Showing posts with label தொடர்கதை தே.கி. Show all posts
Showing posts with label தொடர்கதை தே.கி. Show all posts

Friday 7 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)

அந்த நபரும், கோவிந்தசாமியும் கோவில் அருகில் சென்றார்கள். என்னே வேலைப்பாடு! அதி அற்புதமாக இருந்தது அந்த கோவில். அதைப் பார்த்ததும் கோவிந்தசாமி மனம் துள்ளியது. இதே கோவில்தான் நான் கனவில் கண்டது. கங்கையில் நீராடிவிட்டு உள்ளே சென்று வணங்கிவிட்டு வருவோம் எனச் சொன்னார் கோவிந்தசாமி. நீராடிவிட்டு கோவிலுக்குள்ளேச் சென்றார்கள். ஒவ்வொரு கல்லும் பேசியது. என்னே அற்புதம்! எனச் சொன்னார் கோவிந்தசாமி.

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் இருந்த உணர்வினை பெற்றார். இதுதான் அந்த புனித ஆலயம் என தேவியை சென்று வணங்கினார். மனமுருக வேண்டினார். உனது கருணையின்றி நான் இத்தனை தொலைவு வந்து இருக்கமாட்டேன் என அவர் நினைத்தபோதே கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. கற்பக கிரகத்திற்கு வெளியே ஒரு பக்கம் சிவலிங்கம் இருந்தது, மறுபக்கம் விஷ்ணு இருந்தார், ஒருவருக்கொருவர் நேருக்கு நேராய்ப் பார்த்து புன்னகைத்தபடி. இருபக்கமும் நின்று இருவரையும் ஒருசேர வணங்கலாம். வலது புறம் சிவன், இடது புறம் விஷ்ணு. என்னே பாக்கியம் இது! என புதையலை எடுக்க வேண்டும் எனும் நோக்கமே இல்லாமல் நின்றார். இதைவிட பெரிய புதையல் என்ன இருந்துவிடப் போகிறது?

கோவில் பிரகாரத்தை சிறு குழந்தை போல் சுற்றி வந்தார். சுற்றிக்கொண்டே இருந்தார். அந்த நபரும் கோவிந்தசாமியுடன் சேர்ந்து சுற்றினாலும் அந்த நபரின் மனதெல்லாம் சித்தர் போட்டு வைத்த தங்கப் புதையல் மேல்தான் சென்றது. பலமுறை சுற்றிய கோவிந்தசாமி உடலில் மனதில் இருந்த வலி எதுவுமே இல்லாத உணர்வைக் கொண்டார்.

''தொழுவேன் சிவனார் உனையேக் கண்ணா
இதயத்திலிருந்தாய் நீயே கண்ணா
வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய்''

எது வருவாய்? உலகமெல்லாம் ஓடோடி ஈட்டிக்கொள்வதா வருவாய்! அவனை உள்ளத்திலே ஈட்டிக்கொள்வதல்லவா வருவாய். கோவிந்தசாமியின் மனம் அளவில்லா பேரானந்தத்தில் திளைத்தது. ஒரு இடத்தில் மெளனமாக அமர்ந்துவிட்டார். கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. கனவில் கோவில் வெளி்ப்பிரகாரம் மட்டுமே தெரிந்தது. ஆனால் உள்ளே இருந்த அமைப்பும் அளவில்லா அமைதியும் கோவிந்தசாமியை கட்டிப்போட்டது. ஆடுகளும் கோழிகளும் மீன்களும் அவரை மனதில் துவம்சம் செய்தன. கர்மம் என சொல்லிக்கொண்டு தான் நடந்து கொண்ட முறையை நினைத்து கண்ணீர் விட்டார். மதுரை மீனாட்சி கோவிலில் வராத எண்ணம் இங்கு ஏன் வந்தது, இத்தனை காலம் இதற்குத்தான் என்னை வரவிடாமல் வைத்தாயோ என சிறு பிள்ளைபோல் கேவி கேவி அழுதார். பாபங்கள் கரைக்கப்பட்டு விடுகின்றன. அந்த நபர் கோவிந்தசாமியைத் தொட்டார். வேகமாக கண்களைத் துடைத்துவிட்டு கோவிலை விட்டு வெளியேறினார் கோவிந்தசாமி. எந்த இடம் புதையல் இருந்த இடம் என்றார் அந்த நபர்.

கோவிலுக்குச் சற்று வெளியே வந்து மணல்தரையைக் காட்டினார். இங்கேதான் என்றார் கோவிந்தசாமி. அந்த நபர் தோண்ட ஆரம்பித்தார். அதிக அளவு தோண்டியும் எதுவும் கிடைக்கவில்லை. கோவிந்தசாமியும் தோண்டிப் பார்த்தார். எதுவும் கிடைக்காதது கண்டு அந்த நபர் வேதனையுற்றார், ஆனால் கோவிந்தசாமி கோவிலின் கோபுரத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தார். தோண்டிய இடத்தை மூடினார்கள். இப்படியாக சில இடங்களில் தோண்டிப் பார்த்துவிட்டு ஏதும் இல்லாது கண்டு அந்த நபர் மிகவும் வருத்தமுற்றார். ஆனால் கோவிந்தசாமி அமைதியாகவே இருந்தார், எந்த ஒரு ஏமாற்றமும் அடைந்ததாக அவருக்குத் தோணவில்லை. மகிழ்ச்சியாகவே காணப்பட்டார். புதையல் கிடைக்கவில்லையே என சலித்துப் போனார் அந்த நபர். உங்களுக்கு ஒன்றும் தோணவில்லையா எனக் கேட்ட நபருக்கு உள்ளே புதையலைத் தேடிக்கொண்டேன் என்றார் கோவிந்தசாமி மிகவும் அமைதியாக ஆனந்தமாக.

சித்தரைச் சென்றுப் பார்த்தார்கள். புதையல் கிடைத்துவிட்டதா என்றார் சித்தர். இல்லை என்றார் நபர். நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என கோவிந்தசாமியைக் கேட்டார். கிடைத்துவிட்டது என்றார் கோவிந்தசாமி. சித்தர் சொன்னார், அருள் புதையல் கண்ட நீ, நிச்சயம் பொருள் புதையலைக் கண்டுபிடிப்பாய் என்றார் புன்னகைத்துக் கொண்டு. கோவிந்தசாமி மனம் இலேசாக இருந்தது.

''தேடிக்காணும் பொருளில்லை நீயே
தேடாமலே இருப்பாய் சிவனே
உணர்வை விழித்திட நீயும்
ஓரிடத்தில் அமர்ந்தாய் சிவனே''

இன்னும் தேடப்போகிறீர்களா என்றார் சித்தர். இல்லை என்றார் கோவிந்தசாமி. தேடப்போகிறோம் என்றார் அந்த நபர். இரண்டு நாட்களும் தேடினார்கள். புதையல் கிடைக்கவே இல்லை. அந்த நபருக்கு பயம் அதிகரித்தது. சித்தர் மாற்றும் தங்கம்தான் புதையலாக இருக்குமோ என. ஒருவேளை அதுவும் கிடைக்காது போனால் என அச்சம் கொண்டார். கோவிந்தசாமி எதையும் கணக்கில் கொள்ளவில்லை.

மூன்றாம் நாள் அந்த கட்டிடத்துக்குச் சென்றார்கள். சித்தர் கோவிந்தசாமியை புதைத்த இடத்தில் தோண்டச் சொன்னார். தங்கம் மின்னியது. சந்தோசத்தில் தாவி குதித்தார் அந்த நபர். கோவிந்தசாமி எந்த சலனமும் இல்லாமல் தங்கத்தை எடுத்து சித்தரிடம் தந்தார். சித்தர் அதனை அந்த நபரிடம் கொடுத்தார். எப்படி உலோகங்களான காரீயமும், பாதரசமும் தங்கமானது? அந்த பாத்திரமும் தங்கமாகவே மாறியதே என யோசித்தார் அந்த நபர். விளக்கம் கேட்டார். இதற்கு விளக்கத்தை பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இரசாயன தொழில்நுட்பம் படிக்கும் தனது மகனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்ற சித்தர் அவன் இனிவரும் காலத்தில் விஞ்ஞானி, நான் எப்பொழுதும் சாதாரண மனிதர் என சிரித்துக்கொண்டே கோவிந்தசாமியிடம் நீங்கள் இப்போது சித்தர் என்றார்.

கோவிந்தசாமிக்கு பணத்தைக் கொடுத்து நீங்கள் ஊருக்குச் செல்லுங்கள், நான் எப்படி உருவானது போன்ற வழிமுறைகளை கற்றுக்கொள்கிறேன் என்றார் அந்த நபர் ஆனந்தத்துடன். கோவிந்தசாமி காசி கோவிலைச் சுற்றிக்கொண்டே இருந்தார் பேரானந்தத்தில். ஊருக்குச் செல்ல வேண்டும் என காசியை விட்டுச் செல்ல மனமில்லாது நடந்தார். அப்பொழுது ஒரு குடிசையில் அழும் குரல் கேட்டது. என்னவெனப் பார்த்தார் கோவிந்தசாமி. கட்டிலில் கிடந்த வயதான ஒருவர் கோவிந்தசாமியை அருகில் அழைத்தார்.

எனக்கு சிறுவயதிலே கனவு ஒன்று வந்தது. மேலும் மேலும் வந்தது. தெற்குப்பக்கத்தில் கோடியலூர் என ஊரும் அங்கே சிவன் கோவிலும் இருந்தது. அந்த கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் கிணற்றுக்கு தெற்குப் பக்கத்தில் நான் தோண்டினேன். அளவில்லா தங்கம் எடுத்ததாக கனவு கண்டேன். ஆனால் இந்த கனவினை நம்பி ஏன் செல்ல வேண்டும் என இருந்துவிட்டேன். ஒரு முறை முயற்சி செய்து இருக்கலாமோ எனத் தோணியது, ஆனால் உடல்நிலை இப்போது சரியில்லாமல் போய்விட்டது எனச் சொன்ன அந்த வயதானவர் சொல்லிவிட்டு மரணமடைந்தார். கோவிந்தசாமிக்கு புதையல் இருக்கும் இடம் தனது தோட்டம் தான் என கண்டு கொண்டார்.

அந்த நபரிடமும் சித்தரிடமும் நடந்த விபரத்தைச் சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பினார் கோவிந்தசாமி. அந்த நபர் மகிழ்ச்சி அடைந்தார். சித்தர் நிச்சயம் நீ புதையலை கண்டுபிடிப்பாய் என்றார். அந்த நபர் சித்தரின் மகனிடம் விளக்கம் கேட்டார். சித்தரின் மகன் விளக்கம் சொல்ல ஆரம்பித்து இருந்தார்.

கோடியலூருக்குத் திரும்பினார் கோவிந்தசாமி. கோவிந்தசாமியைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். வசந்தராஜ் வீட்டுச் சாவியை தந்தார். நீயே வைத்துக்கொள் என்றார் கோவிந்தசாமி. நான் பராமரித்ததோடு சரி, வீட்டில் தங்கவில்லை அது உங்கள் வீடுதான் பேசியபடி நான் எழுதித் தரச் சொல்லிவிடுகிறேன் என்றார் வசந்தராஜ். எழுதித் தர வேண்டாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றார் கோவிந்தசாமி. ஆனால் அவர்கள் ஏற்பதாகத் தெரியவில்லை. கோவிந்தசாமி பிடிவாதமாகவே சொல்லவே சரியென சொன்னார்கள். தோட்டத்தில் சென்று தங்கிக்கொண்டார் கோவிந்தசாமி. காசியில் தான் கண்ட அற்புதங்களை அனைவரிடமும் சொன்னார். மகன்களும் மகளும் அடுத்த வருடம் செல்ல வேண்டும் என உறுதி பூண்டார்கள்.

சில மாதங்கள் கழிந்தது. சுப்புராஜுவுக்கு திருமணம் நடைபெற்றது. கோவிந்தசாமியே தலைமை தாங்கினார். ஒருநாள் சுப்புராஜுவிடம் தோட்டத்தின் கிணற்றுக்கு அருகில் தோண்டச் சொன்னார். எந்த வேலை சொன்னாலும் உடனே செய்துவிடும் சுப்புராஜ் தோண்ட ஆரம்பித்தான். தோண்டியது போதுமா எனக்கூட கேட்காமல் அவர் நிறுத்து என சொல்லும்வரை தோண்டிக்கொண்டே இருந்தான். ஒரு இடத்தில் போனதும் சத்தம் கேட்டது. என்னவென மண்ணைத் தள்ளிவிட்டுப் பார்த்தான் சுப்புராஜ். தங்கம் தெரிந்தது. தங்கம் ஐயா என்றான் சுப்புராஜ். ம்ம் தோண்டு என்றார் கோவிந்தசாமி.

தங்கப்புதையலை எடுத்தான் சுப்புராஜ். நீயே வைத்துக்கொள் என்றார் கோவிந்தசாமி. ஆனால் சுப்புராஜ் தங்கம் அனைத்தையும் கோவிந்தசாமியிடம் கொடுத்துவிட்டான். கோவிந்தசாமி காசிக்குப் புதையல் தேடிச் சென்ற பலனை அடைந்தார். வெறும் கனவுதான் என ஒதுக்கி இருந்தால் காசியில் இறந்துபோன ஒருவரைப் போல இவரும் இந்த புதையலை அறியாமலே போயிருப்பார். மனம் ஒருவரை எப்போதும் நல்வழி நடத்துகிறது அதனை புரிந்து செயல்படுபவர்கள் வாழ்வில் இறைத்தன்மையையும் கண்டு கொள்கின்றனர், இந்த பொருள் உலகுக்குத் தேவையான பொருளையும் கண்டு கொள்கின்றனர். காசியை கனவில் காட்டியதற்குப் பதிலாக ஊரைக் கனவில் காட்டியிருந்திருக்கலாம்தான் ஆனால் வாழ்வில் எதையும் எளிதாக கொடுத்துவிட்டால் அட இவ்வளவுதானா என நினைத்துவிடுவோம் அதனாலேயே இறைவன் இருந்தும் இல்லாதிருக்கிறான், இல்லாதிருந்தும் இருக்கிறான்.

அந்த தங்கப் புதையலை வைத்து பல தொண்டு நிறுவனங்கள் தொடங்கி மக்களுக்கு தனது பிற்காலம் முழுவதும் சேவை செய்து கோவிந்தசாமி சிறப்புடன் வாழ்ந்தார். சுப்புராஜ் கோவிந்தசாமியின் சேவையை தொடர்ந்து செய்தான்.

முற்றும்

தேடினால் கிடைத்துவிடும் - 11

உற்சாகமான அந்த நபர் தான் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்திற்கு இன்று பலன் கிடைத்துவிட்டது என்றார். சித்தர் மெல்லியதாய் புன்னகைத்துக் கொண்டே தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும், வெற்றியடைந்து விடவேண்டும் எனும் முயற்சியும் மட்டுமல்லாது தோற்றுவிடுவோம் என்கிற எச்சரிக்கையும் அவசியம் அப்பொழுதுதான் ஒரு விசயத்தில் உண்மையான வெற்றி காணமுடியும். ஒரு விசயத்தில் நமது முழு கவனமும் இருக்கும்போது சுற்றி நடக்கும் விசயங்களிலும் நமது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றார். இருவரும் கேட்டுக் கொண்டார்கள்.

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சித்தர்கள், முனிவர்கள் ஏன் எல்லாம் துறந்து விடுகிறார்கள் எனக் கேட்டார் கோவிந்தசாமி. சித்தர் நின்றார். என்னை என்னவாக நினைக்கிறீர்கள் என திருப்பிக் கேட்டார் சித்தர். நீங்கள் சித்தர் என்றார் கோவிந்தசாமி. எனக்கு மனைவியும் உண்டு, பிள்ளைகளும் உண்டு என சொல்லிக்கொண்டு நடந்தார் சித்தர். அந்த நபருக்கே ஆச்சரியமாக இருந்தது. யாரும் எதையும் துறக்கத் தேவையில்லை என இளந்துறவி ஒருவர் எழுதிய கவிதையினை சொன்னார்.

''உங்கள் கண்களுக்கு
பொம்மைகளுடன் விளையாடும் வயதுதான் எனக்கு
என் மனதில்
பொம்மைகளை தூரம் தள்ளிவைக்கும் பக்குவம் எனக்கு

எவரும் துறக்கச் சொல்லி துறப்பதில்லை
வேண்டியே வெறுத்து எதுவும் ஒதுக்குவதில்லை
பொருட்கள் வேண்டி சிறக்கும் நீங்கள்
பொறுப்புடன் வளர்கிறேன் வந்து பாருங்கள்

புன்னகை ஏந்தியே பூஜிக்கின்றேன்
புரியும் வாழ்க்கையதை
பள்ளி தொடாமல் பயில்கின்றேன்
இறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன்
சுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன்

உங்கள் வாழ்க்கைக்கு நான் வருவதில்லை
எந்தன் வாழ்க்கையில் உங்களுக்கு சுகமில்லை
பொன்னும் பொருளும் பேணியும் - அன்பிற்கு
எந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர்

என்றும் துறந்து விடாத ஒன்றில்
எந்தன் மனதின் பற்று வைத்தே மகிழ்கின்றேன்
துறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு
நானா தெரிகிறேன் துறவியாய்?''

இல்லறத்தில் இருந்துகொண்டே இறைவனை காண்பதுதான் நல்லறம் என சிரித்தார். ஒரு கட்டிடத்தை அடைந்தார்கள். கதவை திறந்து உள்ளே சென்று விளக்கு ஏற்றினார் சித்தர். உள் அறையில் தரையானது வெறும் மணல் தரையாக்வே இருந்தது. ஆழமாக தோண்டினார். பாத்திரத்தை உலோகத்துடன் உள்ளே வைத்தார். ரசாயன குடுவையை உள்ளே மெதுவாக வைத்தார். மூலிகைகளையும் சேர்த்துப் போட்டார். ஒரு சிறிய கல் எடுத்தவர் ரசாயன குடுவை மீது போட்டார். குடுவை உடையும் சப்தம் கேட்டது. வேகமாக மணலை அள்ளி மூடினார். மூன்று நாட்கள் கழித்து வந்து பார்ப்போம் என உள் அறையை மூடிவிட்டு வந்தார்.

உலோகம், ரசாயனம், மூலிகை பெயர் கேட்டார் அந்த நபர். காரீயம், பாதரசம், தங்க மூலிகைகள் என்றார் சித்தர். அந்த நபர் அவசர அவசரமாக எழுதினார். நீங்கள் புதையலைத் தேடிவிட்டு என்னை வந்து பாருங்கள் என கதவை மூடிவிட்டு நடந்தார் சித்தர்.

(தொடரும்)

Thursday 6 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 10

அந்த நபர் தன்னிடமிருந்த வரைபடத்தை எடுத்தார். எடுத்தவர் கோவிந்தசாமியிடம் நாம் இருக்கும் இடம் காசி இரயில்வே நிலையம். இங்கிருந்து தெற்கு நோக்கிச் சற்று தொலைவு சென்றால் சித்தர் இருக்கிமிடம் வரும். அவரைப் பார்த்துவிட்டு புதையல் தேடலாம் என்றார். வரைபடத்தை பார்த்த கோவிந்தசாமி உற்சாகமானார்.

இதோ கோவில் இருக்கிறது, அதுவும் கங்கையாற்றுக்கு அருகில் என சந்தோசத்தில் சொன்னார் வரைபடத்தை சுட்டிக்காட்டி. அந்த நபரும் மிகவும் உற்சாகமானார். ஆமாம் அந்த சித்தர் இருக்குமிடத்துக்கு அருகில்தான் கோவில் இருக்கிறது, மிகவும் வசதியாக போய்விட்டது என்றார் அந்த நபர். ஆம் அந்த கோவில்தான் என எப்படி சொல்கிறீர்கள் என கேட்டார். என் மனதில் பட்டது, கோவிலை நேரில் பார்த்தால் சொல்லிவிடுவேன் என்றார் கோவிந்தசாமி.

இருவரும் காசி இரயில்வே நிலையத்தில் உணவருந்திவிட்டு நடக்கத் தொடங்கினார். எழில் கொஞ்சும் காசி. வானம் தூறலிட்டது. சில்லென்ற காற்றும், மனிதர்களும் மனதை மயக்கியது. உங்களுக்கு ஒன்று தெரியுமா, குழந்தை இல்லாதவர்கள் இங்கே வந்தால் அவர்களுக்கு குழந்தை பெறும் பாக்கியம் கிடைப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனை கேட்கும் மற்றவர்களுக்கும் அறிவியல் அறிந்தவர்களுக்கும் எப்படி இப்படி மக்களை முட்டாளாக்குகின்றனர் என எண்ணம் வரும், ஆனால் மனதை நம்பி வருபவர்களுக்கு, மனதில் எண்ணம் வேரூன்றி இங்கெ வந்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் எனும் விடாத நம்பிக்கை அவர்களது ஆசையை நிறைவேற்றி விடுகிறது என்பதில் எனக்கு ஐயமில்லை என்றார் அந்த நபர்.

கோவிந்தசாமிக்கு அவர் சொன்னது ஆச்சரியமான விசயமாக இருந்தது. கோவில் குளங்கள் எனவும் மரத்தில் தொட்டில் கட்டி விட்டுச் செல்பவர்கள் எனவும் கண்டு இருக்கிறார், தனது மகளுக்கு கூட சில வருடங்கள் குழந்தை இல்லாமல் பின்னர் கோவில் குளங்கள் எனச் சென்ற பின்னர் குழந்தை பெற்றதை நினைவு கொண்டார். அத்தருணத்தில் அந்த நபர் பல மரங்களுக்கு மருத்துவ குணம் உண்டு. நமது நாட்டில் பல கடவுள்கள் மரத்தின் கீழே தான் அமர்ந்து இருக்கிறார்கள். கடவுளைச் சுற்றி வரும்போது அந்த மரத்தையும் சுற்றி வருவதால் நமது உடல் புதுவித சக்தி பெறுகிறது என்பது உண்மை என்றார்.

கோவிந்தசாமி இத்தனை வருட வியாபாரத்தில் அறியாத பல செய்திகளை அந்த நபர் மூலம் தெரிந்து கொண்டார். அந்த நபரின் நட்பு கோவிந்தசாமிக்கு பெரும் மகிழ்வைத் தந்தது. கங்கை நதியின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது கோவிந்தசாமி தான் இந்த ஆஸ்தியை கரைத்துவிட வேண்டும் என சொல்லி அங்கே அமர்ந்து சில சடங்குகளை அங்கிருந்த ஒருவரை அழைத்துச் செய்தார். அவர் அதுபோல் செய்பவர் போலும், அழைத்துக் கேட்டவுடன் நானே செய்வேன் என செய்து முடித்தார். கங்கை நதியில் ஆஸ்தியை கரைத்தார்.

அந்த நபர் கோவிந்தசாமியை நோக்கி இதுபோன்றச் செயல்களால் கங்கை நதி அசுத்தம் அடைகிறது என சொல்கிறார்கள். ஆனால் கங்கை நதி தன்னுடன் பல மருத்துவ மூலிகைகளுடன் வருகிறது, அவ்வாறு வரும்போது இவைகளால் கங்கை நதி அசுத்தம் அடைவதில்லை, மாறாக இந்த விசயங்கள் தூய்மையடைகின்றன. மேலும் கங்கை நதியில் குளித்தால் மோட்சம் என்றெல்லாம் சொல்வது இந்த கங்கை நதியில் உள்ள மூலிகைகள் நம்மேல் படுவதன் காரணமாகத்தான். மொத்த அசுத்தங்களை அடித்துச் செல்ல கங்கை வெள்ளமாக வருவதுமுண்டு என்றார்.

மேலும் நடந்து செல்கையில் இதோ சித்தர் இருக்கும் பகுதி என அந்த நபர் ஆனந்தம் கொண்டார். சில சந்துகளில் எல்லாம் நுழைந்து சென்றார். இடம் பரிச்சயப்பட்டவர் போல் செல்கிறாரே என கோவிந்தசாமி கேட்டார். எல்லாம் முன்னேற்பாடாக இந்த இடத்தை எல்லாம் முன்னரே அறிந்து கொண்டேன். ஏனெனில் இங்கு வந்தபின்னர் சிரமம் இருக்கக்கூடாது இல்லையா என்றார் அவர். கோவிந்தசாமி நான் கனவினை மட்டுமே நம்பி வந்தேன், எந்த முன்னேற்பாடும் இல்லை எனச் சொன்னார். சிரித்தார் அந்த நபர்.

சித்தர் இருக்கும் இடத்தை அடைந்தார்கள். ஒரு சின்ன குடிசை இருந்தது. அப்பொழுது ஒருவர் அங்கே நடந்து வந்தார். குடிசைக்கு அருகில் இருக்கும் இவர்களை வாருங்கள் என குடிசைக்குள் அழைத்துச் சென்றார். கோவிந்தசாமி தன்னுடன் வந்த நபரிடம் நாம் வருவது இவருக்கு எப்படித் தெரியும்? என்றார். சித்தர்கள் எல்லாம் அறிவார்கள், ஆனால் அறியாததுபோல் இருப்பார்கள், நமக்கு அவர்கள் அறிந்ததைப் போல் உணர வைப்பார்கள் என மெல்ல சொன்னார்.

குடிசைக்குள் நல்ல வாசனை அடித்தது. சிறு விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார். இருவரையும் அமரச் சொல்லிவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்தார். தண்ணீர் மிகவும் சுவையாக இருந்தது. தண்ணீர் சுவையாக இருக்கிறதே என கேட்ட கோவிந்தசாமிக்கு சில மூலிகைகள் போட்டு இருப்பதாக சொன்னார் அந்த சித்தர். தண்ணீர் குடித்ததும் உடல் புத்துணர்வு பெற்றதுபோல் உணர்ந்தார் கோவிந்தசாமி.

அந்த நபர் தான் உலோகங்களை தங்கமாக மாற்றும் முறை அறிய வந்ததாகவும், கோவிந்தசாமி புதையலைத் தேடி வந்ததாகவும் சொன்னார். புதையலைத் தேடியா எனக் கேட்டார் சித்தர். ஆம் இவர் ஒரு கனவினை கண்டு இருக்கிறார், அதன்மூலம் வந்து இருக்கிறார் என்றார் அந்த நபர் மேலும். அதற்கு சித்தர் உன் மனது சொல்லும் விசயம் கேட்டு இவ்வளவு தூரம் வந்து இருக்கிறாய். உன்னை பாராட்டுகிறேன். மனது நம்மை நிச்சயம் நல்வழி நடத்திச் செல்லும், மனது சொல்லும் விசயத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்துச் செயல்பட வேண்டும். எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் மனது தீர்த்து வைத்துவிடும். தூய தெளிவான சிந்தனை என்பது எப்போதும் வேண்டும் என்றார் அந்த சித்தர். புதையலை நீ நிச்சயம் கண்டுபிடித்துவிடுவாய் என்றார் மெல்லிய புன்னகையுடன். கோவிந்தசாமிக்கு சித்தரின் பேச்சு சந்தோசம் தந்தது.

சித்தர் அந்த நபரை நோக்கி அனைத்து உலோகங்களையும் தங்கமாக மாற்றலாம். இந்த அறிவியல் எனக்கு என் தந்தை சொல்லித் தந்தது, எனது தந்தைக்கு எனது தாத்தா சொல்லித் தந்தது, இப்படியே பின்னோக்கிப் போனால் இந்த உலகம் உருவாக்கியவன் சொல்லித் தந்தது என்றார். எப்படி செய்வது என்றுதான் அறிய வேண்டும் நான் என்றார் அந்த நபர். அதற்கு சித்தர் யார் மண்ணுக்கு தங்கம் செய்து கொள்ள கற்றுத் தந்தது. ஒரு உலோகத்தில் இருந்துதான் தங்கம் உருவாகிறது. இப்படி தானாக உருவாகிக் கொள்ளும் தங்கம்தனை நாமாக உருவாக்குவது சரியில்லை அல்லவா என்றார் சித்தர்.

நீங்கள் அந்த கலை அறிந்தவர் என எனது நண்பர் கேள்விப்பட்டு இருக்கிறார் அதுதான் அந்த கலையை கற்றுக்கொள்ள வந்தேன் என்றார். சித்தர் தனது முகவாயைத் தடவிக் கொண்டார். ஒரு தனிமத்தில் குறிப்பிட்ட விசயங்கள் சேரும்போது அந்த தனிமம் அந்த தனிமமாக இருப்பதில்லை வேறொரு தனிமமாக மாறுகிறது ஆனால் அது அத்தனை எளிதாக நடப்பதில்லை. இந்த ரசாயன வினைகள் இயற்கையில் சாதாரணமாக நடந்தேறிவிடுகிறது, அதை நாமாகச் செய்தால் பல விளைவுகளை உண்டுபண்ணுகிறது. பொதுவாக பெரிய தனிமம் ஒன்றை நாம் தங்கமாக மாற்றும்போது ஆல்பா கதிர்கள் வெளியேறும். இவ்வாறு ஒவ்வொரு தனிமமாய் மாறி தங்கம் வரும். இதற்கான ரசாயனமும் மூலிகைகளும் உண்டு என்று சொன்னவர் கையில் ஒரு உலோகத்தை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் போட்டார். ரசாயனம் போன்ற ஒரு குடுவையையும் சில மூலிகையையும் எடுத்து வந்தார். வாருங்கள் போவோம் என அழைத்தார் சித்தர். கோவிந்தசாமிக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அந்த நபர் மிகவும் உற்சாகமானார்.

(தொடரும்)

Wednesday 5 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 9

மீண்டும் மழை வந்து சேர்ந்தது. மழையில் சற்று தொலைவுக்குச் சென்றவுடன் ஓட்டுநர் முதற்கொண்டு மற்றவர்கள் தங்களால் இனிமேல் பயணத்தைத் தொடரமுடியாது, இங்கிருந்து நாங்கள் திரும்பிச் செல்கிறோம். நீங்கள் எப்படியாவது போய்ச் சேருங்கள் என அந்த நபரையும், கோவிந்தசாமியையும் தனியாய் விட்டுவிட்டு செல்லத் திட்டமிட்டார்கள். அதற்கு அந்த நபர், பாதை இன்னும் கொஞ்ச தூரம் போனால் சரியாகிவிடும், இப்படி எங்களை தனியாக விட்டுவிட்டால் நாங்கள் செல்ல முடியாது என நினைத்தீர்களா? எனக் கேட்டார்.

பாதை மிகவும் மோசமாக இருக்கிறது, தொடர்ந்து சென்றால் வாகனம் பழுது அடைந்துவிடும். வாகனத்தை தனியாய் விட்டுச் சென்றால் எனது முதலாளிக்கு நான் என்ன பதில் சொல்வது. தங்கத்தை மாற்றும் வழியெல்லாம் நீங்கள் கற்றுக்கொண்டுவிட்டு எங்களுக்கு சொல்லித் தாருங்கள் என அவர்கள் சொன்னதும் கோவிந்தசாமி மிகவும் கவலையுற்றார். ஆனால் அந்த நபர் அதற்கெல்லாம் கவலைப் படவில்லை. மற்றவர்களை நோக்கி கேட்டார், என்ன செய்யப் போகிறீர்கள் என. அதற்கு அவர்கள் இப்போது செல்வது சரியாகப்படவில்லை, பாதை வேறு மிகவும் மோசமாக இருக்கிறது, உங்கள் பேச்சினை நம்பி நாங்கள் யோசிக்காமல் கிளம்பி வந்துவிட்டோம் எனவே எங்களுடன் திரும்ப வாருங்கள் அல்லது எங்களையாவது போக விடுங்கள் என சொன்னார்கள்.

அந்த நபர் உடனே பணத்தில் கொஞ்சம் பிடித்துக் கொண்டு நீங்கள் செல்லுங்கள் என அவர்களை அனுப்பினார். கோவிந்தசாமி புதையைலை எடுத்தே தீர்வது எனவும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு காசியைப் பார்க்காமல் செல்வதா எனவும், ஒருவர் கொடுத்த வேலையை செய்யாமல் செல்வதா என அந்த நபருடனே செல்வது என முடிவு செய்து அவருடன் நடக்க ஆயத்தமானார்.

கோவிந்சாமியைப் பார்த்து அந்த நபர், இப்படித்தான் வாழ்க்கையில் ஒரு பயணத்தை தொடங்கிவிட்டு ஒழுங்காக முடிக்க இயலாமல் பலர் கஷ்டம் என எண்ணி கைவிட்டு விடுகிறார்கள். நமது செயல் குறிக்கோள், எந்த தடைகள் வந்தாலும் அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு அந்த விசயத்தை அடைவதற்கு மனோ தைரியம் வேண்டும், உங்களுக்கு வயதாகிவிட்டதே அன்றி மனோ தைரியம் அதிகம் இருக்கிறது என்றார்.

வியாபாரத்தில் எத்தனையோ பிரச்சினைகள் வந்தபோதும் மனம் தளராமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறாமல் அமரந்தது இல்லை, இப்பொழுது இந்த காரியம் எடுத்துவிட்டேன், மனம் தளர்ந்தும் விட்டேன். ஆனால் அந்த வயதானவரை சந்தித்தபின்னர் எப்படியாவது இந்த புதையலையும் காசியையும் கண்டுவிடவேண்டும் என வைராக்கியம் கொண்டேன், பிடிக்காத தொழிலையும் புரிந்து ஓரளவு பணம் ஈட்டினேன், எனது பாதைக்கு வழிகாட்டியாய் உங்களை தந்துவிட்டான் இறைவன் என்றார் கோவிந்தசாமி.

மழை நின்று போயிருந்தது. வழியில் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தினார் அந்த நபர். எங்கே செல்ல வேண்டும் என கேட்டார் அந்த வாகன ஓட்டி. காசி என சொன்னதும், காசிக்கு செல்லாது, அதற்கு முன்னால் உள்ள இடத்திற்கு வரை செல்லும், ஏறிக்கொள்ளுங்கள் என்றார். உள்ளே பலர் அமர்ந்து இருந்தனர். அவர்களுடன் இவர்களும் அமர்ந்தார்கள். நெரிசலாக இருந்தது. வாகனத்தை மிகவும் லாவகமாக ஓட்டினார். வாகனம் பழுது அடைந்து விடுமா என கோவிந்தசாமி கேட்டதற்கு அந்த நபர் தடையாகும் என நினைத்துக் கொண்டு ஒரு விசயத்தைத் தொடங்கினால் நிச்சயம் தொடங்கவே முடியாது. வாகனம் பழுது ஆகாது என்ற நம்பிக்கையில் தான் ஓட்டுகிறார் அவர் என்றார்.

இரண்டு நாட்கள் என கரடு முரடான பாதையில் பயணம் தொடர்ந்து ஒரு இடத்தில் இறக்கிவிட்டார்கள். இங்கிருந்து கங்கையை கடந்து சென்றால் காசி வந்துவிடும். இங்கேயே கரைத்துவிடுங்கள் அந்த சாம்பலை என்றார் அந்த நபர். கோவிலுக்கு அருகில் சென்று கரைக்கிறேன் என்றார் கோவிந்தசாமி.

சிரமத்துடன் காசியை அடைந்தார்கள். அங்கு எங்குப் பார்த்தாலும் கோவில்கள்.முதலில் சித்தரை பார்க்கலாம் என்றார் அந்த நபர். காசியைக் கண்டு ஆனந்தம் கொண்டாலும் தனது கனவில் கண்ட கோவில் அங்கே இல்லாதது கோவிந்தசாமிக்கு ஏமாற்றமாக இருந்தது.

(தொடரும்)

Tuesday 4 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 8

கோவிந்தசாமி சிறிது நேரம் அந்த இடத்தில் படுத்து உறங்கினார். நிலைமை சீராகும்படியாய் இல்லை. கோவிந்தசாமிக்கு மீண்டும் அதே கனவு வந்தது. விழித்துக்கொண்டார். அந்த நபர் கோவிந்தசாமியை நோக்கி நல்ல அலைச்சல் போல உங்களுக்கு, இப்படி தூங்கிவிட்டீர்களே, நாம் இன்றைக்கு செல்ல இயலாது. நாளைதான் செல்ல இயலும் என்றார். கோவிந்தசாமிக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.

அன்றைய பொழுதெல்லாம் அவர்களுடனே போக்கினார். கிராமம் நினைவுக்கு வந்து போனது. சென்ற மாதம் வசந்தராஜுவின் மகளுக்கு மிகவும் சிறப்பாக திருமணம் நடந்தேறியது. ஊரில் கோவிந்தசாமியை காணாமல் பலரும் காசியிலே அவர் ஐக்கியமாகிவிட்டதாக பேசிக்கொண்டனர். கோவிந்தசாமியின் மகன்களும், மகளும் தந்தை நிச்சயம் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். கோவிந்தசாமியின் வீட்டினை சுத்தம் செய்வதோடு சரி, அங்கெல்லாம் சென்று தங்காமலே இருந்தார் வசந்தராஜ்.

கோவிந்தசாமி சொன்ன உதவித்தொகையை எடுத்துக்கொள்ளலாம் என வசந்தராஜ் சொன்னபோது சுப்புராஜ் மறுத்துவிட்டான். வேறொரு இடத்தில் கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார்கள். சுப்புராஜின் நேர்மையைக் கண்டு மிகவும் பூரிப்பு அடைந்தார் வசந்தராஜ். ஒருமுறை கோவிந்தசாமியின் மகன் வீட்டுக்கு வந்தபோது அவரது தந்தை செய்ததை அப்படியே சொன்னான் சுப்புராஜ். அதற்கு அவரது மகன் பரவாயில்லை, நீயே நன்றாகப் பராமரித்துக்கொள் என சொல்லிவிட்டார். சுப்புராஜுவுக்கு சந்தோசமாகவும் அதே வேளையில் ஆச்சரியமாகவும் இருந்தது. ஊரில் உள்ளவர்கள் வசந்தராஜ் குடும்பத்தைச் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் கோவிந்தசாமியின் வீட்டையும் நிலத்தையும் சிறப்பாக பராமரித்து வந்தான் சுப்புராஜ்.

அடுத்த நாள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். பயணமானது மிகவும் கரடுமுரடாக இருந்தது. கோவிந்தசாமிக்கு உடல் எல்லாம் அலுப்பாக இருந்தது. அப்பொழுது அந்த நபர் ஒரு கதையைச் சொன்னார்.

ஒரு நாட்டின் மன்னருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். ஒரு மகன் பாடல் கவிதை எழுதுவதில் மிகவும் சிறப்பு பெற்றவனாக இருந்தான். மற்ற மகன் போர்ப்படையில் சென்று சேர்ந்தான். கவிதைகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அப்பொழுது மன்னனின் கனவில் வந்த ஏஞ்சல் பெண் உனது ஆட்சியை மெட்சினேன். உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டாள். அதற்கு மன்னர் எனக்கு எனது மகன் ஒருவனின் புகழ் என்றுமே நிலைத்து இருக்க வேண்டும் என சொன்னார். உடனே ஏஞ்சல் பெண் அப்படியே ஆகட்டும் என சொன்னாள்.

மகன் எழுதிய கவிதைகள் நாடு முழுவதும் வெகுசிறப்பாக பாடப்பட்டது. அனைவரும் பாடிக்கொண்டே இருந்தார்கள். மன்னனுக்கு சந்தோசம் தாங்கவில்லை. தான் நினைத்தது போலவே காலத்தால் அழியாத அருமையான பாடல்களை எனது மகன் எழுதிவிட்டான் என பூரித்துப்போனார்.

இப்படியாக இருக்க மன்னன் இறந்துபோனான். ஏஞ்சல் பெண்ணைச் சந்தித்தான் மன்னன். அப்பொழுது ஏஞ்சல் பெண்ணிடம் மன்னன் இன்னும் பல வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் கொண்டு என்னை நிறுத்து. காலத்தால் அழியாத பாடல்களை எழுதிய என் மகன் பாடலை கேட்கவேண்டும் என சொன்னார். ஏஞ்சலும் எதிர்காலத்தில் பலவருடங்களுக்கு அப்பால் மன்னரை கொண்டு நிறுத்தினாள். அப்பொழுது ஒரு இனிய ராகம் கொண்ட பாடல் கேட்டது.

இது என்ன பாடல், என் மகனுடையது அல்லவே என்றார் மன்னர். அதற்கு ஏஞ்சல் இது உங்களுடைய மகன் உடையதுதான். கவிதைகள் பாடல்கள் மட்டுமே புனைந்த மகனுடைய பாடல்களும் கவிதைகளும் சில காலத்தில் மக்கள் மறந்து போனார்கள். ஆனால் போர்ப்படையில் இருந்த உன் மகன் ஒருமுறை ஒரு பெண் அடிபட்டு இறக்கும் தருவாயில் இறந்தாள். அப்பொழுது உன் மகன் பாடத் தெரியாத போதிலும் இறைவனை நோக்கி அந்த உயிரை எழுப்பித் தருமாறு இரண்டே வரிகள் கொண்ட பாடலைப் பாடினான். அந்த பாடலைப் பாடியதும் அந்த பெண் உயிர் பிழைத்துக் கொண்டாள். அந்த பாடல் தான் இன்று வரை காலத்தால் அழியாமல் பாதுகாக்கப்பட்டு பாடப்பட்டு வருகிறது என்றாள் ஏஞ்சல் பெண். மன்னர் மனமுருகினார்.

அந்த கதையைக் கேட்ட கோவிந்தசாமி கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஒரு நிமிடம் வாழ்வது எனினும் பிற உயிரின் நன்மைக்காக வாழ்ந்துவிடுவதுதான் சிறந்த வாழ்க்கை என நினைத்தார். வசந்தராஜ் குடும்பத்துக்கு தான் செய்த காரியம்தனை நினைத்துப் பார்க்கையில் மனம் நிறைய புதையலை எடுத்தது போல் உணர்ந்தார்.

(தொடரும்)

தேடினால் கிடைத்துவிடும் - 7

கோவிந்தசாமி அதே கடையில் இரண்டு மாதங்களாக வேலைப் பார்த்து வந்தார். கிராமத்தை மறந்து இருந்தார். யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. எப்படியும் புதையலை கண்டுபிடித்து விடுவது என்பதில் குறியாக இருந்தார். ஆனால் அவருக்கு காசிக்குச் செல்ல போதிய பணம் அந்த வேலையில் இருந்து சேர்க்க இயலவில்லை. ஒருமுறை மீன் பிடித்து விற்றுப்பார்த்தார். அதில் எந்த வருமானமும் கிடைக்காமல் சோர்ந்து போனார். தனது காசி ஆசையை இந்த கடையில் அடகு வைத்துவிடுவோமோ என அச்சம் கொண்டார். அப்போது அந்த கடைக்கு ஒருவர் வந்தார். அவர் கடையில் பொருள்கள் வாங்கிக்கொண்டே அந்த கடையின் முதலாளியிடம் தாங்கள் ஒரு குழுவாக காசி செல்வதாகக் குறிப்பிட்டார். இதைக்கேட்ட கோவிந்தசாமிக்கு மனம் மகிழ்ந்தது.

அந்த நபரிடம் நானும் காசி செல்ல விரும்புகிறேன் என குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட தொகை தன்னிடம் இருப்பது கண்டு மகிழ்ந்தார் கோவிந்தசாமி. அந்த கடை முதலாளி, தான் காசிக்கு எல்லாம் செல்வதில்லை. நீ வேலையைவிட்டு நின்று கொள் என சொல்லிவிட்டார். அதற்கு கோவிந்தசாமி தான் தனது வாழ்நாளில் இப்படியே வியாபாரம் செய்தே தனது எந்த ஒரு விருப்பத்தையும் நிறைவேற்றவில்லை. வேலை வேலை என்றே எனது வாழ்நாளை வீணாக்கிவிட்டேன். அதுபோல் நீங்களும் வீணாக்காமல் எங்களுடன் வாருங்கள் என சொன்னார். கடை முதலாளி கேட்கவில்லை. அந்த நபரிடம் இடம் எல்லாம் குறித்து வாங்கிக்கொண்டார் கோவிந்தசாமி.

கை ரேகை பார்க்கும் வயதானவரிடம் சொல்லிவிட்டு எட்டு பேர் கொண்ட குழுவுடன் ஒரு சிறிய வாகனத்தில் பயணத்தைத் தொடர்ந்தார். ஒரே நாளில் செல்லக்கூடிய பயணம் இரண்டு நாட்கள் ஆகும் என அந்த நபர் சொல்லி இருந்தார். அவரிடம் என்ன விசயமாகச் செல்கிறீர்கள் என கேட்டு வைத்தார் கோவிந்தசாமி. அதற்கு அந்த நபர் காசியில் ஒரு சித்தர் இருக்கிறார். அவர் எந்த பொருளையும் தங்கமாக மாற்றிவிடுவார் அதுவும் உலோகமாக இருந்தால் மிகவும் எளிதாக மாற்றுவார். இதை என் நண்பன் குறிப்பிட்டான். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை அதனால் நேராக பார்க்கச் செல்கிறேன் என்றார் அவர். கோவிந்தசாமிக்கு உற்சாகம் அதிகம் ஆகியது.

ஒவ்வொருவரும் தங்களது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டனர். தோட்டத்தில் அருகில் இருக்கும் சிவனை வேண்டிக்கொண்டார் கோவிந்தசாமி. அந்த நபர் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். என்ன புத்தகம் என கேட்டபொழுது உலோகங்களை தங்கமாக மாற்றக்கூடிய வழிமுறைகள் சொல்லும் புத்தகம் என சொன்னார். அதனை வாங்கி பார்த்தார் கோவிந்தசாமி. புத்தகம் புரியாமல் இருந்தது. இப்படி எழுதி இருக்கிறார்கள் என கேட்டார். எளிதாக புரிந்துவிட்டால் அதை ஊன்றிப்படிக்க யாரும் விரும்பமாட்டார்கள் எனவேதான் புரியாமல் இருக்கும்படி செய்கிறார்கள் என்றார் அந்த நபர். மேலும் அவர், ஒரு புத்தகம் எழுதும்போது ஒவ்வொரு கதாபாத்திரமாக சொன்னால் நன்றாக இருக்கும். மொத்தமாக அனைத்து கதாபாத்திரங்களின் பெயரையும் ஒரே இடத்தில் சொல்லிவிட்டால் மறந்து விடுவோம் என்றார். அவரது சம்பாஷனை கோவிந்தசாமிக்கு பிடித்து இருந்தது.

தாமிரத்தை தங்கமாக மாற்றும் முறை குறித்து விளக்கினார். ஆனால் கோவிந்தசாமிக்குப் புரியவில்லை. வாகனம் மெதுவாக போய்க்கொண்டிருந்தது. வெளியில் ஆடுகளும் மாடுகளும் பறவைகளும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டு இருந்தன. சின்ன தூறலும் வந்து விழுந்தது. சித்தர்கள் பற்றி கேட்டார் கோவிந்தசாமி. சித்தர்கள் அனைத்தும் அறிந்தவர்கள் என்றார் அந்த நபர். உலகத்தில் நடக்கும் செயல்களுக்கு ஒவ்வொரு குறிப்பும் இருக்கும். இப்போது நான் அங்கு கடைக்கு வரவில்லையெனில் நீ என்னுடன் வந்து இருக்க முடியாது என்றார். அப்போதுதான் நீ எதற்கு காசி செல்கிறாய் எனக் கேட்டு வைத்தார்.

கோவிந்தசாமிக்கு புதையல் பற்றி சொல்வதா வேண்டாமா என தெரியவில்லை. தன்னிடம் இருந்த அஸ்தியைக் காட்டி இதை கரைக்கச் செல்கிறேன் என்று மட்டும் அப்போது சொல்லி வைத்தார். அதற்கு அந்த நபர் அப்படியெனில் அதை நீ இதோ செல்லும் கங்கையின் துணை நதியில் கரைக்கலாமே ஏன் அவ்வளவு தூரம் வரவேண்டும் என்றார். கோவிந்தசாமி புதையல் தேடிச் செல்லும் விசயத்தை சொன்னார். அந்த நபர் தான் தங்கம் உருவாக்கும் விதம்தனை கற்றுக்கொள்ள செல்வதும், நீ தங்கம் எடுக்க செல்வதும் ஒன்றாக இருக்கிறது. இப்படி ஒன்றுபட்ட எண்ணம் கொண்டவர்கள் வாழ்வில் சந்திக்கும்போது வெற்றி உண்டாகிறது என்றார். கோவிந்தசாமி மற்ற நபர்கள் எல்லாம் யார் எனக் கேட்டார். வாகன ஓட்டுநர் முதல் எல்லாம் அந்த சித்தரை பார்க்க செல்பவர்கள் தான் என்றார். நானும் சித்தரைப் பார்க்க வருகிறேன் என சொன்னார் கோவிந்தசாமி.

வாகனம் சென்று கொண்டிருக்கும்போதே பெரும் மழை வந்து விழுந்தது. அந்த மழையானது சாலையெல்லாம் பழுது அடையச் செய்தது. மேற்கொண்டு வாகனம் செல்ல இயலாது என ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்கே உணவு அருந்தினார்கள்.

ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது கடவுள் இந்த உலகத்தை பெரும் காரணத்துடனே படைத்தார். ஒவ்வொருவருக்கும் அவரது முடிவினை நிர்ணயித்து வைத்தார். எல்லாம் இறையே என்றார் அந்த நபர். கோவிந்தசாமிக்கு அவர் பேசியது புதியதாய் இருந்தது. மற்ற உலோகங்களை எல்லாம் தங்கமாக மாற்றுவது குறித்து இந்த புத்தகம் படித்து செய்யலாமே என்றார். அந்த நபர் புத்தகம் பார்த்து செய்யும் அளவுக்கு அது எளிதில்லை. அதனால்தான் கற்றுக் கொள்ள செல்கிறோம் என்றார். அப்படி கற்று விட்டால் பெரிய பணக்காரர் ஆகிவிடுவோம், மேலும் இப்படி ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டுவிட்டால் பின்னர் தங்கத்துக்கு மதிப்பு இருக்காது என்றார்.

புதையல் தனது எண்ணத்தில் ஓடியது. தன்னிடம் இருக்கும் பணம் குறைவதை அறிந்து பணம் போதாவிட்டால் பாதி வழியில் இறக்கி விடுவீர்களா என கேட்க , நீ காசியிலே இருக்க வேண்டியதுதான் என்றார் அவர். ஏன் எனக் கேட்டபொழுது அந்த சித்தர் சொல்லித்தர மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகும் என்றார். புதையல் எடுத்துவிடுவேன் அதை வைத்து கொள்ளலாமே என சொன்னபோது அந்த நபர் உன்னிடம் இல்லாததை பிறருக்கு தருவதாக வாக்கு தராதே என்றார். இதைக்கேட்ட கோவிந்தசாமி அந்த வயதானவரை சந்தித்தீர்களா என்றார். ஆம் என்றார் அந்த நபர். கோவிந்தசாமிக்கு தலை சுற்றியது.

(தொடரும்)

Monday 3 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 6

பணத்தை எடுக்குமாறு அவர்கள் கோவிந்தசாமியை மிரட்டினார்கள். தன்னிடம் இருந்த சிறிதளவு பணத்தை எடுத்துக் கொடுத்தார். இவ்வளவுதானா என பையினை கோவிந்தசாமியிடம் இருந்து பறித்தார்கள். உள்ளே இருந்த ஆடைகளையும் சில காகிதங்களையும் சாம்பல் பையும் இருப்பதை பார்த்து வெறுப்புற்ற ஒருவன் அதனை எடுத்து பக்கத்தில் சென்று எறிந்தான். கோவிந்தசாமி பதறினார். கோவிந்தசாமியை அடித்துவிட்டு அவர்கள் இடத்தை காலி பண்ணினார்கள். கோவிந்தசாமி வலி பொறுக்கமுடியாமல் அஸ்தி பையினையும் தனது உடைகளையும் எடுத்துக்கொண்டு அந்த இருட்டினில் அங்கேயே அமர்ந்தார்.

இனிமேல் காசிக்கு செல்வது இயலாத காரியம், தனது கனவும் ஆசையும் எப்படி இத்தனை காலம் புறக்கணித்தோமோ அதைப்போலவே இப்பொழுதும் செய்ய வேண்டியதுதான் என மனம் வெதும்பினார். கண்களில் கண்ணீர் கரை புரண்டோடியது. கங்கை கூட அமைதியாகத்தான் ஓடி கொண்டிருந்தது. தனது இனிமையான வாழ்க்கையை விட்டுவிட்டு இப்படி இன்னல் படுகிறோமே என நினைக்கும்போதே அவரால் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. தனியாக தான் கிளம்பி வந்தது தவறோ என புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

பசியும் வந்து அவரை பாடுபடுத்தியது. மீண்டும் காய்ச்சலும் இருமலும் வந்து அவரை தொல்லை செய்தது. இனிமேல் இப்படியே இறந்து விடவேண்டியதுதான் என அவரது மனம் அவரை அலைகழித்தது. எங்கும் நடக்க இயலாமல் அங்கேயே அமர்ந்துவிட்டார் கோவிந்தசாமி. ஒவ்வொருமுறை பிரச்சினை வந்தபோதெல்லாம் யாராவது உதவி புரிந்தார்கள், அதுபோல யாராவது இம்முறை உதவி செய்யமாட்டார்களா என ஏக்கத்துடனே இரவினை கழித்தார். இந்நேரம் இந்த கொள்ளையர்கள் வராது போயிருந்தால் காசியை சென்று புதையலை எடுத்து இருக்கலாம் என எண்ணம் ஓடியது. மனதும் உடம்பும் அதிகமாகவே வலித்தது.

தான் செய்தது ஒரு முட்டாள்தனமான காரியம், இனிமேல் இதை தொடரக்கூடது என மனதில் நினைத்துக்கொண்டே பாதி உறக்கமும் மீதி விழிப்பும் என போக்கினார். காலை விடிந்தது. சற்று தொலைவில் கட்டிடங்கள் தெரிந்தது. அதை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அங்கே கை ரேகை பார்க்கும் நிலையம் ஒன்று தெரிந்தது, ஆனால் வீடு போலவே இருந்தது. கோவிந்தசாமி தனது எதிர்கால நிலையை அறிந்து கொள்ள ஆசை கொண்டார். ஏன் இப்படி நிலை வந்தது என தெரிந்து கொள்ள எண்ணினார். ஆனால் அவரிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை. யோசித்தார். அந்த வீட்டின் அருகில் சென்று அமர்ந்தார். வீட்டில் இருந்து வந்த வயதான ஒருவர் இவரை பார்த்து ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் எனக் கேட்டார். இவருக்கு மொழி புரியவில்லை. கையை காட்டினார் கோவிந்தசாமி.

அந்த வயதானவர் இவரை உள்ளே அழைத்து சென்றார். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. இரண்டு நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. ஒன்றில் அமரச் சொன்னார் அந்த வயதானவர். பத்து ரூபாய் என எழுதி காட்டினார். இல்லை என தமிழில் சொன்னார் கோவிந்தசாமி. இல்லையா என தமிழிலேயே பேசினார் அந்த வயதானவர். அவர் சிரித்துக்கொண்டே எனக்கு பல மொழிகள் தெரியும் என்றார். கோவிந்தசாமிக்கு நம்பிக்கை வந்தது.

கோவிந்தசாமியை விசாரித்தார். கோவிந்தசாமி தனது கனவினையும், ஆசையையும் இனிமேல் அது தொடர இயலாது இருப்பதையும் கூறினார். வயதானவர் சிரித்தார். கண்களை மூடி பிரார்த்தனை செய்தார். கோவிந்தசாமிக்கு இப்போது பயமாக இருந்தது. உனது கனவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா என சொன்னார் அந்த வயதானவர் கண்கள் திறந்து கொண்டு. சாத்தியமா என்றார் கோவிந்தசாமி.

கனவுகள் கடவுளின் மொழி. நமது மொழியில் கடவுள் பேசினால் நான் அதை சொல்ல இயலும், ஆனால் ஆத்மா மொழியில் பேசினால் அதை நீ மட்டுமே புரியமுடியும் என்றார் அந்த வயதானவர். இதே கனவு எனக்கு பலமுறை வந்து இருக்கிறது என்றார் கோவிந்தசாமி. உனது கனவினை விபரமாகச் சொல் என்றார் அந்த வயதானவர்.

நான் கரடுமுரடான பாதையை கடந்து காசிக்கு போனேன். அங்கே ஒரு கோவில் இருந்துச்சு. அந்த கோவிலுக்கு பக்கத்தில் ஒரு ஆறு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அந்த ஆற்றுக்கு அருகில் நான் தோண்ட ஆரம்பிச்சேன். எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் கோவிலுக்குள்ள போனேன். அப்புறம் வந்து மீண்டும் தோண்ட ஆரம்பிச்சென். தங்கம் கிடைச்சது. அதை எடுத்து கையில் வைச்சி பார்த்ததும் முழிச்சிட்டேன் என்றார் கோவிந்தசாமி.

சரி ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது. நீ காசிக்கு செல்ல வழி சொல்கிறேன், எனக்கு நீ என்ன தருவாய் என்றார் அந்த வயதானவர். அதற்கு கோவிந்தசாமி அந்த புதையலில் நான்கில் ஒரு பாதி உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு அந்த வயதானவர் உன்னிடம் இல்லாத ஒன்றை பிறருக்கு தருவதாய் எந்த காலத்திலும் வாக்கு தராதே. இது மிகவும் உண்மையான கனவு தான் நீ புதையலை கண்டுபிடித்து நிச்சயம் பணக்காரனாக ஆவாய் என சொன்னதும் கோவிந்தசாமி எரிச்சலுடன் காசிக்கு செல்ல என்னிடம் பணம் இல்லை, தெம்பும் இல்லை என்றார்.

என்னால் கனவு என்ன சொல்கிறது என சொல்ல முடியும், ஆனால் பணம் எல்லாம் தர முடியாது. அந்த கனவினை உண்மையாக்கும் சக்தியும் என்னிடம் இல்லை என்றார் அந்த வயதானவர். கோவிந்தசாமி மிகவும் சலிப்படைந்தார். இனிமேல் இது போன்ற கனவினை நம்பி செயல்படக்கூடாது என சொல்லிக்கொண்டார்.

ஒரு புத்தகத்தை எடுத்து காண்பித்தார் வயதனாவர். இந்த புத்தகமும் சரி எந்த புத்தகமும் சரி எல்லாம் இந்த உலகத்தில் ஒரே விசயத்தைத் தான் திரும்ப திரும்பச் சொல்கிறது. இந்த புத்தகம் எப்படி மனிதர்கள் தங்களது சொந்த முடிவினை எடுக்க இயலாமல் தவிக்கிறார்கள் என்பதை சொல்கிறது. மேலும் அவர்கள் இந்த உலகத்தில் இதுதான் பெரிய பொய் எனவும் சொல்லிக்கொள்கிறார்கள் என்றார் அந்த வயதானவர். எது மிகப்பெரிய பொய் என்றார் கோவிந்தசாமி.

நமது வாழ்க்கையில் சில நேரங்களில் நம்மால் நமக்கு ஏற்படுவதை கட்டுப்பாடுக்குள் கொண்டுவர இயலுவதில்லை, நமது வாழ்க்கை விதியால் நடத்தபடுகிறது என நினைக்கிறோம். இதுதான் உலகின் மிகப்பெரிய பொய் என சொன்னதும் கோவிந்தசாமி இடை மறித்து அது எப்பொழுதும் எனக்கு நடக்கவில்லை. என்னை டாக்டராக வேண்டும் என வீட்டில் சொன்னபோது வியாபாரியாகத்தான் ஆவேன் என அடம்பிடித்து வியாபாரம் செய்தேன்.

பணம் முக்கியமாக இருந்தது உனக்கு? இப்பொழுது எனது வேலைக்கு உன்னிடம் தரக்கூட பணம் இல்லை. நீ இப்போது புதையலை தேடி பயணித்துக்க்கொண்டு இருக்கிறாய். இந்த உலகின் ஆத்மா மனிதர்களின் சந்தோசத்திலும், துக்கத்திலும், பொறாமையிலும் இருக்கிறது. ஒருவருடைய வாழ்வின் முடிவு அவருடைய செயல்படும் தன்மையில் இருக்கிறது. ஒரு விசயத்தை உண்மையிலே அடைய நினைத்தால் இந்த மொத்த உலகமும் நீ அதை அடைய உதவி செய்யும். கொஞ்சம் நீ நினைத்து பார், நீ இந்த புதையலை அடைய வேண்டும் என நினைத்து கிளம்பி வந்தாய். வழியில் உனக்கு தெரியாதவர்கள் எல்லாம் உதவி செய்தார்கள். இத்தனை தூரம் வந்துவிட்டு இதை கைவிடப்போவதாக சொல்கிறாயே என்றார் வயதானவர். கோவிந்தசாமி மிகவும் யோசித்தார்.

நான் கூட இப்படியொரு வாழ்க்கை எடுக்கும் முன்னர் சிரமம் அடைந்தேன். ஆனால் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து இந்த வழியை எடுத்துக் கொண்டேன் என்றார் மேலும். இதை ஏன் எனக்கு சொல்கிறீர்கள் என்றார் கோவிந்தசாமி. அதற்கு அந்த வயதானவர் நீ பணத்தை சேர்த்து எப்படியாவது காசியை போய் சேரு, உனது விருப்பத்தை தொலைத்து விடாதே. சிறுவயதிலே மனிதர்கள் தான் எதற்கு இந்த உலகில் இருக்கிறோம் என்பதை கசப்புடன் தெரிந்து கொள்கிறார்கள். கசப்பாக இருப்பதால் அதனை எளிதாக தொலைத்து விடுகிறார்கள். நீ இத்தனை வருடம் முன்னரே உனது விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்து இருக்கலாமே, ஆனால் அது அப்படித்தான். இப்போது விடவேண்டாம். நான் அதிகம் சென்று வாங்கும் ஒருவர் கடை இருக்கிறது. அங்கு வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு செல், பணம் யாரும் சும்மா தரமாட்டார்கள் என்றார்.

இப்படித்தான் பணம் இல்லாதபோது நான் மீன் வியாபரம் செய்தேன். அதிக பணம் கிடைத்தது வழியில் பறிபோய்விட்டது என்றார் கோவிந்தசாமி. ஆமாம் அதுதான் தொடக்கத்தில் கிடைக்கும் அதிர்ஷ்டம். உனது கனவினை நிறைவேற்ற இப்படி வாய்ப்புகள் முதன்முதலில் வெற்றியாகவே அமையும் என்றார் அந்த வயதானவர். விடைபெற்றுக்கொண்ட கோவிந்தசாமி அவர் சொன்ன கடையில் வேலையாளாக சேர்ந்தார். அந்த வேலை அவருக்குப் பிடித்தமானதாக இல்லை.

(தொடரும்)

தேடினால் கிடைத்துவிடும் - 5

அருகில் இருந்த அறை ஒன்றில் தனது ஆடைகளை மாற்றிக்கொண்டார் கோவிந்தசாமி. அஸ்தி பையைத் திறந்துப் பார்த்தார். பாலீதின் பையில் போடப்பட்டு இருந்தது. மனம் நிம்மதி ஆனது. ஆனால் காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது. ஒரு காபி குடித்தால் தேவலாம் என காபி அருந்தினார். அந்த இளைஞன் இன்னமும் இவரையே பார்த்துக்கொண்டிருந்தான். மழை விட்டு இருந்தது.

அவனருகே வந்த அவர், காசிக்கு எளிதாகச் செல்லும் வழி எது எனக் கேட்டார். அந்த இளைஞன் கரக்பூர் மார்க்கமாகச் சென்றால் எளிதாகச் செல்லலாம் என சொன்னான். இருமிக்கொண்டே இருந்தார் கோவிந்தசாமி. கோவிந்தசாமிக்கு தான் கேட்டது தமிழ்மொழிதானா என வியந்தார். தம்பி நீங்க தமிழா என்று கேட்டார். ஆம் என்றான் இளைஞன். தனது பெயர் தமிழ்பாண்டே என அறிமுகப்படுத்திக்கொண்டான். கோவிந்தசாமிக்கு காய்ச்சல் அதிகமானது.

அதிக அலைச்சலும், தூக்கமின்மையும் அவருக்கு சற்று அசெளகரியத்தைத் தந்து இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார் கோவிந்தசாமி. அவரது மயக்கத்தைத் தெளிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் தமிழ்பாண்டே. மருத்துவர் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என சொன்னதும் கோவிந்தசாமியை தனது வீடு இருக்கும் நீலகந்த நகருக்கு அழைத்துச் சென்றான்.

புதிய நபருடன் தன் மகன் வருவதைக் கண்ட தனலட்சுமி முகர்ஜி யார் என கேட்டார். தமிழ்க்காரர், காசி செல்கிறார் சுகமில்லை என சொல்லி ஒரு அறை ஏற்பாடு செய்யச் சொன்னான். இன்று ஓய்வெடுத்துச் செல்லட்டும் என சொன்னவனை தனியாய் அழைத்து நாளை உனது தந்தைக்கு திதி நாள், அந்த விசேசம் செய்ய வேண்டும், நீ இந்த தருணத்தில் இப்படி ஒருவரை அழைத்து வந்து இருக்கிறாயே என கடிந்து கொண்டார். போகச் சொல்லிவிடலாம் என்றான் தமிழ்பாண்டே. ஆனால் தாய் இருக்கட்டும் என அனுமதி அளித்தார்.

கோவிந்தசாமி அன்று அங்கேயே தங்கினார். காலையில் கிளம்பலாம் என இருந்தவருக்கு காய்ச்சல் இன்னும் இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் செல்வது நல்லதல்ல என இருந்தாலும் இப்படி இங்கே தங்குவது சரியாகாது என நினைத்துக்கொண்டு கிளம்ப எத்தனித்தார். தமிழ்பாண்டே உடல்நலம் சரியானவுடன் செல்லலாம் என தடுத்துவிட்டான். அவனது தந்தையின் திதி நிகழ்வில் கலந்து கொண்டார் கோவிந்தசாமி. மனம் புதையலிலும் காசியிலும் நின்றது.

அன்றைய தினமும் அங்கேயே தங்க வேண்டி வந்தது. காய்ச்சலும் இருமலும் ஓரளவுக்கு சரியானது போல் இருந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கரக்பூர் நோக்கி பயணமானார் கோவிந்தசாமி. கரக்பூரில் இறங்கி காசி இரயிலுக்குச் செல்லும் வழியில் ஐந்து பேர் இவரை சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அவர்களை கண்ட அதிர்ச்சியில் கோவிந்தசாமி உடல் வெடவெட என ஆடத் தொடங்கியது.

(தொடரும்)

தேடினால் கிடைத்துவிடும் - 4

எத்தனையோ வியாபாரம் செய்து இருந்தாலும் இதுவரை மீன் வியாபாரம் செய்தது இல்லை. எனவே மீன் வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு தனது பயணத்தைத் தொடரலாம் எனத்திட்டமிட்டார். விடுதியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு தன்னிடம் இருந்த பணத்தில் தூண்டில், உணவுப் பண்டங்கள் என வாங்கிக்கொண்டார். கிருஷ்ணா நதியினை நோக்கி நடந்தார். நடந்து சென்றபொழுது பேருந்தில் இவருடன் வந்த நபர் எதிர்பட்டார்.

அவரிடம் விசாரித்தபொழுது அவரது நண்பர் இடமாற்றல் ஆகிவிட்டதாகவும், அங்கிருப்பவர்களுக்கு அவர் எங்கு சென்றார் எனத் தெரியாது என கூறியதாகவும் தான் திரும்பவும் சொந்த ஊருக்குச் செல்ல நினைத்ததாக கூறினார். கோவிந்தசாமி அவரிடம் காசிக்கு வர விருப்பமா எனக் கேட்டார். ஆனால் அதற்கு முன்னர் சில வியாபாரங்கள் செய்ய வேண்டும், பணம் சேர்க்க வேண்டும் என சொன்னார். இனி தனக்கு யார் உதவப் போகிறார்கள் என எண்ணிக்கொண்ட அவர், அவரது பெயரை எழுதினால் ஒரு வரிக்கு மேல் வரும் என்பதால் சிவபாலன் என சுருக்கப் பெயரை நாம் குறித்துக் கொள்வோம், கோவிந்தசாமியுடன் வருவதாக சம்மதம் சொன்னார்.

கிருஷ்ணா நதியின் ஓரத்தில் சென்று அன்றைய தினம் எல்லாம் மீன்கள் பிடித்தார் கோவிந்தசாமி. நிறைய மீன்கள் சிக்கின. இதனை நல்ல விலைக்கு விற்று விடலாம் என சற்று தள்ளி சென்று ஒரு வியாபார தளத்தில் மீன்கள் விற்கத் தொடங்கினார். இவரது வியாபார நுணுக்கம் கண்டு சிவபாலன் ஆச்சரியம் அடைந்தார். மீன்கள் மள மளவென விற்கத் தொடங்கின. போட்ட முதல்தனை விட பலமடங்கு லாபம் வந்தது. அங்கிருந்த வியாபாரிகள் இவரை வித்தியாசமாகப் பார்த்தனர். சிவபாலன் சிலரிடம் விளக்கம் சொன்னதும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.

ஏதாவது விடுதியில் தங்கலாம் என சொன்னபோது, நதியைக் கடந்தால் விவேகாநந்தசுவாமி ஆஸ்ரமம் இருக்கிறது அங்கு சென்று இன்று இரவை கழிக்கலாம் என்றார் சிவபாலன். கோவிந்தசாமியும் சரியென கூறிவிட ஆஸ்ரமம் அடைந்தார்கள். அப்பொழுது இருட்டி விட்டது. இவர்களை ஆஸ்ரமத்தில் தங்க அனுமதித்தார்கள். அந்த ஆஸ்ரமத்தில் சிறியவர் முதற்கொண்டு வயதானவர்கள் வரை இருந்தார்கள். குருகுலம் போன்ற பள்ளியும் இருந்தது. தோட்டமும் அமைத்து இருந்தார்கள். முந்நாளில் எல்லாம் வழி நெடுக சத்திரம் கட்டி வைத்திருப்பார்களாம், இது போல யாத்திரை செல்பவர்களுக்கு உணவும் ஓய்வெடுக்க இடமும் என மிக சிறப்பாக இருந்து இருக்கிறது. இப்பொழுது அது போன்ற சத்திரங்கள் காண்பது குறைவு. இது போன்ற ஆஸ்ரமங்கள் ஆங்காங்கே இருக்கும் போலும் என கோவிந்தசாமி தனது நினைவை ஓடவிட்டார்.

மறுநாள் காலையில் மீன் பிடிக்கச் சென்றார்கள். நல்ல மீன்கள் சிக்கியது, நல்ல வியாபாரமும் நடந்தது. சிவபாலன் கோவிந்தசாமியை மெச்சினார். சிவபாலனின் வயது 48 தான். காசிக்குப் போறோம் இப்படி மீன் வித்த காசுல போறொமே என்றார் சிவபாலன். செஞ்ச பாவத்தில இந்த பாவத்தையும் சேர்த்து கரைச்சிரலாம் என்றார் கோவிந்தசாமி சிரித்துக் கொண்டே. அங்கிருந்து புகைவண்டி பிடித்து சீர்டி சாய்பாபா ஆலயம் வந்தார்கள். சீர்டி சிறப்பினை கதை கதையாகச் சொன்னார் சிவபாலன். தான் சீர்டியிலே இருக்கப்போவதாக சிவபாலன் சொன்னதும் கோவிந்தசாமி ஏமாற்றத்துடன் தனது பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். சிவபாலனின் துணை கோவிந்தசாமிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

கோடியலூரிலே அவரது நினைவு சுற்றியது. சில மாதங்களுக்கு முன்னர் வசந்தராஜ் தன்னிடம் அவரது மகளுக்கு வரன் பார்ப்பதாகவும், பண உதவியும் கேட்டதும் நினைவுக்கு வந்தது. இந்நேரம் தனது வீட்டில் வைத்து வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து இருப்பார்கள் என எண்ணினார் கோவிந்தசாமி. இப்படி வீடும் தோட்டமும் தனது என்ற எண்ணம் தனக்கு வராமலிருக்க மிகவும் போராடினார்.

கோடியலூரில் வசந்தராஜ் மகள் கோமலாவுக்கு அரசு பேருந்து ஓட்டுநர் வரனாக அமைந்தார். திருமணத்தை கோவிந்தசாமி வரும் வரை தள்ளி வைக்கலாம் என எண்ணிய வசந்தராஜ் திருமணத்தை சற்று தள்ளி வைக்கலாம் எனக் கேட்டார். வரதட்சிணையை சரியாக பேசியவர்கள் தள்ளி வைக்க இயலாது என கூறவே கோவிந்தசாமியிடம் கேட்ட உதவித்தொகையை குறித்துக் கொண்டு எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டார் வசந்தராஜ். அடுத்தமாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கோவிந்தசாமி புவனேஸ்வரை வந்து அடைந்தார். ஒரிஸ்ஸா மாநிலம் என அறிந்துகொண்டவர் இந்த மாநிலத்தில் அதிக வெள்ளம் வரும் என நாளிதழ்களில் படித்து இருந்தார். எங்கு போவது என தெரியாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென மழை பலமாக விழுந்தது. தொப்பலாக நனைந்து போனார். இருமத் தொடங்கினார். இவரை அங்கே ஒரு இளைஞன் வைத்த கண் எடுக்கமால் அவர் வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் அருகிலேயே சென்று அந்த கட்டிடத்தின் கீழ் இருமலுடன் நடுங்கிக் கொண்டே நின்றார் கோவிந்தசாமி.

(தொடரும்)

Sunday 2 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 3

தனது கவனக்குறைவினை நினைத்து வேதனையுற்றார் கோவிந்தசாமி. பேருந்தில் மீண்டும் ஏறிச்சென்று பணத்தைத் தேடினார். அவரை இறங்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள். தனது கனவும் ஆசையும் நிறைவேறாமல் போய்விடுமே எனும் கவலைதான் அவருக்கு மிகவும் அதிகமாக இருந்தது. பணம் அங்கே சிதறியிருக்கவில்லை. பணம்தனை எடுத்தவரை இனிமேல் இதுபோன்று தவறுகள் செய்யாமல் இருக்க வைத்திடு என சிவனை வேண்டிக்கொண்டார் கோவிந்தசாமி. சிக்கனமாக வாழ்ந்த அவருக்கு இப்படி பணம் தொலைந்தது மிகவும் கவலையாக இருந்தாலும் ஒருவரின் தேவைக்கு அது உதவுமே என நினைத்துக்கொண்டார்.

அங்கிருந்தவர்கள் என்ன ஆனது எனக் கேட்டார்கள். அப்பொழுது கோவிந்தசாமி தனது பணம் தொலைந்த விசயத்தைக் கூறினார். அனைவரும் பரிதாபத்துடன் பார்த்தார்கள். காசிக்குச் சென்றே தீர்வது என மன உறுதி கொண்டார். இப்பொழுது எப்படி பணத்தைச் சேர்ப்பது என யோசித்தார். மகன்களையோ மகளையோத் தொடர்பு கொள்ள மனம் இடம் தரவில்லை. எப்படியும் என்னை காசியில் கொண்டு சேர்த்துவிடு என சிவனை வேண்டிக்கொண்டு சென்னையிலிருந்து நடக்கலானார்.

வழியில் இருந்த குளம் ஒன்றில் குளித்தார். நடந்து சென்று கொண்டே இருக்கையில் வழியில் கிராமம் ஒன்றை அடைந்தார். இவரை ஒருவர் விசாரித்தார். இவர் தனது நிலையையும், காசிக்குச் செல்வதையும் சொல்லவே அவர் மிகவும் உற்சாகம் அடைந்தார். தனது பெயர் முத்துச்சாமி என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் கோவிந்தசாமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தனது மனைவியை அழைத்து இவருக்குச் சாப்பாடு போடச் சொன்னார். கோவிந்தசாமிக்குப் புரியாமல் இருந்தது. வேண்டாம் என மறுக்க மனம் இடம் தரவில்லை. நல்ல பசியாகவும் களைப்பாகவும் இருந்தது. உணவு அருந்திய பின்னர் முத்துச்சாமி இவரை ஓய்வெடுக்கச் சொன்னார். கோவிந்தசாமியும் அந்த வீட்டில் ஓய்வு எடுத்தார்.

பின்னர் முத்துச்சாமி, கோவிந்தசாமியிடம் தனது தந்தையின் அஸ்தியை வைத்திருப்பதாகவும் அதனை கங்கையில் கரைக்க வேண்டும் எனும் ஆசையை அவரது தந்தை சொன்னதாகவும், தனக்கு நேரமில்லாத காரணத்தாலும், பிற காரணங்களால் செல்ல இயலாமல் இருப்பதாகவும் அதனால் அதைக்கொண்டு சென்று கங்கையில் கரைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். கோவிந்தசாமி சரியென ஒப்புக்கொண்டார். முத்துச்சாமி கொஞ்சம் பணம்தனை கோவிந்தசாமியிடம் கொடுத்தார். மறுக்காமல் கோவிந்தசாமி வாங்கிக்கொண்டார். ஆனால் பணம் வாங்கியதற்கான ஆதாரம் ஒன்றை எழுதிக்கொடுத்தார். முத்துச்சாமி வாங்கிட மறுத்தார். ஆனால் கோவிந்தசாமி தனது மகன் ஒருவரின் முகவரியைக் கொடுத்து நான் திரும்பி வராமல் போனால் அவரது மகனிடம் இந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளச் சொன்னார். முத்துச்சாமி தனது தந்தையின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதிலே அப்பொழுது குறியாய் இருந்தார், இருப்பினும் சரியென வாங்கி வைத்துக்கொண்டார்.

அந்த கிராமத்தில் ஒருநாள் தங்கி இருந்தார். ஊர் மிகவும் அழகாக இருந்தது. மரங்கள் செடிகள் கொடிகள் என இயற்கை வளத்துடனும் கிராம மக்கள் சுறுசுறுப்புடன் வேலைப்பார்த்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது கோடியலூர் ஞாபகத்திற்கு வந்தது. வசந்தராஜ் தனது வீட்டில் சென்று குடியேறி இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டார். ஆனால் அவரது நினைவின்படி இல்லாமல் வீட்டைச் சென்று சுத்தப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டார் வசந்தராஜ். தோட்டத்தில் விளைந்தவைகளால் வந்த பணம், தோட்டத்திற்குச் செலவாகும் பணம் என பெரிய நோட்டினில் எழுதி வைக்க ஆரம்பித்தார் வசந்தராஜ். சுப்புராஜிடம் மிகவும் கண்டிப்புடன் இதைச் செய்ய வேண்டும் என சொல்லி இருந்தார். முத்துச்சாமி தனது தோட்டம்தனை எல்லாம் இவருக்குச் சுற்றிக்காட்டினார். கோவிந்தசாமி தான் ஊரில் செய்ததை இவரிடம் சொல்லவில்லை.

விடைபெற்றுக்கொண்டு பயணமானார் கோவிந்தசாமி. பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தபோது இவருடன் ஒருவர் பேச்சுக்கொடுத்தார். அவர் ஒரு பெரிய பணக்காரர் எனவும் சொந்தங்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார். இப்பொழுது விஜயவாடாவில் உள்ள நண்பரைச் சந்தித்து உதவி கேட்கப்போவதாக சொன்னவர் தன்னிடம் பணம் இல்லாததால் யாராவது உதவமாட்டார்களா என எதிர்பார்த்து சில நாட்களாக இங்கே வந்து போவதாக சொன்னார். அவர் பேசிய தெலுங்கு அரைகுறையாகப் புரிந்தது கோவிந்தசாமிக்கு. கோவிந்தசாமி அவரை தான் அழைத்துச் செல்வதாக சொல்லி விஜயவாடா செல்லும் பேருந்தில் பயணமானார்.

கோவிந்தசாமிக்கு அவர் சொன்ன பேச்சில் இருந்து சுப்புராஜ் ஞாபகம் வந்தது. அனைத்தையும் எழுதிக்கொடுத்த பின் அதனை அவர்கள் திரும்பத் தருவார்கள் எனும் உத்தரவாதம் எதுவும் இல்லை என எண்ணம் வந்தது. அதே வேளையில் கஷ்டப்படும் வசந்தராஜ் குடும்பம் நன்றாக இருக்கட்டும் எனும் எண்ணம் மேலோங்கி எழுந்தது. என்ன யோசனை என கேட்ட அவரிடம் இப்பொழுதும் கோவிந்தசாமி தனது செயலை சொல்லவில்லை. புதையல் பற்றி சொன்னார். அதற்கு அவர் பலமாகச் சிரித்தார். இப்படி இந்த வயதில் புதையலைத் தேடி என்ன செய்யப்போகிறீர்கள்? அதுவும் கனவினை நம்பி என்றார். கோவிந்தசாமி அதற்கு புதையல் மட்டுமே எனது ஆசையில்லை. காசியை எப்படியாவதுப் பார்த்துவிட வேண்டும் எனும் ஆசையும் கூட என்றார்.

விஜயவாடா வந்தது. பேருந்தில் இருந்து இறங்கிய அவர் நன்றி சொல்லிக்கொண்டு தனது நண்பரின் முகவரியை இவரிடம் தந்துவிட்டு கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு கிளம்பினார். கோவிந்தசாமி ஒரு விடுதிக்குச் சென்றார். அங்கே அன்று ஓய்வு எடுத்தார். தன்னிடமிருந்த பணம் குறையத் தொடங்கி இருந்தது. இனிமேல் பணம் சேர்க்காமல் காசிக்குச் செல்வது இயலாது என நினைத்தவருக்கு ஒரு யோசனை வந்தது.

(தொடரும்)

Saturday 1 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 2

வீட்டிற்கு வந்த கோவிந்தசாமி வீட்டுப் பத்திரம், தோட்டத்துப் பத்திரம் என எல்லாத்தையும் எடுத்து வைத்தார். அன்று மாலையே தனது மகன்களைப் பார்க்கச் சென்றார். அடுத்தநாள் காலையில் மகன்கள் இருவரையும் சந்தித்து தனது முடிவினையும், உயில் எழுதவும் ஏற்பாடு செய்யவும் கூறினார். அதற்கு அவரது மகன்கள் அந்த வீடும், தோட்டமும் தங்களுக்கு வேண்டாமென கூறிவிட்டனர். சொத்து எதுவும் வேண்டாம் எனவும் இனிமேல் நாங்கள் சென்று அதைப் பராமரிக்க இயலாது என கூறினர். கோவிந்தசாமி தனது மகளிடம் சென்று தனது எண்ணத்தைக் கூறினார். அவரது மகளும் வீடும் தோட்டமும் வேண்டாம் என சொன்னார்.

முதலில் பணம் தருகிறேன் என சொன்னவர்கள், நிலத்தையும் வீட்டையும் விற்று வரும் பணத்தைக் கொண்டு காசி செல்லுமாறு அம்மூவரும் சொல்லி வைத்தார்போல் கோவிந்தசாமிக்கு அறிவுரை கூறினர். கோவிந்தசாமி கோடியலூருக்கு அன்று இரவே திரும்பினார். வசந்தராஜுவைச் சந்தித்தார். தான் காசிக்குச் செல்வதாக அவரிடம் கூறியவர் நிலத்தையும் வீட்டையும் சுப்புராஜ் பெயருக்கே மாற்றித் தருவதாகவும் சுப்புராஜுக்கு உயில் எழுதித் தருவதாகவும் சொன்னார். இதைக்கேட்ட வசந்தராஜ் கண்கள் கலங்கியது.

வசந்தராஜ் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். காலங்காலமாக கூலி வேலை செய்து வருபவர். கோவிந்தசாமியின் வியாபாரத்திற்கு உதவியாக இருந்தவர். கோவிந்தசாமி பலமுறை இவருக்கு உதவிகள் புரிந்து இருக்கிறார். இப்படி கோவிந்தசாமி வந்து சொன்னதும் எதுவும் சொல்லமுடியாமல் வசந்தராஜ் நின்றார். நிலத்தை நீங்க திரும்பி வந்தப்பறம் உங்களுக்கே நான் தந்துருரேன், நீங்க ஏத்துக்கிறதா இருந்தா எங்களுக்கு எழுதிக்கொடுங்க என வசந்தராஜ் சொன்னதும் சுப்புராஜும் ஆமாம் என தலையாட்டினான். உங்க பேரிலேயே இருக்கட்டும், மனுசருடோ மனசு எப்படின்னாலும் மாறும் என வசந்தராஜ் மனைவி குருவம்மாள் சொன்னார். ஆனால் கோவிந்தசாமி தனது முடிவில் மாற்றம் இல்லை என சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

அடுத்தநாளே நிலத்தையும், வீட்டையும் சுப்புராஜ் பெயரில் எழுதிக்கொடுத்தார் கோவிந்தசாமி. தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும், வியாபாரம் செய்து கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டார். ஆனால் இந்த நிலம், வீடு மாற்றமானது ஊரில் மற்ற எவருக்கும் தெரியாமல் இருக்குமாறு மிகவும் கவனமாக சற்று தொலைவில் உள்ள ஊரில் சென்று பத்திரம் எழுதினார். உயிலும் சுப்புராஜ் பெயருக்கே எழுதித் தந்தார்.

கோவிந்தசாமி காசிக்குச் செல்ல இருப்பதை அறிந்தார்கள் ஊர்மக்கள். இவருடன் செல்ல ஊரில் உள்ள சிலர் திட்டமிட்டு இவருடன் வருவதாக ஆயத்தமானார்கள். கோவிந்தசாமியும் சரியென சொன்னார். ஆனால் தான் நடைபயணம் செய்தும், பேருந்திலும், புகைவண்டியிலும் செல்ல இருப்பதாக சொன்னதும் அனைவரும் பின்வாங்கினர். கோவிந்தசாமி தனியாக செல்ல வேண்டியதாகவே போனது.

வியாபாரம் செய்தபோது வடநாட்டுக்காரர்களுடன் பழகி இருந்ததால் இந்தி மொழி கோவிந்தசாமிக்கு ஓரளவு தெரியும். அதனால் மிகவும் தைரியமாகவே கிளம்பினார். தன்னுடன் உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டார். வடநாட்டுல குளிரும் என சொன்னதைக் கேட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டார்.

ஊரில் இருந்த சிவன் ஆலயத்தில் சென்று வழிபட்டார். முதலில் நடைபயணமாகவே பயணத்தைத் தொடங்கினார். தனது இடுப்பைச் சுற்றி பணத்தைக் கட்டிக்கொண்டார். மிகவும் சாதாரண மனிதரைப் போல் பயணிக்கத் தொடங்கினார். வசந்தராஜ் தனது குடும்பத்துடன் தனது வீட்டிலேதான் வசித்தார்.

ஊரிலிருந்து வந்தவர் மாலையில் மதுரையினை அடைந்தார். அங்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் வந்து காசிக்கு செல்லும் வழியையும் எந்த ஊரெல்லாம் செல்ல வேண்டும் எனும் முழு விபரத்தையும் கேட்டு எழுதி வாங்கிக்கொண்டார். அவர்கள் எழுதித்தந்தது சற்று சுற்றுப்பாதையாகத்தான் இருந்தது. கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். நடைபயணத்தால் கலைத்தவர் அந்த கோவிலிலே சற்று நேரம் வெளியில் சாய்ந்தவாரே தூங்கினார். காசியில் இருந்த அந்த புனித ஆலயம் மிகத் தெளிவாக கனவில் தெரிந்தது. விழித்தவர் பேருந்தினைப் பிடித்து சென்னைக்குப் பயணமானார். பேருந்திலே நன்றாகத் தூங்கினார். சென்னையை பேருந்து அதிகாலை அடைந்தது. கோவிந்தசாமி தன்னிடம் இருந்த பணத்தைக் காணாமல் போனது கண்டு மனம் தவித்தார்.

(தொடரும்)

தேடினால் கிடைத்துவிடும் - 1

கோடியலூர் கிராமத்தின் வடக்குத் தெருவில் வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார் கோவிந்தசாமி. அவருக்கு இப்போது அறுபது வயதாகிறது. இவரது மனைவி ஓரிரு வருடங்கள் முன்னால்தான் வைகுண்ட பதவி அடைந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகி நகரங்களில் நல்ல வசதிகளுடன் குடியேறிவிட்டார்கள். எப்போதாவது இவர் நினைத்தால் மகன்கள் வீட்டிற்கோ, மகள் வீட்டிற்கோ சென்று சிலநாட்கள் தங்கிவிட்டு வருவது இவரது வழக்கம். அங்கு செல்லும்போதெல்லாம் மிகவும் அன்புடனே இவரை அவர்கள் நடத்துவார்கள். அவர்களும் இந்த கோடியலூருக்கு வந்து தந்தையைப் பார்த்துச் செல்வது வழக்கம்.

இவர் கோடியலூரிலே வியாபாரியாகத்தான் வேலை செய்து வந்தார். கோழி வியாபாரம், பருத்தி வியாபாரம், ஆடு வியாபாரம், என அனைத்து வியாபாரங்களிலும் கொடிகட்டி பறந்தார். மிகவும் நேர்மையான மனிதர். வியாபாரம் என்றால் லாபம் பார்க்கும் தொழில்தான் எனினும் கொள்ளை லாபம் பார்ப்பதை அறவே வெறுத்தவர். ஆடம்பரமற்ற வாழ்க்கையையும், அமைதியான வாழ்க்கையையும் விரும்பியதால் எதிலும் சிக்கனமாகவே இருந்தார். சிறு வயதில் இவர் கண்ட ஒரு கனவானது பலமுறை திரும்ப திரும்ப வந்து போயிருந்தது. இவர் அதை வெறும் கனவுதான் என புறக்கணித்து இருந்ததாலும் அந்த கனவு இன்னும் இவரை வாட்டிக்கொண்டுதான் இருந்தது. காசிக்குச் செல்லவேண்டும் எனும் ஆசை இவருக்கு பலநாட்களாக இருந்தும் வந்தது. கனவும் ஆசையும் ஒன்றாக இருந்திட்டாலும் வியாபாரத்திலே மனம் ஒட்டி இருந்ததால் எங்கும் செல்லவில்லை.

தூங்கிக் கொண்டு இருந்த கோவிந்தசாமிக்கு மீண்டும் அதே கனவு வந்தது. காசிக்குச் செல்வது போலவும் அங்கே புனிதத் தலத்தின் அருகில் ஒரு புதையலை இவர் எடுப்பதாகவும் கண்ட கனவு மீண்டும் வந்துவிட விழித்து எழுந்தார். ஏன் இந்த கனவு தன்னைத் தொடர்ந்து வருகிறதே என சலிப்புடன் எழுந்து தனது சிறு தோட்டத்திற்குச் சென்றார்.

இந்த தோட்டம் இவரது உழைப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வாங்கியது. அதிக நிலங்கள் வாங்காமல் இருந்த நிலத்திலே பயிர்செய்து வரும் பணத்தில் சமூக சேவை செய்தும் பிள்ளைகளைப் படிக்க வைத்தும், மனைவியை அன்புடன் கவனித்தும் வந்த இவருக்கு இந்த கனவு இடைஞ்சலாகத்தான் இருந்தது.

நிலத்தில் பயிர் செய்து இருந்த மிளகாய்ச் செடியைப் பார்த்தார். மிகவும் நன்றாக வளர்ந்து இருந்தது. தென்னை மரம் மிகவும் செழிப்பாக வளர்ந்து காட்சி தந்து கொண்டிருந்தது. வாழை மரங்கள் வளப்புடன் இருந்தது. இப்படியாக ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவர் இதையெல்லாம் விட்டுவிட்டு இனிமேல் காசிக்குப் போய் புதையல் எடுத்து என்ன செய்யப்போகிறோம் என பேசாமல் தோட்டத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒருமுறை இவரது மனைவியிடம் கூட இந்த விசயத்தைச் சொல்லிப்பார்த்தார். அவர் போகலாம் ஆனா பிள்ளைக என சொல்லி வேண்டாம் என மறுத்துவிட்டார். இப்படியாக ஆசை வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் காசி பயணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. போன மாதம் கூட மகன்களிடமும், மகளிடமும் சொன்னபோது சிரித்துவிட்டார்கள். காசிக்கு போகிற செலவு நாங்க தரோம் ஆனா எங்களால இப்போ காசிக்கு வர முடியாது என கூறிவிட்டார்கள்.

தோட்டத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டார் கோவிந்தசாமி. பலமான யோசனையாக இருந்தது. சின்னத் தோட்டம் எனினும் வயதாகியதால் அவர் தோட்டத்து வேலைக்கு என ஒரு ஆள் நியமித்து இருந்தார். அவன் கோடியலூர் கிராமத்தில் வசிக்கும் வசந்தராஜுவின் இளைய மகன் சுப்புராஜ். தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சுப்புராஜை அழைத்தார் கோவிந்தசாமி. அவனுடன் சிறிது நேரம் தோட்டம் பற்றி பேசிக்கொண்டு இருந்தவர் அனைத்தையும் கவனித்துக்கொள்ள இயலுமா எனக் கேட்டார். அவனும் சரி என சொன்னான். மனதில் காசிக்குச் செல்வது என முடிவெடுத்தார் கோவிந்தசாமி.

(தொடரும்)