Thursday 30 January 2014

மனநிலை பாதிப்பும் மானசீக குருவும்

''ஒவ்வொரு மனிதரும் பைத்தியக்காரர்கள், ஏதேனும் ஒன்றிற்கு தம்மை அடிமையாக்கி பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வார்கள். இவ்வாறு நடந்து கொள்ளும்போது ஒருவித சந்தோசத்தை அனுபவிக்கிறார்கள். இந்த சூழலில் இருந்தாலும் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொள்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள், இல்லாதபட்சத்தில் மன அழுத்தத்தில் உட்பட்டு தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார்கள், அல்லது நடைபிணமாக வாழ்ந்து வாழ்க்கையை கழிப்பார்கள்''

வாசித்து முடித்துவுடன் எனக்கு வியர்த்துக் கொட்டியது. நான் கூட பைத்தியகாரனா? என யோசித்துக் கொண்டிருந்தேன்.

''பக்தா, என்ன யோசனையில் அமர்ந்து இருக்கிறாய்?''

சாமியார் வருவார் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. வைகுண்டம் போகிறேன் என்றல்லவா சொன்னார். இப்போது இங்கே வந்து நிற்கிறாரே என குழப்பத்துடன் அவரை நோக்கினேன்.

''என்ன பக்தா, ஆச்சரியமாக பார்க்கிறாய்?''

''நீங்கள் வைகுண்டம் போகவில்லை?, எதற்கு திரும்பி வந்தீர்கள்''

''நீயில்லாமல் நான் மட்டும் எப்படி போவது பக்தா, அதனால் எனது திட்டத்தை நான் கைவிட்டுவிட்டேன்''

''மனநிலை பாதிப்பு என்றால் என்ன?''

''என்ன பக்தா, இப்படி ஒரு கேள்வியை என்னை நோக்கி கேட்கிறாய், நான் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் தான் சாமியாராக இருக்கிறேன் என நினைக்கிறாயா?''

''இல்லையில்லை, மனநிலை பாதிப்பு என்றால் என்ன?''

''மனநிலை என்றால் என்ன பக்தா?''

''உங்களிடம் கேள்வி கேட்டால் என்னிடம் கேள்வி கேளுங்கள், எனக்குத் தெரியாமல் தானே உங்களிடம் கேட்கிறேன்''

''நன்றாக யோசனை செய் பக்தா, மனநிலை என்றால் என்ன?''

''நமது எண்ணங்கள்?''

''அதேதான் பக்தா. எண்ணங்களே மனநிலை. ஒரு விஷயத்தை குறித்து நீ என்ன நினைக்கிறாய், எப்படி உணர்கிறாய், எவ்வாறு செயல்படுகிறாய் என்பதே மனநிலை. இந்த மனநிலை பிறர் நம்மை கண்காணிக்கும் போதும், கண்காணிக்காதபோதும் வெவ்வேறாக இருக்கும். அப்படி உனது மனநிலையை நீ நன்றாக புரிந்து கொண்டால் உனது செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். அவ்வாறு கட்டுப்பாட்டில் இல்லாதபோது மனநிலை பிறழ்வு நடைபெறும். இதைத்தான் மனநிலை பாதிப்பு என்கிறார்கள்''

''அப்படியெனில் எல்லாருமே மனநிலை பாதிக்கப்பட்டவர்களா? இப்போதுதான் ஒரு பத்தி படித்தேன். மனிதர்கள் அனைவரும் பைத்தியகாரர்கள் என்று எழுதி இருந்தது''

''பக்தா, நீ பைத்தியகாரனா?''

''என்ன பேச்சு பேசுறீங்க, என்னை எதற்கு பைத்தியகாரன் என்று சொல்றீங்க''

''கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல் பக்தா''

''இல்லை, நான் பைத்தியகாரன் இல்லை''

''அதெப்படி உனக்குத் தெரியும். உன்னையறியாமல் நீ ஏதேனும் விஷயத்திற்கு அடிமையாகி இருக்கிறாயா என்று யோசனை செய்து பார்''

''இல்லை, அப்படி ஏதுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன்''

''சாப்பாட்டுக்கு அடிமையானவர்கள் உண்டு, காமத்திற்கு அடிமையானவர்கள் உண்டு, கற்பனை உலகத்தில் சஞ்சாரிப்பவர்கள் உண்டு, சினிமா, இசை, காதல் கல்வி அரசியல், பணம், நிலம், புகழ், பதவி போதை, என பல விசயங்களுக்கு அடிமையானவர்கள் உண்டு. அதில் நீ ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்''

''இல்லை, நான் எதற்கும் அடிமை இல்லை. நீங்கள கூட இறைவனுக்கு அடிமை, ஆனால் நான் இறைவனுக்கு கூட அடிமை இல்லை''

''என்ன பக்தா, பேச்சுவாக்கில் என்னை இறைவன் அடிமை என்று சொல்லிவிட்டாய்''

''ஆம், நீங்கள் இறைவன் பற்றி அதிகம் பேசுகிறீர்கள், இறைவனே நல்வழிபடுத்துவான் என புலம்பித் தள்ளி இருக்கிறீர்கள். நீங்கள் இதை மறுக்க இயலுமா''

''அப்படியே ஆகட்டும் பக்தா, ஆனால் இப்படிப்பட்ட அடிமைகள் எல்லாம் மனநிலை பாதிப்புக்கு நேரடியாக உட்படுவதில்லை. மன அழுத்தத்தில் இவர்கள் நிலை சென்று முடியும். இவர்களுக்கு தகுந்த அன்பும், ஆதரவும் தரும் பட்சத்தில் இவர்களால் இந்த நிலையில் இருந்து மீண்டு வர இயலும். அதற்கு இவர்களுக்கு மானசீக குரு ஒருவர் வேண்டும்''

''யார் அந்த மானசீக குரு''

''அவர்களேதான் மானசீக குரு, அனைவரும் சிந்திக்கும் அறிவுடன் தான் இருக்கிறார்கள். அவர்கள் ஏதேனும் ஒரு தவறான விசயம் செய்யும் முன்னர் அது தவறு என மனம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். தவறினை தவறியும் செய்யக்கூடாது என அவர்கள் திடமான மனதுடன் இருக்க வேண்டும். எப்படி ஒரு தவறு செய்து பிடிபட்டால் அவர்களின் நிலை கவலைக்குரியதாக மாறுமோ, அதுபோல பிடிபடாத நிலை இருப்பினும் தவறு செய்ய கூடாது''

''விளையாட்டாக செய்யலாமே''

''அப்படித்தான் பலரும் நடந்து கொள்கிறார்கள். விளையாட்டு புத்தி என்பது ''விநாச காலே விபரீத புத்தி'' என்பது போன்றது. ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும் பக்தா, இஷ்டத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை''

''எதற்கு இப்படி அறிவுரை அள்ளி கொட்டுகிறீர்கள்''

''மானசீக குரு எவர் என்று கேட்டாய் அல்லவா, அவரவரே அவரவருக்கு மானசீக குரு. ஒரு ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதுடன் அவரது பணி  முடிவடைந்துவிடும், அதற்கடுத்து நீயாகவே உனக்கு கற்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆசிரியர் ஒரு குரு, நீதான் உனக்கு மானசீக குரு''

சாமியார் பேசியதை கண்டு அவரிடம் நான் வாசித்த தாளினை காட்டினேன்.  கலகலவென சிரித்தார்.

''யார்  இப்படி எழுதியது தெரியுமா பக்தா''

''தெரியாது. வெல்லக்கட்டி வாங்க கடைக்கு சென்று இருந்தேன் அங்கு இந்த காகிதம் கிடைத்தது, எடுத்து வந்துவிட்டேன்''

''அதை எழுதியது நான் தான் பக்தா''

''நீங்களா''

''ஆம்''

''ஏனிப்படி எழுதினீர்கள்''

''பல வருடங்கள் முன்னர் இருந்த அந்த மனநிலையைத் தான் சென்று கேட்கவேண்டும்', இப்போது எனக்குத் தெரியாது''

பைத்தியகார சாமியார் என மனதில் நினைத்துக் கொண்டேன்.

''மனநிலை பாதிப்பு குறித்து சொல்லுங்க''

''மனநிலை பாதிக்கப்பட்டதால் நான் சாமியாரா''

''திரும்பவும் கேட்காதீர்கள், சொல்லுங்க''

''ஒரு மனிதர் நான் மேல் சொன்ன பல விசயங்களுக்கு அடிமையாதல் போல மனநிலையானது குறிப்பிட்ட விசயங்களால் மாறுபாடு அடையும். மனநிலை பாதிப்பு நமது உடல், மூளை சம்பந்தப்பட்டதாகவே அமைந்துவிடுகிறது.

1. பயத்தால் வரும் மனநிலை பாதிப்பு. சிறு குழந்தைகளிடம் ஏற்படும் இந்த பாதிப்பு காலகாலத்திற்கு மாறாது. பயத்தைப் போக்கிட மனநிலை சீராகும்.
2. உணர்ச்சி வசப்படுதல் மூலம் ஏற்படும் மனநிலை பாதிப்பு. இதை மூட் ஸ்விங் என சொல்வார்கள்
3. நம்பிக்கையால், அந்த நம்பிக்கை தொலையும் கணத்தில் வரும் மனநிலை பாதிப்பு. காதல், கல்யாணம் நட்பு போன்ற நம்பிக்கை விசயத்தில் ஏமாற்றம் நிகழும்பட்சத்தில் இந்த மனநிலை பாதிப்பு ஏற்படும். கவனத்துடன் கையாள வேண்டிய விஷயம் இது பக்தா. உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது, அதனால் புதுக் கண்ணாடி அவசியம் போன்ற நிலை ஏற்படும்.
4. மொழி, நடக்கும் நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை மூலம் மனபாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது''

''இறைவன் நம்பிக்கையை விட்டுட்டீங்களே, ஜோசியம் நம்பிக்கை எல்லாம் சொல்லலை''

''பக்தா, குறுக்கே பேசாதே, ஜோசியம், இறைவன் எல்லாம் நடக்கும், நடக்காது என்கிற நிலையை மக்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அதனால் அதை எல்லாம் இங்கே இழுக்காதே''

''ஆமாம், அதுவே ஒரு மனநிலை பாதிப்புதானே''

''பக்தா, எனது சாபத்திற்கு ஆளாகாதே''

''சரி, தொடருங்கள்''

''5. மூளையில் ஏற்படும் சில மாற்றங்களால் மனநிலை பாதிக்கப்படுபவர்கள் உண்டு. அவர்களுக்கு மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து தேற்ற முடியும், ஆனால் ஒரு விஷயம் வரம்பு மீறிப் போய்விட்டால் மருத்துவமுறை கை கொடுக்காது.
6. சிலர் மனநிலை பாதிக்கப்படுவதால் சாப்பிடும் முறையில் கூட வேறுபாடு கொள்வார்கள். ஒல்லியாக இருந்து கொண்டே குண்டாக இருப்பதாக நினைப்பார்கள். அதனால் சரியாக சாப்பிடாமல் உடற்பயிற்சி என உயிரை கொல்லும் அளவுக்கு செல்வார்கள். தன்னை தானே அதிகம் வெறுத்து ஒதுக்குவார்கள். இதைப்போலவே காம உணர்வு மூலம் ஏற்படும் மனநிலை பாதிப்பு. காமுகர்களாக பலர் மாறுவதற்கு அதுவே காரணம். இவர்கள் பலர் இருக்கும்போதே யாரும் நம்மை பார்க்கவில்லை என தறிகெட்டு நடந்து கொள்வார்கள்.
7. சிலருக்கு தூக்கமே வராது. இது கூட மனநிலை பாதிப்பின் வெளிப்பாடுதான் பக்தா''

''கனவு கூட மனநிலை பாதிப்பு தானா''

''என்ன பக்தா, நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்கிறாய். கனவு மனநிலையை சரி செய்யும் ஒரு காரணி''

''சரி சரி தொடருங்கள்''

8. தன்னைத் தானே மறப்பது கூட ஒருவகை மனநிலை பாதிப்புதான். குறிப்பட்ட விசயங்கள் மறந்து போவதும் இதில் அடங்கும். சமூகத்திற்கு எதிராக நடந்து கொள்வது கூட ஒரு வகை மனநிலை பாதிப்புதான்''

''அரசியல்வாதிகள் எல்லாம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களா''

''பக்தா, உனக்கு ஒருமுறை சொன்னால் போதாதா, எதற்கு இப்படி குறுக்கீடு செய்கிறாய்''

''சரி சரி சரி தொடருங்கள்''

9. அதிர்ச்சி அடையாதே, இப்படி சந்தேகங்கள் எல்லாம் மனநிலை பாதிப்பின் சாராம்சம்தான். இதை ஆங்கிலத்தில் பெர்சானலிட்டி டிஸ்ஆர்டர், ஒழுங்கற்ற நடத்தை  என சொல்வார்கள்.

''இறைவன் எப்படி உலகை படைத்தான், இவ்வுலகம் எப்படி தோன்றியது போன்ற சந்தேகங்கள் எல்லாம் மனநிலை பாதிப்பு என சொல்வது நகைப்புக்குரியது''

''பக்தா, நீ ஒழுங்கற்ற மனநிலையில் இருக்கிறாய். உரிய சந்தேகங்கள் சரி, ஆனால் அனாவசியமான சந்தேகங்கள் மனநிலை பாதிப்பின் வெளிப்பாடு என்றே சொன்னேன். கணவன் மனைவியின் நடத்தையினை சந்தேகம் கொள்வது, பெற்றோர் பிள்ளை, மாமியார் மருமகள் போன்ற உறவு முறை சந்தேகங்கள் மனநிலை பாதிப்பின் அடிச்சுவடுகள்''

இந்த மனநிலை பாதிப்பு மரபணுக்கள், பரிணாம வளர்ச்சிகள் என அடிப்படையில் வந்தவை. மனநிலையோடு மனநிலை பாதிப்பும் உடன் தொடர்பவை, அதனால்தான் மானசீக குரு அவசியம்''

''எனக்கு நீங்கள் மானசீக குருவாக இருக்கலாமே''

''உன்னை எப்படி திருத்துவது என தெரியவில்லை பக்தா, நீ ஆறறிவுடன் படைக்கப்பட்டு இருக்கிறாய், உன்னை வழிநடத்தவோ, நீ ஒருவரை பின்பற்றி நடக்கவோ அவசியமே இல்லை. நீயே உனக்கு மானசீக குரு. எந்த உயிர்களுக்கும் வஞ்சம் இழைக்காதே. நல்ல சிந்தனையுடன் இருந்தாய் எனில் உனது மனநிலை சந்தோசமாகவே இருக்கும். எந்த சங்கடங்களும் இல்லை''

''நான் குறுக்கீடு செய்ததால் சில நல்ல விசயங்கள் தெரிய வந்தது''

''நல்லது பக்தா, அடுத்தவரை துன்புறுத்தி பார்ப்பது மனநிலை பாதிப்பின் உச்சகட்டம்''

''எந்திரிப்பா, மணி பத்து ஆகுது, சனிக்கிழமைன்னா இப்படியா தூங்குவ''

அம்மாவின் குரலில் நான் மனநிலை பாதிப்பில் இருந்து விடுபட்டு இருந்தேன்.


Mental Disorders are often associated with how we perceive things in the world - Radhakrishnan

Wednesday 29 January 2014

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

ஒரு கவிஞன் என்ன மனநிலையில் இருந்து எழுதுகிறான் என்பது அந்த கவிஞனுக்கே வெளிச்சம். அந்த கவிஞன் பணி தனது எண்ணங்கள் மூலம் சமூகத்தில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே.

ஏன் எழுதினேன் தெரியுமா? எதற்காக எழுதினேன் தெரியுமா என இன்றைய கவிஞர்கள் சொல்வது ஒரு புத்தகவடிவில் வந்து விடும் நிலை இன்று இருக்கிறது. அன்றைய சூழலில் இதுபோன்று தனது நெருங்கியவர்களிடம் கவிஞர்கள் சொல்லியிருக்கக்கூடும். அப்படி சொல்லப்பட்டது பதிவு செய்யப்பட்டு இருப்பின் கவிதைக்கான பொருள் நேரடியாக கவிஞன் பார்வையில் கிடைத்துவிடும். இப்பொழுது வாசகன் அங்கு வருகிறான் என வைத்துக்கொள்வோம். வாசகருக்கு கவிஞனின் பின்புலம் எதுவும் தெரியாத நிலை. அப்படியிருக்க கருப்பொருள்தனை தனது கற்பனைக்கு கொண்டு செல்கிறான் வாசகன். இது காலம் காலமாக நடப்பதுதான்.

வாசகன் பல வடிவம் கொண்டவன். சிந்தனையற்ற நிலையில் இருந்து எண்ணற்ற சிந்தனை களம் சென்று பயணித்து வருபவன். படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பது எத்தனையோ பொருள் தரும். ஒரு பாடலின் கருச்சிதைவு என்பது வாசகனின் பார்வை படும்போதே நடந்தேறிவிடுகிறது. புரிதல் எளிதில்லை என்பதே பலரும் புரிந்து கொண்டு இருப்பது. கவிஞன் மனநிலையை அடைய வாசகன் முற்படுவதே இந்த சங்கடங்களுக்கு காரணம்.

இந்த பாடல் மூலம் பாரதி என்ன சொல்ல வருகிறார் என்பதைவிட என்ன சொன்னார் என்றுதான் முதலில் பார்க்க வேண்டும்.

நெருப்பு பொறி அதுவும் சின்னதாக காண்கிறான். காட்டில் சென்று ஒரு பொந்தில் வைக்கிறான். காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டது. அவ்வளவுதான்.

ஆனால் அடுத்துச் சொல்கிறான், தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் உண்டா? த தரிகிட தி தரிகிட தி தோம்

இந்த கடைசி வரியை வைத்தே முதல் வரிகள் பொருள் இப்போது மாறும். வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், கொடுமை, பாதக செயல்கள், கொத்தடிமைத்தனம், அடிமைத்தனம், பெண்ணடிமை, சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்கள் என எதிர்க்கவே வீரம் வேண்டும். இங்கே அக்கினிகுஞ்சு சின்ன சிந்தனை நெருப்பு, அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை, அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. தனியாக கூப்பிட்டு சிலரிடம் சொன்னேன், தீ பரவியது! பணி முடிந்தது. பாரதியார் சின்ன வயசு. நானே இப்படி செய்திட முனைய இத்தனை வருசம் என்ன செஞ்சீங்க என குஞ்சென்று மூப்பென்று முண்டோ!

கடைசி வரிகள் மிருதங்க தாளங்கள்
த திரிகிட நான் திருகிட
தி திரிகிட நீ திருகிட
தி தோம் நாம் முடித்தோம்.

த கி ட த க
தி கி ட த க
தி தோம்

கி ட த க என்பது தரிகிட என பாடுவர். அழுத்தி சொல்ல வார்த்தை திருகி தத்தரிகிட என்றார்.

தன்னுள் ஞானம் தோன்றி தனக்குள் உள்ள அழுக்காறுகளை போக்க இந்த பாடல் என்றெல்லாம் புறணி பேசித் திரிவர். பாரதி தனக்கு தேவை எனில் நேராகவே கேட்கும் வழக்கம் கொண்டவன். இது போதும் என்னுள் நெருப்பு சிந்தனை எழுப்புகிறான் பாரதி, என் குடும்பம், என் வாழ்க்கை என என்னை போன்று வாழ்பவருக்கு பாரதியின் சமூக சிந்தனை தோன்றாது! 
இதே பாடலுக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொண்டு உள்ளனர். அதில் ஏதும் தவறில்லை. ஒரு சிறந்த கவிதைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் வழக்கம். 
''நான் நனையாமல் இருந்துவிட குடை நனைகிறது'' இது என்ன பெரிய கவிதை. இது சாதாரண பேச்சுமொழி. இதில் அர்த்தங்கள் எழுதிப் பாருங்கள். வரி சொல்லும் கதைகள் ஆயிரம்.
''நின்று கொண்டு இருந்தேன் திடீரென அவள் வந்தாள் உன்னை காதலிக்கலாமா என்றாள். என்ன கேள்வி இது, உன் அனுமதி கேட்டா உன்னை காதலிக்கிறேன் என்றேன், வெட்கத்தில் சிரித்தாள்'' இதை எல்லாம் பெரிய கவிதை என சொல்லிவிட முடியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை அது காதலின் வெளிப்பாடு. 
அவள் எல்லாரிடமும் சென்று அவ்வாறு கேட்கவில்லை. தன்னை காதலிக்கிறான் என்பதை உணர்ந்த அவள் அவனது வாயிலிருந்து கேட்கவே வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவளது உணர்வுகளை புரிந்தவன் சொல்கிறான், உன்னை நான் காதலிக்கிறேன் என! இதில் என்ன பெரிய அர்த்தங்களை கொண்டு சேர்த்துவிட முடியும். ஆனால் அக்கினிக் குஞ்சொன்று அப்படி அல்ல. அதனால் தான் பாரதி ஒரு மகாகவி. 
இந்த கவிதை அவரது பாடல்களில் சமூக பாடலாக வைக்கப்படவில்லை. பிற பாடல்கள் என்ற குறிப்பில் உள்ளது. எனவே அர்த்தம் கொள்வோர் எப்படி வேண்டுமெனில் கொள்க, நல்லவிதத்தில் மட்டுமே என்று முடித்தல் சுபம். 

Tuesday 28 January 2014

தேடிக்கொண்ட விசயங்கள் - 6

பகுதி 5 இங்கே 

ஒரு மனிதருக்குள் நோய் ஏற்படுத்துவதற்கு இந்த பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஏற்படுத்தாத நோய்கள் மரபியல் வாயிலாக ஏற்படும் நோய்களாக அமைந்துவிடுகின்றன. நம்மில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருந்தாலும் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்ட பாக்டீரியாக்களை வைரஸ்களை 'pathogens' என்றே அழைக்கிறார்கள்.

எப்படி இந்த பாக்டீரியாக்கள் நம்மில் நோயை ஏற்படுத்துகின்றன. நமது உடல் தாமாகவே எதிர்ப்பு சக்தி கொண்டு அமைந்துவிடுகிறது. அந்த எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை வெள்ளை அணுக்கள். வெள்ளை அணுக்கள் வெளிப்படுத்தும் 'antibody' இந்த பாக்டீரியாக்களில் உள்ள 'antigen' தனை மிகவும் சரியாக கண்டுபிடித்து பாக்டீரியாக்களை செயல் இழக்க செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இந்த antibody கள் பலவகைப்படும்.

நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் இரண்டு வகைப்படும். அது 'granules' கொண்டவை, அல்லாதவை. 'granules' கொண்டவை நியூட்ரோபில், ஈசொனோபில், பெசோபில் எனப்படும். 'granules' அல்லாதவை லிம்பொசைட், மோனோசைட் எனப்படும். இந்த லிம்பொசைட் எங்கு உற்பத்தி ஆகிறது என்பதை பொருத்து அவை டி லிம்பொசைட், பி லிம்பொசைட் எனப்படும். டி என்றால் தைமஸ் சுரப்பியில் இருந்து தோன்றியவை. பி லிம்பொசைட் என்பது எலும்பு மஜ்ஜையில் இருந்து தோன்றியவை. இந்த பி லிம்பொசைட் தான் இந்த 'antibody' யை உருவாக்கும் வல்லமை கொண்டவை. இருப்பினும் டி லிம்பொசைட் இதற்கு அவசியம்.

இந்த antibody Y வடிவில் இருக்கும்.


















நமது உடம்பில் நடந்து கொண்டிருக்கும் இந்த செயல்பாடுகள் குறித்து எல்லாம் நாம் அதிகமாக சிந்திக்க முடிவதில்லை. இந்த படத்தில் குறிப்பிட்டது போல கீழே இருப்பது நீளமான சங்கிலி, மேலே இருப்பது சின்ன சங்கிலிகள். குறிப்பிட்ட இணைப்பு அல்லது பிணைப்பு இடமானது ஒவ்வொரு antigen க்கு வேறுபாடு அடைய செய்யும், அதனால் தான் எண்ணற்ற பாக்டீரியா, வைரஸ் மாற்றம் கொண்டாலும் அதற்கேற்ப ஒரு antibody தனை பிளாஸ்மா செல்கள் உருவாக்கி கொள்ளும் தன்மை உடையதாகவே இருக்கிறது.

இந்த antibody  புரதம் மற்றும் கார்பொஹைட்ரெட் இணைத்து கிளைக்கொபுரொட்டீன் எனும் வகையை சார்ந்தது. நமது உடலில் அல்புமின், குலொபுலின் என புரதங்கள் இருக்கின்றன். இந்த antibody யானது  immunoglobulin வகையை சார்ந்தது. இவை ஐந்து வகைப்படும். IgA, IgD, IgE, IgM மற்றும்  IgG. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயல்பாடுகள் கொண்டவை.

(தொடரும்) 

Friday 24 January 2014

ஜீரோ எழுத்து - 9 (கருந்துளை)

கருந்துளை, கருங்குழி எப்படி வேண்டுமெனினும் தமிழ்படுத்தி கொள்ளுங்கள். இந்த கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசை ஒளியை கூட வெளிவிடாமல் தன்னுள் உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையது என்றே முதன் முதலில் கண்டுபிடித்தார்கள். கிட்டத்தட்ட இருநூற்றி முப்பது  வருடங்களுக்கு முன்னர் உருவான சிந்தனை இது. அதிக ஈர்ப்புவிசை கொண்ட நிறை பொருள் ஒளியை வெளிவிடாது என்றே சிந்தனை எழுந்தது. இது கிட்டத்தட்ட் ஐம்பது வருடங்கள் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது, நியூட்ரான் நட்சத்திரங்களே இந்த ஒப்புதலுக்கு முதற்காரணம். 

நமது சூரியனைவிட பன்மடங்கு பெரிதான நட்சத்திரங்களே இந்த கருந்துளை ஏற்பட காரணம் ஆகிறது. ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாளை இரண்டு வகையாக முடித்துக் கொள்ளும். நமது சூரியன் போல அளவு இருந்தால் இறுதியில் ஒன்றுமற்றதாகவே மாறிவிடும். எப்படி ஒரு விறகை எரித்து முடித்திட ஜூவாலை தோன்றி மறைந்தபின்னர் தகதகவேனும் சிவப்பாக மாறி இறுதியில் சாம்பலாக மாறி கடைசியில் கருப்பாக மறைந்துவிடுமோ அதைப்போலவே நமது சூரியன் போன்ற அளவுடைய நட்சத்திரங்கள் ஆகும் என்பது அறிவியல் குறிப்பு. 

அதே வேளையில் பெரிய அளவுடைய நட்சத்திரங்கள் தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு உள்ளே இருக்கும் அளப்பரிய ஆற்றல் மூலம் மற்றொரு சூரிய குடும்பத்தை உருவாக்கும், அப்படி உருவாக்காத நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறி பின்னர் கருந்துளையாக மாறிவிடும் என்பது அறிவியல் குறிப்பு. 

எப்படி இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. இருட்டினை எப்படி கண்டு கொள்வது. ஒளிதனை இருட்டில் பாய்ச்சினால் அந்த இருள் ஒளியாகும், ஆனால் ஒளியை தன்னுள் உட்கிரகித்துக் கொள்ளும் இருளை எப்படி கண்டு கொள்வது. எந்த ஒரு பொருளும் தன்னை சுற்றியுள்ள பொருள் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தும் தன்மை உடையது, அதன் அளவீடு குறைந்ததாக இருக்கலாம், அதைப்போலவே இந்த கருந்துளை தன்னை சுற்றி உள்ளவைகள் மீது ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதாவது இந்த கருந்துளையை தாண்டி செல்லும் எந்த ஒரு பொருளும் பெரும் ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தி நகர்ந்தது. அதாவது தனக்குள் இருக்கும் ஆற்றல் மூலம் இந்த நட்சத்திரங்கள் மீது ஒளி பாய்ச்சியது. அதைவைத்துதான் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. 

நியூட்டனின் கொள்கையான ஈர்ப்புவிசை ஒளியின் வேகத்தில் மாறுபாட்டினை உண்டு பண்ணும் என்பதே இந்த கருந்துளைக்கு அடிப்படை தத்துவம். சுப்பிரமணியம் சந்திரசேகரின் சூரிய நிறை குறித்தும், எப்படி ஒரு நட்சத்திரம் உருக்குலைந்து கருந்துளையாக மாறும் என்பது குறித்தும் இப்போதைக்கு சற்று தள்ளி வைப்போம். 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வேகமாக சுழலக்கூடிய, அதிக காந்த தன்மை கொண்ட நியூட்ரான் நட்சத்திரம் வெளிப்படுத்திய கதிரியக்கத்தை பூமியில் இருந்து காண முடிந்தது. இவை பல்சார் எனப்பட்டன. இந்த கருந்துளைகள் நிறை, மின்னேற்றம், சுழல் உந்தம் போன்றவை பொருத்து அமைகின்றன. 

வெறும் நிறை அடிப்படையிலும் இந்த கருந்துளைகள் அமையும். சமீபத்தில் இந்த கருந்துளை பற்றி ஒரு அதிசய நிகழ்வு நடந்தது. 

(தொடரும்) 

Thursday 23 January 2014

இவர்கள் எல்லாம் பெண்களா?

எல்லா பெண்களும் கல்வி, கலவி, காமம், காதல், கல்யாணம், விபச்சாரம் என தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படையாக பேசிவிட்டால் இந்த தமிழகம் தாங்காது. நாகரிகம்  மாறிவரும் வேளையில், கலாச்சாரம், பண்பாடு என இவற்றில் வளர்ந்துவிட்டதால் பல பெண்கள் இவைகளை உதாசீனம் செய்வதோடு உள்ளுக்குள் வேதனை கொள்கிறார்கள். அதையும் தாண்டி தங்கள் மனக் குமுறல்களை வெளிச் சொன்னால் இவர்களுக்கு பெண்ணியவாதி என பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே வாழ்ந்து வருகிறார்கள். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, கற்பு, அடக்கம், ஒடுக்கம் என எல்லா குட்டிச்சுவரகளையும் பெண்கள் மீது கட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

வரம்பு மீறி வாழும் பெண்களுக்கு ஆண்களுக்கு ஒருபோதும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமெனில் மணந்து வாழலாம் எனும் போது, ஒரு பெண் எத்தனை ஆண்களை வேண்டுமெனிலும் மணந்து வாழ சமூகம் அங்கீகரிப்பது இல்லை. எந்த ஒரு ஆணும் அதற்கு சம்மதம் சொல்வது இல்லை. எனக்கு இரண்டு புருசர்கள் என எந்த பெண்ணும் சொல்லிக்கொண்டதாக தெரியவில்லை. கேட்டால் சமூக இழிவாம்.

சுதந்திரமாக வாழ எத்தனிக்கும் பெண்களை நோக்கி எழுப்பப்படும் ஒரே கேள்வி இவர்கள் எல்லாம் பெண்களா என்பதுவே! ஆம், தனது சுதந்திரம் பறிபோவதை எதிர்த்து, தனது உரிமைகளுக்கு போராடும் பெண்கள் பெண்கள் தான்.

காமம், கலவி இதில்தான் பல பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைக்கு என தனது சொந்த அபிலாசைகளை தூக்கி எறிந்தவர்கள் இவ்வுலகில் எத்தனை பேர். '' தூக்கி பரண் மேல போட்டாச்சு''

நிற்க.

ஒரு ஊருல சரஸ்வதின்னு ஒரு பெண். இருபத்தியொரு வயசான அந்த பொண்ணு  அந்த ஊருல இருக்கற ஹோட்டலுல வேலைப் பாத்துச்சு. ஹோட்டலு ஒன்னும் பெருசு இல்லை. கூரை மேய்ஞ்ச ஹோட்டல் தான். ஆமை வடை, உளுந்த வடை, போண்டா, இட்லி, தோசை, பூரி சாப்பாடு வகையறாதான் கிடைக்கும். புரோட்டா எல்லாம் இல்ல. கிரைண்டர் இல்லாத காலம் அது. இந்த பொம்பளை தான் எல்லாத்துக்கும் மாவாட்டணும். அந்த கடையில ஒரு பெரிசு டீ, காபி போட்டு கொடுப்பாரு.

இந்த பொண்ணு  ராத்திரி ஆனதும் 'சரக்கு' அடிக்கப் போகும். அது ஊருக்கேத் தெரியும். கம்மாய் ஓரத்தில 'சாராயம்' கொண்டு வந்து விப்பாய்ங்க. ஒரே ஒரு டம்ளர்தான் சரக்கு அடிக்கும். வாய்க்கு வந்தது எல்லாம் திட்டும். அதனால ஒரு பைய அந்த பொண்ணை  தப்பான நோக்கத்தில நெருங்க முடியாது. என்ன சரசுன்னு சொன்னா போதும், போடா பொசக்கட்ட பயலேன்னு சொல்லும். ஹோட்டலுக்கு வரவங்ககிட்ட மட்டும் நல்லா சிரிச்சு பேசும்.

அந்த பெரியவருக்கு குடும்பம் இருந்துச்சு. ஹோட்டலுல நல்ல வியாபாரம் நடக்கும். பக்கத்து ஊரில இருந்து ஆளுக வந்து சாப்பிட்டு போகும், உள்ளூர்காரங்க கொஞ்ச பேருதான் வாங்கி சாப்பிடுவாங்கே.சரக்கு அடிக்குதாம் சரசுனு கேலி பேசுவாங்கே.  இந்த சரசுக்கு ரொம்ப சம்பளம் எல்லாம் கிடையாது. சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் இலவசம். அந்த பெரிசு இந்த சரசுவை வைச்சிருக்கிறதா ஊரே பேசும், ஆனா பெரிசோட வீடு மட்டும் அப்படி பேசாது. இன்னும் என்ன என்னமோ பேசுவாங்கே, எழுதவே கை கூசுது. தட்டிக்கேட்டா மாட்டிக்கிட்டியானு வம்பு அளப்பாங்கே. எதையும் சரசு கண்டுக்காது. எங்கையா இவளைப் பிடிச்சி வந்தனு கேட்டா, அனாதையா கிடந்தா, கூப்பிட்டு வந்தேன்னு சொல்வாரு பெரிசு.

சரசுக்கு கல்யாணம் காட்சி பண்ணி வைக்க பெரிசு நினைச்சாலும் ஒரு பயலும் கட்டிக்க வரலை. சரசு போட்ட கண்டிசன் தான் காரணம். இந்த ஹோட்டலு, சரக்கு குடிக்கிறதை விடச் சொல்றவன், பொம்பளை சுகம் தேடுறவன் எல்லாம் வரக்கூடாதுன்னு கட் அன் ரைட்டா சொல்லிருச்சி. பெரிசு ஒருநா செத்துப் போனாரு.

பெரிசோட குடும்பம் இந்த ஹோட்டலை மூட நினைச்சிச்சு. சரசு தான் நான் தனியா நடத்துறேனு சொல்லி  அடம்பிடிச்சி நடத்துச்சு. சிரிச்ச முகம் மாறாம இருக்கும். ஒரு பையலையும் கிட்டக்க அண்டவிடலை. சரசு ஹோட்டல் வாடகை பணம் மட்டுமே பெரிசு குடும்பத்துகிட்ட கொடுக்கும். மத்ததெல்லாம் சரசுகிட்ட இருந்துச்சு. கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணிக்கலை சரசு.

முப்பது  வருசமா நாயா பேயா உழைச்சிச்சி. சரக்கு குடிக்கிறத நிறுத்தலை. இருமல் வந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில படுத்துருச்சு. ஒரே நாள் தான். சரசு அன்னைக்கே கண்ணை மூடிருச்சி. சரசு செத்துப் போன விஷயம் கேள்விப்பட்டு திமுதிமுன்னு ரொம்ப பேரு வந்துட்டாங்க. அதுல ஊர்க்காரங்களுக்கு தெரியாத சின்ன சிறுசுக ஒரு பத்து பேரு மாப்பிள்ளையும் பொண்ணுமா, குழந்தையோட ஆத்தா ஆத்தா சொல்லாம போயிட்டியே ஆத்தான்னு அழுதுட்டு நின்னாங்க.

யாருன்னு விசாரிச்சப்ப, இந்த ஆத்தாதான் எங்களை வளர்த்தாங்கனு  கல்யாணம் பண்ணி வைச்சாங்கன்னு பத்து பொட்ட்பிள்ளைக சொல்ல ஊரே வாயடைச்சி நின்னுருச்சி.

ஒரு குடும்பத்தை கட்டி பிள்ளைகளை பெத்து அனாதையா போற பொணத்துக்கு மத்தியில சரசோட இறுதி சடங்கு பெருசா நடந்துச்சி. அந்த ஹோட்டல் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி சரசுக்கு ஒரு கோவில் கட்டி வைச்சாங்க அந்த பிள்ளைக.

அந்த பிள்ளைக வாரம் தவறாம வந்து கும்பிட்டு போறாங்க!

ஊர்க்காரங்களும் தான் போடுற பொங்கச் சோறு திங்கிறாங்கே. மானங்கெட்ட பயலுக.

Tuesday 21 January 2014

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 22

அப்படியே வீட்டுக்கு வந்து வெளியில் பூட்டிய கதவை மெதுவாக திறந்து உள்ளே சென்றேன்.

''எங்க முருகேசு போய்ட்டு வர''

அப்பாவின் குரல் இருளில் வந்தது கண்டு அச்சம் கொண்டேன்.

''சொல்லு முருகேசு''

மின்விளக்கு போட்டுவிட்டு நடந்த விஷயத்தை அப்பாவிடம் சொன்னதும் அப்பா திடுக்கிட்டார். அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்து அனுப்பினார். எனது அறைக்கு சென்று தூங்க முயற்சித்தேன்.சுபா, கோரன், அவனது அப்பா, ஆசிரியர், ஆசிரியரின் மனைவி நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தலை சுற்றியது. நகர் வாழ்க்கையில் எவர் எவர் எப்படி என்பது தெரிந்து கொள்ள இயலாத வாழ்க்கை சூழல். கோரன் இனி நினைவு இழந்தவன் போல நடிப்பான். ஆசிரியரிடம் விபரம் சொல்ல வேண்டும் என தூங்கிப் போனேன்.

''முருகேசு, எழுந்திருப்பா''

வழக்கம் போல அம்மா எழுப்பிவிட்டார்கள்.

''காயத்ரி உனக்கு ராத்திரி கோரன்கிட்ட இருந்து கொலை பத்திய போன் வந்துச்சுன்னு சொன்னப்பா, என்ன ஆச்சு உங்க அப்பாகிட்ட சொன்னா சும்மா பையனுங்க விளையாடி இருப்பாங்கனு சொல்றார். காயத்ரி அப்படி இல்லைன்னு சொல்றா''

''அம்மா, இன்னும் நான் எந்திரிக்கலை''

''கொலைன்னு சொன்னதும் பயந்து வரேன், நீ எந்திரிக்கலைனு சொல்ற, முகம் அலம்பிட்டு வந்து சொல்லிட்டு அப்புறம் கிளம்பு, இல்லை நீ காலேஜுக்கு போக வேணாம்.''

போர்வையை தூக்கிபோட்டு விட்டு எழுந்தேன். கசங்கிய முகம்தனை கைகளால் மேலும் கீழும் அழுத்தி தேய்த்துவிட்டு சோம்பல் முறித்து கொண்டு சென்றேன்.

''நில்லு முருகேஷா''

''என்னம்மா''

''என்னடா ரத்த காயம், அங்க அங்க ரத்தம்உறைஞ்சிருக்கு, என்னங்க இன வாங்க''

''கொசு கடிச்சி தொலைச்சிருக்கும், இதுக்கு எதுக்கும்மா அப்பாவை கூப்பிடற''

வேகமாக பாத்ரூமில் நுழைந்தேன். இந்த காயத்ரியை ஒரு அறைவிட்டால் சரியாகும் என்றே நினைத்தேன். இந்த அம்மாக்கள் இப்படித்தான். எப்படி ரத்த காயம் எல்லாம் கண்ணில் பட்டது. நன்றாக குளித்துவிட்டு வந்தேன். அம்மா, காயத்ரி, அப்பா நின்று இருந்தார்கள்.

''காயத்தை காட்டுடா''

''அம்மா, என்னை துணி மாத்த விடுமா, இதுல இந்த பொண்ணு வேற நிக்கிறா''

காயத்ரியின் முகத்தில் வெட்கம் வெட்டி சென்றது. இந்த பாரு என கையை காட்டிவிட்டு நடந்தேன்.

''கொசு கடி  தான்''

தயாராகி கீழே வந்தபோது காயத்ரி இன்னும் வெட்கத்தில் இருந்தாள். கல்லூரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் எல்லா விசயங்களையும் காயத்ரியிடம் சொன்னதும் மயக்கம் போடாத குறையாக போலிசுக்கு வா போவோம் என்றாள் . நான் ஆசிரியர் வீடு நோக்கி நடந்தேன்.

''என்ன முருகேசு, இங்கிட்டு நடக்கிற''

''சாரை பாத்துட்டு போவோம்'

''போலீசுல சொல்வோம்''

எதுவும் பேசாமல் நடந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தோம்.

''என்ன இந்த பக்கம், காலேஜுக்கு போகலை''

''ஒரு முக்கியமான விஷயம் பேசணும்''

''உள்ளே வாங்க''

ஆசிரியரிடம் விபரம் சொல்ல சொல்ல அவரது முகம் மாறியது. வியர்வைத் துளிகள் எட்டிப் பார்க்கத் தொடங்கின. சமையல் அறைக்குள் எழுந்து சென்றார்.தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்.

''ரொம்ப வெட்கையா இருக்கு''

''காத்தாடி ஓடுதே''

''அது பழசு''

''உங்க மனைவிக்கும், கோரன் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்''

''அது எல்லாம் உனக்கு எதுக்கு''

''சார், சொல்லுங்க, நாங்க உதவி பண்றோம்''

நிறையவே யோசித்தார்.

''அது வந்து...''

''என்ன சார்''

''நேரமாகுது, கிளம்புங்க''

''முருகேசு, வா கிளம்பலாம்''

வேறு வழியின்றி கிளம்பினோம். அன்று கோரன் கல்லூரிக்கு வரவில்லை. ஆசிரியரும் வரவில்லை. ஆசிரியர் வீடு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது.

கோரன் வீட்டிற்கு செல்ல நினைத்த என்னை காயத்ரி தடுத்தாள். அன்று இரவு எட்டு மணிக்கு கோரன் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டு நண்பனை பார்த்து வருவதாக கிளம்பினேன்.

''கோரன் வீட்டுக்கா''

''காயூ, நீ பேசாம இரு, அம்மா தாண்டவம் ஆடுவாங்க''

கோரன் வீட்டினை அடைந்தேன். கோரன் வீட்டில் கோரன், அவனது அப்பா, அம்மா  இருந்தார்கள் . கோரன் ஒரு பையை எடுத்து கிளம்பினான். திடுக்கிட்டேன். அவனை பின் தொடர்ந்தேன். ஆசிரியர் வீட்டினை அடைந்தான். கதவு பூட்டப்பட்டு இருந்தது கண்டு ஆத்திரம் கொண்டவனாய் கத்தினான். அந்த நேரம் பார்த்து ஒரு காவல் அதிகாரி வந்தார்.

''என்னடா சத்தம் போடுற''

''பூச்சி கடிச்சது சார்''

''போய் டாக்டரை பாரு''

ஆசிரியர் வீட்டினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பினான்.

''கோரன்''

என்னை பார்த்தவன் திடுக்கிட்டான்.

''எதுக்கு இவரை தேடி வந்த''

''உனக்கு தேவை இல்லாத விஷயம்'

''கொல்ல வந்தியா''

''ஆமா''

''ஏன்''

''முருகேசு நீ தலையிடாத''

வேகமாக ஓடி மறைந்தான். அடுத்த நாள் ஆசிரியர் வீட்டிற்கு சென்றேன். வீடு விற்கப்பட்டு விட்டதாக சொன்னார்கள். கல்லூரி முதல்வரிடம் சென்று ஆசிரியர் குறித்து கேட்டேன். வேலையை நேற்றே விட்டுவிட்டதாக சொன்னார். கோரன் அன்றும் கல்லூரிக்கு வரவில்லை.

(தொடரும்)





 

பதிப்பகங்களும் புத்தகங்களும்

இன்றைய காலகட்டத்தில் எழுதுவது என்பது எல்லோராலும் பொதுவெளியில் எழுதும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. கணினி மற்றும் தமிழ் அச்சு தெரிந்து இருந்தால் போதும், உள்ளக்கிடக்கை எல்லாம் ஊருக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விடலாம்.

எனக்கு ஓரளவிற்கு தமிழில் மீது எப்போதும் ஆர்வம் உண்டு. சிறுவயதில் இருந்தே தமிழ் படிப்பதில் அலாதி பிரியம் இருந்தது. எழுத்தாளர்கள் புத்தகங்கள் அவ்வளவாக படிக்கவில்லையெனினும் தினமலர், வாரமலர், குடும்பமலர், குமுதம், ஆனந்தவிகடன், தமிழ் கோனார் உரை, திரைப்பட பாடல்கள், அசோகமித்திரனின் கதைகள்  என தமிழ் படித்தது உண்டு. கடை எனும் ஒரு நாவல் படித்த நினைவு இருக்கிறது. நான் கல்கத்தாவில் படித்தபோது நண்பர்கள் அங்கிருக்கும் தமிழ் சங்கத்தில் இருந்து நிறைய தமிழ் புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள். அதேபோல அங்கே உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து நிறைய ஆங்கில புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பார்கள் . நான் அதிகம் படித்தது கவியரசு கண்ணதாசனின் புத்தகங்கள் என சொல்லலாம் மற்றபடி பாடபுத்தகங்கள் மட்டுமே. இதனால் நான் நாவல் எழுத தொடங்கியபோது பாட புத்தகங்களில் உள்ள கருத்துகளை கையாண்டேன்.

பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா, மோகமுள்  என பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவில் இருக்கிறது. இந்த கதைகளை எல்லாம் நான் படித்தது இல்லை. சாண்டில்யன், தி.ஜானகிராமன், கல்கி என பல பெயர்கள் அவர்கள் மூலம் எனக்கு பரிச்சயம். என்னை மிகவும் பாதித்த மலையாள மொழி பெயர்ப்பு கதை உண்டு, இன்னமும் கதை கரு மனதில் நிழலாடுகிறது, ஆனால் தலைப்பு மறந்து போய்விட்டது.

இந்த இணையம் இல்லாது இருந்து இருந்தால் நான் நாவல், கதை எல்லாம் எழுதி இருப்பேனா என்பது கேள்விக்குறிதான். முத்தமிழ்மன்றம் போட்ட விதை நுனிப்புல் இரண்டு பாகங்களும். இப்படியே கவிதைகள், சிறுகதைகள் என முத்தமிழ்மன்றம் தந்த உற்சாகம் மடமடவென எழுத வைத்தது. இன்று எத்தனையோ கதைகள் எழுதியாகிவிட்டது. ஆனால் வெளியிட்டது மூன்றே நூல்கள்.

நாவல் வெளியிட நான் தொடர்பு கொண்ட பதிப்பகங்கள் எல்லாம் கைகளை விரித்தன. அதனால் முத்தமிழ்மன்ற பதிப்பகம் என சொந்த செலவில் புத்தகம் வெளியிட்டேன். அதற்கடுத்து வெளிவந்த கவிதை தொகுப்பு, கதை தொகுப்பு எல்லாம் சொந்த செலவுதான். பதிப்பாளர்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இதுவரை சம்பந்தபட்ட பதிப்பாளார்கள் புத்தகங்கள் குறித்து ஒரு விஷயமும் தெரிவிக்கவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. புத்தகம் அச்சிட்டு தந்தார்களே அதுவே எனக்கு பெருமிதமாக இருக்கிறது. அவர்களிடம் புத்தகங்களை இலவசமாக கொடுத்துவிடுங்கள், எவரேனும் என்ன விலைக்கு கேட்கிறார்களோ கொடுத்துவிடுங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது, ஒரே அறையை அலங்கரிக்கும் அந்த புத்தகங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு அறையை அலங்கரிக்கட்டுமே. எழுதுவது எனது தொழில் அல்ல, இதன் மூலம் நான் சம்பாதிக்க இருப்பது என்று எதுவும் இல்லை. புத்தகத்திற்காக சிறு பணம் ஒதுக்கி அதை வெளியிடுவதுடன் எனது பணி முடிவடைகிறது.

இப்படி நான் எழுதி சொந்த காசு செலவு பண்ணியும் புத்தகம் வெளியிட பதிப்பகங்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. ஒரு சிறந்த பதிப்பகம் கிடைக்க வேண்டுமெனில் கதை சிறப்பாக இருக்க வேண்டும், அதுவும் மக்கள் அறிமுக எழுத்தாளராக இருக்க வேண்டும் என்பது காலக்கொடுமை.

நுனிப்புல் பாகம் 2 வெளியிட வேண்டும். நண்பர் சொக்கன் இதை தனி நூலாகவே கொண்டு வரலாம் என்றார். தலைப்பு கூட நெகாதம் என்றே வைக்கலாம் என யோசிக்கிறேன். எவரேனும் இந்த நூலை, தனி  நூலாகாவோ (நெகாதம் தலைப்புடன்) , தொடர் நூலாகவோ (நுனிப்புல் தலைப்புடன்)  பதிப்பகம் ஒன்று அச்சிட்டு வெளியிட முன்வருமாயின் தொடர்பு கொள்ளுங்கள் என்பதை தவிர வேறு என்ன கேட்டுவிட முடியும். 

Thursday 16 January 2014

நீங்க எந்த ராசி?

''டேய், போயி அந்த பெரியவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்திரு, உன் கல்யாணத்துல எந்த தடையும் வந்திரக்கூடாது பாரு''

''என்னம்மா நீ ரொம்ப தொனதொனத்துட்டே இருக்கே, நானும் ஸ்ரீயும் கல்யாணம் பண்ணப்போறோம், நீ என்னமோ ஆசிர்வாதம் அது இதுன்னுட்டு இருக்க''

''அதுக்கில்லைடா, ஸ்ரீ குடும்பத்தில தகராறு பண்றதா நீதானே சொன்ன, அப்பா வேற ரொம்ப கவலையா இருக்காருடா. சொன்னா கேளுடா''

ராம் 23 வயதான நல்ல உயரமான கருப்பு வண்ண இளைஞன். சமீப ஆறு மாத காலமாக தன்னுடன் வேலை பார்த்து வரும் 21 வயதான சற்றே உயரமான சிவப்பு வண்ண ஸ்திரீயான ஸ்ரீயை காதலித்து வருகிறான். இந்த காதல் விவகாரம் நேற்றுதான் ஸ்ரீ வீட்டுக்கும், ராம் வீட்டுக்கும் தெரிந்தது. ராம் பெற்றோர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஸ்ரீ வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவிட்டார்கள். இந்த எதிர்ப்பு விவகாரத்தை ராம், தனது அம்மாவிடம் சொல்ல அம்மா அவர்கள் ஊரில் இருக்கும் ஒரு பெரியவரை பார்த்து வர சொன்னார்கள். ராம் செல்லமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

''யாரும்மா அந்த பெரியவரு, அவர் என்ன சித்தரா, ஸ்ரீயோட அப்பா அம்மா மனசை மாத்துறதுக்கு. சும்மா கிடம்மா, நானே எப்படி கல்யாணம் பண்ணலாம்னு யோசனையில இருக்கேன்''

''டேய், அவரை பாத்துட்டா, தடைபட்ட கல்யாணம் எல்லாம் நடக்குதாம்டா. அதோட இல்லை கல்யாணம் பண்றவங்க எல்லாம் நல்லா இருக்காங்களாம். நம்ம கோமதி பாட்டி கூட வந்து சொல்லிட்டு போனாங்க''

''அப்படினா விவகாரத்து பண்றவங்களை அவரை பார்க்க சொல்ல வேண்டியதுதானே, சேர்ந்து வாழுவாங்கள''

''அப்படியும் நடந்து இருக்காம்டா, சொன்னா கேளுடா. ஸ்ரீ நம்பர் இருக்காடா''

''எதுக்கு, அதெல்லாம் ஒன்னும் வேணாம். சனிக்கிழமை அன்னைக்கு போறேன், என்னை நிம்மதியா போய் தூங்கவிடு''

''நம்பர் தாடா, எதுக்கும் வைச்சிக்கிறேன்''

''இந்தாம்மா''

ராம் உறங்க சென்றதும் ஸ்ரீக்கு போன் செய்தார்.

''ஸ்ரீ, நான் ராம் அம்மா பேசறேன்''

''சொல்லுங்க, இருங்க மாடிக்கு போய்க்கிறேன்''

சிறிது இடைவெளிக்குப் பின்னர்

''ம்ம் சொல்லுங்க''

''ஏன்மா, என் பையனை நீ காதலிக்கிறியாமே, உங்க வீட்டுல பிரச்சினையாமே, ராம் சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தான்''

''ஆமாம், வீட்டுல முடியாதுன்னு சொல்லிட்டாங்க, ஆனா எங்க முடிவுல மாத்தமில்லை, உங்களுக்கு சம்மதம் தானே''

''சம்மதம் தான், நீ எதுக்கும் எங்க ஊருக்கு வெளில ஒரு குடிசையில பெரியவர் ஒருத்தர் இருக்காரு, ராசிசாமினு கேட்டா சொல்வாங்க, அவரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனா எந்த பிரச்சினையும் வராது''

''ம்ம்''

''மறந்துராதம்மா''

''ம், மறக்கலை''

ராம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடுத்த நாள் ஸ்ரீ, ராசிசாமியை தேடி வந்துவிட்டாள்.

''வணக்கம் சாமி''

''ம்ம்''

''என்னோட கல்யாணத்துல பிரச்சினை, அதை நீங்க தீர்த்து வைக்கனும்''

''ம்ம் உன்னோட பேரு, ராசி என்னம்மா?''

''ஸ்ரீ, மகரம்''

''என்ன நட்சத்திரம்?''

''திருவோணம்''

''எந்த மாசத்தில் பிறந்த?''

''மே  7''

''பையனோட பேரு, ராசி?''

''ராம், மீனம்''

''பையனோட நட்சத்திரம்?''

''ரேவதி''

''எந்த மாசத்தில் பிறந்தார்?''

''ஜனவரி 11''

''எல்லாம் துல்லியமா வைச்சிருக்கியே''

''காதலிக்க ஆரம்பிச்சதும், ராசி பொருத்தம் பாத்துட்டேன்''

''இது ஜாதகப்படி சரி. எதுக்குனா இது சந்திர ராசி. ஜாதகத்தில எங்க சந்திரன் இருக்கோ அதுதான் ராசி. ஆனா பெரும்பாலான இணையதளங்களில் பிறந்த மாசம் வைச்சிதான் கணக்கு பண்ணுவாங்க. அது சூரிய ராசி. ஆங்கில மாச பிறப்பு படி நீ ரிஷபம், அவர் மகரம். இந்த ராசிக்கான நட்சத்திரம் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. ராசி மட்டுமே பாக்கனும், அப்படி பாக்கப்போனா உங்க ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் இருக்கு. தாராளாம கல்யாணம் பண்ணலாம்''

''சரிங்க சாமி, தட்சிணை எவ்வளவு?''

''அந்த பணத்தை அப்படியே போறப்ப அநாதை பிள்ளைகளுக்கு சோறு வாங்கி கொடுத்துட்டு போ''

ஸ்ரீ, ராமிடம் உற்சாகமாக விஷயத்தை சொன்னாள்.

''அந்த பெரியவர் மாத்தி சொல்லி இருந்தா வேணாம்னு சொல்லி இருப்பியா''

''மனசுக்கு கஷ்டமா இருந்து இருக்கும்''

''சரி, வேலைக்கு வந்து சேரு''

ஸ்ரீ தனது அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''சரி கவலைப்படாதே, உன் அப்பாகிட்ட சொல்லி சமாதானம் பண்ணி வைக்கிறேன்''

ஸ்ரீ, ராமிடம் அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.

''நான் சொன்னேன் பார்த்தியா, அதுதான் அந்த பெரியவரோட மகிமை''

''தேங்க்ஸ்த்தை''

ஸ்ரீ வீட்டில் சம்மதம் சொன்னார்கள். ராம் சில தினங்கள் பின்னர் பெரியவரை சந்திக்க சென்றான்.

''எப்படி உங்களால் இந்த கல்யாணம் எளிதாக சாத்தியம் ஆச்சு?''

''என் மேல மக்கள் வைச்சிருக்கிற நம்பிக்கை. நான் சொன்னா நல்லா நடக்கும்னு நினைக்கிறாங்க. இந்த நம்பிக்கையை ஸ்ரீக்கு கொடுத்து அது ஸ்ரீ பெற்றோருக்கு போய் சேர்ந்தது. அவங்க அவங்க மேல நம்பிக்கையை வரவைக்கிறதுதான் என்னோட வேலை. மத்தபடி ராசி, ரோசி எல்லாம் ரெண்டாம் பட்சம். பரஸ்பர நம்பிக்கை இல்லாத வாழ்க்கை என்னைக்குமே பஸ்பம்தான்''

''ரொம்ப நன்றிங்க''

''இந்த நம்பிக்கை விஷயத்தை ஒரு நாப்பது வருஷம் முன்னாடி நான் என்னோட சுமதிக்கு சொல்லி இருந்தா இந்த ராசி கருமாந்திரம் எங்களை பிரிச்சி இருந்து இருக்காது''

ராமின் சந்தோசத்தில் சின்னதாய் வலி ஒன்று வேகமாக ஊடுருவி போனது. 

Tuesday 14 January 2014

நுனிப்புல் வாழ்த்துரை - என். சொக்கன்

வாழ்த்துரை

நாவல்களில் பலவகை. அறிவியல், ஆராய்ச்சிக் கருத்துகளை அதனுள் தோய்த்துத் தருவது சமீபத்தில் புகழ் பெற்று வரும் தனி வகை.

ஆகவே, நண்பர் ராதாகிருஷ்ணன் அதைப் பின்பற்றி ஒரு நாவல் எழுதிவிட்டார் என்று எண்ணிவிடவேண்டாம். அவர் இந்நாவலையும் அதன் முந்தின பாகமாக அமையும் பிறிதொரு நாவலையும் எழுதிப் பல ஆண்டுகள் ஆகின்றன. அவ்விதத்தில் அவர் ஒரு முன்னோடி என்பதே உண்மை.

இவ்வகை நாவல்களில் ஒரு சின்ன பிரச்னை, இவற்றில் கருத்து அதிகரித்துவிட்டால் கதைச் சுவை தீர்ந்துவிடும், நாவல் நொண்டியடிக்கும், சரி என்று கதை சுவாரஸ்யத்தை அதிகரித்துவிட்டால் கருத்து நீர்த்துவிடும், வாசகனுக்கு எதுவும் சென்று சேராது.

இவ்விரு வட்டங்களிலும் சிக்கிக்கொள்ளாமல், மிக நேர்த்தியாகத் தன் கதையைக் கொண்டுசென்றிருக்கிறார் ராதாகிருஷ்ணன். அவரே மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் என்பதால், இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் நேர்த்தியாகவும் எல்லாருக்கும் புரியும்படியும் உள்ளன. குறிப்பாக, அந்தத் துறைப் பின்னணியே இல்லாத வாசகர்களுக்கும்!

கதை பாணி என்று பார்க்கும்போது, ராதாகிருஷ்ணனுக்குக் கல்கி ஆதர்ஷம் என்று ஊகிக்கிறேன். அவரது நாவல்களைப்போலவே பாத்திரங்கள் அறிமுகம், கொக்கிகள், தகவல் பரிமாற்றங்கள், முக்கியமாக, எல்லாரும் நல்லவர்கள். மனத்துக்கு மிகவும் ஆசுவாசமளிக்கும் விஷயம் இது!

கிராமத்துப் பின்னணியில் அமைந்த கதை. ஆகவே, பல பழக்க வழக்கங்களை நுட்பமாகக் காட்டுகிறார். குறிப்பாக, விருந்தினர்களை உபசரிக்கும் விதம், ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அமைப்பு, மன உளவியல் போன்றவை!

கவிதை, சிறுகதை, நாவல் என்று பல தளங்களில் விரிந்து செல்லும் ராதாகிருஷ்ணனின் எழுத்துகள் எண்ணற்ற வாசகர்கள் மனத்தில் இடம் பிடிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன். எல்லாவிதமான எழுத்துகளிலும் அவர் கால் பதிக்கக் கோருகிறேன். நன்றி!


என்றும் அன்புடன்,
என். சொக்கன்,
பெங்களூரு.

சொக்கன் அவர்களுக்கு மிக்க நன்றி. 

Friday 10 January 2014

வைகுண்டமும் பெருவெடிப்பு கொள்கையும்

ஒரு புத்தகம் கொண்டு வந்து இதைப் படி என அம்மா கொடுத்துவிட்டு போனார். இந்த இரவு நேரத்தில் தூங்குவதை விட்டுவிட்டு எவரேனும் புத்தகம் படிப்பார்களா என்றே அந்த புத்தகம் பார்த்தேன்.  அந்த புத்தகத்திற்கு எந்த ஒரு பெயரும் இல்லை. எவரேனும் தலைப்பு இல்லாமல் ஒரு புத்தகம் எழுதுவார்களா? அந்த புத்தகத்தினை எழுதியவர் பெயர் கூட இல்லை. முன் அட்டை, பின் அட்டை வெறுமையாக இருந்தது. உள்ளே எடுத்த எடுப்பில் வைகுண்டத்தில் நாராயணன் வாசம் செய்கிறான் என்றே வரி ஆரம்பித்து இருந்தது. பதிப்பகம், விலை என இத்யாதிகளும் இல்லை. ஆயிரத்து எட்டு பக்கங்கள். தலைக்கு அடியில் வைத்து பார்த்தேன். மெத்தென்று இருந்தது. 

''பக்தா, நல்ல தூக்கமோ''

இந்த வார்த்தைகளை நான் வெகு நாட்களாக கேட்டு இருக்கவில்லை. திடீரென எதற்கு சாமியார் வந்து இருக்கிறார் என்றே ஆச்சர்யத்துடன் அவரை வரவேற்றேன். அங்கிருந்த ஒரு நாற்காலி ஒன்றை அவருக்கு போட்டுவிட்டு கீழே நான் அமர்ந்து கொண்டேன். 

''என்ன விஷயமாக வந்து இருக்கிறீர்கள்''

''நான் வைகுண்டம் போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன், அதுதான் நீயும் வருகிறாயா என்று அழைத்து போகவே வந்தேன்'' 

''எங்கே, ஸ்ரீரங்கமா?''

''அது பூலோக வைகுண்டம், நான் உன்னை அழைப்பது நாராயணன் வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு பக்தா''

''என்ன உளறுகிறீர்கள், அந்த வைகுண்டம் எங்கே இருக்கிறது, அது ஒரு கற்பனையான உலகம்''

''பக்தா, இந்த உலகம் எப்படி தோன்றியது''

''பெரு வெடிப்பு கொள்கையின் படி ஒரு புள்ளியில் இருந்தே எல்லாம் தொடங்கின, அதற்கு முன்னர் எதுவும் இல்லை''

''எந்த பாட புத்தகத்தில் படித்தாய் பக்தா, கடவுள் இவ்வுலகை படைத்தார் என்றதும், கடவுளை யார் படைத்தார் என கேட்கும் நீயா, அந்த புள்ளிக்கு முன்னர் எதுவும் இல்லை என சொல்வது''

''நான் எப்போது கடவுளை யார் படைத்தார் என கேட்டேன், இந்த பிரபஞ்சத்தை படைக்கத் தெரிந்த கடவுளுக்கு தன்னை படைக்கத் தெரியாதா?''

''பக்தா, சரி மனம் மாறிவிட்டாய் போலிருக்கிறது, வா வைகுண்டம் போகலாம்''

''இல்லாத ஒரு இடத்திற்கு எல்லாம் என்னால் வர இயலாது, அதுவும் அது எங்கு இருக்கிறது என்பதே எவருக்கும் தெரியாது''

''பக்தா, வைகுண்டம் அழைக்கும் தொலைவில் உள்ளது என்பதுதான் கதை, ஆனால் உண்மையான வைகுண்டம் இந்த பிரபஞ்சத்தைத் தாண்டி உள்ளது''

''இது யுனிவர்ஸ்''

''அப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது மல்டிவர்ஸ்''

''மல்டிப்ளக்ஸ் மாதிரி பேசறீங்க, என்னால் உங்களுடன் வர இயலாது''

''நாராயணன் இந்த வைகுண்டத்தில் வாசம் செய்கிறார். அந்த வைகுண்டத்திற்கு ஆத்மாக்கள் செல்லும். உடலை இங்கே கிடத்திவிட்டு ஆத்மா அங்கே வாசம் செய்யும். அதற்கு நற்காரியங்கள் புரிந்து இருக்க வேண்டும். நீ நற்காரியங்கள் புரிந்து இருக்கிறாயா''

''எதற்கு இப்போது இப்படி என்னை தொந்தரவு செய்கிறீர்கள்''

''வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அந்த சொர்க்கவாசல் எனும் பிரபஞ்சத்தை தாண்டி செல்லும் கதவு திறக்கும், நான் தயார் ஆகிவிட்டேன், அதுதான் உன்னை உடன் அழைத்து செல்ல வந்தேன்''

''நான் வரவில்லை, நீங்கள் போய்விட்டு வாருங்கள்''

''அந்த வைகுண்டம் சென்றுவிட்டால் ஆத்மா திரும்பி வர இயலாது, அந்த நாராயணனுடன் ஐக்கியம் ஆகிவிடும். அப்படி செல்ல இயலாத ஆத்மாக்கள் இந்த பிரபஞ்சத்திற்குள் சிக்குண்டு மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கின்றன''

''எனக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத் தெரியாது''

''வானம் ஏறி வைகுண்டம் போக நான் வழி சொல்கிறேன்''

''வேண்டாம்''

''சரி பக்தா, இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவான இந்த உலகம் முடிவில் என்னவாகும்''

''அப்படியே உறைநிலை அடையும்''

''அதுதான் இல்லை, இந்த உலகம் மீண்டும் ஒரு புதிய தொடக்கம் தொடங்கும், இப்படித்தான் இவ்வுலகை படைக்க பிரம்மன், நாராயணன் அமர்ந்து இருக்கும் தாமரை மலரில் சென்று இடம் கேட்பார். ஒரு இயக்கம் முடிந்து, மறு இயக்கம் தொடரும்போது அழித்தலில் இருந்து கொண்டே ஆக்கம் செய்ய இயலாது என்பதை அறிந்த பிரம்மன், நாராயணனிடம் உதவி கோருகிறார். நாராயணன் தனது இருப்பிடம் வருமாறு வைகுண்டத்திற்கு பிரம்மனை வரவழைக்கிறார். பிரம்மன் இப்படித்தான் ஒவ்வொரு யுகம் படைக்கிறார். அதுபோலவே இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவாகும் இந்த பிரபஞ்சமும் இதே மாற்றங்களை கொண்டு அமையும்''

''இந்த பிரபஞ்சம் வைகுண்டத்தில் இருந்து உருவாக்கப்படுவதா, பெருவெடிப்பு கொள்கையா''

''வைகுண்டத்தில் இருந்து நடத்தப்படும் பெருவெடிப்பு கொள்கையும் அதைத் தொடர்ந்த விரிவாக்கமுமே பக்தா, இப்போது வருகிறாயா''

''இல்லை, அழைத்த தூரத்தில்தான் வைகுண்டம் இருக்கும் கதை எனக்குப் போதும்''

''பக்தா, அது ஒரு முட்டாள் அரசரை, ஒரு அறிவாளி மடக்கியது, ஆனால் நாராயணன் ஒளியை விட வேகமாக செல்லக்கூடியவர். இந்த பிரபஞ்சத்தில் அப்பாற்பட்டு இருக்கும் வைகுண்டத்தில் இருந்தே நமது தேவைகளை அவர் அறிய இயலும், அந்த தேவைகளை நிறைவேற்ற அவர் தேரில் வர வேண்டியது இல்லை. எனவே வைகுண்டம் அருகில் எல்லாம் இல்லை''

''ஒளியை விட வேகமாகவா''

''ஆம், இந்த பிரபஞ்சத்தில் பார்க்கும் ஒளி என்றோ வெளியிடப்பட்டது, அது நமக்கு வர பல்லாயிரம் வருடங்கள் ஆகும், ஆனால் நாராயணன் அப்படி அல்ல''

''அப்படிப்பட்ட வைகுண்டம் அடைய பல்லாயிரம் வருடங்கள் ஆகுமே''

''நமது உடலை கிடத்திவிட்டு ஆத்மா ஒளியை விட வேகமாக நாராயணன் நோக்கி செல்லும், சில வினாடிகளில் சென்று அடையும். வருகிறாயா''

''கிருஷ்ணர் தேர் மற்றும் உடலுடன் சென்றதாக தானே மகாபாரதம் குறிக்கிறது''

''கிருஷ்ணரின் உடல் இந்த பஞ்சபூதங்களால் ஆனது அல்ல. தேர் கூட இங்கிருக்கும் பொருளால் ஆனது அல்ல. இந்த பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் வைகுண்டத்தில் பஞ்ச பூதங்களே இல்லை. அங்கிருக்கும் நிலை வேறு, ஆமாம் கிருஷ்ணர் கதை சொன்னாயே, ராமர் கதை தெரியுமா''

''ராமர் என்ன செய்தார்''

''அப்படி கேள் பக்தா, ராமர், தனது மக்கள் அனைவருடன் வைகுண்டம் சென்றார், ஆனால் கிருஷ்ணர் தனது குலம் அழிந்து தான் மட்டுமே சென்றார்''

''அப்படியெனில் நீங்கள் மட்டுமே செல்லுங்கள், நான் வாழும் வரை பூலோக வைகுண்டம் சென்று வருகிறேன் அது போதும்''

எந்திருப்பா, படிக்க புத்தகம் கொடுத்தா தலைக்கு வைச்சா படுப்பே, சீக்கிரமா குளிச்சிட்டு வா கோவிலுக்கு போகலாம், இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி, ஏழு மணிக்கு சொர்க்கவாசல் திறந்திரும். 

சாமியார் சொன்ன சொர்க்கவாசல், வைகுண்டம் விட இந்த கோவில் சொர்க்கவாசல், வைகுண்ட ஏகாதசி எல்லாம் மிகவும் சுகம். எப்படியும் பிரசாதம் தருவார்கள். வேகமாக எழுந்து குளிக்க ஓடினேன். 

Wednesday 1 January 2014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2014

தவறான தகவலை சுமந்து திரியும்
வருட எண்கள்.

உலகம் தோன்றிய முதல் தினம்
இதில் கணக்கில் இல்லை.

தோன்றா பெருமையினை வைத்து சொன்ன
வருடாந்திர கணக்கு.

எல்லா வருடங்களுக்கும் பன்னிரண்டு மாதங்கள்
மட்டுமே வாழ்க்கை.

பன்னிரண்டு முறை மாத பிரசவம்
கொள்ளும் வருடம்.

சென்ற வருடத்தில் விதைத்த விதை
இவ்வருடத்தில் அறுவடைக்கு தயாராகலாம்.

வழக்கம் போலவே எல்லாரும்
வேண்டி செல்கின்றனர்
புது வருடம் புதியவை தர வேண்டுமென -
தாங்கள் பழையவர்கள் என்பதை மறந்து.