Monday 15 July 2013

உடலில் புகுதல்

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 6 

எல்லாவற்றிக்கும் ஒரு பிராப்தம் இருக்கனும். இந்த பிராப்தம் இல்லாத பட்சத்தில் எதுவுமே சாத்தியம் இல்லை என்பதுதான் மனிதர்கள் சொன்ன தத்துவம். 

'விதிப்படியே எல்லாம் நடக்கும்' என்பதுதான் இந்த உலகம்  கண்டு கொண்ட விசயம். விதி-மதி என்றெல்லாம் பிரித்து சொல்வார்கள். ஆனால் மதி கூட விதிக்கு உட்பட்டதுதான். 

'எல்லாம் தீர்மானத்தின் பேரில் தான் நடக்கிறது' என்று 1991ம் வருடம் எழுதியபோது நாம் தான் இதனை எழுதினோம் என்கிற இறுமாப்பு இருந்தது, ஆனால் இதனை ஐன்ஸ்டீனும் சொன்னார் என கேள்விப்பட்டபோது ஏராளமான மனிதர்கள் இதே கருத்தை ஒருவேளை கொண்டிருக்க கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

'கவலையை விடு, நடக்கிறதுதான் நடக்கும்' என சொல்லும் போதே கவலைப்படுதல் கூட ஒருவகை விதிப்பயன் என்றே நினைக்க வேண்டி வருகிறது. 

'ஆண்டவனின் பெயரால் இதனை செய்கிறோம் என்பதுவும், சாத்தானின் பெயரால் இதனை செய்கிறோம் என்பதுவும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. எல்லாம் விதியின் வினைச்செயல். 

அஷ்டமாசித்திகளில் இந்த பிராப்தி எனப்படும் சித்தியின் மூலம் எல்லாவற்றையும் அடையலாம், அதாவது விரும்பியவை எல்லாம் கைகூடும் என்கிறார்கள். தகிதகித்துக் கொண்டிருக்கும் வெப்பத்தில் கூட எவ்வித பாதிப்பும் இல்லாமல் நமது உடலை அடையச் செய்ய விரும்பினால் சாத்தியம் என்கிறது இந்த சித்தி. எதிர்காலம் அறிந்து கொள்வது, பிறர் உடலில் புகுந்து கொள்வது, அமானுஷ்ய செயல்பாடுகள் எல்லாமே சாத்தியம் என்கிறது இந்த சித்தி. அதெப்படி சாத்தியம் என்றால் அதற்கு பிராப்தம் வேணும். அந்த பிராப்தம் தான் இந்த பிராப்தி சித்தி. இது சரியான அபத்தம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 

திருமூலர் கதையை பலரும் அறிந்து கொண்டிருப்பார்கள். திருமூலரின் கதையை திரித்து கூறுவதில் பலரும் கில்லாடிகளாக இருந்து இருக்கிறார்கள். கதைச் சுருக்கம் இதுதான். மாடு மேய்க்கும் மூலன் மரணம் அடைகிறான். மாடுகள் அவனது இறந்த உடலை சுற்றி அழுகின்றன. இதை தனது பிராப்தி சத்தியால் அறிகிறார் சித்தர். மாடுகளின் அன்பைக் கண்டு தனது உடலை ஓரிடத்தில் மறைத்துவிட்டு மூலனின் உடலில் புகுகிறார் சித்தர். இது பிராப்தி எனும் சித்தியால் வந்தது. அவர் இனி திருமூலர். நதிமூலம், ரிசிமூலம் பார்க்காதே என்பார்கள். 

இந்த கதையில் எண்ணற்ற கேள்விகள் எனக்குள் இருந்தாலும் அது எல்லாம் அவசியமற்ற ஒன்று என புறந்தள்ளி விடுவது சிறந்தது என்றே கருதி, இதே திருமூலர் கதையை இப்படித்தான் எழுத தோன்றுகிறது. 

''மூலன் என்பவன் மாடு மேய்க்கும் ஒரு சாதாரண மனிதன். அப்பொழுது சுந்தரர் எனும் சிந்தனையாளர், தெய்வபக்தியாளர் கயிலாயத்தில் இருந்து கிளம்பிய பயணத்தின் போது இவனை சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறார். அப்பொழது சுந்தரர், மூலனிடம் சிவன் பற்றி 'அன்பே சிவம்' போன்ற விசயங்கள் சொல்கிறார். மாடு மேய்த்தாலும் சரி, களை எடுத்தாலும் சரி மனதில் எழும் சிந்தனைகள் பாடல்களாக மாறுவது உண்டு. எத்தனையோ பேர்களிடம் சுந்தரர் விசயம் சொல்லி இருந்தாலும், இந்த மூலன் மிகவும் உன்னிப்பாக எல்லாவற்றையும் கேட்கிறான். 

மூலன், சுந்தரரின் சொற்பொழிவில் மயங்குகிறான், அவனது மனம் எல்லாம் சிவன் பற்றிய சிந்தனையிலும், மனிதர்களின் நலம் பற்றிய சிந்தனையிலும் புரள்கிறது. இப்பொழுது மூலன், சுந்தரரின் எண்ணத்திற்கு மாற்றப்படுகிறான்.
மூலன், தன்னுள் தான் ஒரு சாதாரண மனிதன் இல்லை, இவ்வுலகிற்கு சொல்ல நிறைய இருக்கிறது என உணர்கிறான். 

தனது மனைவியிடம் சென்று தான் சாதாரண மனிதன் இல்லை என்கிற விசயம் சொல்லி அதற்கு பின்னர் திருமந்திரம் போன்ற அருந்தகு விசயங்கள் பாடத் தொடங்குகிறான். மூலன், திருமூலர் ஆன வரலாறு இதுதான். மூலனுக்கு பிராப்தம் இருந்து இருக்கிறது. 

சுந்தரர், மூலனின் உடலில் எல்லாம் புகவில்லை. கறந்த பால் மடி புகா என்பதெல்லாம் அறிந்த விசயம், சிவவாக்கியர் குறிப்பிடுவது போல 'இறப்பன பிறப்பது இல்லை'. சுந்தரர், தனது எண்ணங்களை மூலனுக்குள் விதைத்தார். இப்படி எண்ணங்களின் ஆட்கொள்ளும் தன்மையது ஆண்டாளிடமும் இருந்தது. ஆண்டாள், ரங்கநாதனின் எண்ணங்களை தன்னுள் உருவாக்கிக் கொண்டாள். 

நமக்குள் நாம் உயரிய எண்ணங்களை உருவாக்கிட சொல்வதுதான் பிராப்தம். ஆமாம், எல்லாருக்கும் ஏனிந்த வாய்ப்பு இல்லை. அதுதான் விதிப்பயன். 

அஷ்டமாசித்திகள் எல்லாமே எண்ணங்களால் வயப்பட்டது. 'நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்பதெல்லாம் மிகவும் சாதாரணமாக சொல்லப்பட்ட வாக்கியம் இல்லை. நம்மில் பலர் பிறரின் சிந்தனைகளுக்கு உட்பட்டே இருக்கிறோம். 

ஹிப்னாடிசம், மூளை சலவை என்பதெல்லாம் இந்த பிராப்தி தான். தான் விரும்பியவற்றை அடைதல். அந்த விரும்பியவற்றை அடைய எந்த வழியும் சரிதான் என்கிற நிலைப்பாடு பேராபத்தில் முடிய வாய்ப்பு உண்டு. அதையெல்லாம் விதிப்பயன் என்றே சொல்லி செல்கிறார்கள். 

'சிந்தனைகள் பிராப்தி' 

சூரியனை தொட இயலுமா?

சுட்டெரித்துவிடும் 

அதே வெப்பத்தை தாங்கிக்கொள்ளும் உபகரணம் இருப்பின் சூரியனைத் தொடுவது எளிதுதான். அதுவே பிராப்தி. 

ஒன்றை பெற விரும்பினால், அதை அடைய அதற்குரிய தகுந்த முயற்சிகள் செய்திட காரியம் சித்தி கூடும் என்பார்கள். அந்த அஷ்த்மாசித்திகளில் ஒன்றுதான் இந்த பிராப்தி. விரும்பியவற்றை அடைதல். 

நல்லதை விரும்புவோம், நாடும், உலகுமும் செழிப்புற வாழ்வோம். 

No comments: