Showing posts with label இயற்பியல். Show all posts
Showing posts with label இயற்பியல். Show all posts

Monday 22 February 2016

ஜீரோ எழுத்து - 10 (கருந்துளை)

முந்தைய பகுதி 

இதற்கு முந்தைய பகுதியை எழுதி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடங்களில் பேரதிசயங்கள் நிகழவே செய்து இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக இந்த கருந்துளை பற்றிய சமீபத்திய ஒரு கண்டுபிடிப்பு பிரமிக்கத்தக்க ஒன்றுதான். 

இந்த கருந்துளைகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்த போதிலும் எதுவுமே விளங்கிக்கொள்ள முடிந்தது இல்லை. தனக்குப் பிடித்த ஒன்றை ஒளித்து வைக்கும் சிறு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சம் தனக்குப் பிடித்த இந்த கருந்துளைகளின் ரகசியங்களை மறைத்து வைத்துக்கொண்டே இருக்கிறது. 

இந்த பிரபஞ்சத்தில் ஒளி அலைகளை வெகு எளிதாக கண்டுபிடித்துவிட்டார்கள், ஆனால் இந்த ஈர்ப்பு அலைகளை அத்தனை எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டீன் இந்த ஈர்ப்பு அலைகள் ஒரு ஈர்ப்பு ஆற்றலாக வெளிப்படும் என்றே தனது கோட்பாடுதனில் குறிப்பிட்டு இருந்தார். இதை இத்தனை வருடங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அதே வேளையில் நிரூபிக்க வழி இல்லாததாகவே தென்பட்டது. நியூட்டனின் கோட்பாடுபடி இந்த ஈர்ப்பு அலைகள் இருக்கவே வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. 

பல வருடங்களாக  இந்த ஈர்ப்பு அலைகள் பற்றி அறிய வேண்டும் என அதற்கான கருவிகளை உருவாக்கிட முனைந்ததன் பலன்  இந்த வருடம் நிறைவேறி இருக்கிறது. 

இந்த கருந்துளைகள் இந்த ஈர்ப்பு அலைகளை கண்டுபிடிக்க உதவி இருக்கிறது. மீண்டும் இந்த இயற்பியல் உலகம் உந்த பிரபஞ்சம் பற்றிய பார்வையினை சற்று மாற்ற வேண்டி இருக்கிறது. 

(தொடரும்) 

Friday 24 January 2014

ஜீரோ எழுத்து - 9 (கருந்துளை)

கருந்துளை, கருங்குழி எப்படி வேண்டுமெனினும் தமிழ்படுத்தி கொள்ளுங்கள். இந்த கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசை ஒளியை கூட வெளிவிடாமல் தன்னுள் உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையது என்றே முதன் முதலில் கண்டுபிடித்தார்கள். கிட்டத்தட்ட இருநூற்றி முப்பது  வருடங்களுக்கு முன்னர் உருவான சிந்தனை இது. அதிக ஈர்ப்புவிசை கொண்ட நிறை பொருள் ஒளியை வெளிவிடாது என்றே சிந்தனை எழுந்தது. இது கிட்டத்தட்ட் ஐம்பது வருடங்கள் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது, நியூட்ரான் நட்சத்திரங்களே இந்த ஒப்புதலுக்கு முதற்காரணம். 

நமது சூரியனைவிட பன்மடங்கு பெரிதான நட்சத்திரங்களே இந்த கருந்துளை ஏற்பட காரணம் ஆகிறது. ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாளை இரண்டு வகையாக முடித்துக் கொள்ளும். நமது சூரியன் போல அளவு இருந்தால் இறுதியில் ஒன்றுமற்றதாகவே மாறிவிடும். எப்படி ஒரு விறகை எரித்து முடித்திட ஜூவாலை தோன்றி மறைந்தபின்னர் தகதகவேனும் சிவப்பாக மாறி இறுதியில் சாம்பலாக மாறி கடைசியில் கருப்பாக மறைந்துவிடுமோ அதைப்போலவே நமது சூரியன் போன்ற அளவுடைய நட்சத்திரங்கள் ஆகும் என்பது அறிவியல் குறிப்பு. 

அதே வேளையில் பெரிய அளவுடைய நட்சத்திரங்கள் தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு உள்ளே இருக்கும் அளப்பரிய ஆற்றல் மூலம் மற்றொரு சூரிய குடும்பத்தை உருவாக்கும், அப்படி உருவாக்காத நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறி பின்னர் கருந்துளையாக மாறிவிடும் என்பது அறிவியல் குறிப்பு. 

எப்படி இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. இருட்டினை எப்படி கண்டு கொள்வது. ஒளிதனை இருட்டில் பாய்ச்சினால் அந்த இருள் ஒளியாகும், ஆனால் ஒளியை தன்னுள் உட்கிரகித்துக் கொள்ளும் இருளை எப்படி கண்டு கொள்வது. எந்த ஒரு பொருளும் தன்னை சுற்றியுள்ள பொருள் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தும் தன்மை உடையது, அதன் அளவீடு குறைந்ததாக இருக்கலாம், அதைப்போலவே இந்த கருந்துளை தன்னை சுற்றி உள்ளவைகள் மீது ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதாவது இந்த கருந்துளையை தாண்டி செல்லும் எந்த ஒரு பொருளும் பெரும் ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தி நகர்ந்தது. அதாவது தனக்குள் இருக்கும் ஆற்றல் மூலம் இந்த நட்சத்திரங்கள் மீது ஒளி பாய்ச்சியது. அதைவைத்துதான் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. 

நியூட்டனின் கொள்கையான ஈர்ப்புவிசை ஒளியின் வேகத்தில் மாறுபாட்டினை உண்டு பண்ணும் என்பதே இந்த கருந்துளைக்கு அடிப்படை தத்துவம். சுப்பிரமணியம் சந்திரசேகரின் சூரிய நிறை குறித்தும், எப்படி ஒரு நட்சத்திரம் உருக்குலைந்து கருந்துளையாக மாறும் என்பது குறித்தும் இப்போதைக்கு சற்று தள்ளி வைப்போம். 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வேகமாக சுழலக்கூடிய, அதிக காந்த தன்மை கொண்ட நியூட்ரான் நட்சத்திரம் வெளிப்படுத்திய கதிரியக்கத்தை பூமியில் இருந்து காண முடிந்தது. இவை பல்சார் எனப்பட்டன. இந்த கருந்துளைகள் நிறை, மின்னேற்றம், சுழல் உந்தம் போன்றவை பொருத்து அமைகின்றன. 

வெறும் நிறை அடிப்படையிலும் இந்த கருந்துளைகள் அமையும். சமீபத்தில் இந்த கருந்துளை பற்றி ஒரு அதிசய நிகழ்வு நடந்தது. 

(தொடரும்) 

Friday 10 January 2014

வைகுண்டமும் பெருவெடிப்பு கொள்கையும்

ஒரு புத்தகம் கொண்டு வந்து இதைப் படி என அம்மா கொடுத்துவிட்டு போனார். இந்த இரவு நேரத்தில் தூங்குவதை விட்டுவிட்டு எவரேனும் புத்தகம் படிப்பார்களா என்றே அந்த புத்தகம் பார்த்தேன்.  அந்த புத்தகத்திற்கு எந்த ஒரு பெயரும் இல்லை. எவரேனும் தலைப்பு இல்லாமல் ஒரு புத்தகம் எழுதுவார்களா? அந்த புத்தகத்தினை எழுதியவர் பெயர் கூட இல்லை. முன் அட்டை, பின் அட்டை வெறுமையாக இருந்தது. உள்ளே எடுத்த எடுப்பில் வைகுண்டத்தில் நாராயணன் வாசம் செய்கிறான் என்றே வரி ஆரம்பித்து இருந்தது. பதிப்பகம், விலை என இத்யாதிகளும் இல்லை. ஆயிரத்து எட்டு பக்கங்கள். தலைக்கு அடியில் வைத்து பார்த்தேன். மெத்தென்று இருந்தது. 

''பக்தா, நல்ல தூக்கமோ''

இந்த வார்த்தைகளை நான் வெகு நாட்களாக கேட்டு இருக்கவில்லை. திடீரென எதற்கு சாமியார் வந்து இருக்கிறார் என்றே ஆச்சர்யத்துடன் அவரை வரவேற்றேன். அங்கிருந்த ஒரு நாற்காலி ஒன்றை அவருக்கு போட்டுவிட்டு கீழே நான் அமர்ந்து கொண்டேன். 

''என்ன விஷயமாக வந்து இருக்கிறீர்கள்''

''நான் வைகுண்டம் போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன், அதுதான் நீயும் வருகிறாயா என்று அழைத்து போகவே வந்தேன்'' 

''எங்கே, ஸ்ரீரங்கமா?''

''அது பூலோக வைகுண்டம், நான் உன்னை அழைப்பது நாராயணன் வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு பக்தா''

''என்ன உளறுகிறீர்கள், அந்த வைகுண்டம் எங்கே இருக்கிறது, அது ஒரு கற்பனையான உலகம்''

''பக்தா, இந்த உலகம் எப்படி தோன்றியது''

''பெரு வெடிப்பு கொள்கையின் படி ஒரு புள்ளியில் இருந்தே எல்லாம் தொடங்கின, அதற்கு முன்னர் எதுவும் இல்லை''

''எந்த பாட புத்தகத்தில் படித்தாய் பக்தா, கடவுள் இவ்வுலகை படைத்தார் என்றதும், கடவுளை யார் படைத்தார் என கேட்கும் நீயா, அந்த புள்ளிக்கு முன்னர் எதுவும் இல்லை என சொல்வது''

''நான் எப்போது கடவுளை யார் படைத்தார் என கேட்டேன், இந்த பிரபஞ்சத்தை படைக்கத் தெரிந்த கடவுளுக்கு தன்னை படைக்கத் தெரியாதா?''

''பக்தா, சரி மனம் மாறிவிட்டாய் போலிருக்கிறது, வா வைகுண்டம் போகலாம்''

''இல்லாத ஒரு இடத்திற்கு எல்லாம் என்னால் வர இயலாது, அதுவும் அது எங்கு இருக்கிறது என்பதே எவருக்கும் தெரியாது''

''பக்தா, வைகுண்டம் அழைக்கும் தொலைவில் உள்ளது என்பதுதான் கதை, ஆனால் உண்மையான வைகுண்டம் இந்த பிரபஞ்சத்தைத் தாண்டி உள்ளது''

''இது யுனிவர்ஸ்''

''அப்படித்தான் பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது மல்டிவர்ஸ்''

''மல்டிப்ளக்ஸ் மாதிரி பேசறீங்க, என்னால் உங்களுடன் வர இயலாது''

''நாராயணன் இந்த வைகுண்டத்தில் வாசம் செய்கிறார். அந்த வைகுண்டத்திற்கு ஆத்மாக்கள் செல்லும். உடலை இங்கே கிடத்திவிட்டு ஆத்மா அங்கே வாசம் செய்யும். அதற்கு நற்காரியங்கள் புரிந்து இருக்க வேண்டும். நீ நற்காரியங்கள் புரிந்து இருக்கிறாயா''

''எதற்கு இப்போது இப்படி என்னை தொந்தரவு செய்கிறீர்கள்''

''வருடத்தில் ஒரு நாள் மட்டுமே அந்த சொர்க்கவாசல் எனும் பிரபஞ்சத்தை தாண்டி செல்லும் கதவு திறக்கும், நான் தயார் ஆகிவிட்டேன், அதுதான் உன்னை உடன் அழைத்து செல்ல வந்தேன்''

''நான் வரவில்லை, நீங்கள் போய்விட்டு வாருங்கள்''

''அந்த வைகுண்டம் சென்றுவிட்டால் ஆத்மா திரும்பி வர இயலாது, அந்த நாராயணனுடன் ஐக்கியம் ஆகிவிடும். அப்படி செல்ல இயலாத ஆத்மாக்கள் இந்த பிரபஞ்சத்திற்குள் சிக்குண்டு மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கின்றன''

''எனக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத் தெரியாது''

''வானம் ஏறி வைகுண்டம் போக நான் வழி சொல்கிறேன்''

''வேண்டாம்''

''சரி பக்தா, இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவான இந்த உலகம் முடிவில் என்னவாகும்''

''அப்படியே உறைநிலை அடையும்''

''அதுதான் இல்லை, இந்த உலகம் மீண்டும் ஒரு புதிய தொடக்கம் தொடங்கும், இப்படித்தான் இவ்வுலகை படைக்க பிரம்மன், நாராயணன் அமர்ந்து இருக்கும் தாமரை மலரில் சென்று இடம் கேட்பார். ஒரு இயக்கம் முடிந்து, மறு இயக்கம் தொடரும்போது அழித்தலில் இருந்து கொண்டே ஆக்கம் செய்ய இயலாது என்பதை அறிந்த பிரம்மன், நாராயணனிடம் உதவி கோருகிறார். நாராயணன் தனது இருப்பிடம் வருமாறு வைகுண்டத்திற்கு பிரம்மனை வரவழைக்கிறார். பிரம்மன் இப்படித்தான் ஒவ்வொரு யுகம் படைக்கிறார். அதுபோலவே இந்த பெருவெடிப்பு கொள்கை மூலம் உருவாகும் இந்த பிரபஞ்சமும் இதே மாற்றங்களை கொண்டு அமையும்''

''இந்த பிரபஞ்சம் வைகுண்டத்தில் இருந்து உருவாக்கப்படுவதா, பெருவெடிப்பு கொள்கையா''

''வைகுண்டத்தில் இருந்து நடத்தப்படும் பெருவெடிப்பு கொள்கையும் அதைத் தொடர்ந்த விரிவாக்கமுமே பக்தா, இப்போது வருகிறாயா''

''இல்லை, அழைத்த தூரத்தில்தான் வைகுண்டம் இருக்கும் கதை எனக்குப் போதும்''

''பக்தா, அது ஒரு முட்டாள் அரசரை, ஒரு அறிவாளி மடக்கியது, ஆனால் நாராயணன் ஒளியை விட வேகமாக செல்லக்கூடியவர். இந்த பிரபஞ்சத்தில் அப்பாற்பட்டு இருக்கும் வைகுண்டத்தில் இருந்தே நமது தேவைகளை அவர் அறிய இயலும், அந்த தேவைகளை நிறைவேற்ற அவர் தேரில் வர வேண்டியது இல்லை. எனவே வைகுண்டம் அருகில் எல்லாம் இல்லை''

''ஒளியை விட வேகமாகவா''

''ஆம், இந்த பிரபஞ்சத்தில் பார்க்கும் ஒளி என்றோ வெளியிடப்பட்டது, அது நமக்கு வர பல்லாயிரம் வருடங்கள் ஆகும், ஆனால் நாராயணன் அப்படி அல்ல''

''அப்படிப்பட்ட வைகுண்டம் அடைய பல்லாயிரம் வருடங்கள் ஆகுமே''

''நமது உடலை கிடத்திவிட்டு ஆத்மா ஒளியை விட வேகமாக நாராயணன் நோக்கி செல்லும், சில வினாடிகளில் சென்று அடையும். வருகிறாயா''

''கிருஷ்ணர் தேர் மற்றும் உடலுடன் சென்றதாக தானே மகாபாரதம் குறிக்கிறது''

''கிருஷ்ணரின் உடல் இந்த பஞ்சபூதங்களால் ஆனது அல்ல. தேர் கூட இங்கிருக்கும் பொருளால் ஆனது அல்ல. இந்த பிரபஞ்சத்திற்கு அப்பால் இருக்கும் வைகுண்டத்தில் பஞ்ச பூதங்களே இல்லை. அங்கிருக்கும் நிலை வேறு, ஆமாம் கிருஷ்ணர் கதை சொன்னாயே, ராமர் கதை தெரியுமா''

''ராமர் என்ன செய்தார்''

''அப்படி கேள் பக்தா, ராமர், தனது மக்கள் அனைவருடன் வைகுண்டம் சென்றார், ஆனால் கிருஷ்ணர் தனது குலம் அழிந்து தான் மட்டுமே சென்றார்''

''அப்படியெனில் நீங்கள் மட்டுமே செல்லுங்கள், நான் வாழும் வரை பூலோக வைகுண்டம் சென்று வருகிறேன் அது போதும்''

எந்திருப்பா, படிக்க புத்தகம் கொடுத்தா தலைக்கு வைச்சா படுப்பே, சீக்கிரமா குளிச்சிட்டு வா கோவிலுக்கு போகலாம், இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி, ஏழு மணிக்கு சொர்க்கவாசல் திறந்திரும். 

சாமியார் சொன்ன சொர்க்கவாசல், வைகுண்டம் விட இந்த கோவில் சொர்க்கவாசல், வைகுண்ட ஏகாதசி எல்லாம் மிகவும் சுகம். எப்படியும் பிரசாதம் தருவார்கள். வேகமாக எழுந்து குளிக்க ஓடினேன். 

Thursday 26 September 2013

ஜீரோ எழுத்து 8 ( அணுக்களின் உலகம் )

'நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என நம்மில் பலர் மிகவும் எளிதாக சொல்லிக் கொள்வோம். ஆனால் நமக்குள் இருக்கும் வேறுபாடு சொல்லிமாளாது. இப்படித்தான் இந்தியாவின் பெருமை பெருமளவில் சீரழிக்கப்பட்டது. இந்த அணுக்கள் பற்றி கிரேக்கர்கள் தான் முதலில் சொன்னார்கள் என அவர்களை பெருமைபடுத்தி பார்த்தது மேலைநாட்டு உலகம். ஆனால் இந்தியர்கள் இந்த அணுக்கள் பற்றி அதிகம் தெரிந்து இருந்தார்கள், இருப்பினும் அணுக்கள் பற்றி அறிவித்தவர்கள் கிரேக்கர்களா, இந்தியர்களா எனும் சர்ச்சை இன்னமும் உண்டு. 

2600 வருடங்கள் முன்னரே இந்த அணுக்கள் பற்றி சொல்லித் தரக்கூடிய  பள்ளிகள் இந்தியாவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயின் சமயம் மிகவும் தழைத்தோங்கி இருந்த சமயம் அது. அஜிவிகா, கார்வகா, வைசேசிகா, நியாய போன்ற பள்ளிகள் அணுக்கள் பற்றியும் அணுக்கள் இணைந்தால் மூலக்கூறு உருவாகும் என்றெல்லாம் சொல்லி தந்தது. இதே சமயத்தில் கிரேக்கத்தில் தேமாக்ரிடுஸ், லூசிப்பஸ் போன்றோர்கள் அணுக்கள் பற்றி பேசினார்கள். 'அணுவை துளைத்து' என்றெல்லாம் தமிழில் பாடி வைத்து இருக்கிறார்கள். கிரேக்க தத்துவ மேதைகள் இயற்கை விதிகளை படித்து அணுவை சொன்னதால் முதல் அறிவியலார்கள் என சொல்லப்பட்டார்கள். ஆனால் வேதங்களில் கூட அணு பற்றிய செய்தி உண்டு. அணுவில் என்ன இருக்கும் எனும் அன்றைய சிந்தனை சற்று குறைவு அல்லது அது குறித்து அவர்கள் சொன்னது அழிந்து போயிருக்கலாம். 

200 வருடங்கள் முன்னர் தான் இந்த அணுக்களில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் கண்டு பிடித்தார்கள். டால்டன் கண்டுகொண்ட அணு, மென்டலீவ் இடம் விட்டு வரைந்த தனிம அட்டவணை எல்லாம் அறிவியலின் அதிசயம். வெற்றிடம் எதுவும் இல்லை என்பதுதான் இவர்கள் சொல்லாமல் சொன்னது. குவார்க்ஸ் எனும் அடிப்படை துகள்கள்  மூலமே இந்த புரோட்டான், நியூட்ரான் உருவானது என கணடுபிடித்தார்கள். அணுக்களின் உள்ள கருவில் இந்த புரோட்டான்கள்  இருக்கின்றன எனவும், இவைகளை சுற்றி எலக்ட்ரான்கள் வருகின்றன என ரூதர்போர்டு 1911ம் வருடம்  சொன்னபோதுதான் அணுக்கள் பற்றிய ஆராய்ச்சி மிகவும் சூடுபிடித்தது. சாட்விக் நியூட்ரான் கண்டுபிடித்தார். 1897ம் வருடம்  ஜே. ஜே. தாம்சன் எலக்ட்ரான் கண்டுபிடித்தார். 1912ம் வருடம் நீல்ஸ் போர் கண்டுபிடிப்பு எப்படியெல்லாம் எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன எனும் அறிவிப்பே குவாண்டம் கொள்கையின் ஒரு ஆரம்ப நிலை. பத்து பன்னிரண்டு வருடங்களில் குவாண்டம் இயற்பியல் மிகவும் பேசப்பட்டது. பால் டிரக் என்பவர் 1925ம் வருடம் குவாண்டம் இயக்கியல் உருவாக்கினார். 

1945ம் வருடத்திற்கு பின்னர் நூற்றுக் கணக்கான புது புது துகள்களை தற்போதைய அறிவியல் தொழில்நுட்பம் மூலம் கண்டு பிடித்தார்கள். இவைகள் ஹெட்றான் என அழைக்கப்பட்டன. புரோட்டான் மற்றும் நியூட்ரான் இவைகளில் அடக்கம். இருப்பினும் இந்த ஹெட்றான் குவார்க்ஸ் என அறியப்பட்டது. எலக்ட்ரான்கள் லெப்டான்கள் எனப்பட்டன. லெப்டான்கள் தனியாக இருக்கும், அதற்கு ஒரு இணைப்பு ஆற்றல் இல்லை. ஆனால் குவார்க்ச்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இணைப்பு ஆற்றலுடன் இருக்கும் என அறியப்பட்டது. 

குவார்கக்ஸ், குலான்ஸ் எனப்படும் துகள்களால் பிணைக்கப்பட்டு இருக்கும். இந்த குவார்க்ஸ் மேசான்ஸ், ப்ரையான்ஸ் என துகள்கள் உருவாக்கி பின்னர் ஹெட்றான்ஸ் துகள்களாக இருக்கும். ப்ரையான்ஸ் துகளே நியூட்ரான், புரோட்டான் என அறியப்பட்டது. ஒரு அணு எப்படி நிறை கொண்டது என்பதை அறிய தற்போது நிறைய பொருட்செலவில் நடத்தப்படும் ஆய்வில் கண்டறிய பட இருக்கும் போஸான் எனும் கடவுள் துகள் மேசாணில் இருந்து உருவானது. 

லெப்டான் தன்னில் ஆறுவகை கொண்டு இருக்கிறது. எலக்ட்ரான், மோவோ, டாவோ மற்றும் மூன்று வகை நியூட்ரினோக்கள். எலக்ட்ரான் எதிர் பாசிட்ரான் என்றெல்லாம் கண்டு சொல்லப்பட்டது. இவ்வாறு பல துகள்கள் கொண்டு இருக்கும் இந்த அணுக்கள் உலகம் மிக மிக விசித்திரமானது. அதைத்தான் குவாண்டம் கொள்கை சொன்னது. இந்த அணுக்களின் உலகம் முற்றிலும் வேறானது என. 

ஆறு குவார்க், ஆறு லெப்டான் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த உலகம், இந்த பிரபஞ்சம் எல்லாம். மூன்றே குவார்க் இணைந்து ஒரு நிறையை உருவாக்கி விட்டது என எண்ணினார்கள். புரோட்டன், நியூட்ரான்! இதை எல்லாம் தாண்டிய ஒரு அணுக்களின் உலகம் இருப்பதாக அறிவியல் நம்பத் தொடங்கியதுதான் குவாண்டம் கொள்கை. கருந்துளைகள் கண்டறியபட்டபோது அறிவியல் சற்று ஸ்தம்பித்து போனது.

(தொடரும் ) 

Monday 16 September 2013

ஜீரோ எழுத்து - 7 (குவாண்டம் இயக்கியலும், நிலையற்ற நியமமும்)

நிலையற்ற தன்மை அல்லது நிலையற்ற நியமம். ''ஒரு துகளின் உத்வேகத்தையும், அந்த உத்வேகத்தில் இருக்கும்போது உள்ள நிலையினையும் கண்டறிந்து கொள்வது என்பது முடியவே முடியாத ஒன்று. இக்கணத்தில் எக்கணமும் இல்லை'' கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலத்தைப் பிரித்து வைத்தார்கள். நேற்று, இன்று, நாளை இது நாள் கணக்கில் வரும் காலங்கள். நேர கணக்கிலும் சரி, வினாடி கணக்கிலும் சரி இந்த மூன்று காலங்களும் வந்தே தீரும். இதைத்தான் புத்தர் சொன்னார், இக்கணத்தில் எக்கணமும் இல்லை. புத்தர் சொன்னதைத்தான் ஹெய்ன்ஸ்பெர்க் எனும் அறிஞர் நிலையற்ற நியமம் என இயற்பியல் வாயிலாக சொன்னார். குவாண்டம் இயக்கியலில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த கருத்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த விசயமே சாதாரண இயற்பியல் விதிகளுக்கும் குவாண்டம் இயக்கியலுக்கும் உள்ள மாபெரும் வேறுபாடு என கண்டறியப்பட்டது.

நிகழ்தகவு என சொல்வார்கள். உலகில் கிட்டத்தட்ட எல்லா விசயங்களும் இரண்டாகவே பிரிபட்டு நிற்கும். ஒன்று, இல்லையேல் மற்றொன்று. தற்போது  அலைவடிவம் பெறாத துகள், துகள் வடிவம் பெற்றே இருக்க வேண்டும். அதாவது நாம் செயல்முறை பயிற்சி செய்யும்போது துகள் பெறக் கூடிய அலைவடிவம்தனை, நம்மிடம் இருக்கும் உபகரணம் கொண்டு அதை மாற்றிவிடும் பட்சத்தில் அலைவடிவம் மறைந்தாலும் அந்த துகள் எங்கு செல்கிறது என்பதை நாம் கண்டு கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும். அதைத்தான் நியூட்டன் ஒரு துகளின் உத்வேகத்தையும், உத்வேகத்தில் உள்ள நிலையினையும் கண்டு கொண்டால் அந்த துகள் எங்கு செல்கிறது என அறியலாம் என்றார். ஆனால் அது சாத்தியமற்ற ஒன்று என பின்னாளில் தெரிய வந்தது. இதனைக் கண்டறிய தமது வாழ்நாட்களில் அதிக நாட்கள் செலவிட்ட ஐன்ஸ்டீன் தோற்றுப் போனார். அப்படியே வரும் காலங்களில் எவரேனும் ஒருவர் ஒரு துகளின் இந்த உத்வேகம், உத்வேகத்தில் இருக்கும் நிலை என இரண்டையும் ஒரு சேர நிச்சயித்து விட்டால் இந்த குவாண்டம் இயக்கியலை மூடிவிட வேண்டியதுதான்.

பார்த்தார், ஹெய்ன்ஸ்பெர்க். இந்த இரண்டு நிலைகளை ஒரு  சேர நிச்சயிக்க முடியாது என சொல்லி 'ஹெய்ன்ஸ்பெர்க் நிலையற்ற நியமம்' என கணக்கு போட்டு காண்பித்துவிட்டார். முதன் முதலாக  நிலையற்ற நியமம் என்ற வார்த்தையை சொன்னது எட்டிங்க்டன் என சொல்வோர் உண்டு. நிலையற்ற நிலையில் x , நிலையற்ற உத்வேகம்  p இருக்கும். xp>h/4pi h = ப்ளான்க் மாறிலி. இந்த பிளான்க் மாறிலி என்பது 6.63 x 10 -34 ஜூல்ஸ்/வினாடி. E= hv அப்படிங்கிற சமன்பாட்டினை காண்பித்தவர் இந்த மாக்ஸ் ப்ளான்க். கதிரியக்க ஆற்றலை பற்றி குறிப்பிட்டார் அவர். நாம் முதன் முதலில் குறிப்பிட்ட ஆற்றல் சிறு சிறு பகுதியாய் வரும் என்பதை சொல்வதுதான் இந்த சமன்பாடு. சாதாரண இயற்பியல் விதிகளுக்கு உட்படாத விசயங்களை பற்றி குறிப்பிடவே இப்படி ஒரு சமன்பாட்டினை ப்ளான்க் வெளியிட்டார் எனும் குற்றசாட்டு முதலில் எழுந்தது. ஐன்ஸ்டீன் பின்னர் ஒளியின் ஆற்றலை இதே சமன்பாட்டினை கொண்டு விளக்கினார். ஒளி ஆற்றல் போட்டான்களாக வெளிவருகிறது என்பதை அறிந்ததும் இயற்பியல் விழித்துக் கொண்டது. என்னதான் இந்த குவாண்டம் கொள்கையை ஐன்ஸ்டீன் நம்பத்தகுந்த கொள்கையாக மாற்றினாலும் இது ஒன்று மட்டுமே இந்த இயற்கை உலகினை விளக்க கூடியது என்பதை ஐன்ஸ்டீன் ஒருபோதும் நம்பியது இல்லை. பிற்காலத்தில் ப்ளான்க் நீளம், ப்ளான்க் நேரம் என கண்டுபிடித்தார்கள். வினாடி, மில்லிவினாடி, மைக்ரோவினாடி என ஒரு காலகட்டத்திற்கு மேல் வினாடியை உடைக்க முடியாது என சொன்னார்கள்.

மீண்டும் செயல்முறை பயிற்சிக்கு வருவோம். இந்த துகள்களின் உத்வேகம், நிலை  குறித்து ஒரு செயல்முறை செய்து பார்க்கலாம் என்றார்கள். அதாவது இரண்டு துகள்களை ஒன்றுடன் ஒன்று மோத விடுவது. மோதிக்கொண்ட துகள்கள் எதிரெதிர் திசையில் செல்லும். வெளிக்காரணிகள் ஆதிக்கம் இல்லாத பட்சத்தில் இரண்டு துகள்களின் உத்வேகம், நிலை ஒரே மாதிரி இருக்கும் என்பது இயற்பியல் விதி. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு துகளின் உத்வேகமும், மற்றொரு  துகளின் நிலைதனையும் நிச்சயித்து விடலாம் என சொன்னார்கள். ஆக மொத்தம் கள்ளாட்டம் ஆடி துகளின் இரண்டு நிலையை சொல்லலாம் என நினைத்தார்கள். ஆனால் இவை எல்லாம் ஏதேனும் துகள்கள் ஒளியினை விட வேகமாக சென்றால் மட்டுமே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்கள். ஐன்ஸ்டீனின் சார்பு கொள்கை படி ஒளியை விட வேகமான துகள்கள் இது சாத்தியமில்லை என்றாகிறது. (நியூட்ரினோ துகள் ஒளியை விட வேகம் என தற்போது கண்டுபிடித்ததாக ஒரு குறிப்பு உண்டு)

இந்த செயல்முறை பயிற்சியை செய்தே தீர வேண்டும் என ஒரு பிரெஞ்சு அறிவியலாளர் செய்து பார்த்தார். ஹெய்ன்ஸ்பெர்க் என்ன சொன்னாரோ அதையே சொல்லி ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய துகள் இருந்தாலும் உத்வேகம், உத்வேகத்தில் உள்ள நிலை என இரண்டும்  ஒரு சேர நிச்சயிப்பது சாத்தியமில்லை என முடித்து கொண்டார். ''The particles do not communicate by any means we knew about. All we know is that every particle knows what every other particle it has ever interacted with is doing''

''விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை''. இந்த வாக்கியம் பலமுறை கேள்வி பட்டு இருப்போம். இந்த வாக்கியத்தைத்தான் துகளின் உத்வேகம், நிலைத்தன்மை பற்றி குறிப்பிடுகிறார்கள். விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை அப்படிங்கிற விசயத்தை எப்படி ஒருவர் சொல்ல இயலும். இந்த விசயம் சொன்னவர் ஏதேனும் செயல்முறை பயிற்சி செய்து பார்த்தாரா என்றெல்லாம் குறிப்புகள் இல்லை. ஆனால் இந்த வாக்கியத்தின் உட்பொருள் தனை எவரேனும் உடைத்து விடுவாரெனில், அதாவது விண்டவர் கண்டார், கண்டவர் விண்டார், இறைவனை மூடி விட வேண்டியதுதான்.

எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே துகள் துகளாக அல்லது அலையாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம். ''உண்மையை யார் உண்மையிலேயே உண்மையாக கண்டறிந்தது என்பது மனித வாழ்வில் ஒரு பெரும் கேள்விக்குறிதான்' ஆனால் இந்த குவாண்டம் இயற்பியல் சொன்னது நாம் என்ன காண்கிறோமோ அல்லது அளக்கிறோமோ அதுவே உண்மை. ஆனால் கேள்வி நீண்டு கொண்டே போகும். அப்படியெனில் நமது உபகரணம் சரியானதா? வேறு உபகரணம் இருந்தால் என்ன கிடைக்கும் என்பது போன்று. இதைத்தான் 'No Analysis is better than the sample itself' என்று சொன்னார்கள்.  கடவுள் இவ்வுலகை படைத்தார் எனில் கடவுளை யார் படைத்தார் என்றே பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். பெரு வெடிப்பு கொள்கை முன்னர் என்ன இருந்தது என அறிவியலிடம் கேட்டால் இயற்பியல் விதிகளுக்கு உட்படாத தன்மை இருந்தது அதையே இந்த குவாண்டம் இயற்பியல் சொல்ல வருகிறது என்கிறார்கள்.

ச்ச்ரோடிங்க்ர் எனும் அறிஞர் நம்மைப் போலவே குவாண்டம் இயற்பியல் பற்றி புரிந்து கொள்ள முடியாது திணறினார். இருப்பினும் குவாண்டம் இயற்பியல் சொல்லும் உலகை நாம் காண இயலாது என்பதை நிரூபிக்க ஒரு செயல்முறை பயிற்சி சொன்னார். அதைத்தான் ச்ச்ரோடிங்க்ர் பூனை செயல்முறை பயிற்சி என சொல்கிறார்கள்.

ஒரு பெட்டி. அந்த பெட்டிக்குள் ஒரு கதிரியக்க ஐசோடோப். கதிரியக்கம் அளக்கும் ஒரு கருவி. ஒரு சயனைடு சீசா. இப்போது கதிரியக்கத்தை அந்த ஐசோடோப் வெளிவிட, அதை இந்த கருவி அளக்கும், கதிரியக்க அதிகரிப்பால் சயனைடு சீசா உடையும், சயனைடு சுவாசித்து பூனை இறக்கும். இப்போது அந்த ஐசோடோப் கதிரியக்கத்தை உமிழவில்லை எனில் பூனை உயிருடன் இருக்கும். இப்போது நமக்கு அந்த பெட்டியை திறந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். அதுவரை பூனை உயிருடன்  இருக்கலாம், அல்லது இறந்து போயிருக்கலாம். தற்போது கதிரியக்கக் கருவி அவசியமற்ற ஒன்று, ஏனெனில் பூனையே ஒரு கருவியாக இங்கே இருக்க வாய்ப்பு உண்டு. ஒரு நிலையை உடைக்கும் தன்மை நாம் பார்ப்பதில் இருக்கிறது, ஆனால் அதை நாம் பார்க்கும்வரை நிச்சயிக்க முடிவது இல்லை. புலி இருக்கிறதா, புலித்தோல் போர்த்திய பசு இருக்கிறதா என்பது நாம் கண்டுகொள்ளும்வரை தெரிவதில்லை. அறிஞர்கள் பார்த்தார்கள், இது மிகவும் வில்லங்கமாக இருக்கிறதே என பாதி செத்த பூனை என சொல்லி வைத்தார்கள், இருப்பினும் அளவுகோல் எது என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. ச்ச்ரோடிங்க்ர் சொன்னார் ''I don't like it, and I am sorry I ever had anything to do with it''. முடிவிலி பற்றி கேள்வி பட்டு இருப்போம். முடிவிலியால் முடிவிலி கொண்டு வகுக்க விடை வரையறுக்க முடியாதது. கணக்குதனில் மதிப்பிலா ஒன்றை புறக்கணித்து விடுவார்கள். 'Let us ignore, it is negligible' ஆனால் குவாண்டம் இயக்கியல் சொல்கிறது, 'Don't ignore because it has infinite energy, infinite charge and  infinite mass'.

இப்படி குவாண்டம் இயக்கியல், இயற்பியல் தனது பங்குக்கு இவ்வுலகம் தோன்றிய இயற்கையை பற்றி விவரித்துக் கொண்டிருக்க சில அறிஞர்கள் ஒரு உலகம் மட்டுமே இல்லை, பல்வேறு உலகங்கள் உண்டு என சொல்லவும் செய்தார்கள். பூலோகம், மேலோகம், பாதாள உலகம் என்று இருக்க எதற்கும் அணுக்களின் உலகம் குறித்து அடுத்துப் பார்ப்போம்.

அதற்கு முன்னர் ஒரு சூப்பர் ஹீரோ காத்துக் கொண்டு இருக்கிறார்.

(தொடரும்)

Thursday 12 September 2013

ஜீரோ எழுத்து - 6 ( குவாண்டம் கோட்பாடு)

நம்மை எவரேனும் கவனித்துக் கொண்டு இருக்கிறார் என வைத்துக் கொள்வோம், அப்போது நமது செயல்பாடு எப்படி இருக்கும்? அதே வேளையில் நம்மை எவரும் கவனிக்கவில்லை என வைத்துக் கொள்வோம் நமது செயல்பாடு எப்படி இருக்கும்?

இப்போது ஒரு ஒழுங்குமுறை எதில் இருக்கும்? எவரேனும் கவனித்துக் கொண்டு/ பார்த்துக் கொண்டு இருந்தால் மட்டுமே அதில் பெரும்பாலானவர்களில் ஒழுங்குமுறை இருக்கும், இல்லையெனில் தறிகெட்டுதான் திரிவார்கள். உதாரணத்திற்கு சாலைகளில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அந்த சாலையில் அதிக வேகம் இவ்வளவுதான் செல்லலாம் என இருக்கும். பெரும்பாலான காரோட்டிகள் இந்த கேமரா அருகில் வரும்போது மட்டும் குறிப்பிட்ட வேகத்தில் செல்வார்கள், அதற்கு பின்னர் அவர்களின் இஷ்டப்படிதான். இது ஒரு உதாரணம். இதைப்போலவே பல உதாரணங்கள் உண்டு. இதைத்தான் குவாண்டம் கோட்பாடு சொல்ல வருகிறது.

குவாண்டா என்றால் மிக மிக நுண்ணிய துகள்/அலை, அதாவது ஆற்றலின் ஒரு பகுதி என்றே கொள்ளலாம். இப்படிப்பட்ட பகுக்க முடியாத ஆற்றல் குறித்து விளக்கும் கோட்பாடுதான் குவாண்டம் கோட்பாடு. இப்போது குவாண்டம் கோட்பாடு பல்வேறு பரிமாணம் எடுத்துக் கொண்டு வருகிறது. அது குறித்து இப்போதைக்கு  தள்ளிப் போடுவோம்.

குவாண்டம் கோட்பாட்டில் ஐந்து விசயங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

1. ஆற்றலானது தொடர்ச்சியாக இல்லாமல், சிறிது சிறிதாக அதுவும் வெவேறான நிலையில் இருக்கும்.

நமது மீது பாயும் ஒளியானது தொடர்ந்து வந்து விழுந்தாலும் அவை ஒரு பகுதி பகுதியாகவே வரும். அதைத்தான் போட்டான் என குறிப்பிடுகிறார்கள். குவாண்டா அந்த போட்டானின் ஒரு சிறு பகுதி. ஒரு படம் எப்படி புள்ளிகள் இணைந்து உருவாகிறதோ அதைப் போலவே இந்த ஆற்றல் புள்ளிகளாக இருக்கிறது. இது எப்படி சாத்தியம் எனில் ஒரு அணுவில் வெளி ஆர்பிட்டலில் இருக்கும் எலக்ட்ரான்கள் வெவ்வேறு ஆற்றல் நிலை கொண்டு இருக்கின்றன என கண்டறியப்பட்டு இருக்கிறது. அதோடு மட்டுமில்லாது  அவை ஓரிடத்தில் நில்லாமல் மேலும் கீழும் குதித்துக் கொண்டு இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் பல்வேறு வண்ணங்கள் காண முடிகிறது.

2. அடிப்படைத் துகள்கள், இரட்டைத்தன்மை கொண்டது, அதாவது அலைகளாகவும், துகள்களாகவும் செயல்படும்.

இதற்கு ஒரு செயல்முறை பயிற்சி செய்தார்கள். தற்போதைய காலகட்டத்தில் எல்கட்ரானை துல்லியமாக கண்டறியும் கருவி நம்மிடம் இல்லை. அதனால்  நியூட்ரான் கொண்டு செயல்முறை செய்து பார்த்தார்கள்.

ஒரு அறை. அந்த அறையின் மத்தியில் இரண்டு துவாரங்கள் உள்ள சுவர். அந்த பக்கம் மணல் மூடை, இந்த பக்கம் ஒரு துப்பாக்கியுடன் உள்ள நபர். இப்போது ஒரு துவாரம் மூடப்படுகிறது. சுவருக்கு அருகில் இருந்து சுடும் போது திறக்கப்பட்ட துவாரத்தின் வழியின் மத்தியில் பல குண்டுகள் செல்லும். கணிப்பு மிகவும் துல்லியம். சற்று தள்ளி சென்று சுடும்போது அனைத்தும்  துவாரத்தின் மத்தியில் செல்ல வாய்ப்பு இல்லை. இப்போது மறு துவாரம் மூடப்படுகிறது. மூடப்பட்ட துவாரம் திறக்கப்படுகிறது. அதே விடை கிடைக்கிறது. ஏனெனில் இருப்பது ஒரு திறந்த துவாரம் மட்டுமே. இப்போது இரண்டு துவாரங்களை திறப்போம். முன்னர் மாதிரி சில குண்டுகள் இரண்டு துவாரங்கள் மத்தியில் செல்லும், ஒரு குண்டு ஒரு துவாரத்தில் மட்டுமே செல்லும். ஏனெனில் இந்த குண்டுகள் பருமப் பொருள் மட்டுமே எனவே ஒரே நிலைதான். இப்போது இந்த செயல்முறை பயிற்சியில் முக்கியமானது எந்த குண்டும் துவாரத்தைத் தவிர மற்ற இடத்தில் பட்டு திரும்பாது எனும் ஒரு கட்டுப்பாடு.

அதைப் போன்றே அலைகள் இப்போது செலுத்தப்படுகிறது. ஒரு துவாரம் மூடப்படுகிறது. எப்படி குண்டுகள் சென்றதோ அதைப் போன்றே அலைகள் செல்கிறது. மறு துவாரம் மூடி, மூடப்பட்ட துவாரம் திறக்கபடுகிறது, மீண்டும் அதே போன்ற முடிவு. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இப்போது இரண்டு துவாரங்கள் திறக்கப்படுகிறது. இப்போது முதலில் ஒரு துவாரம் திறக்கப்பட்டபோது இருந்த பதில் இல்லாமல், ஒரு அலை வடிவம் தென்படுகிறது. இப்போது அலையின் உயரம் அதிகமாக தென்படுகிறது. இதற்கு காரணம், இரண்டு துவாரங்கள் வழியாக சென்ற அலைகள் இணைந்து ஒரு பெரிய அலையை உருவாக்கிவிட்டது. அதற்கு பின்னர் சின்ன அலை. சில இடங்களில் அலைகள் சேர்ந்து பெரிதாகவும், சில இடங்களில் அலைகள் சேர்ந்து ஒன்றுமில்லாமலும் ஆகும்.

இந்த குண்டுகள், மற்றும் அலைகள் செயல்படும் விதத்தை அடிப்படைத் துகள்கள் ஒரு சேர செய்கின்றன என்பதுதான் குவாண்டம் கோட்பாடு. உதாரணத்திற்கு எலக்ட்ரான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எலக்ட்ரான்கள் எதிர்மறைத் தன்மை கொண்டவை. இப்போது ஒரு துவாரம் திறக்க இந்த எலக்ட்ரான்கள் குண்டுகள் போன்றும், அலைகள் போன்றும் எப்படி ஒரு துவாரம் திறந்து இருந்ததோ அதைப் போன்றே செயல்பட்டன. இரண்டு துவாரங்கள் திறந்தபோது இந்த எலக்ட்ரான்கள் அலைகள் போன்றே செயல்பட்டன. ஒவ்வொரு எலக்ட்ரானும் மோதிக் கொள்வதால் இருக்கும் என்றே ஒரு ஒரு எலக்ட்ரான் மட்டும் செல்லுமாறு செயல்முறை செய்யப்பட்டது. அப்போதும் அவை அலைகள் போன்றே செயல்பட்டன. இதை கண்டறிய ஒளியை பயன்படுத்தினார்கள்.

ஒரு எலக்ட்ரான் செல்லும்போது இந்த ஒளியினால் வெளிச்சம் தரும். எனவே எலக்ட்ரான்கள் எந்த வழியில் செல்கிறது என கண்டறிய முற்பட்டார்கள். சுவற்றின் பின்புறம் விளக்கு வைக்கப்பட்டது. எலக்ட்ரான் ஆச்சரியமூட்டும் வகையில் குண்டுகள் போன்றே ஒரே ஒரு துவாரத்தில் சென்றன. இதற்கு என்ன காரணம் என அறிய முற்பட்டபோது ஒளியின் இடையூறு என அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் ஒளியின் தன்மையை குறைத்தார்கள். ஆற்றல் பகுதி பகுதியாய் வருவது என குறிப்பிட்டு இருந்தோம். இப்போது எலக்ட்ரான்கள் ஒளியின் தன்மை குறைந்ததால் ஒளியானது எலக்ட்ரானில் படும்போது குண்டுகள் போன்றும், ஒளியில் இருந்து தப்பிக்கும் எலக்ட்ரான்கள் அலைகள் போன்றும் செயல்பட்டன. முதலில் எழுதிய பத்தியை திருப்பி வாசியுங்கள். நம்மை கவனிக்கும்போது நமது செயல்பாடு, நம்மை கவனிக்காமல் இருக்கும்போது நமது செயல்பாடு!

தற்போது ஒளியின் வேகத்தை (சீரான அளவு எனினும்) குறைத்தார்கள். அதாவது ஒளியலையின் நீளம் அதிகரிக்கப்பட்டது. இப்போது ஓரளவு ஒளியலை நீளம் குறைக்கப்பட்டபோது குண்டுகள் போன்றும், மேலும் ஒளியலை நீளம் குறைக்கப்பட்ட போது அலைகள் போன்று செயல்பட்டது. இந்த செயல்முறை பயிற்சி சொன்னது இதுதான். எதைக் கண்டறிய வேண்டுமோ அதற்குரிய செயல்முறை பயிற்சி இல்லாமல் ஒன்றை சொல்ல முடியாது. நாம் செய்யும் செயல்முறை பயிற்சி குறித்தே ஒன்று இருப்பது, இல்லாதது தெரியும்.

இப்போது ஜீவாத்மா, பரமாத்மா. இதற்குரிய செயல்முறை பயிற்சி யோகம் என்றும், தியானம் என்றும் சொல்கிறார்கள். பரமாத்மா, ஜீவாத்மாவாக வந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. விஸ்வரூப தரிசனம் என்றெல்லாம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு அணுத்துகள் எப்படி துகளாகவும், அலையாகவும் செயல்படும் என குவாண்டம் கோட்பாடு சொல்கிறதோ அதைப்போலவே ஆத்மா ஜீவாத்மா, பரமாத்மா என செயல்படும் என மெஞ்ஞானம் சொல்கிறது. குவாண்டத்தின் இந்த முக்கிய கோட்பாட்டை மறுப்பவர்கள் கடவுளை தாராளமாக மறுக்கலாம். ''If you want to say that something behaves a certain way or even exists, you must give the context of this behaviour or existence since in another context it may behave differently or not exist at all'' யோகிகளின், மகான்களின் மனநிலைக்கு கடவுள் தெரிந்து இருக்கலாம். அதைத்தான் அவர்கள் சொன்னார்கள். நாம் நமது நிலையில் இருந்து கொண்டு கடவுள் இல்லை என சொன்னால் அது நமது நிலைக்கு சரியாகவே இருக்கும்.

3. இந்த அடிப்படைத் துகள்கள் ஒழுங்குமுறையின்றி செல்லும் தன்மை கொண்டது.

4. ஒரு துகளின் உத்வேகத்தையும், அந்த உத்வேகத்தில் இருக்கும்போது உள்ள நிலையினையும் கண்டறிந்து கொள்வது என்பது முடியவே முடியாத ஒன்று. கருவிகள் இல்லாதபட்சத்தில் அதாவது ஓடிக்கொண்டிருப்பவர் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் எவ்வளவு வேகமாக ஓடினார் என அறிந்து கொள்வது சிரமம். இவை இரண்டில் ஒன்றை துல்லியமாக அறிந்து கொள்ள நினைத்தால் மற்றொன்று பிழைத்துப் போகும். ''இக்கணத்தில் எக்கணமும் இல்லை''

5. நாம் இப்போது கண்டு கொண்டு இருக்கும் உலகமும், அணுக்களின் உலகமும் முற்றிலும் வெவ்வேறானவை.

எப்போது ஒரு துகள் துகளாகவும், அலையாகவும் இருக்கும். ஆச்சரியப்படாதீர்கள். எப்போது துகளாக பார்க்கிறோமோ அப்போது துகளாக இருக்கும், எப்போது அலையாக பார்க்கிறோமோ அப்போது அலையாக இருக்கும். நாம் பார்க்கும் முறையை பொருத்தது என்றார் ஒரு அறிஞர். ஒன்றை பார்க்காதவரை அது உண்மை இல்லை என்றார் அவர். எனக்கு  பல நேரங்களில் அறிவியலாளர்கள் முட்டாள்கள் போன்றே காட்சி அளிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் தெரியும் உண்மை என்னவென்று.

ஒரு நாயை கல்லில் சிலை வடித்த கதை, நமது கிராமங்களில் மிகவும் பிரபல்யம். கல்லில் வடிக்கப்பட்ட சிலை கண்டு, இது கல்லோ, நாயோ என்றே எண்ணி, கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என பாடி வைத்தார்கள். கடவுளுக்கு என இது தெய்வம் என்றால் தெய்வம், சிலை என்றால் அது சிலைதான் என எழுதி வைத்தார்கள். ஆனால் உண்மை எது? ஒரு கல், அது சிலை. இப்போது நாயும், தெய்வமும் நாம் பார்ப்பதில் இருக்கிறது. அடிப்படையில் துகள்கள் துகள்கள்தான். செயல்முறை பயிற்சியில் துகள்களைத்தானே துவாரங்கள் வழியாய் செலுத்தினாய் என்றே கேட்க வேண்டும் போல் இருக்கிறது!

குவாண்டம் கோட்பாடு எனக்கு மிக மிக சரியாகப் புரிந்துவிட்டது,  இன்னும் எனது முட்டாள்தனம் நிச்சயமாக சிறிது நாட்கள் பின்னர் தொடரத்தான் செய்யும்.

(தொடரும்)


Wednesday 11 September 2013

ஜீரோ எழுத்து - 5 குவாண்டம் கொள்கையும் மூடத்தனமும்


 ''இது தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கை'' - ஐன்ஸ்டீன்

''எப்படி எப்படி நடக்குமோ, அப்படி அப்படியே நடக்கும்'' - வழக்கு மொழி

''கிடைக்கிறது கிடைக்காம போகாது, கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது'' - ரஜினி பட வசனம்

''கடவுள் தாயக்கட்டையை உருட்டுவதில்லை'' - ஐன்ஸ்டீன்

''மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்'' - வழக்கு மொழி

''வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன், திணை அறுப்பான்'' - வழக்கு மொழி

''அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்'' - வழக்கு மொழி

மேலே சொன்ன விசயங்கள் எல்லாம் ஒரு துக்கிரித்தனமாக இருக்கும்.  இது போன்ற பல சொல்லப்பட்ட விசயங்கள்  மூடத்தனமான கருதப்படுகின்றன. இந்தியாவில், ஏன் இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் தத்துவ மேதைகள் போலவே காட்சி அளிக்கிறார்கள். இதில் பெரும்பாலோனோர் வாழ்க்கையை மிகவும் சர்வ சாதாரணமாய் வாழ்ந்துவிட்டு போவார்கள்.

அணுக்கொள்கை பற்றி கிரேக்கம் சொன்னது இது தான். ''ஒன்றை வெட்ட வெட்ட சின்ன துகள்கள் ஆகும். அதை மேலும் மேலும் வெட்ட அதை வெட்ட இயலாத நிலை ஒன்றை  அடையும்'' இப்படி எண்ணற்ற விசயங்கள் நினைவில் இருந்து வந்தவைதான்.

''ஒளியைவிட வேகமாக செல்லும் துகள்களோ, அலைகளோ இல்லை'' - ஐன்ஸ்டீன்

பொதுவாக ஒரு விசயத்தை சொன்னால் அதற்கான செயல்பாட்டு முறை அவசியம், அதாவது நிரூபிக்கும் வழி முறை. கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க பல சோதனைகள் கடவுளே நடத்துவதாக சொல்லப்பட்டு வருகிறது.இவ்வாறு அறிவியலில் சொல்லப்பட்ட விசயங்கள் பல செயற்முறை பயிற்சி மூலம் நிரூபிக்க பட்டு கொண்டு இருக்கிறது.

கீழே சொல்லப்பட்ட வாக்கியங்கள் மிகவும் விசித்திரமானவை. ஒன்றில் இருந்தே மற்றொன்று தொடங்கும் என்பதற்கான ஒரு தொடர்பு.

 ''நெருப்பில்லாமல் புகையாது''

''அறிவியல் யூகம் சொல்லும்''

''அறிவியல் தாயக்கட்டை உருட்டும்''

ஒரு நாணயத்தை, தலை பூ என இருந்தால், சுற்றிவிடும் போது  ஒன்று தலை விழும். அல்லது பூ விழும். இதைத்தான் அறிவியல் சொல்கிறது. ஆனால் எப்போது தலை விழ வேண்டுமோ அப்போது மட்டுமே தலை விழும் என்பதுதான் தீர்மானிக்கப்பட்ட விசயம். இதை வைத்தே ''கடவுள் தாயக்கட்டை உருட்டுவதில்லை'' என்றார்.

''குவாண்டம் கொள்கை'' இந்த உருட்டலைத்தான் சொல்கிறது. குவாண்டம் கொள்கையானது சொல்லப்படும் யூகம் ஓரளவுக்கு சரியே என்பாரும் உளர். ஆனால் இந்த குவாண்டம் கொள்கையினை நிரூபிக்க கூடிய செயல்பயிற்சி முறை இன்னமும் கிட்டவில்லை. இதனால் இதை ஒட்டிய ஷ்ட்ரிங் தியரியை கடுமையாக விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்த குவாண்டம் கொள்கை அறிவியலின் மூடத்தனம் என்றே சொல்லவும் செய்கிறார்கள். அறிவியலால் நிரூபிக்க முடியாத விசயங்களை இந்த குவாண்டம் கொள்கையின் தலையில் கட்டிவிட்டதாகவும், இதற்காக செலவிடப்படும் பணம் ஊதாரித்தனமான செலவு எனவும் சொல்கிறார்கள்.

ஆமாம், குவாண்டம் கொள்கை என்றால் என்ன? இந்த குவாண்டம் கொள்கையை உருவாக்கியவர் சொன்னார், குவாண்டம் கொள்கையை புரிந்து கொண்டேன் என எவரேனும் சொன்னால் அவரைப் போல முட்டாள் எவரும் இல்லை.

குவாண்டம் கொள்கை எனக்கு மிக மிக சரியாக புரிந்து விட்டது. எனது முட்டாள்தனத்தை சிறிது நாட்கள் பின்னர் பார்க்கலாம்.

(தொடரும்) 

Thursday 4 August 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 3

குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படும் ஜோதிடம் எனப்படும் கலை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது பெருமளவு உண்மைதான். நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பலர் சுவாரஸ்யத்திற்காக ஜோதிடம் பார்ப்பது உண்டு, படிப்பது உண்டு. முக்காலமும் உணர்ந்த முனிவர்களை காட்டும் கண்ணாடி அல்லவா அது! பல நேரங்களில் கண்ணாடி சரிவர காமிப்பது இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

இந்த ஜோதிடத்தை நம்பி மோசம் போனவர்கள் உண்டு, அதே வேளையில் லாபம் அடைந்தவர்கள் உண்டு. லாபம் அடைந்தவர்கள் பெரும்பாலும் ஜோதிடம் சொல்பவர்கள்தான். இந்த ஜோதிடம் சொல்லும் பாடம் ஒன்றுதான். வாழ்க்கையானது ஒரு நிகழ்தகவு. வாழ்க்கை ஒரு வாய்ப்பு.

சிலருக்கு ஒரே மாதிரியாக, அது நல்லவிதமோ, கெட்ட விதமோ, அல்லது இரண்டு நிலைகளிலும் உட்பட்டோ அமைந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு சக்கரம். அது சுழன்று கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

எங்கு தொடங்கியதோ அங்குதான் முடியும் என்பதுதான் முக்காலம் உணர்த்தும் ஒரு செய்தி. இடுகாடோ, சுடுகாடோ எங்கு சுற்றினாலும் இங்குதான் வரவேண்டும் எனும் மொழி வழக்கு உண்டு.

'உன்னை மட்டும் என் வாழ்வில் பார்க்காது இருந்து இருந்தால் எனது வாழ்கை அஸ்தமனமாக போயிருக்க கூடும்'

'இவர் மட்டும் இல்லாது போயிருந்தால் உனது வாழ்க்கை நரகமாகி இருக்க கூடும்'

'இவரால் தான் உனது வாழ்க்கையே இப்படி நரகமாகிப் போனது'

இப்படிப்பட்ட வசனம் பேசும் பலரை நாம் காணலாம். இது போன்ற வரிகளை எல்லாம் சற்று அலசி பார்த்தால் மனிதர்களின் மனம் போடும் கணக்கு மிகவும் தவறாகவே இருக்கிறது!

அடுத்த நொடி என்ன, அடுத்த யுகத்தையே நிர்ணயிக்கும் வல்லமை முனிவர்களிடம் இருந்திருக்கிறது என்கிறது புராணங்கள். அதாவது 'பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' போல.

அவதாரங்கள் எல்லாம் பார்த்தால் ஒரு தீயவர் படைக்கப்படுவார், அல்லது உருவாகுவார், அந்த தீயவரை, தெய்வம் அவதாரம் எடுத்து திருத்தும் அல்லது பெரும்பாலும் கொல்லும்!

'மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்'

காலை எழுந்தவுடன் ஒரு இயந்திரம் போல் பணியாற்றும் நமது நிலையை பாருங்கள். இரவு வந்ததும் என்ன என்ன செய்தோம் என நினைத்து பாருங்கள். ஒரு நாளுக்கு மற்றொரு நாள் வித்தியாசமாக இருக்கிறதா என எழுதி வைத்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு விசித்திரமா! வாழ்க்கை ஒரு சித்திரமா!

இன்று இதை இதை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு எதுவுமே செய்ய இயலாது போனால் வாழ்க்கை ஒரு விசித்திரம்.

என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதையே செய்து முடித்தால் வாழ்க்கை ஒரு சித்திரம்.

கவன குறைவு தான் பல பேராபத்துகளுக்கு காரணம். இது தவறு என்று தெரிந்து செய்யும் குணாதிசயம் உடையவன் மனிதன். முயற்சி என்பதன் அர்த்தம் பல நேரங்களில் தவறாகவே இருக்கிறது. இந்த முயற்சியினை முறையாக செயல்படுத்த தெரியாமல் அழிவுக்கு உட்பட்ட விசயங்கள் பற்பல. அதன் பொருட்டே இந்த உலகம் பொருளாதார சீரழிவுக்கோ, கலாச்சார சீரழிவுக்கோ உட்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.  என்ன சொல்லி வைத்தார்களாம்! கலியுகம்!

சிந்தனைகளின் வலிமை பற்றி ஒரு பெரும் கருத்து உண்டு. அதாவது ஒரு சிந்தனை வலுப்பெற அதை பின்பற்ற பலர் தேவை. அப்படி இல்லாது போனால் அந்த சிந்தனை அழிந்துவிடும்.

இதில் அந்த சிந்தனை உண்மையா, பொய்யா என்பதை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் தேவை இல்லை. உலகில் உள்ள மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நம்பினாலே போதும், அது அப்படி அப்படியே பரவி அந்த சிந்தனை வலுப்பெறும் என்பதுதான் காலம் உணர்த்தும் செய்தி.

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்கள் தொகை எத்தனை?!

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்களின் சிந்தனை எத்தகையது?!

அப்படியே பெருக்கி கொண்டே போவோம். நான்காயிரம், எட்டாயிரம், பதினாறாயிரம்!

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் மிகவும் அதிசயிக்க வைக்கத்தான் செய்கிறார்கள்!

(தொடரும்)


Saturday 25 June 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 2


இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா? மனிதரின் எண்ணங்கள்.

இது எங்களுக்கு தெரியாதா? என உங்கள் மனம் நினைத்தால் அதுதான் இந்த சிந்தனைக்கு கிடைத்த வெற்றி. ஏனெனில் வேறு ஏதேனும் இருக்க கூடுமோ என மனம் கணக்கு போடத் தொடங்குகிறது. என்னவாக இருக்க கூடும் என்பதில் மனதின் எண்ணங்கள் அலைபாயத் தொடங்குகிறது. இது ஒரு சாதாரண மனிதரின் மன நிலை.

சற்று அதிகப்படியான சிந்தனையாளரின் மனநிலை என்ன செய்யும்? 

என்னவாக இருக்க கூடும் எனும் வினாவில் இருந்து வெளியேறி இதுவாகத் தான் இருக்கும் என கணக்கு பண்ண தொடங்குகிறது. பல விசயங்களை இதனுடன் இணைத்து கொள்கிறது. இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான விசயத்திற்கு உறுதுணையாக இருப்பவைகளை கணக்கில் எடுத்து கொண்டு திட்டவட்டமாக இதுதான் என நினைத்து விடுகிறது. 

ஒருவர் நமக்கு தீங்கு இழைக்கிறார். இது நிகழ்கால நிகழ்வு. எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க தயாராகிறோம். எப்படி? இந்த மனிதர் கெட்டவர். எனவே அவர் எதிர்காலத்திலும் கெட்டவராகவே இருப்பார் எனும் ஒரு எண்ணம் உறுதியாகிறது.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் எதிர்காலத்தை தீர்மானிக்கிறோம். இதே போலவே இறந்தகாலமும் தீர்மானிக்கப்படுகிறது. நிகழ்கால நிகழ்வுகளை கொண்டே எதிர்காலமும், இறந்தகாலமும் நிர்ணயிக்கப்படுகிறது. 

இப்படித்தான் இந்த உலகம் நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு விசயங்கள் மனிதர்களின் மனதில் ஊசலாடி கொண்டு இருக்கின்றன. இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவது இதனால்தான். 

'இப்படித்தான் எனது வாழ்க்கை இருக்கும்' என வாழ்ந்து முடித்தவர்கள் உண்டு. இல்வாழ்க்கை. துறவற வாழ்க்கை, இதுவும் அற்ற, அதுவும் அற்ற வாழ்க்கை என மனிதர்களின் வாழ்க்கைதனை பிரிக்கலாம். அதே வேளையில் இப்படி பிரித்துதான் வாழ வேண்டிய கட்டாயம் கூட நமக்கு இல்லை. ஆனால் அப்படித்தான் இருக்கிறது. 

ஒரு மனிதரின் சராசரி ஆயுட்காலம் சுமார் அறுபது வயதில் இருந்து நூறு வயது வரை வைத்துக் கொள்வோம். இந்த நூறு வருட காலத்தை ஒருவர் எப்படி வாழ்ந்து முடிக்கிறார், என்ன செய்து முடிக்கிறார் என ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வரலாறு எழுதி வைப்போம். அப்படி எழுதப்படும் வரலாறுகளில் கிட்டத்தட்ட தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீதமுள்ள ஐந்து சதவிகித வரலாறு மட்டுமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். யார் அந்த மனிதர்கள்? 

புராணங்களில் புனையப்பட்ட மனிதர்களா? இதிகாசங்களில் எடுத்துரைக்கப்பட்ட மனிதர்களா? வாழ்ந்து கொண்டிருக்கும் நாமா?  யார் அந்த முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்? 

(தொடரும்) 


Monday 22 November 2010

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 1

காலம் என்று வந்த பின்னர் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பிரித்து வைத்து பார்த்தாகிவிட்டது. ஆனால் இக்கணத்தில் எக்கணமும் இல்லை எனும் புத்தரின் கூற்று எத்தனை உண்மை என்பதை  எத்தனை மனிதர்களின் மனம் பரிசீலிக்கும்.

பல்லாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது எது? இனிமேல் நடக்கப்போவது எது? நடந்து கொண்டிருப்பது எது? எனும் எண்ணங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

முன்னாளில், இந்நாளில் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பல விசயங்கள் மனிதர்களுக்கு புலப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் எந்தவொரு கருவிகளும் இல்லாமலே பல விசயங்களை அனுமானிக்க முடிந்தது. இது ஒரு நிகழ்தகவு என கொள்ள இயலாது.

முனிவர் என்றால் முற்றும் துறந்தவர் என்பது பொருள் அல்ல. முனிவர் என்பவர் முக்காலமும் அறிந்தவர் என பொருள்படும். உண்மையிலேயே முனிவர்கள் இருந்தார்களா? இருக்கிறார்களா? எனும் கேள்விக்கு பதில் எவரிடம் இருக்கிறது என தேடி பார்த்தால் நம்மிடமே இருக்க கூடும். சித்தர் தன்னை சித்தர் என அறிவித்து கொள்வதில்லை. முனிவர் தன்னை ஒரு முனிவர் என முன்மொழிவதில்லை.

ஒரு விசயத்தை அணுகும்போது மனிதர்கள் அனைவருமே 'வாய்ப்பு' என்கிற தொனியில் அணுகாமல் இதுதான் சரி என்கிற தொனியில் அணுகும்போது அவர்கள் அந்த விசயத்தில் மிகவும் கெட்டித்தனமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். இந்த மனிதர்களிடம் அஷ்டமா சித்திகள் அடங்கி இருக்கிறது என்கிறது சித்தர்கள் என போற்றப்படும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு. இந்த வரலாற்றில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது அலசப்பட, ஆராயப்பட வேண்டிய ஒன்று.

ஒரு ஆசிரியரின் அறிவினை சோதிப்பது அந்த ஆசிரியரை இழிவுபடுத்தும் நிகழ்வாகவே பெரும்பாலும் கருதுகிறார்கள், அந்த ஆசிரியர் உட்பட. ஆனால் உண்மை என்னவெனில் , இந்த சோதனை மிகவும் அத்தியாவசியம் ஆகிறது. ஆசிரியர் ஒருவர் தவறாக சொல்லித் தந்தால் அது தவறு என சுட்டி காட்டும் ஆற்றல் ஒரு சில மாணாக்கருக்கே உண்டு. விளக்கம் கேட்டல் எதிர்த்து பேசுதல் என்றாகிறது. நம்மில் முனிவர்கள் உண்டோ?

எதுவெல்லாம் நடக்கும் என எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உண்டு.  'இது நடக்கும்னு நினைச்சேன்' என நடந்தபின்னர் சொல்லும் மனிதர்கள் எத்தனை?

இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா?

(தொடரும்)