Wednesday 18 December 2013

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 15

2003ம் வருடம் ஒரு ஆய்வகத்தில் இருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு மாற்றம் ஆகி இருந்தது. அப்போதுதான் கிட்டத்தட்ட பல எலிகளை கொன்று முடித்து ஒரு ஆய்வு முடிந்து இருந்தது. புது ஆய்வகத்தில் விலங்கினத்துடன் வேலை செய்ய வேண்டிய சூழல் மறுபடியும் வந்தது. வேலை செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே கண்களில் எரிச்சல், இருமல் என வந்துவிட்டது. இதை இப்படியே விட்டுவிட்டால் சரிப்படாது என அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் சென்று விசாரித்தேன்.

நீ இந்த வேலையை விட்டுவிடு என்றும் வேறொரு வேலையை தேர்ந்தெடுத்துக் கொள் என்றும் சொன்னார். எனக்கோ இந்த வேலையை விட்டுவிட விருப்பமில்லை. மாசுக்கள் எல்லா இடங்களிலும் உண்டு, அதற்காக நாம் வீட்டிலேயா முடங்க முடியும் என அந்த மருத்துவரிடம் சொன்னதும் உனது உடல் நலனுக்காகவே சொல்கிறேன் என்றார். ஆனால் செத்தால் வேலை இடத்திலேயே செத்து விடுவது என முட்டாள்தனமான எண்ணத்துடன் மாற்று காரணி இருக்கிறதா என கேட்டேன். மாஸ்க் அணிந்து வேலை செய்து பார், ஏதேனும் பிரச்சினை எனில் என்னை வந்து பார் என்றார்.

மாஸ்க் அணிந்தவுடன் பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்தது என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் பிரச்சினைகள் சற்றே குறைய செய்தன. அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டு கொண்டே இருந்தது. கொடுமை, ஒருமுறை vertigo எனப்படும் நோய் போல வந்து தொலைந்தது. நடக்க முடியாது, தள்ளாடும். உடனடியாக மருத்துவரை அணுகினேன். ear imbalance என சொல்லிவிட்டு antipsychotic மாத்திரை கொடுத்தார்.  மூன்றே தினங்கள் உடல்நலம் சரியாகிவிட்டது.

அதற்கடுத்து அவ்வப்போது அலர்ஜி வரும். அதற்கென மாத்திரை ஒன்று தந்து இருந்தார்கள், அதை எடுத்துக்கொண்டு வேலை செய்ய சொன்னார்கள். நான் அந்த மாத்திரையை இதுவரை எடுக்கவும் இல்லை, எடுக்க துணிந்ததும் இல்லை. இப்போது எனது நுரையீரல் எப்படி இருக்கிறதோ என தெரியாது, ஆனால் அதிகம் சிரித்தால் மூச்சுப்பிடிப்பு போல வந்து தொலையும். பிரணாயமம் செய்ய நினைத்து தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்.

இந்த உலகில் நிறைய நபர்கள் தங்களது உடல்நலனை பொருட்படுத்தாது கடுமையான வேலைகள் செய்து வருகிறார்கள். அவர்களது நோக்கம் சம்பாதிக்க வேண்டும் என்றோ, சாதிக்க வேண்டும் என்றோ இல்லை. இவ்வுலக மக்களின் நன்மைக்காக மட்டுமே அவ்வாறு செயல்படுகிறார்கள். ஊர் உலகில் வேறு வேலையா இல்லை என்றே என்னை பலரும் கேட்டதுண்டு.

நான் படித்து முடித்த பார்மசி துறையில் ஒரு கடையை போட்டு என்னால் அமர்ந்து இருக்க முடியும். அன்றைய சூழலில் அது எளிதான காரியமாக இருந்தது. ஆனால் உள்ளிருக்கும் ஈசன் என்ன நினைத்தானோ அதுதானே நடக்கும். ஆராய்ச்சி துறையை தெரிவு செய்தேன். இன்று பல வருடங்கள் போராட்டம். எப்படியாவது ஒரு நல்ல மருந்தினை ஆஸ்த்மா சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கண்டுபிடித்துவிடலாம் என ஒரு நப்பாசை.

இந்த பணியில் எல்லாம் நிறைய சம்பாதிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். பணம் மட்டுமே குறிக்கோளாக நினைப்பவர்கள் வியாபாரம் செய்வதுதான் சிறந்தது. ஆனால் இந்த பணிக்காக  நிறைய பணம் இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது. உதாரணத்திற்கு ஒரு வினையூக்கி 5 மில்லிகிராம், நமது ஊருக்கு 2 லட்சம் ரூபாய். இந்த அளவை வைத்து என்ன செய்ய முடியும். கிராம் கணக்கில் தேவைப்படும்! இப்படியாக ஒவ்வொருமுறை பணம் வேண்டும் என பணம் தருபவர்களிடம் கையேந்தும் நிலைதான் இருந்து வருகிறது. அதுவும் பணம் தருபவர்கள் அத்தனை எளிதாக தந்துவிட மாட்டார்கள்.

இந்த மருந்து நோய்தனை தீர்க்கும் வல்லமை உடையது என கொஞ்சமாவது நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும். ஒரு சிலர் முழுதாக படிக்காமல் அவர்களது சொந்த கற்பனையில் தங்களது விளக்கத்தை எழுதிவிடுவார்கள். அவர்களை எல்லாம் என்ன செய்வது? ஆனால் ஆராய்ச்சி துறைக்கு நிறைய பெண்கள் வருகிறார்கள். அவர்களின் பொறுமைக்கு, சிந்தனைக்கு  இது ஒரு நல்ல வேலை தான்.

சமீபத்தில் என்னுடன் வேலை பார்த்த பெண் 'அவர் அழகாக இருப்பதால் வேலைக்கு செல்ல பயப்படுகிறேன் எனவும், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் எனவும் woman in science என எழுதப்போவதாக நாளிதழ் ஒன்றில் பேட்டி கொடுத்ததுடன் டிவியில் வந்து சொல்லிவிட்டார். ஆனால் உண்மை நிலை வேறு. அந்த பெண் குறித்து இங்கு மேலும் எழுதுவதை தவிர்த்து விடுகிறேன். பிழைத்துப் போகட்டும்.

ஆனால் உண்மையில் இந்த ஆராய்ச்சிக்கு வந்தபிறகு பலர் வெருண்டு ஓடியதை கண்டு இருக்கிறேன். மூன்று வருடம் முடித்த பின்னர் கூட சிலர் ஓடி இருக்கிறார்கள். நிறைய தோல்விகளே இந்த வேலையில் அதிகம். Depression is common in scientific research என்பார்கள். இன்னும் இந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கட்ட முயற்சி. பாதை கரடு முரடுதான் ஆனால் இலக்கு மிகவும் இனிமையான ஒன்று. அதற்காகவே பயணம் தொடரும்.

(தொடரும்)

Thursday 12 December 2013

நான் வரைந்த ஓவியம்

எனக்கு ஓவியம் வரையவே தெரியாது. ஏதேனும் ஒன்று வரைய வேண்டும் என நினைத்து உன் முகம் தனை பலமுறை மன கண்களில் கொண்டு வந்தேன்.

தூரிகையை எடுத்த போது கைகள் வெடவெடவென நடுங்கி தொலைந்தது. அறையின் கதவுகள் எல்லாம் மூடினேன். என்றைக்கும் இல்லாத திருநாளாய் தூரிகையை கீழே வைத்துவிட்டு ரவிவர்மனை நெஞ்சுருக வேண்டினேன்.

அறையின் சிறு வெளிச்சத்தில் நடுங்கிய கைகளுடன் மீண்டும் தூரிகையை கையில் எடுத்தேன். உனது முகம் மின்னலாக வந்தது. தாளினை சரி செய்தேன்.

வரைய எத்தனித்தபோது அறையின் கதவு தட்டப்பட்டது. வெகுவேகமாக தாள், தூரிகை என மறைத்து வைத்தேன். கதவினை திறந்த போது நீ வந்து நின்றாய்.

இருட்டு அறையில் என்ன செய்கிறாய் என கேட்டாய். உன்னை வரைய முனைவதாக சொன்னேன். கலகலவென சிரித்தே உனக்கு வரைய வராதேடா என்றாய்

எனக்குள் அழுகை வந்ததை நீ அறிந்திருக்க மாட்டாய். சரி, கிறுக்கித் தொலை என சிரித்து நகர்ந்து விட்டாய். நீ கொடுத்த தைரியம். வரையத் தொடங்கினேன்.

ஈஸ்வரா எனக்கு வரையத் தெரியாதே. மனம் அடக்கி வரைந்தேன். ரவிவர்மன் மண்டு இது என்ன கண்ணா? கடுகு மாதிரி இருக்கு என மனதில் இருந்து திட்டினார்.

கூந்தலை வரைந்த போது மனம் கூனியது. ஒரு தேவதையை, பேய் மாதிரியா வரைவது, உன் விரல்களை உடைக்க வேண்டும் என்றார் ரவிவர்மன். மீண்டும் கதவு தட்டும் ஓசை.

நீ வந்து நின்றாய். வரைந்த ஓவியத்தை தயக்கத்துடன் உன்னிடம் காட்டினேன். என்ன சொல்வாய் என எச்சில் விழுங்கினேன்.

டேய், என்னை மாதிரியே செமையா வரைஞ்சிருக்கேடா என்றாய். இனிமே என்னை மட்டும் வரைடா, உனக்கு வரைய வரும் என்றே நகர்ந்தாய்.  நான் கண்கள் கலங்கி நின்றேன். ஏன் தெரியுமா?

என் மீதான உன் காதலை நான் புரிந்து கொண்ட தருணம் அது. ரவிவர்மன் தலைகுனிந்தார்.


Friday 6 December 2013

ராமனின் சீதை தீ குளித்தாரா?

என் அம்மா இறந்தபின்னர் பத்து நாட்கள் எனது சின்னம்மா இரவில் ராமாயணம் புத்தகம் எடுத்து வைத்து படித்து கொண்டிருந்தார். அவரை சுற்றி சிலர் அமர்ந்து இருந்தார்கள். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அதுவும் எனக்கு எங்கள் வீட்டில் ராமயாணம் புத்தகம் இருக்கும் என்றே தெரியாது. ராமாயணம் புத்தகத்தை படித்தால் இறந்தவர்களின் ஆத்மா சொர்க்கத்தை அடையும் என்பது ஒருவகையான ஐதீகம் என பின்னர் தெரிந்து கொண்டேன். அன்று கூட ராமாயணம் படிக்க வேண்டும் என நினைத்தது இல்லை. நான் அதிகம் படித்த புத்தகங்கள் கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள், (அர்த்தமுள்ள இந்துமதத்தை பலமுறை படித்து இருக்கிறேன்) மற்றும் அகிலனின் சிறுகதை தொகுப்பு மட்டுமே. நண்பன் ஸ்ரீதர் கொடுத்த பட்டுகோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் கதைகள் என சில. பாடபுத்தகங்களை மட்டுமே அதிகம் படித்து வளர்ந்தேன்.

நான் இதுவரை ராமாயணம் முழுவதுமாக படித்ததே இல்லை. என்னிடம் இப்போது ராமாயணம் புத்தகம் இருக்கிறது. திடீரென சில பக்கங்களை புரட்டி அதில் இருக்கும் பாடல்களை எப்போதாவது வாசிப்பது வழக்கம். ஆனால் ராமாயணம் குறித்து பல விசயங்கள், விவாதங்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் 'விடிய விடிய கதை கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பானு  சொன்னானாம்' எனும் வழக்கு மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் இப்படித்தான் பலர் ராமாயணத்தை அரைகுறையாக தெரிந்து கொண்டு அதில் குறைகள் என குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது சரியா? என்பன போன்ற வாதங்கள என கேட்டு இருக்கிறேன். மூலக்கதையை சற்று தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப கம்பர் மாற்றி விட்டார் எனும் சொல் பேச்சும் கேட்டதுண்டு. ராவணன் மிகவும் நல்லவர், அவர் சைவ சமயத்தை சார்ந்து இருந்ததால் சைவ சமயத்தை மட்டமாக்க வைணவ சமயத்தை சேர்ந்த ராமனை உயர்த்தி சொல்ல எழுதப்பட்டது என்பார்கள்.

ராமாயாணத்தை கேலி செய்வதற்காக படிக்க தொடங்கிய நான் ராமாயாணத்தின் பெருமை பேச தொடங்கினேன் நான் என்றார் கன்ணதாசன்.
ஒரு கதாசிரியர் என்ன நினைத்தாரோ அதைத்தான் அவரால் எழுத முடியும், நாம் நினைப்பதை எல்லாம் எழுத கதாசிரியர் எதற்கு? ஒரு கதையின் தன்மை எழுதுபவரை விட புரிந்து கொள்பவர்களின் மன நிலையினை பொருத்தே அந்த கதையின் தன்மை இருக்கும், இல்லையெனில் திருக்குறளுக்கு இன்னும் பலர் உரை எழுதிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

அப்படித்தான் ராமாயணமும் சரி, மகாபாரதமும் சரி மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ராமன் தனது மனைவியை சந்தேகம் கொண்டதால் சீதை தீயில் குதித்து தனது புனித தன்மையை நிலைநாட்டினார் என்றே பேசப்படுகிறது.

இந்த விஷயத்தை வால்மீகியும் சரி, கம்பரும் சரி எப்படி எதிர்நோக்கினார்கள் அல்லது எப்படி எழுத்தில் வைத்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் சொன்ன கதையை இனிமேல்தான் சென்று இந்த நூல்களில் பார்க்க வேண்டும்.

ஒரு வண்ணான் ராமர் நகர்வலம் வந்தபோது தனது மனைவியிடம் 'என்னை என்ன ராமன் என நினைத்தாயா? எவனோ ஒருவன் வீட்டில் பலநாட்கள் இருந்துவிட்டு வந்தவளை பத்தினி என ஏற்றுக் கொள்ள என சொல்லிவிடுகிறான்' இதைக் கேட்ட ராமன் தன் மனைவிக்கு இப்படி அவப்பெயர் நேர்ந்து விட்டதே என மனம் கலங்குகிறான். ராமனுக்கு தெரியும் சீதை பத்தினி என. ஆனால் இங்கே கதாசிரியர் ராமனை ஒரு சாதாரண மனிதராகவே பாவிக்கிறார்.

ஊர் பழி நேர்ந்துவிட்டதே என நினைத்த ராமன் ஊருக்கு சீதை பத்தினி தான் என சொல்லவே தீக்குளிக்கும் வைபவம் நடைபெறுவதாக அந்த காவியத்தில் காட்டபடுகிறது. ராமன் தன மனைவியை சந்தேகபட்டுவிட்டான் என நினைப்பது நமது அறியாமை. ஊரின் சந்தேகம் போக்கவே அந்த நிகழ்வு என்பதை தெரிந்து கொளல் வேண்டும். மேலும் கதாசிரியர் ஊரின் வாயை அந்த வண்ணான் நிகழ்வை காட்டாமல் தவிர்த்து இருக்கலாம். ஆனால் பின்வரும் சந்ததியினர் ஒருவேளை இந்த கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என அதற்கும் பதில் வேண்டுமென்றே அந்த நிகழ்வை வைத்து இந்த தீக்குளிப்பு வைபவத்தை நிறைவேற்றி இருக்கலாம்.

எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். அதாவது பத்தினியாக இருப்பவர் தனது சீலையில் நெருப்பை வாங்கிக் கொண்டால் அந்த சீலை பொசுங்காது என! என்ன பைத்தியகாரத்தனம். கற்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் பொது, ஆனால் பெண்ணின் மீது அதை ஏற்றிவைத்து சமூகம் அழகு பார்த்தது. பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோ?நெருப்பு எதையும் எரித்துவிடும் தன்மை உடையது. பெண் நெருப்பை போன்றவள் என வசனம் எல்லாம் உண்டு.

நெருப்பை பொசுக்கிவிடும் சீலையை போலவே உரிய சாதனம் உடலில் பொருத்திக் கொள்ளாமல் நெருப்பில் குதித்தால் பொசுங்கி போவார்கள். நமது உடல் நிலை அப்படி. நமது தோல், செல் அமைப்பு எல்லாம் கருகிப் போய்விடும். இது கூட அறியாத சமூகத்திலா  நாம் இருக்கிறோம். தீயில் குதித்துதான் பாருங்களேன்.

அப்படி எனில் எப்படி சீதை தப்பித்து இருக்க இயலும்? அதுதான் கதாசிரியரின் வெற்றி. சீதையை தெய்வ அவதாரமாக காட்டவே இந்த யுக்தி. வால்மீகி இப்போது இருந்து இருந்தால் பல விளக்கங்கள் கேட்டு இருக்கலாம், அல்லது அயோத்தி காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சந்ததி இப்போது இருந்தால் அதையும் கேட்டு வைக்கலாம். ஆனால் எதுவுமே இல்லை. எனவே ஒரு காவியத்தை காவியமாக படித்துவிட்டு அதில் இருக்கும் விசயங்களை அதீத கற்பனைகளுக்கு விடாமல் அது ஒரு நிகழ்வு என கடந்து செல்ல பலரால் முடிவது இல்லை.

இந்த உலகில் நிறைய கருத்துகளுடன் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் என்ன செய்வது!





Tuesday 26 November 2013

நுனிப்புல் பாகம் 3

முன்னுரை 

முன்னோர்களுக்கு எல்லாம் தெரிந்துதான் இருந்திருக்கிறது, ஆனால் எப்படி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் இறுக்கமாக இருந்துவிட்டார்கள். ஏதேனும் ஒன்றின் மீது தன் கருத்தை சொல்வதையே பழக்கமாக வைத்து இருந்து இருக்கிறார்கள். காய்ச்சல் வந்தால் ஒரு மரத்தின் பட்டை காய்ச்சல் குறைத்துவிடும் என்றெல்லாம் சிந்திக்க தெரிந்து இருக்கிறது. தாவரங்களை வைத்தே பல அரிய விசயங்களை அவர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்கட்டும். 

வாத்தியார் பையன் மக்கு என்பது கூட அறிவாற்றல் என்பது மரபணுக்கள் மூலம் கடத்தப்படுவதில்லை என்பதை சொன்ன ஒரு வாக்கியம் தான். இன்றைய உலகம் மரபணுக்களால் சூழப்பட்டு இருக்கிறது. தாய் சொன்னால் மட்டுமே குழந்தையின் தந்தை யார் என்பது தெரிந்தது போய் இப்போதெல்லாம் மரபணு சோதனை செய்தே நிரூபிக்கிறார்கள். 

குளோனிங், தேர்ந்தெடுத்தல் முறை என்றெல்லாம் மனித உயிர்களின் சிருஷ்டியை கடவுளிடம் இருந்து எடுத்துக் கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். கடவுள் இனி நன்றாக இளைப்பாறலாம். இனி பிரம்ம காலங்கள் நமக்கு அவசியம் இல்லாமல் போகலாம். ஆண், பெண் எனும் இருபாலர் சேர்ந்து வாழும் அமைப்புகள் காலப்போக்கில் தொலைந்து போகலாம். 

ஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடம் செல்லும் காலம் குறைந்து கொண்டே வருகிறது. தகவல் தொடர்புகள் மிக அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. சிந்தனைகளை பிறரிடம் செலுத்த அதற்கான தொழில்நுட்பம் பெருகி வருகிறது. மருத்துவ துறையின் சாதனைகள் என எத்தனையோ பெருகிக் கொண்டே இருக்கின்றன. 

இருப்பினும் இது போன்ற எந்தவித சலனத்துக்கும் ஆட்படாத மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் உலகம் தனி. அந்த உலகத்தில் அவரை சுற்றி இருப்பவர்களும், அவர்களது கிராமமுமே வாழ்க்கை. விவசாயம்தனை இன்னும் பற்றிக்கொண்டு வாழும் சமூகம் மொத்தமாக ஒன்றும் தொலைந்து போய்விடவில்லை. 

வெயில், மழை என அல்லாடிக் கொண்டு இருக்கும் எனது சமூகம் இருக்கத்தான் செய்கிறது. கனவுலகில் சஞ்சரிக்கும் ஆசைகளை அது தேக்கி வைத்து இருக்கிறது. படிப்பின் அவசியம் வலியுறுத்தி மனிதாபிமானம் தொலைக்கும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்க ஆசைப்படுகிறது. கல்விக்கு செல்வத்தை விரயமாக்கி அனுபவ பாடம் தனை கற்றுக்கொள்ள மறுத்து வரும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்கிறது. 

வானாளவிய கட்டங்கள், இரைச்சல் கூடிய பேருந்துகள், விவசாய நிலங்களை கூறு போட்டு செல்லும் ரயில் பாதைகள், சாலைகள் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு இன்னும் பழைய நம்பிக்கைகள் மீது பற்று வைத்து சாமி பார்த்துக்கொள்ளும் எனும் ஓரிரு சொல்லில் நிம்மதியாக தூங்கி பொழுதை கழிக்கும் சாவடி மனிதர்கள் இன்னும் சஞ்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

நமக்கான உலகம் வேறு என்றாகிப் போனபின்னர், நமது உலகம் தவிர வேறு உலகம் இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அந்த உலகத்தில் சில அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த அதிசயங்கள் அலட்சியப்படுத்தபடுகின்றன. அலட்சியபடுத்தபடாமல் லட்சியமாக்கி தொடர்கிறது வாழ்க்கை. இது நாவல் அல்ல... மனிதர்கள்.

Monday 25 November 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 21

காயத்ரி தூங்க சென்று இருந்தாள். அந்த இரவில் கோரனிடம் இருந்து போன் வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

''இன்னைக்கு அந்த வாத்தியானை போட்டு தள்ள முடிவு பண்ணிட்டேன்''

''அதை ஏன் என்கிட்டே சொல்ற, சொல்றவன் செய்யமாட்டான், செய்றவன் சொல்லமாட்டான்''

''உன் பேரை எழுதி வைச்சிட்டு போக போறேன், உனக்கு தான் இந்த வாத்தியானை பிடிக்காதே''

''எழுதி வைச்சிட்டு போ, கையெழுத்து என்னை மாதிரியா இருக்காது''

தைரியமாக பேசினாலும் எனக்குள் இனம் புரியாத பயம் வந்து தொற்றி கொண்டது. பேரைப் போலவே கோரபுத்தி உடையவனாக இருக்கிறானே, என்னை எதற்கு இந்த வம்பில் மாட்டிவிட வேண்டும்.

''போய் உன்னோட பையில இந்த வாத்தியானோட பாட நோட்டு இருக்கானு பாரு, அதுதான் தடயம்''

மறுமுனையில் போன் துண்டிக்கப்பட்டது. திரும்ப அழைத்து பார்த்தேன், அதற்குள்ளாகவே இணைப்பு முற்றிலும் இல்லாமல் போனது. எனக்கு வியர்க்க ஆரம்பித்து இருந்தது.

வேகவேகமாக பையில் நோட்டினை தேடினேன். அவன் சொன்னது போலவே அந்த நோட்டினை காணவில்லை. நெஞ்சு படபடவென அடித்து கொண்டு இருந்தது. மயங்கி விழுந்துவிடுவது போன்ற உணர்வு. காயத்ரியின் அறையினை மெல்ல தட்டினேன். கதவினை மெதுவாக திறந்து அறையில் விளக்குதனை போட்டேன். அவள் அழகாக தூங்கி கொண்டு இருந்தாள்.

''காயூ''

''ம்ம்''

''எழுந்திரு காயூ, ஒரு பிரச்சினை''

சட்டென விழித்தாள். அதற்குள்ளா இப்படி உறங்கிப் போனாள். கனவு என எதுவுமே காண மாட்டாளா?

''என்ன முருகேசு''

படபடப்புடன் விசயத்தை சொல்லி முடித்தேன்.

''சரி, காலையில பாத்துக்கிரலாம்''

''அவன் சாரை கொல்லப்போறான், நீ என்ன இவ்வள அசால்ட்டா சொல்ற''

''அவன் கொல்லமாட்டான், வேணும்னா அவர்கிட்ட இவன் சாவான்''

''காயூ''

''கவலைப்படாம, நீ தூங்கு முருகேசு''

''எப்படி தூங்குறது''

''இங்க தூங்கு, நான் உன்னோட ரூமில தூங்குறேன்''

''எனக்கு என்னோட ரூமில தூங்க தெரியாதா, அவன் திருப்பி போன் பண்ணுவானோ''

''என்ன திடீர் பயம் உனக்கு''

''கொலையை தடுக்கனும், பழி பத்தி பயமில்லை''

''சொன்னா கேளு, எதுவும் நடக்காது''

காயத்ரியின் அறையை விட்டு வெளியேறினேன். உடைகள் மாற்றினேன். வீட்டில் எவரிடமும் சொல்லாமல் கதவை வெளியில் பூட்டிவிட்டு வெளியேறினேன். அந்த நடு இரவில் ஆசிரியரின் வீட்டினை அடைந்தபோது மணி சரியாக 11.00.

ஆசிரியர் வீட்டின் வாசலில் கோரன் நின்று கொண்டு இருந்தான்.

''நீ இங்கு வருவாய் என எனக்கு தெரியும்''

''எதற்கு இப்படி ஒரு விபரீத விளையாட்டு''

''நான் வகுப்பில் சொன்னது மறந்து போனயா''

''அதுதான் அவர் சொன்னாரே, அது ஒரு தற்கொலை''

''அவர் சொன்னா அதை நீ நம்பிருவியா''

''அதுக்கு எதுக்கு என்னை இதுல வம்புக்கு இழுக்கிற''

''சுபத்ரா''

''யார் சுபத்ரா''

''சுபத்ராவை தெரியாது?, உன்னோட உண்மை காதலி''

''கோரன், வேண்டாம்''

''என்னடா வேண்டாம், சின்ன வயசுல இருந்து அவ உன்னை காதலிப்பா, நீ இன்னொருத்திய காதலிப்ப, அதை வந்து உன்கிட்ட சொன்னா, நீ அவளை உதாசீனப்படுத்துவ, இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, இப்பவும் சொல்றேன், நீ சுபத்ராவை ஏத்துக்கோ, காயத்ரியை எனக்கு விட்டுக் கொடுத்துரு, இல்லைன்னா நீ கொலை கேசுல உள்ள போக வேண்டி இருக்கும்''

சுபத்ராவை இவனுக்கு எப்படி தெரியும்? என்ற யோசனையில் மனம் சென்றது. அதோடு எனது காயத்ரி மீது இவனுக்கு என்ன ஆசை.

''கோரன், சுபாவை எப்படி உனக்கு தெரியும்''

''உன்கிட்ட கதை பேச நான் என்ன சினிமா வில்லன்னு நினைச்சியா, உன் பக்கத்தில உட்கார்ந்து இருந்தா நான் என்ன உன்னோட உயிர் நண்பன்னு கனவு கண்டியா''

இனிமேலும் தாமதிக்க கூடாது என அவன் எதிர்பாராதபோது அவனது மூக்கில் இரண்டு மூன்று என எண்ணிக்கொண்டே குத்துகள் விட்டேன். அந்த குத்துகளின் வேகத்தில் அவன் நிலைகுலைந்து போனான். அவன் வைத்து இருந்த பையில் உள்ள நோட்டினை எடுத்து கொண்டேன். படுபாவி, கத்திகள் இரண்டு வைத்து இருந்தான்.

பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி வைத்தேன். மயக்கமாகி இருக்க வேண்டும். அப்படியே படுத்துவிட்டான். அவனை தரையில் இழுத்துக் கொண்டு ஆசிரியரின் வீட்டினை தட்டினேன். சிறிது நேரத்தில் கதவு திறந்தது.

''என்ன இந்த நேரத்தில''

''சார், இவன் உங்களை கொல்ல வந்தான்''

''யாரு''

''கோரன்''

மயங்கி கிடந்த கோரனை ஆசிரியர் பார்த்தார். வீட்டினுள் தூக்கி சென்றோம். மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. மூக்கினை மேல்வாக்கில் உயர்த்தி பிடித்தவர், தண்ணீரால் முகம் தனை துடைத்தார். விழித்து பார்த்தவன்

''நீங்க யாரு?''

நான் திடுக்கிட்டேன்.

''டேய் நான் முருகேசுடா, இவர் நம்ம சார்டா''

அவன் சுற்றும் முற்றும் பார்த்தது கண்டு எனக்கு மிகவும் பதட்டமானது.

''இவனோட வீடு தெரியுமா?''

''தெரியும் சார்''

''சரி வா, இவனை அவங்க வீட்டுல விட்டுட்டு வருவோம்''

''எப்படி சார், இந்த நிலைமையில''

''சொல்றதை செய்''

கோரனை எனது வீட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டேன்.

''சார், நான் அவங்க வீட்டுல விட்டுட்டு போறேன்''

''அவங்க அப்பாவை பார்த்து நான் சொல்லிட்டு வரனும்''

இனி எதுவும் செய்ய முடியாது என புரிந்து கொண்டு கோரன் வீட்டினை அடைந்தோம். அவருடைய காரில் தான வந்தோம். வரும் வழியில் கோரன் எங்க போறோம், நீங்க யாரு என்றே கேட்டு கொண்டிருந்தான். நடுத்தர வயது உடையவர் வீட்டு கதவினை திறந்தார்.

''உங்க பையன் என்கிட்டே படிப்பு சம்பந்தமா சந்தேகம் கேட்க வந்தவன் கிளம்பி போறப்ப கீழே தவறி விழுந்துட்டான், இப்போ தன் நினைவு இல்லை. அதான் விட்டுட்டு போக வந்தேன்''

''சரி, போ''

''நீங்க யாரு, இது யார் வீடு''

''கோரன், இது உன்னோட வீடு''

''முருகேசு, கிளம்பு அவங்க அப்பா பாத்துக்கிருவார், வா உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்''

''இல்லை சார், நான் போய்கிறேன்''

கோரன் வீட்டுக்குள் சென்றதை பார்த்து கொண்டே இருந்தேன். எனக்குள் அளவில்லா பயம் வந்து சேர்ந்தது. கதவு சாத்தப்பட்டது. வீட்டின் சன்னல் ஓரம் எனது காதை வைத்தேன்.

''போன காரியம் என்னடா ஆச்சு''

''நம்ம சுபத்ரா சொதப்ப வைச்சிட்டாப்பா''

''அவகிட்ட எதுக்குடா இந்த விசயத்தை சொன்ன''

''நேத்து அவளை எதேச்சையா பார்த்தேன், அப்போதான் இந்த முருகேசு பயலை பத்தி எல்லாம் சொன்னா. அதனால இவனை இதுல கோர்த்து விடலாம்னு திட்டம் போட்டேன். அவன் என்னை அடிச்சி மயக்கமாக்கிட்டான்''

''அந்த வாத்தியானை பதிமூணாவது நாள் காரியம் ஆக முன்னாடி முடிக்கனும்டா. இந்த முருகேசு கருகேசு எல்லாம் இதுல சேர்க்காதே''

''நான் பாத்துக்கிறேன்பா''

எனக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

(தொடரும்) 

Wednesday 20 November 2013

நான் சைவத்திற்கு மாறிய கதை

எங்கள் வீட்டில் எப்போதாவது அதுவும் விசேச தினங்களில் மட்டுமே மட்டன், சிக்கன் என வாங்குவார்கள். 'மக்காளி மாமா'தான் ஆட்டுக்கறி எல்லாம் விற்பனை செய்வார். எனக்கு இந்த ஆட்டுக்கறி, கோழி என்றால் பிடித்தும் பிடிக்காமலே இருந்தது. 

எங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடுகள், கோழிகள் கூட இரையாகி இருக்கின்றன. பலமுறை வேண்டா வெறுப்பாகவே சாப்பிட்டு இருக்கிறேன். முட்டை என்றால் மிகவும் விரும்பியே சாப்பிட்டு இருக்கின்றேன். அதுவும் எங்கள் வீட்டில் புரட்டாசி மாதம் என்றால் முட்டை கூட பொறித்து தரமாட்டார்கள். இதனால் எங்கள் வீட்டிற்கு எதிராக இருக்கும் 'உப்புநக்கி அவ்வா' வீட்டில் சென்று பிரத்தியோகமாக எனக்கென முட்டை பொறித்து சாப்பிட்டு வந்து இருக்கிறேன். 

ஒரு முட்டை இருந்தால் போதும், பழைய சாதம்தனை சாப்பிட்டுவிட்டு போய்விடுவேன் என வீட்டில் சொல்லுமளவுக்கு அத்தனை பிரபலம். உத்தங்குடியில் கல்லூரியில் படித்த போது நானும் எனது நண்பர் ராஜேசும் மதுரைக்கு சென்று ஆளுக்கொரு முழுக்கோழி சாப்பிட்டு வந்து இருக்கிறோம். 

உத்தங்குடியில் இருந்த கடை ஒன்றில் தினமும் ஒரு முட்டை கொத்து புரோட்டா சாப்பிடாமல் சென்றதில்லை. புரோட்டா அத்தனை அருமையாக இருக்கும். காத்திருந்து சாப்பிட்டு சென்று இருக்கிறோம். புரோட்டாவை போட்டு அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் அழகே தனி. சமீபத்தில் நான் எழுதிய காமக் கதைகளுக்கு எப்பவும் மவுசு அதிகம் என்பதில் இந்த உத்தங்குடி கடையும், நாங்கள் கடைசி வருடத்தில் தனியாக எடுத்த வீடுமே எனது கற்பனையில் வந்து போயின. நாங்கள் ஐவர் தங்கி இருந்தோம், தினமும் காலை, மதியம் இரவு என அந்த கடையில் ஒருமுறையாவது கறியுடன் சேர்ந்தே சாப்பிடுவது உண்டு. மாதம் அறுநூறு ரூபாய் என வந்துவிடும். கல்லூரி முடிக்கும் தருவாயில் இந்த அசைவம் மீது சற்று வெறுப்பு வரத் தொடங்கி இருந்தது. 

அசைவமாக இருப்பது சற்று அசௌகரியமாக இருந்தது. விடுமுறை நாளில் வீட்டுக்கு சென்றால் வறுத்த ரத்தம், ஆடு கோழி என அம்மா சமைப்பது உண்டு. எனக்கு பிடிக்கவில்லை என சொன்னாலும் அம்மா சமைக்காமல் விட்டதில்லை. கல்கத்தாவில் படித்தபோது  மீன் சாப்பிட ஆரம்பித்தேன். அதன் முள்ளை விலக்கி சாப்பிடுவது பெரிய போராட்டமாகவே இருக்கும். அங்கே கடைகளில் முட்டையை உள்ளே வைத்து முட்டை ரோல் செய்து தருவார்கள். எப்படியும் ஒன்றாவது தினமும் சாப்பிட்டு விடுவேன். இப்படி வெறுப்புடனே அசைவத்தை மிகவும் ரசித்து சாப்பிட்டு வந்தேன். 

சென்னையில் கல்லூரியில் வேலை பார்த்தபோது கடைகளுக்கு சென்று சாப்பிடும்போது சிக்கன் எல்லாம் மிச்சம் இருந்தால் ராதாவிற்கு தந்துவிடுங்கள் என சொல்லுமளவுக்கு சிக்கனை சாப்பிடவே செய்தேன். ஆனால் ஏதோ உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒருமுறை வீட்டிற்கு சென்றபோது அம்மா மட்டன் சமைத்து இருந்தார்கள். வேண்டாம் என்றே பிடிவாதம் பிடித்தேன். ஆனால் அவர்களோ நான் சாப்பிட்டே தீர வேண்டும் என சொன்னார்கள். வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு வைத்தேன். அம்மா உலகில் இல்லாது போனால் இந்த அசைவம் தொடக்கூடாது என முடிவு செய்தேன். அப்போதுதான் எனக்கு திருமணம் எல்லாம் செய்யும் திட்டம் உச்ச கட்டம் அடைந்து இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அம்மா எனக்கு திருமணம் ஆகுமுன்னரே இறந்து போனார்கள். நான் சைவம் ஆவது என முடிவு எடுத்தேன். அம்மா இறந்தபின்னர் மூன்று மாதங்கள்  முட்டை மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தேன். 

திருமணம் நிச்சயம் ஆனது. மனைவியாக வர இருந்தவரிடம் என அசைவ கதையை சொன்னேன். அவர் அசைவம் சாப்பிடுவதில்லை என சொன்னார். அதோடு முட்டையும் சாப்பிட மாட்டேன் என சொன்னார். அப்படி எனில் நானும் முட்டையை விட்டுவிடுகிறேன் என முழு சைவமாக மாறினேன். நீ எங்காவது சாப்பிட்டு வந்தால் எனக்கு என்ன தெரியும் என்றே ஒருமுறை மனைவியாக வந்தவர் சொல்லிவிட மனதில் உறுதி கொண்டேன். குளிர் நாட்டிற்கு வந்ததும் அசைவம் சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள், நான் சைவம் மட்டுமே சாப்பிட்டேன். நான் சைவத்திற்கு மாறியது மனைவிக்காகவே என பலரும், என் மனைவியோ என் அம்மாவுக்காக தான் நான் மாறினேன் என சொல்லிக் கொள்வார்கள். 

நான் சைவத்திற்கு மாறிய பின்னர் சில கனவுகள் கூட வந்தது உண்டு. நான் அசைவம் சாப்பிட்டுவிட்டு அலறியது போன்ற கனவுகள். ஒருமுறை முட்டை சாப்பிட்டுவிட்டு நான் செத்து போனேன் என்றெல்லாம் கனவு கண்டு இருக்கிறேன். கொடுத்த வாக்கு மீறக்கூடாது என்பதில் நான் கொண்டிருந்த பற்றுதான் அது. சைவத்திற்கு மாறி இன்றுடன் பதினைந்து வருடங்கள் மேல் ஆகிவிட்டது. வருடம் ஒருமுறை மருத்துவரை பார்க்க சென்றால் மீன் சாப்பிடு, முட்டை சாப்பிடு என அறிவுரை சொல்கிறார்கள். நான் புன்னகையுடன் அவர்களை கடந்து செல்கிறேன். 

என்னைப் பார்த்து ஒருவர் வைணவனா எனக் கேட்டார். எனக்கு எல்லா சமய கதைகளும் பிடிக்கும் என்றே சொல்லி செல்கிறேன். சாப்பாடு விசயத்தில் நான் சைவம் என்று சொன்னால் அது ஒரு சமய அடையாளம் என்று கூட அர்த்தப்படுத்தப்படும். அப்படித்தான் என்னை பலரும் கேட்டார்கள். நான் சைவம் என்றால் உங்கள் மதம் சொன்னதா என்றே கேட்டார்கள். மனைவி சொன்னது என இந்த சைவம் மாறிய கதை எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. 

Tuesday 19 November 2013

அடியார்க்கெல்லாம் அடியார் 36

'யார் சொல்லி நீவீர் இங்கு வந்தீர், உம்மை விட்டு பிரிந்தே யாம் இந்த நிலை எடுத்துக் கொண்டோம், எதற்கு எம்மை தேடுகிறீர்''

''ஒழுங்கா பேசுங்கோ, நீங்க எதுக்கு அந்த வைஷ்ணவியை ஏமாத்தினேள், இப்போ அந்த பொண்ணு வேற கல்யாணம் பண்ணிக்கப் போறா, அதான் உங்களோட நான் வாழ முடிவு பண்ணி இருக்கேன், இந்த சிவன் வேசம் கலைச்சிருங்கோ'' 

''யான் இதில் இருந்து பௌத்த வேடம் தரிக்க இருக்கிறேன், நீயும் பௌத்த வேடம் தரித்து கொள். எனது அடியாராக இருக்க சம்மதம் எனில் தொடர்ந்து ஏதும் பேசாமல் என்னுடன் வந்து கொண்டிரு, இல்லையெனில் என்னைப் பெற்றெடுத்தவர்களுடன் நீயும் சென்று விடு''

கண்களில் கண்ணீர் பொங்கிட ருக்மணி மதுசூதனனைப் பார்த்தாள். 

''ஏனிப்படி ஒவ்வொரு வேடம் தரித்து கொண்டு ஊர் ஊராக அழையனும், நாம ஊரில போய் சேர்ந்து வாழலாம்''

மதுசூதனன் ருக்மணியை பரிதாபமாக பார்த்தான். 

''எமது அடியாராக வருவீர் என்றே எம்மை எம்முடன் அழைத்தோம், விருப்பம் இல்லையெனில் திரும்பவும்'' என மதுசூதனன் சொன்னதும் கோபம் கொண்ட ருக்மணி விறுவிறுவென வைஷ்ணவி வீடு நோக்கி போனாள். மதுசூதனன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். 

''எங்கே அவன்'' என மதுசூதனின் பெற்றோர்கள் கேட்டார்கள். அவா என்னோட வாழ மாட்டேன்னு சொல்லிட்டு போறார் என அழுதாள் ருக்மணி. வைஷ்ணவிக்கு என்ன செய்வது என புரியவில்லை. திடீரென் யோசித்தவளாய் வேகமாக வீட்டிலிருந்து வெளியில் ஓடினாள். மதுசூதனனை கண்டு இடைமறித்தாள். கதிரேசனும், ருக்மணி, பெற்றோர் என  உடன் ஓடி வந்து சேர்ந்தனர். 

''உனக்கு என்ன வேணும், இப்போ என்னை பொண்ணு பார்க்க வந்தது இவங்கதான், இப்ப சொல்லு'' என்றாள் வைஷ்ணவி. 

''புத்தி பேதலித்து வந்து இருப்பார்கள், யாம் இனி திருமணம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை. உம்மை இனிமேல் எம்மால் காதல் புரியவும் முடியாது, வேணுமெனில் நீவிரும் அடியாராக எமக்கு வரலாம்'' என நடந்தான் மதுசூதனன். 

''நில்லுடா மதுசூதனா'' என்றான் கதிரேசன். அவன் போட்ட சப்தத்தில் அங்கே நடந்து கொண்டு இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். உன்னை போலீசில் புகார் கொடுத்து ஜெயிலுல அடைச்சிருவோம், ஜாக்கிரதை.

''தாராளாமாக செய்யலாம் எமது அடியாரே, நீவிர் முதலில் திருமண பந்தம் விட்டு எம்மோடு வாரும், யாம் நாளையில் இருந்து புத்த பிட்சுவாக மாற்றம் கொள்ள இருக்கிறோம். இந்த இந்தியாவில் பௌத்தம் மீண்டும் தழைக்க யாமே அவதாரம் எடுத்து உள்ளோம். இனி எமது பெயரை திரிகோடன் என்றே மாற்றம் செய்வோம்'' என்றான் மதுசூதனன். 

''உனக்கு பைத்தியமாடா பிடிச்சி இருக்கு, இதோ இந்த ரெண்டு பொண்ணுகளோட வாழ்க்கையை பத்தி யோசிச்சியா, உன்னை காதலிச்ச ஒரே காரணத்திற்கு உன்னை மறக்க முடியாம அதோ அவ தள்ளாடிட்டு இருக்கா, இதோ இவங்க உன்னை கல்யாணம் பண்ணின பாவத்திற்கு உன்னை தேடி வந்து நிக்கிறாங்க, புரிஞ்சிக்கோடா'' 

''யாம் சொன்னது சொன்னதுதான், அனைவரும் எமது அடியாராக மாறிவிடுங்கள், இன்று இரவு சிவன் கோவிலில் ஒரு சொற்பொழிவு இருக்கிறது அங்கு வந்து எம்மை சந்தியுங்கள், அங்கே உங்கள் அனைவரையும் சிந்திக்க வைப்பேன். 

அவன் போகட்டும் விடுப்பா, என்றே மதுசூதனின் தந்தை சொன்னார். யாரும் எதிர்பாராத விதமாக மதுசூதனின் தாய் அவனது கால்களை பற்றி கதறினார். எங்க கூட வந்துருப்பா எனும் குரல் கதிரேசனை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. 

மதுசூதனன் குனிந்து அன்னையின் கரம் பற்றி தூக்கினான். ''யாம் இனி திரிகோடன், எம்முடன் நீவிர் வந்தால் சிவன் ஆலயத்தில் ஓரிடம் உங்களுக்கு தர செய்து அங்கே எமது அடியாராக தொடரலாம், இதை மீண்டும் மீண்டும் எம்மால் சொல்ல இயலாது. வருவது எனின் வாருங்கள், இல்லையேல் கோவிலில் சந்திப்போம். மதுசூதனன் விறுவிறுவென நடந்தான். கதிரேசன் அவனை விரட்டி கொண்டு போனான். 

(தொடரும்) 




Thursday 14 November 2013

இன்னுமொரு கிரகத்தில் மனிதர்கள்

எத்தனை கதைகள் வந்து இருக்கும், எப்படி எல்லாம் மனிதர்கள் கற்பனையில் வேற்று கிரகவாசிகள் வந்து போய் இருப்பார்கள். உயிரினங்கள் பூமியில் இருந்து தோன்றி இருக்காது எனவும்,வேறு ஒரு கிரகத்தில் இருந்தே வந்து இருக்க கூடும் என்றே ஒரு கோட்பாடு உண்டு.

இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் கிட்டத்தட்ட பத்து பில்லியன்கள் வருடங்கள் முன்னர் தோன்றி இருக்க கூடும் என்பது ஒரு தோராயனமான கணிப்பு, இது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பம் தோன்றியதற்கு முன்னர் உள்ள கணிப்பு. இன்றுவரை பலரும் வேறு கிரக உயிர்கள் சாத்தியம் என்றே நம்புகிறார்கள். ஆனால் இதுவரை அப்படி கிரக உயிர்கள் இருப்பதாக எந்த ஒரு அடையாளமும், குறிப்புகளும் கிடைக்கவில்லை.

தேவலோகம், இந்திரலோகம் என்றெல்லாம் எதை வைத்து கற்பனை செய்தார்கள் என புரியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை அப்படி இருந்து அவை எல்லாம் பிற்காலத்தில் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டதா என எந்தவொரு அடையாளம் இல்லை. வைகுண்டம் எல்லாம் எங்கே இருக்கும் என்றே மிகவும் யோசனையாக இருக்கிறது. இவை எல்லாம் கற்பனை என்றே புறந்தள்ளிவிட முடியாது. புராணங்கள் கணக்குப்படி அன்றைய கால கட்ட மனிதர்களின் வயது காலம் பன்மடங்கு இருந்தது என்றே குறிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பூமிக்கு என்று மட்டுமே ஒரு சிறப்பு தன்மை இல்லை, இதைப்போல பல கிரகங்கள் பிரபஞ்சத்தில் உண்டு என சொல்வது புராணங்கள் அல்ல, மாபெரும் அறிவியலாளர்கள். வியாழனின் கிரகத்தில் ஈரோப்பா நிலா, சனி கிரகத்தின் என்செலாடஸ் எனும் நிலா போன்ற இடங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நவம்பர் நான்காம் தேதி 40 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் இருப்பதாகவும், அதில் 11 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் சூரியன் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்கள் முன்னர் வேற்றுகிரகவாசிகள் எவரேனும் தொடர்பில் உள்ளனரா என அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மனு தரும் அளவிற்கு மனிதர்கள் சிலர் வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவே நம்புகிறார்கள்.

இந்த பூமி எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்தவர்களுக்கு அமெரிக்காவில் இருந்தவர்களை தெரியாது. ஆனால் மனிதர்கள் இங்கும் அங்கும் இருக்கவே செய்தார்கள். இவர்களுக்கான தகவல் தொடர்பு, வழித் தொடர்பு என எதுவும் இல்லை. ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனித சமூகம் உலகமெலாம் பரவியது என இருப்பினும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் முன்னர் வெளிநாடு என்றாலே பெரிய விசயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மூலை முடுக்கெல்லாம் எல்லா நாடுகளும் தெரிகிறது

இதே போலவே வேறு கிரகத்தில் நம்மை போலவே மனிதர்கள் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் தொலைவில் நாம் இல்லை. ஏனெனில் பன்னிரண்டு ஒளிவருடங்கள் தொலைவில் ஒரு பூமி போன்ற கிரகம் உள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது ஒரு வினாடிக்கு 300000000 மீட்டர்  என கணக்கில் சொல்லப்படுகிறது. இதை ஒருநாள், ஒருவாரம், ஒரு மாதம் ஒரு வருடம் என கணக்கில் கொண்டு பார்த்தால் மிக அதிக தொலைவு என்பது புலப்படும். மனித வாழ்நாள் குறைந்து போனதால்.பல விசயங்கள் சாத்தியம் அற்றதுதான்.

ஒரு உயிரினம் தோன்ற மிக முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், நைட்ரஜன், என்பதோடு பாஸ்பரஸ்,கந்தகம் தேவைப்படுகிறது. முக்கியமான வேதி வினைகள் நடைபெற தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எல்லாம் இருந்துவிட்டால் உயிரினம் சாத்தியம் என்றே கருதப்படுகிறது.

நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்து இருக்கலாம் என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கை.இந்த அறிவியல் எப்படி வேண்டுமெனில் தேடட்டும்,

இன்னுமொரு கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ள, நாம் அவர்களை தொடர்பு கொள்ள இன்னுமொரு யுகம் ஆகலாம்.

 

Monday 4 November 2013

தமிழ் எதிரி

ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அங்கே எழுதப்பட்டு இருக்கும் எழுத்துகள் என்னால் வாசிக்க இயலும் ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள இயலாது. அந்த எழுத்துக்கள் ஆங்கில உருவில் தான் இருந்தன. அப்போது எனக்குள் தோன்றியது எல்லாம் தமிழை இப்படி செய்து விடலாமே என்றுதான். தமிழ் அழிகிறது என சொல்பவர்களுக்கு தமிழை காப்பாற்ற இதுதான் வழி என்றே எனக்குள் பலமுறை தோன்றியது உண்டு. ஆனால் தமிழ் மீது கொண்ட பாசம் தமிழ் எழுத்துக்கள் தொலைந்துவிடக் கூடாது எனபதில் தான் இருந்தது.

இந்த இணையத்தில் நான் முதன் முதலில் எழுத வந்தபோது ஆங்கில எழுத்துருவில் தான் எழுதினேன். ஆனால் அதற்கு நான் பட்ட அவஸ்தைகள் எனக்கு மட்டுமே தெரியும். எப்படியாவது தமிழ் எழுதும் விசைப்பலகையை கண்டு கொள்ள வேண்டும் எனும் உத்வேகம் தமிழ் எழுதும் எழுத்துருவினை கொண்டு வந்து என்னிடத்தில் சேர்த்தது.

என்னதான் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினாலும் தமிழை தமிழ் எழுத்துகளால் எழுதும் ஒரு ஜீவன் அதில் இருப்பது இல்லை. என்னதான் ஒரு பெண்ணின் மடி என்றாலும் தாய் மடி போல் அமைவது இல்லை. டைப்ரைட்டர் காலத்தில் இருந்தது போல இப்போது விசைப்பலகை எல்லாம் தமிழில் வந்து கொண்டிருப்பதால் தமிழ் எழுத்துருவை கற்று கொள்வதில் தான் அந்த மொழியின் சிறப்பு இருக்கிறது.

எழுத்துருவு மாற்று கருத்து என்னை போன்ற வெளிநாட்டில் வாழ்ந்து தமிழை தனது சந்ததிக்கு தராமல் தொலைத்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் சரியாகவே பொருந்தும். இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்றாலும் தமிழுக்கு முன்னுரிமை தந்து தனது சந்ததிகளுக்கு தமிழை போதிக்கிறார்கள். அது கூட காலபோக்கில் குறைந்துவிடும்.

ஒரு தமிழ் நாவலை வெளியிட்டபோது தமிழர்கள் பலர் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட முடியுமா என்றே கேட்டார்கள். எனக்கோ தமிழ் மொழியை தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே தமிழ் மொழிக்கு சிறப்பு என்றே தோணியது. நீங்கள் தமிழ் மொழி கற்று கொள்ளுங்கள் என்றே சொல்லி முடித்துவிட்டேன்.

எந்த ஒரு மொழியும் தன்னகத்தே மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நடமாடும் நிலை வந்தால் ஒழிய அந்த மொழி அழிந்து போகும். சமஸ்கிருதம் ஒரு உதாரணம். மேலும் ஒரு மொழியின் பயன்பாடு ஒரு இனத்துடன் இருப்பது கூட அந்த மொழியின் வளர்ச்சியை தடை செய்யும்.

இதற்காகவே தமிழ் மொழியில் இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் பிற மொழிக்கு மொழி பெயர்த்து இருந்திருக்க கூடாது என்றே கருதுவேன். வேண்டுமெனில் வந்து தமிழ் படி எனும் ஒரு உறுதியான நிலை எடுத்து கொளல் வேண்டும்.

தமிழில் ஆங்கிலம் கலந்துவிட்டது. ஒருவர் அருமையாக சொன்னார், அதிர்ஷ்டத்திற்கு லக் என்பது தமிழ் மொழி என! என்றோ எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. தமிழ் எண் சொல் என கேட்ட நண்பனிடம் 1 2 3 எழுதி தந்துவிட  இதுவா தமிழ் எண் என கேட்டு அன்றைய எனது முட்டாள்தனம் எனக்கு புரிந்து போனது.

இனி எப்படி தமிழ் வாழும் என்பது தமிழகத்தில் வாழ்பவர்களை பொருத்தே அமையும். பிற நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழ் சங்கம் என வைத்து தமிழ் வளர்த்தாலும் இனி வரும் காலங்களில் தமிழ் பிற நாடுகளில் தொலையும். எப்படி பண்டிகைகள் இந்திய பண்டிகைகள் என அடையாளம் கொண்டவனோ அதைப்போல தமிழ் உலக மொழி எனும் அந்தஸ்தை அடையப் போவதில்லை. ஆங்கிலத்தை இனி வெளியேற்றுவது கடினமான செயலே.

தமிழ் அழிந்து போகும் எனில் அதற்கு காரணம் நாம் தான். அடுத்த சந்ததிகளுக்கு முறையாக தமிழை கொண்டு சேர்க்காமல் போகும் என்னை போன்ற பெற்றோர்களே தமிழுக்கு மாபெரும் அநீதி இழைக்கிறார்கள். 

Monday 14 October 2013

பெண்ணியமும் கன்னியமும்

''என்னடா பண்ணிட்டு இருக்க, கடைக்கு போக சொன்னேன் மறந்துட்டியா?'' அம்மாவின் எச்சரிக்கை வார்த்தையில் புத்தகத்தில் இருந்து மீண்டேன்.

''பரீட்சை வருதுமா, அதான் படிச்சிட்டு இருக்கேன். நீ வாங்கிட்டு வாம்மா'' நான் சொன்னதை அம்மா கேட்கவில்லை

''கடைக்கு போய்ட்டு வந்து படி'' அம்மா சற்று குரலை உயர்த்தி சொன்னார்.

''தங்கச்சிய போக சொல்லுமா, அவ சும்மாதான இருக்கா'' நான் சொன்னதும் அம்மாவுக்கு கோவம் வந்துவிட்டது.

''இப்போதான் பெரிய மனுஷி ஆகி இருக்கா, அவளை எல்லாம் கடைக்கு அனுப்ப முடியாது, நீ போகப் போறியா இல்லையா'' அம்மாவின் அந்த வார்த்தை எனக்கு இடைஞ்சல் தந்தது. புத்தகத்தை தரையில் எறிந்துவிட்டு கிளம்பினேன்.

''என்ன வாங்கனும், சொல்லும்மா'' எனக்கும் கோவம் வந்து இருந்தது. அம்மா வாங்கி வர சொன்ன பொருட்கள் ஐந்துக்கு குறைவாகவே இருந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு விறுவிறுவென கடையை அடைந்தேன்.

''மாப்பிள்ளை, உன் தங்கச்சிய  எனக்கு கட்டி கொடுப்பியாளே'' என்றார் எனக்கு தெரிந்த வயது அதிகமான மாமா.

''கிழட்டு கிறுக்கனுக்கு புத்திய பாரு'' நான் கோவத்துடன் சொல்லி வைத்தேன்.

''என்ன மட்டு மருவாதி இல்லாம பேசற'' அவர் கையை ஓங்கி அடிக்க வந்தார். நானும் நேராக நின்றேன்.

''பொட்ட புள்ளை எல்லாம் படிச்சி என்ன செய்ய போகுது, பேசாம எனக்கு கட்டி கொடு மாப்பிள்ளை'' என்றார் ஓங்கிய கையுடன் கிண்டலாக.

''ஏன் உன் புள்ளைய படிக்க வைக்காம ஒரு தாத்தாவுக்கு கட்டி தர வேண்டிதான. உனக்கு என் தங்கச்சி இளக்காரமோ மூமா, பேசுறான் கிழட்டு கிறுக்கன்'' என கோவத்துடன் நான் சொல்லும்போதே என்னை அவர் சரமாரியாக அடித்தார். அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையை பதம் பார்த்தேன்.

அதற்குள் நாட்டாமை பண்ண சிலர் வந்துவிட்டார்கள். பெண்களை பற்றி கேவலமாக பேசுவதே இந்த கிழட்டு கிறுக்கனுக்கு பொழப்பு என சிலர் அவரை வசைபாடினார்கள். என்னை ஒதுங்கி போயிருக்கலாம்ல என்றார்கள். நானும் கடையில் பொருட்கள் வாங்கியபடி வீடு வந்து சேர்ந்தேன்.

''இவ்வளவு நேரமாடா, எவளோட பேசிட்டு இருந்த'' அம்மாவின் அந்த கூரிய வார்த்தைகள் என்னை மேலும் கோவம் அடைய செய்தன.

''சரசு வந்து இருந்தா, அவளோடதான் பேசிட்டு இருந்தேன். இப்போ என்ன அதுக்கு'' நான் சரசு எனும் பெண்ணை காதலிப்பது குறித்து அம்மாவுக்கு நிறைய கோபம்.

''உனக்கு சூடு வைச்சாதான் சரிப்படும்'' அம்மா சொல்லிவிட்டு போனார்.

''எதுக்கு இப்படி உட்கார்ந்துட்டு இருக்க, போய் விளையாடு, இல்லைனா படி'' நான் தங்கையிடம் சொல்லி வைத்தேன்.

''வெளில விளையாட போனா அம்மா திட்டும்'' பாவமாக சொன்னாள் தங்கை.

அடுத்த நாள் நான் கல்லூரி பேராசிரியர் ஒருவரை சந்திக்க சென்றேன். எனது வீட்டில் கடையில் நடந்ததை கூறி, எதற்கு இப்படி பெண்களை அடிமைபடுத்துகிறார்கள், பெண்களை தவறாகவே பேசுகிறார்கள் என கேட்டேன்.

''உன் அம்மாகிட்ட கேட்காம என்கிட்டே கேட்கிறே. பெண்களுக்கு பெண்களே எதிரி அப்படின்னு பெண்களே சொல்லிகிருவாங்க'' என்றார் பேராசிரியர்.

''இல்லை சார், பெண்கள் முழு வீச்சில் தங்களை அடிமை தனத்தில் இருந்து வெளியே கொண்டு வரனும். எல்லா துறைகளிலும் அவங்க சாதிக்கனும். பாரதி கண்ட புதுமைப் பெண் போல தீரமிக்கவர்களாக வரனும்'' நான் வீராவேசமாக பேசினேன்.

''பேசி முடிச்சிட்டியா?, கல்யாணம் பண்ணி பாரு. அப்புறம் யாரு அடிமைன்னு தெரியும்'' பேராசிரியரின் சொற்றொடர் எனக்கு புரியவில்லை. அவரிடம் சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு கல்லூரி தோழி எழிலரசியிடம் இந்த விசயத்தை பேசிவிட்டு வீடு வந்தேன்.

''எங்கடா போய்ட்டு வர, அந்த சரசு பைத்தியம் பிடிச்சி திரியற''' அம்மாவின் அர்த்தமற்ற கோபம் எனக்குள் கோபத்தை வரவழைத்தது.

''புரபொசர் பாக்கத்தான் போனேன்மா'' என சொல்லிவிட்டு கோபத்தை ஒரு அறையில் உட்கார்ந்து அழுகையாய் வெளிபடுத்தி கொண்டு இருந்தேன்.

''அழாதண்ணா, அம்மா எப்பவும் இப்படிதான். என்னை பூட்டி பூட்டி வைக்கிற மாதிரி உன்னை பூட்டி வைக்க முடியல, அதான் இப்படி பேசுது'' தங்கையின் ஆறுதல் வார்த்தை இதமாகவே இருந்தது.

சில மாதங்கள் பின்னர் சரசுவை பார்க்க சென்றேன். அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிவிட்டார்கள் என்றே சொன்னார்கள்.

''எப்படி உன்னால இப்படி அடங்கி செல்ல முடிகிறது'' என்றே அவளிடம் கேட்டு வைத்தேன். படங்களில் வரும் வசனம் போல் அம்மாவும் அப்பாவும் செத்து போவதாக சொன்னதாக சொன்னாள்.  நான் இனிமேல் கன்னிப் பையன் தான். எனக்கு என்று பேச எவனும் கொடி பிடிக்க மாட்டான். அவன் ஆம்பளைடா என்றே எனது வலியை துடைத்துவிட்டு போய் விடும் இந்த சமூகம். சோகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தேன்.

''சோனைமுத்து தூக்கில தொங்கிட்டான்டா' என சிலர் அலறிக் கொண்டு ஓடினார்கள். நானும் அங்கே ஓடினேன். அவருக்கு கல்யாணமாகி ஆறுமாதம் ஆகிறது. மனைவி இவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போனதாக பேசிக் கொண்டார்கள். அதே சோகத்தில் நான் வீடு வந்து சேர்ந்தேன்.

''எத்தனை தடவை சொல்றது, அந்த சரசு பின்னால போகாதேனு'' அம்மா சத்தம் போட்டு முடிக்கும் முன்னர் நான் சொன்னேன்.

''அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்கமா'' எனது வார்த்தை அவருக்கு அதிக சந்தோசம் தந்து இருக்கும்.

''இப்போதான்டா நிம்மதி'' அம்மா சொல்லிவிட்டு போனார்கள். அப்போது எனது கல்லூரி தோழி எழிலரசி வந்தாள்.

''இந்தா பெண்ணியம் புத்தகம், படி'' என அவள் தந்துவிட்டு போகும் முன்னர்

''எழில், நீயே எடுத்துட்டு போ. ஒரு பெண் தான் என்ன நினைக்கிறாளோ அதை எல்லாம் எவ்வித தடை இன்றி செய்ய வேண்டும், அப்படி செய்ய தடை விதிக்கப்பட்டால் அந்த பெண் அடிமைப்படுத்தபட்டவள். அந்த அடிமைத்தனத்தில் இருந்து அகல அந்த பெண் போராட வேண்டும், அதுதானே பெண்ணியம்'' நான் பேசியதை கேட்டு அவளது முகம் மாறியது.

''பெண்ணியம் அன்பின் வெளிப்பாடு. பெண்களை பற்றிய கண்ணோட்டம் சமூக அளவில் மிகவும் கீழாகவே இருக்கு. இந்த ஆண்கள் எல்லாம் ஒவ்வொரு பெண்ணின் பிண்டங்கள். பெண்களை அடக்கி ஒடுக்கி, கேலி பேசி, கிண்டல் செஞ்சி மூலையில உட்கார வைக்கிற காலம் இருந்தது என்னவோ உண்மை. அப்போ எல்லாம் பெண்ணை பாதுகாக்க வேணும் அப்படிங்கிற அக்கறை மட்டுமே இருந்தது. அந்த அக்கறை அடிமைத்தனத்தில் போய் முடியும்னு யாரும் எதிர்பார்க்கலை. பாலூட்டிகள் எல்லாத்துலயும் பெண் இனம் குழந்தை வளர்ப்புதான் முக்கியம்னு தோணிச்சி. தேனீக்கள் ஆணியம் பத்தி பேசறது இல்லை. அவங்க அவங்க முடிஞ்ச வேலை செஞ்சி வாழரதுல இருக்கு. பெண் சுதந்திரம் அப்படிங்கிறது பெண்ணியம் அப்படிங்கிறது பிறரால் ஒரு பெண்ணின் மனம், உடல் உபாதைக்கு உட்படாமல் வாழனும். பெண்களுக்கு என உரிமைகள்'' அவள் சொல்லி முடித்தாள்.

சில மாதங்கள் பின்னர் ஒரு நாள் கல்லூரியில் பேராசிரியரின் தலையில் பெரிய காயம் இருந்தது.

''என்ன சார்?'' என்றேன்.

''வீட்டில் பெண்ணியம்'' என்றே சிரித்துவிட்டு போனார்.

 நான் இன்னமும் கன்னிப்பையன் தான். சரசு இந்நேரம் உண்டாகி இருப்பாள். 

Thursday 10 October 2013

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 14

பாதை 13

மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி: ஒரு மூலக்கூறின் நிறையினை கண்டு கொள்ள உதவும் இது. நான் இந்த மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி செய்ய சென்ற நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.

முதன் முதலாக மிளகு தனில் இருந்து ஒரு மூலக்கூறுதனை பிரித்தெடுத்து அதன் நிறை என்ன கண்டுபிடிக்க கொடுத்தாகிவிட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக அந்த மூலக்கூறின் நிறை இருந்தது. எப்படி எல்லாமோ கணக்கு செய்து பார்த்தோம், ஒன்றுமே புரியவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. இத்தனை சிரமப்பட்டு செய்து வேறு ஏதோ மூலக்கூறுதனை அல்லவா கண்டுபிடித்தோம் என.

எனக்கு அப்போது வேதியியல் அத்தனை பரிச்சியம் இல்லை, இப்போது கூட முழு பரிட்சயம் ஆகிவிட்டது என்று சொல்ல இயலாது. கற்றுக்கொண்டே இருக்கிறேன். நிறை கண்டுபிடிக்க என்ன செய்தாய் என்று ஆசிரியர் கேட்டு வைக்க நான் எடுத்து சென்ற குழாய்தனை காட்டினேன். அப்பொழுது அந்த குழாய்தனின் மூடியை பார்த்தார். யோசித்துவிட்டு சரி என ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.

நான் மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி செய்பவரிடம் சென்று இதுதான் நான் எதிர்பார்த்த நிறை, ஆனால் வந்தது வேறு நிறை என்று சொன்னேன். அப்போது மூடி பற்றிய விபரமும் சொல்லி வைத்தேன். நான் கொஞ்சம் உளறி கொட்டுவேன். தேவையோ தேவை இல்லையோ சில விசயங்கள் அதிகமாகவே பேசி விடுவது உண்டு. பார்த்தார். யோசித்த்தார். இது தாலேட் என்றார். தாலேட்?

தாலேட் நிறையுடன் எனது மூலக்கூறு நிறை இணைத்தால் சரியாக வந்தது. இதை நீக்க முடியாது என்றே சொன்னார். இப்படித்தான் சில வாரங்கள் அந்த மூலக்கூறு படாத பாடு படுத்தியது. எப்படி இந்த நிறை எல்லாம் கண்டுபிடிக்க படுகிறது.

இந்த மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி ஐந்து நிலைகளை கொண்டது.

௧. மூலக்கூறு ஆவியாதல் ௨ எலக்ட்ரான்கள் மூலக்கூறிணை பகுத்தல் ௩ மூலக்கூறு வேகம் பிடித்தல் ௪ நிறைகேற்ப மூலக்கூறு பிரிதல் ௫ நிறை கண்டுபிடித்தல் கருவி

ஒரு மூலக்கூறின் நிறையை கண்டு பிடிக்க அந்த மூலக்கூறு ஆவியாகும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். மூலக்கூறு வாயு வடிவில் இருத்தல் அவசியம்.

இப்போது அந்த மூலக்கூறு ஆவியாக்கப்பட்டு அடுத்த நிலை சென்று அடையும் போது எலக்ட்ரான்கள் மூலம் தாக்கப்பட்டு அந்த மூலக்கூறு நேர்தன்மை உடையதாக மாறும். அதுவே அந்த அணுவின் நிறை. M+1 சில வேளைகளில் +2 கூட மாறும்.

அதற்கு பின்னர் மேலும் பல பகுப்புகள் நடைபெறும். இவ்வாறு நடைபெறும் போது கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிறைகள் கொண்டு மொத்த மூலக்கூறு எப்படி இருக்கும் என கணித்து விடலாம்.

இவ்வாறு பகுக்கப்பட்டு அவை எலக்ட்ரான் புலத்தினால் சிதறி அடிக்கப்படும், அப்படி வேகத்துடன் செல்லும் இவை காந்த புலத்தினால் சிறிய நிறை கொண்டது தள்ளி விலக்கப்பட்டும், பெரிய நிறை கொண்டது அருகில் விலக்கப்பட்டும் கண்டுபிடித்தல் கருவியை அடையும். அங்கே இதன் நிறை எல்லாம் கண்டு கொள்ளப்படும்.

இப்படித்தான் ஒரு மூலக்கூறின் நிறை கண்டு கொள்ளப்படுகிறது. ஒரே நிறை கொண்ட பல மூலக்கூறுகள் இருக்கும், இருப்பினும் இந்த முறைப்படி கிடைக்கும் வெவ்வேறு பகுப்புகளின் நிறைப்படி மூலக்கூறினை கண்டு கொள்ளலாம்.

தாலேட் இருந்த விசயம் தெரியாமல் போயிருந்தால் அன்று நான் செய்தது மிகவும் தவறாகவே முடிந்து இருக்கும்.

(தொடரும்)


Wednesday 9 October 2013

நடிகைகளும் இயக்குனர் சிகாமணிகளும்

''நாய் வேசம் போட்டா குரைக்கத்தான் வேணும்'' என எனது ஆசிரியர் ஒருவர் சொன்னார்.

''என்னதான் நான் குரைத்தாலும் நாய் போல் என்னால் குரைப்பது என்பது கடினமே, வேசம் போட்டாலும் என்னால் நாயாக ஆக முடியாது, அதனால் இந்த நாய் வேசம் எல்லாம் போட முடியாது'' என அவர் முகத்தில் அறைந்தது போன்றே சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

''இங்க வாடா'' என என்னை அழைத்து ஒரு அறை விட்டார்.

''எதுக்கு சார் இப்ப அடிக்கிறீங்க?'' என சுற்றி நிற்கும் மாணவர்கள் பார்க்கும் அவமானம் தாங்காமல் கேட்டேன்.

''நாய் வேசம் போடுன்னு சொல்றேன், ராஸ்கல் என் பேச்சை கேட்காம என்னையவா எதிர்த்து பேசற''

''என்னால முடியாது சார், அதுக்கு வேற ஆளு பாருங்க'' என திரும்பவும் சொன்னேன்.

''என்ன திமிருடா உனக்கு, நாயே'' என காலால் எட்டி உதைத்தார். அவர் சொன்னதை செய்யாமல் அடம் பிடிக்கும் என்னால் அவருக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது போன்றே அவ்வாறு நடந்து கொண்டார் என நினைத்தேன். ஆனால் எனக்கு நாய் வேசம் போடவே விருப்பம் இல்லை.

இனிமேலும் என்னால் பொறுத்து கொள்ள இயலாது என ஆசிரியர் என்று கூட பார்க்காமல் அவரை ஓங்கி காலால் எட்டி உதைத்தேன். எனக்கு எப்படி அத்தனை தைரியம் வந்தது என எனக்குத் தெரியவில்லை. பதவி, நிலை என காரணம் காட்டி பிறரை கொத்தடிமைகளாக வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சமூகம் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்தது. மாணவர்கள் அனைவரும் டேய் வாத்தியாரை அடிச்சிட்டாண்டா என்றே பேசிக் கொண்டார்கள். வாத்தியாருக்கு அடிக்கும் உரிமையை எவர் கொடுத்தது? என்னை கட்டாயப்படுத்தி ஒரு வேலையை செய்ய சொல்லும் உரிமை அவருக்கு எவர் தந்தது.

ஆசிரியர் என்னை பாய்ந்து கொண்டு அடிக்க வந்தார். நானும் விடுவதாக இல்லை. மாணவர்கள் சிலர் இடையில் புகுந்தார்கள். கல்லூரி முதல்வரிடம் அழைத்து செல்லப்பட்டேன்.

''நீ என்ன காரியம் பண்ணியிருக்க, ஒரு ஒழுக்கம் வேண்டாம்'' என முதல்வர் என்னைத் தான் திட்டினார்.

''இதோ நிற்கிறாரே அவருக்கு ஒழுக்கம் இருக்கானு கேளுங்க சார்'' என்றேன்.

''என்ன அடவாடியா என்கிட்டே பேசறே, ஒரு ஆசிரியரை நீ அடிச்சது குத்தம், நீ உன் பேரன்ட்ஸ் கூப்பிட்டு வந்து டிசி வாங்கிட்டு போ, உனக்கு இனிமே நல்ல கண்டக்ட் சர்டிபிகேட் தரமுடியாது'' என எனது பக்கம் நியாயம் எதுவும் கேட்காமல் முடிவை சொன்னார்.

''மாணவர் போராட்டம் வெடிக்கும், எப்படி காலேஜு நடத்துரனு பாக்கிறேன்'' என்றே சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

''இருப்பா'' என்றார் கல்லூரி முதல்வர். நான் நிற்காமல் வெளியில் வந்து விட்டேன். மாணவர்கள் என்ன ஆச்சு என்றே கேட்டார்கள். நடந்ததை சொன்னேன். எவரும் என் பேச்சு கேட்பதாய் தெரியவில்லை. நான் ஆசிரியரை அடித்தது தவறு என்றே சொன்னார்கள்.

கல்லூரியில் நடந்த விசயம்தனை வீட்டில் சொன்னேன். ''நாய் வேசம் போட்டு குரைச்சிட்டு போக வேண்டியதுதானே, எங்க தலைவிதி வந்து தொலையறோம், கையில காலுல விழுந்து உன்னை அங்கே படிக்க வைக்கிறோம்'' என்றே அம்மாவும் அப்பாவும் திட்டினார்கள். அன்று  மாலை எனக்கு சிறு வயதில் இருந்து தெரிந்த ஒரு அக்காவை பார்க்க சென்றேன். அவர் சினிமாவில் இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். எதற்கு நடிக்க போனார் என்றெல்லாம் நான் கேட்டதில்லை. இருப்பினும் இந்த நடிப்பு குறித்து கேட்க வேண்டும் என சென்றேன். என்னை பார்த்ததும் வா என முகம் ம்லர வரவேற்றார்.

''என்னடா நடிக்க சான்ஸ் கேட்டு வந்துட்டியா'' என சிரித்தார்.

''என்னால நடிக்க முடியாதுக்கா, நடிப்பு எல்லாம் எனக்கு வராதுக்கா'' என்றேன்.

''என்னடா சோகமா இருக்க'' என அக்கறையுடன் கேட்டார்.

கல்லூரியில் நடந்ததை சொன்னேன். அந்த அக்கா என் மேல் அதிக கோபம் கொண்டார்கள.

''ஏண்டா, இதுக்கா இப்படி ரகளை பண்ணுவ. நாய் வேசம் போட்டு குரைச்சிட்டு போகலாமேடா'' என அந்த அக்காவும் சொன்னதும் எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.

''ஏன்க்கா, படத்தில உங்களுக்கு பிடிக்காத மாதிரி நடிக்க சொன்னா என்னக்கா பண்ணுவீங்க'' என்றே கேட்டு வைத்தேன்.

''முடியாதுன்னு சொல்வேன், நடிச்சித்தான் ஆகனும்னு சொன்னா நடிச்சி தான் கொடுக்கனும். இது தொழில், இதுல முரண்டு பிடிச்சா நிலைக்க முடியாதுடா. நீ எந்த வேலைக்கும் போய்ப்பாரு, சொல்ற வேலையை நீ செய்யலைன்னா உன்னைய தூக்கிருவாங்கடா'' என அந்த அக்கா சொன்னதும் இந்த சமூகம் பற்றிய கோபம் கொந்தளித்தது.

''சுதந்திரமா நாம நினைச்சத செய்ய முடியாதாக்கா'' என்றே சோகமாக கேட்டு வைத்தேன்.

''எனக்கு நடிக்கிறது பிடிச்சி இருக்கு, அதான் வாய்ப்பு தேடி ஒரு படத்தில வாய்ப்பு கிடைச்சி இருக்கு. டைரக்டர் என்ன சொல்றாங்களோ அதை நான் அப்படியே செய்யலைன்னா இந்த பொண்ணு திமிரு பிடிச்சவனு முத்திரை குத்திருவாங்க, அப்புறம் என் கேரியர் என்ன ஆகுறதுடா. எல்லாம் டைரக்டர் கையில இருக்குடா. நான் எல்லாம் ஒரு பொம்மை மாதிரி'' என சொல்லும்போது ஏதோ ஒரு வலி இருப்பதை போன்று நான் உணர்ந்தேன்.

''அக்கா, நான் டைரக்டர் ஆகனும்க்கா'' என்றேன்.

''டே நிசமாவ சொல்ற, நடிக்க பிடிக்காதுன்னு சொன்ன, டைரக்டர்னா நடிச்சி காமிக்கனும்டா. அப்போதான் எப்படி நடிக்கனும்னு தெரியும். சில காட்சிகள் நமக்கே இயல்பா வரனும்டா, நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாடா. நான் நல்லா நடிக்கிறேன்னு யூனிட்ல எல்லாரும் சொல்றப்ப சந்தோசமா இருக்கும்டா'' என அவர் சொன்னபோது டைரக்டர் கூடவா நடிக்க வேண்டும் என்றே தோணியது. நான் அமைதியானேன். இந்த இயக்குனர்கள் மனம் வைத்தால் எல்லா நடிகைகளும் ஒரு கவர்ச்சி பொருளாக சினிமாவில் வர வாய்ப்பில்லை என்றே நினைக்க தோணியது.

''கவர்ச்சியா எதுக்குக்கா நடிக்கனும்'' என நான் கேட்டது எனக்கே தப்பாக தோணியது. ஒவ்வொரு சராசரி மனிதனும் பிற பெண்களை கவர்ச்சியாக பார்க்கும் எண்ணம் பெருகி விட்ட காலத்தில் எனது கேள்வி தவறுதான்.

''இதை ஒரு கலை நோக்கில, தொலைநோக்கு பார்வையில நீ பார்க்கனும்டா, யாரும் விருப்பபட்டு இப்படி நடிக்கிறதில, ஒரு கான்செப்ட் அதுக்கு ஒரு டான்ஸ் இப்படிதான் போகும்'' என அவர் சொன்னது அவரது பக்க நியாயம் தெரிந்து கொள்ள முடிந்தது.

''எனக்கு இன்னும் அந்த பக்குவம் வரலைக்கா, வரனும்'' என மனமாற்றத்திற்கு தயாரானேன்

''இங்க பாருடா, நீ கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து வாழ பழகிக்கோ, எத்தனை தடவை நான் சொல்றது. எப்ப பார்த்தாலும் யாருகிட்டயாவது சண்டை போட்டு வந்து நிக்கிற, உன்னால உன் குடும்பத்துக்கு எத்தனை அவமானம். உன்னை யாருக்குடா பிடிக்கும் சொல்லுடா'' அந்த அக்காவின் வார்த்தை என்னுள் வலியை ஏற்படுத்தியது. ''டைரக்டர் ஆகனும்னா சொல்லு, இந்த படத்து டைரக்டர்கிட்ட சொல்லி அசிஸ்டெண்டா ஒர்க் பண்ண சான்ஸ் கேட்கறேன்''.

''வேணாம்க்கா, காலம் பூரா நடிக்க எனக்கு முடியாதுக்கா'' என சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து கிளம்பினேன்.

''சார், சார்' என கதவை தட்டினேன்.

''என்னடா, வீட்டுக்கே வந்துட்டியா, உன் கேரியர் பாதிக்குமேனு உன் மேல போலிஸ் கேசு போடாம விட்டது என் தப்பு'' என்றார் அந்த ஆசிரியர்

''சார், என்னை மன்னிச்சிருங்க சார், நான் நாளைக்கு நாய் வேசம் போட்டு குரைக்கிறேன்'' என்றேன்

''இப்போ மட்டும் எப்படி அறிவு வந்துச்சி, அதை முன்னமே செய்றேன்னு சொல்லி இருக்கலாமே''

''என் தப்பு தான் சார்''

''சரி போ, நான் பேசிக்கிறேன். காலேஜுக்கு நாளைக்கு வா''

நாய் போல எப்படி குரைப்பது என ஒத்திகை பார்க்க துவங்கினேன். மனிதனாய் எதற்கு பிறந்தோம், விலங்காகவே பிறந்து இருக்கலாமோ  எனும் கேள்வி என்னை துளைத்துக்கொண்டு இருந்தது!

Monday 7 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படைப்பாளியும்

தமிழில் இப்படி ஒரு திரைப்படம் இனிமேல் வருமா அல்லது இப்படி ஒரு திரைப்படம் வந்து இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். இது ஒரு தமிழ் திரைப்படம். சற்று வித்தியாசமான தமிழ் திரைப்படம். கதையின் தொடக்கத்தில் இருந்து இறுதிகாட்சிக்கு சற்று முன்வரை  யார் இந்த ஓநாய் என்பதை சொல்லாமல் காட்சி அமைப்புகள் அமைத்த விதம் இந்த படத்தின் சிறப்பம்சம். இந்த ஓநாய்தனை சுற்றி பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் கதையை வெகு சுவாரஸ்யமாக நகர்த்த ஏதுவாகிறது. அதுவும் இந்த ஓநாய் பற்றிய கதையை ஓநாய் சொல்லும்போது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அத்தனை அருமை. பின்னோக்கி பார்த்தல் என பெரும்பாலான படங்களில் பல காட்சிகளை வைத்து நகர்த்தி இருப்பார்கள். ஆனால் இதில் ஒரு சின்ன கதையை அழகாக சொல்லி ஒரே காட்சியில் ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டார்கள்.

அவ்வளவுதான் கதை. ஆனால் சொல்லப்பட்ட விதம் சற்று வித்தியாசமானது. பிட்சா மற்றும் இது போன்ற தமிழ் படங்கள் நிறைய வர வேண்டும் என்றே சற்று தமிழ் ரசிகர்கள் ஒருவேளை  எதிர்பார்க்கலாம். ஆனால் இதே காலகட்டத்தில் தான் மற்ற மசாலா படங்கள் கூட வெற்றியும் குவிக்கின்றன. ஒரு படைப்பை இத்தனை சிரமப்பட்டுத்தான் தர வேண்டுமா என்றே பலரும் நினைக்க கூடும். மிகவும் எளிமையாக ஆறு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என முடித்து செல்வதை விட்டுவிட்டு இதெல்லாம் அவசியமா என்றே குரல் எழுப்பப்படும். ஆனால் அந்த அந்த படத்திற்கு அந்த அந்த சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழ் திரையுலகில் நடிகைகளை மிகவும் நேர்த்தியாக காட்டக் கூடிய வரிசையில் இந்த இயக்குனர் இருக்கிறார் என சொல்லலாம். கவர்ச்சி காட்டித்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் என்பதை சற்று தமிழ் திரையுலகம் தகர்த்தி கொண்டால் நடிகைகள் மீதான மரியாதை தமிழகத்தில் சற்று அதிகம் ஆகும். ஆனால், காட்டத்தான் கவர்ச்சி, காணத்தான் கவர்ச்சி என சொல்லி விட்டார்கள்.

 படத்தில் இசையை பற்றி சொல்ல வேண்டும். எனக்கு இசையை பற்றி அதிகம் தெரியாது என்றாலும் கூட ஏதோ ஒருவித இசை உணர்வு படத்துடன் ஒன்றியே இருந்தது. இன்ன இன்ன காட்சிக்கு இப்படித்தான் இசையை எழுப்ப வேண்டும் என ஒரு இசை மேதைக்கு தெரியாமல் இருந்தால் மட்டுமே ஆச்சர்யப்பட வேண்டும். பாடல்கள் இல்லாத படம் இது என்று சொல்ல முடியாது. ஒரு அருமையான பாடல் ஒன்று சில வரிகளில் வந்துவிட்டு போகும். காட்சிக்கு ஏற்ற அமைப்பு.

படம் குறித்து ஒவ்வொரு பிரதியையும் விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு திரைப்பட நுணுக்கம் தெரியாது என்பதால் ஒரு படைப்பாளியின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இது ஒரு உயர்ந்த படைப்பு தான். சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நபர், அவரை புறக்கணிக்கும் சமூகம். உதவிக்கு வராத மருத்துவத்துறை, காவல் துறை என எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. ஆனால் அடுத்த கட்ட காட்சி தமிழ் திரையுலகுக்கு சற்று புதிது, அல்லது நான் பார்க்க தவறி இருக்கலாம். ஆதி காலத்தில் இருந்து இது வரை உடலில் குண்டு பட்டால் ஒரு கத்தியால் குத்தி கிளறி குண்டுதனை எடுத்து போட்டுவிட்டு ஒரு கட்டுடன் சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கே மண்ணீரல்தனை வெளி எடுத்து விடுவது போன்ற காட்சி அமைப்பு.  மண்ணீரல்தனை எடுத்து விட்டால் என்ன ஆகும் என்பதை விளக்க இது அறிவியல் படம் அல்ல. எப்படி எடுப்பது என்பதுவும், அந்த காட்சியும் தொழில்நுட்பம் இல்லாத காலம்தனை சொல்லி சென்றது. ஆதிகாலத்தில் இப்படித்தான் மருத்துவம் பார்த்தார்கள், இதன் காரணமாக பாக்டீரியாக்கள் மூலம் நோய் பரவி மக்கள் இறந்து கூட போனார்கள்.

ஒருவரை பார்த்து நீ சிறந்தவன் என சொல்லிவிட்டால், சிறந்தவராக இருக்க வேண்டும் என அந்த நபர் நினைப்பது மனித இயல்பு. டாக்டர் என சொன்னதும் டாக்டர் என நினைப்பதுவும், செயல்படுவதும் தன்னம்பிக்கையின் அடையாளம். இப்படித்தான் படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி காட்சியில் மனம் சற்றே கனக்கிறது. வாழ்த்துகள் மிஸ்கின்.

கல்விக்கும், கலைக்கும் செல்வம் தலை வணங்க வேண்டும். ஆனால் செல்வத்தின் முன்னர் இந்த இரண்டுமே பிச்சைக்காரர்கள் போல் காட்சி அளித்து கொண்டு இருக்கிறது. இந்த வியாபார உலகில் நேர்மையான கல்வி, அற்புதமான படைப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இந்த வியாபார உலகில் கலையை வியாபாரமாக்கிட நினைக்கும் எந்த ஒரு படைப்பாளியும் உன்னதமான படைப்பினை தர இயலாது. ஒரு படைப்பாளி தனது படைப்பின் வெற்றியை வணிக ரீதியாக கணித்து கொள்வான் என்றால் அவனுக்கு இது போன்ற படைப்புகள் தோல்வியே.

இணைய உலகில் இப்போது எந்த படங்களும் திரையரங்குகளுடன் சேர்ந்தே வெளி வந்து விடுகின்றன. உலக நாடுகளில் எல்லா நாடுகளிலும் தமிழ் படங்கள் திரையிடப்படுவதில்லை. தமிழகத்தில் வெளிவந்த ஒரே வாரத்தில் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்படி ஒரு படைப்பை பார்ப்பதினால் படைப்பாளி பாதிப்புக்கு உள்ளாகின்றான். அவனது படைப்பு வணிக ரீதியாக தோல்வி அடையும்போது அது போன்ற முயற்சிக்கு அவனால் செல்ல இயல்வதில்லை, யாரும் துணை வருவதில்லை.

இதை எல்லாம் எப்படி தடுப்பது? முடியாது என்பதன் காரணமாகவே தமிழில்  மசாலா படங்கள் பெருகி போய்விட்டன. திரை அரங்குக்கு சென்று காணும் கூட்டம் அதற்கென்றே இருக்கிறது.

படைப்பாளி தனது படைப்பிற்கு விலை பேசக் கூடாது! விலை பேசும் நிலை வந்துவிட்டால் தனது படைப்பை பற்றி கவலை படக்கூடாது. தனது படைப்பா, பணமா என்பதை படைப்பாளி தேர்வு செய்யட்டும். 

Monday 30 September 2013

டிவிட்டர்களில் அறிவு ஜீவிகள்

பொதுவாகவே இந்த சமூக இணைய தொடர்புகளுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை என்றே ஒதுங்கி கொள்வது உண்டு. எவரேனும் நண்பர்கள் லண்டன் வந்தால் கூட என்னால் நேரம் ஒதுக்கி சென்று பார்க்க இயலாத நிலையில் தான் எனது வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டு இருக்கிறது. அதே போன்று, ஊருக்கு சென்றாலும், இருக்கின்ற மூன்று வார விடுமுறையில் உறவினர்கள் தேடி சென்று பார்ப்பதில் கழிந்து விடுகிறது. இதன் காரணமாக எப்போதும் தனித்தே இயங்கி பழகியாகிவிட்டது. 

கணினியில் வந்து அமர்ந்து ஒரு விசயம் படித்த காலம் மலையேறி விட்டது, இப்போதெல்லாம் தமிழில் மொபைல் போனில் எழுதும் வசதியெல்லாம் பெருகிவிட்டதால் படித்த விசயத்திற்கு உடனே பதில் எழுதும் வசதி வந்துவிட்டது. வீட்டில் மொபைலில் அப்படி என்ன இருக்கிறது என திட்ட ஆரம்பித்து விட்டார்கள். தமிழை படிப்பது எத்தனை சுகம்? 

டிவிட்டரில் நான் இணைய வேண்டாம் என ஒதுங்கியே இருந்த காலம். இணைந்த பின்னர் என்ன எழுதுவது என புரியாத போது பலரின் எழுத்துகள் வாசிக்க நேர்ந்தது. எண்ணற்ற நல்ல கருத்துகளை பகிர்ந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது அட என்று தான் தோணியது. பெரும்பாலும் தமிழ் டிவிட்டுகள் சினிமாவை பற்றியே இருந்தாலும் இன்னும் எனது வாசிப்பு விரிதல் அடையவில்லை. கூகுள் பிளஸ், பேஸ்புக் இவையெல்லாம் விட டிவிட்டர் மிகவும் வசதியாக இருப்பது போல் எனக்கு தோணுகிறது.

சமூக இணைய தளத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் ட்விட்டரில் சற்று அதிகமாகவே இருக்கும் போல தெரிகிறது. வீணாக பேசி பொழுதை கழிக்கும் நபர்கள் உண்டு என்றே புலம்புவதை காண இயல்கிறது. இதை எல்லாம் தவிர்த்து அறிவியல் அறிஞர்கள் கூட வலம் வருகிறார்கள். சற்று அறிவை வளர்த்து கொள்ள உதவும் என்றே நினைக்கிறேன். 

திருக்குறள் போல டிவிட்டர் செயல்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எழுத இயலாது என்பதால் ஒரு சில வரிகளில் எண்ணத்தை பகிர வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

நான் சில விசயங்களை பொதுவாக சொல்லும் போது அதை சற்றும் நம்புவதில்லை. இவ்வுலகில் இதுதான் இப்படித்தான் என எவராலும் வரையறுக்க இயலாது. அவரவர் அனுபவத்தின் அடிப்படையில் செய்தியை பகிர்ந்து கொள்கிறார்கள். பொதுவில் சில விசயங்கள் தவறாகவே தெரிகிறது. 

தாய் மட்டுமே கருணை உடையவரா? தாயின் கருணையை ஒரு ஆணினால் மிஞ்ச இயலாதா? என்பன போன்ற விசயங்கள் பகிரப்படுகின்றன. சட்டென சிரிப்பு மூட்டும் வசனங்கள் வலம் வருகின்றன.நேரடியாக நேரம் கிடைக்கும் போது பல தமிழ் மக்களுடன் பேசும் வாய்ப்பு போன்றே இருக்கிறது. 

டிவிட்டரில் அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள், அவர்களை மட்டும் கண்டு கொள்ளுங்கள். தேவையில்லாமல் சண்டை போட்டு மன உளைச்சலுக்கு உட்படாதீர்கள். டிவிட்டர் அது ஒரு சமூகம் என்கிறார் ஒருவர். சரி என்றே படுகிறது! 

Thursday 26 September 2013

ஜீரோ எழுத்து 8 ( அணுக்களின் உலகம் )

'நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்' என நம்மில் பலர் மிகவும் எளிதாக சொல்லிக் கொள்வோம். ஆனால் நமக்குள் இருக்கும் வேறுபாடு சொல்லிமாளாது. இப்படித்தான் இந்தியாவின் பெருமை பெருமளவில் சீரழிக்கப்பட்டது. இந்த அணுக்கள் பற்றி கிரேக்கர்கள் தான் முதலில் சொன்னார்கள் என அவர்களை பெருமைபடுத்தி பார்த்தது மேலைநாட்டு உலகம். ஆனால் இந்தியர்கள் இந்த அணுக்கள் பற்றி அதிகம் தெரிந்து இருந்தார்கள், இருப்பினும் அணுக்கள் பற்றி அறிவித்தவர்கள் கிரேக்கர்களா, இந்தியர்களா எனும் சர்ச்சை இன்னமும் உண்டு. 

2600 வருடங்கள் முன்னரே இந்த அணுக்கள் பற்றி சொல்லித் தரக்கூடிய  பள்ளிகள் இந்தியாவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயின் சமயம் மிகவும் தழைத்தோங்கி இருந்த சமயம் அது. அஜிவிகா, கார்வகா, வைசேசிகா, நியாய போன்ற பள்ளிகள் அணுக்கள் பற்றியும் அணுக்கள் இணைந்தால் மூலக்கூறு உருவாகும் என்றெல்லாம் சொல்லி தந்தது. இதே சமயத்தில் கிரேக்கத்தில் தேமாக்ரிடுஸ், லூசிப்பஸ் போன்றோர்கள் அணுக்கள் பற்றி பேசினார்கள். 'அணுவை துளைத்து' என்றெல்லாம் தமிழில் பாடி வைத்து இருக்கிறார்கள். கிரேக்க தத்துவ மேதைகள் இயற்கை விதிகளை படித்து அணுவை சொன்னதால் முதல் அறிவியலார்கள் என சொல்லப்பட்டார்கள். ஆனால் வேதங்களில் கூட அணு பற்றிய செய்தி உண்டு. அணுவில் என்ன இருக்கும் எனும் அன்றைய சிந்தனை சற்று குறைவு அல்லது அது குறித்து அவர்கள் சொன்னது அழிந்து போயிருக்கலாம். 

200 வருடங்கள் முன்னர் தான் இந்த அணுக்களில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் கண்டு பிடித்தார்கள். டால்டன் கண்டுகொண்ட அணு, மென்டலீவ் இடம் விட்டு வரைந்த தனிம அட்டவணை எல்லாம் அறிவியலின் அதிசயம். வெற்றிடம் எதுவும் இல்லை என்பதுதான் இவர்கள் சொல்லாமல் சொன்னது. குவார்க்ஸ் எனும் அடிப்படை துகள்கள்  மூலமே இந்த புரோட்டான், நியூட்ரான் உருவானது என கணடுபிடித்தார்கள். அணுக்களின் உள்ள கருவில் இந்த புரோட்டான்கள்  இருக்கின்றன எனவும், இவைகளை சுற்றி எலக்ட்ரான்கள் வருகின்றன என ரூதர்போர்டு 1911ம் வருடம்  சொன்னபோதுதான் அணுக்கள் பற்றிய ஆராய்ச்சி மிகவும் சூடுபிடித்தது. சாட்விக் நியூட்ரான் கண்டுபிடித்தார். 1897ம் வருடம்  ஜே. ஜே. தாம்சன் எலக்ட்ரான் கண்டுபிடித்தார். 1912ம் வருடம் நீல்ஸ் போர் கண்டுபிடிப்பு எப்படியெல்லாம் எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன எனும் அறிவிப்பே குவாண்டம் கொள்கையின் ஒரு ஆரம்ப நிலை. பத்து பன்னிரண்டு வருடங்களில் குவாண்டம் இயற்பியல் மிகவும் பேசப்பட்டது. பால் டிரக் என்பவர் 1925ம் வருடம் குவாண்டம் இயக்கியல் உருவாக்கினார். 

1945ம் வருடத்திற்கு பின்னர் நூற்றுக் கணக்கான புது புது துகள்களை தற்போதைய அறிவியல் தொழில்நுட்பம் மூலம் கண்டு பிடித்தார்கள். இவைகள் ஹெட்றான் என அழைக்கப்பட்டன. புரோட்டான் மற்றும் நியூட்ரான் இவைகளில் அடக்கம். இருப்பினும் இந்த ஹெட்றான் குவார்க்ஸ் என அறியப்பட்டது. எலக்ட்ரான்கள் லெப்டான்கள் எனப்பட்டன. லெப்டான்கள் தனியாக இருக்கும், அதற்கு ஒரு இணைப்பு ஆற்றல் இல்லை. ஆனால் குவார்க்ச்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இணைப்பு ஆற்றலுடன் இருக்கும் என அறியப்பட்டது. 

குவார்கக்ஸ், குலான்ஸ் எனப்படும் துகள்களால் பிணைக்கப்பட்டு இருக்கும். இந்த குவார்க்ஸ் மேசான்ஸ், ப்ரையான்ஸ் என துகள்கள் உருவாக்கி பின்னர் ஹெட்றான்ஸ் துகள்களாக இருக்கும். ப்ரையான்ஸ் துகளே நியூட்ரான், புரோட்டான் என அறியப்பட்டது. ஒரு அணு எப்படி நிறை கொண்டது என்பதை அறிய தற்போது நிறைய பொருட்செலவில் நடத்தப்படும் ஆய்வில் கண்டறிய பட இருக்கும் போஸான் எனும் கடவுள் துகள் மேசாணில் இருந்து உருவானது. 

லெப்டான் தன்னில் ஆறுவகை கொண்டு இருக்கிறது. எலக்ட்ரான், மோவோ, டாவோ மற்றும் மூன்று வகை நியூட்ரினோக்கள். எலக்ட்ரான் எதிர் பாசிட்ரான் என்றெல்லாம் கண்டு சொல்லப்பட்டது. இவ்வாறு பல துகள்கள் கொண்டு இருக்கும் இந்த அணுக்கள் உலகம் மிக மிக விசித்திரமானது. அதைத்தான் குவாண்டம் கொள்கை சொன்னது. இந்த அணுக்களின் உலகம் முற்றிலும் வேறானது என. 

ஆறு குவார்க், ஆறு லெப்டான் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த உலகம், இந்த பிரபஞ்சம் எல்லாம். மூன்றே குவார்க் இணைந்து ஒரு நிறையை உருவாக்கி விட்டது என எண்ணினார்கள். புரோட்டன், நியூட்ரான்! இதை எல்லாம் தாண்டிய ஒரு அணுக்களின் உலகம் இருப்பதாக அறிவியல் நம்பத் தொடங்கியதுதான் குவாண்டம் கொள்கை. கருந்துளைகள் கண்டறியபட்டபோது அறிவியல் சற்று ஸ்தம்பித்து போனது.

(தொடரும் ) 

Wednesday 25 September 2013

பச்சை மாமலைபோல் மேனி

காலையில் இருந்து மாலை வரை எப்படியும் ஆயிரத்து எட்டு தடவை இந்த பாசுரத்தை கேட்டு இருந்து இருப்பேன். ''பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்''. எப்படித்தான் இப்படி ஒரு அற்புதமான பாசுரத்தை இயற்ற முடிந்ததோ என்றே எண்ணிக கொண்டே இருந்தான். என்னப்பா யோசனை என்றே அப்பா கேட்டார். நானும் பாசுரம் பற்றிய விசயம் சொன்னேன். இதில் என்ன பெரிய அற்புதம் இருக்கு என்றே சொல்லிவிட்டார்.
ஆனாலும் மனம் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாசுரம் மனதில் நிழல் ஆடிக் கொண்டு இருந்தது.

பக்கத்தில நாலு பிளாட் விலைக்கு வருதுடா, எப்படியாவது வாங்கிரனும் என்றார் அம்மா. ஏதுமா, நாலு போகம் நெல் விளையுமே, அந்த நிலத்திலா பிளாட் போடுறாங்க என ஆச்சர்யத்துடன் கேட்டேன். ஆமாடா, அடுத்த அறுவடையோட அந்த நிலம் எல்லாம் அபார்ட்மென்ட் ஆகிப் போகும்டா, யோசனை பண்ணிட்டு இருக்காதே, லோன் போடனும்னா, உடனே ஏற்பாடு செய்டா. பச்சை மாமமலைபோல் மேனி என பாடியபோது தொண்டை விக்கியது.

நகர்ப்புறங்களில் தான் இப்படி செய்கிறார்கள் எனில், கிராமப்புறங்களிலும் இந்த அவலம் தொடர்கிறதே என்றே மனம் வேதனையுற்றது. அந்த வேதனையில் அப்படியே தூங்கிப் போனேன்.

''பக்தா''

''வாருங்கள் சாமி, அமருங்கள்''

''மிகவும் மன வேதனையில் உழன்று கொண்டு இருக்கிறாயோ''

''ஆமாம், சாமி, விளைநிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகி கொண்டு இருக்கின்றன, இப்படியே போனால் இந்த பூமி தரிசாக மாறிவிடுமே, மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவார்களே, அதை நினைத்துதான் வேதனை அடைந்தேன்''

''பக்தா, உனது வேதனை புரிகிறது, எனினும் இந்த வேதனை எல்லாம் ஆகாது, எல்லாம் அந்த விஷ்ணு பார்த்து கொள்வான்''

''விளைநிலங்களை காப்பாற்ற தெரியாத விஷ்ணு, என்ன விஷ்ணு''

''பக்தா, விஷ்ணுவை கோபித்து என்ன லாபம், நமது மானிடர்களின் செயல்பாடு அப்படி, என்ன செய்வது''

''சாமி, இறைவன் நினைத்தால் எல்லாம் நடத்தலாமே''

''நடத்தலாம், நினைக்க வேண்டுமே, சரி, ஒரு பாசுரம் பற்றி நிறைய யோசனையில் இருந்தாயே''

''ஆமாம், சாமி, நல்ல வேளையாக நினைவுபடுத்தி விட்டீர்கள், பச்சை மாமலைபோல் மேனி எனும் பாசுரம் தான் என்னை நிறைய யோசிக்க வைத்தது''

''அது அற்புதமான பாசுரம் ஆயிற்றே, அதில் என்ன ஐயப்பாடு''

''அதெப்படி பச்சை மாமலைபோல் மேனி?''

''காக்கை சிறகினிலே நந்தலாலா எனும் பாடலில் கூட ஒரு அற்புதம் இருக்கிறது. நீல வண்ண கண்ணா வாடா எனும் பாடலில் கூட அற்புதம் இருக்கிறது''

''சற்று விளக்கமாக சொல்லுங்கள் சாமி''

''பக்தா, இப்போதெல்லாம் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது, முன்னர் எல்லாம் நான் வந்தால் என்னை விரட்டுவதில் என் மீது வெறுப்பு காமிப்பதில் மட்டுமே குறியாய் இருப்பாய், ஆனால் இப்போதோ பொறுமையை கடைபிடிக்கும் வழக்கம் வைத்து இருக்கிறாய்''

''சாமி, விளக்கம் சொல்லுங்கள்''

''இந்த பூமியில் கரியமில வாயு மட்டுமே நிரம்பி இருந்தது. அப்போது இந்த விஷ்ணுவின் உடல் கரியநிறம் கொண்டு இருந்தது. வெறும் கரியமில வாயுவை உட்கொண்டே வந்த விஷ்ணு தனது செல்களில் குளோரோபிளாஸ்ட் அதாவது தற்போது செடி, மர இலைகளில் எல்லாம் இருக்குமே அது போல கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்த சமயத்தில் அவரது உடல் பச்சை நிறமானது. அப்படி நமது பூமியில் இருந்த கரியமில வாயு எல்லாம் இந்த குளோரோபிளாஸ்ட் மூலம் ஆக்சிஜன், குளுக்கோஸ் எல்லாம் உருவாக்கினார். இந்த ஆக்சிஜன் குறைவான போது அவரது உடல் நீல வண்ணம் ஆனது. எப்போது பச்சை வண்ணம் கொண்டாரோ இதே சமயத்தில் தான் ஆர்கேபாக்டீரியா, சையனோபாக்டீரியா எல்லாம் தோன்றியது. அவைகளும் இந்த கரியமில வாயுவை உட்கொண்டு உணவு உற்பத்தி செய்தன. இப்படி உருவானபோது நீராவி எல்லாம் குளிர்ந்து தண்ணீராக மாறியது. அப்போது தண்ணீரில் பாசிகள் உருவான. அந்த பாசிகள் கூட பச்சை வண்ணம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு பின்னர் மரம் செடிகள், கொடிகள் எல்லாம் தோன்றியதும், விலங்கினங்கள் உருவானதும் நீ அறிந்தது தானே''

''செவ்வாய் கிரகத்தில் சென்று எதற்கு விஷ்ணு பச்சை வண்ணம் கொள்ள வில்லை சாமி"

''அங்கே இன்னும் கரிய நிறமாகத்தான் இருக்கிறார் பக்தா''

''சாமி, பச்சை மாமலைபோல் மேனிக்கு ஏதோ விளக்கம் சொல்கிறீர்களே, கரியமில வாயு இந்த பூமியில் அதிகரிப்பதாக சொல்கிறார்களே''

''பக்தா, இந்த பூமியில் எல்லா விளைநிலங்களும் மாறிவிடும் எனில் மனிதர்களில் உள்ள தோல் செல்கள் எல்லாம் குளோரோபிளாஸ்ட் உருவாக்கிக் கொண்டு தனக்கு தானே உணவு தயாரித்து கொள்ளும். அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கரியமில வாயு அதிகரிப்பின் இந்த குளோரோபிளாஸ்ட் கொண்ட செல்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த பூமி எத்தகைய இன்னல்களுக்கு உட்பட்டாலும் மீண்டும் வளமாகவே இருக்கும்''

''சாமி, இப்படி நீங்கள் பேசுவதுதான் எனக்கு வெறுப்பை வரவழைக்கிறது''

''பச்சை மாமலைபோல் மேனி''

சாமியார் பாடியதை கேட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. வீட்டில் தேடினேன் அம்மா, அப்பா கூட இல்லை. வீட்டின் வெளியில் வந்து பார்த்தேன். அம்மாவும், அப்பாவும் வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் நற்றுக் கொண்டு இருந்தார்கள். நானும் வேகமாக அவர்களுக்கு உதவப் போனேன். 

Tuesday 24 September 2013

நிலையில் பிரியேல்

உன்னை மறந்துவிட 
என்னிடம் 
ஆயிரம் கோடி 
கொடுத்தாலும் 
என்னை நான் மறந்தால் 
அன்றி 
எதுவும் நடக்காது 

கொண்ட துயரமோ 
கூடி வரினும் 
கண்டு கலங்கி 
செய்வதறியாது 
திகைத்து நிற்பினும் 
உன்னை விட்டு 
விலகிட மனம் உண்டோ!

தீயவை எனின் 
புறம் தள்ளலாம் 
செய்யத்தகாவை எனின் 
சீ என ஒதுங்கலாம் 
கண்ணில் மனதில் 
எண்ணத்தில் உள்ள 
உன்னை 
தூக்கி எறிந்திட முடியுமோ!

கீழ்தட்டு நிலையில் 
இருந்து 
மேல்தட்டு நிலைவரை 
உயர்ந்து ஓங்கிய பின் 
கீழே வீழ்ந்திடும் 
நிலை வரின் 
உயிர் நிற்குமோ!

எவ்வித தடைவரின் 
குழப்பமும் 
குந்தகமும் 
விளைவித்தே எவரும் வரின் 
நாம் கொண்ட 
காதல் நிலையில் 
எக்கணமும் பிரியேல் காதலி. 


Sunday 22 September 2013

சூப்பர் ஸ்டார்

என் இனிய நண்பா,

நலம், நலம் அறிய ஆவல். இ-மெயில், பேஸ்புக், ட்விட்டர் என எத்தனையோ வந்த பின்னும் உன்னுடன் எனக்கு கடித போக்குவரத்து மட்டுமே நிகழ்கிறது. தந்தி அனுப்புவதை கூட சமீபத்தில் நிறுத்தி விட்டார்கள், இல்லையெனில் உனக்கு ஒரு தந்தி அனுப்பி இருப்பேன்.

உனக்குத் தெரியும், நான் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சூப்பர் ஸ்டாரின் பரம ரசிகன். அவர் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என நாள் தவறாமல் தேடித் தேடி படிப்பது உண்டு. அவரை காண்பதற்காக அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது நான் அவரது போயஸ்கார்டன் தெருக்களில் சுற்றிக் கொண்டு இருப்பேன். எனது நோட்டு புத்தகங்களில் அறிவியல் படங்கள் இருக்குமிடத்தில் எல்லாம் சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டு இருப்பார். நான் எனது அறையில் தலைவர் படத்தை மட்டுமே வைத்துக் கும்பிட்டு வருகிறேன் என்பது கூட உனக்குத் தெரியும்.

தலைவரது  திரைப்படம் வெளியாகும்போது, முன் இரவே சென்று திரையரங்கு வாசலில் துண்டு விரித்து தூங்கியவன் நான். நீ கூட என்னிடம் எதற்கு இப்படி பைத்தியக்காரனாக இருக்கிறாய் என்றே என்னை கோவித்து இருக்கிறாய். என்னால் முடியவில்லை நண்பா, நான் அவருக்கு ஒரு அடிமையாய் ஆகிப் போனேன். உன்னை கூட, நண்பன் என பாராமல் என் தலைவரை நீ அவதூறாக பேசியதற்கு உனது மூக்கை உடைத்ததை நினைக்கும்போது நான் செய்தது இன்னமும் சரி என்றே கருதுகிறேன். ஆனால் நீயோ என்னை கோவித்துக் கொள்ளாமல் உன்னை என் நண்பனாகவே ஏற்றுக் கொண்டாய்.

நான் முக்கியமில்லை, உனது குடும்பம் முக்கியம்  என்றெல்லாம் தலைவர் சொன்னபோது கூட, அவரே முக்கியம் என அவரது உடல் நலன் சரியில்லாதபோது அவருக்காக நான் ராகவேந்திரா ஆலயத்திற்கு பாத யாத்திரை சென்றேன். இதை கேள்விப்பட்ட நீ,  நான் பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என எனக்கு துணையாய் நீ காரில் பயணம் செய்து வந்தாய். உன் தலைவிதி, நீ நடக்கிறாய், என் தலைவிதி உனக்கு பாதுகாப்பு தருவது மட்டுமே, எவரோ ஒருவருக்காக நான் நடக்க வேண்டிய அவசியமில்லை என எனது நலனில் நீ காட்டிய அக்கறை என்னால் என்றுமே மறக்க முடியாது. எனது தந்தையின் மரணத்தின் போது கூட மொட்டை அடிக்காத நான், தலைவரின் உடல் நலம் தேற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்த விசயம் கேள்விப்பட்டு நீ கண்ணீர் விட்டு அழுதாய். எதற்கு அழுகிறாய் என உன்னை நான் கேட்டபோது, எனது தந்தையை பற்றி நினைத்தாய் என்றே கூறினாய். அதனால் என்ன இப்போ என்றே அலட்சியம் செய்தேன்.

சில வருடங்களாக தலைவரின் படம் வெளிவராத காரணத்தினாலும், ராணா, கோச்சடையான் பற்றிய செய்திகள் மூலம் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானேன். உன்னிடம் இதை சொல்லாமல் மறுத்தது எனது தவறு என்றே இன்று உணர்கிறேன். இப்போது இதை எப்படி உனக்கு சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாக இன்று மருத்துவர் சொன்னபோது ஆடிப் போய்விட்டேன் நண்பா. நீ அன்று என்னை பைத்தியகாரன் என்று சொன்ன நிலையை இன்று உணர்கிறேன் நண்பா. என்னை ஊரில் 'மெண்டல்' என்றே அழைத்தது உண்மையாகிவிட்டதே என அச்சம் கொள்கிறேன். எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத போது நான் எந்திரன் படம் பார்க்க திரையரங்கு வாசலில் தவம் இருந்தபோது, நீ எனது அம்மாவிற்கு மருத்துவம் பார்த்த விசயம் கேள்விப்பட்டு மனதில் எவ்வித குற்ற உணர்வு அப்போது இல்லை. நண்பா, என்னை மன நோயில் இருந்து உன்னால் மட்டுமே மீட்க முடியும் என்றே எனது அம்மா சொன்னார். அதனால் தான் இந்த மடல் எழுதுகிறேன்.

ஒரு விசயத்தில் அதிக பற்று வைத்து விட்டால், இது போன்ற கொடிய விளைவு ஏற்படும் என்றே மருத்துவர் சொன்னார். மனம் வெகு பாரமாக இருக்கிறது. எதையோ இழந்து பரிதவிப்பது போல் இருக்கிறது. நான் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் நண்பா. என்னை நீ வந்து அழைத்து சென்று உனது அருகில் என்னை வைத்து கொள்ளமாட்டாயா என்றே ஏங்குகிறேன். உனது நிறுவனத்தில் நான் வேலை செய்ய இப்போது சம்மதம் சொல்கிறேன் நண்பா. தீராத மன நோயில் நான் விழுந்துவிடக் கூடாது எனும் அச்சமே முழுக் காரணம். அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என பலர் கிண்டலாக பேசியபோது அவர்களை நொறுக்கி இருக்கிறேன். தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ அதுவே எனது முடிவு என்றே இருந்தேன்.

இறுதியாக, எனது தலைவர் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் என நேற்று பேசியதை கேட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். அவரை உயரத்தில் வைத்தது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்றே சொன்னார். ஆனால் உண்மையிலேயே என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்கள் தான் அவரது இந்த உயர்நிலைக்கு காரணம் என்பதை நீ அறிவாய் நண்பா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ரஜினிதாசன் என்றே என்னை கேட்டுக் கொள்கிறேன். எனது அழகிய 'முருகன்' எனும் பெயரை நான் அலங்கோலம் படுத்திக் கொண்டதாய் நினைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அவர் தூக்கி எறிந்துவிட்டு என்னைப் போன்ற ஏழை பங்காளன் உடன் அவர் நேரத்தை செலவிட சொல்ல வேண்டும் என்றே என் மனம் கேட்கிறது. எதற்கு தனிமையாய் உணர வேண்டும்! ஆனால் 'டாப்' இல் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினை என்றே சொல்லிவிட்டார் நண்பா. ஆனால் நீ, எத்தனயோ உயரத்தில் இருந்தும் சாதாரண நபரை போலவே உலா வருகிறாய். பிரமிப்பாக இருக்கிறது நண்பா. இதற்கு முன்னர் இப்படித்தான் சூழ்நிலை கைதி என சொன்னார், ஆனால் நான் என் தலைவரை உயிருக்கு உயிராக நேசித்தேன் என்பதை நீ அறிவாய்.

எப்படி மது, மாது என அடிமையாய் ஆகிறார்களோ, அதைப்போலவே சினிமா மோகம் என்னை பிடித்து ஆட்டிவிட்டது. ஒரு தனி மனிதனுக்கு என்னை தாரை வார்த்துவிட்டது கண்டே கலங்குகிறேன். ரஜினி ரசிகையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற கொள்கையை தளர்த்தி கொள்கிறேன். இனி அவர் என் தலைவர் இல்லை என்பதை முழு சம்மதமின்றி ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக, என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்களுக்காக அவர் தனிமையாக இருக்கவும் வேண்டாம், சூழ்நிலைக் கைதியாக இருக்க வேண்டாம், இனி வரும் காலங்களில் அவர் சுதந்திரமாக வாழட்டும் என்றே விரும்புகிறேன். இப்போது கூட என்னால் அவர் கஷ்டப்படுவதை தாங்கிக் கொள்ள இயலவில்லை நண்பா. என்னை விரைவில் வந்து அழைத்து செல், இல்லையெனில் நான்... தெருக்களில்... எழுதவே கைகள் நடுங்குகிறது நண்பா.

உனது வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

அன்பு நண்பன்
முருகன் என்ற ரஜினிதாசன்

சினிமா ஒரு மாய உலகம், நல்ல மனிதர்கள் நாசமாகப் போகிறார்கள், நாசமாகப் போக இருந்தவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள். 

Friday 20 September 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 20


கோரனை வகுப்புக்கு வெளியே போக சொன்னார் ஆசிரியர். ''I never killed her, she committed suicide and police recorded that, you don't need to argue on that as it is my personal issue and I need to continue the subject''

''Carry on'' கோரன் வகுப்பை விட்டு வெளியே சென்றான். நிலைமையை சரி செய்ய நான் எழுந்தேன்.

''சார், எதுக்கு ஆண், பெண் என இருபாலர் இருக்கனும், முதலில் வந்தது ஆணா, பெண்ணா?. அல்லது இரண்டுமே  ஒரே நேரத்தில் உருவானதா? இந்த இரண்டுமே இனப்பெருக்கம் வழியில் இல்லாம உருவாகி இருந்தா, அப்படியேதானே பெருகி இருக்கனும், எதுக்கு ஆணின் மரபணுக்கள், பெண்ணின் மரபணுக்களோட இணையனும், என்ன காரணம்'' என்று கேட்டு அமர்ந்துவிட்டேன்.

''We absolutely don't know anything about our ancestors, how we came to this world or how we are developed over the million years, but we think we are very good at coming to conclusion based on fossil records, postulating theories and ideas in one way and put all these things on God in another way. We live our imaginary world very lively as Koran thought that I have killed my wife whereas the truth was she committed suicide. Now I can say that she has committed suicide and police do have evidence on that but certain people like Koran would believe that I have killed my wife. How could I change him?''

அதற்குப் பின்னர் நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. பாடம் தாட் ப்ராசெஸ் பற்றியே சுற்றிக் கொண்டு இருந்தது. அப்போதுதான் யோசித்தேன், சுபத்ரா பரிணாமத்தினை பற்றி படித்துக் கொண்டு இருக்கிறேன் என்றுதானே சொன்னாள், அவளிடம் சென்று கேட்டால் என்ன என தோணியது. அன்றைய நாள் முழுவதும் எனது கேள்வியில் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவு சமயத்தில் கூட காயத்ரி என்ன முட்டாள்தனமான கேள்வியை கேட்ட நீ என்றே கோபித்துக் கொண்டாள்.

மாலை வேளையில் காயத்ரியிடம் பேசினேன்.

''காயூ, நான் சுபாவை பாக்கப்போறேன்,வரியா?''

''என்ன விசயம் திடீர்னு?''

''ஆணா, பெண்ணா? அப்படிங்கிற என் கேள்விக்கு பதில் தெரியனும்?''

''அட முருகேசு, ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஆணும், பெண்ணும் இயற்கை அமைத்துக் கொண்டது''

''இனப்பெருக்கம் இரண்டு வகையில நடைபெறும், ஒன்னு கலவு முறை, மத்தது கலவு இல்லாத முறை , என்ன காரணத்திற்கு கலவு முறை உருவாச்சு, காரணம் இருக்கும் இல்லையா?''

''தெரிஞ்சு என்ன செய்யப் போற''

''இப்ப எல்லாம் ஆண் இல்லாம பெண்கள் பிள்ளை பெத்துக்க முடியும்னு சொல்லிட்டு இருக்காங்க, படிச்சி இருக்கியா''

''ஆஸ்திரேலியாவுல நடத்தின எலி பரிசோதனைய பத்தி பேசறியா''

''நீயும் அதைப் படிச்சியா''

''முருகேசு, மனசை போட்டு குழப்பிக்காத, அது எலி, நாம மனுசுங்க''

''எதுக்கும் சுபாவை பார்த்துட்டு வரலாம்''

''சரி''

எனக்கு குரோமோசோம்கள் பற்றியெல்லாம் மனம் ஓடிக் கொண்டு இருந்தது. எக்ஸ் எக்ஸ் என்றால் பெண், எக்ஸ் ஒய் என்றால் ஆண். இந்த குரோமோசோம்கள் ஒரு உயிரின் ஆண், பெண் தன்மையை நிரூபிக்கின்றன. ஒரு குழந்தை உருவாகும்போது அந்த குழந்தை பெண்ணாகவே பல வாரங்கள் இருக்கும் என்றும், பின்னரே இந்த குரோமோசோம்கள் உதவியால் இனப்பெருக்க உறுப்புகள் தோன்றுவதாகவும் படித்து இருக்கிறேன். என்ன ஆச்சர்யமான மாற்றம் இது.

''என்ன யோசனை முருகேசு''

''காயூ, எல்லா குழந்தையும் உருவாகிறப்ப பெண் தான் தெரியுமா''

''இல்லை முருகேசு, எல்லா குழந்தையும் உருவாகும்போது அது ஒரு எம்ப்ரியோ. அந்த எம்ப்ரியோவில  உள்ள செல்கள் டிப்பெரென்சியெட் ஆகுறப்ப, இட் டேக்ஸ் தா பார்ம், இட் டேக்ஸ் வீக்ஸ்''

''என்ன இங்கிலீஸ் பேசற''

''ஏன் உனக்கு இங்கிலீஸ் புரியாதா, நீயும் தானே சில நேரத்தில இங்கிலீஸ் பேசற''

''நான் தமிழுல கேட்டப்ப, சேகரன் சாரு கூட இங்கிலீஸ்ல தான் பதில் சொல்றார்''

''நீ பேசாம தமிழ் இலக்கியம் படிக்க போய் இருந்து இருக்கலாம்''

''காயூ, அர்த்தநாரீஸ்வரர் பத்தி தெரியும்ல உனக்கு, ஆண் பாதி, பெண் பாதி''

''அதுக்கு என்ன இப்போ''

''இந்த பூமியில ஆணும் பெண்ணும் இணைஞ்சு தோன்றி இருக்கனும், அப்புறம் தான் பிரிஞ்சி இருந்து இருக்கனும், அப்புறம் இனப்பெருக்கம் மூலம் ஆணும் பெண்ணும் உருவாகி இருக்கனும்''

'வாட் நான்சென்ஸ் முருகேசு''

''எதுக்கு கோபப்படுற, நல்லா யோசிச்சி பாரு''

அர்த்தநாரீஸ்வரர் எனது கேள்விக்கு பதில் சொல்லிவிட்டதை போன்றே இருந்தது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இந்த மூலக்கூறுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருந்து உயிரினம் உருவாகும்போது கலவு முறையில்லாதபோது நமது உடலில் உள்ள செல்கள் எப்படி பெருகி உருவம் உருவாகுதோ அதைப் போலவே இப்படி சேர்ந்து உருவாகி இருக்கனும்.

''ஒரு ரொமான்டிக்கா பேச மாட்டியா, எப்ப பாரு பாடம், பாடம்''

''அன்பே, உனது விழிகளுக்குள் எனது பார்வை மாட்டிக் கொண்டது, எனது பார்வை பறிபோய் விடாதபடி திருப்பி தந்துவிடு''

காயத்ரி அப்படியே நின்று என்னை பார்த்து சிரித்தாள்.

''எந்த படம் முருகேசு''

''நான் எழுதினது காயூ''

''நீ எழுதினா, மைட்டோகாண்ட்ரியா, நீ தான் என்னோட ஆண்ட்ரியா அப்படின்னு எழுதுவ''

''என்ன சொன்ன''

''மைட்டோகாண்ட்ரியா, நீ தான் என்னோட ஆண்ட்ரியா''

''காயூ, மைட்டோகாண்ட்ரியா ஈவ் பத்தி படிச்சி இருக்கியா''

''ஆடம், ஈவும் தெரியும், மைட்டோகாண்டிரியா ஈவும் தெரியும்''

''எழுபது ஆயிரம் வருசம் முன்னால இந்த மைட்டோகாண்ட்ரியா ஈவ் தான் இப்ப இருக்கிற மனித குலத்தோட முன்னோடி. பெரிய எரிமலை வெடிப்புனால மொத்த மண்டிஹா சமூகம் அழிஞ்சி போனப்ப தப்பிச்ச சில பெண்கள் தான் இந்த மனித குலம் தழைக்க உதவினாங்க''

''ஆமா முருகேசு, என்ன என்னமோ பேசற, எதுக்கு சுபாவை பாக்கனும், உனக்கு தெரியாததையா அவ சொல்லப் போறா''

ரெங்கநாதன் வீடு அடைந்தோம். சுபத்ராவை சந்திக்க வந்திருப்பதாக கூறினோம். சுபத்ராவும் வந்தாள். முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள்.

''சுபா, பரிணாமத்தில் முதலில் வந்தது பெண்ணா, ஆணா?'' என்றேன்.

''ம்ம்ம் உன்னோட பாட்டி''

காயத்ரி கிளுக்கென சிரித்துத் தொலைத்தாள்.

''இதுக்கு இப்போ எதுக்கு சிரிப்பு, உண்மையிலேயே முருகேசனோட பாட்டி தான் இந்த உலகத்துக்கு முதலில் வந்தது''

காயத்ரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ரெங்கநாதன் அம்மா, பலகாரங்கள் கொண்டு வந்து வைத்தார்கள். காயத்ரியின் அக்காவும், ரெங்கநாதன் இன்னும் வந்திருக்கவில்லை என்றே தெரிந்தது. அவர்களைப் பற்றி கேட்டபோது, அவங்க வரதுக்கு எட்டு மணி ஆகும் என்றே சொன்னார். ரெங்கநாதனின் அம்மா, அந்த இடம் விட்டு நகர்ந்ததும் சுபத்ராவிடம் மீண்டும் கேட்டேன்.

''சுபா, கிண்டல் பண்ணாம சொல்லு''

''உன்னை கிண்டல் பண்ண நீ என்ன என்னோட முறைப்பையனாடா, இல்லை என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியாடா, அதுதான் இதோ உன் காயூ இருக்காளே''

''உனக்கு பரிணாமத்தில் ஆர்வம் இருக்கு, அதான் உன்னை பாத்து கேட்டு போகலாம்னு வந்தேன்''

''அதுதான் சொல்றேன்லடா, உன் பாட்டி தான் முதலில் வந்தது''

காயத்ரி அவளது கண்களில் தண்ணீர் தரும் வரும்படியாய் சிரித்துக் கொண்டு இருந்தாள். இவள் இப்படி சிரித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது. இனி சுபத்ராவை மடக்க வேண்டும்.

''என்னோட பாட்டியோட அம்மா, அப்பா வந்து இருப்பாங்களே''

''ஏன்டா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா, உன் பாட்டிதான் முதலில வந்ததுன்னு சொல்றேன், அந்த பாட்டிக்கு ஆயா, அப்பத்தானு பேசறதா''

''உனக்கு அம்மா, அப்பா இருக்கிறமாதிரி''

''நானும், உன் பாட்டியும் ஒன்னாடா''

''முருகேசு, அதான் சுபா சொல்லிட்டாங்கள, உன் பாட்டிதான் முதலில் வந்ததுன்னு, வா போவோம்''

அப்போது ரங்கநாதனின் அம்மா, காபி கொண்டு வந்து வைத்து விட்டு சென்றார்கள்.

''இரு காயூ, காபி குடிச்சிட்டு போவோம்''

''வந்ததுக்கு பலகாரம், காபி கிடைச்சதுல, சாப்பிடறதுக்கே இருப்பியாடா''

''சுபா, என் மேல உனக்கு கோபம் இருக்கும், நீ எனக்கு சாப்பாடு கொண்டு வந்து தந்து இருக்க''

''பரிணாமம் பத்தி தெரிஞ்சிக்கனும்னா, இதோ இவளை மறந்துரு''

''அர்த்தநாரீஸ்வரர் சொல்லி இருக்கார், பரிணாமத்தில் முதலில் வந்தது ஆணும், பெண்ணும் ஒரு உருவமாய். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. எனக்கு என் காயூ முக்கியம், பரிணாமம் இல்ல''

''Yes Suba, both sexes developed simultaneously, Murugesu knows everything. He came to test you whether you are really here to study evolution, அப்படித்தானே முருகேசு வா போலாம்''

வீட்டிற்கு வெளியே வந்தபின்னர் காயத்ரியிடம் கேட்டேன்.

''என்ன காயூ, நான் சுபாவை சோதிக்க போனேன் சொல்லிட்ட''

''முருகேசு, அவ எவ்வளா நக்கலா பேசுறா, என்னாலே சிரிப்பை அடக்க முடியல''

''படிக்கிறப்பவே அப்பத்தான், ரொம்ப கிண்டலா பேசுவா, ஆனா இப்போதான் காதல் அது இது அப்படின்னு மாறிப் போய்ட்டா''

''இது அவளோட புது பரிமாணம்''

''பரிணாமமா''

''பரிமாணம். முப்பரிமாணம்''

''ஆமா, காயூ, பரிணாமத்தில் முதலில் வந்தது பெண்ணா, ஆணா?''

''ம்ம்.. உன்னோட பாட்டி''

காயத்ரி மீண்டும் சிரித்தாள். அப்போதுதான் புரிந்தது. பரிணாமத்தில் முதலில் வந்தது பெண் தான் என்பதை தான் சுபத்ரா அப்படி சொல்லி இருப்பாளோ! வீட்டினை அடைந்ததும் நன்றாக சாப்பிட்டுவிட்டு புத்தகத்துடன் மாடிக்கு கிளம்பினேன். காயத்ரியும் புத்தகங்களுடன் என்னுடன் வந்தாள்.

''காயூ, செல்லில இரண்டு வகை எதுக்கு ஹெப்லோய்ட், டிப்லாய்ட்''

''டுயூப்லைட் பிரகாசமா இருக்கு''

''ஆணும், பெண்ணும் பருவம் அடைய பல வருடங்கள் ஆகுதே காயூ''

''பேசாம படி, இப்படி ஏடாகூடமா பேசின, நான் தூங்கிருவேன், தாங்க முடியல''

கர்மவினை தாண்டினேன், பரிணாமம் என்னை படுத்துகிறது.

(தொடரும்) 

Wednesday 18 September 2013

காமக்கதைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்

செந்தில்குமார் மிகவும் அக்கறையுடன் படித்துக் கொண்டிருந்தான். ஊருக்குச் சென்றுவிட்டு இன்றுதான் வந்தான். வந்ததும் வராததுமாய் இப்படி புத்தகம் எடுத்துப் படித்ததை கண்டு எனக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. பரீட்சை எதுவுமில்லையே செந்தில்குமார் என சொன்னேன். உன்னை மாதிரி பரீட்சைக்குப் படிக்கிறவனு என்னை நினைச்சியா, என்னை தொந்தரவு பண்ணாதே, சாயந்திரம் நடக்கப் போவயில, இருட்டப் போகுது போ என சத்தம் போட்டு திட்டிவிட்டான்.

வீட்டின் வெளியில் இருந்த வயல்வெளியில் நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் தண்ணீர் பாய்ச்சி முடித்து இருப்பார்கள் போல, எங்கும் ஈரம் அதிகமாகவே இருந்தது. வயல்வெளி தாண்டி மாந்தோப்பு பக்கமாக நடந்தேன். இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருந்தாள். இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து தினமும் வயல்வெளி, மாந்தோப்பு என தனியே மாலையில் நடந்து இருக்கிறேன். இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிறது. ஊருக்கு வெளியே கட்டப்பட்ட இரண்டு வீடுகளில் இதுவும் ஒன்று. மாலை வேளையில் ஊர் ஆட்கள் எவரும் அவ்வளவாக இந்தப் பக்கம் எல்லாம் வருவதில்லை. இவள் தனியாய் நின்று கொண்டிருந்தது மட்டுமின்றி இதுநாள் வரை அவளை நான் இங்கே கண்டது இல்லை. மனதில் இனம் புரியாத பயம் ஒன்று சேர்ந்தது. என்னைக் கண்டு அவள் புன்னகை புரிந்தாள்.

பேச்சுக் கொடுக்கலாமா, வேண்டாமா என்றே நினைத்துக் கொண்டிருக்கையில் எதுக்கு அங்கேயே நிக்கிற, வா என அழைத்தாள். அவளது உடையானது ஓரிடத்தில் நில்லாது அங்கும் இங்கும் அல்லாடிக்கொண்டு இருந்தது. என்னை எதற்கு இவள் அழைக்கிறாள் என இல்ல, நா வீட்டுக்குப் போகனும் என்றேன். இவ்வள தூரம் வந்துட்ட, பக்கத்தில வந்துட்டு போறது என்றாள். நீ எந்த ஊரு, உன்னை இதுவரைக்கும் பாத்தது இல்லையே, எதுக்கு இங்க நிக்கிற என்றேன்.

இந்த ஊருக்கு நேத்துதான் வந்தோம். காலாற நடக்கலாம்னு இங்குட்டு வந்தேன் என்றாள். சற்று தைரியத்துடன் அவள் அருகில் சென்றேன். மாந்தோப்புக்குள்ள போலாமா என்றாள். இல்ல வேணாம் என்றேன். வெட்கபடாத, முன் அனுபவம் இல்லேன்னா பரவாயில்ல, எனக்கு இருக்கு என்றாள். என்ன கண்றாவி இது, மாந்தோப்புக்குள் எத்தனை முறை எவ்வித பயம் இன்றி இருட்டிய பின்னர் கூட நடந்து சென்று இருக்கிறேன், இதற்கு எதற்கு முன் அனுபவம்!

யோசிக்காத, சட்டுபுட்டுனு முடிச்சிட்டு போயிருவோம் என்றாள். என்ன சொல்ல வர, மாந்தோப்புக்குள்ள நடக்கிறதுக்கு இப்படி வெளியவே நடக்கலாமே என்றேன். நீ விவரம் புரியாதவனா இருக்கியே. நானும் நீயா தனியா இருக்கிறது கூட உனக்கு புரியலையா. விளக்கமா சொன்னாத்தான் உனக்கு புரியுமா, நீ என்ன பால் குடிக்கிற பாப்பாவா என்றாள். அப்போதுதான் ஆபத்தினை உணர்ந்தேன். அவள் அடுத்த வார்த்தை பேசும் முன்னர் ஓட்டம் பிடித்தேன். நில்லுடா பெண்டுகா எனும் அவளது சப்தம் என்னை கடந்து சென்று கொண்டிருந்தது.

மூச்சிறைக்க வீடு வந்து சேர்ந்தேன். செந்தில்குமார் அப்போதுதான் புத்தகம்தனை படித்து முடித்து விட்டு எழுந்து இருந்தான். என்னடா இப்படி மூச்சிரைக்கிற என்றான். இன்னைக்கு கொஞ்சம் ஓடினேன், அதான் என சமாளித்துவிட்டு குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தேன். என்ன பாடம் படிச்ச என்றேன். லோகோமோடிவ் என்றான். லோகோமோடிவ், என்ன கதை விடறியா என்றேன். நான் எதைப் படிச்சா உனக்கு என்ன என மீண்டும் சத்தம் போட்டான்.

ஊருக்குள் சென்றுதான் ஹோட்டலில் சாப்பிட வேண்டும். செல்லும் வழியில் மாந்தோப்பில் நடந்த விச யத்தை சொல்லலாமா என யோசித்து வேண்டாம் என விட்டுவிட்டேன். இருவரும் சேர்ந்து ஹோட்டல் அடைந்தோம். அவன் பரோட்டா, ஆம்லெட் என ஆர்டர் செய்தான். நான் என் பங்குக்கு சிக்கன் 65, பரோட்டா ஆர்டர் செய்தேன். சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மாந்தோப்பில் கண்ட பெண் என் அருகில் வந்து அமர்ந்தாள். வீட்டுக்கு வரியா என முனுமுனுத்தவள் ஒரு தோசை ஆர்டர் செய்தாள்.

யாரு அது மச்சி, உன்னை உரசிக்கிட்டு வந்து உட்காருரா என்றான் செந்தில்குமார். எனக்கு தெரியலை என சொன்னேன். ஏன்மா, கொஞ்சம் தள்ளி உட்காரு, உரசிட்டு உட்காருர, இடமா இல்ல, விட்டா மடியில உட்காருவியோ என செந்தில்குமார் அவளை சத்தம் போட்டான். உன்னையவா உரசினேன், வாயை மூடிட்டு சாப்பிடு என்றாள் அவள். என்னக்கும் இல்லாமல் வேகமாக சாப்பிட்டேன். மெதுவா சாப்பிடுடா என்றான் செந்தில்குமார். அவளோட சண்டை போடாத, வா போகலாம் என சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். நாளைக்கு அங்க வா, நான் நிப்பேன் என்றாள்.

சிகரெட் வாங்கி பத்த வைத்தான் செந்தில்குமார். இந்தா இழு என்றான். இன்னைக்கு வேணாம் என்றேன் . என்ன மச்சி பாதி, பாதி மறந்துட்டியா, எதுக்கு அந்த பிள்ளை உன்னை உரசினதுல இருந்து ஒரு மாதிரியா இருக்க, எந்த ஊருக்காரி, என்ன உனக்கு ரூட்டு போடுறாளா, கிடைச்சா அமுக்கிடனும் மச்சி என்றான். சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என்றேன்.

எதற்கு அவள் அப்படி நடந்து கொண்டாள் எனும் சிந்தனை என்னை அலைக்கழித்தது. வீடு வந்து சேர்ந்தோம். செந்தில்குமார் ரம் எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றான். கம்பெனி கொடுக்கப் போறியா இல்லையா என்றான். கொஞ்ச நேரம் கழிச்சி வரேன் என்றேன். புத்தகம் எடுத்து படிக்கலாம் என ஒரு புத்தகம் எடுத்தபோது அங்கிருந்து ஆடைகள் இல்லாத பெண்கள் படம் போட்ட புத்தகம் விழுந்தது. திடுக்கிட்டேன். இதைத்தான் செந்தில்குமார் படித்தானா என எண்ணிக்கொண்டு அந்த புத்தகம் எடுத்து மாடிக்கு சென்றேன்.

என்னடா இது, எப்ப இருந்துடா இப்படி ஒரு பழக்கம், எதை எதை படிக்கிறதுன்னு ஒரு அறிவு இல்லையா என கத்தினேன்! மச்சி இந்தா வா குடி. அதுல சூப்பர் சூப்பரான கதை எல்லாம் இருக்கு. படிக்க படிக்க அப்படியே கனவுலகத்தில மிதக்கலாம். அதுல ஒரு கதை இருக்கு பாரு, அட்டகாசமான கதைடா என்றான். இது எல்லாம் தப்புடா என்றேன். ஆமா சிகரெட்டு, குடி எல்லாம் தப்புதான், அதை எல்லாம் நீ செய்யல, கதைய கேளுடா என எனக்கு ஊற்றி கொடுத்தான்.

ரெண்டு பிரண்டுஸ். அதுல ஒருத்தன் ரொம்ப யோக்கியம், அடுத்தவன் அப்படி இப்படி. யோக்கியமானவன் ஒரு பொன்னை சந்திக்கிறான். அந்த பொண்ணு அவனை அடைய ஆசைப்படறா. ஆனா அவன் அது தப்பு அப்படின்னு அவகிட்ட சொல்லி அவளை வேணாம்னு தவிர்க்கிறான். இப்படி நடந்த விசயத்தை பிரண்டுகிட்ட சொல்றான். பிரண்டு அடுத்த முறை அவள்கிட்ட பேசி அவளை அடையறான். சும்மா செமையா இருந்தது மச்சி. எப்படி அங்கம் அங்கமா அந்த பெண்ணை எழுதி இருக்கு. படிச்சி பாரு என்றான்.

என்ன செய்வது என  புரியாமல் மாந்தோப்பில் நடந்த விசயத்தை செந்தில்குமாரிடம் சொன்னேன். அடுத்த நாள் மாலையில் எனது கையில் புத்தகம், அவன் மாந்தோப்பு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.




Tuesday 17 September 2013

சூப்பர் ஹீரோ

 இந்திப் படம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. தூர்தர்சனின் புண்ணியத்தில் மட்டுமே இந்தி படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு பின்னர் இந்திப்படம் என பார்த்தது என எதுவுமே நினைவில் இல்லை.

சமீபத்தில் தியேட்டருக்கு சென்று சென்னை எக்ஸ்ப்ரஸ் படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ் படம் என்கிற ஒரு நினைப்பில் படம் பார்க்க அழைத்த போது போகலாம் என தியேட்டருக்குள் அமர்ந்த பின்னர் தான் சட்டென நினைவுக்கு வந்தது, வந்திருப்பது ஒரு இந்திப் படத்திற்கு என.

தமிழே புரியாது, இதில் இந்தி வேறா! நிறைய 'இந்தி'மார்கள் அமர்ந்து இருந்து இருந்தார்கள். படம் தொடங்கியது. எனக்கும் இந்திக்கும் உள்ள ஒரு பந்தம் மிகவும் சுவாரஸ்யமானது. கல்லூரி படித்த காலங்களில் ஆர்வத்துடன் ரமேஷ் எனும் நண்பர் கற்று கொடுத்த இந்தியை இலக்கணம் எல்லாம் என சேர்த்து ஓரளவு படித்து விட்டேன். தலைநகர் டில்லி, கல்லூரி கால கல்கத்தா என பிற மாநிலங்கள் சென்றாலும் இந்த இந்தியை இனிப்புக்கு கூட தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டதில்லை. இந்தி மீது தனிப்பட்ட வெறுப்பு என்றோ , மறத்தமிழர் என்றோ இதற்கு காரணம் இல்லை. ஒருவித சோம்பேறித்தனம் வந்து ஒட்டிக் கொண்டது. எனது வாழ்வில் சில மொழிகள் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றே அவ்வப்போது எண்ணம் தலைகாட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட.

நல்லவேளையாக படத்தில் 'சப்டைட்டில்' ஆங்கிலத்தில் போட்டார்கள். இருப்பினும் அரைகுறை இந்தி மூலம் சில புரிந்து கொள்ளலாம் என்றே பேசுவதையும் கேட்டு வைத்தேன். ஆனால் 'இந்திமார்கள்' சிரிக்கும்போது எனக்கு தானாக சிரிப்பு வரவில்லை. மொழியின் சுவாரஸ்யம் மொழிப்பெயர்ப்பில் இருப்பது இல்லை. சில இடங்களில் சிரித்து வைத்தேன்.

தமிழ்நாட்டில் இத்தனை பேரழகா என உச் கொட்டும் வகையில் மழையும், அருவிகளும் கொண்ட பிரதேசம் காட்டி இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் பெண்கள் உடுத்தும் சேலை கண்டு 'இந்திமார்கள்' இத்தனை அழகான சேலை எல்லாம் தமிழ்நாட்டில் கிடைக்குமா/கட்டுவார்களா என ஆச்சர்யபட்டார்களாம். ஒரு சேலை எடுக்க கடைக்கு சென்று ஒரு மாதம் கழித்து வீடு திரும்பிய மனைவிமார்கள் பற்றிய நகைச்சுவை கதைகள் கூட தமிழ்நாட்டில் உண்டு.

இந்த திரைப்படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லி விடலாம். எல்லா திரைப்படங்களும் ஒரு வரி கதைதான். அதை எப்படி வடிவமைத்து முடிப்பது என்பதில் தான் மொத்த திரைப்படத்தின் வெற்றியும் இருக்கிறது. எதிர்பாராத தருணத்தில் வாழ்வில் என்னவெல்லாம் நடந்து விடும் என கதை சொல்லி இருக்கிறார்கள். வீட்டை விட்டு அடிக்கடி ஓடிப்போகும் ஒரு பெண். சுத்துப்பட்டி கிராமங்களை எல்லாம் தன வசத்தில் வைத்திருக்கும் ஒரு 'பெரிய தல' என படம் நகைச்சுவை உணர்வுடன் நகர்கிறது.

எழில் கொஞ்சும் பிரதேசங்கள் கண்டு கொண்டே இருக்கலாம் என்பது போல காட்சி அமைப்புகள். அந்த கிராமங்களில் வில்லன் உட்பட சிலர் இந்தி பேசுகிறார்கள். அரை குறை இந்தி தெரிந்தவர்கள் அதிகம் உபயோகிப்பது 'அச்சா' 'தோடா தோடா ஹிந்தி மாலும் ஹை' என்பதுதான். 'ஹிந்தி தெரியாவிட்டால் இந்தியாவில் இழுக்கு. ஆங்கிலம் தெரியாவிட்டால் உலகில் இழுக்கு' என மொழியின் பிரவேசம் குறித்து பேசுகிறார்கள். ஆங்கிலம் பிற மொழிகளை வசப்படுத்தியதன் காரணம், மொழிபெயர்ப்பு தான். மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் எல்லா மொழிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். சில நாடுகள் ஆங்கிலத்தினை கடுமையாக எதிர்த்தும் தற்போது உலகமயமாக்கல் எனும் அடிப்படையில் ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டு விட்டது.

இந்த திரைப்படத்தில் காதல் தான் உண்மையான மொழி என சொல்வதோடு பிரச்சனைகள் கண்டு ஓடி ஒளியாமல் அதை எதிர்த்து நிற்கும்போது சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோ ஆகிவிடுவான் என்றே சொல்லி இருக்கிறார்கள். அதாவது 'பவர் ஆ ஃப் தி காமன் மேன்'. கடைசியில் ரஜினியை வைத்து ஒரு பாடல். பாடல் முடிந்தே பலரும் கிளம்பி சென்றார்கள். ஒரு தமிழ் கலந்த இந்திப் படம் பார்த்தது போன்ற திருப்தி. அதுவும் ஹிந்திமார்கள் பேசும் தமிழ் அழகோ அழகு.

இந்த சூப்பர் ஹீரோ குறித்து உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யம் அடைய செய்யும் தகவல்கள் உண்டு. 1912ம் வருடம் இந்த சூப்பர் ஹீரோ பற்றியஎண்ணங்கள் உருவாக்கப்பட்டதாக சொல்லபப்டுகிறது. அதாவது சூப்பர் ஹீரோக்கள் அமானுஷ்ய தன்மை கொண்டவர்களா கற்பனை செய்யப்பட்டார்கள். 1937ல் முதல் காமிக்ஸ் புத்தகம் வந்தது, இந்த சூப்பர் ஹீரோக்கள் குறித்து தமக்கென இரண்டு நிறுவனங்கள் உரிமம் வைத்து கொண்டன. இதில் ஸ்பைடர்மேன், கேப்டன் அமெரிக்கா என பல சூப்பர் ஹீரோக்கள் உருவாக்கப்பட்டனர். இவை படங்களாக உருவாக்கப்பட்டன. பேட்மேன் போன்ற சாதாரண மனிதர்கள் சில கலைகள் கற்றுக்கொண்டு தமது திறமை மூலம் சூப்பர் ஹீரோக்கள் ஆனார்கள் என சொல்லப்பட்டது. அனிமேஷன் தொழில்நுட்பம் வந்த பின்னர் இப்படி நிறைய சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களில் வடிவம் எடுத்தார்கள்.

'kick ass' எனும் திரைப்படம் வாழ்வில் உள்ள நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி ஒரு  காமிக்ஸ் புத்தகத்தின் அடிப்படையில் உருவானது. அதாவது சில உடைகள் அணிந்து கொண்டு, சமூகத்திற்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதை தனியாளாக செய்வது, அல்லது ஒரு கூட்டமாக சேர்ந்து செய்வது.  kick ass 2 எனும் திரைப்படம் பார்த்தபோதுதான் இந்த நிஜ சூப்பர் ஹீரோக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த காமிக்ஸ் புத்தகம் அடிப்படையில் உண்மையிலேயே அமெரிக்காவில் நிறைய சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் வலம் வருகிறார்கள். உண்மையிலேயே குற்றங்களை களைவது, வீடில்லாதவர்களுக்கு உதவி செய்வது என பல சமூக விசயங்களை அவரவருக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் உடை அணிந்து செயல்படுவது இவர்களின் வேலை. கனடாவில் அனுஜன் பஞ்சாட்சரம் இது போன்று செயல்படுவதாக குறிப்பு உண்டு. நமது கிராமங்களில் காட்டுக்கு சென்று காவல் காப்பது, எல்லை காவலாளி என ஒரு மட்டத்தில் மட்டும் சூப்பர் ஹீரோக்கள் உண்டு.

இந்த சூப்பர் ஹீரோக்கள் சில நேரங்களில் காவல்துறைக்கு தலைவலியாக அமைந்து விடுவது உண்டு. சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என காவல்துறையே சொல்லிவிட்டது.

நமது தமிழகத்தில்,  இந்தியாவில் பிற நாடுகளில் உள்ளது போன்று  நிறைய நிஜ  சூப்பர் ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள், ஆனால் என்ன பிரச்சினை தமிழக, இந்திய  நிஜ சூப்பர் ஹீரோக்களின் வில்லன்கள் எல்லாம் அதிகார வர்க்கத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் சிரமம்.

Monday 16 September 2013

ஜீரோ எழுத்து - 7 (குவாண்டம் இயக்கியலும், நிலையற்ற நியமமும்)

நிலையற்ற தன்மை அல்லது நிலையற்ற நியமம். ''ஒரு துகளின் உத்வேகத்தையும், அந்த உத்வேகத்தில் இருக்கும்போது உள்ள நிலையினையும் கண்டறிந்து கொள்வது என்பது முடியவே முடியாத ஒன்று. இக்கணத்தில் எக்கணமும் இல்லை'' கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என காலத்தைப் பிரித்து வைத்தார்கள். நேற்று, இன்று, நாளை இது நாள் கணக்கில் வரும் காலங்கள். நேர கணக்கிலும் சரி, வினாடி கணக்கிலும் சரி இந்த மூன்று காலங்களும் வந்தே தீரும். இதைத்தான் புத்தர் சொன்னார், இக்கணத்தில் எக்கணமும் இல்லை. புத்தர் சொன்னதைத்தான் ஹெய்ன்ஸ்பெர்க் எனும் அறிஞர் நிலையற்ற நியமம் என இயற்பியல் வாயிலாக சொன்னார். குவாண்டம் இயக்கியலில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த கருத்து சொல்லப்பட்டு வருகிறது. இந்த விசயமே சாதாரண இயற்பியல் விதிகளுக்கும் குவாண்டம் இயக்கியலுக்கும் உள்ள மாபெரும் வேறுபாடு என கண்டறியப்பட்டது.

நிகழ்தகவு என சொல்வார்கள். உலகில் கிட்டத்தட்ட எல்லா விசயங்களும் இரண்டாகவே பிரிபட்டு நிற்கும். ஒன்று, இல்லையேல் மற்றொன்று. தற்போது  அலைவடிவம் பெறாத துகள், துகள் வடிவம் பெற்றே இருக்க வேண்டும். அதாவது நாம் செயல்முறை பயிற்சி செய்யும்போது துகள் பெறக் கூடிய அலைவடிவம்தனை, நம்மிடம் இருக்கும் உபகரணம் கொண்டு அதை மாற்றிவிடும் பட்சத்தில் அலைவடிவம் மறைந்தாலும் அந்த துகள் எங்கு செல்கிறது என்பதை நாம் கண்டு கொள்ளும் வாய்ப்பு இருக்க வேண்டும். அதைத்தான் நியூட்டன் ஒரு துகளின் உத்வேகத்தையும், உத்வேகத்தில் உள்ள நிலையினையும் கண்டு கொண்டால் அந்த துகள் எங்கு செல்கிறது என அறியலாம் என்றார். ஆனால் அது சாத்தியமற்ற ஒன்று என பின்னாளில் தெரிய வந்தது. இதனைக் கண்டறிய தமது வாழ்நாட்களில் அதிக நாட்கள் செலவிட்ட ஐன்ஸ்டீன் தோற்றுப் போனார். அப்படியே வரும் காலங்களில் எவரேனும் ஒருவர் ஒரு துகளின் இந்த உத்வேகம், உத்வேகத்தில் இருக்கும் நிலை என இரண்டையும் ஒரு சேர நிச்சயித்து விட்டால் இந்த குவாண்டம் இயக்கியலை மூடிவிட வேண்டியதுதான்.

பார்த்தார், ஹெய்ன்ஸ்பெர்க். இந்த இரண்டு நிலைகளை ஒரு  சேர நிச்சயிக்க முடியாது என சொல்லி 'ஹெய்ன்ஸ்பெர்க் நிலையற்ற நியமம்' என கணக்கு போட்டு காண்பித்துவிட்டார். முதன் முதலாக  நிலையற்ற நியமம் என்ற வார்த்தையை சொன்னது எட்டிங்க்டன் என சொல்வோர் உண்டு. நிலையற்ற நிலையில் x , நிலையற்ற உத்வேகம்  p இருக்கும். xp>h/4pi h = ப்ளான்க் மாறிலி. இந்த பிளான்க் மாறிலி என்பது 6.63 x 10 -34 ஜூல்ஸ்/வினாடி. E= hv அப்படிங்கிற சமன்பாட்டினை காண்பித்தவர் இந்த மாக்ஸ் ப்ளான்க். கதிரியக்க ஆற்றலை பற்றி குறிப்பிட்டார் அவர். நாம் முதன் முதலில் குறிப்பிட்ட ஆற்றல் சிறு சிறு பகுதியாய் வரும் என்பதை சொல்வதுதான் இந்த சமன்பாடு. சாதாரண இயற்பியல் விதிகளுக்கு உட்படாத விசயங்களை பற்றி குறிப்பிடவே இப்படி ஒரு சமன்பாட்டினை ப்ளான்க் வெளியிட்டார் எனும் குற்றசாட்டு முதலில் எழுந்தது. ஐன்ஸ்டீன் பின்னர் ஒளியின் ஆற்றலை இதே சமன்பாட்டினை கொண்டு விளக்கினார். ஒளி ஆற்றல் போட்டான்களாக வெளிவருகிறது என்பதை அறிந்ததும் இயற்பியல் விழித்துக் கொண்டது. என்னதான் இந்த குவாண்டம் கொள்கையை ஐன்ஸ்டீன் நம்பத்தகுந்த கொள்கையாக மாற்றினாலும் இது ஒன்று மட்டுமே இந்த இயற்கை உலகினை விளக்க கூடியது என்பதை ஐன்ஸ்டீன் ஒருபோதும் நம்பியது இல்லை. பிற்காலத்தில் ப்ளான்க் நீளம், ப்ளான்க் நேரம் என கண்டுபிடித்தார்கள். வினாடி, மில்லிவினாடி, மைக்ரோவினாடி என ஒரு காலகட்டத்திற்கு மேல் வினாடியை உடைக்க முடியாது என சொன்னார்கள்.

மீண்டும் செயல்முறை பயிற்சிக்கு வருவோம். இந்த துகள்களின் உத்வேகம், நிலை  குறித்து ஒரு செயல்முறை செய்து பார்க்கலாம் என்றார்கள். அதாவது இரண்டு துகள்களை ஒன்றுடன் ஒன்று மோத விடுவது. மோதிக்கொண்ட துகள்கள் எதிரெதிர் திசையில் செல்லும். வெளிக்காரணிகள் ஆதிக்கம் இல்லாத பட்சத்தில் இரண்டு துகள்களின் உத்வேகம், நிலை ஒரே மாதிரி இருக்கும் என்பது இயற்பியல் விதி. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு துகளின் உத்வேகமும், மற்றொரு  துகளின் நிலைதனையும் நிச்சயித்து விடலாம் என சொன்னார்கள். ஆக மொத்தம் கள்ளாட்டம் ஆடி துகளின் இரண்டு நிலையை சொல்லலாம் என நினைத்தார்கள். ஆனால் இவை எல்லாம் ஏதேனும் துகள்கள் ஒளியினை விட வேகமாக சென்றால் மட்டுமே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்கள். ஐன்ஸ்டீனின் சார்பு கொள்கை படி ஒளியை விட வேகமான துகள்கள் இது சாத்தியமில்லை என்றாகிறது. (நியூட்ரினோ துகள் ஒளியை விட வேகம் என தற்போது கண்டுபிடித்ததாக ஒரு குறிப்பு உண்டு)

இந்த செயல்முறை பயிற்சியை செய்தே தீர வேண்டும் என ஒரு பிரெஞ்சு அறிவியலாளர் செய்து பார்த்தார். ஹெய்ன்ஸ்பெர்க் என்ன சொன்னாரோ அதையே சொல்லி ஒளியை விட வேகமாக செல்லக்கூடிய துகள் இருந்தாலும் உத்வேகம், உத்வேகத்தில் உள்ள நிலை என இரண்டும்  ஒரு சேர நிச்சயிப்பது சாத்தியமில்லை என முடித்து கொண்டார். ''The particles do not communicate by any means we knew about. All we know is that every particle knows what every other particle it has ever interacted with is doing''

''விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை''. இந்த வாக்கியம் பலமுறை கேள்வி பட்டு இருப்போம். இந்த வாக்கியத்தைத்தான் துகளின் உத்வேகம், நிலைத்தன்மை பற்றி குறிப்பிடுகிறார்கள். விண்டவர் கண்டில்லை, கண்டவர் விண்டில்லை அப்படிங்கிற விசயத்தை எப்படி ஒருவர் சொல்ல இயலும். இந்த விசயம் சொன்னவர் ஏதேனும் செயல்முறை பயிற்சி செய்து பார்த்தாரா என்றெல்லாம் குறிப்புகள் இல்லை. ஆனால் இந்த வாக்கியத்தின் உட்பொருள் தனை எவரேனும் உடைத்து விடுவாரெனில், அதாவது விண்டவர் கண்டார், கண்டவர் விண்டார், இறைவனை மூடி விட வேண்டியதுதான்.

எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே துகள் துகளாக அல்லது அலையாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம். ''உண்மையை யார் உண்மையிலேயே உண்மையாக கண்டறிந்தது என்பது மனித வாழ்வில் ஒரு பெரும் கேள்விக்குறிதான்' ஆனால் இந்த குவாண்டம் இயற்பியல் சொன்னது நாம் என்ன காண்கிறோமோ அல்லது அளக்கிறோமோ அதுவே உண்மை. ஆனால் கேள்வி நீண்டு கொண்டே போகும். அப்படியெனில் நமது உபகரணம் சரியானதா? வேறு உபகரணம் இருந்தால் என்ன கிடைக்கும் என்பது போன்று. இதைத்தான் 'No Analysis is better than the sample itself' என்று சொன்னார்கள்.  கடவுள் இவ்வுலகை படைத்தார் எனில் கடவுளை யார் படைத்தார் என்றே பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். பெரு வெடிப்பு கொள்கை முன்னர் என்ன இருந்தது என அறிவியலிடம் கேட்டால் இயற்பியல் விதிகளுக்கு உட்படாத தன்மை இருந்தது அதையே இந்த குவாண்டம் இயற்பியல் சொல்ல வருகிறது என்கிறார்கள்.

ச்ச்ரோடிங்க்ர் எனும் அறிஞர் நம்மைப் போலவே குவாண்டம் இயற்பியல் பற்றி புரிந்து கொள்ள முடியாது திணறினார். இருப்பினும் குவாண்டம் இயற்பியல் சொல்லும் உலகை நாம் காண இயலாது என்பதை நிரூபிக்க ஒரு செயல்முறை பயிற்சி சொன்னார். அதைத்தான் ச்ச்ரோடிங்க்ர் பூனை செயல்முறை பயிற்சி என சொல்கிறார்கள்.

ஒரு பெட்டி. அந்த பெட்டிக்குள் ஒரு கதிரியக்க ஐசோடோப். கதிரியக்கம் அளக்கும் ஒரு கருவி. ஒரு சயனைடு சீசா. இப்போது கதிரியக்கத்தை அந்த ஐசோடோப் வெளிவிட, அதை இந்த கருவி அளக்கும், கதிரியக்க அதிகரிப்பால் சயனைடு சீசா உடையும், சயனைடு சுவாசித்து பூனை இறக்கும். இப்போது அந்த ஐசோடோப் கதிரியக்கத்தை உமிழவில்லை எனில் பூனை உயிருடன் இருக்கும். இப்போது நமக்கு அந்த பெட்டியை திறந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். அதுவரை பூனை உயிருடன்  இருக்கலாம், அல்லது இறந்து போயிருக்கலாம். தற்போது கதிரியக்கக் கருவி அவசியமற்ற ஒன்று, ஏனெனில் பூனையே ஒரு கருவியாக இங்கே இருக்க வாய்ப்பு உண்டு. ஒரு நிலையை உடைக்கும் தன்மை நாம் பார்ப்பதில் இருக்கிறது, ஆனால் அதை நாம் பார்க்கும்வரை நிச்சயிக்க முடிவது இல்லை. புலி இருக்கிறதா, புலித்தோல் போர்த்திய பசு இருக்கிறதா என்பது நாம் கண்டுகொள்ளும்வரை தெரிவதில்லை. அறிஞர்கள் பார்த்தார்கள், இது மிகவும் வில்லங்கமாக இருக்கிறதே என பாதி செத்த பூனை என சொல்லி வைத்தார்கள், இருப்பினும் அளவுகோல் எது என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. ச்ச்ரோடிங்க்ர் சொன்னார் ''I don't like it, and I am sorry I ever had anything to do with it''. முடிவிலி பற்றி கேள்வி பட்டு இருப்போம். முடிவிலியால் முடிவிலி கொண்டு வகுக்க விடை வரையறுக்க முடியாதது. கணக்குதனில் மதிப்பிலா ஒன்றை புறக்கணித்து விடுவார்கள். 'Let us ignore, it is negligible' ஆனால் குவாண்டம் இயக்கியல் சொல்கிறது, 'Don't ignore because it has infinite energy, infinite charge and  infinite mass'.

இப்படி குவாண்டம் இயக்கியல், இயற்பியல் தனது பங்குக்கு இவ்வுலகம் தோன்றிய இயற்கையை பற்றி விவரித்துக் கொண்டிருக்க சில அறிஞர்கள் ஒரு உலகம் மட்டுமே இல்லை, பல்வேறு உலகங்கள் உண்டு என சொல்லவும் செய்தார்கள். பூலோகம், மேலோகம், பாதாள உலகம் என்று இருக்க எதற்கும் அணுக்களின் உலகம் குறித்து அடுத்துப் பார்ப்போம்.

அதற்கு முன்னர் ஒரு சூப்பர் ஹீரோ காத்துக் கொண்டு இருக்கிறார்.

(தொடரும்)