி பேசியபோது நீ  இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா என்ன அர்த்தம் என சிவாவையே அவர் சத்தம் போட்டார். ஜெகனுக்காக என்ன ஆர்டர் பண்ணினியோ அதெல்லாம் ஜெகன் கிட்ட கொடுத்துரு. அவரோட புரொஜக்ட்ல நீ தலையிடாத. அதற்குமேல் எதுவும் பேசுவதற்கு இல்லை என சிவா அமைதியானான்.

ஜெகன் எல்லாம் திட்டமிட்டுப் பேசித்தான் உள்ளே வந்து இருக்கிறான் என்று நினைத்தபோது சிவாவினால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தன்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறான் என்றே நினைத்தான் சிவா. தான் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.

டாக்டர் ராம் தான் எதிலும் நேரடியாக தலையிடக்கூடாது என்றே எல்லா விசயங்களையும் தங்கராஜ் மூலம் செய்து வந்தார். தங்கராஜ் சென்னைக்கு வந்தபின்னர் ஜெகன் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தார். வேலையைவிட்டு வர நாட்கள் வேணும் என்றதால் உடனே விடுமுறை எடுத்துக்கொண்டு ஜெகன் பற்றி அவனது ஊரில் சென்று விசாரிக்கச் சொன்னார்.

தங்கராஜ் அதன்படியே நேராக ஸ்ரீரங்கம் சென்று தன்னை ஜெகனின் நண்பன் என அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரித்தான். அதற்கு ஜெகனின் பெற்றோர்கள் ஜெகன் டில்லியில் இருப்பதாக சொன்னார்கள். தங்கராஜ் விபரங்கள் எல்லாம் கூறியபின்னர் தங்களுக்கு வேறு எந்த தகவலும் வரவில்லையே என்றார்கள். இந்த ஜெகன் என்ன ஆனான் எனும் குழப்பம் தங்கராஜிற்கு வந்து சேர்ந்தது.

‘’டாக்டர் ராம், ஜெகன் பத்தின விபரங்கள் அவங்க அப்பா அம்மாவுக்கே தெரியலை’’

‘’ராஜ், அவன் என்னை ஏமாத்துறான், நீ சென்னைக்கு கிளம்பி வா, உனக்கு புது வேலை நான் இங்கே ஏற்பாடு பண்றேன்’’

‘’இல்லை டாக்டர், நான் வேலை மாறிட்டுத்தான் வர முடியும்’’

‘’சரி ராஜ்’’

டாக்டர் ராம் குழப்பம் நிறைந்தவராகத் தென்பட்டார். டாக்டர் சுபா ராமிடம் பேச வேண்டும் என அனுமதி கேட்டுக்கொண்டு சென்றாள்.

‘’என்ன டாக்டர் சுபா?’’

‘’பாலகுரு திவ்யா அவங்களுக்கு இதே மாதிரி பண்ணனும் ராம். எதுவும் மாத்தாம அப்படியே பண்ணினா பிரச்சினை இருக்காது’’

‘’டாக்டர் சுபா, நீ உன் விருப்பம்போல செய். எனக்கு இன்னும் மனசு ஒரு நிலைக்கு வரலை’’

‘’ரொம்பவும் ஒருமாதிரி இருக்கியே ராம்’’

‘’அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ அவங்களுக்கு இப்படியே பண்ணு’’

‘’ராம் எதுவும் உதவி தேவையா’’

‘’எதுவும் வேணாம்’’

டாக்டர் ராம் தன்னை நம்பி எல்லாம் ஒப்படைத்து விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் சுபா. தீபாவிடம் விசாரித்தபோது தான் நன்றாக அதுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

அன்று சிவா அவசரம் அவசரமாக சுபாவை சந்திக்க வேணும் என அழைத்தான். சுபாவிடம் எல்லா விசயங்களையும் சொல்லி சிவா முடித்தபோது அந்த வேலையை மட்டும் விட்டுராதே சிவா என்று சொன்னாள் சுபா.

தினங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. ஜெகன் தன்னை ஒரு முழுமூச்சுடன் ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டான். சிவராம் ஜெகனின் மீது தனி வெறுப்பு வளர்க்க ஆரம்பித்தான்.

திவ்யாவின் அண்ட செல்கள், பாலகுருவின் விந்து செல்கள் எடுத்து முன்னர் போலவே ஆய்வகத்தில் இணைத்தாள் சுபா. எப்படியும் இந்த முறை நன்றாக வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். டாக்டர் ராம் சுபா என்ன செய்து வைத்து இருக்கிறாள் என சுபா சென்றபின்னர் ஆய்வகத்தில் சென்று பார்த்து திருப்தி அடைந்தார்.

நாட்கள் நகர கரு எவ்வித பிரச்சினை இன்றி வளர்ந்து இருந்தது. அதில் ஒன்றை மரபணு ஆய்விற்கு உட்படுத்தினார் டாக்டர் ராம். இதை எம்ப்ரோயினிக் பிரி இம்ப்லேன்ட்சன் என சொல்வார்கள். இதன் மூலம் ஏதேனும் கருவில் பாதிப்பு இருக்கிறதா என்றெல்லாம் கண்டு கொள்ளலாம். இந்த ஆய்வின் முடிவில் இன்ட்ரான்கள் இல்லாமல் கரு வளர்ந்து இருந்தது. அதைக்கண்டு பேரின்பம் கொண்டார் டாக்டர் ராம்.

‘’ராம், ரிப்போர்ட் எப்படி இருக்கிறது’’

‘’நினைச்சது நடந்திருச்சி டாக்டர் சுபா’’

‘’இன்ட்ரான்கள் எல்லாம் இல்லையா’’

‘’இல்லை டாக்டர் சுபா, எல்லாம் திரும்பத் திரும்ப ஆய்வு செய்து உறுதிபடுத்தியாகிவிட்டது. மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவே இல்லை’’

‘’நேத்து வரை ஒருமாதிரி இருந்தியே ராம்’’

‘’அது நேத்து டாக்டர் சுபா. ஆனா இது இன்று. கடந்தகால இன்பத்திற்கு நிகழ்காலம் பொறுப்பாகிறது’’

‘’எனக்கும் மகிழ்ச்சி ராம். இதற்கடுத்து எப்போ அடுத்த தம்பதிக்கு பண்ணப் போறோம்’’

‘’இல்லை டாக்டர் சுபா, இன்னும் ஒரு வருஷம் கழிச்சி பண்ணலாம், இப்ப ஒன்னும் அவசரமில்லை’’
‘’சரி ராம்’’

‘’டாக்டர் சுபா, உனக்கு எப்போ கல்யாணம்’’

‘’தெரியலை ராம்’’

‘’உன்னை பொண்ணு கேட்டு வரலாம்னு யோசிக்கிறேன்’’

‘’ராம்’’

‘’உன்னை மாதிரி ஒரு நம்பிக்கையான பொண்ணுதான் வேணும் டாக்டர் சுபா’’

‘’ராம், உன்னை மாதிரி ஒரு ஆளு எல்லாம் எனக்கு கணவன் ஆக முடியாது, இதைபத்தி மேற்கொண்டு பேச வேண்டாம்’’

சந்தோசத்தில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிவிட்டோமோ என டாக்டர் ராம் ஒருகணம் சிந்தித்தார். மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். ஆனால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நாம் தடுமாறிவிடுகிறோம்.

‘’டாக்டர் சுபா, தெரியாமல் கேட்டுட்டேன்’’

சுபா பதில் எதுவும் சொல்லாமல் வெளியேறினாள். இந்த உலகம் பெண்களுக்கானதுதான். ஆனால் ஆண்கள் அதை ஒருபோதும் உணர்ந்து கொண்டது இல்லை. தானே இவ்வுலகத்தின் முதன்மை என ஒவ்வொரு ஆணும் ஒரு கணத்தில் எண்ணிவிடக்கூடும்.

அந்த வார சனிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்றுகொண்டு இருந்தாள் சுபா. ரெங்கநாதன் பற்றி அறிந்து கொள்ள நிறைய ஆர்வம் வந்து இருந்தது. சுபாவை கண்டதும் அடையாளம் கண்டவராக என்ன விசேசம் என்றார்.

‘’உங்க ரத்தம் பரிசோதனை பண்ணலாமா தாத்தா’’

‘’மரபணு பரிசோதனையா’’

‘’ஆமா தாத்தா’’

‘’தாராளமா பண்ணலாம்னோ’’


ரெங்கநாதனை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்றாள் சுபா (தொடரும்)