Monday 7 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படைப்பாளியும்

தமிழில் இப்படி ஒரு திரைப்படம் இனிமேல் வருமா அல்லது இப்படி ஒரு திரைப்படம் வந்து இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம். இது ஒரு தமிழ் திரைப்படம். சற்று வித்தியாசமான தமிழ் திரைப்படம். கதையின் தொடக்கத்தில் இருந்து இறுதிகாட்சிக்கு சற்று முன்வரை  யார் இந்த ஓநாய் என்பதை சொல்லாமல் காட்சி அமைப்புகள் அமைத்த விதம் இந்த படத்தின் சிறப்பம்சம். இந்த ஓநாய்தனை சுற்றி பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் கதையை வெகு சுவாரஸ்யமாக நகர்த்த ஏதுவாகிறது. அதுவும் இந்த ஓநாய் பற்றிய கதையை ஓநாய் சொல்லும்போது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அத்தனை அருமை. பின்னோக்கி பார்த்தல் என பெரும்பாலான படங்களில் பல காட்சிகளை வைத்து நகர்த்தி இருப்பார்கள். ஆனால் இதில் ஒரு சின்ன கதையை அழகாக சொல்லி ஒரே காட்சியில் ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டார்கள்.

அவ்வளவுதான் கதை. ஆனால் சொல்லப்பட்ட விதம் சற்று வித்தியாசமானது. பிட்சா மற்றும் இது போன்ற தமிழ் படங்கள் நிறைய வர வேண்டும் என்றே சற்று தமிழ் ரசிகர்கள் ஒருவேளை  எதிர்பார்க்கலாம். ஆனால் இதே காலகட்டத்தில் தான் மற்ற மசாலா படங்கள் கூட வெற்றியும் குவிக்கின்றன. ஒரு படைப்பை இத்தனை சிரமப்பட்டுத்தான் தர வேண்டுமா என்றே பலரும் நினைக்க கூடும். மிகவும் எளிமையாக ஆறு பாடல்கள், நான்கு சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என முடித்து செல்வதை விட்டுவிட்டு இதெல்லாம் அவசியமா என்றே குரல் எழுப்பப்படும். ஆனால் அந்த அந்த படத்திற்கு அந்த அந்த சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். தமிழ் திரையுலகில் நடிகைகளை மிகவும் நேர்த்தியாக காட்டக் கூடிய வரிசையில் இந்த இயக்குனர் இருக்கிறார் என சொல்லலாம். கவர்ச்சி காட்டித்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் என்பதை சற்று தமிழ் திரையுலகம் தகர்த்தி கொண்டால் நடிகைகள் மீதான மரியாதை தமிழகத்தில் சற்று அதிகம் ஆகும். ஆனால், காட்டத்தான் கவர்ச்சி, காணத்தான் கவர்ச்சி என சொல்லி விட்டார்கள்.

 படத்தில் இசையை பற்றி சொல்ல வேண்டும். எனக்கு இசையை பற்றி அதிகம் தெரியாது என்றாலும் கூட ஏதோ ஒருவித இசை உணர்வு படத்துடன் ஒன்றியே இருந்தது. இன்ன இன்ன காட்சிக்கு இப்படித்தான் இசையை எழுப்ப வேண்டும் என ஒரு இசை மேதைக்கு தெரியாமல் இருந்தால் மட்டுமே ஆச்சர்யப்பட வேண்டும். பாடல்கள் இல்லாத படம் இது என்று சொல்ல முடியாது. ஒரு அருமையான பாடல் ஒன்று சில வரிகளில் வந்துவிட்டு போகும். காட்சிக்கு ஏற்ற அமைப்பு.

படம் குறித்து ஒவ்வொரு பிரதியையும் விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு திரைப்பட நுணுக்கம் தெரியாது என்பதால் ஒரு படைப்பாளியின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இது ஒரு உயர்ந்த படைப்பு தான். சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் நபர், அவரை புறக்கணிக்கும் சமூகம். உதவிக்கு வராத மருத்துவத்துறை, காவல் துறை என எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. ஆனால் அடுத்த கட்ட காட்சி தமிழ் திரையுலகுக்கு சற்று புதிது, அல்லது நான் பார்க்க தவறி இருக்கலாம். ஆதி காலத்தில் இருந்து இது வரை உடலில் குண்டு பட்டால் ஒரு கத்தியால் குத்தி கிளறி குண்டுதனை எடுத்து போட்டுவிட்டு ஒரு கட்டுடன் சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கே மண்ணீரல்தனை வெளி எடுத்து விடுவது போன்ற காட்சி அமைப்பு.  மண்ணீரல்தனை எடுத்து விட்டால் என்ன ஆகும் என்பதை விளக்க இது அறிவியல் படம் அல்ல. எப்படி எடுப்பது என்பதுவும், அந்த காட்சியும் தொழில்நுட்பம் இல்லாத காலம்தனை சொல்லி சென்றது. ஆதிகாலத்தில் இப்படித்தான் மருத்துவம் பார்த்தார்கள், இதன் காரணமாக பாக்டீரியாக்கள் மூலம் நோய் பரவி மக்கள் இறந்து கூட போனார்கள்.

ஒருவரை பார்த்து நீ சிறந்தவன் என சொல்லிவிட்டால், சிறந்தவராக இருக்க வேண்டும் என அந்த நபர் நினைப்பது மனித இயல்பு. டாக்டர் என சொன்னதும் டாக்டர் என நினைப்பதுவும், செயல்படுவதும் தன்னம்பிக்கையின் அடையாளம். இப்படித்தான் படத்தில் ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி காட்சியில் மனம் சற்றே கனக்கிறது. வாழ்த்துகள் மிஸ்கின்.

கல்விக்கும், கலைக்கும் செல்வம் தலை வணங்க வேண்டும். ஆனால் செல்வத்தின் முன்னர் இந்த இரண்டுமே பிச்சைக்காரர்கள் போல் காட்சி அளித்து கொண்டு இருக்கிறது. இந்த வியாபார உலகில் நேர்மையான கல்வி, அற்புதமான படைப்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். இந்த வியாபார உலகில் கலையை வியாபாரமாக்கிட நினைக்கும் எந்த ஒரு படைப்பாளியும் உன்னதமான படைப்பினை தர இயலாது. ஒரு படைப்பாளி தனது படைப்பின் வெற்றியை வணிக ரீதியாக கணித்து கொள்வான் என்றால் அவனுக்கு இது போன்ற படைப்புகள் தோல்வியே.

இணைய உலகில் இப்போது எந்த படங்களும் திரையரங்குகளுடன் சேர்ந்தே வெளி வந்து விடுகின்றன. உலக நாடுகளில் எல்லா நாடுகளிலும் தமிழ் படங்கள் திரையிடப்படுவதில்லை. தமிழகத்தில் வெளிவந்த ஒரே வாரத்தில் சிடிக்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்படி ஒரு படைப்பை பார்ப்பதினால் படைப்பாளி பாதிப்புக்கு உள்ளாகின்றான். அவனது படைப்பு வணிக ரீதியாக தோல்வி அடையும்போது அது போன்ற முயற்சிக்கு அவனால் செல்ல இயல்வதில்லை, யாரும் துணை வருவதில்லை.

இதை எல்லாம் எப்படி தடுப்பது? முடியாது என்பதன் காரணமாகவே தமிழில்  மசாலா படங்கள் பெருகி போய்விட்டன. திரை அரங்குக்கு சென்று காணும் கூட்டம் அதற்கென்றே இருக்கிறது.

படைப்பாளி தனது படைப்பிற்கு விலை பேசக் கூடாது! விலை பேசும் நிலை வந்துவிட்டால் தனது படைப்பை பற்றி கவலை படக்கூடாது. தனது படைப்பா, பணமா என்பதை படைப்பாளி தேர்வு செய்யட்டும். 

No comments: