Friday 26 July 2013

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 7

சாபம் விடுவது என்பது முனிவர்களின் ஒரு தலையாய கடனாக இருந்து வந்து இருக்கிறது. அதாவது சாபம் விட்டால் அது பலித்து விடும் எனும் ஒரு அதீத நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தததுடன் மட்டுமில்லாமல் அந்த சாபத்தை கூட மாற்றி அமைக்கும் வல்லமை உடையவர்களாகவே அவர்கள் சொல்லப்பட்டார்கள். ஒருவரது வாக்கு அத்தனை சக்தி வாய்ந்ததா? என்பதெல்லாம் பற்றி ஆராய்ச்சி அவசியம் இல்லை எனினும், ஒருவரது சொல் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த கூடும் என்பது அனைவரும் ஓரளவு தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். 'வசவு பாடுதல்' எல்லாம் எதிர்வினைகளை அதிக அளவில் ஏற்படுத்தவல்லவை. கிராமங்களில் 'மண் வாரி தூற்றுதல்' 'காசு வெட்டி போடுதல்' 'செய்வினை செய்தல்' போன்ற காரியங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இப்படி நடக்கும், நடந்துவிடும் என்கிற நம்பிக்கையில் செய்யப்படுபவை. இப்படி செய்தால் அப்படி நடக்கும் எனும் ஒரு உணர்வு! எப்படி இந்த மனிதர்கள் முனிவர்கள், சித்தர்கள் பெரும் வல்லமை கொண்டவர்களாக மாறினார்கள்? அல்லது மாற்றம் கொண்டது போல் போற்றப்பட்டார்கள்?

இதுவரை எவரும் 'கல்லாக நீ கடவது' என சபித்து எவரும் கல்லாய் ஆனது கண்டில்லை. இந்த மனிதர்கள் எப்படி உருவானார்கள்? அல்லது எப்படி படைக்கப்பட்டார்கள்?

தற்போதைய மனிதர்கள் தோன்றிய வரலாறு கிட்டத்தட்ட 50000 ஆயிரம் வருடங்களில் இருந்து 100000 ஆயிரம் வருடங்களுக்கு உட்பட்டுதான் என்று வரலாறு குறிக்கிறது. அதுவும் மனித வழித்தோன்றல்கள் 5 மில்லியன் ஆண்டுகள் முன்னர் மற்றொரு உயிரினத்தில் இருந்து வேறுபட்டு வந்துள்ளது என்றே கணக்கு சொல்லப்படுகிறது. இந்த பூமியானது கடந்த 3 பில்லியன் கோடி வருடங்கள் முதற்கொண்டு உயிரினங்கள் வாழ துணை புரிவதாகவும், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகள் முதற்கொண்டு 5 பில்லியன் ஆண்டுகள் வரை இந்த பூமி உயிரினங்கள் வாழ வழி செய்யும் என்றே குறித்து வைக்கிறார்கள். இப்போது எழுதபட்ட விசயத்தில் எதையும் துல்லியமாக வரையறுத்து சொல்ல இயலாத நிலை இருப்பதை அறியலாம்.

இந்த பூமியில் நடைபெறும் நிகழ்வுகள் அடிப்படையில் உயிரினங்கள் சில மில்லியன்கள் வரை இருப்பதாகவும், அவை மாற்றம் அடைந்து வேறொரு உயிரின வடிவில் தோன்றுவதாகவும் படிமங்களின் ஆராய்ச்சி சொல்கிறது. வருடம்தோறும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் அழிவதாகவும், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றுவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவை பெரிய அளவில் உள்ள உயிரினங்கள் என சொல்ல இயலாது. சின்னசின்ன உயிரின மாற்றம் சாத்தியமே.

மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்? மனித இனம் அழியுமா? அப்படி அழியும் பட்சத்தில் வேறு எந்த உயிரினம் தோன்றும்?

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் போல எழுதி வைத்து இருக்கிறார்கள். அடுத்த பதிவில் அதைப் பார்க்கலாம்.

(தொடரும்)

No comments: