Friday 29 October 2010

சிறந்த பதிவர் விருது - 1

நான் பதிவுலகில் இதுவரை பெற்ற விருதுகள் இரண்டு.

முதலில் விதூஷ் அவர்கள் எனது ஆண்டாளுக்கு கல்யாணம் எனும் கதைக்கு கொடுத்த விருது. மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றுதான் சொல்வேன்.

பின்னர் ஸ்டார்ஜன் அவர்கள் கொடுத்த விருது. இந்த இரண்டு விருதுகளையும் பலருடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டதில் சந்தோசமாக இருந்தது.

இவர்கள் கொடுத்த விருதினை மனப்பூர்வமாக பெற்று கொண்டேன். ஆனால் அதை எவரிடமும் பகிர்ந்து தரவேண்டும் எனும் எண்ணமோ, 'போனால் போகுது' என்கிற பாணியில் விருதினை மற்றவர்களிடம் தர வேண்டும் என்கிற எண்ணமோ என்னிடம் எப்போதும் இருந்தது இல்லை.

பொதுவாக விருது என்பது ஒருவரை சிறப்பிக்கவும், கௌரவிக்கவும் தரப்படுவது. இந்த பதிவுலகில் பதிவர்களுக்கு இடையில் தரப்படுகின்ற விருதுதனை கேலி பேசியவர்கள் உண்டு. அதற்கான பதிவுகளை இப்போது தேடி பார்ப்பது அவசியமில்லாத ஒன்றுதான். அதனால் அப்படி சம்பந்தப்பட்ட பதிவுகளை இப்போது விட்டுவிடலாம். மேலும் திறமையானவர்களை கண்டுபிடித்து ஊக்கம் தந்து அவர்களின் எழுத்துகளை மென்மேலும் மெருகுபடுத்திட அவர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் தரும்போது அவர்களின் எழுத்தில் நிச்சயம் தனித்தன்மை வெளிவரும். இந்த விருதெல்லாம் வெறும் கண்துடைப்பு, இந்த விருதுக்கு எல்லாம் நான் எழுதுவது இல்லை என்கிற மனோபாவமும் பலரிடம் உண்டு. இப்பொழுது பிரச்சினை என்னவெனில் 'பிரபலம்' என கருதப்படும் பதிவர்களுக்கு விருதுகள் அவசியமா? 'பிரபலம்' என அவர்கள் கருதப்படுவதால் அவர்கள் எழுதுவது எல்லாமே விருதுக்கு தகுதியானவைகளா? எனும் கேள்விகள் எழத்தான் செய்யும்.

இங்கே தமிழ் பதிவுலகில் எழுதப்படும் பதிவுகள் மிகவும் அதிகம். ஒவ்வொன்றும் தனித்திறமையுடனே எழுதப்படுகின்றன என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனாலும் சில பதிவர்களின் பதிவுகள் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கத்தான் செய்கின்றன.

அப்படி ஒரு நல்ல பதிவு என பார்க்கும்போது அதில் என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை விருது கொடுப்பவர் மட்டுமே நிர்ணயிக்கிறார் எனும்போது சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். எனது பதிவுகளை விட மற்றவரின் பதிவுகள் எந்த விதத்தில் உசத்தி என்கிற மனோபாவம் ஒவ்வொருவரிடமும் எழுவது இயற்கைதான், நாம் மூடி வைக்க நினைத்தாலும் கூட.  அதே வேளையில் தனக்கு பிடித்த, தான் மிகவும் ரசித்த ஒரு பதிவரின் பதிவுகளுக்கு ஒருவர் விருது தருவதில் எந்தவித பாரபட்சமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பதிவுலகை கடந்த இரண்டு வருடங்களாக மட்டுமே கண்காணித்து வருகின்றேன். இந்த பதிவுலகில் நான் படித்த இடுகைகள் அதிகம் பிரச்சினைக்குரியவைகள்தான். அனால் அவையெல்லாம் உலக பிரச்சினைகள் அல்ல, தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைகள். அதன் காரணமாகவே  எரிச்சலூட்டும் தமிழ் பதிவர்கள் என எழுதியது முதற்கொண்டு, பதிவர்களை நண்பர்களாக எப்படி சேர்த்து கொள்வது என்கிற யோசனை வரையிலும் பதிவர்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள் நிறையவே எழுதி இருக்கிறேன். இதன் முழு காரணம் ஒரு விசயத்தில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளும்போது அது சம்பந்தப்பட்ட விசயங்கள் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வது அவசியம். நல்ல விசயங்கள் பற்றி அதிகம் கவலை படத்தேவையில்லை. கெட்ட விசயங்கள் பற்றி நமது முழு கவனமும் இருக்க வேண்டும். அல்லவை நீக்கி நல்லவை நாடுவது; கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பது எல்லாம் மிகவும் சரியே. ஆனால் ஒரு சமூகத்தில் அல்லவைகளை அறவே நீக்காமல் நல்லவைகளை பாதுகாப்பது ஒருபோதும் பயனளிக்காது.

தமிழ்மணம் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது வாசிக்கும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு. இங்கே பாரபட்சம் என்று எதுவும் காண இயலாது என முற்றிலும் ஒதுக்கிவிட இயலாது, அதே வேளையில் இந்த விருது தனிப்பட்ட நபரின் திறமையை அங்கீகரிக்கும் ஒன்றாகத்தான் கருத வேண்டும். பொதுவாகவே சிறுகதை, கவிதை போட்டிகள் நடத்தப்படும்போது 'பிரபலங்கள்' எழுதி இருக்கிறார்கள் எனும் பார்வை வந்துவிடுகிறது என்பதை மறுக்க இயலாது. அதை தவிர்க்கவே தற்போது சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டியில் யார் யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை மறைக்கும் வண்ணம் செயல்படுவதாக போட்டியாளர்கள் அறிவித்து இருந்தார்கள்.

இங்கே நடுவர்களின் அளவு கருவி எது? எழுதப்பட்ட விதமா? கொடுக்கப்பட்ட விசயத்தினை எப்படி உட்கிரகித்து கொண்டார்கள் என ஆய்வு செய்வதா? என்னைப் பொருத்தவரை போட்டி என அறிவித்தல் வந்தவுடன் போட்டி சம்பந்தப்பட்ட கதைகளோ, கவிதைகளோ எங்குமே வெளியிடக்கூடாது என ஒரு அறிவிப்பு தர வேண்டும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அவரவர் அவர்களுடைய தளத்தில் வெளியிட்டு கொள்ளலாம் என்றுதான் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் போட்டியின் தன்மை பாதுகாக்கப்படும். இனிமேல் போட்டிகள் அறிவிப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது என கருதுகிறேன். நடுவர்களுக்கும் மிகவும் எளிதாக இருக்கும்.

பதிவர்களுக்கு விருது வழங்கும்போது பணமுடிச்சு ஏன் வழங்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு அமைப்பு நடத்தும்போது அதற்குரிய வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மணற்கேணி என சிங்கை பதிவர்கள் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு பற்றி இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதிக பணம்  செலவழித்து பதிவர்களுக்கு கௌரவம் தந்த அமைப்பு அது. நிச்சயம் இதுபோன்ற அமைப்புகளுக்கு பதிவர்களின் ஒத்துழைப்பு இருப்பது அவசியம்.

பதிவர்களின் 'ஈகோ' பிரச்சினையால் பதிவுலகம் அவ்வப்போது தள்ளாடத்தான் செய்கிறது. ஆனால் அதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் அற்புதமான பதிவுகளை தந்து கொண்டிருக்கும் பல பதிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் எவருக்கேனும் மாற்று கருத்து இருக்கும் என தெரியவில்லை.

அறிவியல் பதிவுகள், ஆன்மிக பதிவுகள், தொழில்நுட்ப பதிவுகள், மருத்துவ பதிவுகள், சமூக பிரச்சினைகள் சுட்டிக்காட்டும் பதிவுகள், திரைப்படம் சம்பந்தப்பட்ட பதிவுகள், மதம் , இனம் சம்பந்தபட்ட பதிவுகள் என பல்வேறு பதிவுகளில் தனிப்பட்ட நபர்களை தாக்கும் பதிவுகளும் வலம் வருகின்றன. இதில் மிகவும் சுவாரஸ்யமானவை மொக்கை பதிவுகள் என அழைக்கப்படுபவை.

'மொக்கை' பதிவுகள் தான் உங்களுடையது என குற்றம் சாட்டுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். 'மொக்கை மகளிர் சங்கம்' என்கிற அமைப்பும் இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறேன். மொக்கை என்றால் என்ன? என்பதை விளக்கினால் அதுவும் ஒரு மொக்கையாகத்தான் இருக்கும்! நான் மொக்கை பதிவுகள் தான் எழுதுகிறேன், அதற்கென்ன இப்போ என்கிற மனோபாவம் பதிவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவரவருக்கு தெரிந்த விசயத்தை வைத்து வாழ்வில் முன்னேறி வருவது இயல்புதான்.

பின்னூட்டங்கள் பற்றிய பெரும் சச்சரவு உண்டு. யார் யார் எவருக்கு பின்னூட்டம் போடுவது என்பதை பின்னூட்டம் போடுபவர்கள் மட்டுமே தீர்மானிக்க இயலும். நண்பர்கள் சேர்த்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து பின்னூட்டங்கள் பெற இயலும் எனும் பார்வை பலரிடம் இருந்தாலும், ஒரு 'நல்ல' பதிவுக்கு பின்னூட்டம் என்பது அரிது எனும் குற்றச்சாட்டு உண்டு. பொதுவாக ரசிக்கும் மனோபாவம் பொருத்தே ஒவ்வொருவரின் தேவைகளும் பதிவுகளில் விழுகின்றன. பின்னூட்டம் என்பது அவரவர் விருப்பத்துடன் எழுதுவது. எனவே இந்த சர்ச்சை தீராது.

அதிக 'ஹிட்ஸ்' எனும் ஒரு மாயை வேறு உண்டு. 'ஹிட்ஸ்' வாங்கி சமைக்கவா முடியும்? அது ஒரு விளையாட்டு. பிறரை விட நானே பெருமளவில் பார்க்கப்படுகிறேன் என்கிற ஒரு புதிர். அதிலும் பதிவுகள் எழுதி 'கல்லா கட்டுகிறார்கள்' எனும் குற்றச்சாட்டு உண்டு. 'கல்லா கட்டி' சேர்த்து வைத்து சென்னையிலோ, லண்டனிலோ, சிங்கப்பூரிலோ அரண்மனையா கட்ட இயலும். அதே போல வாக்குகள் பற்றியும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதையெல்லாம் ஒரு விளையாட்டாக கருதி புறந்தள்ளிவிட வேண்டும்.

நமக்கு முக்கியம், உண்மையான , நேர்மையான சமூக அக்கறையுடைய பதிவர்கள் மென்மேலும் வளரவேண்டும், அவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்கள் எழுத்தில் மட்டுமில்லாது சமூகத்திலும் இணைந்து தொண்டாற்ற வேண்டும்.

சிறந்த பதிவர் விருது யாருக்கு வழங்குவது? நான் பல பதிவுகளை படித்து கொண்டே வருகிறேன். பலர் பிரமிக்க வைக்கிறார்கள். பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இனியும் வாசித்து கொண்டே வருவேன்.

முதன் முதலில் வாசித்ததும் இந்த பதிவுக்கு நிச்சயம் விருது வழங்க வேண்டும் என இந்த வருடம் ஜனவரி மாதம் மனதில் நினைத்து இருந்தேன். இதோ பத்து மாதங்கள் ஓடிவிட்டன. அந்த பதிவரால் எழுதப்படும் ஒவ்வொரு பதிவும் எத்தனை அருமையாக இருக்கின்றன என நினைத்து பார்க்கும்போது மனதில் திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட பதிவருக்கு விருது வழங்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இருக்கிறதா என்பதை அவரே தீர்மானித்து கொள்ளட்டும். அந்த விருதினை, எந்த பிரிவின் கீழ் வழங்குகிறேன் என ,  மற்றொரு  பதிவில் அறிவிக்கின்றேன். அந்த விருதினை தொடர்ந்து சில விருதுகள் மற்ற பதிவர்களுக்கும் தொடர்ந்து வழங்குவதாக இருக்கின்றேன்.

விருதுகள் பெற்றுக் கொள்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ, இல்லையோ விருதினை வழங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

(தொடரும்)

Thursday 28 October 2010

எனக்கேற்ற நண்பரை காணேன்

கடலை உணர்ச்சிகள் 

மனைவியின் பிரசவ வலி என அறிந்ததும் சொல்லிக் கொள்ளாமல் எப்படி போவது என தெரியவில்லை. என்ன விசயம் என்றே கேட்டாள் மணப்பெண். எனது மனைவிக்கு பிரசவ வலி, மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்றேன். உடனே அவளை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த மனிதர் தம்பி இங்கே வா என ஒருவனை நோக்கி அழைத்தார். இந்த சாரை நம்ம காருல நீ அவர் சொல்ற இடத்தில இறக்கிவிட்டுட்டு ஏதும் பிரச்சினையில்லைன்னு தெரிஞ்ச பிறகு இங்க வா என்றார். அந்த பையனும் சரி சார் என தலையாட்டினான்.

கிளம்புங்க சார் என்றார் அந்த மனிதர். மணப்பெண் 'ஒன்னும் ஆகாது கவலைபடாதீங்க. என்னை மாதிரி பொண்ணுதான் பிறந்து இருக்கும், என்னோட பெயரை வைங்க' என்றாள். எனது மனதின் வலி இன்னும் அதிகரித்தது. 'என்னை மன்னித்துவிடுங்கள், நானும் எனது மாமாவுடன் போக வேண்டும்' என ஆங்கிலத்தில் சொன்ன எனது மாமா மகள் என்னுடன் வர தயாரானாள். 'நீ இருந்துட்டு வாயேன்' என்று எனது பரிசு பொருளை அவளிடம் திணிக்க எத்தனித்தேன். அதற்குள் சார் நீங்க போய்ட்டு வாங்க என அருகில் இருந்தவர்கள் பரிசு பொருளை என்னிடமிருந்தும், எனது மாமா மகளிடமிருந்தும் பெற்று கொண்டார்கள்.

காரினை வேகுவேகமாக ஓட்டினான் அவன். சரியாக முப்பது நிமிடங்களுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். இன்னும் திருமணம் நடந்து இருக்காது என கணித்த நான், தம்பி நீ மண்டபத்துக்கு போ என அனுப்பிவிட்டேன். அவனும் தயங்கினான். நான் சார்கிட்ட பேசிக்கிறேன், எந்த பிரச்சினையும் இல்லை என சொன்னேன். அவன் சென்றுவிட்டான். எனக்காக காத்திருந்தவர் போல என் தந்தை மருத்துவமனை வெளியில் நின்று கொண்டிருந்தார்.

வேகமாக பிரசவ அறைக்கு சென்றேன். நான் செல்லவும் மருத்துவர் வெளியே வரவும் சரியாக இருந்தது. மகாலட்சுமி பொறந்திருக்கா என மருத்துவர் சொல்லி சென்றது எனது காதில் விழுந்தது. மனதில் அதிக பயம் வந்து சேர்ந்தது. சரஸ்வதி என்றோ, வீரலட்சுமி என்றோ எதற்கு இந்த மருத்துவர் சொல்லவில்லை என மனதில் குடைந்து கொண்டிருக்கும்போதே 'மாமா, பொண்ணு பிறந்தா அவளோட பெயரைத்தான் வைப்பீங்களா' என காரில் வரும்போது எனது மாமா மகள் கேட்டது காதில் ஒலித்தது.

அங்கிருந்த பாட்டி 'பொட்ட புள்ளைய பெத்துட்டு என்ன பகுமானம் வேண்டி கிடக்கு' என முகத்தை சிலுப்பி கொண்டார். ஆனால் என் அம்மா பேத்திதான் வேண்டும் என வேண்டி கொண்டாராம். எனக்கோ என்னுடன் வேலை பார்த்த மணப்பெண் மனதில் பயமுறுத்தினாள். என்னைப் போலவே உன் பொண்ணும் கஷ்டப்படுவா பாரு என சபிப்பது போல இருந்தது.

அந்த பிரச்சினையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தாயும் சேயும் நலம் என அறிந்து மகிழ்ந்தேன். சுகப்பிரசவம் என்பதால் அன்றே செல்லலாம் என மருத்துவர் சொல்லி இருந்தார்கள். மனைவியிடம் என்ன பெயர் வைப்பது என அப்போதே கேட்டேன். வைக்கலாம் என அசதியுடன் சொன்னார். அது என்ன பேரு, வைக்கலாம் என கேட்டு வைத்தேன். அனைவரும் சிரித்தார்கள். எனக்கு பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டது போன்று ஒரு மகிழ்ச்சி.

மதிய வேளை நெருங்கி கொண்டிருக்க மணப்பெண் தனது கணவர் மற்றும் சிலருடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டாள். வாங்க என வரவேற்ற எனது காலில் அவர்கள் இருவரும் விழுந்து வணங்கியபோது நான் துடிதுடித்து போனேன். பொண்ணுக்கு என் பேருதானே வைச்சீங்க என குழந்தையை லாவகமாக தூக்கி அவளது பெயரை எனது மகளின் காதில் மூன்று முறை சொன்னாள்.

தம்பி என்றார் அந்த பெண்ணின் கணவர். கையில் நிறைய பரிசு பொருட்கள். எல்லாம் இந்த குழந்தைக்கு வாங்கி வந்தோம் என அவர்கள் அந்த பரிசு பொருட்களை அடுக்கியபோது அவளை கட்டிப்பிடித்து அழ வேண்டும் போலிருந்தது.

முதன் முதலில், நீ ஒரு ஆணாக பிறந்து இருக்கக் கூடாதா, குறைந்த பட்சம் நான் ஒரு பொண்ணாக பிறந்து இருக்கக் கூடாதா என அவளிடம் சொல்லி கதற வேண்டும் போலிருந்தது.

நாங்கள் கிளம்பும்வரை அங்கேயேதான் இருந்தார்கள். மருத்துவமனையிலிருந்து அனைவரும் கிளம்பி செல்லும்போது அவள் என்னிடம் வந்து பெயரை மாத்தி வைச்சிராதீங்க, ப்ளீஸ் என்றாள். நான் பதில் சொல்லும் முன்னரே, இந்த பெயர் நல்லா இருக்கு, மாத்தி எல்லாம் வைக்கமாட்டோம் என எனது மனைவி சொன்னதும் எனக்கேற்ற நண்பரை காணேன் என இனிமேல் ஒருபோதும் சொல்லமாட்டேன் என மனதில் உறுதி கொண்டேன்.

(தொடரும்)

அடியார்க்கெல்லாம் அடியார் - 30

வைஷ்ணவி தனது பெற்றோர்களை மறுதினமே ஊருக்கு அனுப்பிவிட்டாள். சில தினம் பின்னர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றவள் மிகுந்த சந்தோசத்துடன் மாலை நேரம் இனிப்புகளை வாங்கிக்கொண்டு ஈஸ்வரியின் வீட்டில் கொடுத்துவிட்டு கதிரேசன் வீட்டிற்கு வந்தாள். அந்த சில நாட்களும் ஈஸ்வரியின் வீட்டில்தான் வைஷ்ணவி தங்கி இருந்தாள்.

''ஸ்வீட் எடுத்துக்கோ? எனக்கு வேலை கிடைச்சிருச்சி'' என ஈஸ்வரியிடம் தந்தாள் வைஷ்ணவி. ''வாழ்த்துகள்'' எனச் சொல்லிக்கொண்டு இனிப்புகள் எடுத்துக் கொண்டாள் ஈஸ்வரி. வெளியே சென்றிருந்த செல்லாயி வந்ததும் அவரிடமும் இனிப்புகள் தந்தாள் வைஷ்ணவி. அவரும் வாழ்த்தினார். காபி போட்டு வருவதாகச் சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் வரட்டும் என சொன்னாள் வைஷ்ணவி. கதிரேசன் வரும் வரை ஈஸ்வரியுடன் பேசிக்கொண்டிருந்தாள். கதிரேசன் பற்றியும் மதுசூதனன் பற்றியும் பேச்சு வந்தது. 

''எப்படியெல்லாம் நம்மை ஒருத்தர் இருக்கனும்னு நினைக்கிறாரோ, அவரை நாம எதிர்பார்க்கிறமாதிரி இருக்க வைச்சிரனும் அதுதான் அன்போட வெற்றி. நான் மட்டும் கொஞ்சம் அசந்திருந்தா இவர் என்னை கல்யாணம் பண்ணியிருக்கவே மாட்டார், இவரை என்னைத் தேடிவர வைச்சேன். நீ இப்படி இங்க வேலைப் பார்த்தா மதுசூதனன் எப்படி உன்னைத் தேடி வருவார், உனக்கும் அவருக்கும் எப்படி அந்நியோன்யம் உருவாகும். எண்ணங்களால் காதலிக்கிறது எல்லாம் கற்பனைகாலக் காதல், இப்ப எல்லாம் உடல் ஸ்பரிசமும் வேணும்'' என்றாள் ஈஸ்வரி. 

''பார்க்கலாம்'' என வைஷ்ணவி சொல்லும்போதே கதிரேசன் உள்ளே நுழைந்தான். கதிரேசனை கண்ட சந்தோசத்தில் ''எனக்கு வேலை கிடைச்சிருச்சி கதிரேசா, இந்தா ஸ்வீட்'' என எடுத்துத் தந்தாள் வைஷ்ணவி. 

''வாழ்த்துகள், நன்றி'' என இனிப்பு எடுத்துக் கொண்டான் கதிரேசன். கை கால்கள் முகம் அலம்பிவிட்டு வந்து அமர்ந்தான். ஈஸ்வரி காபி போடச் சென்றாள். ''நிறைய கேள்வி கேட்டாங்க. எம் டி ஒரே கேள்விதான் கேட்டார்'' என்றாள் வைஷ்ணவி. ''ஓ என்ன கேட்டார்'' என்றான் கதிரேசன். ''சென்னை, பெங்களூருனு போகாம ஏன்மா இங்க வந்திருக்கனு கேட்டார்?, அதுக்கு நான் இப்படி நகரத்தையே முன்னேத்திக்கிட்டே இருந்தா இந்த ஊரு எல்லாம் எப்ப முன்னேறுரதுனு சொன்னேன், அந்த பதில் பிடிச்சி இருக்குமோ என்னவோ?'' என்றாள் வைஷ்ணவி. 

''நீ சங்கரன்கோவிலை முன்னேத்த வந்தியாக்கும்?'' என சிரித்தான் கதிரேசன். வைஷ்ணவி உடன் சிரித்தாள். ''உண்மையிலேயே நீ எதுக்கு இந்த ஊருக்கு வந்தேனு எனக்குத் தெரியும், அப்பா அம்மாட்ட சொல்லிட்டியா?'' என்றான் கதிரேசன். ''ம் ஃபோன் போட்டு சொல்லிட்டேன், ரொம்ப சந்தோசப்பட்டாங்க, நான் ஹாஸ்டலுல தங்கிக்கிறப் போறேன், ரொம்ப நாள் ஈஸ்வரி வீட்டுல தங்க முடியாது கதிரேசா'' என்றாள் வைஷ்ணவி. ''எங்களோட தங்கிக்கோ'' என்றான் கதிரேசன். ''ம் அதெல்லாம் சரிப்பட்டு வராது, நான் ஹாஸ்டலுக்கேப் போறேன்'' என சொல்லும்போதே காபியுடன் வந்தாள் ஈஸ்வரி. 

''இங்கேயே தங்கலாமே, அத்தையோட ரூமுக்குப் பக்கத்தில ஒரு ரூம் இருக்கு'' என்றாள் ஈஸ்வரி. செல்லாயியும் சம்மதம் சொன்னார். ஆனால் வைஷ்ணவி மறுத்துவிட்டாள். ஈஸ்வரி வைஷ்ணவியை தங்கச் சொல்லி மிகவும் வற்புறுத்தினாள். கதிரேசனிடமும் சொன்னாள். ஆனால் வைஷ்ணவி வேண்டாம் என சொல்லிவிட்டு மகளிர் விடுதி ஒன்றில் அன்றே இடம் பார்த்தாள்.

அன்று இரவு ஈஸ்வரி கதிரேசனிடம் வைஷ்ணவி இங்கு வேலை பார்க்க வர காரணம் என்ன என கேட்டாள். ''வைஷ்ணவி மதுசூதனனை விட்டு சற்றுத் தள்ளி சென்றுவிடலாம் என நினைத்துத்தான் இங்கே வந்திருக்கக்கூடும், சென்னை, பெங்களூர் எனும் நகரமெனில் அவனும் அங்கே வேலைக்குச் செல்ல வாய்ப்பு உண்டு, இங்கே அவன் வர வாய்ப்பில்லை என்பதால் இருக்கும்'' என சொன்னான். 

''அருகில் இருந்தும் நான் தள்ளியேதானே இருக்கிறேன்'' என்றாள் ஈஸ்வரி. ''சிவனே! சற்று பொறுத்துக்கொள்'' என்றான் கதிரேசன். ''இன்னும் எத்தனை நாட்களுக்கு?'' என்றாள் ஈஸ்வரி. ''என் மனம் சிவனை உட்கிரகித்துக் கொள்ளும் வரை'' எனச் சொன்னான் கதிரேசன். ''என் சீவன் அகலும் முன்னர் நடந்துவிடும் அல்லவா ஈசனே'' எனச் சொல்லிச் சிரித்தாள் ஈஸ்வரி. ''கோபம் இல்லையா?'' என்றான் கதிரேசன். ''கோபமா?, அன்பில் இடைபுகுமோ கோபம்'' என கதிரேசனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

''ஏமாத்துறேனு நினைக்கிறியா, உன்னோட குடும்பம் நடத்துவேனு சொல்லிட்டு...'' என கதிரேசன் சொல்லும்போதே ''செய்ற செயலை தப்பா சரியானு யோசிச்சிட்டே செய்ய வேணாம், இப்போதைக்கு இப்படி எண்ணம் இருக்கறப்ப அப்படியே இருக்கட்டும்'' என இடைமறித்துச் சொன்னவள் ''தனியாப் போய் படுனு என்னை சொல்லலையே'' என்றாள். ''இவ்வளவு புரிஞ்சி வைச்சிருக்க'' என்றான் கதிரேசன். ''இருபக்கமும் புரிதல் இருக்கனுமே'' என கண் சிமிட்டினாள். கதிரேசன் சிரித்தான். 

காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்தான் கதிரேசன். ஈஸ்வரியும் உடன் அமர்ந்தாள். கதிரேசன் பாடினான்.

''உன்னை அருகில் வைத்துக் கொண்டே இல்லையென
கண்ணை மூடியிருத்தல் சுகம் தருமோ ஈசனே
உயிரால் உணர்வால் எனக்காகிய இவள் வாழ்க்கை
வயிறும் காணுமோ சொல்சிவனே''

பூஜை முடிந்ததும் சாப்பிட்டான் கதிரேசன். அலுவலகத்திற்குக் கிளம்பும் முன்னர் கதிரேசனிடம் ஈஸ்வரி சொன்னாள். ''இனி சிவன்கிட்ட பாடறப்ப, மாயமும் மந்திரமும் தராது, தாயத்தும் வழியும் சொல்லாது, உன் தாரம் தானாய் உருவாக்கிய பிள்ளையார் போல் என் தாரமும் ஒரு பிள்ளையை தானாக உருவாக்குவாரோ சொல்சிவனேனு கேட்கலாமே'' என்றாள் ஈஸ்வரி. ''மனசுக்குள்ள வெறுப்பு உருவாகுதுல்ல'' என்றான் கதிரேசன். ''எப்பவுமே அதுக்கு நான் இடம் தரமாட்டேன், என்னோட விருப்பத்தையும் கேட்கச் சொன்னேன், வெறுப்பை வளர்க்கிறோமோ என நினைக்கிறிங்களோ'' என்றாள் ஈஸ்வரி. இல்லை என தலையாட்டிவிட்டு நடந்தான் கதிரேசன். 

''எப்பதான் அவனுக்கு சிவன் பைத்தியம் தெளியுமோ?'' என்றார் செல்லாயி. ''என்ன அத்தை?, அதெல்லாம் தெளிஞ்சிதானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம்'' என்றாள் ஈஸ்வரி. ''நானும் ஒரு பொண்ணும்மா'' என்றார் செல்லாயி. ''அத்தை நான் பக்கத்து ஸ்கூல டீச்சரா வேலைக்கு சேரப் போறேன், ஸ்கூல் அப்பாவோட பிரெண்டோடது. அவர் முன்னமே சொல்லிட்டு இருப்பார், படிச்சி என் ஸ்கூலுக்குத்தான் வேலைக்கு வரனும்னு'' என்றாள் ஈஸ்வரி. ''ம் சரிம்மா'' என்றார் செல்லாயி. 

ஈஸ்வரி கதிரேசனிடம் அன்று மாலையில் பள்ளி வேலை விசயத்தைக் கூறினாள். கதிரேசனும் சரியென சொன்னான். அன்று மாலை வைஷ்ணவி கதிரேசனின் வீட்டுக்கு வந்தாள். 'கதிரேசனிடம் ''மதுசூதனன் ஃபோன் பண்ணினான்'' என்றாள் வைஷ்ணவி. ''என்ன விசயம்?'' என்றான் கதிரேசன். ''அவனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சாம்'' என்றவளின் கண்கள் கலங்கியிருந்தது. ''உட்கார்'' என சொன்னவன் ''ஈஸ்வரி இங்கே வா'' என்றான். 



(தொடரும்) 

Wednesday 27 October 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6

கொச்சின் என அறிவிப்புதனை பார்த்ததும் கொச்சின் செல்லலாம் என மனதில் எண்ணம் ஓடியது. நண்பரிடம் கேட்டேன். 'அதெல்லாம் போலாம் சார்' என்றார். 'உங்களுக்கு வாகனம் ஓட்டுவது சிரமம் எனில் என்னிடம் சொல்லுங்கள், நான் வாகனம் ஓட்டுகிறேன்' என நண்பரிடம் சொல்லி வைத்தேன். அதெல்லாம் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டார். நானும் மனதில் நிம்மதி அடைந்தேன். எனக்கு இந்தியாவில் வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் மலைப்பாகவே இருக்கிறது.

கொச்சின் என்றதும் எனது மனைவி அங்கு படகு வீடு இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் அங்கு தங்கலாம் என சொல்லிவிட சரி என கொச்சின் பயணித்தோம். மலைகளும் அதை மூடியிருந்த தேயிலை தோட்டங்களும் என பச்சை பசேலென இருந்தது. பனி மூட்டத்தினால் பாதையே சரியாக தெரியவில்லை. அந்த மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மனிதர்களின் தைரியத்தை பாராட்ட தோன்றியது. மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

கோயமுத்தூரில் இருந்து எனது பாவா நாங்கள் மூணாறு சென்றோமா இல்லையா என்பதை அறியவே இல்லை. அவர் எங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது நாங்கள் தொடர்பில் இல்லை. அவரையும் தொடர்பு கொள்ளவில்லை. சரியென ஓரிடத்தில் தேநீர் அருந்த வாகனத்தை நிறுத்தினோம். அங்கே இருந்த தொலைபேசி மூலம் பாவாவிடம் தகவல் சொன்னபிறகே நிம்மதியானார். அதற்குள் எனது சகோதரன் மகன் சீனிக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க சொல்லி இருக்கிறார். அவனும் முயன்று பின்னர் தகவல் பெற இயலாது போனதை அறிந்து கொண்டேன். நாங்கள் கொச்சின் செல்கிறோம் என சொன்னதும் 'அட எப்படி பாவா இப்படி திடீர் திடீர்னு பயணம் போறீங்க, அதான் நல்லது என' அவர் பாணியிலே சொன்னதோடு கொச்சினில் ராஜேஷ் எனும் உறவுக்கார பையன் இருப்பதாகவும் அங்கு சென்று விசாரித்து இடங்களை சுற்றி பார்க்க சொன்னார்.

நல்லது என பல தூரம் கடந்த பின்னர் செல்பேசி இணைப்பு வந்தது. ராஜேஷிடம் தொடர்பு கொண்டால் தான் ஊருக்கு சென்று இருப்பதாக தகவல் சொன்னான். சரி என சீனியிடம் படகு வீடு விசாரித்தோம். 'என்ன சித்தப்பா இப்ப சொல்றீங்க' என தகவல் சேகரித்து அனுப்புவதாக சொன்னான். பயணித்து கொண்டே இருந்தோம். அவனிடம் இருந்து தகவல் வந்தது. பயமும் வந்தது.

ஆலப்புழா அல்லது குமரகோம் போக வேண்டும் என சொன்னான். அந்த வழியை கடந்துவிட்டோமே என நினைத்தேன். கொச்சினில் படகு வீடு இல்லை என திட்டவட்டமாக சொன்னவன் ஓணம் பண்டிகையின் பொருட்டு படகு வீடு கிடைப்பதே கடினம் என பயமுறுத்தினான். ஆனால் அதே வேளையில் எங்களை ஆலப்புழா போக சொன்னான். ஆலப்புழா போய்கொண்டே இருங்கள் அதற்குள் ஏதாவது பண்ணுகிறேன் என முடிவு சொன்னான்.

கொச்சினில் நுழைந்து கோட்டயம் வழி மாறி சென்று பின்னர் திரும்பி ஆலப்புழா சாலை அடைந்தபோது அப்பாடா என இருந்தது. நண்பர் நன்றாகவே வாகனம் ஓட்டினார். எந்த படபடப்பும் இல்லை. நிதானமாகவே இருந்தார். அதே நம்பிக்கையான வார்த்தைகள். அதெல்லாம் கரெக்டா போயிரலாம் சார்' மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் தன்னம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆலப்புழா சாலை அடைந்த மறு நிமிடம் சீனியிடம் இருந்து அழைப்பு. 'சித்தப்பா நேராக ஆலப்புழா போங்க, அங்கே தாமஸ் என்பவர் இருக்கிறார். ஒரு படுக்கை அறை உடைய படகு வீடு தயார் என்றான். இரண்டு படுக்கை அறை படகு வீடு இருந்தால் அனைவரும் செல்வது எளிது என்றேன். இரண்டு படுக்கை அறை இல்லை என்றான். தாமஸ் என்பவரின் எண் தந்து பேச சொன்னான். நானும் தாமஸ் என்பவரிடம் பேசினேன். இரண்டு படுக்கை அறை உடைய படகு வீடு தயார், அதற்கு ஐநூறு ரூபாய் மட்டுமே அதிகம் செலுத்த சொன்னார். மொத்த தொகை எட்டாயிரம் மட்டுமே. யார் இந்த தாமஸ். எப்படி இவர் கிடைத்தார்.

சீனி இணையதளத்தின் மூலம் தேடியபோது கிடைத்த நபர் தான் இவர். எந்த அறிமுகமும் இல்லை. அதுவும் ஒரு இரவு ஒரு படகு தனில் சென்று தங்க போகிறோம். நாங்கள் நால்வர் மட்டுமே. மனதில் பயம் இருந்தது. ஏமாற்றபட்டு விடுவோமோ எனும் அச்சம் இருந்தது. இருப்பினும் எது நடந்தாலும் பரவாயில்லை என துணிச்சலுடன்  நம்பிக்கையுடன் சென்றோம்.

சாலை வழிதனை தாமஸ் அவ்வப்போது சொல்லிக் கொண்டே வந்தார். நாங்கள் அவர் சொன்ன இடம் சென்றபோது மாலை மணி ஆறு. சாதாரணமாக படகு மதியம் பன்னிரண்டு மணிக்கே கிளம்பிவிடும். மாலை ஆகிவிட்டால் படகு தனை செலுத்த மாட்டார்கள். எங்களுக்காக ஒரு படகு காத்து கொண்டிருந்தது. ஆனால் தாமஸ் என்பவர் அங்கு இல்லை.

வேறு ஒருவர் வந்தார். எனது பெயரை குறிப்பிட்டார். வாருங்கள் என அலுவலகம் அழைத்து சென்றார். தாமஸ் உங்களுக்காக பதிவு செய்து இருக்கிறார், அவர் என்னுடைய நண்பர்தான் என பணம் தனை பெற்றுக் கொண்டார். எங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு படகினில் ஏறிக்கொண்டோம். எங்களுடன் மூன்று நபர்கள் வந்தார்கள். அதில் ஒருவர் சமையல் செய்பவர், மற்ற இருவர் படகு செலுத்துபவர்கள்.

நன்றாக பேசினார்கள். அதில் ஒருவர் எங்களது சொந்த விசயங்களை பற்றி கேட்டு கொண்டே வந்தார். நாமாக நமது விசயங்களை சொல்லும்போது வராத எரிச்சல் பிறர் கேட்டு சொல்லும்போது தானாக எட்டி பார்த்துவிடுகிறது. சிரித்து கொண்டு கலகலப்பாக பேசினார். முதலில் சொல்ல வேண்டாம் என நினைத்தாலும் எதற்கு பொய் சொல்ல வேண்டும் என எல்லா உண்மைகளையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அவரும் அவருடைய விபரங்களை பகிர்ந்து கொண்டார். மற்ற இருவரும் நன்றாக பேசினார்கள். எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

இரவு உணவு சமைத்து கொடுத்தார்கள். மிகவும் பிடித்து இருந்தது. பொதுவாக இரவு பயணிக்க மாட்டோம் என சொன்னவர்கள் எங்களுக்காக படகு எடுத்து வருவதாக சொல்லி படகை மற்றொருபுறத்தில் நிறுத்தியபோது இரவு எட்டு மணி. பம்பை நதியில் தான் பயணம். கரையில் இருபுறங்களிலும் வீடுகள். நிறுத்திய இடத்தில் கூட பல வீடுகள் இருந்தன. எவரேனும் வந்து விடமாட்டார்களா என கேட்டபோது அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார்கள். இரவு நிம்மதியாக உறங்கினோம் எனலாம். குளிரூட்டப்பட்ட அறை. தொலைகாட்சி என சகல வசதிகளுடன் படகு வீடு இருந்தது.

அதிகாலை கிளம்பி, கிளம்பிய இடத்திற்கே வந்தோம். வரும் வழியில் பார்த்த காட்சிகள் எழில்மிகு காட்சிகள். மரங்கள், வீடுகள் மனிதர்கள் என ரம்மியமாக இருந்தது. வீடுகளின் அமைப்பு எங்கள் வீட்டினை நினைவில் கொண்டு வந்தது. படகுகளில் மூலமே பயணம் செய்கிறார்கள். சாலை போக்குவரத்து கிடையாதாம். அங்கங்கே படகு நிற்க இடம். சொந்த படகும் வைத்திருப்பவர்கள் உண்டு. காலை பத்து மணிக்கு ஆலப்புழாவில் இருந்து கிளம்பினோம்.

கம்பம் செல்ல வேண்டும் என வண்டி பெரியார், குமுளி என மலைகளும், மழை துளிகளும் என அழகிய பயணம். கேரளா குமுளி கடந்து தமிழ்நாடு என எல்லையில் வைத்தபோது மனம் வறண்டு போனது. எழில் தொலைத்த தமிழகம்.

படங்கள் எல்லாம் பின்னர் இணைக்கிறேன். :)

(தொடரும்)

Tuesday 26 October 2010

தேடிக்கொண்ட விசயங்கள் - 3

3. உலக உயிரினங்கள் ஒரு பார்வை

'உலகில் தோன்றும் உயிரினங்கள், இயற்கையின் சூழலுக்கேற்ப, செயற்கைத்தனமான வாழ்வியலுக்கேற்ப, தம்மில் மாற்றம் கொள்வதோடு, தம்மை மாற்றியமைத்துக் கொண்டு வாழும் பழக்கத்தை எடுத்துக்கொள்வது மட்டுமில்லாது, அந்த வெற்றிகரமான காரணிகளை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் தம்மை உலகில் நிலைநிறுத்திக் கொள்கின்றன'

உயிரினங்கள் எப்படி தோன்றியது? உயிரினங்கள் எவரால் படைக்கப்பட்டது? 'படைப்பு கொள்கை' 'சுயம்பு கொள்கை' என இரண்டு வகைகள் இருக்கின்றன என வைத்து கொண்டாலும், படைக்கப்பட்டதோ, தோன்றியதோ அது எப்போது எனும் வினாவிற்கான விடைகள் தெளிவாக இல்லை என்பதுதான் உண்மை.

உலகம் தோன்றியது எப்போது? வேதம் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அறிவியல் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அல்லது நானாக ஒரு புதுக் கணக்கு எழுதுவதா? என யோசித்துக் கொண்டிருக்குபோது எல்லாமே ஒருவிதத்தில் பொய் கணக்கு என்றுதான் தோன்றுகிறது.

உலகில் தற்போதுள்ள ஜீவராசி வகைகள் பதினேழு லட்சங்கள் என அறிவியல் அறிஞர்கள் அறிவித்து இருக்கிறார்கள். அதில்

முதுகெலும்புள்ள விலங்கினங்கள் வகை  62,305,
முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகை 1, 305, 250.
தாவர இன வகைகள் 321,212
 காளான் வகை, பாசி வகை என 51,563.

பூச்சிகள் மட்டும் ஒரு லட்சம் முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகையில் அடக்கமாம். பாலூட்டி வகைகள் வெறும் 5490 மட்டுமே.

இந்த கணக்கெடுப்பில் ஆடுகள், ஒட்டகங்கள், பாக்டீரியாக்கள் போன்றவை கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என அந்த அறிவிப்பில் உள்ளது. தற்போது பூமியில் இல்லாது போன மறைந்த ஜீவராசி வகைகள் 300, ௦௦௦ என அறியப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எல்லா ஜீவராசி வகைகள் சேர்த்தால் 3,000,000 லிருந்து 10,000,000 அல்லது 50,000,000 இருக்கலாம் என கருதப்படுகிறது.

மறைந்து போன ஜீவராசிகள் எத்தனை என்பதை அறுதியிட்டு கூற இயலாத நிலையும், திடீர் திடீரென புது வகையான ஜீவராசிகள் உருவாவதும் என இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நமது சூரியக் குடும்பம் தோன்றிய வருடங்களில் முதல் ஒன்றரை பில்லியன் வருடங்கள் மட்டுமே பூமியில் உயிரினங்கள் இல்லை எனவும் அதற்கு பின்னர் பாக்டீரியா தோன்றிவிட்டது என வெளியிடப்படும் அறிவியல் கணக்கெடுப்புகள் ஆச்சர்யம் அளிக்கின்றன. மூன்றரை பில்லியன் வருடங்களாக பாக்டீரியாக்கள் நமது பூமியில் நிலை கொண்டுவிட்டது. நமது மனித இனத்துடன் ஒட்டிய இனம் தோன்றி தற்போது ஏழு மில்லியன் வருடங்கள் (7,000,000) என்பது கணிப்பு.

இதில் எத்தனைவிதமான மாற்றங்கள்? பூமியில் ஏற்பட்ட வேறுபாடுகள்தான் எத்தனை? இருப்பினும் ஜீவராசிகள் பூமியில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள போராடி கொண்டே இருக்கின்றன. ஒரு ஜீவராசி வகை அழிந்தாலும், வேறொரு வகையில் ஜீவராசி தோன்றுவதும், நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதும் 'படைப்பு கொள்கையை' காற்றில் பஞ்சாக பறந்துவிட செய்கிறது.

அதே வேளையில் ஒரு செல் உயிரினம் பூமியில் மட்டும் தோன்ற வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல் உயிரினங்கள் தோன்றியதன் மர்மம் யாது? அறிவியல் இதனை இயற்கை தேர்வு விதி என்கிறது. பூமியில் மட்டுமே உயிரினம் தோன்ற இந்த சூழல் எனில் பிற கிரகங்களில் அந்த சூழல்தனை பயன்படுத்தி இயற்கை எதற்கு உயிரினத்தை உருவாக்கி கொள்ளவில்லை எனும் கேள்விக்கான பதில் இயற்கை தேர்வு விதியில் ஒரு விதிவிலக்காகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சந்ததியை உருவாக்கிட பாலூட்டி வகைகள் எடுத்து கொள்ளும் கால கட்டங்கள்  அதிகம். அதிலும் குறிப்பாக யானைகள் 660 நாட்களும், மனிதர்கள் சுமார் 270 நாட்களும் எடுத்துக் கொள்கின்றன. பூனைகளும் நாய்களும் முறையே 62 நாட்கள், 65 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பன்றிகள் 115 நாட்கள், ஆடுகள் 145 நாட்கள், பசுக்கள் 283 நாட்கள், குதிரைகள் 336 நாட்கள், சிங்கங்கள் 108 நாட்கள், முயல்கள் 33 நாட்கள் என பல வேறுபாடுகள் இருப்பதை காணலாம்.

இப்படிப்பட்ட பல வித்தியாசங்கள் உள்ளடக்கிய உயிரினங்களில் உள்ள ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருப்பதுதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொது மூலம் ஒன்று உண்டு என்பது அறிவியலின் தீர்மானம். உதாரணத்திற்கு சிம்பன்சி எனப்படும் குரங்கின வகையும், மனித வகையும் ஒரு பொது உயிரினத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றுதான் தற்போது கருதப்படுகிறது. குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை என்பது அறிவியலின் தீர்க்கமான ஒரு முடிவு.

இத்தகைய எண்ணங்கள் தோன்றிட உதவிய  மரபணுக்கள் பற்றி அடுத்த தேடலை தொடர்வோம், அதோடு இன்னும் உயிரினங்களில் அதிக பார்வையை செலுத்துவோம்.

(தொடரும்)


.

நுனிப்புல் பாகம் 2 (20)

திருமால் திரும்பினார் 

விஷ்ணுப்பிரியன் கலக்கத்துடன் திருமாலையும் வாசனையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். சிரிப்பொலி சட்டென நின்றது. விஷ்ணுப்பிரியன் அங்கிருந்து கோவில் உள்ளே செல்லாமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். திருமால் விஷ்ணுப்பிரியனை அழைத்தார். ஆனால் விஷ்ணுப்பிரியன் காதில் வாங்கிக் கொள்ளாது நடந்தார். வாசன் விஷ்ணுப்பிரியனை பின் தொடர்ந்து சென்று அவரது கையைப் பிடித்து அழைத்து வந்தான். விஷ்ணுப்பிரியனின் கையைப் பிடித்தபோது அவரது நடுக்கத்தை இவன் உணர்ந்தான். கோவிலுக்குள் செல்லாமல் கோவிலின் பக்கவாட்டிற்கு திருமால் அவர்களை அழைத்துச் சென்றார். 

திருமால் விஷ்ணுப்பிரியனின் சுருக்கமாக பெருமாள் தாத்தா சொன்ன விசயங்களைச் சொன்னார். அதைக் கேட்ட விஷ்ணுப்பிரியன் மிகவும் மனம் கலங்கினார். அந்த வேளைப் பார்த்து பார்த்தசாரதியும் அங்கே வந்து சேர்ந்தார். விஷ்ணுப்பிரியன் தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றவே தனது மனைவியை முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், பார்த்தசாரதியின் வேண்டுகோளுக்கிணங்க தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் அவசரப்பட்டு செல்களை அழித்துவிட்டதாகவும் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என யோசிக்கையில் தான் மிகவும் வேதனையும் கலக்கமும் அடைவதாக கூறினார். 

திருமால் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றவே தான் வந்ததாகவும், அப்படி ஒருவேளை விஷ்ணுப்பிரியன் தவறியிருந்தால் அதை ஞாபகப்படுத்திச் செல்லவும், நேரடியாக பார்த்துச் செல்லவும் வந்ததாக கூறினார். இதைக்கேட்ட விஷ்ணுப்பிரியன் சற்று மனம் நிம்மதி அடைந்தவராக தென்பட்டார். பார்த்தசாரதி எல்லாம் அவன் கருணை என வேண்டிக்கொண்டார். வாசன் மட்டும் மிகுந்த யோசனையில் இருந்தான். 

இதை இப்படித் திட்டமிட்டு செய்ய வேண்டிய காரியமும், எவர்க்கும் தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது குறித்துக் கூறினார். பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை ஆரத் தழுவினார். ஆனால் விஷ்ணுப்பிரியன் இந்த விசயத்தை கடைசிவரை பாதுகாப்பது என்றே தான் இருப்பதாகவும், சுபா மருத்துவ குறிப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள் என அறிந்ததும், அவளிடம் மறைக்கமுடியாமல் தான் தவித்ததும் குறித்து சில நாட்கள் பல மாதங்கள் போல் நகர்கிறது என்று சொன்னார். திருமால் விஷ்ணுப்பிரியனிடம் தனது முகவரியை தந்தார். வாசன் இவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டவன், மெளனமாகவே நின்று கொண்டிருந்தான். 

திருமால் மற்றும் அனைவரும் ஆலய தரிசனம் செய்துவிட்டு பார்த்தசாரதி வீட்டிற்குச் சென்றார்கள். பார்த்தசாரதி வீட்டில் உணவருந்தினார்கள். திருமால் உடனடியாக தான் கிளம்ப வேண்டும் என அன்று இரவே கிளம்பினார். மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். திருமால் தன்னை திருவில்லிபுத்தூரில் கொண்டு விடுமாறு விஷ்ணுப்பிரியனை கேட்டுக்கொண்டார். வாசன் உடன் சென்றான். 

வாசனிடம் செடி விசயம் வெற்றிகரமாக முடிந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார் திருமால். வாசன், பேசுவதை இன்று தங்கியே பேசிச் செல்லலாம் என சொன்னான். ஆனால் திருமால் வாசன் கட்டாயம் சென்னை வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாசன் தனது ஆஸ்ரம விசயம் குறித்துச் சொன்னான். திருமால் சிரித்தார். இது அவருக்கு மனதில் கடைசியில் தோன்றிய ஆசையாக இருக்கக்கூடும் என்றார் திருமால். 

திருவில்லிபுத்தூரிலிருந்து ஒன்பது மணியளவில் சென்னைக்குக் கிளம்பினார் திருமால். அவர் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்தான் வாசன். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தான் திருமால் குறித்து பயந்து போனதாக சொன்னார். வாசன் திரும்பியவன் பூங்கோதைக்கு திருமணம் நடைபெறாமல் போய் இருந்தால் என்ன பண்ணி இருப்பீர்கள் எனக் கேட்டான். இந்த விசயத்தில் விஷ்ணுப்பிரியன் நடந்து கொண்ட முறை சற்றும் முறையில்லை என்று சொன்னான். விஷ்ணுப்பிரியன் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் வாசன் அவரை அத்தனை எளிதாக விடுவதாக இல்லை. இந்த சூழலால் ஏதாவது பூங்கோதைக்கு பிரச்சினை வரும் எனில் தன்னால் அதை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள இயலாது எனச் சொன்னான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தைரியம் சொன்னார். 

அன்றைய இரவு பொழுது வேகமாக கழிந்தது. காலை எழுந்ததும் பெரியவரும் வாசனும் திருவில்லிபுத்தூர் மலைக்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார்கள். பூங்கோதை கல்லூரிக்குச் செல்ல தயாரானாள். கேசவன் பார்த்தசாரதியுடன் கட்டிட வேலை ஒன்றுக்கு கிளம்பினான். மூன்று மாதங்கள் செல்ல வேண்டுமே என வேண்டிக்கொண்டான் கேசவன். 

வாசனிடம் பூங்கோதை திருமால் குறித்துக் கேட்டாள். வாசன் உண்மை சொல்வதா? வேண்டாமா? என தவித்தான். பொய் சொல்ல விருப்பம் இல்லாதவனாய் மாலை வந்து அனைத்தும் விபரமாக சொல்வதாக சொன்னான். பூங்கோதை சந்தோசமாகச் சென்றாள். 

மலையடிவாரத்தை அடைந்ததும் வாசன் நோட்டினைத் திறந்தான். பெரியவர் சிரித்தார். என்னவெனப் பார்த்தான் வாசன். சிரமப்படாம எல்லாம் சாதிக்கனும்னு நினைக்கிறியா தம்பி என்றார். வாசன் புரியவில்லை என்றான். ஒரு விதை அத்தனை சாதாரணமா மண்ணில உருவாகிறது இல்லை. இந்த விதையின் மூல ஆதாரம் என்னனு உனக்குத் தெரியுமா? இந்த பிரபஞ்சத்துக்குச் சொந்தக்காரன்தான் விதைக்கு மூல ஆதாரம்னு நான் சொன்னா நீ சிரிப்பே. ஆனால் மூல ஆதாரம் என்னனு சொல்ல முடியுமா? என பெரியவர் வாசனிடம் கேட்டார். வாசன் நோட்டினை மூடினான். சூரியனே ஆதாரம் என்றான். பூமியைத் தவிர வேறு கிரகங்கள் தெரியுமா தம்பி? என்றார். வாசன் பெரியவரை உற்று நோக்கினான். சற்றே தடுமாறினான். புதன் என பெயரிடப்பட்ட கிரகங்களிலிருந்து புளூட்டோ எனப் பெயரிடப்பட்ட கிரகம் வரைக்கும் தெரியும் என்றான். புத்தகத்தில் படிச்சியா தம்பி என்றார் பெரியவர். வாசன் விதையின் மூல ஆதாரம் தனக்குத் தெரியாது என்றான். பெரியவர் கலகலவெனச் சிரித்தார். சூரியன் சட்டென மறைந்து மின்னல் வெட்டியது. மழை மிக வேகமாக கொட்டியது. ஒதுங்க இடம் இன்றி இருவரும் முழுவதும் நனைந்துவிட்டனர். வாசன் எழுதிய நோட்டுப்புத்தகம் முழுதும் மழையில் நனைந்து இருந்தது. பெரியவரை அர்த்தம் புரியாமல் பார்த்தான் வாசன். அன்றைய தேடல் அப்பொழுதே முடிவுக்கு வந்தது. 

(
தொடரும்)

Thursday 21 October 2010

வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2

ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெளி சொல்ல இயலாது. பல விசயங்கள் மனதோடு புதைக்கப்பட்டு இருக்கும். பக்கம் பக்கமாக எழுதினாலும் சில ஆசைகள் மட்டும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். இப்படித்தான் ஒருமுறை நண்பர்கள் ஆசைகளை பட்டியலிட சொன்னபோது இவ்வாறு எழுதி இருந்தேன். அதில் எங்கேயும் வெளிநாடு செல்ல வேண்டும் என ஆசை இருந்ததாக குறிப்பிடவே இல்லை.

ஆசைப்பட்டேன் - முன்னுரை 

ஆசைப்பட்டேன் - 1 

ஆசைப்பட்டேன் - 2

ஆசைப்பட்டேன் - 3

ஆசைப்பட்டேன் -4 

ஆசைப்பட்டேன் - 5

கடவுள் ஆசைப்படுவாரா? 

இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன். என் தாய்! நினைக்கும் போதெல்லாம் கண்கள் கலங்கி விடுகிறது. எனக்கு எந்த ஒரு வலியும் ஏற்பட்டு விடக்கூடாதென எனது வாழ்க்கையை முடிவு செய்த தாய். ஒரு மனைவி வந்தால் அவளால் நான் பாதுகாக்கப்படுவேன் என எப்படியம்மா உங்களால் எனது வாழ்க்கையை நிர்ணயிக்க முடிந்தது? இதுவே தவறாகி போயிருந்தால் உங்கள் மீது ஒருபோதும் பழி சுமத்தி இருக்க மாட்டேன் அம்மா. நான் எத்தனையோ விசயங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்ட போதும், ''நீ சின்ன பையன்டா'' என உங்கள் உத்தரவுக்கு என்னை அன்பினால் கட்டி போட்ட உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம், என் தாய் மட்டும் எனது திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை பண்ணியிருக்காவிட்டால் நான் இலண்டன் வந்திருக்கும் வாய்ப்பின் கதவு அடைபட்டு போயிருக்கும். நான் இளநிலை பட்டம் படித்து கொண்டிருக்கும்போதே பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தது. எனது மனைவி மூன்று வயதில் இருந்தே வளர்ந்தது எல்லாம் இலண்டனில்தான். எனது அன்னையின் மரணம் நிகழ்ந்த ஆண்டுதனில் ஆறுமாதம் பின்னர் எங்கள் திருமணம் நடந்தது . திருமணம் நடந்து முடிந்த இரண்டு மாதத்தில் லண்டன் வந்து சேர்ந்தேன். எனது அன்னையின் ஆசையுடன் எனது ஆசையும் ஒட்டிக் கொண்டது.

ஒரு நாட்டுக்கு செல்ல விசா பலவகைகளில் வழங்கபடுகிறது. வேலை பார்க்க அனுமதி விசா. வியாபார விசா. மாணவர் விசா. சுற்றிப் பார்க்க செல்ல விசா என பல வகை விசா உண்டு. அதோடு மட்டுமா குடியுரிமை விசா என்றொன்று உண்டு. நான் லண்டன் வந்தது குடியுரிமை விசா என்பதில் தான். நான் மிகவும் சராசரி மாணவன். என்னை பெரும் அறிவுடையவனாக மாற்றி கொள்ள வேண்டும் எனும் யோசனையும், முயற்சியும், ஒருபோதும் என்னுள் வந்ததில்லை, இனி எப்போதும் வரப் போவதுமில்லை. எனது அறிவின் மூலமாகவோ, எனது படிப்பின் மூலமாகவோ நான் லண்டன் வரவில்லை என்பதை இங்கே பதிவு செய்துவிடுகிறேன். நான் வெளிநாடு சென்றதற்கான அடிப்படை காரணம் திருமணம். நான் பணம் சம்பாதிக்கவோ, பெயரும், புகழும் பெறவோ லண்டன் நோக்கி பயணம் செய்ய வில்லை. எனது வாழ்க்கையினை வாழ லண்டன் பயணித்தேன். அப்பொழுதெல்லாம் லண்டன் வருவது இப்போது போல அத்தனை எளிதாக இல்லை என்பதை குறித்து வைத்து கொள்வது நல்லது.

விசா வழங்குமிடத்தில் நடத்தப்பட்ட நேர்முக வினாக்கள் இன்னும் மனதில் ஆடுகிறது அதிலும் குறிப்பாக

1 மாப்பிள்ளை வீட்டுக்குத்தானே பெண் வருவார், எதற்கு பெண் வீட்டிற்கு மாப்பிள்ளையாகிய நீ செல்ல வேண்டும்?

2 1996ல் பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறாய்? கல்யாணம் பண்ணி லண்டன் போகத்தானே?

3 நீ எல்லாம் படித்தவனா?

எனது பதில்கள் மிகவும் கலங்கிய வண்ணம் இருந்தன. அதிலும் இப்படி எல்லாம் சொன்னேன். 'இதற்கு முன்னர் எங்கள் ஊரை விட லண்டன் ஒன்றும் பெரிதில்லை. ஆனால் எனது மனைவியின் பொருட்டே நான் லண்டன் செல்ல வேண்டி இருப்பதால்  லண்டன் பெரிதாகிப் போனது'. இந்த பதிலை சொல்லும்போது எனக்குள் நடுக்கம் நிலவத்தான் செய்தது. எனது நேர்முக வினா பதில்களை இப்பொழுதும் எனக்கு அவர்கள் போட்டு காட்டினால் பெரு மகிழ்ச்சி அடைவேன். எத்தனை பயம்? எத்தனை கலக்கம்? தவறு செய்கிறோமோ என்கிற பய உணர்வு. வெளிநாடு செல்வது என்பது அத்தனை சுலபமா அப்போது. நான் சில மாதங்கள் சிரமப்பட்டேன். எனது மனைவி, எனது மனைவியின் அண்ணன் மற்றும் லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி கோவில் நிறுவனர் உதவிகள் செய்யாது போயிருந்தால் நானாவது இலண்டனாவது.

ஆனால் மாணவர்கள் விசாவில், இங்கே கல்லூரி இல்லாமலே, இங்கே வந்தவர்களை பார்த்து இருக்கிறேன், தங்கி விடுவதையும் பார்த்து இருக்கிறேன். வேலை அனுமதி விசாவில் வந்து இங்கேயே இருப்பவர்களையும் பார்த்து இருக்கிறேன். ஆலய நிர்வாகத்தில் பணி செய்தபோது பலரை அழைத்து இருக்கிறோம், அவர்களில் பலர் இங்கேதான் இருக்கிறார்கள். பெரும்பாலும் அனைவருமே தங்கிவிட்டார்கள். மனைவி, குடும்பம் என ஆகிவிட்டது. ஒரு பகுதி என்ன, பல பகுதிகள் இங்கிலாந்தில் ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஆக்கிரமித்து விட்டார்கள். நான்கு வருடங்கள் தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை பார்த்தால் போதும், இந்த நாட்டில் எல்லா நாட்களும் இருக்குமாறு குடியுரிமை பெற்றுவிடலாம். இப்பொழுது சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் வேலைக்கு என வந்தவர்கள், படிப்பதற்கு என வந்தவர்கள்  எவரையும் கட்டாயமாக குறிப்பிட்ட வருடத்திற்குள் சென்று விட வேண்டும் என்றோ, அந்த குறிப்பிட்ட வருடங்கள் மேல் அந்த நாட்டில் வேலை செய்ய எப்போதுமே அனுமதி இல்லை என்றோ, வேறொரு வெளிநாட்டில் வேலை பார்த்தால், இன்னொரு வெளிநாட்டில் வேலை பார்க்க கூடாது என்றோ எந்த ஒரு நாடும் சட்டம் வைத்திருப்பதாக தெரியவில்லை. அப்படி இவர்கள் சட்டம் வைத்து இருந்தால் எவருமே குடியுரிமை வைத்து இருந்திருக்க இயலாது.

இப்பொழுது சொல்லுங்கள்? இத்தகைய வாய்ப்புகள் இருக்கும்போது அதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமென்பது வெளிநாடு சென்றவர்கள் தவறா? வெளிநாட்டின் சட்ட திட்டங்கள் தவறா?

இலண்டன். ஒரு ரொட்டி கடையில் வேலை பார்ப்பவர் அதிக நேரம் வேலை பார்த்து வரும் பணமும் சரி, ஒரு நல்ல  வேலை பார்த்து வரும் பணமும் சரி பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. முன்னவர் சேமிப்பார், பின்னவர் செலவழிப்பார். ;)

இங்கே வாங்கும் பணத்தின் மதிப்பு ஊரில் சுமாராக எழுபது மடங்கு அதிகம். சம்பாதித்தல் இங்கே. செலவழித்தலும் சுகபோக வாழ்க்கையும் இந்தியாவில் என இருப்போர்கள் அதிகம். ஊரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் சொந்த பணத்தில் வாங்கியது. இங்கே வாங்கி இருக்கும் சொத்துகள் எல்லாம் கடன் பணத்தில் வாங்கியது. இங்கிலாந்தில் கடன்காரன், இந்தியாவில் பணக்காரன். ;)

இலண்டன். மின்சார வெட்டு இல்லை. தண்ணீர் பிரச்சினை இல்லை. போக்குவரத்து சச்சரவு இல்லை. (சுரங்க பாதை ரயில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் ஆடிக்கு ஒரு தரம் மட்டுமே தலைகாட்டும், ஆனாலும் வேலைக்கு போய்விடலாம்). நமது ஊரில் இருப்பதை போல சாதிகள் இல்லை, சண்டைகள் இல்லை. அரசியல் கூட்டங்கள் இல்லை, அனாவசிய பேச்சுகள் இல்லை. ஊழல் இல்லை. ஒருவருக்கும் ஜால்ரா போட தேவையில்லை. வேலை, வேலை, வேலை. சம்பாதிக்கிறாயா, எல்லா வரிகளுக்கும் பணத்தை கட்டுகிறாயா, சந்தோசமான வாழ்க்கைதான்.

லண்டன். படித்தவர்களா,  இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என வரையறை வைத்து கொள்ளாத வெட்கப்படாத பூமி இது. துபாயில் சென்று ஒட்டகம் மேய்த்தான் என நக்கல் பண்ணாத பூமி இது. அபுதாபியில் கழிவறையை சுத்தம் செய்கிறான் என கௌரவம் பேசாத சுத்தமான பூமி. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பிரித்து பேசாத பூமி.

நான் முதலில் நூலகத்தில் புத்தகங்களை எனது ஆராய்ச்சி படிப்பு முடியும் வரை, மூன்று வருடம்,  மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வாரம் இரு தினங்கள் எடுத்து வைப்பேன். கிறிஸ்துமஸ் சமயங்களில் தபால் நிலையத்தில் சென்று மாலையில்  வேலை பார்த்து இருக்கிறேன். ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் கூட வேலை செய்ய செல்ல நான் தயக்கம் காட்டியது இல்லை. ஆனால் வீட்டில் மறுத்துவிட்டார்கள்.  கடைகளில் மெய்க்காவலன் வேலை செய்ய கூட தயாராக இருந்தேன். எதற்கும் துணிந்து இருந்தேன். உழைப்புதனை நம்புவன் ஒருபோதும் ஒடிந்து போவதில்லை என்பதுதான் நான் கண்ட வாழ்க்கை அனுபவம். எனது மாமனார் பெரிய பட்ட படிப்பு படிக்கவில்லை, எனது மாமியார் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லை. அவர்கள் உழைத்த உழைப்பு அடுத்த தலைமுறையும் லண்டனில் இருக்கிறது.

இந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம், உழைப்பை மதிக்கும் மாண்பு இந்தியாவில் இருக்கிறதா?

வசதிகளும் வாய்ப்புகளும் நிறைய பெருக்கி கொள்ள ஒரு தளம் இருக்கும்போது எவரேனும் அந்த தளத்தை விட்டுவிட முயற்சிப்பார்களா?

சும்மா வீட்டில் அமர்ந்து இருக்க பணம் தரும் பூமி இது.

இலண்டன் வந்து பிடிக்காமல் திரும்பி போனவர்கள் மிகவும் குறைவு.

அவ்வப்போது அலுவலகம் மூலமாக வேலை மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தியா. எங்கு பார்த்தாலும் பிரச்சினைகள். ஒரு சின்ன விசயத்தை செய்ய எத்தனை பேரிடம் மல்லுக்கு நிற்க வேண்டி இருக்கிறது. ஒரு ஒழுங்கு முறை இருக்கிறதா? ஒருவர் நிலம் வாங்குவாராம், ஆனால் வேறு ஒருவர் தனது என்று அந்த நிலத்தில் உட்கார்ந்து கொள்வாராம்.  ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்த பணம் வைத்திருப்பாராம், முதலாளிகளை அடித்து நொறுக்கு என வெட்டியாக திரிபவர்கள் கோஷம் போடுவார்களாம். எதற்கெடுத்தாலும் வீட்டுக்கு ஆட்டோ வரும் எனும் கூப்பாடு வேறு. தைரியமாக எதையும் சொல்ல இயலவில்லை. பொய் வழக்கு போடுகிறார்கள் புரட்சிகர இந்தியர்கள். பயப்படுகிறோம், இந்தியா வருவதற்கே அச்சப்படுகிறோம் என்கிறார்கள் பலர். இந்தியாவில் முதலீடு செய்ய எத்தனை சிரமம் என்பதை முதலீட்டாளர்களைத்தான் கேட்க வேண்டும். எனக்கு அதில் பரிச்சயம் இல்லை.

என்னிடம் இந்தியா பற்றி பிறர் குறைபடும்போதேல்லாம்,  இந்தியா, அப்படித்தான் இருக்கும், முடிந்தால் அங்கே சென்று வாழ்ந்து பாருங்கள் என்றுதான் என்னால் சொல்ல இயலும். அந்த இந்தியாவை பொன்னான இந்தியாவாக மாற்ற என்னால் முடியாது போனது போல பலராலும் முடியாது போய்விட்டிருக்க கூடும்.

இந்தியா எனது தாய் நாடு. தமிழ் எனது உயிர் என்று எழுதுவதற்கு சந்தோசமாகத்தான் இருக்கும், ஆனால் எனது இந்திய தேசம் எனக்கு ஒரு விடுமுறை தேசமாகிப் போனதுதான் உண்மை.

அதே பாபு சொன்னார். அமெரிக்காவில் சென்று வாழ்பவர்கள் இந்தியா வர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் லண்டன் சென்றவர்கள் எவருக்குமே அந்த நினைப்பு இல்லை என்றார். அது ஒரு விதத்தில் உண்மைதான். இந்தியா செல்ல வேண்டுமென எவருமே இங்கே தங்கி விட்டவர்கள் விரும்புவதே இல்லை. அப்படி செல்ல வேண்டும் என அவர்கள் சொன்னாலும் உள்ளத்தின் ஓரத்தில் அட இந்தியாவா என்றுதான் இருக்கும்.

நான் இன்னும் பல விசயங்களை சொல்லாமல் விட்டுவிட்டேன்.  எழுதுங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களே, அமீரக வாழ் இந்தியர்களே. இந்திய வாழ் இந்தியர்களே.

Wednesday 20 October 2010

வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1

ராஜ நடராஜன் said

//எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.//

இதை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாமேன்னு தோணுது.முக்கிய காரணங்களாய் எனக்கு தெரிவது பொருளாராதர வித்தியாசங்கள்,அரசியல் சமூக வாழ்க்கை முறைகளின் மாறுபாடுகள் இந்தியா வரணும்ன்னு இதயம் சொன்னாலும் வராதேன்னு மூளை சொல்லுது.


பெங்களூரில் நானும் எனது மாமா மகளின் கணவர் பாபுவும் பேச ஆரம்பித்தபோது இரவு பத்து மணி.  நாங்கள் பேசி முடித்து உறங்க சென்றபோது அதிகாலை நான்கு மணி. இத்தனைக்கும் அவரை அப்பொழுதுதான் முதன் முதலில் பார்க்கிறேன். இதற்கு முன்னர் எனக்கு எனது மாமா மகளை தவிர அவரது குடும்பத்தினர் எவரையும் எனக்கு தெரியாது. 

முதலில் நான் எழுதிய புத்தகங்கள் பற்றிய பேச்சுதான் ஆரம்பித்தது. அப்பொழுது அவரது வாசிப்பு அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ள தொடங்கியபோது நான் அவரை பிரமிப்புடன் பார்த்தேன். எனது புத்தகங்களை இன்னமும் அவர் வாசிக்கவில்லை, எனது புத்தகங்கள்  நான் கொண்டு செல்ல மறந்து போயிருந்தேன்.  எத்தனையோ எழுத்தாளர்கள் பற்றி சொன்னார். எனக்கு நினைவில் தற்போது இல்லை. வாசிப்பு அனுபவம் இல்லாத எனக்கு பல விசயங்கள் புதிராகவே இருக்கும்.  

அதற்கு பின்னர் அவர் தொடுத்த ஆயுதம் தான் உறக்கமில்லா நிலைக்கு கொண்டு சென்றது. அவர் கேட்ட கேள்வி இதுதான் 'எதற்கு வெளிநாட்டில் போய் வெளிநாட்டிலேயே இருக்கிறீங்க, இந்தியாவுக்கு வந்து ஏதாவது செய்யலாம்ல' கேள்வி அத்தனை சாதாரணமானது இல்லை.  வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்வி. பிறந்த மண்ணை விட்டு சொந்த பந்தங்களை விட்டு எவருக்கோ அடிமை வாழ்க்கை வாழ்ந்து தனது சுயத்தை பெருக்கி கொள்ளும் கொத்தடிமைகளா நாம் என ஒவ்வொருவரும் கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி. எதற்காக இந்த வெளிநாடு  வந்தோம், திரவியம் தேடுவதே முழு குறிக்கோள் எனில் திரவியம் தேடிய பின்னர் ஊருக்கு அல்லவா செல்ல வேண்டும் என்கிற மனோபாவம் எத்தனை பேரிடம் உள்ளது என்பதை சுய சிந்தனை செய்து கொள்ள வேண்டிய நோக்கத்தில் எழுப்பட்ட கேள்வி அது.

எனது பதில் எப்படி இருந்து இருக்கும்? எனது பதில் கூட தடுப்பு சுவர் எழுப்பக் கூடிய கேள்வி தொனியில் தான் அமைந்தது. 'எதற்கு கிராமத்தை விட்டு பெங்களூர் வந்தீர்கள்?' 
பெங்களூரில் சில காலம் தங்கிவிட்ட நீங்கள் கிராமத்தை அல்லவா முன்னேற்ற திரும்பி சென்று இருக்க வேண்டும். எனது கேள்வி அவருக்குள் சில சலனங்களை ஏற்படுத்தி இருக்கலாம். ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என அவர் சொன்னபோதே நல்லதொரு கலந்துரையாடலுக்கு தயாராகிறார் என்றே புரிந்து கொண்டேன். 'வெளிநாட்டுக்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் மட்டுமே இந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள்,  'உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போகமாட்டீர்களா? என்பதுதான் எனது கேள்வியாக இருந்தது. 'எனது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு போகமாட்டேன்' என்றார். 

அவரது எண்ணம் எல்லாம் வெளிநாட்டுக்கு செல்பவர்கள் தங்களது அன்னை, தந்தையை அலைகழித்து விடுகிறார்கள். பெற்றவர்களை பெரிதும் பாடாய் படுத்துகிறார்கள் என ஓரிடத்தில் இருந்தது. இதே கருத்தை வலியுறுத்தும் எத்தனை கவிதைகள், எத்தனை கதைகள்? அவரது ஆதங்கம் புரிந்து கொள்ள முடிந்தது. அதே வேளையில் எப்பொழுது ஒருவர் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாரோ அப்பொழுதே அவரின் பெற்றோர்கள் அலைக்கழிய தொடங்கி விடுகிறார்கள் என்பதும் மறுக்கவியலா ஒன்று. பெற்றோர்களுடன் உடனிருந்தே பெற்றோர்களை அலைக்கழிக்கும் குழந்தைகளை இன்றல்ல பல வருடங்களாகவே காண்கிறோம். முதியோர் இல்லங்கள் இப்பொழுது மட்டுமே அதிகம் அல்ல. எப்பொழுதும் அதிகம் தான். முன்னால் தெரியாமல் நடந்தது, இப்பொழுது பலருக்கும் தெரிந்தே நடக்கிறது. 

பெற்றவர்கள் மனதில் நினைக்கும் கவலைகள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது. அதற்காக அவர்கள் படும்பாட்டினை கட்டுரையில் வடிக்கவியலாது. பிள்ளைகள் நன்றாக இருந்துவிட்டால் தங்களை தங்கள் விருப்பங்களை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் எனும் அதிக எதிர்பார்ப்புள்ள கவலைகள் ஒருபுறம். இங்குதான் பெற்றவர்கள் வேதனைப்படுகிறார்கள், விம்முகிறார்கள். பிள்ளைகள் அலட்சியம் நிறைந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். வாழ்க்கையின் தராதரம் உயரும்போது, வசதிகள் வாய்ப்புகள் பெருகும்போது தேவைகள் வித்தியாசப்படுகின்றன. அலட்சிய போக்கு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. 

இப்படியெல்லாம் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் சென்று வெளிநாட்டில் இருப்பது எதற்கு. எனது பார்வை உங்களது பார்வையாக இருக்கலாம், இல்லாதும் போகலாம். நான் உங்கள் பார்வையை என்னில் பொருத்த வேண்டிய அவசியமோ, எனது பார்வையை உங்களுக்கு மாட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமோ இங்கு இல்லை என்பதை தெளிவு படுத்தி கொள்கிறேன். 

எனக்கு சிறு வயதில் ரஷ்யா என்றால் கொள்ளை பிரியம். அந்த நாடு மனதில் பதிந்ததன் நோக்கம் என்னவெனில் ரஷ்யா இந்தியாவின் நட்புறவு நாடு என அறிந்து கொண்டதுதான். அதன் காரணத்தினால் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். கம்யூனிச சிந்தனைகளை புரட்டி பார்த்த தருணங்கள் அவை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எல்லாம் இணைத்து கொண்ட நேரங்கள் அவை. என்னிடம் வெளிநாடு செல்லும் மோகம் இல்லை எனினும் ரஷ்யா எனும் ஒரு தாகம் இருந்தது. அதுவும் பதினொன்னாவது படிக்கும் போது முற்றிலும் தொலைந்து போனது. 

அதற்கு பின்னர் எனது மூத்த சகோதரியை லண்டனிலிருந்து உறவுக்காரர்கள், இவர்கள் சிங்கப்பூரில் பல வருடங்கள் இருந்த பின்னர் லண்டன் வந்தவர்கள்,  பெண் பார்க்க வந்தார்கள். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் மறுப்பு தெரிவிக்க எனது அன்னை மட்டும் போராடி இருக்கிறார். போராட்டத்தில் வெற்றியும் பெற்று இருக்கிறார். பெண் பிள்ளையை தொலை தூரத்துக்கு எதற்கு அனுப்ப வேண்டும் என இருபத்தி ஆறு வருடங்கள் முன்னால் ஏற்பட்ட பலரின் உள சிக்கலை இல்லாதவாறு பண்ணியதில் என் அன்னைக்கு அதிகம் பங்கு உண்டு. 

எனக்கு வெளிநாடு செல்லும் ஆசை எல்லாம் இல்லை. வெளிநாடு என்றால் எப்படி இருக்குமோ என்கிற ஒரு எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. அதைவிட எனக்கு இந்தியாவில் பிரதமராகும் கனவு ஒன்று இருந்தது. நான் கல்கத்தாவில் பயின்றபோது, டில்லியில் ஆராய்ச்சிக்கு என இருந்த போது இந்தியா என்றால் எனக்கு அத்தனை பிரியம், அதுவும் எனது கிராமத்திற்கு செல்வதென்றால் எனக்கு அத்தனை ஆசை. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது எனக்கு பிடித்தமான வேலை. நேரம் கிடைக்கும் போது விவசாயம் செய்வது உண்டு. எனது கனவுகளின் நாயகனாக வாசன் எனும் கதாபாத்திரத்தை நுனிப்புல்லில் வைத்தேன். 

இப்படியெல்லாம் இருக்க நான் வெளிநாட்டுக்கு படிக்க போகவேண்டுமென ஒரு பொய் வேடம் தரிக்க உட்படுத்தபட்டேன். நான் அதற்காக எழுதிய தேர்வு ஒன்றே ஒன்றுதான். எந்த வெளிநாட்டு கல்லூரிக்கும் விண்ணப்பம் போடவில்லை. எனக்கு நமது நாட்டில் படித்து, நமது நாட்டில் இருந்து விடத்தான் கொள்ளை ஆசை. 

(தொடரும்) 

அடுத்த பாகத்தில் முடித்து விட முயற்சிக்கிறேன். 

அடியார்க்கெல்லாம் அடியார் 29

கதிரேசன் அடுத்ததினமே ஈஸ்வரியைச் சந்தித்தான். ''என்ன விசயம்?'' என்றாள் ஈஸ்வரி. அவள் எதிர்பார்க்காத வண்ணம் அவளைக் கட்டிப்பிடித்தான் கதிரேசன். ஈஸ்வரி திக்குமுக்காடிப் போனாள். ''என்ன காரியம் செய்ற?'' என அவனை புறந்தள்ளி கோபம் கொண்டாள் ஈஸ்வரி. 

''எனக்காக சிவனை உதறிட்டியா?'' என்றாள். கதிரேசன் அந்தக் கேள்வியை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ''ம்'' என்றான் கதிரேசன். ''உன் கொள்கையைத் தூக்கி எறிஞ்சிட்டியே, என்னைத் தூக்கி எறிய உனக்கு எவ்வளவு நேரமாகும்?'' என்றாள். கதிரேசன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். 

''உன்னோட எப்படி என்னால வாழ்க்கையை நடத்த முடியும்'' என்று சொன்னாள் ஈஸ்வரி. கதிரேசன் அவளையே உற்று நோக்கினான். ''நேத்துதான் என்னை தொடரவேணாம்னு சொன்னேன், இன்னைக்கு என்னை வந்து என்னோட அனுமதி இல்லாம கட்டிப்பிடிக்கிற'' என்றாள் மேலும். ''என்ன இது விளையாட்டு'' என்றான் கதிரேசன். ''அந்த சிவன்கிட்டயே கேட்டுக்கோ'' எனச் சொல்லிவிட்டுச் சென்றாள். கதிரேசன் நிலையாய் அங்கேயே நின்றான். மனம் ஈஸ்வரியின் வார்த்தைகளை நம்ப மறுத்தது. 

கதிரேசன் அமைதியாகிப் போனான். ஈஸ்வரியைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தபோது பேசிட நினைந்து செல்கையில் அவள் பேசாதே போனாள். ஒருநாள் அவளது கரங்களைப் பிடித்து நிறுத்தினான். 

'கல்லும் உன் நெஞ்சோ' என்றான் அவன். ''சொல்லும் சொல்லில் மனம் வை'' என்றாள் அவள். ''கல்லும் உன் நெஞ்சோ'' என்றான் மீண்டும். ''அருணகிரிநாதர் போல், பட்டினத்தார் போல் ஆவாயோ'' என்றாள். கதிரேசன் பதறினான். ''ஏன் இப்படி பேசுற'' என்றான். ''நீதானே தமிழ்ப்புலவர் மாதிரி கல்லும் உன் நெஞ்சோனு கேட்ட'' எனச் சிரித்தாள். ''அதில்லை, அருணகிரிநாதர், பட்டினத்தார்னு சொன்னியே'' என்றான். 

''குடும்ப வாழ்க்கையில ஈடுபட்டுட்டு சிவனேனு நீயும் போயிட்டா என்ன நியாயம்'' என்றாள். ''திருப்புகழ் கிடைச்சது, தத்துவம் சொன்னது'' என்றான் கதிரேசன். ''வாழ்க்கை தொலைஞ்சது'' என்றாள். கதிரேசன் அவளை கட்டிப்பிடித்தான் மீண்டும். ''என்னை ஏத்துக்கோ'' என்றான். ''எனக்காக எதுவும் செய்வியா?'' என்றாள் ஈஸ்வரி. ''எனக்காக நீ எப்படியும் இருப்பனு சொன்ன'' என்றான் கதிரேசன். ''என்னை வந்து பொண்ணு கேளு'' எனக் கூறிவிட்டுப் போனாள். 

மாதங்கள் கடந்தது. ஈஸ்வரிக்கு கல்லூரிப் படிப்பும் முடிந்தது. கதிரேசனுக்கும் ஈஸ்வரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு, கல்லூரிப் படிப்பை முடித்திருந்த வைஷ்ணவி தனது அப்பா அம்மாவுடன் கல்யாணத்திற்கு முன் தினமே வந்திருந்தாள். அவளிடம் ''மதுசூதனன் வரலையா'' எனக் கேட்டான் கதிரேசன். ''தெரியாது'' என்றே பதில் சொன்னாள் வைஷ்ணவி. 

மதுசூதனனிடம் தொடர்பு கொண்டபோது ''சைவத் திருமணத்திலெல்லாம் கலந்து கொள்ற வழக்கம் எனக்கில்லை'' என கோபமாகப் பேசி இணைப்பைத் துண்டித்தான். கதிரேசன் கலக்கமுற்றான். வைஷ்ணவியிடம் கேட்டபோது ''சிலர் திருந்தறதைப் போல நடிப்பாங்க, ஆனா திருந்தவே மாட்டாங்க, ஏதாவது ஒரு காரணம் வைச்சிட்டே இருப்பாங்க'' என்றாள்.

''அப்படின்னா...'' என்ற கதிரேசனிடம் ''நீ கல்யாண மாப்பிள்ளை, இப்ப அவனைப் பத்தி எதுக்கு, சந்தோசமா இரு, நான் சந்தோசமா இருக்கேன்'' என்றாள். ''வேலை?'' என்றான் கதிரேசன். ''இந்த ஊரில இருக்கிற கம்பெனியில தான் வேலைக்கு விண்ணப்பிச்சிருக்கேன், நாலு நாள் கழிச்சி நேர்முகத் தேர்வு'' என சொன்னாள் வைஷ்ணவி. ''இங்கயா?'' என ஆச்சரியமாகக் கேட்டான். ''ம் கிடைக்குதானுப் பார்ப்போம்'' என்றாள் வைஷ்ணவி. ''ஆச்சர்யமா இருக்கு'' என்றவன் ஈஸ்வரியிடம் வைஷ்ணவியை அழைத்துச் சென்றான். வைஷ்ணவியை முதன்முதலாய் பார்த்த ஈஸ்வரி அன்புடன் அவளை ஆரத் தழுவினாள். வைஷ்ணவி ஈஸ்வரியின் அன்பில் கண்களில் ஈரம் கொண்டாள்.



சிறிது நேரம் ஈஸ்வரியிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வைஷ்ணவி கல்யாண மண்டபத்தில் தங்களுக்கான விடுதி அறையில் தங்கிக்கொள்ள விடைபெற்றுச் சென்றாள். ''ரொம்ப அழகான, அறிவான பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்கா'' என்றாள் கதிரேசனிடம். ''ஆமா, எனக்கு சந்தோசமே'' என்றான் கதிரேசன். ''உன்னை மாதிரி எனக்கும் ஒரு வாழ்க்கை அமையனும்னு எனக்காக சிவனை வேண்டிக்கோ'' என்றாள் வைஷ்ணவி. ''நிச்சயம் நல்ல வாழ்க்கை அமையும், இதிலென்ன சந்தேகம்'' என்றான் கதிரேசன். ''ம்ம் நான் ரூமுக்குப் போறேன், நீ வீட்டுக்குப் போ'' எனச் சொல்லிவிட்டு நடந்தாள். ''இரு நானும் வரேன்'' என கதிரேசனும் அவளுடன் சென்றான். 

விடுதி அறையில் வைஷ்ணவியின் தாயும் தந்தையும் இருந்தார்கள். கதிரேசனை தனது தந்தைக்கு அறிமுகப்படுத்தினாள் வைஷ்ணவி. கதிரேசனிடம் நன்றாக பேசியவர் ''எவ்வளவோ தூரம் தள்ளி இங்க வேலைக்கு வரனும்னு விண்ணப்பிச்சிருக்கா, நாலு நாளு இங்கதான் இருக்கனும்'' என்றார் அவர். ''நாளைக்கு மட்டும் இங்க இருங்க, அப்புறம் எங்க வீட்டுல தங்கிக்கிரலாம்'' என்றான் கதிரேசன். ''அதுக்கு சொல்லைப்பா, எங்களை விட்டு இவ்வளவு தூரம் இவ பிரிஞ்சி வரனுமானுதான், நாலு வருசம் படிக்கிறேனு தனியா போனா'' என்றார் மேலும். ''கவலைப்படாதீங்க சார், நாங்க எல்லாம் இங்க இருக்கோம்ல, வைஷ்ணவியப் பார்த்துக்கிறோம்'' என்றான் கதிரேசன். அவ்வார்த்தைகளைக் கேட்டு சந்தோசம் கொண்டார்கள். 

கதிரேசனுடன் படித்த சில நண்பர்கள் மட்டுமே கல்யாணத்திற்கு வந்திருந்தார்கள். பலர் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார்கள். செல்லாயி கதிரேசனிடம் ''எங்கப்பா இவ்வள நேரம் போயிருந்த, தலைக்கு மேல வேலை இருக்கு'' என்றார். ''மாமா வரலையா?'' என்றான் கதிரேசன். ''அவன் வரமாட்டான், என்னைக்கு உனக்குப் பொண்ணு தரமாட்டேனு சொன்னானோ, அவன் எப்படி வரப்போறான்'' என்றார். ''நம்ம ஊருல இருந்து காலையில வரும்போது அவங்களோடவாவது வரச் சொல்லும்மா'' என்றான் கதிரேசன். ''உன் தாத்தாகிட்ட போய் கேளு அவன் என்ன சொன்னானு, அண்ணனாம் அண்ணன்'' என்றவர் ''நீ எல்லாம் சரியா இருக்கானு பாரு, நிக்காதே'' என செல்லாயி பரபரப்புடன் திரிந்தார். 

''என்ன தாத்தா, மாமா வரலையா?'' என கட்டிலில் படுத்திருந்தவரிடம் போய்க் கேட்டான். ''வரலைனு சொல்லிட்டான்'' என்றவரிடம் ''என்னவோ சொன்னாராமே'' எனக் கேட்டான் கதிரேசன். ''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா'' என்றவரிடம் மீண்டும் மீண்டும் கேட்கவே ''சன்யாசம் போனவனுக்கு கல்யாணத்தைப் பண்ணி வைச்சா நிலைக்குமானு சொல்லி உன் அத்தையையும் போக வேணாம்னு தடுத்திட்டான், அதான் நாங்க மட்டும் கிளம்பி வந்துட்டோம்'' என்றார் அவர். கதிரேசனின் மனம் கோபம் கொண்டது. ''அந்த பிள்ளை கூடவா வரலை'' என்றான் கதிரேசன். ''தெரியலைப்பா, அது வரனும்னுதான் நிக்குது'' என்றார். 

கதிரேசனுக்குத் தூக்கமே வரவில்லை. சன்யாசம் போனேனா? என யோசனையிலே தூங்கிப்போனான். அதிகாலையில் புளியம்பட்டியில் இருந்து கல்யாணத்திற்கு பலர் வந்து சேர்ந்தார்கள். லிங்கராஜூவின் மகளும், அவளது அம்மாவும் கல்யாண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். செல்லாயி வீட்டினை விசாரித்து வீட்டினை அடைந்தார்கள். அவர்களைக் கண்ட செல்லாயிக்கு மனம் மிகவும் சந்தோசமானது. ''வறட்டு கெளரவம் பிடிச்ச மனுசனை எப்படி திருத்துறது'' என சலித்துக் கொண்டார். அவர்களைக் கண்ட கதிரேசன் மிகவும் மகிழ்ந்தான். லிங்கராஜூவைப் பத்தி எதுவுமே கேட்கவில்லை. 

கல்யாண மண்டபம் நிறைந்து இருந்தது. பட்டு சட்டை பட்டு வேட்டியில் கதிரேசனைப் பார்த்த வைஷ்ணவி ''என் கண்ணே பட்டுடும் போலிருக்கு'' என சொன்னாள். ''சாப்பிட்டியா?'' என்றான் கதிரேசன். ''ம் பிரமாதமான சாப்பாடு, என்ன ராத்திரிதான் தூங்க முடியலை, பையனுக ஒரே சத்தம், விளையாட்டுனு அலங்கோலப் படுத்திட்டாங்க, இதுபோல நேரம் தானே ரொம்ப சந்தோசமா இருக்கும்'' என்றவள் ''நெத்தி முழுசுமா திருநீறு பூசியிருக்க'' என ஆச்சரியமாகக் கேட்டாள். ''உடம்பு பூராதான் பூசியிருக்கேன்'' என்றான் கதிரேசன். ''சிவனை விடலையா?'' என்றாள். ''விடமுடியாத உறவு அது'' எனச் சிரித்துச் சொன்னவன் ''வா மேடையில எங்கப் பக்கத்துலயே இரு'' என்றான் கதிரேசன். ''அதெல்லாம் வேண்டாம், நான் கீழேயே இருக்கேன் அப்பதான் உங்க ரெண்டு பேருடைய வெட்கப்படற முகத்தைப் பார்த்துட்டே இருக்க முடியும்'' எனச் சொல்லிவிட்டு தனது தாய் தந்தையருடன் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கொண்டாள். 

புரோகிதர் வந்திருந்தார். மேடையில் ஆட்கள் நிறைந்து காணப்பட்டார்கள். மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்தார் புரோகிதர். சற்று நேரத்திற்கெல்லாம் ஈஸ்வரி வந்து அமர்ந்தாள். சேலை மாற்றிவரச் சொல்லி அனுப்பினார்கள். பின்னர் இருவரும் மேடையில் அமர்ந்தார்கள். முகூர்த்த நேரம் நெருங்கியது. ஈஸ்வரியை தனது மனைவியாக்கிக் கொண்டான் கதிரேசன், கதிரேசனை தனது கணவனாக்கிக் கொண்டாள் ஈஸ்வரி. ஈஸ்வரியின் முகத்திலும், கதிரேசனின் முகத்தில் அளவில்லா ஆனந்தம் யாகம் வளர்த்த தீயினால் வியர்வையாக வழிந்து கொண்டிருந்தது. செல்லாயி பேரானந்தம் கொண்டார், தனது துணை உடனிருந்திருக்கக் கூடாதோ என நினைத்தார்.

ஒவ்வொருவரும் பரிசு பொருட்களை வழங்கிச் சென்றார்கள். சிவசங்கரன் வேண்டாம் என மறுக்க இயலாது இருந்தார். வைஷ்ணவி மேடைக்கு வந்தபோது ஈஸ்வரியின் அருகில் நிற்கச் சென்றவளை ஈஸ்வரி வைஷ்ணவியை கதிரேசனின் பக்கத்திலேயே நிற்கச் சொன்னாள். புகைப்படங்களும், அசைபடங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. மேடையிலேயே இருந்த கதிரேசனின் அத்தை கதிரேசனுக்கு சங்கிலி ஒன்றை அணிவித்தார். ஈஸ்வரியின் கன்னங்களைத் தடவியவர் ஈஸ்வரிக்கும் ஒரு சங்கிலியை அணிவித்தார். உறவு ஒன்று விலகிப் போகிறதே என்கிற வருத்தமெல்லாம் அங்கே இல்லை. எல்லாருமே உறவுகள் தான் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. 

கல்யாணம் மிகவும் சிறப்பு எனவும், கல்யாணச் சாப்பாடு பிரமாதம் என அனைவரும் பாராட்டிச் சென்றார்கள். மணமக்கள் புளியம்பட்டிக்கு சென்றார்கள், வைஷ்ணவியும் உடன் சென்றாள். பின்னர் இரவு கதிரேசனின் சங்கரன்கோவிலில் உள்ள புதிய வீட்டிற்கு மணமக்கள் திரும்பினார்கள். வைஷ்ணவி தனது பெற்றொருடன் சிவசங்கரன் வீட்டில் தங்கினாள்.

கதிரேசனின் வீட்டில் சாந்தி முகூர்த்தத்திற்காக அவனது அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 
''நீங்க எப்பவும் பாடற பாட்டு பாடலையே?'' என்றாள் ஈஸ்வரி. ''என்ன புதுசா மரியாதை?'' என்றான் கதிரேசன். ''நீங்க சிவனோட அடியார்'' என்றாள் ஈஸ்வரி. ''நீயும் தான் சிவனோட அடியார்'' என்றான் கதிரேசன். ''பாடுங்க'' என்றாள் ஈஸ்வரி. ''மரியாதையா இன்னும்'' என்றான் கதிரேசன். கதிரேசனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தவள் ''பாடு'' என்றாள். 

'உமையாளை ஒருபாகமாய் உன்னில் கொண்டோனே ஈசனே
இமையகலாதினி எண்ணக்கமலத்துடன் இணைந்து விட்டாள்
கலங்கும் வாழ்க்கையை ஒருபோதும் ஏற்படுத்திட வல்லேன்
துலங்கும் அன்றோ சொல்சிவனே'

பாடலைக் கேட்டவள் 'பாடலுக்கு என்ன பரிசு தெரியுமா?'' என்றுக் கேட்டுக்கொண்டே கதிரேசனின் இதழ்களில் அன்பைப் பதித்தாள். அன்பு எப்பொழுதுமே தித்தித்துக் கொண்டே தானிருக்கும். 



(தொடரும்) 

Tuesday 19 October 2010

நுனிப்புல் பாகம் 2 (19)

19. இரகசியங்கள் அவசியமில்லை

தெய்வீகம்பாள் மாதவியை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். மாதவி தான் செய்ய விருப்பப்படும் ஆராய்ச்சி குறித்த குறிப்புகளை தெய்வீகம்பாளிடம் தந்தாள். அனைத்தையும் படித்தப் பார்த்தபின்னர் மேற்கொண்டு என்ன செய்யலாம் என ஓரிரு வாரங்களில் சொல்வதாக தெய்வீகம்பாள் சொன்னார். 

தெய்வீகம்பாள் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர். நரம்பியல் துறையில் மிகவும் ஈடுபாடு உடையவர். இவருக்கு 52 வயதாகிறது. கல்லூரியில் பாடம் சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமே தன்னை முடக்கிக்கொண்டார். ஆராய்ச்சி என இதுவரை எதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை. மாதவி தன்னை தொடர்பு கொண்டு தான் ஆராய்ச்சி செய்ய விருப்பம் என சொன்னவுடன் ஆர்வத்துடன் மாதவிக்கு உதவுவதாக கூறினார். 

''
உங்களுக்குப் பிடிச்சிருந்தா நாம இங்கே செய்யலாம்ல மேடம்''

''
இல்லை மாதவி, நாம செய்ய முடியாது, வேற ஒரு முக்கியமான ஒருத்தரை நான் உனக்கு அறிமுகப்படுத்துறேன், அவரோட சேர்ந்து நீ செய்யலாம், எனக்கு இதுல தனிப்பட்ட ஆர்வம்னு எதுவும் இல்லைனு உன்கிட்ட முன்னமே சொல்லி இருக்கேன்''

''
நீங்களும் உடனிருந்தா நல்லா இருக்கும்னு தோணுது, எதுக்கும் நீங்க படிச்சிட்டுப் பிறகு சொல்லுங்க மேடம்''

''
தாராளமா செய்யலாம், உனக்கு என்ன உதவினாலும் நான் செய்ய தயாரா இருக்கேன்''

''
தேங்க்ஸ் மேடம்''

மாதவி நம்பிக்கையுடன் அறையைவிட்டு வெளியே வந்தாள். மீண்டும் வகுப்பறைக்குச் சென்று அமர்ந்ததும் தேவகி கேட்டாள்.

''
போன விசயம் என்ன ஆச்சு மான்?''

''
படிச்சிட்டு சொல்றேனு சொல்லியிருக்காங்க தேவி''

''
இன்னும் இரண்டு வருசம் வெயிட் பண்ணலாம்னு சொன்ன கேட்க மாட்ற''

''
இப்பவே ஆரம்பிச்சாதான் நாம படிச்சி முடிக்கிறப்போ சரியா இருக்கும்''

''
உன்னோட ஐடியாவை வேற யாராச்சும் எடுத்துட்டா என்ன பண்ணுவ''

''
நல்லபடியா நடக்கனும்னு வேண்டிப்பேன்''

''
உனக்கு வரப்போற பேரு வேற யாருக்காவது போயிருமே மான்''

''
தேவி, உலகம் நல்லா இருந்தாலே அதுவே எனக்குப் போதும், பேரு எல்லாம் வாங்கி என்ன செய்யப் போறேன், மாதவினு ஒரு பேரு இலக்கியத்துல மிகவும் பிரபலம் தெரியுமா''

''
கிண்டலா மான்?, நீ தப்பு பண்ற''

''
இருக்கட்டும் தேவி, அப்படி நீ சொல்றமாதிரி யாராவது கையில கிடைச்சி ஆராய்ச்சி செஞ்சா உலகத்துக்குத்தானே நல்லது''

''
உலகம் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் உன் காரியத்தைப் பாராட்டப் போறதில்லை மான், உன்னை ஏமாளினுதான் சொல்லும்''

''
தேவி, அப்படிப் பார்த்தா எல்லாருமே ஏமாளிங்க தான்''

''
மான், என் அண்ணனை நீ ஏமாளியாக்கிறாதே''

''
யேய் தேவி, என்ன திடீருனு, கவலைப்படாதே என் மாமாவை நான் எதுக்காகவும் ஏமாளியாக்கமாட்டேன்''

தேவகி மாதவியை நோக்கி புன்னகை புரிந்தாள். மாதவியும் புன்னகை புரிந்தாள். வகுப்பறை மிகவும் சுவாராஸ்யமாகவே சென்றது. மாதவியின் ஆராய்ச்சியை பற்றி கிண்டலும் கேலியும் ஆச்சரியமும் நிறைந்தே அன்றைய தினம் நகர்ந்து கொண்டிருந்தது. மாதவி இதற்கெல்லாம் சற்றும் கவலைப்பட்டவளாகவோ சந்தோசப்பட்டவளாகவோ தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. 

மாலை, விடுதி வந்ததும் வெகுவேகமாக பெருமாள் தாத்தா எழுதிய கடிதம்தனை ஒரு ஓரத்தில் அமர்ந்து படிக்கத் தொடங்கினாள் மாதவி. அந்த விடுதி அறையில் மாதவியுடன் தங்கி இருக்கும் தேவகி மற்றும் தோழி பிரேமாவும் சற்று தாமதமாகவே வந்தார்கள். மாதவி ஆர்வத்துடன் ஏதோ படித்துக்கொண்டிருப்பதை பார்த்தவர்கள் மாதவியை தொந்தரவு செய்ய வேண்டாம் என விளையாட வெளியே சென்றார்கள். மாதவி இதையெல்லாம் கவனித்தவள் போல் தெரியவில்லை. பெருமாள் தாத்தா கடிதம் பரப்பரப்பாக இருக்கும் என்றே மாதவியின் முகம் காட்டியது. அனைத்து பக்கங்களையும் படித்து முடித்தவள் கடிதம்தனை பத்திரப்படுத்தினாள். 

அறையை மூடிவிட்டு விளையாடச் சென்றாள். ஆனால் மனம் விளையாட்டில் லயிக்கவில்லை. மரத்தின் கீழ் அமர்ந்தவள் மிகவும் யோசிக்க ஆரம்பித்தாள். திருமாலிடம் வாழ்க்கை வரலாற்றை சொல்ல வேண்டிய நிர்பந்தம் பெருமாள் தாத்தாவுக்கு ஏன் வந்தது? அதுவும் மரணம் அடையப்போவது தெரிந்து கொண்டது போல எழுதியிருப்பது குறித்து நினைத்துப் பார்த்தாள். பார்க்காத பெருமாள் தாத்தாவின் முகம் மனதில் வந்து போனது. 

பெருமாள் தாத்தா எழுதிய கடிதத்தின் நகல் இரகசியம் தொலைத்து இருந்தது. மாதவியை நோக்கி பிரேமா வந்தாள். மாதவியை விளையாட வருமாறு அழைத்தாள். ஆனால் மாதவி இன்று முடியாது என சொல்லவே, இப்போழுதே ஆராய்ச்சி பற்றிய அக்கறையா என சொல்லிவிட்டு பிரேமா சென்றாள். 

பிரேமா நாராயணபுரத்தைச் சேர்ந்தவள். அவளது குடும்பம் மிகவும் எளிமையானது. இந்த கல்லூரியில் சேரும்போது முதன் முதலில் அவளது எண்ணத்தை ஈர்த்தவளாக மாதவி தென்பட்டாள். அந்த நிமிடம் மாதவியிடம் நட்பு கொண்டவள்தான் இதுவரை நட்பிற்கு அர்த்தமாகவே இருந்து வருகிறாள். குளத்தூர் எல்லாம் பிரேமா சென்றதில்லை. கல்லூரி விடுமுறை நாட்கள் வரும்போதெல்லாம் மாதவியுடன் செல்ல வேண்டும் என சொல்வாள், ஆனால் தனது வீட்டின் நிலைமையை நினைத்துக்கொண்டு நேராக அவளது ஊருக்குச் சென்று விடுவாள். குளத்தூரிலிருந்து சாத்திரம்பட்டி செல்லும் வழியில் தான் நாராயணபுரம் இருக்கிறது. 

மாதவி பெருமாள் தாத்தா எழுதிய ஒரு முக்கியமான விசயத்தை மனதில் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாள். மீண்டும் விடுதி அறைக்கு எடுத்துச் சென்று அந்த பக்கத்தைப் பார்த்தாள். 

அதில் கீழ்வருமாறு எழுதி இருந்தது.

'
மறுபிறப்பு என்பதில் எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. தர்மம் சத்தியம் நேர்மை என வாழ்க்கையில் ஒழுக்கத்துடன் வாழ்பவர்களே முக்தியடையவர் எனவும் மறுபிறப்பு இல்லை என்பதும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. மீண்டும் பிறக்க வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே எனக்கு உண்டு. அதற்காக தீய வழிமுறையை பின்பற்றி மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. எனது உயிரை என்னிடம் இருந்து என்னால் நீக்கிட முடியும் ஆனால் எனது உயிரை மீண்டும் பிறக்க வைத்திட என்னால் இயலுமா என நான் நினைத்துக் கொண்டிருந்தபோது நான் வணங்கும் நாராயணன் என்னை ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லுமாறு சொல்வதாகவே ஒருநாள் உணர்ந்தேன். 

அப்பொழுது நான் இருந்த ஊர் எனது முப்பாட்டன்கள் இருந்த சாத்திரம்பட்டியே, அது உங்களுடைய ஊரும் கூட. நான் உணர்ந்ததன் விளைவாக சாத்திரம்பட்டியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றேன். அங்கே ஆண்டாள் ஆலயத்தில் எனது வாழ்க்கையின் சாரதியாக பார்த்தசாரதி என்பவனைக் கண்டேன். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனுக்கு ஒரு விபரீத ஆசை இருப்பதாக சொன்னான். இத்தனை வயதாகியும் திடமாக இருக்கும் என்னை மீண்டும் உருவாக்க வேண்டும் என சொன்னவன் பார்த்தசாரதி. அவனது நண்பனான ஆண்டாளை நேசிக்கும் டாக்டர் விஷ்ணுப்பிரியனை எனக்குக் காட்டினான்.

 டாக்டர் விஷ்ணுப்பிரியன் என்னிடம் ஒரு வாக்குறுதியும் தந்தான். என்னை மட்டும் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் என்னுடன் மற்றொரு குழந்தையும் உருவாகும்படி பார்த்துக்கொள்வதாக சொன்னான். நான் இறந்தபின்னரே என்னை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அவனிடம் சொன்னேன். எனவே நான் இறந்த செய்தி நீங்கள் அறிந்த பின்னர் டாக்டர் விஷ்ணுப்பிரியனை சென்று சந்தித்து என்னிடம் வாக்குறுதி கொடுத்தபடி நடந்து கொண்டானா என உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லையெனில் எனது செல்களை அவனிடம் இருந்து பெற்றுக்கொண்டு என்னை உருவாக்க உரிய முயற்சியைச் செய்ய வேண்டும். இது உங்களுக்கு மட்டுமே நான் சொல்வது. வேறு எவரிடமும் நானாக சொல்லப்போவது இல்லை. நீங்கள் விருப்பப்பட்டவர்களிடம் நான் இறந்த பிறகு சொல்லலாம்' 

மாதவி கண்களை மூடி அமர்ந்தாள். தேவகியும் பிரேமாவும் களைப்புடன் உள்ளே வந்தார்கள். மாதவியை இருவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். 

(
தொடரும்)