Wednesday 11 August 2010

நுனிப்புல் (பாகம் 2) 14

14. விஷ்ணுப்பிரியனின் விஞ்ஞானம்

வாசன் அதிகாலை எழுந்ததும் குளித்துவிட்டு நேராக கேசவன் வீட்டிற்குச் சென்றான். அங்கு அனைவரும் கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். விஷ்ணுப்பிரியனும் தயாராக இருந்தார். மிகவும் பரபரப்பாக இருந்தார்கள். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினார். சுபாவும் பார்த்தசாரதியும் சற்று கவலையாகவே காணப்பட்டார்கள். பூங்கோதை வாசனிடம் நேராக வந்தாள்.

''நீங்க திருவில்லிபுத்தூர் வந்தா எங்க வீட்டுக்கு கட்டாயமா வாங்க''

''கட்டாயமா வரேன், ஆனா நீங்க இந்த ஊருக்கு வியாழக்கிழமை வந்துருவீங்களே''

''இல்லை என் படிப்பு முடியறவரைக்கும் மூணு மாசம் மேல அங்கதான் இருக்கப்போறோம்''

''ஓ யாரு முடிவு பண்ணினது''

''நாங்க இரண்டு பேரும் தான்''

கேசவன் அப்பொழுது அங்கு வந்தான். வாசன் கேசவனிடம் பூங்கோதை கூறியது குறித்து கேட்டான். கேசவன் தானும் அங்கே தங்கப்போவதாக சொன்னதும் வாசன் அமைதியாக கேட்டுக்கொண்டான். வாகனம் வந்து நின்றது.

கேசவனின் பெற்றோர்கள் மற்றும் கண்ணையன் மட்டும் உடன் செல்லத் தீர்மானித்தனர். பின்னர் பூங்கோதை குடும்பத்தினர் அனைவரும் வாகனத்தில் ஏறி அமர்ந்தனர். அவர்களை வழியனுப்பிட உற்றார் உறவினர்கள் என ஊரே கூடி நின்றது. வாசன் பார்த்தசாரதியிடம் ஓரிரு வார்த்தைகள் சொன்னான். பார்த்தசாரதி சரியென தலையாட்டினார்.

குளத்தூரிலிருந்து கிளம்பிய வாகனம் வேகமாக சென்று கொண்டிருந்தது. விஷ்ணுப்பிரியன் அமைதியாக அமர்ந்து இருந்தார். பார்த்தசாரதி வானத்தைப் பார்த்துக் கொண்டே வந்தார். பூங்கோதையும் கேசவனும் இன்ப நினைவுகளை அசைபோட்டுக் கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். ஜோதியும் சுபாவும் எதிரெதிர் அமர்ந்து இருந்தனர். சுபாவின் கண்கள் ஈரமாகிக் கொண்டிருந்தது. குழந்தைகள் உறக்கம் கலையாமல் உறங்கியபடியே இருந்தார்கள். கண்ணையன் அமைதியை கலைத்தார்.

''டாக்டர் தம்பி, நீங்க உயிருள்ள பொம்மை செய்ய எப்படி கத்துக்கிட்டீங்க''

''பொம்மையா, உயிருள்ள பொம்மையா, புரியலையே''

''நேத்து என் மாமாகிட்ட சொல்லி இருக்கீங்க அவர் புரியாம என்கிட்ட சொன்னாரு''

''ஓ அதுவா, அது பார்த்தனுக்காக பண்ணினது''

வாகனம் குலுங்கியது. சுபாவின் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. பார்த்தசாரதி மனம் படபடத்தது.

''ம்ம் கேசவா, நீங்க பேரனோ பேத்தியோ பெத்து கொடுங்க''

கண்ணையன் பேச்சை மாற்றினார். கேசவனும் பூங்கோதையும் புன்முறுவலிட்டனர்.

''இனி நம்ம குழந்தைதான் நமக்கு''

கேசவன் மெல்லியதாய் பூங்கோதையிடம் சொன்னான். பூங்கோதை வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டாள்.

வாகனம் நாணல்கோட்டையை அடைந்தது. பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை நோக்கி சொன்னார்.

''விஷ்ணு, நீ இங்க இறங்கிக்கோ''

''ஏன் பார்த்தா, நானும் திருமலைக்குத் தான் வரேன், அடுத்தமுறை இங்க வந்துக்கிறேன்''

சுபா விஷ்ணுப்பிரியனை கோபமாக பார்த்தாள். ஜோதி சுபாவைப் பார்த்தாள்.

''என்ன ஆச்சு சுபா?''

''என்ன மனுசன் இவரு''

''யாரு?''

''விஷ்ணுதான்''

''பேசாம இரு சுபா, ஊருல போய் பேசிக்குவோம்''

கண்ணையன் விஷ்ணுப்பிரியனை கிண்டல் பண்ணிக்கொண்டே வந்தார். விஷ்ணுப்பிரியன் எதற்கும் கவலைப்படாதவராய் அவருடன் பேசிக்கொண்டே வந்தார். வாகனம் பாதுகாப்பாக திருமலையை வந்து அடைந்தது. உணவு நிறுத்தத்திற்காக ஒருமுறை மட்டுமே வாகனம் நிறுத்தப்பட்டதால் சற்று வேகமாகவே வந்து சேர்ந்தது.

விஷ்ணுப்பிரியன் சுபாவுடனும் சுருதியுடனும் தனது வீட்டை நோக்கி நடந்தார்.

''விஷ்ணு, என் வீட்டுக்கு வந்துட்டுப் போ''

''இல்லைப் பார்த்தா, நான் பிறகு வரேன்''

''நீ வந்துட்டுப் போ''

விஷ்ணுப்பிரியன் மறுப்பேதும் சொல்லாமல் பார்த்தசாரதி வீட்டினை நோக்கி நடந்தார். அனைவரும் வீட்டினை அடைந்தனர். ஆரத்தி எடுத்து மணமக்களை அழைத்துச் சென்றனர். மதியம் மணி ஒன்றாகி இருந்தது. அனைவரும் கை கால்கள் அலம்பிக்கொண்டு சாப்பிட அமர்ந்தனர். சாப்பாடு எல்லாம் தயாராக செய்து வைத்து இருந்தார்கள்.

விஷ்ணுப்பிரியனும் சாப்பிட அமர்ந்தார். சுபாவுக்கு கோபம் கோபமாக வந்தது. சுபாவை தனியாக அழைத்து வருமாறு ஜோதியிடம் பார்த்தசாரதி சொல்லி அனுப்பினார்.

''சுபா இந்த பிரச்சினையை இப்படியே விட்டுருரலாம்''

''என்னதான் இருந்தாலும் விஷ்ணு இப்படி பண்ணியிருக்கக் கூடாது''

''இருக்கட்டும் சுபா, எதுவும் பேச வேணாம், நீ வீட்டுல போயி விஷ்ணுவோட பிரச்சினை பண்ண வேணாம், நடக்கறது நடக்கட்டும்''

''எனக்கென்னமோ இப்போ பரிசோதனை பண்ணி பார்த்துரலாம்னு இருக்கு''

''எதுவுமே வேணாம், நேத்து வேணாம்னு சொன்னதான''

''நார்மல் செக்கப் பண்ணுவோம்''

''இல்லை வேண்டாம்''

சுபா சம்மதம் சொன்னாள். ஜோதி அமைதியாய் நின்றாள். பூங்கோதையை எந்த ஒரு காரணம் கொண்டும் இனிமேல் தொந்தரவு செய்யமாட்டேன் என கூறினாள் சுபா. கேசவனும் பூங்கோதையும் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார்கள். ஊர் மக்கள் மணமக்களை காண வந்தவண்ணம் இருந்தார்கள். அனைவரும் பெருமையுடன் பேசினார்கள். கேசவன் பூங்கோதையின் படிப்பு பற்றி கூறி இங்குதான் தங்கப்போவதாக கூறினான். கேசவன் பெற்றோர்கள் சம்மதம் சொன்னார்கள். பயத்துடன் பண்ணி வைக்கப்பட்ட திருமணம் பயமற்றுப் போனது.

விஷ்ணுப்பிரியன் தனது வீட்டினை அடைந்தார். வீட்டுக்குள் சென்றவர் சுபாவிடம் திரும்பினார்.

''சுபா என்ன பயங்கர கோபமா இருக்க''

''இல்லையே நீங்க பண்ணின காரியத்துக்கு ரொம்ப அமைதியாவே இருக்கேன்''

''ம்ம் என்னோட பிளான் எல்லாம் ரொம்ப சிம்பிள்''

''வாசன் சொன்னான்''

''என்ன சொன்னான்? அவனுக்கு எப்படித் தெரியும், இந்த பிளான் எனக்கு மட்டுமேத் தெரியும்''

''மாதவி வாசனுக்கு படம் போட்டு காட்டி இருக்கா''

விஷ்ணுப்பிரியன் சற்று அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மேலும் எதுவும் பேசக்கூடாது என தான் உறங்கச் செல்வதாக மாடிக்குச் சென்றார். சுபாவுக்கு கோபம் குறையவில்லை. ஆனால் பார்த்தசாரதியின் எச்சரிக்கை மனதை அமைதிபடுத்தி கோபம் வெளிப்படாமல் செய்தது. சுபா, பூங்கோதை பற்றிய மருத்துவ குறிப்புகளை எடுத்துப் புரட்டினாள். பார்த்துக்கொண்டே வந்தவளுக்கு, விஷ்ணு என கத்த வேண்டும் போலிருந்தது.

(தொடரும்)

Tuesday 10 August 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 26

சற்று தொலைவில் வரும்போதே தனது நெற்றியில் உள்ள திருநீரை அழித்தான் கதிரேசன். ''என்ன பண்ற'' என்றாள் வைஷ்ணவி. ''பழக்க தோஷத்தில திருநீரு வைச்சிக்கிட்டேன்'' என்றான் கதிரேசன். ''பழக்கம்னு வந்தாலே எல்லாம் தோஷமாப் போறதுண்ணா'' என்றாள் சிரித்துக்கொண்டே. முகத்தை நன்றாகத் துடைத்தான்.

சமணர் கோவிலின் வாசலை அடைந்ததும் ''எப்படியிருக்க, எப்போ வந்தே'' என்றான் கதிரேசன் மதுசூதனனை நோக்கி. ''நான் வந்து அரைமணி நேரம் ஆச்சு, சொன்ன நேரத்துக்கு வரமாட்டியா'' என்றான் மதுசூதனன் சற்று கோபமாகவே. ''இவளோட வீடுதான் தெரியுமே உனக்கு, அங்க வரவேண்டியதுதான, இங்கேயே நிற்காம'' என்றான் கதிரேசன். ''அவளா என்னைக் கூப்பிட்டா?, அவ வீட்டுக்குக் கூப்பிட்டு இருந்தா நான் வந்திருப்பேன்'' என்றான் மிகவும் கோபத்துடன். ''நீ என் வீட்டுக்கு நான் கூப்பிட்டுத்தான் வரனும்னு இல்லை, நீ என் மேல அன்பு வைச்சிருந்தா எப்பவும் வரலாம்'' என சொன்னாள் வைஷ்ணவி.

''வா கடையில பழச்சாறு குடிச்சிட்டுப் பேசலாம்'' என அழைத்தான் கதிரேசன். கதிரேசனின் கண்கள் கோவிலைச் சுற்றியது. மிகவும் சின்ன கோவில். உள்ளே சிலர் அமர்ந்து இருந்தார்கள். ''நீ கூப்பிட்டேனு வந்தேன், நீ என்கிட்ட சொன்னமாதிரி இன்னும் வைணவத்துக்கு மாறலையே, அதுக்கான அறிகுறி உன் முகத்தில தெரியலையே'' என்றான் மதுசூதனன்.  வைஷ்ணவி மதுசூதனனின் வார்த்தை புரியாமல் பார்த்தாள்.

அருகிலிருந்த கடையில் சென்று பழச்சாறு குடித்தார்கள். ''எப்போ நீ வைணவத்துக்கு மாறுவ'' என்றான் மதுசூதனன் கோபம் மறைவது போல் மறைந்திருந்தது. ''இதோ இப்பவே'' என அருகிலிருந்த கடையில் குங்குமம் வாங்கினான். தண்ணீரில் குழைத்தான், நேராக ஒற்றை ராமம் இட்டான். ''இதோ நான் வைணவம்'' என்றான் கதிரேசன்.  ''நாமக்கட்டி வாங்கு, அதையும் போடு'' என்றான் மதுசூதனன். ''இது மட்டும் போதாது நீ இனிமே சிவனை வணங்கவே கூடாது, பெருமாளை மட்டுமே வணங்கனும் பெருமாளேனு தான் பாடனும், இதை மீறினா உன்கிட்ட நான் பண்ணின சத்தியம் எல்லாம் ஒரு தூசு'' என்றான் மதுசூதனன். வைஷ்ணவிக்கு விபரம் புரிந்தது. மிகவும் கோபமானாள்.

''என்ன பைத்தியக்காரத்தனம் இது கதிரேசா'' எனச் சத்தமிட்டாள். ''என் சிவன் என்னை ஏத்துப்பார், வைஷ்ணவி, மதுசூதனன் உன்மேல அதிக பிரியம் வைச்சிருக்கான், உனக்குத் தெரியும், நீயும் அவன் மேல பிரியம் வைச்சிருக்க'' என நிறுத்தினான். ''அதுக்காக நீ இப்படி மாறுவியா'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் மெளனமானான். ''இங்க பாரு வைஷ்ணவி அவன் இனிமே வைணவம், அவன் பேச்சை மீறினானு வைச்சிக்கோ உன்னைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டே இருப்பேன்'' என்றான் மதுசூதனன். ''நீ என்னடா தூக்கி எறியறது, இப்படி காரணம் காட்டி காதல் பண்ற உன்னை நானே இப்பவேத் தூக்கி எறியறேன், இனிமே ஏதாவது தொந்தரவு பண்ணின அப்புறம் நீ உன் டிகிரியை முடிக்கவே முடியாது படுபாவி'' என  சொன்னாள்.

கதிரேசன் தலைகுனிந்து நின்றான். ''எல்லாம் உன்னாலதான் வந்தது'' என கதிரேசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து ''நம்ப வைச்சா கழுத்தறுக்கிற'' என்றான் மதுசூதனன். கோபத்தின் உச்சியில் இருந்தான் அவன். ஒரு நிமிடம் உறைந்து போனாள் வைஷ்ணவி. ''இப்போ ஏன்டா அவனை அடிச்ச'' என ஓங்கி ஒரு அறை விடப் போனாள் மதுசூதனனை. ''வேண்டாம் வைஷ்ணவி'' என தடுத்தான் கதிரேசன். ''நீ எல்லாம் வைணவப் பொண்ணா, ஆம்படையானை அடிக்க வறேள், இனிமே என்கூட நீ பேசின'' என காலால் தரையை உதைத்துவிட்டுக் கிளம்பினான். ''நில் மதுசூதனா'' என்றான் கதிரேசன். நின்றான் மதுசூதனன்.

''நீ கொடுத்த சத்தியத்தை மீறாதே'' என்றான் கதிரேசன். ''அவளை முதல்ல வைணவப் பொண்ணா இருக்கச் சொல்லு'' என்றான் மதுசூதனன். மதுசூதனனை நோக்கி ''நீ முதல்ல மனிசனா இருடா'' என்றாள் வைஷ்ணவி. ''நீ ரொம்ப பேசற'' என கையை உயர்த்திக் காட்டிய மதுசூதனன், ''நீ வைணவப் பொண்ணுனுதான் காதலே பண்ணினேன், நீ எப்ப வைணவப் பொண்ணா இருக்கியோ அப்பதான் என்னால உன்னோட வாழ முடியும்'' எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான்.

''போடா போ, உன்னை மாதிரி மதம் பிடிச்சி அலையறவன்களைவிட மனுசத் தன்மையுடையவங்களோட என்னால நல்லாவே வாழ முடியும், வாழ்ந்து காட்டுறேன்டா'' என வைஷ்ணவி கூறினாள். நடந்தவனை நிறுத்தப் போன கதிரேசனின் கைகளை முதன்முதலில் பிடித்து நிறுத்தினாள் வைஷ்ணவி. ''அவன் போகட்டும், உனக்கு அவன் அடிச்சது வலிக்கலையா?, நீ பேசாம தடுக்காம இருந்திருந்தா அவன் ரெண்டு கன்னத்தையும் பதம் பார்த்துருப்பேன், இப்படியெல்லாம் உன்னை பண்ணச் சொன்னது எது, ஏன் இப்படி நடந்துக்கிற, என்னோட வாழ்க்கையை நான் தீர்மானிச்சுக்குவேன் நீ இப்படி இருக்காதே'' என்றாள் வைஷ்ணவி.

கதிரேசன் மிகவும் கவலையடைந்தவனாகக் காணப்பட்டான். ''வா சமணர் கோவில் போவோம்,  அப்படியே அந்த நாமத்தையும் அழி. உன்கிட்டதான் நேத்துத் தெளிவா சொன்னேனே ஏன் இப்படி அவனை இங்க வரவைச்சி, என்ன கதிரேசா இதெல்லாம், எதிலயும் ஒரு தெளிவு வேணும், தைரியம் வேணும், ஒரு முடிவு எடுத்தா அதில உறுதியா இருக்கனும் இது ஒரு வாழ்க்கை, ஒரே ஒரு வாழ்க்கை.

நமக்காக வாழறமாதிரி பிறருக்காகவும் வாழனும் அதுதான் வாழ்க்கையோட உண்மை அர்த்தம், அடுத்தவங்களுக்கு வாழறேனு நம்முடைய வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வாழுறவங்க மகான்கள் ஆகமுடியாது. எந்த மகான்களும் அடுத்தவங்களுக்காக மட்டுமே வாழவே இல்லை, அதைத் தெரிஞ்சிக்கோ முதல்ல, தன்னுடைய உயரிய நோக்கத்துக்கு வாழ நினைச்சவங்களுக்கு மத்தவங்க கருவியாத்தான் இருந்தாங்க, நீ இப்படி மாறினது எனக்கு சுத்தமாப் பிடிக்கல'' என்றாள். வைஷ்ணவியின் பேச்சைக் கேட்டவன் மனதில் இருந்த கவலை பறந்தது. ''நாமத்தை நீ போட்டுக்கிட்டாலும் உன் மனசில சிவன் தான் இருக்காருனு எனக்குத் தெரியும், அழி முதல்ல'' என்றாள்.

கோவில் அருகே சென்றனர். சமணர்கள் நிர்வாணமாகத்தானே இருப்பார்கள் எனக் கேட்ட கதிரேசனைப் பார்த்து, ''மனம் நிர்வாணமாக இருந்தவங்களை, இப்ப இருக்கிறவங்க என்னமோ நேரில பார்த்தமாதிரி அவங்க ஆடையில்லாம நிர்வாணமாகத்தான் இருந்தாங்கனு சொன்னது சிரிப்பாத்தான் இருக்கும், ஆனா சித்தர்கள், முக்தர்கள், முனிவர்கள்னு ஆடையெல்லாம் அணியாமத்தான் இருந்தாங்க, அது மனசு நிர்வாணமா இருந்ததுதான் காரணம்'' என சொன்னதும் ''உள்ளே வாங்க'' என ஒருவர் அன்புடன் அவர்களை கோவிலுக்குள் அழைத்தார்.

(தொடரும்)

Friday 6 August 2010

ரஜினியை மறந்த ஐஸ்வர்யாராய் பச்சன்

என்னைக்கு படம் வரும், என்னைக்கு பாட்டு கேட்க முடியும் என இருந்த காலங்கள் எல்லாம் மாறி போயின.

உடனுக்குடன் எங்கோ நடப்பதை எங்கோ இருந்து நேரடியாகவே காண முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் இந்த முன்னேற்றம் மிகவும் பாராட்டுக்குரியது.

எப்போதும் போலவே பெரும்பாலான எளியோர், வறியவர் எல்லாம் அந்த நிலையில் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாழ்க்கை மட்டுமே பிடித்து போனதா? அல்லது வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள தவறிவிட்டார்களா? வாய்ப்பு இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்களா?

ரஜினி எனும் மனிதர் உழைப்பால் முன்னேறி இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட தொழில் அதிக பணம் ஈட்டும் தொழில். ஆனால் அந்த தொழில் கூட அனைவராலும் அதிக பணம் ஈட்ட முடிவதில்லை. துணை நடிகராகவே வாழ்ந்து முடித்தவர்கள் பலர். நடிக்க முடியாமல் நீடிக்க இயலாமல் ஒதுங்கி போனவர்கள் பலர். ரஜினியின் வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணமல்ல என்பதை ரஜினி நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்.  ரஜினியை விட அதிக உழைப்பை சிந்தியும் எந்த நிலையிலும் முன்னேற இயலாமல் வாடி வரும் விவசாய மக்களை பார்த்து உழைப்பால் முன்னேறலாம் என சொன்னால் 'கையும் காலும் தானே மிச்சம்' என இவர்களது வாழ்க்கையை பாடி வைக்கத்தான் இயலும்.

ஒரு திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கும்போது விலைவாசி எல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதே வேளையில் தக்காளி விலை ஒரு பத்து பைசா அதிகம் எனில் அரசுதனை திட்டாமல் எவரும் இருந்ததில்லை.

லாபம் கிடைக்கும் விசயத்தில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள் என்பது மறுக்க முடியாத நியதி.  எந்திரன் எனப்படும் திரைப்படத்திற்கு செலவழிக்கப்பட்ட பணம் தனை நினைத்தால் பல விவசாயிகள் மயக்கம் போட்டு விடுவார்கள். கூட்டுறவு வங்கி மூலம் கடன் அவர்களுக்கு கிடைப்பதே பெரிய விசயம். இதைப்  போலவே வெளிநாடுகளில் எடுக்கப்படும் பல திரைப்படங்களின் செலவு பல்லாயிரம் கோடிகள். இந்த பணம் எல்லாம் எப்படி வசூல் ஆகிறது. மக்கள். மக்கள். மக்கள். இந்த திரைப்படங்களை மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? ஆனால் மக்கள் புறக்கணிக்கமாட்டார்கள். காரணம் மிகவும் எளிது. கற்பனையினிலும், கனவுகளிலும் சஞ்சாரிக்கும் மக்கள் மிக மிக அதிகம். மேலும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு இந்த திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனமாக திகழ்கிறது.  மக்கள் சக்தி என்பது எத்தனை பெரிய சக்தி. மக்களின் விருப்பத்தை நாம் குறை கூற இயலாது. கேளிக்கை, விளையாட்டு என நமது கவனம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும்.

தற்போது வெளியிடப்பட்ட எந்திரன் இசை, பாடல் வெளியீடு பலரின் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையாகாது. மிகவும் பிரமாண்டமாகவே நடத்தப்பட்டு இருக்கிறது. எந்திரன் குழுவினருக்கு வாழ்த்துகள். இதில் ரஜினியின் பேச்சு மிகவும் எளிமையான பேச்சு. வெற்றியை தக்க வைத்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல என்பதை நன்றாகவே உணர்ந்து இருக்கிறார். எத்தனை கோடிகள் போட்டு படம் எடுத்தாலும் மக்கள் நினைத்தால் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதையும் அறிந்து வைத்து இருக்கிறார்.

ஐஸ்வர்யாராய் பேசும்போது அனைவருக்கும் நன்றி சொன்னவர், ரஜினியை மறந்தே போனார். அவரது பேச்சின் இடையில் ஒரு விசயம் சொல்லிவிட்டு நான் சொல்வதை ஒப்பு கொள்வீர்கள்தானே ரஜினி சார் என குறிப்பிட்டார். அதனால் ரஜினிக்கு நன்றி சொல்லிவிட்டோமோ என நினைத்தாரோ என்னவோ. ரஜினியை மட்டும் விட்டுவிட்டு அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவரை விவேக் நினைவு படுத்தினார் போலும். திரும்ப வந்தவர் ஆரம்பித்த விதம் 'அட' என சொல்ல வைத்தது. சாதனையாளர்கள் தங்கள் தவறுகளை மிகவும் எளிமையாக சமாளித்து விடுகிறார்கள்.

வெற்றியாளர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நம்மில் பலருக்கு நிறையவே இருக்கும். எவரிடமும் கற்று கொள்ள தேவை இல்லாதது நன்றி மறவாமல் இருப்பது. நமக்கு உணவுக்கு வழி செய்து தரும் விவசாயிகளுக்கு நாம் நன்றி உடையவர்களாக இருப்போம். அவர்களுக்கு நம்மாலான உதவிகள் கிடைக்க வழி செய்வோம்.

Thursday 5 August 2010

விருதுகளும் நானும்

அழகா இருக்கேடா
என் கண்ணு பட்டுடும் போலிருக்கு 

அம்மா அன்பாய்
அணைத்து தந்த முத்தம்

என் பிள்ளை சிங்கக்குட்டி
கட்டிபிடித்த தந்தை

வெற்றி கூட
வெறுமையாய்  தெரிகிறது 
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!

Wednesday 4 August 2010

கம்யூனிசமும் கருவாடும் - 3

கருவாடுவுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம்? இது சந்தத்திற்காக எழுதப்பட்டதா?
காதலும், கத்தரிக்காயும் எனும் சொல்வழக்கு போன்றதா? எனும் கேள்விகளும், மேலும் கம்னியூசத்தை அவமதித்து எழுதுவது போன்ற ஒரு பிரமையும் உருவாவதை தவிர்க்க இயலவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.

கருவாடுவுக்கும் கம்யூனிசத்திற்கும் சம்பந்தம் உண்டு.  சாதாரணமாக மீன்கள் நீரில் துள்ளி விளையாடும். தண்ணீரில் கலந்திருக்கும் பிராண வாயுதனை சுவாசித்து தனக்கென குடில்கள் எதுவும் அமைத்து கொள்ளாமல் நீந்திக் கொண்டு திரிவதுதான் மீன்களின் வேலை. இந்த மீன்கள் யாருக்காகவும் அடிமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவை சுதந்திரமாக நீரினில் திரியும்.

குளமோ. குட்டையோ, அருவியோ, நதியோ, கடலோ இந்த மீன்கள் நினைத்த மாத்திரத்தில் ஓரிடம் விட்டு ஓரிடம் செல்லும் வாய்ப்புதனை பெற்றிருக்கும். மீன்கள் வேட்டையாடும் வழக்கம் வைத்திருப்பதில்லை. இந்த மீன்கள் வகை வகையாக இருக்கும். இப்படிப்பட்ட மீன்கள் நீர் வாழ் உயிரின வகையை சார்ந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மீன்கள் நிலத்திற்கு வந்தால் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவை உட்கொண்டு வாழ இயலாது. சில நிமிட மணித் துளிகளில் இறந்துவிடும்.

அப்படி இறந்து போன மீன்கள்தனை உப்புதனை தடவி வெயிலில் காயப் போட்ட பின்னர் அந்த மீன்களின் பெயர் கருவாடு. இப்பொழுது இந்த கருவாடு பல காலத்திற்கு கெடாமல் பாதுகாக்கலாம். வகை வகையாக இருந்த மீன்கள் ஒரே ஒருவகையான கருவாடு என மாறிவிடும். அதாவது பல்வேறு வகையாக பிரிந்து நிற்கும் மனிதர்கள் இறந்தவுடன் பிணம் என அழைக்கப்படுவதை போல. அந்த கருவாடுதனை கூட நெத்திலி கருவாடு, அத்திலி கருவாடு என பிரித்து விடுவார்கள் என்பது வேறு விசயம். கம்யூனிசத்திலும் அத்தகைய பிரிவுகள் உண்டு.

சுருங்க சொன்னால் இந்த கம்யூனிசம் அதுதான். எல்லா நிலைகளின் அதாவது சோசியலிசம், கேப்பிடலிசம், மாவோயிசம், மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் என எல்லாவற்றையும் கடந்த இறுதி நிலை.

இந்த கம்யூனிச தத்துவத்தில் சுதந்திரமாக வாழும் அனைத்து பறவைகளும், விலங்குகளும் அடங்கும். கம்யூனிசம் என்பது விலங்கினங்கள், பறவைகளுக்கு மிகவும் எளிதாகவே பொருந்தும். இதில் மனிதர்கள் மட்டுமே விதிவிலக்கு. அதனால்தான் சிந்தனையை  தன்னிடமிருந்து கார்ல் மார்க்ஸ் வெளிபடுத்தினார். கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிந்தனை புரட்சிகர சிந்தனை என அழைக்கப்படுகிறது. இங்கேல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் இணைந்து பணியாற்றினாலும், கார்ல் மார்க்ஸ்தான் பெரிதளவு போற்றபடுகிறார்.  அதற்கு காரணம் கார்ல் மார்க்சின் சிந்தனை வளமும் இங்கேல்சின் பெருந்தன்மையும் என சொல்லலாம். இங்கேல்ஸ், கார்ல் மார்க்ஸ்தனை மிகவும் அதிகமாகவே புகழ்ந்தார்.கம்யூனிசத்தின் முழக்கம் என்னவெனில் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என்பதுதான்.

ஜெர்மனியில் இருந்து பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்த ஜெர்மனியர்கள் ஒன்று கூடி 1836ம் வருடம் ஒரு அமைப்பினை உருவாக்கி இருந்தார்கள். அது குறித்தும், இங்கேல்சும், கார்ல் மார்க்சும் வெளியிட்ட கம்யூனிச தத்துவ கொள்கைகளை அடுத்து பார்ப்போம்.

அதற்கு முன்னர், மனிதர்கள் விதி விலக்கு என சொன்னாலும், கம்யூனிசம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்பதான தோற்றம் இருக்கும். தந்தை சம்பாதிப்பார். தாயும் பிள்ளைகளும் தந்தையிடம் இருந்து பெற்று கொள்வார்கள். ஒருவர் உழைக்கும் திறன் உடையவர். அவரது உழைப்பால் மற்றவர் பயன் பெறுகிறார்கள். இதைத்தான் கம்யூனிசம் சொல்கிறது. உழைப்பவர்கள் உழைக்கும் வாய்ப்பு அற்றவர்களையும் காப்பாற்றி கொள்ளுங்கள் என. இங்கே தந்தை முதலாளி போல நடந்து கொண்டு குடும்பத்திற்காக பாடுபடும் தாய்க்கும், குழந்தைக்கும் போதிய வசதிகள் செய்து தரவில்லையெனில் தாயும் குழந்தையும் சுரண்டபடுகிறார்கள் என்பதே பொருள். இந்த விசயத்தை கிராமம், நகரம், மாநிலம், நாடு, உலகம் என எல்லாவற்றிலும் கொண்டு வருவதே உண்மையான கம்யூனிசம் என்கிறது கோட்பாடு. வீட்டுக்கு சரி, எப்படியாவது சமாளிக்கலாம், உலகத்துக்கே என்றால்?

சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட் என இரண்டுக்குமே தமிழ் அகராதியில் பொதுவுடைமைவாதி என்றே இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் அவர்களை சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்றெல்லாம் சொல்கிறார்கள். கம்யூனிசம் என்பதே இவ்வுலகில் இல்லை என்பதை சுட்டிக்காட்டத்தான் மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் எல்லாம் தோன்றியது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

(தொடரும்)

Tuesday 3 August 2010

எனது பதிவுகளை தாராளமாக திருடுங்கள்

பதிவுகள் திருட்டு போவது பற்றி எனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை என நினைக்க வேண்டாம். ஒருவர் மிகவும் சிரமப்பட்டு ஒரு விசயத்தை பற்றி எழுதியதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பல இணையதளங்களில் குறைந்தபட்சம் நன்றி என்று கூட சொல்லாமல் தாங்கள் எழுதியதை போல பதிவிட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். நன்றி என சொல்லி எழுதுங்கள் என அறிவுறுத்தப்பட்ட பின்னரும் அதை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாதவர்களை பற்றி எண்ணும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. நாங்கள் திருடவில்லை, நல்ல விஷயங்களை பகிர்கிறோம் என மிகவும் எளிதாக சொல்லிச் செல்கிறார்கள்.

எழுதியவர்களுக்குத்தான் எழுத்தின் வலியும், வலிமையும் புரியும். இது குறித்து மறுபதிப்பு என ஒரு சிறுகதை எழுதினேன். மேலும் இது போன்று எவரோ எழுதிய புத்தகங்களை தலைப்பை மாற்றி தனது பெயரில் போட்டுக்கொள்வது போல ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை காட்சி அமைத்து இருப்பார்கள். பிறர் எழுத்தை தனது எழுத்து என சொல்ல மனதில் தைரியம் அதிகமாகத்தான் வேண்டும். இந்த எழுத்து திருடர்கள் பற்றி என்ன சொல்வது?

தெரியாமல் தவறு செய்தவர்கள் திருந்திவிடுவார்கள். தெரிந்தே தவறு செய்பவர்கள்? ஜாக்கி சேகர் எழுதிய பதிவை பார்த்தபோது அவரின் வலி புரிய முடிகிறது. சி.பி. செந்தில்குமார் அவர்களின் செயல்பாடு, அவர் பதிவுலகில் தற்போது இருப்பதால் இது குறித்து விளக்கப்பதிவு தர முடிகிறது. இதுவே பதிவுலகிற்கு அப்பாற்பட்டவராக இருந்தால்???

உங்கள் எழுத்து திருட்டு போகாமல் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அதற்கான முயற்சியில் இறங்குங்கள் பதிவர்களே. எவரும் நகல் எடுக்க முடியாதபடி வைத்திட வழி இருக்கிறது. பார்க்க சசிகுமார் அவர்களின் நமது பதிவுகளை பிறர் எடுக்காமல் முற்றிலும் தடுக்க. திருடுபவர்களுக்கு நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்? ஆர்வ கோளாறில் நன்றி என பெயர் குறிப்பிடாமல் பலர் எழுதிவிடுவதுண்டு. இது தவறு என தெரியாமல் பலர் தவறி விடுவதும் உண்டு.

ஒரு எழுத்து பிரசுரமாகிறது எனில் அதற்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது, எழுத்துக்கு அங்கீகாரம் எனில் எழுதியவருக்கும் அங்கீகாரம்தான். அடுத்தவர் பெயர் போட்டாலும் உண்மை என்றும் மறைந்து விடாது. பிறர் நமது எழுத்தை சுட்டும்போது 'அட' என எண்ணம் வரத்தான் செய்யும். அதுவே வேறொரு பெயரில் இருந்தால்!!!

எனது பதிவுகள் எல்லாம் திருடப்படும் என எனக்கு எந்தவித பயமும் இல்லை. அப்படி பயம் இருந்தால் இப்படி பிறர் திருடுவதற்கு ஏதுவாக அனைத்தையும் வெட்ட வெளியில் போட்டு இருக்கமாட்டேன். வீட்டை பூட்டி வைப்பது போல இந்த வலைப்பூவுக்கும் ஒரு பூட்டு போட்டு வைத்திருப்பேன். நான் அனுமதிப்பவர்கள் மட்டுமே வந்து செல்லுமாறு வைத்திருந்திருப்பேன். எவர் பெயரோ, நல்ல விசயங்கள் நாலு பேருக்கு சேரட்டும் என்றே இந்த விசயத்தில் இருக்கிறேன். நான் திருடினேன் என பிறர், எனது எழுத்தையே குறை கூறாமல் இருந்தால் அது போதும்.

இப்பொழுது கூட நான் எழுதிய கவிதையில் இருக்கும் படங்கள் எல்லாம் எனது நண்பர் ஒருவர் ஒரு தளத்தில் பதிந்த படங்கள்தான். அவர் பதிந்த படங்களுக்கு நான் எழுதிய கவிதைகளை அப்படியே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அதை அந்த தளத்திலும் சொல்லி இருக்கிறேன். இருப்பினும் அந்த படங்கள் எல்லாம் நான் திருடியது என்றாகிவிடாது. அது போலவே பதிவர்கள் போடும் படங்கள் எல்லாம் அவர்களே கஷ்டப்பட்டு எடுத்ததா? எவரோ எடுத்த படங்களை தங்கள் பதிவுகளில் போடும்போது நன்றி சொல்லி இருக்கிறார்களா? சினிமா விமர்சனம் எழுதும் பதிவர்கள் எவராவது சொந்தமாக படங்களை போட்டு இருக்கிறார்களா? தாங்கள் செய்யும் தவறுகளை ஒருபோதும் நினைத்து பார்க்காத பதிவர்கள் தங்கள் பதிவுகளுக்கு மட்டும் கவசம் போட முனைவது ஏன்?

தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும். ஏனோ முன்னோர்கள் பல விசயங்களை தெளிவாகவே சொல்லி சென்றுவிட்டார்கள்.

என்னுடைய வேண்டுகோள் எல்லாம் வேறு எவருடைய பதிவையாவது திருடி எனது பெயர் போட்டு விடாதீர்கள் என்பதுதான். ;)

Monday 2 August 2010

பரிதாபங்கள் அவசியமோ?



இப்படம் கண்டதும்
"ஸ்" எனும் சப்தம் என்னுள்

எனது கவிதை வார்த்தைகள்
முடமாகிப் போயின

பரிதாபங்கள்
நம்பிக்கைகளை
படுகுழியில் தள்ளுமோ!

Sunday 1 August 2010

கம்யூனிசமும் கருவாடும் - 2

ஜெர்மனி எனும் நாடு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடு. இரண்டு உலகப் போர்களுக்கும் ஒருவிதத்தில்  காரணமான நாடு. நல்லதொரு சிந்தனையாளர்களையும், அறிவியல் அறிஞர்களையும் கண்ட நாடு. அதற்காக பிற நாடுகள் எல்லாம் சளைத்தவைகள் என்று பொருள் அல்ல. அப்படி கருதினால் கம்யூனிசம் என்பது சாத்தியம் அல்ல. கம்யூனிசம் என்பது எந்த பாகுபாடும், பிரிவினையும் இன்றி அனைவரும் சமம் என கருத வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த கம்யூனிசம் உருவான வரலாறு முதலாளிகளின் கையில் அல்லல்படும் தொழிலாளிகளை கண்டதன் காரணம் தான். மேலும் இந்த கம்யூனிசம் கொண்ட கருத்தையே இதற்கு முன்னர் சோசியலிசம் கொண்டிருந்தது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியது.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்றேடிறிச் இங்கேல்ஸ் எனும் ஜெர்மனியில் பிறந்த இரண்டு சிந்தனையாளர்களின் எண்ணத்தில் உருவானதுதான் இந்த கம்யூனிசம் என சொன்னாலும் இவர்களுக்கு முன்னர் இருநூறு வருடங்களுக்கு முன்னரே இந்த கம்யூனிசம் உருவாகித்தான் இருந்தது என்கிறது வரலாறு.  சோசியலிசம் எனப்படும் சமத்துவ முறையானது முன்னரே கடைபிடிக்கப்பட்டு வந்ததுதான்.

இந்த கம்யூனிசம் மிகவும் சிறந்த சிந்தனை, ஆனால் இந்த உலகத்தில் கம்யூனிசம் என்பது சாத்தியம் கிடையாது. கம்யூனிச நாடுகள் என இருப்பவை, இருந்தவை எல்லாம் கம்யூனிச சிந்தனைகளை பின்பற்றியவைகளே அல்ல. கம்யூனிசவாதிகள் என சொல்லிக் கொள்வோர்கள் எல்லாம் கம்யூனிசவாதிகளே அல்ல என்பதை அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.

சோசியலிசமும் கம்யூனிசமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடர்புடையவை. முதலாளித்துவ கொள்கைகளை எதிர்ப்பவை. அப்படி என்னதான் இந்த சோசியலிசம் சொன்னது.

தனி உடைமை என்பதை ஒழித்தல். அனைத்தும் பொதுவுடைமை ஆக்குதல். எல்லாவற்றிருக்கும் ஒருவரே முதலாளி, அந்த முதலாளி வேறு யாருமல்ல, அனைத்து தொழிலாளிகள், சுருங்கச் சொன்னால் அனைத்து மக்கள்.

சர்வாதிகாரம் எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. அனைத்துமே ஜனநாயக கட்டுபாட்டில் இருப்பதுதான். ஆனால் லெனின், ஸ்டாலின், மாவோ எல்லாம் சர்வாதிகாரத்தின் பேரில் செயல்பட்டவர்கள். ஏனெனில் காலமும் சூழ்நிலையும் அவ்வாறு செயல்பட வைத்தன. ஒன்றை எதிர்க்க சர்வாதிகாரம்தான் மிகவும் துணை நின்றது.

உபயோகத்திற்காக மட்டுமே பொருள்கள் உருவாக்கப்பட வேண்டும், லாப நோக்கத்திற்காக எதுவுமே உருவாக்கப்படக் கூடாது. இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். வியாபார உலகில் லாப நோக்கம் இல்லாமல்  எது சாத்தியம்? இது சாத்தியம், எப்படி தெரியுமா?

கம்யூனிசத்தின், பொதுவுடைமையின், முழு சிந்தனையான பிரிவினையேதும் இல்லாத , இந்த ஊர், நாடு எனும் அடையாளமில்லாத ஒரு சமூகம். அதாவது ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விசா, குடியுரிமை எனும் கொடுமை எல்லாம் இல்லாமலிருப்பது. எங்கு வாழும் மக்களும் அதே சகல வசதிகளுடன் வாழ்வது, அதன் காரணமாக ஒரு இடம் மற்றொரு இடம் என எந்த பாகுபாடும் இல்லாமலிருப்பது.

இந்த உலகில் சாத்தியமே இல்லாத இந்த சிந்தனைகள் கற்பனையில் வெளிபட்டது அல்ல.  இங்கேல்ஸ் இங்கிலாந்து நாட்டிற்கு பிரயாணம் செய்தபோது தான் கண்ட குழந்தை தொழிலாளர்கள் நிலை, வர்க்க ரீதியாக பிரிக்கப்பட்டிருந்த மக்கள் நிலை எனும் பல அவல நிலைகள் தான்.

இங்கேல்சும், கார்ல் மார்க்சும் இணைந்து முதலாளித்துவத்தை எதிர்த்து போராடினாலும் கம்யூனிசம் என்பதை அவர்களால் உறுதி செய்ய இயலவில்லை. அவர்களால் ஒரு தெளிவான பார்வையை செயல்படுத்த இயலாத நிலையே இருந்தது. அது ஏன்?

கற்கால மனிதர்களைப் போல இக்கால மனிதர்களும் வாழத் தயாரா? கம்யூனிசம், மாவோயிசம், சோசியலிசம், அந்த இசம், இந்த இசம் என எல்லா இசங்களும் நமது வசம்.

(தொடரும்)