Thursday 23 October 2014

பாரதி' யார்? - வேடிக்கை மனிதனா நீ

'நல்லதோர் வீணை செய்தே' என்ற வரிகளை கேட்டதும் எப்படி இருக்கும் என எழுத்தில் வைக்க முடிவதில்லை. ஆம், இந்த வரிகளுக்கு சொந்தகாரர் மகாகவி பாரதியார் தான். மகாகவியின் கவிதைகள் மட்டுமே தெரிந்த நமக்கு அவரின் வாழ்க்கை பற்றி தெரிவதில்லை, தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

பொது நலத்திற்காக தன்னை அர்பணித்து கொள்பவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பது என்னவோ உண்மை. மகாகவி பாரதியாரின் வாழ்க்கை குறித்து பலருக்குத் தெரிந்து இருக்காது.

''பாரதி கஞ்சா அடிப்பார்'' என்று சொன்ன நண்பனை நான் கோபத்துடன் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் வரிகளில் நான் வாழ்ந்து வந்து இருக்கிறேன். ''சென்றதினி மீளாது மூடரே'' என்பது எனக்கு அத்தனை பிரியம். பாரதியின் கவிதை வரிகளை ரசித்து ரசித்து பழகிய நான் பாரதியை ஒருபோதும் தவறாக நினைத்தது இல்லை, நினைக்கப்போவதும் இல்லை.

காதல் வரிகளில் கூட பாரதியை போல எந்த ஒரு கவிஞனும் எழுத முடிவதில்லை. ''காற்று வெளியிடை கண்ணம்மா'' என்பதை விட எனக்கு ''நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா'' கொள்ளைப்பிரியம். எத்தனை கவிதைகள். அதுவும் ''காக்கைச் சிறகினிலே நந்தலாலா'' பாடிக்கொண்டே இருக்கலாம்.

இந்த பாரதி கஞ்சா அடிப்பார் என்று கேள்விப்பட்ட தினம் முதல் எனக்கு அதுகுறித்து அக்கறை இருந்தது இல்லை. ஆனால் பாரதி குறித்து தேடி தேடி படித்த விசயங்கள் பல உண்டு. பாரதியார் குறித்து படம் வந்தபோது பாரதியாரின் பெருமை சிதைந்து போகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்கு பாரதியாரின் வாழ்க்கையை குறித்து எவரிடமும் பேசப் பிடிப்பது இல்லை. அவரது கவிதைகள் எனக்கு போதுமானதாக இருந்தது.

''அக்கினி குஞ்சொன்று'' பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். பாரதியாருடன் நண்பராக வாழ்ந்து இருக்கலாமோ என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருப்பது உண்டு. ''வேடிக்கை மனிதன் என'' எத்தனை பேர் இதனை பாடி இருப்பார்கள்.

-------

பாரதி குறித்து ஓ சோமசுந்தரம் இப்படி எழுதுகிறார். ''படைப்பாளிகள் சில பொருட்களை உபயோகிப்பார்கள், அதில் பாரதியை பற்றி இங்கே எடுத்துக்கொள்கிறேன்''. கவிஞர்கள் , படைப்பாளிகள் அவர்களது படைப்புகளால் இறவா தன்மை அடைகிறார்கள். அதில் பலர் ஆல்ஹகால் போன்ற போதைப் பொருள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். அறிவார்ந்த தன்மைக்கும், இப்படி பொருட்கள் எடுத்துக் கொள்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையான சுப்பிரமணி பாரதியாரின் வாழ்க்கையை இங்கே பார்க்க இருக்கிறோம். பாரதியாரின் கவிதையில் என்னதான் இல்லை? பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுர அவையில் முக்கிய நபராக இருந்தார். பாரதி எனும் பட்டம் கவிதைகளால் தமிழ்ப்புலமையால் கிடைத்தது.

பாரதியின் தந்தை இறந்த பின்னர் அரசவை ராஜாவுக்கு பாரதியின் மீது பற்று உண்டாகியது. இந்த ராஜா தான் பாரதிக்கு போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணியவர். அவர் கொடுத்த பூரநதி லேகியம் கஞ்சா போன்ற பொருட்களை கொண்டது. இதை நீ அருந்தினால் உனக்கு நல்ல பலம் வரும். ஆனால் இதை நம்பி பாரதி தொடர்ந்தாரா என தெரியாது. ஆனால் இதுதான் பாரதிக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட போதைப் பொருள்.

அரசவை ராஜா பாரதியை வாரணாசிக்கு அனுப்பி சமஸ்கிருதம், ஆங்கிலம் என புலமை பெற உதவி செய்தார். அரசவையில் இருந்து விலகி மதுரையில் ஆசிரியராக பணியாற்றி சென்னை சென்று சுதேசமித்திரன் நாளிதழ் சேர்ந்து  பின்னர் இந்தியா பத்திரிகை என ஆரம்பித்து அதில் தனது கவிதைகள் வெளியிட்டார். பாரதியின் வ உ சி உடன் பழக்கமும் வ உ சியின் சுதேசி இயக்கம் அதனால் வ உ சி அடைந்த துயரம் பாரதியை வெகுவாக பாதித்தது.

பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகளால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் (1908-1918) பாரதியார் பாண்டிசேரியில் இருந்தார். பெரும்பாலான கவிதைகள் பாஞ்சாலி சபதம் முதற்கொண்டு பக்தி பாடல்கள் கிருஷ்ணர் முருகர் சக்தி பாடல்கள் எல்லாம் அங்கே இயற்றப்பட்டன.

பாரதியாரின் பாண்டிசேரியில் உள்ள ஒரு சாமியாருடன் ஏற்பட்ட பழக்கம் மிகவும் சுவாரஸ்யமானது. பாரதியாரின் விடுதலை போராட்ட வேட்கையும் தமிழ் இலக்கியமும் மற்றும் இந்த சாமியார் பழக்கம் பாரதியாரை இந்த போதை உலகத்தில் மீண்டும் தள்ளி இருக்கலாம். அவரது இந்த சாமியாருடன் பழக்கமே பல பக்தி பாடல்கள் எழுத காரணமானது. அந்த சாமியாரும், பாரதியாரும் போதை பொருட்களை உபயோகப்படுத்தினர். சில வருடங்கள் போதை பொருட்கள் உபயோகத்தை நிறுத்தி இருந்த பாரதியார் 1911 ம் ஆண்டு போதை பொருட்களை மீண்டும் பாரதியார் உபயோகித்ததை பாண்டிசேரியில் கண்டு வ. ராமசாமி மிகவும் வருத்தம் கொண்டார். நடுஇரவு மருந்து, சாமக்கிரிகை,  என பாரதியார் அங்கே உள்ள வேலையாளை வாங்கி வர சொல்வார். ஆனால் பாரதியார் மீதான மரியாதையில் எதுவும் சொல்லவில்லை. இந்த சாமியார் தெருவில் படுத்து கிடப்பது, நாய்களுடன் சண்டை போடுவது போதை பொருட்கள் உட்கொள்வது  என்றே அவரது வாழ்வு இருந்து இருக்கிறது.

கடைசி மூன்று வருடங்கள் 1918-1921 பாரதியார் சென்னையில் தனது வாழ்நாளை செலவழித்தார். மகாத்மாவின் அகிம்சை செய்கை மகாகவியை புண்படுத்தியது. வ உ சி மகாத்மாவின் வழி பின்பற்ற பாரதி விடுதலை போராட்டத்தை ஒரு கட்டத்தில் கைவிடும் நிலைக்குப் போனார். பாரதியார் நிறைய போதை பொருட்கள் உபயோகித்த கால கட்டம் இதுதான். குள்ளசாமி சாமியாருடன் பாரதியை சென்னையில் கண்ட வ உ சி தன்னால் நம்ப இயலவில்லை. இது பாரதி தானா என்றே சந்தேகம் எழுந்தது. பொலிவிழந்து பாரதியார் காணப்பட்டார்.

வ உ சி , பாரதியாரும் அந்த குள்ளசாமி சாமியாரும் ஒரு பானத்தை அருந்திய பின்னர் அவர்களின் பேச்சு சத்தமாகவும் சுறுசுறுப்பாக உண்டுபண்ணியது கண்டார். வ உ சி என்ன என கேட்டார். அது என்னை சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்து என்றே பாரதியார் பதில் அளித்தார். அடுத்த நாள் பாரதியார் அதை அருந்த, வ உ சி புரிந்து கொண்டார். மண்டயம் நண்பர் பாரதியாரின் நடவடிக்கையில் உள்ள மாற்றத்தை கண்டார். இந்த மூன்று வருடங்களில் பாரதியாரின் உடல்நிலை பெரிதும் மோசமாகியது.

கடைசி காலத்தில்  பண கஷ்டம் வந்தபோது எட்டயபுரம் ராஜாவிடம் கேட்க அவர் உதவ மறுத்துவிட்டார். ஜூலை 1921ல் யானை அவரை தூக்கி வீசியது. அங்கே இருந்த ஒருவர் அவரை காப்பாற்றினார். எந்த ஒரு மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல் செப்டெம்பர் மாதம் பாரதியார் மரணம் அடைந்தார்.

ஓபியம், கஞ்சா பெருமளவில் அப்போது உபயோகிக்கப்பட்டது. பெதடின், ஹெராயின், மார்பின் கொடீன் போன்ற பொருட்கள் பின்னர் இவை இடங்களை பிடித்துக் கொண்டன. பாரதியாரின் மரணம் அவரது போதை பழக்கத்தால் ஏற்பட்டது என்பதை பலரால் ஏற்றுக்கொள்ள இயலாது. கண்ணதாசனுக்கு பெதடின் பழக்கம் இருந்தது என்பது பலருக்கு தெரியும். அவரது மரணம் கூட இந்த பெதடின் ஏற்படுத்தியதுதான். பல படைப்பாளிகள் குடிகார சிகாமணிகள்தான்.

பாரதியின் ''மோகத்தை கொன்று விடு'' என்பது  தன்னால் போதை பொருளை விட முடியாத நிலையில் கதறி அழுத  கவிதையாக கூட இருக்கலாம். பாரதிக்கு நல்ல நண்பர்கள்  வாய்க்காமல் போனார்கள். போதைப் பொருளுக்கு போதை மனதுக்கு அடிமையாகிவிட்டால் நல்ல நண்பர்கள் விலகிப் போவார்கள்.

பாரதி நீ மகாகவி
அப்படியே உன்னை
இவ்வுலகம் போற்றி மகிழட்டும்.  

போதை பொருட்கள் என்ன செய்யும் என்பதை படிக்க இங்கு பாருங்கள்.  

Wednesday 8 October 2014

எட்டப்பர்களும் விசுவாசிகளும் கொண்ட தமிழகம்

''நம்ம பையன் தான், அஞ்சு வயசில இருந்து நம்ம தோடத்தில வேலை பாக்கிறான். ஒரு வார்த்தை எதிர்த்து பேசமாட்டான், இப்ப கல்யாண வயசு வந்திருச்சி, அதான்  உன்  வீட்டு பொண்ணை இவனுக்கு கட்டி வைக்கலாம்னு மனசில தோணிச்சி, நீ என்ன சொல்ற''

''ஏன்டா உன் பொண்ணை அவனுக்கு கட்டி வைக்கிறது, ரொம்ப பகுமானமா அவனை கூட்டிட்டு இங்க வந்துட்ட, என் பொண்ணு என்ன அத்தனை இளக்காரமா போச்சாடா உனக்கு''

''விருப்பமில்லைன்னா விட்டுரு''

சோலையூர் கிராமத்து பண்ணை ராசு  பாலையூர் கிராமத்து பண்ணை முத்துவிடம் அவமானப்பட்டுத் திரும்பியது போல நினைத்துக் கொண்டார்.

''ஐயா, அவரை தீர்த்துருவோம்யா''

''எதுக்கு, உனக்கு பொண்ணு கொடுக்காத காரணத்துக்கா''

''உங்களை மட்டு மருவாதி இல்லாம பேசினதுக்குயா ''

''நாளைக்குள்ள  அவனை நம்ம தோட்டத்தில புதைச்சிரு''

''சரிங்கய்யா''

-----------------------

''காலையில பாலையூர் பண்ணை வீட்டுக்கு போயிருந்தோம்டா, அந்த பன்னிகிட்ட நம்ம பண்ணை எனக்கு பொண்ணு கேட்டாருடா, ஆனா அவன் மட்டு மருவாதை இல்லாம பேசிட்டான்டா, நம்ம பண்ணை அவரை தோட்டத்தில புதைக்க சொல்லிட்டாருடா''

''தனியாகவா இதை பண்ண போறடா''

''ஆமாடா''

''எத்தனை மணிக்குடா''

''ராத்திரி பன்னிரண்டு மணிக்குடா''

''கவனமா இருடா''

''இங்கே இருந்து இன்னைக்கு பத்து  மணிக்கு கிளம்பி போனா சரியா இருக்கும்டா''

''சரிடா''

எட்டுபாண்டியிடம் இந்த விஷயத்தை  மதியமே சொல்லிவைத்தான் சோலையூர் பண்ணை ராசுவின் விசுவாசி கோவிந்தன். கோவிந்தன் எட்டுபாண்டியிடம் எல்லா விசயங்களும் சொல்லும் வழக்கமுண்டு. இருவரும் ஒரு சோடுதான், ஆனால் தனக்கென ஒரு சிறு நிலத்தில் மட்டுமே வேலை பார்ப்பவன் எட்டுபாண்டி.
-------------------------

''பண்ணையார் இருக்குறாங்களா''

''என் பேரு எட்டுபாண்டி, சோலையூரில் இருந்து வரேன், ஐயாவைப் பார்க்கணும்''

''இருக்காரு, உள்ளே போங்க''

''ஐயா நான் சோலையூர் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''என்ன விஷயம்''

''உங்களை இன்னைக்கு நைட்டு பன்னிரண்டு மணிக்கு எங்கூரு பண்ணை கொலை பண்ண திட்டமிட்டு இருக்காரு''

''என்ன சொல்ற நீ''

''நீங்க அவர் உங்களை கொல்றதுக்கு முன்னால அவரை ஒரு பத்தேகால் மணிக்கு கொன்னு போட்டுட்டா உங்களுக்கு உயிர் பாதுகாப்பு''

''அவ்வளவு தூரத்திற்கு துணிஞ்சிட்டானா அவன், சரி நீ போ, ஆனா இந்த விஷயத்தை வெளியில சொன்ன நீ உயிரோட இருக்கமாட்ட''

''நான் வெளியூர் போறேன் ஐயா, நாளன்னைக்கு தான் ஊருக்கு வருவேன்''

---------------------

''சுடுதண்ணி இங்க வாடா''

''சொல்லுங்கய்யா''

''சோலையூர் பண்ணையை இன்னைக்கு நைட்டு போட்டுத் தள்ளிரு, பத்தே கால் மணிக்கு,''

''சரிங்கய்யா''

---------------------

மணி இரவு பத்து.

''ஐயா, பத்திரமா இருங்க ஐயா, நான் என் வேலையை முடிச்சிட்டு வந்துருறேன்''

''கோவிந்தா, நீ பண்ணினதுக்கு எந்த ஆதாரமும் இல்லாம பாத்துக்க''

''சரிங்கய்யா''

---------------------

மணி இரவு பத்தேகால்

''ஐயா, ஐயா''

''என்ன கோவிந்தா அதுக்குள்ளார திரும்பி வந்துட்ட, எதுவும் மறந்துட்டியா''

''நான் கோவிந்தன் இல்லை, நான் பாலையூர் பண்ணையார் விசுவாசி சுடுதண்ணி''

''நீ எதுக்குடா இங்க வந்த...''

பண்ணை ராசுவின் கழுத்தில் கத்தி இறங்கியது. கதவைச் சாத்திவிட்டு பண்ணை ராசுவை தூக்கிக்கொண்டு பாலையூர் கிளம்பினான் சுடுதண்ணி.

----------------------

மணி இரவு பன்னிரண்டு

''ஐயா''

''சுடுதண்ணி போன காரியம் கச்சிதமா முடிஞ்சதா...''

பண்ணை முத்துவின் கழுத்தில் கத்தி இறங்கியது. கதவைச் சாத்திவிட்டு பண்ணை முத்துவை தூக்கிக்கொண்டு சோலையூர் கிளம்பினான் கோவிந்தன்.

------------------------

மறுநாள் காலை சோலையூர் பாலையூர் சோகத்தில் மூழ்கியது. கோவிந்தன் அழுதபடி இருந்தான். காவல் அதிகாரிகள் சுடுதண்ணியை கைது செய்தார்கள். எட்டுபாண்டியை காவல் அதிகாரிகள் தேட ஆரம்பித்து தகவல் சொல்ல சொல்லி இருந்தார்கள்''

இரண்டு நாட்கள் கழித்து ஊருக்குள் இரவில் வந்தான் எட்டுபாண்டி.

''கோவிந்தா, நம்ம பண்ணைக்கு என்னடா ஆச்சு''

''எங்கடா போயிருந்த''

''மதுரைக்கு''

''எதுக்குடா போயிருந்த''

''அக்கா, ஒரு பொண்ணு பார்த்து இருந்தாங்க''

''சொல்லுடா, நீதானடா பாலையூருக்கு தகவல் சொன்னது''

''இல்லைடா''

எட்டுபாண்டியின் கழுத்தில் கத்தி இறங்கியது.

------------------------

''எட்டுபாண்டியை எவனோ கொன்னுட்டாங்கே சார்''

கோவிந்தன் காவல் நிலையத்தில் புகார் தந்து கொண்டிருந்தான்.




Saturday 4 October 2014

அம்மா நான் சமைக்கிறேன்

ஏன்டா இப்படி உட்காந்துட்டு இருக்கே வந்து சாப்பிட்டு போ அம்மாவின் குரல் கேட்டது.

எனக்கு சாப்பாடு வேண்டாம்மா, அப்புறம் வந்து நான் சாப்பிடுறேன் என நான் மறுப்பு தெரிவித்தது அம்மாவுக்கு சங்கடமாக இருந்து இருக்கும்.

ஏன்டா இப்படி பண்ற, அப்படி என்ன தலை போற விசயம், உனக்காகத்தான் இவ்வளவு அவசரமா செஞ்சேன். இப்படி சாப்பிடாம போனா என்னடா அர்த்தம்.

அம்மா வந்து சாப்பிடுறேன் என அவசரமாக கிளம்பினேன். அம்மா அடுப்பங்கரையில் இருந்து எட்டி வந்து பார்த்தார். அவரது முகத்தில் கோபத்தை விட சோகம் இழையோடிக் கொண்டு இருந்தது. சரி கொடும்மா என வேக வேகமாக நாலு வாய் சாதம் அள்ளிப்போட்டேன். மெதுவா சாப்பிடுடா, விக்கிக்கிற போகுது.

அடுப்பங்கரையில் பெரும்பாலும் அம்மாவின் பொழுது கழியும். காலை சாப்பாடு, மதிய சாப்பாடு இரவு சாப்பாடு என அம்மா தினமும் சமைத்துக் கொண்டே இருப்பார். விறகு எரியும் அடுப்பில் அவரும் எரிந்து கொண்டு இருப்பார். அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பேன் ஆனால் எனது அவசரம் எதுவும் செய்ய விடாது. எனக்கு சமைக்கத் தெரியாது. சாப்பிட மட்டுமே தெரியும். அதுவும் எனக்கு அம்மா தட்டில் சாப்பாடு எடுத்து வைத்தால் தான் நான் சாப்பிடுவேன். மறு சோறு வாங்கும் பழக்கம் இல்லை என்பதால் அம்மா நிறையவே சாப்பாடு எடுத்து வைப்பார்கள். நான் சாப்பிட்டால் தான் அவரது பசி அடங்கும்.

என்னடா விஷயம் எனும் அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசிக்கும் முன்னரே ரகுராமை பார்க்கப்போறேன் என பொய் சொன்னேன். எதுவும் வேலை விசயமா என்று அம்மாவின் அடுத்த கேள்விக்கு என்னால் பதில் யோசிக்க  முடியவில்லை. வரசொல்லி இருந்தான்மா என சமாளித்து கிளம்பினேன்.

நான் சென்றபோது எதிர்பார்ப்புடன்  நின்று கொண்டிருந்தாள். என்னடா இவ்வளவு லேட்டு? வீட்டில சொன்னியா இல்லையா? எங்க அப்பாவும் அம்மாவும் நீ வேலைக்கு சேராம உன்னை கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு காலுல நிக்கிறாங்க. எப்படா நீ வேலைக்கு போவ? எப்படா என்னை கல்யாணம் பண்ணுவ? என சோகமாக கேட்டாள். இப்போது பாவ்யாவின் ஊர் நகரம், எனது ஊர் இப்போதும் கிராமம்.

இன்னும் இல்லை பாவ்யா, எப்படி சொல்றதுன்னு தெரியலை. அப்பாவை நினைச்சாதான் பயமா இருக்கு என்றதும் பயப்படாதடா என்றாள்

இன்னும் ஒரு வாரத்தில் வேலை கிடைச்சிரும். அப்புறம் அப்பாகிட்ட நம்மளை பத்தி சொல்லிட்டு முடிவு சொல்றேன்.

எத்தனை வாரமா இதை சொல்லிட்டு இருக்க, எத்தனை இன்டர்வியூடா? டேய் நான் சாம்பாதிக் கிறேன்ல,  நீ சமைச்சி போடுடா  உனக்கு அதில என்னடா சிரமம். எனக்கு நீ சீக்கிரம் சொல்லு, உன்னைத்தவிர எனக்கு வேறு எவனோடயும் கல்யாணம் ஆகாது. மனசில வைச்சிக்கோ. இந்தா பணம், உன் அம்மாவோட பிறந்தநாளுக்கு சேலை வாங்கனும்னு சொன்னியே, இப்ப எனக்கு வேற வேலை இருக்கு. நாளைக்கு வந்தா கடையில வாங்கித்தாரேன். என் அம்மாவுக்கு தன்னோட பிறந்தநாள் எப்போது எத்தனை வயது என்று கூட தெரியாது.

பணத்தைக் கொடு, நானே போயி வாங்கிக்கிறேன்.

நல்ல பார்டர் போட்டது வாங்கிக்கொடு. நான் என்னோட வீட்டில சொல்லி சமாளிக்கிறேன். மனசு போட்டு குழப்பிக்காதே. சேலை வாங்கியதும் உன் அம்மாவோட ஒரு ரவிக்கை கொண்டு வா, அந்த சேலைக்கு ரவிக்கை தச்சி தரேன்.

அவள் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டே நின்றேன். சின்ன வயசு காதல். எனக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போவாள். என் மீது அவளுக்கு அத்தனை பிரியம். அவள் தைரியமாக அவளுடைய காதலை அவளது வீட்டில் சொல்லிவிட்டாள். எனக்கோ இந்த வேலையை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

கடைக்கு செல்வதற்குமுன் ரகுராமை பார்த்துவிட்டு செல்லலாம் என சென்றேன்.

உனக்கு அடுத்த வாரம் வேலை ஆர்டர் வந்துரும். எல்லாம் சரி பண்ணிட்டேன். சந்தோசமா இரு.

நிசமாவா?

என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லைல. அடுத்த வாரம் வந்து பேசு என சொல்லிவிட்டு போனான்.

கடையில் சென்று சேலை  வாங்கினேன். அம்மாவுக்கு முதன் முதலில் வாங்கும் சேலை அதுவும் அவள் கொடுத்த பணத்தில். சேலையை வாங்கிக்கொண்டு வீட்டில் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தேன்.

அம்மா எனக்கு அடுத்த வாரம் வேலை கிடைச்சிரும்னு ரகுராமன் சொன்னான்.

அம்மாவுக்கு சந்தோசமாக இருந்தது. இந்த தடவையாச்சும் உனக்கு வேலை கிடைக்கணும். அப்பாவுக்கும் முடியலைடா.

அம்மா நான் சமைக்கட்டுமா என அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே என்னடா இப்படி ஒரு விபரீத ஆசை.

வரப்போற பொண்ணுக்கு சமைக்கத் தெரியலைன்னா என்னம்மா பண்றது.

கல்யாணம் பண்ணிட்டா என்னை விட்டு போயிருவியாடா?

இல்லைம்மா, வேலைக்குப் போற பொண்ணு வந்தா நீதானம்மா சமைக்கணும், உன் வாழ்க்கை சமைச்சே கழிஞ்சிரும்

எனக்கு சமைக்கிறது, தோட்டம் போறதை விட்டா வேறு என்னடா தெரியும்? ஏன்டா பொண்ணு பார்த்துட்டியாடா?

அது வந்துமா...

அதான்டா பார்த்தேன். என்னைக்குமில்லாம சமைக்கிறது பத்தி பேசறன்னு

அம்மா, நம்ம ஊருல இருந்தாங்க பாவ்யா குடும்பம் அந்த  பொண்ணைதான் சின்ன வயசில இருந்து விரும்பறேன் அவளும் விரும்புறா அவங்க வீட்டில சொல்லிட்டா எனக்கு வேலை கிடைச்சா பேசலாம்னு அவங்க  வீட்டில சொல்லிட்டாங்க. அவ வேலைக்கு போறா உனக்கு வேலை கிடைக்கலைன்னா என்னடா நான் சம்பாதிக்கிறேன் நீ சமைச்சி போடுன்னு இன்னைக்கு சொன்னா.

அப்படினா நீ ரகுராமனை பார்க்கப் போகலை.

ரகுராமனைப் பார்த்துட்டுதான் வந்தேன்மா.

சபாஷ். அப்பாவின் வார்த்தையை கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன்.

சிவகாமி, நீ இவனுக்கு சமையல் கத்துக்கொடு, வரப்போற பொண்டாட்டிக்கு சமைச்சிப் போடட்டும்.

அப்பா அது வந்து...

நீ வேலை தேடு அப்புறமா அந்த பொண்ணு பத்தி பேசு என அப்பா சொல்லிவிட்டு போய்விட்டார்.

அம்மா, உனக்கு அப்பா கூடமாட சமைக்க உதவியே பண்ணினது இல்லையிலம்மா

ஏன்டா இப்படி, உன்னோட அக்காக்களே எனக்கு உதவி பண்ணினது இல்லை. நான் சமைச்சாத்தான் எனக்கு திருப்தி, உங்களுக்கு திருப்தி.

அடுத்த நாள் ஒரு ரவிக்கையை எடுத்து சென்று பாவ்யாவிடம் சேலையுடன் தந்தேன். நல்ல செலக்ஷ்சன்டா என்றாள். அப்பாவின் சம்மதம் என்னை ரகுராமனை தினமும் பார்த்து வர செய்தது. எனது நச்சரிப்பு தாங்காமல் நாளைக்கு வா என சொல்லி அனுப்பினான்.

அம்மாவின் ஐம்பாதவது பிறந்தநாளுக்கு  இன்னும் நான்கு நாள் மட்டுமே இருந்தது. பாவ்யாதான் எனக்கு ஒரு யோசனை சொன்னாள்

டேய் உன்னோட அம்மாவோட பிறந்தநாளை சூப்பரா செஞ்சா என்னடா?

பணத்துக்கு எங்க போவேன்?

என்கிட்டே இருக்குடா. உங்க அம்மாவோட நெருங்கிய தோழிகள் எல்லாரையும் கூப்பிடுவோம் உங்க அம்மாவுக்கு தெரியாம சர்ப்ரைசா வைப்போம்டா.

என் அம்மா ஊரை விட்டே வரமாட்டாங்க.

உன் வீட்டிலேயே வைப்போம்டா. நீயும் நானும் சமைக்கிறோம்டா. சரி என சொல்லிவிட்டு வந்தேன்.

ரகுராமனை சென்று பார்த்தேன். ரகுராமன் இந்தா வேலை ஆர்டர் என கையில் கொடுத்தான். அவன் கையை பிடித்து வணங்கினேன். எங்க வீட்டுக்கு இந்த சனிக்கிழமை விருந்துக்கு வந்துரு என சொன்னேன்.

அம்மாவின் நெருங்கிய தோழிகள் என நான்கு பேரில் இரண்டு பேர் ஊரில் இருந்தார்கள். மற்ற இரண்டு பேர் வேறு ஊரில் இருந்தார்கள். அவர்களை குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தேன். அக்காக்கள், சித்தப்பா, சித்தி பெரியப்பா பெரியம்மா என நிறைய பேரை அழைத்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த சந்தோசத்தினை கொண்டாட நானே சமைக்க இருப்பதாக சொன்னேன். அம்மாவுக்கோ ஆச்சரியம்.

எங்கடா சமைக்க கத்துக்கிட்ட?

அந்த பொண்ணு  அன்னைக்கு வந்து சமைக்கிறேன்னு சொல்லி இருக்காம்மா.

இந்தாடா பணம் என அப்பா தந்தார்.

இரண்டு தினங்கள் கழிந்தது. பாவ்யா என்னை வரச்சொல்லி இருந்தாள்.

என்னடா உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்துருந்தார்டா. உன்னோட வேலை கிடைச்ச விருந்துக்கு எங்களை எல்லாம் வரச்சொல்லி இருந்தார்டா.

அம்மாவின் பிறந்த தினம் அன்றுதான் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். முன்னிரவே அம்மாவிடம் நாளை எனது நாள் என சொல்லி வைத்தேன்.  காலையில் எழுந்து கூட்டிப் பெருக்கி வாசல் தெளித்தேன். பாவ்யா அதிகாலை வந்து விட்டாள். அவளே கோலம் போட்டாள். 

நான் முதன் முதலில் வியந்த ஓவியம் கோலம்.

நானும் அவளும் சமைக்க ஆரம்பித்தோம். அம்மா உதவி செய்ய வந்தார்கள். அம்மா நீங்கள் இன்று ஓய்வு எடுக்கும் நாள் என சொல்லி வைத்தேன். நிறைய பேரு சாப்பிட வராங்கடா. ஏம்மா நீ நல்லா சமைப்பியா?

சாப்பிட்டுட்டு சொல்லுங்கத்தே என்றாள்.

சமையல் தயாராகி முடிந்தது. அம்மா வந்து ருசி பார்த்துவிட்டு பிரமாதம்டா என்றார்கள். உன் கைக்கு தங்க வளையல் போடணும்மா என்றார் அம்மா. அக்காக்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள். பாவ்யாவின் அப்பா அம்மாவும் வந்து இருந்தார்கள்.

ரகுராமனும் வந்து இருந்தான். எல்லோரும் அமர்ந்து இருக்க பாவ்யா என் அம்மாவை சாமி அறைக்கு அழைத்து சென்றாள். நானும் உடன் சென்று புது சேலையை ரவிக்கையை தந்தேன். அம்மா உனக்கு இன்னைக்கு ஐம்பாதவது பிறந்தநாள் அதனால்தான் இவ்வளவு ஏற்பாடும், பாவ்யாவோட யோசனை என்றேன்.

அம்மாவுக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை. பாவ்யா கேட்டுக்கொண்டதால் சிறிது நேரத்தில் புது சேலை ரவிக்கை அணிந்து வந்தார். அம்மாவின் ஐம்பாவது பிறந்தநாள் குறித்து அனைவருக்கும் சொன்னேன். அப்பா மெய்மறந்து நின்றார். அம்மா வெட்கம் கொண்டார்.

வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லி அம்மாவுக்கு சமைச்சி போட்டியா என எல்லோரும் அம்மாவை வாழ்த்திவிட்டு சாப்பிட்டுச் சென்றார்கள். அத்தனை பேரும் சாப்பாடு குறித்தும் அம்மாவின் பிறந்தநாள் குறித்தும் பேசினார்கள். அம்மாவுக்கு பெருமிதமாக இருந்தது.

------------------

எந்தவொரு பிறந்தநாளையும் கொண்டாடாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்து முடித்துவிடும், தனது வாழ்க்கையை மட்டுமே முக்கியமாக்கி அம்மாவை மறந்து போகும் பிள்ளைகள் கொண்ட அம்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பாவ்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.