Tuesday 17 March 2015

மிட்டாய் பொண்ணு

தினந்தோறும் தவறாமல் பள்ளிக்கு செல்லும் முன்னர் அந்த கடை முன் வந்து நின்றுவிடுவாள். கடைக்காரர் முகம் சுளிக்காமல் ஒரு மிட்டாய் கொடுப்பார். இப்படி எல்லா பிள்ளைகளுக்கும் கொடுத்தா எப்படிபா வியாபாரம் பண்ணுவ என கேட்டால் வேற யாரும் வந்து நிக்கிறத பாத்த என கடைக்காரர் சிரிப்பார். அவள் ஐந்தாம் வகுப்புக்கு முதல் நாள் சென்றபோது மாமா எனக்கு தினமும் மிட்டாய் தந்தால் படிச்சி எல்லா காசு தரேன் என சொன்னதற்காக கடைக்காரர் தருவது என எண்ணுவது தவறுதான்.

அவளுக்கு அந்த மிட்டாய் ஒரு ஆனந்தமும் உற்சாகமும் தந்து கொண்டிருந்தது. மாதக்கடைசியில் 15ரூபாய் ஆயிருச்சி மாமா என்றபோது இதைப்போய் கணக்கு வைத்து இருக்கிறாளே என கடைக்காரர் ஆச்சரியம் அடைந்தது என்னவோ உண்மை. சரிம்மா, நல்லா படி என்பதான பதில் அவளுக்கு சந்தோசம் தந்தது.

225 சதுர அடியில் ஒரே ஒரு அரை கொண்ட மணல், கல் கொண்டு கட்டப்பட்ட கூரை வீடுதான் அவள் வீடு. விறகு அடுப்பு. கயிறு கட்டில் ஒன்று. மர  அலமாரி ஒன்று. தாத்தா பாட்டி படங்களோடு கருமாரி அம்மன் படம் மாட்டிய மேற்கு சுவர். அவள் இவர்களை வணங்காமல் பள்ளி செல்வதில்லை. விவசாய கூலி தொழில்.

ஒன்பது மணி வரை படிப்பாள். வரவு செலவு என அவள் கணக்கு எழுதுவாள். பெற்ற பிள்ளையின் அறிவு கண்டு கொண்ட அலுப்பு எல்லாம் ஓடிவிடும். தட்டாங்கல்  பிடித்தமான ஒரு விளையாட்டு. அம்மாவோடு சிறிது நேரம் விளையாடுவாள். அப்பாவோடு கதை பேசுவாள். வயசுக்கு வந்துட்டா சொந்தக்காரங்களுக்கு சொல்லணுமே என்ற அம்மா சொன்ன வாக்கியம் ஏனோ அவளுக்குப் பிடிக்கவில்லை. எனக்கொண்ணும் செய்ய வேணாம்மா என்ற அவள் வார்த்தை அம்மாவுக்கு வலித்தது. சின்னபிள்ளையாய் பேசாம இரு என்ற அம்மாவின் அதட்டல் அவள் அமைதி அடிய போதுமானதாக இருந்தது.

ஆறாம் வகுப்புக்கு நடந்தே பக்கத்து ஊர் செல்ல வேண்டி இருந்தது. அதே மிட்டாய் தினம் வாங்கிச்  செல்வாள். அவள் கடன் கணக்கு 185 ரூபாய் ஆகி இருந்தது. இதுவரை அம்மா அப்பாவின் கடன் ரூ 5645.25 அக்கி இருந்தது. தனக்கென தம்பி தங்கை இல்லாத குறையை அந்த ஊரில் இருந்த சிறுவர் சிறுமிகள் தீர்த்து வைப்பதாகவே எண்ணுவாள். அவளது அறிவுதனை பள்ளி மெச்சியது. அவளுக்கு இருந்த உதவி குணம் அதிசயிக்க வேண்டிய ஒன்று. தான் கொண்டு வரும் உணவை பள்ளியின் வெளி வாசலில் அமர்ந்து இருக்கும் பாட்டிக்குத் தருவாள்.

முதல்நாள் அந்த பாட்டியை மதியம் பார்த்தபோது அவள் உள்ளத்தில் ஏதோ  ஒன்று தோணியது. சாப்பாடு வேணுமா பாட்டி என்றபோது ஆம் என தலையசைத்த பாட்டிக்கு சோறு தருவது தவறு இல்லை என ஆசிரியரின் அனுமதி பெற்றே தந்து வந்தாள். பாட்டி சாப்பிட்டதும் போய்விடுவார். இப்படியாய் அவள் செய்யும் உதவிகள் பல.

பெரிய பெண் ஆன பின்னர் மிட்டாய் பழக்கத்தை அவள் கைவிடவில்லை. அவள் நன்றாக படித்து பத்தாவதில் நிறைய மதிப்பெண்கள் பெற்றதை ஊரே கொண்டாடியது. பன்னிரண்டு வரை அதே பள்ளி. மாமா இனி எனக்கு மிட்டாய் வேண்டாம் இதோட ரூபாய் 1150 ஆயிருச்சி. பன்னிரண்டு முடிச்சப்பறம் மேற்கொண்டு படிக்க உதவி செய்வீங்களா? அவளது கேள்விக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தரேன்மா, நல்லா படி என்று சொன்னபோது மிட்டாயை விட அதிகம் இனித்தது. பெற்றோரின் கடன் ரூ 854.35 என வந்து நின்றது.

அடுத்த நாள் அந்த கடையை கடக்கும்போது அவளை அறியாமல் அங்கு நின்றாள். காசு கணக்கு வைக்க வேணாம் என கடைக்காரர் மிட்டாய் காட்டியபோது வேணாம் என அவள் மறுக்கவில்லை. கணக்கு வைச்சிக்கிறேன் மாமா என வாங்கிக்கொண்டு நடந்தாள். ஏழு கழுதை வயசு ஆகி போச்சு இன்னும் மிட்டாய் சாப்பிடுது என அங்கிருந்தவர் சொன்னது அவளுக்குள் எவ்வித சலனத்தையும் உண்டு பண்ணவில்லை. அந்த மிட்டாய் அவளுக்கான உற்சாகமும் ஆனந்தமும்.

எத்தனயோ பேர் எதுக்குடி அந்த மிட்டாய் தினமும் வாங்கி சாப்பிடுற என கேட்கும்போதெல்லாம் பிடிச்சிருக்கு என்றே சொல்வாள். நீங்களும் வாங்கி சாப்பிடுங்க என பலரிடம் சொன்னாலும் எவரும் தினம் வாங்கி சாப்பிடும் வழக்கம் கொண்டு இருக்கவில்லை. பதினோராவது முடித்து பன்னிரண்டில் அடிஎடுத்து வைக்கும்போதுதான் அவளுக்குள் காதல் உணர்வினை ஒருவன் விதைத்து இருந்தான். அவளுக்கு அவனை மிகவும் பிடித்து இருந்தது. அவனுக்கும் அவளை பிடித்து இருந்தது.

முதன் முதலில் காக்கா கடி கடித்து ஆளுக்கு பாதி மிட்டாயை பகிர்ந்தபோது இதைப்போய் எப்படி சாப்பிடற என அவன் துப்பிவிட்டான். தனக்குப் பிடித்த மிட்டாயை துப்பிவிட்டானே என அவன் மீது கோபம் எல்லாம் அவள் கொள்ளவில்லை. எனக்குப் பிடித்து இருக்கிறது என்றே நகர்ந்துவிட்டாள். பன்னிரண்டில் காதலும் படிப்பும் என இறுதி தேர்வு வந்தது. மிகவும் அருமையாகவே எழுதினாள்.

என்னை மறந்துராதே என்ற அவனின் கெஞ்சல் அவளுக்குள் நிறைந்து இருந்தது. பெற்றோரின் கடன் எல்லாம் முடிந்து ரூ 1000 சேமிக்க தொடங்கி இருந்தார்கள். இவளது கடன் ரூ 1520ல் வந்து நின்றது. தேர்வு முடிவு கண்டு மீண்டும் ஊரே கொண்டாடியது. ஆவலுடன் படித்த பல பிள்ளைகள் குறைந்த மதிப்பெண்களே எடுத்தார்கள். அவளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு வந்தது.

பணத்திற்காக கடைக்காரரிடம் சென்று நின்றபோது எவ்வளவு வேணும் என்று கேட்க ரூ 30000 மாமா என்று அவள் சொன்னதும் சரி வந்து வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார். வீட்டில் எதுக்கு அவ்வளவு பணம் என்று கேட்டு வைத்தார்கள். போயிட்டு வர முடியாதா, அங்கேயே தங்கிதான் படிக்கணுமா என்ற அம்மா அப்பாவின் கேள்விக்கு ரொம்ப கஷ்டம் என்று சொன்னதும் சரி என்றார்கள்.

அவளும் படித்தாள். அவளது கடன் வருடம் வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. கடைக்காரர் ஐந்து வருடங்களுக்கும் பணம் தந்தார். அவளது தந்தை கூலித்தொழில் விட்டுவிட்டு வேறு வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று மாதம் ரூ 2000, 3000 என கொண்டு வர கடைக்காரருக்கு கொஞ்சம் கொஞ்சம் கட்டினார்கள். மருத்துவ படிப்பு முடிந்தபோது அவளது கடன் ரூ 1,15,250.40 என்று இருந்தது. இந்த ஐந்து வருடங்கள் மிட்டாய் இல்லாத வருடங்கள் என சொல்ல முடியாது. மொத்தமாக வாங்கி வைத்து ஒரே ஒரு மிட்டாய் தினம் சாப்பிட்டு வரத்தான் செய்தாள்.

பன்னிரண்டாவது படித்தபோது காதல் கொண்ட பையன் வீட்டில் இருந்து பெண் கேட்டு வந்தார்கள். ஆனால் வீடு வசதி பார்த்து வேண்டாம் என சென்று விட்டார்கள். அந்த பையன் எவ்வளவோ சொல்லியும் அவனின் பெற்றோர் கேட்கவில்லை. நான் வேலைக்கு சென்று சம்பாதிப்பேன் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவர்கள் கேட்பதாக இல்லை. அவன் அவனின் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்வேன் என சொன்னதும் வேறு வழியின்றி சரி என்றார்கள்.

மாமா, கல்யாண செலவுக்கு பணம் வேண்டும் என்று நிற்க எவ்வளவு வேணும் என்றார். ஒரு ஐந்து லட்சம் வேணும் மாமா என்றதும் சரி வந்து வாங்கிக் கொள் என்றார். கடைக்காரர் தான் இவளுக்கு பணம்தருவது தனது மனைவிக்கு மட்டும் தெரியும்படி வைத்துக்கொண்டார். அவளது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருமணம் முடித்த கையேடு வேலைக்கும் சென்றாள். கடைக்காரர் அவளது திருமணத்திற்கு நிறைய மிட்டாய்கள் கொண்டு வந்து பரிசாக தந்தார். அவளுக்கோ அத்தனை சந்தோசம்.

அவனிடம் தனது மிட்டாய் கதை எல்லாம் சொன்னாள். அவன் அவனின் பெற்றோர்களிடம் சொல்லி அத்தனை பணத்தையும் கடைக்காரரிடம் கொண்டு வந்து கட்டினான். மாமா, இவர் எதுவும் கடன் இருக்கக்கூடாதுன்னு சொல்லிட்டார், ஆனா அந்த மிட்டாய் கணக்கு மட்டும் நான் தரேன் என்றாள். என்னம்மா, இன்னுமா அதை கணக்கு வைச்சிருக்க என்றார். உனக்கு நான் எவ்வளவு வேணுமினாலும் செய்யலாம்மா, நீ என்னோட குல தெய்வம் என்ற கடைக்காரர் சொன்னது அவளுக்கு புரியவில்லை. என்ன மாமா குல தெய்வம்னு சொல்றீங்க என்றாள். அது அப்படித்தாம்மா, மறக்காம உனக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு மிட்டாய் வாங்கி கொடுமா என்றார். சரி மாமா என்றாள்.

அவளது பெற்றோரை தங்களோடு வந்து இருக்கச் சொன்னான் அவன். அவர்களோ அந்த கூரை வீடு, வேலை என விட்டுவர மறுத்தார்கள். காலம் நகன்றது. மிட்டாயை நிறுத்தியபாடில்லை. ஒரு பையன், ஒரு பொண்ணு என அவள் தாயானாள். குழந்தைகளுக்கு பத்து வயது மேல் ஆனது.

ஒருமுறை அவனும் அவளும் வீதி வழியே சென்றபோது அங்கே ஒரு பெண்ணிடம் ஒருவன் வம்பு செய்து கொண்டு இருந்தான். அதை கண்டு அவள் அங்க பாருங்க ஒருத்தன் வம்பு பண்றான். நீ பேசமா வா, எல்லோரும் பேசாமத்தான போறாங்க என்றபோதும் என்னங்க அந்த பொண்ணை  அடிக்கிறாங்க, வாங்க என்னன்னு பார்ப்போம். சொன்னா கேளு வேணாம். என்னவாச்சும் பண்ணிட்டு போறாங்க. அவளுக்கு மனம் கேட்பதாக இல்லை.

என்னங்க இப்படி பொறுப்பு இல்லாம பேசறீங்க என அவனை இழுத்துக்கொண்டு அங்கே சென்றாள். அவர்களுக்கான வாக்குவாதம்தனை நிறுத்த சொன்னாள். அங்கிருந்தவனோ அவளை தகாத வார்த்தையால் திட்டினான். ஒரு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்கிறியே அறிவில்லை என அவள் திட்ட அங்கிருந்தவன் கோபம் ஆனான். தன்னிடம் இருந்த ஆயுதம் கொண்டு அவளை தாக்கினான். அங்கிருந்தவனை அவளது கணவன் தடுக்க போக அவளது கணவனுக்கும் அடி விழுந்தது. இருவருக்கும் சரமாரியாக அடி விழுந்தது.

அதற்குள் அங்கிருந்தவர்கள் கூடிட அங்கிருந்தவன் ஓடினான். அந்த பெண்ணிடம் கேட்க அவன் தன காதலன் எனவும் தனக்கு இடைஞ்சல் தந்ததாக கூறினாள். இவர்கள் வராவிட்டால் அவளது காதலன் அவளைக் கொன்று இருக்கக்கூடும் என்று சொன்னாள்.

அடிபட்ட காயத்திற்காக அவள் அவளது கணவன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். எவருக்கோ உதவி செய்யப் போய்  இப்படி ஆகிவிட்டதே என அவளது கணவன் நான் சொல்ல சொல்ல கேட்காம பாரு என்றான். ஒவ்வொருத்தரும் இப்படி ஒதுங்கி போறதால பெண்ணின் மீதான தாக்குதல் அதிகம் ஆகுது என்றாள். காயத்திற்கு மருந்து எல்லாம் போட்டுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அவளுக்கு இப்படி ஆனதை ஊரில் கேள்விப்பட்டு அவளது பெற்றோர் கடைக்காரர் எல்லாம் வந்தார்கள்.

இந்தம்மா மிட்டாய் என்று தர மாமா மறக்காம கொண்டு வந்துட்டீங்க என்று சொல்ல அங்கு எல்லோரும் சிரித்தார்கள். மம்மி யூ ஆர் த மிட்டாய் பொண்ணு என அவளது மகள் சொல்லி சொல்லி சிரித்தாள். (முற்றும்)

------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த கதையை இந்த மிட்டாய் பொண்ணு இறந்து போவதாக சோகமாக முடிக்க நினைத்தேன். அது உண்மை நிகழ்வை எழுதுவது போல ஆகிவிடும் என்பதால் தவிர்த்தேன்.  இந்த கதையில் சொல்லப்பட்ட எல்லாமே கற்பனைதான். ஆனால் கடைசியில் நடந்த விஷயம் சற்று உண்மையானது. எவரோ வாக்குவதம்தனில் ஈடுபட தனது கணவனுடன் சென்றபோது எனக்கென செல்லாமல் அவர்களுக்குள் சண்டையை விலக்கி விட சென்று அந்த கொடூரனால் தாக்கப்பட்டு உயிர் இழந்த ஒரு பெண்ணின் நிகழ்வு தான் இந்த கதையை எழுத வைத்தது. அந்த பெண்ணின் கணவனுக்கும் நிறைய காயங்கள்.

வேடிக்கைப் பார்ப்பது நல்லது என இந்த சமூகம் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தாலும் இது போன்ற வீரம் நிறைந்த பெண்மணிகள் இந்த உலகிற்கு வேண்டும். அப்போதுதான் கயவர்கள் கட்டுக்குள் இருப்பார்கள். அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday 14 March 2015

நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழ் ஒரு பார்வை

மின்னிதழ் நமது திண்ணை இங்கே

எனக்கு தமிழ் தாங்கி வரும் இதழ்களில் ஆர்வம் எப்போதோ முற்றிலும் குறைந்து போனது. குமுதம், ஆனந்தவிகடன் எல்லாம் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எங்கேனும் தமிழ் இதழ் வாசிக்க கிடைத்தால் உள்ளே சினிமா சினிமா மட்டுமே. அதை குறை கூறவும் முடியாது. அறிவை வளர்த்துக்கொள்ள இது போன்ற இதழ்கள் எல்லாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தவறான விண்ணப்பம் ஆகும்.

திரு. அல் அமீன் அவர்கள் இந்த நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழை எனது பார்வைக்கு கொண்டு வந்தார். அவருக்கு நன்றி. இது ஒரு மாத மின்னிதழ். சிற்றிதழ் என்பதால் மிக மிக குறைவான பக்கங்கள் எனினும் நல்ல விசயங்கள் உள்ளடக்கி இருந்தது. 17 பக்கங்கள் கொண்ட முதல் இதழ் பிப்ரவரியில் வெளிவந்து இருக்கிறது. 21 பக்கங்கள் கொண்ட அடுத்த இதழ் மார்ச் மாதம் வெளிவந்து இருக்கிறது. முதல் இதழில் மாதம் குறிப்பிடவில்லை. 

முதலில் என்ன இருக்கிறது எப்படி இருந்தது என பார்த்துவிடும் முன்னர் இந்த மின்னிதழின் ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன் முயற்சியை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அவரது உரையில் தமிழை வளர்க்கும் ஆர்வம், தமிழ் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கம் என குறிப்பிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இவருக்கு உறுதுணையாக இந்த மின்னிதழை சிறப்பாக வடிவைமக்க உதவிய நண்பர் திரு அல் அமீன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

முதல் இதழின் அட்டை பக்கத்தில் பல முகங்கள் தென்படுகின்றன. அதில் எனக்குத் தெரிந்த முகங்கள் பலர் இருந்தார்கள். இதழின் உள்ளே பல படங்கள் இருக்கின்றன. அவை ஏனோ தெளிவின்றி காணப்படுகிறது. இரண்டாவது இதழில் உள்ளிருக்கும் படங்களில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது என சொல்லலாம். இரண்டாவது இதழின் அட்டைப்படத்தில் தமிழர் விளையாட்டு குறித்து காணப்படுகிறது. பல்லாங்குழி விளையாட்டில் நாங்கள் புளியம்பழ முத்துக்கள் வைத்து தான் விளையாடி இருக்கிறோம். தாயம் விளையாடுவதற்கு கூட ஒரு பக்கம் உரசப்பட்ட முத்துகள் உபயோகித்து இருக்கிறோம். சோசியர் உபயோகிக்கும் முத்துகள் பல்லாங்குழியில் இருப்பது ஆச்சரியம். அட்டைப்பட வடிவமைப்பை சற்று மெருகேற்றினால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அதைப்போல 'நமது திண்ணை' என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எல்லா இதழிலும் ஒரே மாதிரியாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். திண்ணை என்பதற்கு ஆசிரியர் தந்த விளக்கம் சரிதான். திண்ணை ஒரு ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓர் இடம். எங்கள் கிராம வீட்டில் திண்ணை இருந்தது. இப்போது அது மூடப்பட்டு எவரும் அமர இயலா வண்ணம் இருப்பது வருத்தம் தரக்கூடியது.

முதலில் சுஷீமா அம்மாவின் என் பார்வையில் திரௌபதி. இவரது எழுத்து மிகவும் எளிமையாக அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கும். ஒரு பெண்ணின் பெருமையை சொல்லும் எழுத்து என சொல்லலாம். சீதை, அகலிகை, மன்டோதரி, தாரை பற்றி குறிப்பிட்டு திரௌபதி பெருமை சிறப்புதான் என எண்ண வைக்கும் வகையில் சிறப்பாக எழுதி இருக்கிறார். பெண் அடிமை என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டது என அன்றே ஒரு பெண்ணின் திறமையை போற்றி இருக்கிறார்கள், வெற்றி பெற்று இருக்கிறார் என தெளிவாக சொல்லி இருக்கிறார். அடுத்த இதழில் எடுத்துக்கொண்ட என் பார்வையில் அனுமன். மிகவும் அருமையாக இருந்தது. பொக்கிஷம் போல போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஸ்லோகம் மற்றும் எழுத்து. எங்கிருந்தோ வந்து குரங்கு ராமர் கதை கேட்கும் விஷயம்  நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் வணங்கியது போல நிற்கும் அனுமன். பிரமாதம். உங்கள் எழுத்துகளில் எப்போதும் அன்பு இருக்கும். திருக்குறள், கம்ப ராமாயணம் என அருமை. ஆன்மிகம் குறித்த எனது குறுக்குசால் எண்ணங்களை கைவிட வேண்டும் என எண்ண  வைத்துவிட்ட உங்கள் எழுத்துக்கு பாராட்டுகள்.

அடுத்ததாக 'நளபாகம்' நண்பர் ரவி. இவரது சிந்தனை கண்டு வியப்பது உண்டு. அதுவும் மகளே என அனு, நிவேதி, கோதை, ரேணுகா, நிலாமகள் போன்ற சக பெண் ட்விட்டர்களை இவர்கள் அழைக்கும்போது நிறைய ஆச்சரியம் அடைவது உண்டு. எத்தனை உரிமையாக பழகும் எண்ணம். அதுவும் இவரது நளபாகம் அனைவரிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. சமையல் செய்ய இவரது இணையதளம் எனக்கும் உதவியது என்று சொல்வதில் மகிழ்ச்சிதான். முதல் இதழில் மைசூர் பாகு. அடுத்த இதழில் கைமா இட்லி. மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். படித்ததும் சமைக்க வேண்டும் என எண்ணம் வரும்படி இருக்கிறது. பாராட்டுகள்.

செல்வி. உமாகிரிஷ் அவர்களை புரட்சி பெண்மணி என்றே சொல்லலாம். சமூக ஆர்வலர். இசைப்பிரியை. இவர் சென்ற வருடம் இளையராஜா இசைக்குழு நிகழ்வுக்கு சென்று வந்து எழுதிய கட்டுரையில் நம்மையும் அங்கே அழைத்து சென்றுவிட்டார். அதுபோல இவர் முதல் இதழில் குறிப்பிட்ட பாடல் பரவசம் அபாரம். இசை, பாடும் விதம், பாடல் வரிகள், பாடியவர் நளினம் என அற்புதமான விவரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த பாடல் கூட. இரண்டாவது இதழில் பாடல் கேள்விபட்டது இல்லை. அதற்காக இசை சண்டை எல்லாம் செய்து விடாதீர்கள். ஆனால்  அந்த பாடல் மூலம் எழுந்த எண்ணங்கள் என அவர் சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றும் அருமை. பனை ஓலை கொண்டு பதநீர் குடித்தது உண்டு. குருத்தோலை என்றெல்லாம் நான் கேள்விபட்டது கிடையாது. பல விசயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுகள்.

கவிதை என இரண்டு இதழிலும் எடுத்தவுடன் தொடங்குகிறது. முதல் இதழில் ரிஸ்வான் அவர்களின் புதிய வரவு கவிதை. குழந்தைகளின் வலி சொல்லும் கவிதை. தாயின் உருவம் வரைதல், பாலூட்டி செல்தல் என பல வரிகளில் நம்மை மனம் வலிக்க செய்து புதிய வரவுதனை குப்பை தொட்டியில் எதிர்பார்க்கிறேன் என முடிப்பது சமூக அவலம் மாறவில்லை என்பதை குறிப்பிடுகிறது. அடுத்த இதழில் மிஸ்டர்.ஒயிட் என்பவரின் நண்பேன்டா கவிதை பாடல் வரிகளை போல வாசித்து செல்லும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் அந்த வரிகள் சொல்லும் நிகழ்வில் இருந்து இருப்பார்கள். இருவருக்கும் பாராட்டுகள்.

அடுத்து நகைச்சுவை, சிரிங்க நல்லா சிரிங்க. எனக்கு நகைச்சுவை என்று சொன்னதும் திருமதி ஜனனி என நினைக்கிறேன். அவர்கள் சொன்ன 'மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பான்' என்பதுதான் எனக்கு நினைவுக்கு வரும். திரு முருகன் மற்றும் திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை அருமை. திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். எவரேனும் ஒரு நகைச்சுவையை கொண்டு வந்து யாரோடது என கேட்டால் திரு. செந்தில்குமார் என சொல்லிவிடலாம். அதற்காக என்னை பரிசோதிக்க வந்துவிடாதீர்கள். திரு முருகன் வித்தியாசமான சிந்தனையாளர்.

திக் திக் திக் எனும் கதை ஒரு கனவுதான் என எண்ணும்படியாக  மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார் சம்பத். சுதா ஆனந்த் அவர்களின் ஹைக்கூ அருமை. விடுகதை என இரண்டு இதழ்களிலும் உள்ளது. மிகவும் நல்ல முயற்சி. திரு விவேக் மற்றும் திரு சுரேஷ் அவர்களின் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் என இரண்டு இதழ்களில் வெளிவந்து இருக்கும் விசயங்கள் அந்த செல்பேசி பயன்பாட்டாளருக்கு நன்மை தரும். ஜப்பான் திரு ரகு அவர்களின் புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. எப்போதும் போல திரு பரணி அவர்களின் ஓவியங்கள் மிகவும் அருமை. மின்னிதழில் சற்று தெளிவாக வந்தால் நல்லது. இரண்டாவது இதழில் திரு ராஜா முகம்மது அவர்களின் புகைப்படங்கள் மற்றும் திரு தினகர் அவர்களின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இப்போது இந்த புகைப்படங்கள் ஓவியங்கள் என்ன சொல்ல வருகின்றன எனும் ஆராய்ச்சியை இப்போதைக்கு தள்ளி வைப்போம். பொதுவாக புகைப்படங்கள், ஓவியங்கள் தங்களுக்குள் ஒரு பெரும் கதையை மறைத்து வைத்துக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள். எதையோ எடுக்கிறோம், எதையோ வரைகிறோம் என்பதல்ல. அதற்காக பின்னணி குறித்து ஒரு கதையே எழுதலாம். வாழ்த்துகள்.

மருத்துவர் நேரம் என டாக்டர் வந்தனா அவர்களின் சர்க்கரை நோய் பற்றிய விபரங்கள் மிகவும் அருமை. பயனுள்ள விசயங்கள் இருந்தது. அடுத்த இதழில் பல் மருத்துவர் டாக்டர் ரியாஸ் அகமது அவர்களின் பற்சொத்தை மிகவும் சிறப்பும் பயன்படும் வண்ணம் இருந்தது. இந்த சர்க்கரை வியாதி மற்றும் பல்லுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த இரண்டு விசயங்களை அடுத்து அடுத்து இதழில் கொண்டு வந்தது வெகு சிறப்பு. வாழ்த்துகள்.

முதல் இதழில் திரு கவுண்டமணி, இரண்டாவது இதழில் திரு எம் ஆர் ராதா குறித்து பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இதை ஆசிரியர் அவர்களே எழுதி இருக்கிறார்கள். அப்படியே தமிழ் புலவர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்கள் என குறிப்புகள் இருப்பது கூட நன்றாக இருக்கும். நூல் விமர்சனம் இரண்டவாது இதழில் உள்ளது, வெகு சிறப்பாக பிறர் நூலை வாங்கும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. எழுத்தாளர் முத்தலிப் அவர்களுக்கு பாராட்டுகள். திரு சாத்தூரான் அவர்களின் பாட்டி கதை இவ்வுலகில் அன்பு எப்படி இருக்கிறது, எப்படி மனிதர் கஷ்டம் கொள்கிறார்கள் என அறிய முடிந்த அழகிய பதிவு. நிறைய அனுபவங்கள் கொண்டவரும் இயற்கையை நேசிப்பவரும் ஆவார். அருமை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வித்தியாசம். என்ன காரணத்திற்கு சொல்லப்பட்டு இருக்கும் அதன் பின்னணி என்ன என அலசிப்பார்க்கும் பழமொழிகள் குறித்த எண்ணங்கள் அருமை. திரு பாலகணேஷ் அவர்களின் புதிர் சிறப்பு. மேலும் ஆங்காங்கே டவிட்கள் மின்னுகின்றன. முன்னரே படித்து இருந்தாலும் இதழில் படிக்கும்போது அதற்குரிய சிறப்பே தனிதான்.

ஒரே வரியில் விமர்சனம் - நமது திண்ணையில் வெட்டிக்கதைகள் பேசப்படுவதில்லை.

ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன், வடிவமைப்பாளர் திரு அல் அமீன் அவர்களின் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

நன்றி. 


Tuesday 3 March 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - 37

''நில்லுடா''

''எமது வேகத்துக்கு உம்மால் ஈடுகொடுக்க இயலாது அடியாரே''

கதிரேசன் ஒரு கல்லை எடுத்து மதுசூதனன் மீது எறிந்தான். அந்த கல் மதுசூதனின் முதுகில் பட்டது. ஆ எனும் அலறல் ஒலி  கேட்கும் என நினைத்த கதிரேசன் சற்றே ஏமாந்தான். திரும்பிய மதுசூதனன் கதிரேசனை நோக்கியபடி வந்தான்.

''இந்தா கல், எமது தலையில் ஓங்கி அடித்துவிடும், எதற்கு என் மீது உமக்கு இத்தனை வன்மம், நீவிர்  எமது அடியார். இவ்வுலகில் எல்லோரும் எம் அடியார்கள்''

''மதுசூதனா, உனது புத்தி பேதலித்து போய்விட்டதா''

''யாம் திரிகோடன், எம்மை இனி திரிகோடன்  என்றே அழைக்கவும்''

''ஒரு பெண்ணை காதலிச்சி, ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இப்படி அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியேடா, நீயெல்லாம் படிச்சி பட்டம் வாங்கி என்னடா பிரயோசனம். நீ உன்னை ஒரு சாமியார் மாதிரி நினைச்சிகிட்டு பண்ற அலப்பறை  உனக்கே நல்லா இருக்காடா, உன்னை எப்போ சந்திச்சேனோ எதுக்கு சந்திச்சேனோ. இனியாவது திருந்துடா, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ருக்மணிக்கு வாழ்க்கைக் கொடுடா. நானும் இப்படி சிவன் சிவன் இருக்க மாட்டேன்டா. சொன்னா கேளுடா''

''அடியாரே, பேசி முடித்தாகிவிட்டதா? யாம் மாபெரும் மாற்றம் எம்மில் கொண்டோம். இனி எமது வாழ்வில் கல்யாணம், காதல் என்பதற்கு இடம் கிடையாது. எம்மை சாமியார் என்றா அழைத்தீர். யாம் அடியார்க்கெல்லாம் அடியார். எமது அடியார்களாகிய உமக்கு யாமே இனி ஒரு அடியார்''

''மதுசூதனா, என்னடா இப்படி மாத்தி மாத்திப் பேசற''

''எம்மை திரிகோடன்  என அழைத்துப் பழகவும், இன்றுடன் எமது சிவன் சொற்பொழிவு முடித்துவிட்டு நாளை யாம் பௌத்தம் பேச இருக்கிறோம்''

''மதுசூதனா, மதி கெட்டவனே. எக்கேடு கேட்டுப் போ'' என சொல்லிவிட்டு கதிரேசன் வீடு திரும்பினான். மதுசூதனனின் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ருக்மிணி கடும் கோபம் கொண்டவளாகத் தென்பட்டாள்.

''இனி அவனைத் திருத்த முடியாது. திரிகோடனாம்''

அன்று இரவு சொற்பொழிவு ஆரம்பித்தது.

''தாங்க இயலாத சோகம் நம்மைத் தாக்கும்போது நம்மால் பேசவும் இயலாது, எழுதவும் இயலாது. அனால் யாம் அப்படி அல்லன். எத்தனை சோகம் எனினும் எமக்கு இறைவனின் புகழ் பாடுவது மட்டுமே. நாளை முதல் யாம் பௌத்தம் தழுவ இருக்கிறோம். எமது பெயர் திரிகோடன். இங்கே ஒரு இடம் அமைத்து அங்கே பௌத்தம் பரப்ப ஆரம்பிப்போம். எம்மை நீவீர் தொடர்வீரா''

மதுசூதனின் பேச்சு பலரை ஆச்சரியம் உண்டு பண்ணியது. கூட்டத்தில் இருந்த ஒருவர் 'இவனை இன்னைக்குத் தீர்த்துரனும்ல, இல்லைன்னா நிறைய குழப்பத்தை உண்டு பண்ணிருவான்ல' என்றார்.

''எம்மை பின் தொடர்வீரா, மாட்டீரா?''

''நாங்கள் சிவன் பக்தர்கள், எங்களால் உங்களை பின் தொடர முடியாது''

''உங்களுக்கு அடியாராக நான் இருக்கிறேன். அடியார்க்கெல்லாம் அடியாராக நான் வருகிறேன். எம்மை பின் தொடருங்கள்''

கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்தார்கள். பெரும் சலசலப்பு உண்டானது. இதுதான் சமயம் என இருவர் மதுசூதனனை தரதரவென இழுத்து சென்றார்கள். கூட்டத்தில் இங்கும் அங்கும் ஓடினார்கள்.

''அடியார்க்கெல்லாம் அடியாரா நீ, உன்னை இரும்லே, என்ன பண்ணுதேன்''

கத்தி எடுத்து மதுசூதனின் கழுத்தில் வைத்தான் அவன்.

''யாம் மீண்டும் திரிகோடனாக  பிறவி எடுப்போம்''

''இன்னுமால பேசற''

மதுசூதனனை கொலை செய்துவிட்டு அந்த இருவரும் ஓடிப்போனார்கள். மதுசூதனின் மரணம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பௌத்தம் பின்பற்ற சொன்னதற்காக கொலை செய்யப்பட்டான் என்றே பேசினார்கள்.

வாழ்வில் தடம் மாறிப் போனவர்கள் எந்த ஒரு தடயமும் இல்லாமல் இறந்து போகிறார்கள்.

(முற்றும்)