Friday 26 July 2013

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 7

சாபம் விடுவது என்பது முனிவர்களின் ஒரு தலையாய கடனாக இருந்து வந்து இருக்கிறது. அதாவது சாபம் விட்டால் அது பலித்து விடும் எனும் ஒரு அதீத நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தததுடன் மட்டுமில்லாமல் அந்த சாபத்தை கூட மாற்றி அமைக்கும் வல்லமை உடையவர்களாகவே அவர்கள் சொல்லப்பட்டார்கள். ஒருவரது வாக்கு அத்தனை சக்தி வாய்ந்ததா? என்பதெல்லாம் பற்றி ஆராய்ச்சி அவசியம் இல்லை எனினும், ஒருவரது சொல் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பது அனைவரும் ஓரளவு தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். 'வசவு பாடுதல்' எல்லாம் எதிர்வினைகளை அதிக அளவில் ஏற்படுத்தவல்லவை. கிராமங்களில் 'மண் வாரி தூற்றுதல்' 'காசு வெட்டி போடுதல்' 'செய்வினை செய்தல்' போன்ற காரியங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இப்படி நடக்கும், நடந்துவிடும் என்கிற நம்பிக்கையில் செய்யப்படுபவை. இப்படி செய்தால் அப்படி நடக்கும் எனும் ஒரு உணர்வு! எப்படி இந்த மனிதர்கள் முனிவர்கள், சித்தர்கள் பெரும் வல்லமை கொண்டவர்களாக மாறினார்கள்? அல்லது மாற்றம் கொண்டது போல் போற்றப்பட்டார்கள்?

இதுவரை எவரும் 'கல்லாக நீ கடவது' என சபித்து எவரும் கல்லாய் ஆனது கண்டில்லை. இந்த மனிதர்கள் எப்படி உருவானார்கள்? அல்லது எப்படி படைக்கப்பட்டார்கள்?

தற்போதைய மனிதர்கள் தோன்றிய வரலாறு கிட்டத்தட்ட 50000 ஆயிரம் வருடங்களில் இருந்து 100000 ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டுதான் என்று வரலாறு குறிக்கிறது. அதுவும் மனித வழித்தோன்றல்கள் 5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் மற்றொரு உயிரினத்தில் இருந்து வேறுபட்டு வந்துள்ளது என்றே கணக்கு சொல்லப்படுகிறது. இந்த பூமியானது கடந்த 3 பில்லியன் கோடி வருடங்கள் முதற்கொண்டு உயிரினங்கள் வாழ துணை புரிவதாகவும், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் முதற்கொண்டு 5 பில்லியன் ஆண்டுகள் வரை இந்த பூமி உயிரினங்கள் வாழ வழி செய்யும் என்றே குறித்து வைக்கிறார்கள். இப்போது எழுதபட்ட விசயத்தில் எதையும் துல்லியமாக வரையறுத்து சொல்ல இயலாத நிலை இருப்பதை அறியலாம்.

இந்த பூமியில் நடைபெறும் நிகழ்வுகள் அடிப்படையில் உயிரினங்கள் சில மில்லியன்கள் வரை இருப்பதாகவும், அவை மாற்றம் அடைந்து வேறொரு உயிரின வடிவில் தோன்றுவதாகவும் படிமங்களின் ஆராய்ச்சி சொல்கிறது. வருடம்தோறும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிவதாகவும், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவை பெரிய அளவில் உள்ள உயிரினங்கள் என சொல்ல இயலாது. சின்னசின்ன உயிரின மாற்றம் சாத்தியமே.

மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்? மனித இனம் அழியுமா? அப்படி அழியும் பட்சத்தில் வேறு எந்த உயிரினம் தோன்றும்?

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் போல எழுதி வைத்து இருக்கிறார்கள். அடுத்த பதிவில் அதைப் பார்க்கலாம்.

(தொடரும்)

Wednesday 17 July 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 15

என்னைப் பற்றியும் சுபத்ராவைப் பற்றியும் காயத்ரி என்ன நினைத்திருப்பாள் என்றே என் மனம் நினைக்கையில்

"ஹலோ ஐ ஆம் சுபத்ரா" என காயத்ரியின் கைகள் பிடித்து குலுக்கினாள்.

"ஹாய் ஐ ஆம் காயத்ரி"

''சுபா, நீ எப்படி இந்த ஊருக்கு, எப்போ வந்த'' என நான் குறுக்கிட்டேன். சுபா என்றே அவளை அழைத்து பழகிப் போனது.

''நேத்துதான் வந்தேன், பரிணாம ஆராய்ச்சிக்காக வந்து இருக்கேன்''

''என்ன கோர்ஸ் எடுத்துப் படிக்கிற''

''டெவெல்த்தோட ஸ்டாப், பரிணாமத்தில இண்டரெஸ்ட் அதான் அது எடுத்து தனியாப் படிக்கிறேன், சரி பிறகு வந்து பார்க்கிறேன், விவரமா பேசலாம், இப்போ ஒருத்தரை சந்திக்கப் போறேன், ஸீ யூ காயூ'' என அவள் கிளம்பி சென்றாள்

காயூ... நான் அழைப்பது போலவே அவளும் அழைத்து சென்றது எனக்கு பெருமையாக இருந்தது.

''காயூ, நீ சுபாவைப் பத்தி என்ன நினைக்கிற''

''உங்களுக்கு மிகவும் பொருத்தமானவ''

சில வேளைகளில் என்ன பேசுகிறோம் என்றே நமக்கு தெரியாமல் போய்விடுவது துரதிர்ஷ்டம் என நினைத்துக் கொண்டேன். காயத்ரி அவ்வாறு கூறியதும் நான் சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு பேசினேன்.

''ஆமா, என்னோட அலைவரிசை அவளுக்கு இருக்கு''

''அவளை ஏன் காதலிக்கலை''

''அது அந்த பருவம் வரலை''

''இப்போ காதலிக்கலாமே''

''உன்னை காதலிச்ச பிறகு வேறு யாரை நான் காதலிக்கனும்''

நான் சொன்ன இந்த வார்த்தைகளில் காயத்ரி வாயடைத்துப் போனாள். பொதுவாகவே ஆண் - பெண் இடையே ஈர்ப்பு என்பது சகஜமான ஒன்றுதான். ஒரு ஆண் பல பெண்களை காதலிப்பதும், ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பதும் என்பதெல்லாம் சரியே என்றே வெளித் தோற்றத்தில் தென்படும். ஆனால் அவை ஒருவகையான பாலின ஈர்ப்பு என்பது புரிந்தபாடில்லை. காதல் என்பதன் முழு அர்த்தம் கவனிக்கப்படவில்லை என்றே தோணியது.

''காயூ, நீ மனசை போட்டு உலப்பிக்காதே, சினிமாவுல வரமாதிரி முக்கோண காதல் எல்லாம் எனக்குள்ள வராது. ஒரு காதல் கதைன்னு வந்தாலே அதுல ஒரு முக்கோண காதல், அந்த பெண் இவனைக் காதலித்தாள், அவன் வேறு ஒருவளை காதலித்தான் அப்படின்னு சொல்றதுக்கு இது நிழல் இல்ல, நிஜம். என்னை நம்பு''

கல்லூரியின் வாசல் அடைந்து இருந்தோம். காயத்ரி எனது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு என் அப்பாவோட வாழ்க்கை என்னை ரொம்பவே பாதிச்சிருச்சி முருகேசா என கண்களில் கண்ணீர் மல்க  சொன்னாள்.

''காயூ, மனசு அப்படிங்கிறது நமக்கு கட்டுப்பட்ட ஒண்ணா இருக்கனும், மனசுக்கு நாம கட்டுபட்டவங்களா மாறக் கூடாது''

சொன்ன மாத்திரத்தில் எனக்கு புரியவில்லை.  மனதுக்கு கட்டுப்பட்டு இருப்பது, மனதை கட்டுப்படுத்துவது, இதில் என்ன வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றியது என புரியாமலே இருந்தது.

''சரி முருகேசா''

புரிந்தது போல சரி என சொல்கிறாளே என நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கல்லூரியில் இருக்கும் பொழுதில் பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க காதல் சற்றே வழிவிட்டு நிற்கும். எனக்குப் பிடிக்காத ஆசிரியரே பாடம் எடுத்தார். அவர் எடுத்த முதல் பாடம் மனம் பற்றியதுதான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

''Human mind is not an object, it is not located any particular part of the body''

வழக்கம்போல எனது அருகில் இருந்தவன் எழுந்து ''mind your language'' என்றான். மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அந்த ஆசிரியர் மிகவும் கோபத்துடன் ''why should I?, get out of the class'' என்றார்.

''சாரி சார், நீங்க சொன்னது எனக்குப் புரியலை, கொஞ்சம் தமிழுல சொல்றீங்களா''

''அப்படி கேட்க வேண்டியதுதானே, டிசிப்ளின் இல்லாத பசங்க எல்லாம் எதுக்குப் படிக்க வரனும், பன்னி மேய்க்க போகலாமே''

''பன்னி மேய்க்க கூட டிசிப்ளின் வேணும் சார், அதுவும் படிக்க சொல்லித் தரதுக்கு ரொம்ப டிசிப்ளின் வேணும் சார்''

''பாடம் நடத்துங்க சார், நீங்க இரண்டு பேரும் வெளில சண்டையை வைச்சிகோங்க'' என்றாள் வளர்மதி. மொத்த வகுப்பும் ஆமா சார் என்றது.

''This is what I call is human mind. It is not located any particular part of the body, it is everywhere. அதாவது மனம் எங்கும் வியாபித்து  இருக்கிறது. வளர்மதி சொன்னதும் நீங்க எல்லாரும் ஆமாம் சொன்னீங்க இல்லையா அதுதான் மனம். அது சுற்றுப்புற சூழல் மூலம் மாசும் அடையும், சுத்தமும் அடையும். Human mind is influenced by external stimulations; based on that, internal vibrations start to occur. It is very difficult to control internal vibrations once you have constant external stimulations or once external stimulations occurred very deeply, this start coming back again and again to create internal stimulations how clever you are!''

''யோவ் நீ என்னதான் சொல்ல வர''

இப்படி அருகில் இருந்தவன் சொல்வான் என்றே எவரும் எதிர்பார்க்கவில்லை. அவர் நடத்திய பாடம் எனக்கு பிடித்து இருந்தது. முதலில் பிடிக்காத ஆசிரியர் எனக்கு பிடித்தவராக தெரிந்தார். மொத்த வகுப்பும் நீ உட்கார் என அவனை நோக்கி சத்தம் போட்டது.

''என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு, நான் எது சொன்னாலும் உனக்கு நக்கலா இருக்கு, உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ வகுப்பு விட்டு வெளியே போ, புரியலைனா என்னனு மரியாதையா கேளு இப்படி அநாகரிமாக நடந்துகிறது நல்லதில்லை''

ஆசிரியர் பேசியது எனக்கு சரியாகவே பட்டது. சாரி கேட்டு உட்காருடா என அவனை இழுத்தேன்.

''I tried to see how you react to me Sir, when I said mind your language, you shouted at me and asked me to get out of the class and talked about discipline. That was an external stimulation which angered you. You talked about discipline. I said 'Teacher should have more discipline than others'. After you taught for a while, I have criticised your way of teaching that I did not understand, you reacted very differently now and you have shown some degree of dignity. How could an external stimulation have such an impact immediately, you should have some internal vibrations all the time on all matters, is that right?''

அவன் பேசி முடித்து அமர்ந்தபோது மொத்த வகுப்பும் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஆசிரியர் கைத்தட்டல்கள் சத்தம் ஓயும் வரை காத்து இருந்தார். 

''Does child have internal vibrations on all matters which is not exposed to or do you have internal vibrations which you are not exposed to or you haven't paid any attention to it?'' 

ஆசிரியரின் அந்த கேள்வி என்னை நிஜமாகவே உலுக்கியது. பக்கத்தில் இருந்தவன் எழுந்து சில  வார்த்தைகள்  சொல்லிவிட்டு அமர்ந்தான். 

''Worth looking at it''

''என்னடா சொல்ற'' என மெல்ல கேட்டேன். 

''நிறைய யோசிக்க வைச்சிட்டான்டா வாத்தி''

ஒரு விசயம் பிடிக்கும், பிடிக்காது காரணம் சொல்லலாம். காதலுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? என மனம் நினைத்தது. இந்த மனம்... கர்ம வினையா? மர்மம் தீர வேண்டினேன். 

(தொடரும்)


Monday 15 July 2013

உடலில் புகுதல்

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 6 

எல்லாவற்றிக்கும் ஒரு பிராப்தம் இருக்கனும். இந்த பிராப்தம் இல்லாத பட்சத்தில் எதுவுமே சாத்தியம் இல்லை என்பதுதான் மனிதர்கள் சொன்ன தத்துவம். 

'விதிப்படியே எல்லாம் நடக்கும்' என்பதுதான் இந்த உலகம்  கண்டு கொண்ட விசயம். விதி-மதி என்றெல்லாம் பிரித்து சொல்வார்கள். ஆனால் மதி கூட விதிக்கு உட்பட்டதுதான். 

'எல்லாம் தீர்மானத்தின் பேரில் தான் நடக்கிறது' என்று 1991ம் வருடம் எழுதியபோது நாம் தான் இதனை எழுதினோம் என்கிற இறுமாப்பு இருந்தது, ஆனால் இதனை ஐன்ஸ்டீனும் சொன்னார் என கேள்விப்பட்டபோது ஏராளமான மனிதர்கள் இதே கருத்தை ஒருவேளை கொண்டிருக்க கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

'கவலையை விடு, நடக்கிறதுதான் நடக்கும்' என சொல்லும் போதே கவலைப்படுதல் கூட ஒருவகை விதிப்பயன் என்றே நினைக்க வேண்டி வருகிறது. 

'ஆண்டவனின் பெயரால் இதனை செய்கிறோம் என்பதுவும், சாத்தானின் பெயரால் இதனை செய்கிறோம் என்பதுவும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாம் விதியின் வினைச்செயல். 

அஷ்டமாசித்திகளில் இந்த பிராப்தி எனப்படும் சித்தியின் மூலம் எல்லாவற்றையும் அடையலாம், அதாவது விரும்பியவை எல்லாம் கைகூடும் என்கிறார்கள். தகிதகித்துக் கொண்டிருக்கும் வெப்பத்தில் கூட எவ்வித பாதிப்பும் இல்லாமல் நமது உடலை அடையச் செய்ய விரும்பினால் சாத்தியம் என்கிறது இந்த சித்தி. எதிர்காலம் அறிந்து கொள்வது, பிறர் உடலில் புகுந்து கொள்வது, அமானுஷ்ய செயல்பாடுகள் எல்லாமே சாத்தியம் என்கிறது இந்த சித்தி. அதெப்படி சாத்தியம் என்றால் அதற்கு பிராப்தம் வேணும். அந்த பிராப்தம் தான் இந்த பிராப்தி சித்தி. இது சரியான அபத்தம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 

திருமூலர் கதையை பலரும் அறிந்து கொண்டிருப்பார்கள். திருமூலரின் கதையை திரித்து கூறுவதில் பலரும் கில்லாடிகளாக இருந்து இருக்கிறார்கள். கதைச் சுருக்கம் இதுதான். மாடு மேய்க்கும் மூலன் மரணம் அடைகிறான். மாடுகள் அவனது இறந்த உடலை சுற்றி அழுகின்றன. இதை தனது பிராப்தி சத்தியால் அறிகிறார் சித்தர். மாடுகளின் அன்பைக் கண்டு தனது உடலை ஓரிடத்தில் மறைத்துவிட்டு மூலனின் உடலில் புகுகிறார் சித்தர். இது பிராப்தி எனும் சித்தியால் வந்தது. அவர் இனி திருமூலர். நதிமூலம், ரிசிமூலம் பார்க்காதே என்பார்கள். 

இந்த கதையில் எண்ணற்ற கேள்விகள் எனக்குள் இருந்தாலும் அது எல்லாம் அவசியமற்ற ஒன்று என புறந்தள்ளி விடுவது சிறந்தது என்றே கருதி, இதே திருமூலர் கதையை இப்படித்தான் எழுத தோன்றுகிறது. 

''மூலன் என்பவன் மாடு மேய்க்கும் ஒரு சாதாரண மனிதன். அப்பொழுது சுந்தரர் எனும் சிந்தனையாளர், தெய்வபக்தியாளர் கயிலாயத்தில் இருந்து கிளம்பிய பயணத்தின் போது இவனை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறார். அப்பொழது சுந்தரர், மூலனிடம் சிவன் பற்றி 'அன்பே சிவம்' போன்ற விசயங்கள் சொல்கிறார். மாடு மேய்த்தாலும் சரி, களை எடுத்தாலும் சரி மனதில் எழும் சிந்தனைகள் பாடல்களாக மாறுவது உண்டு. எத்தனையோ பேர்களிடம் சுந்தரர் விசயம் சொல்லி இருந்தாலும், இந்த மூலன் மிகவும் உன்னிப்பாக எல்லாவற்றையும் கேட்கிறான். 

மூலன், சுந்தரரின் சொற்பொழிவில் மயங்குகிறான், அவனது மனம் எல்லாம் சிவன் பற்றிய சிந்தனையிலும், மனிதர்களின் நலம் பற்றிய சிந்தனையிலும் புரள்கிறது. இப்பொழுது மூலன், சுந்தரரின் எண்ணத்திற்கு மாற்றப்படுகிறான்.
மூலன், தன்னுள் தான் ஒரு சாதாரண மனிதன் இல்லை, இவ்வுலகிற்கு சொல்ல நிறைய இருக்கிறது என உணர்கிறான். 

தனது மனைவியிடம் சென்று தான் சாதாரண மனிதன் இல்லை என்கிற விசயம் சொல்லி அதற்கு பின்னர் திருமந்திரம் போன்ற அருந்தகு விசயங்கள் பாடத் தொடங்குகிறான். மூலன், திருமூலர் ஆன வரலாறு இதுதான். மூலனுக்கு பிராப்தம் இருந்து இருக்கிறது. 

சுந்தரர், மூலனின் உடலில் எல்லாம் புகவில்லை. கறந்த பால் மடி புகா என்பதெல்லாம் அறிந்த விசயம், சிவவாக்கியர் குறிப்பிடுவது போல 'இறப்பன பிறப்பது இல்லை'. சுந்தரர், தனது எண்ணங்களை மூலனுக்குள் விதைத்தார். இப்படி எண்ணங்களின் ஆட்கொள்ளும் தன்மையது ஆண்டாளிடமும் இருந்தது. ஆண்டாள், ரங்கநாதனின் எண்ணங்களை தன்னுள் உருவாக்கிக் கொண்டாள். 

நமக்குள் நாம் உயரிய எண்ணங்களை உருவாக்கிட சொல்வதுதான் பிராப்தம். ஆமாம், எல்லாருக்கும் ஏனிந்த வாய்ப்பு இல்லை. அதுதான் விதிப்பயன். 

அஷ்டமாசித்திகள் எல்லாமே எண்ணங்களால் வயப்பட்டது. 'நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்பதெல்லாம் மிகவும் சாதாரணமாக சொல்லப்பட்ட வாக்கியம் இல்லை. நம்மில் பலர் பிறரின் சிந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கிறோம். 

ஹிப்னாடிசம், மூளை சலவை என்பதெல்லாம் இந்த பிராப்தி தான். தான் விரும்பியவற்றை அடைதல். அந்த விரும்பியவற்றை அடைய எந்த வழியும் சரிதான் என்கிற நிலைப்பாடு பேராபத்தில் முடிய வாய்ப்பு உண்டு. அதையெல்லாம் விதிப்பயன் என்றே சொல்லி செல்கிறார்கள். 

'சிந்தனைகள் பிராப்தி' 

சூரியனை தொட இயலுமா?

சுட்டெரித்துவிடும் 

அதே வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் உபகரணம் இருப்பின் சூரியனைத் தொடுவது எளிதுதான். அதுவே பிராப்தி. 

ஒன்றை பெற விரும்பினால், அதை அடைய அதற்குரிய தகுந்த முயற்சிகள் செய்திட காரியம் சித்தி கூடும் என்பார்கள். அந்த அஷ்த்மாசித்திகளில் ஒன்றுதான் இந்த பிராப்தி. விரும்பியவற்றை அடைதல். 

நல்லதை விரும்புவோம், நாடும், உலகுமும் செழிப்புற வாழ்வோம். 

Tuesday 9 July 2013

காதலும் பின்விளைவுகளும்

''முளச்சு  மூணு இலை விடலை அதுக்குள்ளே என்ன காதல் வேண்டி கிடக்கு''. சத்தம் போட்டார் அப்பா. 

''அந்த புள்ளையோட என்ன எழவுக்குடா சுத்துற''. கத்தினார் அம்மா. 

வைக்கோல் படைப்புக்கு பின்னால், மாந்தோப்புக்குள் என மறைந்து மறைந்து காதல் செய்தாலும் எப்படியாவது வத்தி வைத்து விடுகிறார்கள். ஊர்காரர்களின் கண்கள் எல்லாம் யார் யார் தப்பு செய்கிறார்கள் என விளக்கெண்ணையை கண்ணில் விட்டு தேடிக்கொள்வார்கள் போல. காதல் ஒரு தப்பான செயல் என்றே சொல்லிக் கொண்டுத்  திரிகிறார்கள். 

''எனக்கு அந்த புள்ளையைப் பிடிச்சிருக்கு''. தலைகுனிந்தே சொன்னேன். 

''செருப்பு பிஞ்சிரும். அந்த விளக்கமாத்தை எடு''. அப்பா மிரட்டினார். 

''இவன் நம்ம மானத்தை வாங்கவே வந்து பிறந்து இருக்கான், இவனை தலமுழுகினாத்தான் சரி வரும்''. அம்மா அலட்டாமல் சொன்னார். 

''வீட்டைப் பக்கம் வராதே, வெளியே போ நாயே''. அப்பாவின் வார்த்தைகள் நாகரிகம் அற்று தெரித்தது.

எனது அக்காவும், தங்கையும் என்னை பாவமாக பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது. 

''இங்க பாருவே, இனி அந்த புள்ளையோட சுத்தின உன்னை கண்டதுண்டமா வெட்டி போட்டுடுவேன்'' அப்பாவின் தீவிர குரல் என்னை எதுவும் செய்யவில்லை. தலைகுனிந்தே நின்று இருந்தேன். 

''பேசுறானா பாரு, ரண்டு பொட்ட புள்ளைக வீட்டுல இருக்கு மறந்துட்டியாவே'' அம்மா ஆயாசபட்டார். 

''சத்தியம் பண்ணுவே, இல்லைன்னா இப்பவே நாங்க செத்துப் போயிருவோம் அதோ அவள்களையும் சேர்த்துட்டு'' அம்மாவும் அப்பாவும் ஒரு சேர சொன்னார்கள். 

''இனி மேல் அந்த புள்ளையோட நான் சுத்தமாட்டேன்'' சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். 

இந்த பூலோக சரித்திரம், காதலுக்கு தரித்திரம். இந்த காதல் முன்னால் எதுவும் எம்மாத்திரம்? காதல் பற்றி நிறைய நிறைய படித்தேன். காவியங்கள், கதைகள், கவிதைகள் காதலைப் போற்றி சிறப்பித்துக் கொண்டிருந்தன. சகட்டு மேனிக்கு வராத இந்த காதல் ஒரு சரித்திரமாகவே தெரிந்தது. இந்த காதலுக்கு முன்னால் எதுவும் எனது கண்களுக்குத் தெரியாத போது, நீ இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன், நான் இல்லாவிட்டால் நீ செத்துவிடுவாய் என்றெல்லாம் படித்து முடித்து இருந்தேன். பல விசயங்கள் படிக்க படிக்க மனம் பக்குவம் கொண்டது. 

காதலர்கள் எல்லாம் அவசர குடுக்கைகளாக இருந்து இருக்கிறார்கள் என புரிந்து போனது. காதலில் விவேகம் மிகவும் அவசியம் என்பதை ஒரு காவியம் சொல்லிய விதம்தனை படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன். 

சத்தியத்தை மீற வேண்டிய சூழலை உருவாக்கிட நினைத்தேன். இந்த காதலுக்கு முன்னால் அந்த சத்தியம் எல்லாம் எங்க ஊரு முனியாண்டி சாமிக்கு இடப்பட்ட சர்க்கரைப் பொங்கல் என கருதினேன். 

ஒரு நாள் இரவு அதுவும் அமாவசை இருட்டு. அந்த புள்ளையை சந்தித்தேன். 

''என் வீட்டுல சத்தியம் வாங்கிட்டாங்கடீ'' என்றேன். 

''என் வீட்டுலயும் அதே பிரச்சினைதான்'' என தேம்பி தேம்பி அழுதாள். 

''நான் ஒரு திட்டம் வைச்சிருக்கேன், அதுபடி நடப்போம்'' என்றேன். 

''என்ன திட்டம், ஓடிப்போறதா?'' என அழுகையின் ஊடே கேட்டாள். 

நான் படித்த காவியத்தை அவளிடம் மிகவும் ரகசியமாக ஆந்தைக்கு கூட கேட்டு விடாமல் சொல்லிவிட்டு கிளம்பினேன். அவளும் சம்மதம் சொன்னாள். 

இரு வீட்டார் சம்மதம் சொல்லி காதலுக்கு மரியாதை செய்வது, கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தையுடன் வந்து நின்றவுடன் ஏற்றுக்கொள்வது என்றெல்லாம் இவ்வுலகில் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்யும். இன்னும் என்ன என்ன காரணங்கள் காட்டியோ  காதல் எதிர்ப்புகளை நிறைய சம்பாதிக்கும். நொண்டி சாக்குக்கு எல்லாம் காதல் கண்ணீர் விட்டு கொண்டு இருக்கும். நாங்கள் இது போன்ற அந்த பிரமையில் இருந்து வெளியே வந்து இருந்தோம். 

எனது யோசனைப்படியே அவளும் நடந்து கொண்டாள். இப்போதெல்லாம் ஊர்க்காரர்கள் எங்களைப் பற்றி பேசுவதை நிறுத்தி இருந்தார்கள். நாங்கள் நேரில் பார்த்தாலும், பார்க்காதது போன்றே சென்றோம். எதுவும் பேசிக் கொள்வது இல்லை. 

காதலுக்கு மொழி அவசியமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வார்கள். காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது மிகவும் கடினம் என்றெல்லாம் சொல்லித் திரிவார்கள். ஆனால் பேசாமல், பார்க்காமல் காதலை எங்களுள் வளர்த்துக் கொண்டிருந்தோம். பேசாவிட்டால் ஓடிவிடக் கூடியதா காதல்? பார்க்காவிட்டால் பறந்து விடக்கூடியதா காதல்? 

பாசமாக வளர்த்த என்னை அந்த புள்ளையை காதலித்தேன் என்ற ஒரே ஒரு காரணம் காட்டி தங்களை மாய்த்து கொள்வது என முடிவு செய்த அம்மாவும், அப்பாவும். காதலித்தேன் என ஒரு ஒரே காரணம் காட்டி என்னை மகன் இல்லை என்று முடிவு செய்த அவர்களின் செயல்பாடுகள் விசித்திரமானவை தான்.  

ஊர்ப்பழி வந்து சேருமே எனும் ஒரு அச்சுறுத்தலும், மகள்களை எப்படி கரை சேர்ப்பது என்கிற கண்றாவி கவலையும் இந்த காதல் எல்லாம் அருவெருப்பான விசயமாகவே இன்னமும் அவர்களுக்கு தெரிகிறது. இதில் கள்ளக்காதல், நொள்ளைக் காதல் வேறு. இன்னும் சில காலங்களில் நான் சொன்ன ரகசியத்தின் படி  நானும் அந்த புள்ளையும் நடந்து கொண்டு இருப்பதால் எனது பெற்றோர்கள், அவளது பெற்றோர்கள், ஏன் எங்கள் ஊரே மாறிவிடும். 

ரகசியம் சொன்ன காவியத்தின் சிறுபகுதி  இதுதான். 

என் பெயர் ராம். அவள் பெயர் சீதா. என் குலமும் அவளது குலமும் ஒன்று. என் பணமும் அவளது பணமும் ஒன்று. என் உறவினரும், அவளது உறவினரும் ஒன்று. தராசில் நிற்க வைக்க நானும் அவளும் எல்லா விதத்திலும் சமம். இனி எங்களுள் காதல் வரின் அதற்கு எதிர்ப்பு இல்லை. 

ஒரு பெண்ணை காதலிக்கத் தொடங்கிய மறுகணம் அவளை மட்டுமே காதலிப்பது என்பது கூடாது. அவளை சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அந்த பெண்ணும் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும். காதல் ஒருங்கிணைக்கும், உருக்குலைக்காது. 

காதலித்து திருமணம் புரிந்த பின்னரும் வரும் கருத்து வேறுபாடுகள், வெறுப்புகள் எல்லாம் காதலை மிகவும் கொச்சைப்படுத்துகின்றன. இவர்கள் காதலித்துதானே கல்யாணம் பண்ணினார்கள் என்றே கேள்வி எழுப்பபடுகின்றன. காலத்திற்கேற்ப நமது ஆசைகள் நிராசைகள் காதலை கொச்சைப்படுத்த தயங்குவதே இல்லை.  காதல் எப்படி வரும் என்றே எவருக்கும் தெரிவதில்லை. காதல் எப்படி போகும் என்றே எவருக்கும் புரிவது இல்லை. 

ஆனால்...

காதல் புரிந்து கொள்ளும். காதல், புரியாவிட்டால் மட்டுமே கொல்லும் .

Sunday 7 July 2013

பரிணாமத்தில் ராமர் போட்ட கோடு

எனது மனநிலையும், எனது செயல்பாடுகளும் என்னை மிகவும் வாட்டி எடுத்துக் கொண்டு இருக்கின்றன. எதற்காக நான் இப்படி இருக்கிறேன், எதற்காக இப்படி செயல்படுகிறேன் என்ற எண்ணம் என்னை சுற்றிக் கொண்டே வருகின்றன. என்னை எவரேனும் கட்டுப்பாட்டில் வைத்து இப்படித்தான் நான் வாழ வேண்டும் என தீர்மானித்து கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்களா என்றெல்லாம் என்னுள் தீவிர யோசனை சில நாட்களாய் வந்து கொண்டே இருக்கிறது. நானா இப்படி நடந்து கொள்வது என்கிற எண்ணம் என்னை உருக்குலைய செய்து கொண்டிருந்தது.

அப்போது 'பக்தா' எனும் அழைப்பு என்னை உலுக்கி விட்டது. என்னைத் தேடி எதற்கு இந்த சாமியார் வந்து தொலைய வேண்டும் என்ற எண்ணத்துடன் 'என்ன' என மட்டு மரியாதை இல்லாமல் கேட்டு வைத்தேன். 'நீ ஏதோ சஞ்சலத்தில் அல்லாடிக் கொண்டிருப்பது போன்று தெரிகிறதே' என்றார். 'யார் இந்த சாமியார், நான் சஞ்சலத்தில் உட்பட்டால் இவருக்கு என்ன' என எண்ணிக்கொண்டு 'உன்கிட்ட வந்து நான் ஏதாவது சொன்னேனா, பெரிசா கேட்க வந்துட்ட' என கோபத்துடன் அவரை நோக்கி சொன்னேன். 'நீ சொன்னால்தான் நான் வர வேண்டும் என்பது என்றில்லை, உனக்கு ஏதாவது நேரும் எனில் நான் அங்கே இருப்பது எனக்கு சௌகரியமான ஒன்று' என்றார் மேலும்.

'நா உன்கிட்ட பேச எதுவும் இல்லை, நீ பேசாம போயிரு' என கத்தினேன். சாமியார் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். 'போனு சொல்றேனில்ல' என மறுபடியும் உறுமினேன். சாமியார் வீட்டு வாசற்கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றார். 'போய் தொலையட்டும்' என்றே கோபம் தணிந்தேன்.

சிறிது நாழிகைக்குப் பின்னர் 'பக்தா' என்றே ஒரு அழைப்பு வந்து சேர்ந்தது. இம்முறை சாமியார் எதுவும் பேசாமல் நின்றார். 'என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்றேன். 'நீ சஞ்சலத்தில் உட்பட்டு இருப்பது எனக்கு சௌகரியமாக இல்லை, அதனால் ராமருக்கு அணில் செய்த சிறு உதவி போல் உனக்கு செய்யலாம் என்றே வந்தேன்' என்றார்.

'ராமர், அணில்' எனக்கு சாமியாரிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என தோன்றியது. 'அணில் அப்படி என்ன ராமருக்கு உதவி செய்தது?' என்றேன். 'லங்கேஷ்வரம் செல்ல ராமர் பாலம் கட்டியபோது, அணில் ஒரு புறம் மண்ணில் புரண்டு, உடம்பில் ஒட்டிய மண்ணை அடுத்த பக்கத்தில் சென்று கொட்டி விட்டு மீண்டும் மறுபுறம் வந்து மண்ணை உடலில் ஒட்டிக்கொண்டு அடுத்த பக்கம் சென்று கொட்டியது. அணிலின் இந்த செய்கையை கண்டு ராமர் மனம் நெகிழ்ந்து அந்த அணிலின் முதுகில்  மூன்று விரல்களால் தடவி கொடுத்தபோது விழுந்த கோடுகள் தான் அந்த வெள்ளைக் கோடுகள்' என்றார் சாமியார்.

அணில் கதை கேட்டு நான் நெகிழ்ந்து போனேன். ஒரு சின்ன அணிலுக்கு எப்படி அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்றே எனது மனம் நினைத்தது. 'என்ன யோசனை' என்றார் சாமியார். 'தன்னால் இயன்ற உதவியை அணில் நம்மால் என்ன ஆகும் என எண்ணாமல் செய்தது கண்டு மனம் பரவசமானது' என்றேன். 'எவருக்கேனும் துன்பம் நேர்கையில் அவருக்கு முடிந்த அளவு சிறு உதவி செய்தல் நலம்' என்றார் சாமியார். 'மனதில் எந்த சஞ்சலமும் இனி வேண்டாம்' என்றார்.

'ஆமாம் சாமி, இவ்வுலகில் எல்லா அணிலுக்குமா மூன்று கோடுகள் இருக்கின்றன' என்றேன். இந்த அணில் வம்சம் நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது. வெவ்வேறு வகையான அணில்கள் இவ்வுலகில் உண்டு. ஆனால் மூன்று கோடுகள் கொண்ட அணில்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் மட்டுமே உண்டு. வட இந்தியாவில் ஐந்து கோடுகள் கொண்ட அணில்கள் வகையும் உண்டு. சில பறக்கும் அணில்கள் கூட இந்த புவியில் உண்டு; என்றார் சாமியார்.

'ஆமாம் சாமி, இந்த ராமாயணம் நடந்த கால கட்டத்திற்கு முன்னர் இந்த மூன்று கோடுகள் கொண்ட அணில்கள்  இந்தியாவில், இலங்கையில் இல்லையா?' என்றேன். 'மனம் சஞ்சலம் ஆகாது, வெள்ளை அணில்களும் தற்போதைய காலத்திலும் உண்டு' என்றார் சாமியார். பட்டென விழித்துக் கொண்டேன்.

இனிமேல் இப்படித்தான் இருக்க வேண்டும், என்னைப் பற்றி எனக்குள் உயர்வான எண்ணம் வேண்டும் என்றே உறுதி கொண்டேன். அணில் ராமருக்கு செய்தது சிறு உதவிதான், எனக்கு செய்தது பெரும் உதவி. கோடுகள் போட அணில்கள் தேடுகின்றேன்.