Showing posts with label தொடர்கதை - சில்வண்டுகள். Show all posts
Showing posts with label தொடர்கதை - சில்வண்டுகள். Show all posts

Saturday 25 July 2009

சில்வண்டுகள் - 10 (முற்றும்)

'' நீ சீனிவாசப் பெருமாள் பற்றி எனக்கு ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டாம், இந்த மனிதர்கள் கோபம் ஒன்றே அதிகம் அறிந்தவர்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர்கள். அமைதியாய் இருப்பதையும் கண்டு கோபப்படுபவர்கள். தேவர்களும் கோபத்தின் மொத்தவடிவமாகவே இருந்தார்கள். அசுரர்களை அழித்துத்தான் அவர்களால் எதையும் சாதிக்க முடிந்தது. பக்தியில் செழித்திருந்த அசுரர்களை அன்பினால் அமைதியினால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதை நீ அறிவாயா?'' என கோபத்துடன் கூறினார் சட்டை போடாத ஜகநாதன்.

''கோபங்கள் இல்லாமல் வாழ்வது இயலாத காரியம். சின்ன சின்ன விசயங்களுக்கும் கோபங்கள் வந்தே தீரும். கோபம் கொள்வதால் நிலை மாறப்போவதில்லை என அறிந்தும் கோபம் வந்தே தீரும். கோபம் அமைதிக்கான வழியே'' என சட்டை போட்ட ஜகநாதன் சொல்லியதும் மற்ற ஜகநாதன் ஆவேசமானார்.

''நீ இன்னும்மா மாறவில்லை, கோபம் அழிப்பது; எனது கோபம் அமைதியை குலைப்பது. அமைதியாய் இருக்க துடித்திடும் என்னை இந்த கோபம் விடுவதில்லை. உன்னை என்ன செய்கிறேன் பாரடா'' என சட்டை போடாத ஜகநாதன் சொன்னதும் சட்டை போட்ட ஜகநாதன் சுகுமாரனை 'வீட்டுக்கு போ' என சொன்னார்.

சுகுமாரன் அங்கிருந்து ஓடினான். பயங்கரமாகச் சிரித்தார் சட்டை போடாத ஜகநாதன். ''கோபத்துடனே வாழ்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்'' என சட்டை போட்ட ஜகநாதனை எரிக்கத் தொடங்கினார். போராடிப் பார்த்தும் முடிவில் எரிந்து சாம்பலானார் சட்டை போட்ட ஜகநாதன். சாம்பலை உடலில் பூசிக் கொண்டு ஊருக்குள் நடக்கலானார் அவர்.

ஓடிய சுகுமாரன் ஒரு இளைஞன் ஜகநாதன் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டான். மறைந்து இருந்து பார்த்தான். மூதாட்டி உணவு வந்து வைத்தாள் அதே போலே நடித்தாள். ஆனால் அந்த இளைஞன் உண்ணாமல் தட்டை கீழே தள்ளிவிட்டான். கதவைத் திறந்து கொண்டு தீப்புண்களுடன் வந்த அந்த வயதானவர் அந்த இளைஞனை ஒரு பக்கம் இழுத்துச் சென்றார். மூதாட்டியும் உடன் சென்றார். எரியும் வாசனை அடித்தது. அதிர்ந்து போனான் சுகுமாரன். திரும்பியவன் தோளில் ஜகநாதன் கையை வைத்தார். அரண்டு போனான் சுகுமாரன்.

உள்ளே போய் நான் வந்திருக்கிறேன் என சொல் என சொன்னார் அவர். சுகுமாரன் போக மறுத்தான். போ என சத்தமிட்டார். சுகுமாரன் உள்ளே நுழைந்தான். அறையில் ஒருவன் எரிந்து கொண்டு இங்கும் அங்கும் ஓடினான். அவனை கட்டையால் அடித்து அடக்கிக் கொண்டு இருந்தார்கள். 'ஆ' என கத்தியே விட்டான் சுகுமாரன். திரும்பி பார்த்த மூதாட்டி 'நீ திரும்பவும் வந்தாயா' என கூறிக்கொண்டே பொடியை தூவினார். சுகுமாரன் வெளியில் ஓடிவரும் முன் தீயை எறிந்தனர். சுகுமாரன் எரியத் தொடங்கினான்.

இதைக் கண்டு சிரித்துக் கொண்டே கோபம் இல்லா மனிதர்கள் இருக்கவே முடியாது. கோபம் அழிக்கும், அது அமைதிக்கான வழி இல்லை என சத்தமிட்டார். வயதானவரும் மூதாட்டியும் வந்து பார்த்தனர். எரிந்து சாம்பலானான் சுகுமாரன். ஜகநாதன் அவர்களை உள்ளுக்குள்ளே தள்ளிவிட்டுவிட்டு வீட்டினை எரித்துவிட்டு நடக்க தொடங்கினார். கிராமம் அதிர்ச்சிக்குள்ளாகியது. ஊர்க் கோவிலில் சென்று அமர்ந்தார். ஊரில் யாருமே சண்டை போடாமல் இருந்தார்கள். சத்தம் போட்டு பேசுவதற்கு கூட பயந்தார்கள். ஒரு நாள் ஜகநாதபுரத்திற்குள் ஒரு வாகனம் நுழைந்தது. அதிலிருந்து இறங்கிய இளைஞன் ஒருவன் நேராக கோவிலுக்கு சென்று ஜகநாதனைப் பார்த்தார். அவனுடன் வந்த அவன் குடும்பத்தினர் கோவிலைச் சுற்றினார்கள். ஜகநாதனிடம் பேசினான் அந்த இளைஞன்.

''கோபம் கொண்டால் நீங்கள் எரித்து விடுவீர்களாமே''

''ம்ம்''

''உங்களை யார் எரிப்பது?''

அவனை மேலும் கீழும் பார்த்தார் ஜகநாதன்.

''அன்பினை சொல்லக் கூட சத்தம் போட்டுத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அன்பினை வலியுறுத்த கோபம் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி கோபம் மனித வாழ்வில் பெரும் இடம் வகிக்கிறது. சாந்த சொரூபமாக இருக்க நடக்கும் நிகழ்வுகள் உதவுவதில்லை. எல்லா மணி நேரத்திலும் எல்லோரும் கோபம் கொள்வதில்லை. அன்பே உருவமாக வாழ்ந்த மனிதர்களையும் எவரும் மதித்து நடப்பதில்லை. அமைதியைத் தேடி இப்படி கோபம் கொண்டு அழையும் உம்மை யார் எரிப்பது என்றுதான் கேட்டேன்''

''நீ யார் எனத் தெரியவில்லை''

''உனது கண்களுக்கு என்னைத் தெரியாதது ஒன்றும் பெரிய விசயமில்லை. உன்னிடம் எத்தனை பெரிய சக்திகள் இருக்கின்றன. நீ நினைத்தால் எவரையும் எரிக்கலாம். ஆகாரம் காற்று எதுவுமின்றி நீ வாழலாம். மரணம் என்பதை அருகே விடாத வண்ணம் நீ இருக்கலாம். இத்தனை சக்திகளை கொண்டு நீ அமைதியை உலகில் நிலை நிறுத்தி இருக்கலாம். உன்னால் ஏன் முடிவதில்லை? உனது அமைதியை குலைத்தார்கள் என்றுதானே நீ நினைத்தாய். அவர்கள் ஏன் அமைதியற்று திரிகிறார்கள் என நினைத்தாயா?''

''நீ யார்? அவர்கள் அமைதியற்று இருக்கவே பிறந்தவர்கள். அவர்களுக்கு அமைதியாக இருந்தால் மரணித்துப் போனதாக நினைக்கக் கூடியவர்கள். எப்பொழுதும் சண்டையும் கோபமும் சத்தமும் போட்டு கொண்டே இருக்க வேண்டும் அவர்களுக்கு. அதனால் எனது அமைதிக்கு இடையூறு விளைவித்தால் எரிக்கிறேன். உன்னை எரிக்கும் முன்னர் சொல்லிவிடு''

''உனது செயல்களுக்கு காரணம் சொல்லிவிட்டாய் பார்த்தாயா! என் பெயர் சீனிவாச பெருமாள். அமைதியற்று இருப்பவர்களிடம் அமைதியை ஏன் எதிர்பார்க்கிறாய். இப்பொழுது சொல் உன்னை யார் எரிப்பது?''

ஜகநாதன் கோபம் கொண்டு எழுந்தார்.

'உடல் நிர்வாணம் ஒன்றும் அவசியமில்லை. மனம் நிர்வாணம் ஆக வேண்டும். நீ திருந்திவிடுவாய் என இருந்தேன். நீ என்றுமே மாறுவதில்லை என முடிவு கொண்டாய். உன்னை யார் எரிப்பது' என திரும்பவும் கேட்டான் அவன்.

ஜகநாதன் சுற்றத் தொடங்கினார். 'உன்னில் அமைதியும் அன்பும் நிலவட்டும். கோபம் உன்னிடம் இருந்து போகட்டும். இந்த மனிதர்கள் இப்படித்தான் சண்டை சச்சரவுகளுடன் இருப்பார்கள். நீ எரிப்பதை நிறுத்தி கொள்' என சீனிவாச பெருமாள் சொல்லியபோது ''ஏங்க இவ்வளவு நேரம் இங்க என்ன பண்றீங்க சீக்கிரம் வாங்க இராமேஸ்வரம் போகனும்' என கடிந்து கொன்டார் அவன் மனைவி.

வாகனத்தில் ஏறிக்கொண்டு கிளம்பியபோது தன்னையே எரிக்கத் தொடங்கினார் ஜகநாதன். கிராமம் வேடிக்கைப் பார்த்தது.

முற்றும்.

சில்வண்டுகள் - 9

நிலம் அதிர்ந்தது. வெகுவேகமாக தூரத்தில் ஒருவர் ஓடிவருவதைப் பார்த்தார் ஜகநாதன். சுகுமாரனை தனக்குப் பின்னால் சென்று நின்று கொள்ளுமாறு கூறினார். மோகனவள்ளி திரும்பிப் பார்த்தார்.

''ஜகநாதா என்னை காப்பாத்துடா, அவனை இனிமே அடிக்க மாட்டேன், ஜகநாதா என்னை மீண்டும் அழிய விட்டுராதேடா'' என மோகனவள்ளி சொல்லிக்கொண்டிருக்கும்போதே சட்டை போடாத ஜகநாதன் அங்கு கடுங்கோபத்துடன் வந்து நின்றார். மேலும் கீழும் தாவி குதித்தார். இதை மறைந்து நின்று பார்த்த சுகுமாரன் உறைந்து போனான். உள்ளம் நடுநடுங்கியது. கண்களை இறுக மூடிக்கொண்டான். ஆத்திரத்துடனும் ஆவேசத்துடனும் ஆடிய சட்டை போடாத ஜகநாதன் எதுவும் பேசாமல் தாயை எரிக்கத் தொடங்கினான். தாய் அலற ஆரம்பித்தாள்.

''வேண்டாம்டா ஜகநாதா, நிறுத்துடா ஜகநாதா, அவன் உன் அப்பாவையே எரிச்சான், நீ என்னை எரிக்கிறியேடா'' என சொல்லியபோது சட்டை போட்ட ஜகநாதனுக்கு கடுங்கோபம் வந்தது. ''என்னம்மா சொல்கிறாய்? நான் எரித்தேனா? உன்னை காப்பாற்றுவது மகாபாவம்'' என சொல்லிவிட்டு சுகுமாரனை அழைத்துக்கொண்டு ஊருக்குள் நடக்கத் திரும்பினார். சட்டை போடாத ஜகநாதன் சுகுமாரனைப் பார்த்துவிட்டார். ஆவேசத்துடன் ஓடி வந்து சுகுமாரன் முன்னால் நின்றார் அவர். சுகுமாரன் நடுநடுங்கினான். சட்டை போட்ட ஜகநாதன் 'இவன் அமைதியானவன், இவனை விட்டுவிடு'' என சொன்னதும் தரையில் ஆக்ரோஷமாக சுற்ற ஆரம்பித்தார் சட்டை போடாத ஜகநாதன். அதற்குள் தாய் எரிந்து சாம்பலாகி இருந்தார். கீழே விழுந்து சாம்பலில் உருள ஆரம்பித்தார். இந்த செய்கைகளை கண்டு சுகுமாரன் மயங்கி விழுந்தான்.

''நிறுத்து ஜகநாதா, உனது கோபத்தையும் ஆவேசத்தையும் நிறுத்து'' என சட்டை போடாத ஜகநாதனிடம் சென்று உரக்கச் சொன்னார் சட்டை போட்ட ஜகநாதன். உருள்வதை நிறுத்தியவர் மேலும் கீழும் பார்த்தார். உரக்கச் சிரித்தார். மயங்கிய நிலையிலே இருந்தான் சுகுமாரன்.

''நீ அமைதியை தேடிக் கொண்டாயோ''

''அமைதியில் தான் உள்ளேயே இருந்து கொண்டேன், நீ வெளியே சென்று இன்னமும் கோபம் தணியவில்லை, நான் உள்ளே இருந்து அமைதியை அறிந்து கொண்டேன்''

''வெளியேயும் அமைதி காணலாம் என அன்று உன்னிடம் கூறிவிட்டு வெளிச்சென்று சிவாங்குகம் காட்டினிலே கடுந்தவம் புரிந்து அமைதியின் உச்சத்தைத் தொட்டபோது கடும் மழை எனது தவம் கலைத்தது. இடம் மாறினேன். அமைதியாய் இருக்க இடம் தேடியபோதெல்லாம் எவரேனும் ஒருவர் இன்னல் தந்து கொண்டிருந்தார். எனவே நான் செய்யும் செயல்களுக்கு உன்னிடம் இனிமேல் விளக்கம் தரப்போவதில்லை''

''உனது அமைதிக்கு பங்கம் விளைவித்தவர் என அடுத்தவரை கைகாட்டுவதை இன்னும் நீ மறக்கவில்லை''

''நீயும் அமைதி இழந்துதானே இதோ இந்த மாபாவியின் சொல்கேட்டு வீட்டினுள் வருபவரை விரட்டி அடித்தாய், நீயும் அமைதியற்றே அலைந்து திரிந்தாய். சில தினங்களுக்கு முன்னர் அதிகாரிகளை பொடி தூவி நீ எரித்ததை நான் அறியமாட்டேன் என நினைத்தாயா? எனது கோபத்தை நீ அதிகரிக்காதே''

''மனிதர்கள் கோபம் இல்லாமல் வளர்ச்சி அடைய முடிவதில்லை. ஒன்றை உரசாமல் ஒன்று உருமாற்றம் கொள்வதில்லை எல்லாம் ஒருவித கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அதை அறிய நீ வெளியே திரிய வேண்டியதில்லை, உள்ளே நான் முடங்கிப்போக அவசியமில்லை. இதோ இவனே எனக்கு ஆசான்'' என சட்டை போட்ட ஜகநாதன் சுகுமாரனை நோக்கி காட்டியதும் அவனை எரிக்கத் தொடங்கி்னார் சட்டை போடாத ஜகநாதன்.

விழித்தான் சுகுமாரன். எரிய விடாமல் தடுத்தார் சட்டை போட்ட ஜகநாதன். ''நீ எரிப்பதைத் தொடர்ந்தால் நான் பிழைக்க வைப்பதை தொடர்வேன், நீ எரித்ததற்கு அர்த்தம் இல்லாமல் போகும் எனவே நீ நிறுத்திக்கொள்'' என அவர் கூறியதைக் கேட்டு மேலும் கீழும் குதித்தார் சட்டை போடாத ஜகநாதன்.

சுகுமாரனை நோக்கி ''அன்றே என் பின்னால் வராதே என உன்னிடம் சொன்னேன், உன்னைப் போன்றவர்கள் எங்கள் தவ யோகத்தினை தடுக்க வல்லவர்கள் இப்பொழுதே சென்று விடு'' என சொன்னதும் 'அவன் தாய் தந்தையர்களை இழந்துவிட்டான், இனிமேல் என்னுடனே இருப்பான், கோபம் அமைதிக்கான வழி என அறிந்து கொள் அமைதியை அழிக்கவல்லது அல்ல. கோபம் நேர்வழியில் நடக்க உதவி செய்யும், கோபத்தினால் ஏற்படும் மெளனம் சாதிக்கவல்லது. அந்த கோபத்தைக் கொண்டு நீ எரிப்பதை தவிர்த்துவிட்டு அமைதியை உருவாக்கக் கற்றுக்கொள்'' என சட்டை போட்ட ஜகநாதன் சொன்னதும் சுகுமாரனுக்கு சப்தநாடிகளும் ஒடுங்கிவிட்டது.

''ஜகநாதா'' என பலமாக கத்தினார் சட்டை போடாத ஜகநாதன். ''நீ அணிந்திருக்கும் ஆடையைப் போன்றே உன்னில் இருக்கும் கோபத்தை மறைத்து வைக்கிறாய். நான் அமைதியாய் இருக்கத்தான் விழைந்தேன். இதோ இந்த மாபாவி சொன்னதுபோல் இந்த உலகத்தில் அமைதியாகவே இருக்க இயலாது!'' என சொல்லிவிட்டு கிறுகிறுவென சுத்தினார்.

''இருக்க இயலும், சாதுக்கள் இருக்கிறார்கள். சதா இறைவனையே நினைத்துக்கொண்டு சக மனிதர்கள் மேல் கோபம் கொள்ளாமல் வாழ்பவர்கள் இருக்கிறார்கள்''

''ருத்ர தாண்டவம் தெரியாதா! புராணங்கள் படித்தறியா மூடனே! தேவலோகம் என சித்தரித்து தவத்தினை சிறுமைபடுத்திய முனிவர்கள் கூட்டம் தெரியாதா, கோபம் கொண்ட மகான்களே அதிகம் உண்டு! அமைதியை விரும்புவதுபோல் அழிப்பதையே குறிக்கோளாயும், அழிக்கும் எண்ணம் கொண்டவர்களை அதிகரித்தவர்களே அதிகம் உண்டு. எந்த இறைவன் அமைதியே சொரூபமாக வாழ்ந்தார்!'' என சொல்லி சுற்றிக்கொண்டே ஜகநாதனை நோக்கி வந்தார் சட்டை போடாத ஜகநாதன். இருவரையும் கண்ட சுகுமாரன் கதிகலங்கிப் போனான்.

''கோபத்தில் மதி இழந்து பேசாதே, ஒருவரை மட்டும் உனக்கு உரைக்கிறேன், அவர் சீனிவாசப் பெருமாள்'' என சட்டைப் போட்ட ஜகநாதன் சொன்னதும் சட்டைப் போடாத ஜகநாதன் அப்படியே நின்றார்.

(தொடரும்)

Friday 24 July 2009

சில்வண்டுகள் - 8

உடலிலும் முகத்திலும் தீப்புண்களுடன் கதவை திறந்து நின்ற வயதானவரைக் கண்டதும் சுகுமாரன் பயந்தேவிட்டான். அம்மா எனும் அலறல் சத்தத்தை கைகளால் வாய் மூடி அடக்கி வைத்தான். உடல் நடுங்கியது. முகத்தை மூதாட்டிப்பக்கம் திருப்பிக்கொண்டான். மூதாட்டி அப்பாடா என தனது பயம் போக்கினாள். அந்த வயதானவர் மூதாட்டியை நோக்கி வந்தார். சில புண்கள் ஆறியும் சில புண்கள் ஆறாமலும் இருந்தது.

''யாரது இது'' என்றார்.

''வெளியூர்காரன்'' என பதில் சொன்னார் மூதாட்டி.

வயதானவர் பேசியபோது அவருக்கு உடலில் வலி இருப்பது தெரிந்தது. பேசுவதற்கு மிகவும் திண்டாடினார். சாப்பிட ஏதாவது வேண்டும் என சைகையாலே கேட்டார். மூதாட்டியும் நீர் போல கொண்டு வந்து தந்தார். அதை பருகிய வயதானவர் திரும்பவும் அந்த அறைக்குள்ளே சென்றார். குறை ஆடை உடுத்திய அவரது உடலில் எங்கும் தீப்புண்களே ஆடையாகி இருந்தன. பயம் நீங்காமல் சுகுமாரன் அமர்ந்து இருந்தான். அறைக்குச் சென்ற வயதானவர் சுகுமாரனை கைகாட்டி அழைத்தார். மூதாட்டியும் போ சத்தம் போட்டுராதே என சொன்னார்.

சுகுமாரன் அறைக்குள் சென்றான். ஒரு மூலையில் சாம்பலும் அறையின் சுவரெல்லாம் கருப்பு வண்ணமும் படிந்து இருந்தது. வயதானவரின் கண்களில் நீர் கசிவதைக் கண்டான் சுகுமாரன். சாம்பலை எடுத்து உடலில் பூசிக்கொண்டார் அவர். பூசிக்கொண்டபோதே தனது விரலை வாயின் மேல் வைத்து மெளனமாக இருக்கச் சொன்னார். நடுக்கத்தில் உறைந்து போனான் சுகுமாரன். அறையில் சில மூலிகைகள் இருந்தன. படுக்கை ஒன்று போடப்பட்டு இருந்தது. வயதானவர் அந்த அறையிலிருந்து செல்லும் மற்ற அறையின் கதவைத் திறந்தார். மிகவும் இருட்டாக இருந்தது. அந்த அறை மிகவும் ஒடுக்கமாகவும் இருந்தது. அறையைத் திறந்த அந்த வயதானவர் சுகுமாரனை அங்கே நிறுத்திவிட்டு மூதாட்டியை அழைத்து வந்தார்.

அருகே வந்த மூதாட்டி சுகுமாரனிடம் ஒரு கதவைக் காட்டி ''உள்ளே தான் சட்டை போட்ட ஜகநாதன் இருக்கான், நீ பொறுமையா இருந்தா அவன் உன்னை ஒன்னும் செய்யமாட்டான், சத்தம் போடாம உள்ளே போய் அவனைப் பார்த்துட்டு வா'' என சுகுமாரனை போகச் சொன்னார். சுகுமாரன் தைரியத்துடன் கதவைத் திறந்தான். உள்ளே வெளிச்சம் தெரிந்தது. ஒவ்வொரு படியிலும் கால் வைத்து இறங்கினான். இறங்கிக்கொண்டே இருந்தான். ஒருவர் மட்டுமே செல்லும்படி வழியானது அமைந்து இருந்தது. பல படிகள் தாண்டி கடைசி படியில் கால் வைத்து குனிந்து பார்த்தான். ஆடைகள் அணிந்து ஆபரணங்கள் அணிந்து தலைமுடியை நேர்த்தியாக கட்டி வைத்திருந்த அதே இளைஞனைக் கண்டான்.

அருகில் சென்று அமர்ந்தான். கண்கள் மூடினான் சுகுமாரன். தியான நிலையில் தன்னை இருத்திக்கொண்டான். கண்களில் தாயும் தந்தையும் வந்து போயினர். ஒவ்வொரு நிகழ்வும் அவனது நினைவில் வந்து ஆடியது. ஏதாவது ஒரு நிகழ்வில் மனதை நிறுத்திக்கொள்ள முயற்சித்தான். ஆனால் மரணித்துப்போன பெற்றோரின் நினைவு அவனை மிகவும் சோர்வாக்கியது. ஆனால் அமைதியாகவே இருந்தான் சுகுமாரன். இவ்வாறு அமர்ந்திருந்த சில விநாடிகளில் ஜகநாதன் கண்கள் திறந்தார். அருகில் கண்கள் மூடி அமர்ந்து இருந்த சுகுமாரனை நோக்கினார். அவனது கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருப்பதைக் கண்டவர் கண்களைத் துடைத்துவிட்டார். விழித்த சுகுமாரன் ஜகநாதனை வணங்கினான்.

''என்ன விசயமாக உள்ளே வந்தாய்'' என ஜகநாதன் கேட்டதும் சுகுமாரன் பதட்டமடைந்தான். ''என்ன விசயமாக உள்ளே வந்தாய்?'' என அமைதியாகவேக் கேட்டார். ''என் அம்மா என் அப்பா என் தங்கை'' என ஒவ்வொரு வார்த்தையாக சொன்னான் சுகுமாரன். மெளனமாக அமர்ந்து இருந்தார் ஜகநாதன். ''அவங்க இறந்துட்டாங்க, அதுக்கு உங்க அண்ணன் தான் காரணம், கேட்டேன் என் பின்னால வராதேனு சொல்லிட்டார்'' என வியர்வை வழிந்தோட சொன்னான் சுகுமாரன். ஜகநாதன் ஏதும் பேசவில்லை. ''நீங்க கூட அதிகாரிகளை எரிச்சீங்க, தாத்தா சாம்பல் காட்டினார்'' என சொன்னான் சுகுமாரன்.

எழுந்து நின்றார் ஜகநாதன். ''வா மேலே போகலாம்'' என அழைத்தார். சுகுமாரன் பயந்துகொண்டே ஜகநாதன் பின்னால் நடந்தான். சூரியன் அந்த அறைக்குள் பல துவாரங்கள் வழியாக வந்து கொண்டிருப்பதை அப்பொழுதுதான் கண்டான் சுகுமாரன். மேலே வந்ததும் மூதாட்டியிடம் ''அம்மா இப்போ எங்கே தெரியுமா?'' என்றார். ''வெளியே போனா இன்னும் வரலை'' என சொன்னார் மூதாட்டி. ''எரிச்சிட்டான் ஜகநாதன்'' என அமைதியாகவே சொன்னார். ''என் பையனை உயிரோட அவ எரிச்சபோது நீ உள்ளேயே இருந்துட்ட, அவர் எரிஞ்சது தெரிஞ்சு நீ வரலை, இவ எரிஞ்சு தெரிஞ்சு நீ வரலை, இதோ காப்பாத்த போய் உடம்பெல்லாம் புண்ணா இருக்கு, அவ கூப்பிட்டானு நீயும் வெளியே வந்து அப்பாவி சனங்களை எரிச்சி வீட்டுக்கு முன்னால சாம்பலாக்கி இருக்க இனி நமக்கு யாரு சோறுக்கு வழி பண்ணுவா, அவளும் போய்ட்டாளே'' என மூதாட்டி சொன்னதும் ''இதோ அமைதியாவே இருக்கான் இவன், வெளியேயும் அமைதியா இருக்கான், உள்ளேயும் அமைதியா இருக்கான்'' என சுகுமாரனை நோக்கி கைகாட்டினார் ஜகநாதன். மூதாட்டி அமைதியானாள்.

சுகுமாரனை அழைத்துக்கொண்டு ஜகநாதன் வெளியே நடக்கலானார். ஜகநாதனை வழியில் பார்த்த அடுத்த நிமிடம் ஊரெல்லாம் நிசப்தத்தில் ஆழ்ந்தது. காய்த்ரி தனது வீட்டிலிருந்து சுகுமாரன் ஜகநாதனுடன் செல்வதைப் பார்த்தார். ஊரின் எல்லைக்குச் சென்றார் ஜகநாதன். தாய் சாம்பலான இடத்தில் சென்று நின்றார். சுகுமாரன் ஜகநாதன் கண்கள் மூடுவதைக் கண்டான். உயிர்த்தெழுந்தார் தாய். உடல் உதறியது சுகுமாரனுக்கு.

''என்னை நீ காப்பாத்திட்டிடே ஜகநாதா, நான் போட்ட சத்தம் உன் காதுல விழுந்ததாடா'' என தாய் உறக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் சொன்னதும் சுகுமாரனின் கண்களை நம்ப இயலவில்லை. பயந்துகொண்டே ஜகநாதனிடம் கேட்டான். ''சாம்பல் கரைஞ்சி இருந்தா, தொலைஞ்சி இருந்தா நீங்க இப்படி செய்ய இயலுமா?'' எனக் கேட்டதும் ''உன் தாய் தந்தையர் உயிரோடு வேண்டுமா'' என்றார் ஜகநாதன். சுகுமாரன் ஆமாமாம் என வேகமாகத் தலையாட்டினான்.

''ஜகநாதா என்னடா உன் கோபம் எங்கடா போச்சு, இவனை ஏண்டா இன்னும் உயிரோட விட்டுருக்க, யாருடா இவன்?'' என மோகனவள்ளி சொன்னதும் ''இவன் உள்ளேயும் வெளியேயும் அமைதியாகவே இருக்கிறான்'' என ஜகநாதன் சொன்னதும் மோகனவள்ளி சுகுமாரனை பளார் பளார் என அறைய ஆரம்பித்தார். அடி வாங்கிக் கொண்டே சுகுமாரன் 'அடிக்காதீங்கம்மா, என்னை அடிக்காதீங்கம்மா' என நின்ற இடத்திலே நின்றான். ஓடவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மதியூர் மண் வேலை செய்ய ஆரம்பித்தது. ஜகநாதன் 'இந்த உலகத்துல அமைதியே சொரூபமா இருக்கற மனுசங்க இருக்காங்க'' என சொல்லிவிட்டு வீடு நோக்கி நடந்தார். சுகுமாரனை எட்டி உதைத்தார் மோகனவள்ளி. தள்ளி விழுந்த சுகுமாரனைத் தொட்டுத் தூக்கினார் ஜகநாதன். தாயை நோக்கி வேண்டாம் என்பது போல் பார்த்தார்.

(தொடரும்)

சில்வண்டுகள் - 7

தனராஜும் மற்ற அதிகாரிகளும் உடனடியாக ஜகநாதபுரத்தைவிட்டு கிளம்பினார்கள். பத்திரிக்கை நிருபர்களும் தொலைகாட்சி நிறுவனத்தாரும் இதுகுறித்து எந்த செய்தியும் வெளியிடுவதில்லை என முடிவு செய்தார்கள். இராமேஸ்வரம் சென்றதும் தனராஜ் மற்ற அதிகாரிகளிடம் பேசி இனிமேல் இந்த விசயம் குறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என வலியுறுத்தினார். இதைக் கேள்விப்பட்ட மேலதிகாரிகள் தனராஜ் மேல் கடுங்கோபம் கொண்டார்கள். மற்ற அதிகாரிகளும் தனராஜ் சொன்னதை வலியுறுத்தவே முழு சம்மதமில்லாமல் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் எதுவும் செய்யாமலிருப்பது நல்லது என மேலதிகாரிகளும் எண்ணினார்கள். தான் மட்டும் தனியாக நாகலாபுரம் கிளம்பினார் தனராஜ். உள்ளூர மனது கொதித்துக்கொண்டிருந்தது. சுகுமாரனும் அந்த அதிகாரிகளுடன் சேர்ந்து எரிந்து போனதாகவே நினைத்துக்கொண்டிருந்தார் தனராஜ்.

ஜகநாதன் வீட்டிற்குள் நுழைந்த சுகுமாரன் ஆள் அரவமற்று இருப்பதைக்கண்டு சற்று தயங்கினான். நடு அறைக்குள் வந்தவன் அங்கே ஒரு வயதான மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்டான். அந்த மூதாட்டியைக் கண்ட அடுத்த கணம் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டான். ஆனால் மூதாட்டி கவனித்துவிட்டாள். சத்தம் எதுவும் போடாமல் சுகுமாரனிடம் வந்தாள். சுகுமாரன் தைரியமாக மறைந்து நின்றான். அவனருகில் வந்த மூதாட்டி 'சத்தம் போடாதே, வந்து உட்காரு' என அவனை அழைத்து நடு அறையில் அமர வைத்தார். சுகுமாரன் அமைதியாக அமர்ந்து இருந்தான்.

சமையலறைக்குச் சென்ற மூதாட்டி உணவும், தண்ணீரும் கொண்டு வந்து வைத்தார். ''சாப்பிடு'' என சொன்னார் மூதாட்டி. சுகுமாரனுக்கு சாப்பிட மனம் இடம் கொடுக்கவில்லை. உடனே மூதாட்டி சாதத்தை பிசைந்து தான் ஒரு வாய் உண்டார். தண்ணீர் குடித்தார். பொத்தென விழுவது போல் மெதுவாக விழுந்தார். சுகுமாரன் பதட்டம் கொண்டான். மூதாட்டி எழுந்து சுகுமாரனை நோக்கிச் சிரித்தார். ''சாப்பிடு'' என்றார். சுகுமாரன் தனது பெற்றோர்கள் உற்றார்கள் உறவினர்களை நினைத்து கண்ணீருடன் சாப்பிட ஆரம்பித்தான். ''சாப்பாடு காரமா இருக்கா'' என்றார் மூதாட்டி. இல்லையெனத் தலையை ஆட்டியவாறே சாப்பிட்டு முடித்தான்.

''என்ன விசயமா வீட்டுக்குள்ளாற வந்த நீ'' மெதுவாகக் கேட்டார் மூதாட்டி. கேட்டவர் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறையில் சென்று தேநீர் போட ஆரம்பித்தார். சாப்பிட்ட தட்டிலேயே கைகள் அலம்பிவிட்டு அங்கேயே அமர்ந்து இருந்தான் சுகுமாரன். தேநீருடன் வந்தார் மூதாட்டி. ''இப்ப சொல்லு'' என்றார் மூதாட்டி. சுகுமாரன் ஒன்றுவிடாமல் அனைத்து விசயங்களையும் சொல்லி முடித்தான். தேநீர் சற்று ஆறி இருந்தது. ''ஆறிப்போயிருக்கும் எடுத்துக் குடி'' என்றார் மூதாட்டி. சுகுமாரன் தண்ணீர் குடிப்பதுபோல் வேகமாக குடித்து முடித்தான். ''இப்ப என்ன செய்யப் போற நீ'' என மூதாட்டிக் கேட்டதும் ''எதுக்காக இவங்க இப்படி ஆனாங்க'' என்றான் சுகுமாரன். ''எப்படி ஆனாங்க'' எனத் திருப்பிக் கேட்டார் மூதாட்டி. ''உங்க வீட்டு வாசலில வந்து பாருங்க, சாம்பல் மட்டும்தான் இருக்கு'' எனச் சொன்னான் சுகுமாரன். ''ஏன் இப்படி எரிக்கிறாங்கனு கேட்கிறியா'' என கேட்டார் மூதாட்டி. ''ஆமா, ஏன் கொலைவெறியோட கோபத்தோட திரியறாங்க'' என சுகுமாரன் கேட்டதும் மூதாட்டி கண்களை மூடிக்கொண்டார். சுகுமாரன் அமைதியாகவே அமர்ந்து இருந்தான். முழு பயமும் போய்விட்டது ஆனால் அந்த இளைஞனைக் காண கண்கள் அறைகளில் எல்லாம் சுழன்று கொண்டிருந்தது.

நாகலாபுரம் அடைந்தார் காவல் அதிகாரி தனராஜ். பாலமுருகன் மட்டும் காவல் நிலையத்தில் அமர்ந்து இருந்தார். தனராஜ் வந்ததும் பாலமுருகன் சத்தம் போட்டார். ''நான் அப்பவே சொன்னேன், நீங்க கேட்டு இருந்தா இப்படி அநியாயமா ரொம்ப பேரு செத்து இருப்பாங்களா, நீங்கதான் பெரியவருனு உங்களுக்கு நினைப்பு நீங்க ஜகநாதபுரம் போய் என்ன கிழிச்சீங்க, நான் ஒவ்வொரு இடமா போய் பல தகவல்களை சேகரிச்சிட்டு வந்திருக்கேன்'' இதைக்கேட்ட தனராஜுக்கு கோபம் ஜிவ்வென ஏறியது. ''நீ அங்கே வந்திருந்தா தெரிஞ்சிருக்கும், வித்தை காட்டுறான்ங்கயா அவன்க. சுட்டா சுட்டவன் மேல குண்டு பாயுது, பொடியைத் தூவறான் பட்டுனு தீ பிடிக்குது, அதுக்கு மேல பெத்த தாயையேவே எரிச்சிட்டான் ஒருத்தன், நீ இங்க உட்கார்ந்துட்டு என்னைப் பேசறியா' என அடிக்க கையை ஓங்கினார் தனராஜ்.

''நிறுத்துங்க சார், மதியூர் பூசாரி சொல்லித்தான் கோட்டையூர் போலீஸ்காரங்க பிணமா கிடந்த ஊர்க்காரங்களை மொத்தமா எரிச்சி இருக்காங்கனு கோட்டையூர் போலீஸ் மாரிமுத்து என்கிட்ட சொன்னான். அந்த பூசாரியையும் போலீஸ்தான் கொன்னதாக சொன்னான். ஊர்த்தண்ணிய நான் சோதனைப்பண்ணச் சொன்னேன், அதுல விசம் கலந்துருக்குனு தெரியவந்துருக்கு இதோ ரிப்போர்ட். அதோடு மட்டுமில்லாம சிவாங்குகம் வட்டத்தைச் சேர்ந்த காடு ஒரு பக்கம் எரிய ஆரம்பிச்சதைப் பார்த்த வனத்துறை அதிகாரிங்க பால்ராஜ், நாகராஜ், திப்புக்குமார் மற்ற பக்கங்களுக்கும் தீ வைச்சி இருக்காங்க. திப்புக்குமார் என்கிட்ட ஒப்புக்கிட்டான். பவித்ரபுரியில நடந்தது குடும்பப் பகை. பாறைக்குப் பக்கத்துல ஒரு தீபராஜ் குடும்பத்துக்காரங்க சிலர் ஒவ்வொரு நாளா அடிபட்டு செத்து இருக்காங்க. இது வெள்ளையன் குடும்பம் செய்ற சதினு அந்த குடும்பம் திட்டம் போட்டு இருக்கு. இன்னைக்கு பாறைக்குப் போறோம்னு வெள்ளையன் பேசினதை வைச்சி கன்னிவெடியை பாறைக்கு போற வழியெல்லாம் தீபராஜ் குடும்பம் வைச்சி இருக்காங்க, அந்த வேளைப் பார்த்து அங்கே போன நம்ம அதிகாரிகளும் கிராம மக்கள் சிலரும் பாறைக்குள்ள போனப்ப வெடி வெடிச்சி சின்னபின்னமாகி இருக்காங்க. உள்ளே யாராவது இருந்து உயிர் பிழைச்சி இருந்தா அதிசயம் தான் சார்' என படபடவென சொல்லி முடித்தார் பாலமுருகன்.

''அதிசயம் தான் பாலமுருகன், நீங்க கதை எழுதப் போகலாம்' என மேசையில் இருந்த பாலமுருகனின் துப்பாக்கியை எடுத்து பாலமுருகனை நோக்கிச் சுட்டார் தனராஜ். பாலமுருகன் அந்த இடத்திலேயே உயிர் துறந்தார். பாலமுருகன் இறந்துகிடப்பதாக தகவல் பரப்பினார் தனராஜ். பாலமுருகன் நடவடிக்கையே சில நாளா சரியில்லாமத்தான் இருந்தது எனப் பேசிச் சென்றார்கள்.

கண்கள் மூடிய மூதாட்டி சில மணி நேரங்கள் கழித்தே கண்ணைத் திறந்தார். சுகுமாரன் அருகில் இருப்பதைக் கண்டவர் ''நீ இவ்வளவு பொறுமையானவனா இருந்ததாலதான் உன்னோட சட்டை போடாத ஜெகநாதன் பேசி இருக்கான்'' என மூதாட்டி சொன்னார்.

''சட்டை போடாத ஜெகநாதனா?'' என சுகுமாரன் ஆவலுடன் கேட்டான். மூதாட்டி ஒரு அறையின் கதவினை அடைத்துவிட்டு வந்தார். ''நீ கத்தாம இருந்தா உன் உயிருக்குப் பிரச்சினை இல்லை'' என சொல்லியவர் ''என் பையனுக்கு இரண்டு குழந்தைங்க அதுவும் இரட்டை குழந்தைங்க ஒரே மாதிரியா இருந்ததால ஜெகநாதனு இரண்டு பேருக்கும் பேரு வைச்சாங்க! என் பையன் முருகவேலை கல்யாணம் பண்ணமாட்டேனு அடம்பிடிச்சா மோகனவள்ளி. பிடிக்காம செய்ய வேண்டாம்னு நானும் வேண்டாம்னு சொன்னேன். ஆனால் சில வருசத்தில நடந்த சின்ன சின்ன நிகழ்வினால முருகவேல் மோகனவள்ளியைக் கட்டிக்கிட்டான். மோகனவள்ளியோட தங்கை புனிதவள்ளியை என்னோட இன்னொரு பையன் தங்கவேலுக்கு கட்டி வைச்சேன்''

''காயத்ரியா பொண்ணோட பேரு'' என்றான் சுகுமாரன். ''நீ வெளியூர்க்காரனா, உள்ளூர்க்காரனா' என மூதாட்டி சிரித்துக்கொண்டே கேட்டார். ''அவங்க வீட்டுலதான் ஒளிஞ்சிருந்தேன்'' என சொன்னான் சுகுமாரன். அப்பொழுது மூதாட்டி அடைத்துவிட்டு வந்த அறையின் கதவு திறந்தது. சுகுமாரன் கத்திவிடுவானோ என பயந்து போனார் மூதாட்டி.

(தொடரும்)

Wednesday 22 July 2009

சில்வண்டுகள் 6

காவல் அதிகாரி தனராஜ் அவர்களின் உத்தரவுப்படி தொலைகாட்சி நிருபர்கள் ஜகநாதபுரத்தின் எல்லைக்கு வெளியேயே நின்றுகொண்டார்கள். மேலும் பல காவல் அதிகாரிகளும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். தான் தகவல் தெரிவித்தால் மட்டுமே ஊருக்குள் வரவேண்டும் என அவர்களிடம் எச்சரிக்கைக் கொடுத்தார். நிருபர்களுக்கும் உயிர் மேல் ஆசை இருக்கத்தான் செய்தது. ஒரே ஒரு நிருபரிடம் மட்டும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார் தனராஜ்.

பவித்ரபுரியில் சாம்பலை படம் பிடித்தார்கள் தொலைகாட்சி நிறுவனத்தினர். இந்நிகழ்ச்சியைக் காணாத போதிலும் கண்டதுபோல் கிராமத்து மக்கள் கதைவிட ஆரம்பித்தார்கள். தீ சுவாலை வானைத் தொட்டது என்றார் ஒருவர். இந்நிகழ்வினைக் கண்டவர்கள் எரிந்து சாம்பலான விசயம் சாம்பலாகி இருந்தது. கோரமாக காட்சி அளித்தார் அந்த முனிவர் என்றார் மற்றொருவர். உடலெல்லாம் சாம்பல் பூசி இருந்தார் அந்த முனிவர் என்றார் மற்றொருவர். காணாத தெய்வத்தை கண்டதுபோல் கொண்டாடும் இந்த பூமி, காணாமலே கண்ணுக்குள் இவர்களுக்குத் தெரியுமே சாமி! ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சொன்ன விசயத்தை படம்பிடித்துக்கொண்டு வியாபார நோக்கில் மட்டுமே விசயத்தை எடுத்துச் சென்றார்கள்.

சுகுமாரனும் அந்த அதிகாரிகளுடன் இறந்துபோனதாகவே எண்ணிக்கொண்டிருந்தார் தனராஜ். பல மணி நேரங்களாக ஒரு வீட்டினுள் ஒளிந்திருந்த சுகுமாரனை அந்த வீட்டிலிருந்த இளம்பெண் காயத்ரி பார்த்துவிட்டார். 'யார் நீ' என கேட்டவுடன் சுகுமாரன் பயந்து கொண்டே வெகுவேகமாக கதைச் சுருக்கம் சொன்னான், ஜகநாதனைப் பற்றி சொல்லாமல் தவிர்த்தான். சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மிகவும் பரிதாபப்பட்டாள் காயத்ரி. யாரோடு பேசிட்டு இருக்கே என காயத்ரியின் தாயார் புனிதவள்ளி உள்ளிருந்து வந்தார். வீட்டினுள் ஒரு ஆடவன் இருப்பதைக் கண்ட அவர் என்ன பழக்கம் பழகி இருக்கே என காயத்ரியை பளார் என கன்னத்தில் அறைந்தார். ஆ அம்மா இவர் தஞ்சம் புகுந்தவர் என கன்னத்தைப் பிடித்துக்கொண்டே சொன்னார். வெளியே போடா என சுகுமாரனை நோக்கி சத்தம் போட்டார் அவர். ஜகநாதன் என சொன்னான் சுகுமாரன். ஜகநாதனா என்றார் அந்த தாயார் அந்த கோபத்தின் ஊடே.

மதியூரில் நடந்த விசயத்தையும் ஜகநாதனைத் தான் தொடர்ந்து சென்ற விசயத்தையும் சுகுமாரன் சொன்னான். அதைக்கேட்ட அந்த தாயார் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டார். காயத்ரி பதட்டத்துடன் காணப்பட்டாள். ஜகநாதன் பற்றி உனக்குத் தெரியுமா எனக் கேட்டான் சுகுமாரன். ம் தெரியும். அவங்க குடும்பம் ரொம்ப விசித்திரமானது என பதட்டத்துடன் சொன்னாள் காயத்ரி. காயத்ரி அவ்வாறு சொன்னதைக் கேட்ட அந்த தாயார் வேகமாக எழுந்து வந்து காயத்ரியிடம் வாயை மூடு என சத்தமிட்டார். சுகுமாரன் விபரீதம் புரிந்து கொண்டவன் அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என வீட்டின் சன்னல் வெளியே ஜகநாதன் வீட்டுத் தெருவினைப் பார்த்தான் சுகுமாரன். தனராஜ் ஜகநாதன் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்தார். சற்றுத் தொலைவில் ஒரே ஒரு நிருபர் மறைந்து கொண்டு அந்த வீட்டினைப் படம் பிடித்துக்கொண்டு இருந்தார்.

வீட்டின் கதவைத் தட்டினார் தனராஜ். கதவைத் திறந்துகொண்டு அந்த தாய் வந்தார்.

''இன்னும் இங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க சொன்னா கேளுங்க'' என கோபத்துடன் சொன்னார் அந்த தாய்.

''ஏன் உங்க பையன் இப்படி பண்ணினார், ஜகநாதன் பத்தி தெரிஞ்சிக்கத்தான் வந்தோம் ஆனா இப்போ வந்தவங்களை இழந்து நிற்கிறேன்'' என பரிதாபமாகச் சொன்னார் தனராஜ்.

வீட்டின் கதவை அடைத்த அந்த தாய் வெளியே வந்தார். தனராஜினை அழைத்துக்கொண்டு நடந்தார். அந்த தாயுடன் தனராஜ் நடந்தார்.

''ஏன் இப்படி நடந்துக்கிறாங்க'' எனக் கேட்டார் தனராஜ்.

ஊரின் எல்லையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அந்த தாய். எல்லையினை அடைந்ததும் அங்கே பல காவல் அதிகாரிகளும் நிருபர்களும் இருப்பதைக் கண்டார். அவர்கள் அருகே வந்த அந்த தாய் நீங்க எல்லாம் போயிருங்க இதோ இவரையும் அழைச்சிக்கிட்டு' என சொன்னார்.

'என்னம்மா நிறைய பேரு எரிஞ்சி சாம்பலாகி இருக்காங்க ரொம்ப கூலா போங்கனு சொல்றீங்க, உங்களை நாங்க அரெஸ்ட் பண்றோம்' என சொன்னார் ஒரு அதிகாரி.

'ஏன் இப்படி அவசரப்படறீங்க நான் என்ன சொல்லி உங்களை இங்கே வரவைச்சேன்' என வேதனையில் அதிகாரிகள் நோக்கி கத்தினார் தனராஜ்.

'என்னை அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போங்க ஆனா இனிமே அந்த வீட்டுக்குப் பக்கத்திலே போகாதீங்க' என்றார் அந்த தாய்.

'உங்க கணவரு எங்கே ஏன் இப்படி அவங்க பண்றாங்க' எனக் கேட்டார் தனராஜ்.

'இனிமே எதுவும் பேச வேண்டாம், என்னை என்ன செய்யனுமோ அதை செய்ங்க, வீட்டுக்குள்ளப் போக வேணாம்' என சற்று அழுத்தமாகவே சொன்னார் அந்த தாய்.

இதைக்கேட்ட மற்ற அதிகாரிகள் பெரும் கோபம் கொண்டார்கள். இவங்களை கொண்டு போய் விசாரிக்க விதத்தில விசாரிச்சா எல்லாம் வெளியே வந்துரும் என ஒரு சேர சத்தம் போட்டார்கள். தனராஜ் தனது தலையை பிடித்துக்கொண்டார். அந்த தாய் அதிகாரிகளை கோபப் பார்வை பார்த்தார். அப்பொழுது நிலம் அதிர்ந்தது. அந்த அதிகாரிகள் திரும்பினார்கள். ஜகநாதன் வெகுவேகமாக அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

'நீயும் தோத்துட்டியாடா' என ஜகநாதனை நோக்கி பெரும் சத்தமிட்டார் அந்த தாய். தனராஜ் ஜகநாதனைக் கண்டு பெரும் கலக்கம் கொண்டார். எதுவும் செஞ்சிராதீங்க என அதிகாரிகள் நோக்கி சத்தமிட்டார். இதனையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருந்த நிருபர்கள் ஜகநாதனின் கண்களைக் கண்டு உடலைக் கண்டு நடுங்கினார்கள். படம் பிடிப்பதை நிறுத்தினார்கள். சில அதிகாரிகள் துப்பாக்கிகளை கீழே போட்டார்கள். ஜகநாதன் அந்த தாயின் சப்தம் கேட்டு மேலும் கீழும் ஆவேசமாக குதித்தார். அவரது செயலைக் கண்ட அந்த அதிகாரிகள் பின்னால் நகர்ந்தார்கள். அந்த தாய் ஜகநாதனை நோக்கி போ எங்காவது போ இங்கே ஏன் வந்த என சத்தமிட்டார். கோபமாக அவர் சொன்னவிதம் கண்டு மற்றவர்கள் பயந்தார்கள்.

ஒரு சில அதிகாரிகள் ஜகநாதனை நோக்கி சுட்டார்கள். அவர்கள் சுட்ட தருணத்தில் அவர்கள் மேலே குண்டுபாய்ந்ததும் அந்த அதிகாரிகள் அலறிக்கொண்டே விழுந்தார்கள். விகாரச் சிரிப்புடன் அந்த தாய் ஜகநாதன் நோக்கி சிரிக்க ஆரம்பித்தார். அசைபட கருவியை எறிந்துவிட்டு நிருபர்கள் ஓட்டம் எடுத்தனர். தனராஜ் பயங்கரமாக சத்தம் போட ஆரம்பித்தார். நான் சொல்றதைக் கேட்கறதா இருந்தா இங்கே இருங்க இல்லைன்னா எல்லாம் கிளம்பிப் போங்க என கடுமையாகவே சொன்னார். குண்டு பாய்ந்த அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் வெகுவேகமாக சென்றது.

போ இங்கே நிற்காதே என ஜகநாதன் நோக்கிச் சொன்னார் அந்த தாய். ஜகநாதன் கடுங்கோபத்துடன் வந்த பாதையிலே திரும்பி தெற்கு நோக்கி நடக்கலானார். தனராஜ் அம்மா என்னம்மா நடக்குது சொல்லுங்கம்மா நாங்க உதவி பண்றோம் இப்படி அநாவசியமா பலரோட உயிர் பலியாகிறதை தடுக்க உதவி பண்ணுங்கம்மா என கெஞ்சினார்.

'இந்த உலகத்துல வீட்டுக்குள்ளேயும் சரி, வெளியேயும் சரி அமைதியாகவே இருக்க முடியாதுனு சொன்னா என் இரட்டைபுள்ளைக இரண்டு பேரும் கேட்டாத்தானே' என பயங்கரமாக சிரித்தார் அந்த தாய். இதைக்கேட்ட தனராஜும் மற்ற அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த தாய் சொன்ன அடுத்த விநாடியிலே எரிய ஆரம்பித்தார். ஜகநாதா நிறுத்துடா, வேண்டாம்டா ஜகநாதா! அவன் உங்கப்பாவையே எரிச்சான், நீ என்னை எரிக்கிறியேடா என்னை காப்பாத்துடா என துடிதுடித்துக்கொண்டே சாம்பலானார் அந்த தாய்! கோபம் கொப்பளிக்க தெற்கே தொடர்ந்து நடந்த ஜகநாதன் கடலினுள் தாவினார்.

அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக்கூட்டம் போட்டார்கள்! தன் உயிர் பற்றி எந்தவித கவலையும் இன்றி சுகுமாரன் ஜகநாதன் வீட்டிற்குள் நுழைந்தான்.

(தொடரும்)

Tuesday 21 July 2009

சில்வண்டுகள் - 5

நாகலாபுரம் மருத்துவமனைக்கு வெகு அருகாமையில் சென்றபோது காருண்யன் மயக்கம் அடைந்து விழுந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் அவரின் உயிர் பிரிந்தது. பாதிரியார் பெரும் கலக்கம் அடைந்தார். இந்த தகவலை உடனடியாக நாகலாபுர காவல் நிலையத்திற்குத் தெரிவித்தார். இதை கேள்விபட்ட தனராஜ் விரைந்து அவ்விடம் வந்தார். தனது உதவி அதிகாரிகளிடம் முறைப்படி செய்ய வேண்டியதை செய்ய சொல்லிவிட்டு ஜகநாதபுரம் செல்வதற்கு ஆயத்தமானார். அப்பொழுது உதவி அதிகாரி பாலமுருகன் ஜகநாதன் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் இதனை இத்துடன் விட்டுவிடலாம் என கூறினார். இதைக்கேட்டதும் தனராஜ் எள் வெடிப்பது போல் வெடித்துக் கொட்டிவிட்டார். சுகுமாரன் இதையெல்லாம் பார்த்து பதறியபடியே நின்றான். பாதிரியார் கர்த்தரிடம் வேண்டிக்கொண்டு இருந்தார்.

காவல் நிலையம் திரும்பிய தனராஜ் கேரள எல்லை காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். ஜகநாதன் பற்றிய விபரங்களைத் தந்தார். மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு மற்றொரு உதவி அதிகாரி தேவராஜுடனும், சுகுமாரனுடன் அன்று இரவே கிளம்பினார். மேலதிகாரிகள் நடந்த விசயங்களைக் கேட்டு கொதித்துப் போனார்கள். தான் தோன்றித்தனமாக ஒரு தனி நபர் நடந்து கொண்டு செல்வதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தனராஜ் கொடுத்த தகவலின்படி சில அதிகாரிகளை உடனே கேரள எல்லைக்கு அனுப்பி வைத்தார்கள். கண்டதும் சுடச் சொல்லி உத்தரவு போட்டார்கள்.

ஜகநாதன் பவித்ரபுரி கிராமத்தை அடைந்தார். அந்த கிராமத்திற்கு உள்ளே செல்லாமல் வெளிப்புறமாகவே நடந்து சென்றார். இவரைக் கண்ட ஒரு சில கிராமத்து நபர்கள் வணங்கிவிட்டுச் சென்றார்கள். வணங்கிய நபர்களைக் கண்டு மறு வணக்கம் செலுத்தியவாரே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் ஜகநாதன். ஊர் எல்லையைக் கடந்ததும் பெரிய கல்பாறை தென்பட்டது. குகைகள் போன்ற அமைப்புடையதாக இருந்தது. அந்த கல்பாறையை அடைந்ததும் சுற்றி சுற்றிப் பார்த்தார். கல்பாறையின் இடைவெளியுள்ளே மெதுவாக உள்ளே நுழைந்தார். பெரும் இருட்டாக உள்ளே இருந்தது. உள்ளே சென்றவர் சம்மணமிட்டு அமர்ந்தார். கைகளால் பாறையைத் தள்ளினார். பாறை அசைய மறுத்தது. பலம் கொண்டு மேலும் தள்ளினார். பாறைகள் ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டன. சிறிது இடைவெளிவிட்டது. அந்த இடைவெளியூடே ஒளிக்கீற்று வந்து கொட்டியது. கண்கள் மூடிக்கொண்டார்.

தனராஜ் கொடுத்த தகவலின்படி அடுத்த நாளே மலையின் அடிவாரத்தின் ஓரத்தில் அமைந்திருந்த கிராமங்களில் அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்படியொரு நபரை யாருமே பார்த்திருக்கவில்லை என கேட்பவர்கள் எல்லாம் சொன்னபோது அதிகாரிகள் சற்று சலிப்பு அடைந்தார்கள். அதற்கடுத்தாற்போல் சற்று தொலைவில் அமைந்திருந்த பவித்ரபுரியை அதிகாரிகள் அடைந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது ஒரு சிலர் அதுபோன்ற நபரை தாங்கள் கண்டதாக கூறினார்கள். அந்த வார்த்தையைக் கேட்ட அதிகாரிகள் மிகவும் உற்சாகம் அடைந்தார்கள். அவர் சென்ற வழியைக் காட்டினார்கள். கிராமத்தின் வெளிப்புறமாகவே நடந்த அதிகாரிகளும் சில கிராம மக்களும் கல்பாறையை அடைந்தார்கள்.

இராமேஸ்வரத்தை அடைந்த தனராஜ் அவருக்காக காத்துக்கொண்டிருந்த மேலும் சில காவல் அதிகாரிகளுடன் ஜகநாதபுரம் அடைந்தார். ஜகநாதபுரத்தை அடைந்த அவர்கள் ஜகநாதன் பற்றி விசாரித்தார்கள். ஜகநாதன் பற்றி ஊரில் இருந்தவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என ஜகநாதனின் பூர்விக வீட்டினை அடையாளம் காட்டினார்கள் அந்த ஊரைச் சேர்ந்த சிலர். அதிக நேரம் இருக்க வேண்டாம் என எச்சரித்தவர்கள் உடனடியாக கிளம்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதிகாரிகளுடன் சென்று வீட்டின் கதவைத் தட்டினார் தனராஜ். ஜகநாதன் பற்றி விசாரிக்க வந்திருக்கோம் என வீட்டின் வாசலில் வந்து நின்ற ஒரு தாயிடம் சொன்னார் தனராஜ். உடனே கிளம்பி போயிடுங்க என்றார் அந்த தாய். ஜகநாதனால் காடும் கிராமமும் அழிந்து போனது குறித்து தனராஜ் சொல்லிவிட்டு அதனால் ஜகநாதன் பற்றி தெரிய வேண்டும் என்றார் மேலும்.

ஜகநாதா என பெரும் சத்தமிட்டார் அந்த தாய். சத்தமிட்ட அந்த தருணத்தில் பவித்ரபுரி கல்பாறைகள் வெடித்து சிதறியது. கல்பாறையின் உள்ளே சென்ற அதிகாரிகளும் சில கிராம மக்களும் கோரமாக பலியானார்கள். ஜகநாதன் கோபத்தின் உச்சகட்டத்தை அடைந்தவர் சிதறிய கற்களையும் மனிதர்களையும் பார்த்த வண்ணம் பூமியில் காலை அழுத்திக்கொண்டே இருந்தார். பள்ளம் ஏற்பட்டது. சில கற்கள் எரிகற்களானது.

ஏன் இப்படி காட்டுக் கத்து கத்தறேம்மா என தனராஜ் அதட்டினார். ஜகநாதா என மறுபடியும் சத்தமிட்டார் அந்த தாய். வீட்டினுள் இருந்து ஒரு இளைஞன் ஓடி வந்தார். உன்னைப்போய் தேடி வந்திருக்காங்கப்பா இவங்க என்றார் அந்த தாய். நீ காட்டை எரிச்சியாம், ஊரை எரிச்சயாம் என்னமோ உளறுரானுங்க என்னானு கேளு என அந்த தாய் உள்ளே சென்றார். தவறான வீட்டிற்கு வந்துவிட்டோமே என தனராஜ் நினைத்துக்கொண்டிருந்தபோதே அந்த இளைஞன் காவல் அதிகாரி தனராஜை ஓங்கி ஒரு அறைவிட்டான். சற்று தள்ளி விழுந்தார் தனராஜ். சுகுமாரன் அந்த இடத்தை விட்டு மெதுவாக அகன்றான். அதிகாரிகள் அந்த இளைஞனை அடிக்க ஓடி வந்தார்கள். தனராஜ் நிறுத்துங்க என சத்தமிட்டார். சுகுமாரன் மெதுவாக அந்த தெருவினைக் கடந்து ஒரு வீட்டினுள் நுழைந்து கொண்டான்.

உன் பேரு என்னான்னு சொல்ல முடியுமா என இளைஞனை நோக்கிக் கேட்டார் தனராஜ். அந்த இளைஞன் எதுவும் பதில் சொல்லாமல் உள்ளே சென்று கதவைச் சட்டென அடைத்தான். உடன் வந்த அதிகாரிகள் பெரும் கோபம் கொண்டார்கள். தனராஜிடம் என்ன சார் நீங்க இப்படி பொறுமையா இருக்கீங்க அடிச்சு துவைச்சிர வேண்டியதுதான் என சொல்லிக்கொண்டே கதவை இடித்தார்கள். தனராஜ் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஆனால் அவர்களின் கோபம் தனராஜை சற்றும் பொருட்படுத்தவில்லை. கதவினைத் திறந்துகொண்டு பெரும் கோபத்துடன் அனல் கக்கும் பார்வையுடன் ஆவேசமாக நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன். அவன் பின்னால் வந்த தாய் எல்லாம் கிளம்பி போயிருங்க எனச் சத்தமிட்டார். சட்டென குனிந்த இளைஞன் அந்த அதிகாரிகள் மேல் ஒருவித பொடியைத் தூவினான். தூவியவன் தீக்குச்சியை பற்ற வைத்து அவர்கள் மேல் எறிந்தான், அவர்கள் எரியத் தொடங்கினார்கள். இதைக்கண்ட தனராஜ் பிரமைபிடித்தவர் போலானார்.

பவித்ரபுரியில் பலியானவர்களும் எரிய ஆரம்பித்தார்கள். ஜகநாதன் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். கடற்கரையை வந்தடைந்தார். கடலினுள் மெதுவாக ஒரு கால் வைத்தார். கடல் நீர் கொந்தளிக்கத் தொடங்கியது. உடல் முழுவதும் நீருக்குள் சென்றது. கொந்தளித்த கடல், அலைகள் கூட எழுப்பாமல் அடங்கிப் போனது. தொடர்ந்து நீருக்குள் சென்று கொண்டே இருந்தார் ஜகநாதன். பவித்ரபுரியும் ஜகநாதபுரமும் பத்திரிக்கை செய்திகளில் இடம்பெற்றது. பொய் செய்தியில் இதுதான் உச்சகட்ட பொய் செய்தி என பத்திரிகைகள் மேல் மக்கள் குற்றம் சாட்ட ஆரம்பித்த வேளையில் பவித்ரபுரியையும் ஜகநாதபுரத்தையும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முற்றுகையிட்டன.

(தொடரும்)

Monday 20 July 2009

சில்வண்டுகள் 4

காலை வேளையில் புனித ஆலயத்திற்கு வந்த பாதிரியார் ஆண்டனி கல்லின் மேல் கிடந்த சுகுமாரனைக் கண்டார். அவனைத் தொட்டு எழுப்பினார். திடுக்கிட்டு விழித்த சுகுமாரன் பாதிரியாரைக் கண்டதும் கதறி அழ ஆரம்பித்துவிட்டான். அதிர்ச்சி அடைந்த பாதிரியார் சுகுமாரனிடம் விசாரித்தார். சுகுமாரன் ஊரில் நடந்த விபரங்களைச் சொன்னதும் பாதிரியார் மேலும் அதிர்ச்சி அடைந்தார். குளித்து உடைமாற்றச் சொன்ன பாதிரியாரிடம் வேண்டாமென மறுத்தான் சுகுமாரன். உணவும் உண்ண மறுத்தான். தான் காவல் நிலையம் செல்ல வேண்டுமெனச் சொன்னான். எனவே பாதிரியார் சுகுமாரனை அழைத்துக் கொண்டு சினமாநல்லூருக்கு அருகில் உள்ள நாகலாபுரம் காவல் நிலையம் அடைந்தார்.


காவல் அதிகாரி தனராஜ் சுகுமாரன் சொன்னதைக் கேட்டு தங்களுக்கும் இதுகுறித்து தகவல் வந்ததாகவும் ஆனால் இதுகுறித்து மேற்கொண்டு என்ன செய்வது என அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். சிங்கநேரிக்கு அருகில் இருந்த காடு எரிந்து போனதும், மதியூர் எரிந்து போனதற்கும் தொடர்பு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக சொன்னபோது சுகுமாரனும் பாதிரியாரும் மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள். சுகுமாரன் மயங்கி கீழே விழுந்தான். சுகுமாரனுக்கு மயக்கம் தெளிவித்து உணவருந்த வைத்தார்கள். சற்று தெளிச்சி அடைந்த சுகுமாரன் காவல் அதிகாரியிடம் ஜகநாதன் பற்றி முதன்முறையாக சொன்னான். இதை இப்பொழுதுதான் பாதிரியாரும் முதன் முறையாகக் கேட்டார்.

ஜகநாதன் இரவெல்லாம் நடந்து காலையில் மலையின் உச்சிக்குச் சென்று அடைந்தார். வானத்தை நோக்கினார். பின்னர் கற்கள் பெயர்த்து வந்தார். சின்னதாக மண்டபம் எழுப்ப ஆரம்பித்தார். உள்ளே சென்று அமர்ந்தார். கண்கள் மூடினார். கண்கள் மூடியவருக்கு மனம் எரிச்சல் ஊட்டியது. மண்டபம்விட்டு வெளியே வந்தார். மலை உச்சியில் நடக்க ஆரம்பித்தார். சிறிது தொலைவுக்குச் சென்றதும் அந்த மலை உச்சியின் கிழே சற்றுத் தள்ளி ஒரு ஊரானது நிர்மாணிக்கப்பட்டு இருப்பதைக் கண்டார். கைகளை இருபுறமும் நீட்டிக்கொண்டு கிடுகிடுவென ஒரே இடத்தில் நின்றவாரே சுற்றினார். அவ்வாறு சுற்றியவர் சுற்றிக்கொண்டே இருந்தார். சுற்றியவர் சட்டென நின்று உயரத் தாவினார். பத்து அடிக்கு மேலாகவே உயர்ந்து சென்றார். கீழே உடல் இறங்கி வந்தபோது கால்களை நேராக மலையின் மேல் வைத்திடாமல் உடலை படுக்கை வசமாக்கினார், அப்படியே விழுந்தார். உடலில் செடிகள் ஒத்தடமிட்டு வைக்க, கற்களும் மண் துகள்களும் குத்தியது. உருண்டார். கீழே எந்த வேகத்தில் உருண்டாரோ அதே வேகத்தில் மேலே உருண்டு சென்றார். தான் விழுந்த இடத்தில் வந்து சேர்ந்ததும் எழுந்தார். மீண்டும் மண்டபம் நோக்கி நடந்தார். மண்டபத்திற்கு மேல் செடிகளை பரப்பினார். பின்னர் உள்ளே நுழைந்தார் கண்களை மூடினார்.

நான்கு காவல் அதிகாரிகளுடன் சுகுமாரன் மலையடிவாரம் வந்தடைந்தான். பாதிரியாரும் உடன் இருந்தார். மலையின் மேல் இருந்த ஊரினை வெகுவிரைவாகவே அவர்கள் அடைந்தார்கள். அந்த ஊரில் விசாரித்தார்கள். அங்கிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். செம்மறி ஆடுகள் மேய்க்கும் காருண்யன் மலையின் மேற்பகுதிக்குச் சென்று பார்த்தால் ஏதாவது தெரியும் என சொன்னதும் அவரையும் அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு சென்றார்கள். வட்டம் போட்டு இருப்பதைக் கண்ட காருண்யன் இதோ இங்கேதான் அவர் இருக்க வேண்டும் என சொன்னார்.

அப்பொழுதுதான் காருண்யனுக்கு ஒரு யோசனைத் தோன்றியது. அவரை இங்கே நாம் அடையாளம் கண்டுவிட்டால் என்ன செய்வதாய் உத்தேசம் என காவல் அதிகாரிகளிடம் கேட்டார் காருண்யன். அவரைக் கைது செய்து தூக்குத் தண்டனை வாங்கித்தர வேண்டும் என்றார் தனராஜ். காருண்யன் பலமாகச் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் எனக் கேட்ட தனராஜிடம் காட்டையும் ஊரையும் எரித்து இருக்கிறார் எனச் சொல்கிறீர்கள் உங்களை எரிக்க அவருக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது என்றதும் அனைவருக்கும் தைரியம் மறைத்து வைத்த பயம் சற்று வெளிக்காட்டத் தொடங்கியது. நினைவில் இருந்த சுகுமாரன் நடுங்கத் தொடங்கினான். சுட்டுத் தள்ளிவிடுகிறேன், எப்படி என்னை எரிப்பார் என்றார் தனராஜ். நல்ல யோசனைதான், எனக்கே இப்பொழுதுதான் தைரியம் வந்திருக்கு, வாங்க அவரைத் தேடுவோம் என காருண்யன் அவர்களை அழைத்துக்கொண்டு ஜகநாதன் இருக்குமிடத்தை வந்தடைந்தார். எப்படி சரியாக வந்தடைந்தீர்கள் என காருண்யனிடம் கேட்டபோது செம்மறி ஆட்டின் வாசனையிலிருந்து மனிதர்களின் வாசனைவரை எனக்குப் பழக்கம், ஆனால் இந்த வாசனையானது நான் அறியாதது என சொல்லியபடி மண்டபத்தை கைகாட்டினார் காருண்யன்.

மண்டபத்தின் உள்ளே ஒருவர் தியான நிலையில் அமர்ந்து இருப்பதைக் கண்டார் தனராஜ். முகத்தைத் திருப்பி அமர்ந்திருந்த ஜகநாதனை முகம் பார்க்காமலே இவர்தான் என்றான் சுகுமாரன். காருண்யனும், பாதிரியாரும் மற்ற அதிகாரிகளும் அவரைக் கண்டார்கள். துப்பாக்கியை மெதுவாக சத்தமின்றி எடுத்தார் தனராஜ். அமர்ந்த நிலையில் இருந்த ஜகநாதன் உடல் அசைந்தது. சட்டென திரும்பினார் ஜகநாதன். வேகமாக திரும்பிய ஜகநாதனைக் கண்டதும் தனராஜின் கையிலிருந்து துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது. எடுத்துச் சுடுங்க என்றார் காருண்யன். தனராஜ் வேகமாக குனிந்து துப்பாக்கியை எடுக்கப் போனார். பாதிரியார் அவரைச் சுடவேண்டாம் என சத்தமாகச் சொன்னார்.

கைகளை வீசிக்கொண்டு எழுந்தார் ஜகநாதன். கற்கள் சிதறியது. அவர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தார். அவர் வைத்த அடியில் அவர்கள் இங்குமிங்கும் ஆடினார்கள். தனராஜ் முன்னால் கடுங்கோபத்துடன் நின்றார் ஜகநாதன். சுடுங்க என்றார் காருண்யன். சொன்ன மாத்திரத்தில் ஒரு கையால் காருண்யனின் குரல்வளையைப் பிடித்து அழுத்தியவர் மறுகையில் தனராஜின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்தார் ஜகநாதன். வேண்டாம் அவரை விட்டுவிடுங்கள் என ஜகநாதனிடம் சொன்னார் பாதிரியார்.

சுகுமாரன் பயத்தில் உறைந்து போனான். காருண்யனைத் தள்ளிவிட்டுவிட்டு துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு நோக்கி மலையின் கீழே இறங்கலானார் ஜகநாதன். அவர்கள் அனைவரும் பிரமைப் பிடித்தவர்கள் போல் நின்றார்கள். அவரை விரட்டிப் பிடிங்க சார் என சுகுமாரன் நடுங்கிக்கொண்டே தனராஜிடம் சொன்னபோது தனராஜ் கோபத்துடன் மற்ற அதிகாரிகள் நோக்கி நீங்க ஏன் சும்மாவே நின்னுக்கிட்டு இருந்தீங்க என்றார். அவர்கள் எங்க உடம்பை கட்டிப்போட்டமாதிரி இருந்துச்சு என்றார்கள் ஒரு சேர. முனகிக்கொண்டே எழுந்தார் காருண்யன், பேச முயற்சித்தார் பேச முடியவில்லை. வாய் திறந்தும் சத்தமில்லாமல் அவர் அழும் அழுகையை கண்ணீர் காட்டிச் சென்றது. கால்களை தரையில் உதைத்தும் கைகளை வயிற்றிலும் தலையிலும் அவர் அடித்துக்கொண்டபோது மிகவும் பரிதாபமாக இருந்தது. சுகுமாரன் காவல் அதிகாரி தனராஜை நோக்கி கத்த ஆரம்பித்தான். பாதிரியார் சுகுமாரனை சமாதனப்படுத்தினார்.

எங்ககூட ஜகநாதபுரம் நீ வா என சுகுமாரனை அழைத்தார் தனராஜ். சுகுமாரனும் வருகிறேன் என தனராஜிடம் சொன்னான். காருண்யனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பாதிரியாரிடம் சொல்லிவிட்டு தனராஜும் மற்ற அதிகாரிகளும் சுகுமாரனும் அன்று இரவே காவல் நிலையம் அடைந்தார்கள்.

மலையின் அடிவாரம் அடைந்த ஜகநாதன் மேற்கே நோக்கி தொடர்ந்து நடக்கலானார்.

(தொடரும்)

Tuesday 7 July 2009

சில்வண்டுகள் - 3

தோட்ட வேலைக்குச் சென்றவர்கள், காட்டு வேலைக்குச் சென்றவர்கள் மதியூர் கிராமத்திற்குள் நுழைந்த சற்று நேரத்திலே கீழே விழுந்து இறந்தார்கள். அந்த வேளையில் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய இருபத்தி நான்கு வயதான சுகுமாரன் ஆடு மாடுகள் முதற்கொண்டு அனைவரும் இறந்து கிடப்பதைக் கண்டு அச்சம் அடைந்தான். அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தனது வீட்டில் சென்று பார்த்தபோது தனது குடும்பத்தினரும் இறந்து கிடப்பதைக் கண்டான். எங்குப் பார்த்தாலும் பிணங்கள். மொத்த கிராமமே அழிந்து போயிருந்தது.

இந்த விபரீதம் எப்படி நடந்தது என நினைத்தவன் சற்றும் தாமதிக்காமல் வீட்டிலோ, வெளியிலோ தண்ணீர் கூட அருந்தாமல் முனீஸ்வரர் கோவில் பக்கம் நோக்கி ஓடினான். அங்கே பூசாரி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அப்படியே அமர்ந்து இருந்தார். பூசாரியைக் கண்ட சுகுமாரன் அவரிடம் விசாரித்தான். அவரால் வாய் பேச முடியவில்லை. வடக்கு நோக்கி மட்டுமே கையைக் காட்டினார். பிரமை பிடித்தவர் போல் கண்களில் நீர் சொரிந்து கொண்டு முனீஸ்வரரை நோக்கியவண்ணமே இருந்தார். வடக்கே ஓடினான் சுகுமாரன். தொலைவில் ஒருவர் நடந்து செல்வது தெரிந்தது.

உடலெங்கும் ரோமங்கள் நிறைந்தவரை நெருங்கினான். நில்லுங்கள் என சத்தமிட்டான் சுகுமாரன். சப்தம் கேட்டு திரும்பாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தார் அவர். அவருக்கு முன்னால் சென்று அவரை வழிமறித்தான். சுகுமாரனை விலக்கியபடி நடக்கலானார்.

''மொத்த கிராமமும் அழிஞ்சி போச்சு, நீங்க எதாச்சும் பார்த்தீங்களா'' அழுகையுடன் கத்தினான் சுகுமாரன்.

''...''

''பூசாரிதான் இந்த பக்கம் கையைக் காட்டினார், உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னுதான் கேட்கிறேன் சொல்லுங்க'' என ஆவேசமாக சொன்னான் சுகுமாரன்.

''...''

''என்ன பண்ணினீங்க'' எனக் கத்திக்கொண்டே அவரைப் பிடித்து உலுக்கினான்.

கோபத்தில் கொதித்தார் அவர். உலுக்கிய சுகுமாரனை ஓங்கி தள்ளிவிட்டார். சில அடிகள் தள்ளிவிழுந்தான் சுகுமாரன். விழுந்த அவன் சுதாரித்து எழுந்தான். அழுது கொண்டே அவரை பின் தொடர்ந்து நடக்கலானான். என்ன செய்கிறோம் என்ற நினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது போலிருந்தது சுகுமாரனுக்கு. மெதுவாக நடந்த அவர் வெகுவேகமாக நடக்க ஆரம்பித்தார். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தொடர்ந்து ஓடினான். இருட்டத் தொடங்கியது.

சில மணி நேரங்கள் கழித்து பூசாரி காவல் நிலையத்துக்குச் சென்று விபரத்தைக் கூறினார். காவல் நிலைய அதிகாரிகள் அனைத்து பிணங்களையும் எரித்துவிட உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். பூசாரியின் ஆலோசனைப்படி இரவோடு இரவாக ஊரையே ஒட்டு மொத்தமாக எரித்தார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க எந்த ஒரு முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. காவல் அதிகாரிகள் இன்னும் பயத்தில் உறைந்து இருந்தார்கள். இரவெல்லாம் கிராமம் எரிந்து கொண்டிருந்தது. யாரும் இந்த கிராமம் நோக்கி வரவே இல்லை!

நடு இரவில் சினமாநல்லூர் எனும் ஊரினை அவர் அடைந்தார். களைத்துப்போனான் சுகுமாரன். பராமரிக்கப்படாத நிலங்கள் அரசுக்குப் பாத்தியப்பட்டு இருந்தது. மதியூர் சுற்றி நகரங்களே இல்லாமல் ஆங்காங்கே கிராமங்கள் இருந்தன. அவரைப் பின் தொடர்ந்து வந்தவன் அவரிடம் ஏதுமே பேசவில்லை. அவரும் ஏதும் பேசவில்லை. ஊரைத்தாண்டி நடந்தார். ஊரில் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்தார்கள். தெருக்குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு அவர் சென்ற வழியில் ஓடினான். ஊரைத் தாண்டி சற்று தொலைவில் ஒரு மலை தெரிந்தது. சின்ன தோட்டம், காட்டினை கடந்து நிலவின் ஒளியில் மலையின் அடிவாரம் அடைந்தார் அவர். சுகுமாரனும் உடன் சேர்ந்தான்.

''இனிமேல் என்னை பின் தொடர்ந்து வராதே, இத்துடன் நின்று கொள்'' வார்த்தைகள் நெருப்பைவிட சூடாக அவரின் வாயில் இருந்து வந்து விழுந்தது. இந்த வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் நடுநடுங்கிப் போனான் சுகுமாரன்.

''எனக்கு யாருமே இல்லை இப்போ, நீங்கதான் எல்லாம்'' அழுகையின் ஊடே மெலிந்த வார்த்தைகள் சொன்னான் சுகுமாரன்.

''இனி என்னை பின் தொடராதே'' தரையை மிதித்துச் சொன்னார் அவர். நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்தான் சுகுமாரன்.

''நீங்க யாரு. எங்க ஊருல என்ன நடந்ததுனு சொல்லுங்க, நான் உங்களை பின் தொடர மாட்டேன்'' தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவசரப்பட்டு சொன்னான் சுகுமாரன்.

''சொன்னால் தொடரமாட்டாய் என்பது சரியெனில் சொல்கிறேன். மேலும் எனக்குப் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை நான் இதற்கு முன்னர் பேசிய வார்த்தைகள் ஆறாயிரத்து ஐந்நூற்றி எழுபத்தி ஐந்து நாட்களுக்கு முன்னால் என்பதை அறிந்து கொள்'' என கோபத்தின் உச்சிக்குச் சென்று உரைத்தார் அவர்.

''தொடரமாட்டேன் இது சத்தியம்'' என கதறியபடியே சொன்னான் சுகுமாரன். அவனது கிராமத்தின் நிலை பெற்றோர்கள், சகோதர சகோதரிகளின் நிலை அவனை உருக்குலையச் செய்தது. இவரை கொல்ல வேண்டும் என ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் இவர் தன்னை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என யோசித்த காரணத்தினால் ஏதும் செய்யாது இதுவரை வந்துவிட்டான்.

''நான் ஜனித்த இடம் ஜகநாதபுரம். இராமேஸ்வரத்துக்கு அருகாமையில் வடக்கே உள்ளது. எனக்கிடப்பட்ட பெயர் ஜகநாதன். கருவில் அமர்ந்த நாளிலிருந்து இன்றோடு எனக்கு பூமி சூரியனை சுற்றும் கணக்குப்படி பத்தாயிரத்து இருநூற்றி இருபது நாட்கள் ஆகிறது. எனது செயல்களுக்கு காரணங்கள் சொல்லிப் பழக்கமில்லை'' சொல்லியவர் தெற்கு நோக்கி மலையில் நடக்கலானார்.

சுகுமாரன் நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்தான். ஒரு அடி கூட அவர் சென்ற பக்கம் எடுத்து வைக்கவில்லை. நீங்க முனிவரா ஏன் இப்படி பண்ணினீங்க எங்க ஊர் மக்கள் உங்களை என்ன செஞ்சாங்க ஏன் அவங்களை கொன்னீங்க, உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன், போலிஸூல சொல்லப் போறேன் என சத்தமிட்டான் அவன்.

இவனது குரலை பொருட்படுத்தாமல் மலைமீது ஏறலானார் ஜகநாதன். இனி இங்கே நிற்பது கூடாது என சினமாநல்லூருக்குள் சென்றான் சுகுமாரன். அவனால் தூக்கத்தைத் துரத்தமுடியவில்லை. அந்த ஊரின் வடப்பகுதியில் அமைந்திருந்த ஒரு புனித ஆலயத்தின் வாயிலில் இருந்த கல்லில் சாய்ந்தான், கண்களின் இமைகள் தானாக மூடிக் கொண்டது. கன்னத்தில் கண்ணீர் போட்ட கோடுகள் காய்ந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

Monday 6 July 2009

சில்வண்டுகள் - 2

கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது காடு. எரிகின்ற காட்டினை எரிச்சல் நிறைந்த கண்களுடன் சில சிங்கநேரி கிராம வாசிகள் கண்டுவிட்டனர். காடு பற்றி எரிகிறதே என கூச்சலிட்டுக்கொண்டு காட்டை நோக்கி ஓட ஆரம்பித்தனர். அதற்குள் காடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. காவல்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் அங்கே வந்து சேர்ந்தனர். தீயணைப்பு படையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் அத்தனை பெரிய காடு சாம்பலாகி இருந்தது.

இந்த கொடுமையை யார் செய்தார்கள் என கிராமவாசிகளிடம் அதிகாரிகள் விசாரித்ததில் இது காட்டுத் தீயாக இருக்கக்கூடும் என்று மட்டுமே கிராமத்து நபர்கள் சொன்னார்கள். அந்த காட்டை மட்டுமே அழித்த தீ அடங்கி இருந்தது. இந்த காடு அழிந்ததில் வனத்துறை அதிகாரிகளுக்கு உள்ளூர சந்தோசமாக இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள். மொத்தக்காடும் அழிந்து போனது சாதாரண காரியமாகத் தெரியவில்லை என கிராமத்து மக்கள் பேசிக்கொண்டார்கள். பெரிய காடாக இருந்த பகுதி வெறுமையாக காட்சி தந்து கொண்டிருந்தது.

இனியும் கிழக்கே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் அவர். இருட்டத் தொடங்கியது. கிழக்கே தென்பட்ட கிராமத்துக்குள் சென்றவர் அந்த கிராமத்துக் கோவில் ஒன்றில் நுழைந்தார். கருவறை இல்லாத மண்டபம் அது, கதவும் இல்லாத கோவில் அது. கோவிலில் வைக்கப்பட்ட சிலைக்கு மட்டும் மேடை இருந்தது. சிலை என சொல்ல முடியாதவண்ணம் வெறும் கல்லாக மட்டுமே இருந்தது. மஞ்சள் துணி சுற்றிக் கட்டப்பட்டு இருந்தது. அரிவாள் அருகில் இருந்தது. இரண்டு தூண்களுக்கு மத்தியில் மணிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த சிலைக்கு அருகில் சென்று இவர் அமர்ந்தார். கண்களை மூடினார்.

பொழுது விடிந்தது. மதியூர் கிராமத்து மக்கள் தோட்ட வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். அப்பொழுது இந்த கோவிலின் வழியாக வந்த சிலர் உள்ளே சிலைக்கு அருகில் ஒருவர் அமர்ந்து இருப்பதைக் கண்டார்கள்.

''முனீஸ்வரர் கோவிலுக்குள்ள யாரோ இருக்காங்க''

''வா யாருனு போய்ப் பார்க்கலாம்''

''ஊருல ஆட்களைக் கூட்டி வந்துரலாம்''

''நீ சொல்றது சரிதான், ஆட்களை கூட்டி வந்துரலாம்''

வெளியில் நின்று பேசியவர்கள் ஊருக்குள் ஓடினார்கள். ஊரில் இருந்த நபர்கள் பலரை அழைத்துக்கொண்டு கோவிலின் வாசல் வந்து நின்றார்கள். அந்த கோவிலுக்கென இருக்கும் பூசாரி உள்ளே நுழைந்தார். அருகில் சென்று இவரைக் கண்டதும் பூசாரி பயம் கொண்டார். ஆனால் அவரோ கண்களை மூடியவண்ணமே அமர்ந்து இருந்தார். அவரது தோளைத்தொட்டு யார் நீங்க? என்றார் பூசாரி. ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தார் அவர். உடலெல்லாம் கருநிற ரோமங்கள். ஆடையைத் தழுவாத உடல். பூசாரிக்கு பயம் அதிகரித்தது.

உள்ளே சென்ற பூசாரி வெளியில் வந்து தண்ணீர் எடுத்துச் சென்று அவரது முகத்தில் தெளித்தார். அவர் விழித்தார். பூசாரியை நோக்கினார். பூசாரி பயந்துகொண்டே பேசினார்.

''யார் நீங்க, இப்படி உள்ளே வந்து உட்கார்ந்து இருக்கறது தெய்வ குத்தம்''

கிராமத்து மக்களின் சலசலப்பு அடங்கி இருந்தது. அவர் பூசாரியை பார்த்த வண்ணமே அமர்ந்து இருந்தார்.

''எழுந்து வெளியே வாங்க''

அவர் மீண்டும் கண்களை மூடினார். பூசாரிக்கு கோபம் வந்தது. அவரை நோக்கி சத்தம் போட்டார்.

''சொல்லிக்கிட்டே இருக்கேன், இப்படியே உட்கார்ந்து இருந்தா எப்படி, எழுந்து வராட்டி உங்களை தூக்கி வெளியே போட்டுருவேன்''

கண்கள் திறக்காமல் அப்படியேதான் அவர் அமர்ந்து இருந்தார். கிராமத்து மக்கள் அவரை வெளியே இழுத்துப் போடச் சொன்னார்கள். பூசாரி அவரது தலையைப் பிடித்து ஆட்டினார். அவர் கைகளை வீசிய வண்ணம் எழுந்து நின்றார். அவர் கைகள் வீசி எழுந்து நின்றபோது பூசாரியின் மேல் அடி விழுந்தது. பூசாரி அந்த மேடையிலிருந்து தள்ளி கீழே விழுந்தார். கிராமத்து மக்கள் அவரை நோக்கி ஓடி வந்தார்கள். அவர் கோபத்துடன் அனைவரையும் பார்த்தார். மேடையைவிட்டு கீழே இறங்கியவர் அவர்களை விலக்கிக்கொண்டு வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார். சிலர் கற்கள் கொண்டு அவர் மேல் எரிய ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் ஓடிச்சென்று அவரை உதைத்தார்கள். அப்படியே நின்றவர் உதைத்த ஒருவன் கழுத்தைப் பிடித்து திருகினார். அவர் அருகில் சென்று உதைத்தவர்கள் அப்படியே பதைபதைத்து நின்றார்கள்.

அதற்குள் கிராமத்தில் இருந்த ஒருவர் பக்கத்து ஊரில் இருந்த காவல் அதிகாரியுடன் சிலரை அழைத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். காவல் அதிகாரி இவரிடம் வந்தார். திருகிய கழுத்தில் இருந்து தனது கையை எடுத்தார் அவர். அவன் பொத்தென கீழே விழுந்தான். உயிர் துடித்தது. காவல் அதிகாரி கோபமாக அவரைப் பிடித்து இழுத்தார். அவரை இழுத்த மறுகணத்தில் காவல் அதிகாரியின் உடல் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. கிராமத்து மக்கள் அரண்டு ஓடினார்கள். காவல் அதிகாரியுடன் உடன் வந்தவர்கள் பயத்துடன் பின்வாங்கினார்கள். உடல் வெந்தது. கிராமத்துக்குள் ஒவ்வொரு தெருவாகச் சுற்றிச் சுற்றி வந்தார் அவர். அன்றைய மதியமே கிராம மக்கள் ஒவ்வொருவராக கீழே விழத் தொடங்கினார்கள். ஆடுகளும் மாடுகளும் கோழிகளும் சாவில் சிக்கிக்கொண்டன. வடக்கு நோக்கி நடக்கலானார் அவர்.

யார்தான் இவர்?

(தொடரும்)

சில்வண்டுகள் - 1

அடர்ந்த காடு. தொடர்ந்து மழை. புகலிடம் தேடி, ஓடி ஒளிந்தன பறவைகள். விலங்குகள் மழையில் நனைய சற்றும் விரும்பவில்லை, ஓட ஆரம்பித்தன. ஓடிய விலங்குகள் ஒரு எல்லையில் சென்று நின்று கொண்டன. ஒளிந்த பறவைகள் சரியான எல்லையில் தான் இருக்கிறோமா எனத் தேடிக்கொண்டன. மரங்கள் மட்டும் எங்கும் செல்ல முடியாமல் நின்ற இடத்திலே நின்று கொண்டிருந்தன. மரங்களின் வளர்ச்சி வானை நோக்கிய வண்ணம் தான். தூறலும் சாரலுமாகவே வந்து சென்று கொண்டிருந்த மழை பத்து வருடங்கள் கழித்து அந்த காட்டில் பெரும் மழையாய் பெய்து கொண்டிருந்தது. மழைத் துளிகளானது ஓங்கி உயர்ந்து வளர்ந்து இருந்த மரக்கிளைகளின் இலைகளை ஊடுருவி தரையை தொடமுடியாத வண்ணம் தரையில் புல்லும் செடியும் வளர்ந்து புதராய் தடுத்துக்கொண்டிருந்தது. இவையெல்லாம் தாண்டி தரையைத் தொட்ட மாத்திரத்தில் மழை சிலிர்த்துக் கொண்டது. தரையில் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டிருந்தது.

இந்த அடர்ந்த காடு ஊட்டிக்கு அருகில் உள்ள சிவாங்குகம் எனும் வட்டத்திற்கு உட்பட்டது. இந்த காட்டினுள் எட்டு திசைகள் பக்கமும் ஒரு எல்லைக்கு மேற்பட்டு உள்ளே சென்றவர்கள் உயிரோடு திரும்பியதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. வனத்துறையினர் இந்த காட்டினை மொத்தமாக அழித்துவிடலாம் என அரசிடம் அனுமதி கோரியும் எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. இந்த காட்டிலிருந்து வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரே ஒரு கிராமம் மட்டுமே உண்டு. தெற்கேயும், கிழக்கேயும் மேற்கேயும் இருபது கிலோமீட்டர் தொலைவிற்கு மேலாகவே மனிதர்கள் வசிக்கும் பகுதி இருந்தது. மிக அதிக பரப்பளவை உள்ளடக்கி வளர்ந்த காட்டின் மையப்பகுதியில் பெரும் மலையும் உண்டு. அந்த மலையானது மரங்களாகவும் செடிகளாகவும் காட்சி தந்து கொண்டிருந்தது. மலை உச்சியில் கற்களால் ஆன நான்கு அடி உயரத்திலும் நான்கு அடி அகலத்திலும் ஒரு சிறு மண்டபம் இருந்தது. அந்த சிறு மண்டபத்தின் கற்கள் இடைவெளியிலும் செடிகள் வளர்ந்து இருந்தது.

மழையுடன் பெரும் காற்று அந்த காட்டில் வீசத் தொடங்கியது. மரங்கள் ஆடத்தொடங்கின. மண்டபத்தின் உள்ளே ஒருவர் தியான நிலையில் அமர்ந்து இருந்தார். வீசிய காற்று, கற்களை அசைக்கத் தொடங்கியது. மழைநீர் மண்டபத்தினுள் நுழைந்து நிரம்பத் தொடங்கியது. அமர்ந்த நிலையை விட்டு அசையாமல் இருந்தார் அவர். நீரளவு அதிகரிக்க அதிகரிக்க அவரது உடல் அசையாமலே இருந்தது. நீரானது அவரது முழு உடலையும் மூடி, தலையையும் மூடியது. அவரோ அமர்ந்த வண்ணமே இருந்தார். மழையின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

பல மரங்கள் பழங்களை சிதறின. சில மரங்கள் சிதறி விழுந்தன. ஓடிய தண்ணீர் மொத்த காட்டினையும் அலசிக்கொண்டிருந்தது. அந்த காட்டில் மட்டுமே பெரும் மழை பெய்தது. மண்டபத்தின் சுற்றி எழுப்பப்பட்ட கற்கள் சிதறி விழுந்தன. தியான நிலையில் அமர்ந்து இருந்த அவர் உத்வேகத்துடன் கைகளை நாற்புறமும் வீசி எழுந்து நின்றார். பெரும் காற்றும், பெரும் மழையும் உடனே நின்றது. மரங்கள் கிளைகளை, இலைகளை சிலுப்பிக்கொண்டன.

எழுந்து நின்ற அவர் வானத்தை நோக்கினார். கோபம் அவரது உடல் எங்கும் பரவி இருந்தது. கண்கள் இரத்தமாகிக் கொண்டிருந்தது. ஒரு காலினை உயர்த்தி ஓங்கி தரையை மிதித்தார். அவரைச் சுற்றி இருந்த மலை உச்சிக்கு அருகாமையில் வளர்ந்த மரங்கள் பொல பொலவென வேருடன் விழுந்தன. மலை உச்சியில் இருந்து இறங்கினார். வழி இல்லா காட்டில் வழி உருவாக்கிக்கொண்டே வந்தார். வழி அடைத்த மரங்களும் செடிகளும் வழிவிட்டு உயிர் துறந்தன. அவர் நடக்க நடக்க எழுந்த வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகி கொண்டிருந்தது. அவரது காலடி பட்ட இடங்களில் பல ஊர்வன இனங்கள் துவம்சமாகின.

காட்டினை விட்டு வெளியே வந்து நின்றார். சூரியன் அதிக வெப்பத்தை வீசிக்கொண்டிருந்தது. தண்ணீரில் குளித்த மரங்கள் வெகுவேகமாக காயத் தொடங்கின. காட்டின் ஒரு ஓரத்தில் சில நாட்கள் அமர்ந்து இருந்தார். தரையில் ஈரம் காய்ந்து மழை விழுந்த தடமே இல்லாமல் இருந்தது. மரம் ஈரத்தை விட்டுத் தள்ளியிருந்தது. இரு கற்கள் எடுத்தார். உரசினார். விறகுகளில் தீ மூட்டினார். காட்டிற்கும் தீ மூட்டினர். காடு வெகுவேகமாக எரியத் தொடங்கியது. விலங்குகளும் பறவைகளும் அந்த காட்டை விட்டு வெளியேறாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. தீ மரத்தோடு பறவைகளையும் விலங்குகளையும் உண்ணத் தொடங்கியது. இனி சாம்பல் மட்டுமே மிஞ்சும். கிழக்கு நோக்கி நடக்கலானார் அவர்.

(தொடரும்)