Sunday 30 August 2009

இலங்கை மாநகரம்

இதிகாச காலத்திலேயே
இன்னலுக்கு உட்பட்ட நகரம்
நாட்கள் பறந்த பின்னரும்
தொடரும் இன்னல்கள்

நிறமெல்லாம் ஒன்று தான்
நிலமெல்லாம் ஒன்று தான்
வினையேன் வந்து தொலைந்தது
வேறுபட்ட மொழி கொண்டதாலா
வேற்றுமை கண்ட இனத்தினாலா
புத்தர் தந்த எண்ணத்தில்
அன்பும் கருனையும்
தொலைந்து போனதாலா
கண்ணீர் விட்டு கதறுகின்றேன்
காக்கும் கடவுள் அவதரிப்பாராக.

தென்றல் சுதந்திரமாய்
உலாவிடும் தூய நகரம்
தீங்கினை நினையாது
தென்னை காய்த்து குலுங்கும்
கடலின் அலைகள் முத்தமிட்டு
கரையினை கட்டி தழுவிடும்
காதலர்களின் தலைநகரம்

புன்னகை சிந்தி
விருந்தோம்பலின் வெளிச்சமாய்
விளங்கிடும் புண்ணிய நகரம்
எல்லாம் கனவாய் இருக்கிறது
நேற்றைய தினமெல்லாம்
கனவாய் போகுமெனில்
இன்றைய தினமும்
இந்நகரத்தில் கனவாய் போகாதா

பூஞ்சோலையாய் இருந்த பூமியில்
பூக்களை கருக செய்வதும்
உரிமையுள்ள பங்கினை வேண்டி
உரக்க குரல் தரும்
உணர்வுகளை உரைய வைப்பதும்
கல்லிலும் மண்ணிலும் கட்டி புரண்டு
நிலவின் நிழலில்
கதைகள் கதைத்து
கனவெல்லாம் வளர்த்து
வாழ்ந்த நல்ல உள்ளங்களை
செந்நீர் வடிக்க செய்வதும்
இருக்கும் இனிய இடம் விட்டு
இன்னல் தரும் இடம் நோக்கி
விடை காணும் மனிதருக்கு
இது விதியா
அறிவில்லார் தரும் நீதியா.

அமைதி ஒரு நாள் வரும்
ஆயுதம் ஏந்தி
அவதியுரும் நாள் தொலையும்
அன்புடன் கதைத்து
ஆராத துயரம் தீரும்
கண்கள் காணும் வேற்றுமை
கடலில் கரைந்து போகும்

கரும்புகையில்லா வானத்தில்
மேகங்கள் கவிதை பாடி செல்லும்
மரத்தின் கிளையில் கனிகள்
பறவைகளுக்கு காத்து நிற்கும்
வளரும் பயிர்களுக்கு
வீரமிக்க செயல்கள் சொல்லி
வலிமையை கற்பிக்கும்
வாழ்வு நோக்கி
இன்னலையெல்லம் தாங்கி நின்று
இன்பத்தை இரு கைகளால்
அணைக்க வேண்டி
கண்ணீர் துடைக்க வழியின்றி
கலங்கி நிற்கும்
இலங்கை மாநகரம்
அமைதியின் வழியில்
சிறந்து விளங்கும்
உயிர் பெற்றதின் அர்த்தம் விளங்கும்.

------
எழுதிய ஆண்டு 2006!!!

Saturday 29 August 2009

கடவுளோடு காதல்

என்னில் முதன் முதலாய் காதல் உன்னோடு
பச்சிளம் குழந்தையாய் பால்மணம் மாறாத காதல்
பருவம் வந்தபின்னும் மாறவில்லை
உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்

நான் பாமாலை சூட்டும் போதெல்லாம்
வாய் திறந்து நீ பாராட்டியது இல்லை
மலர் எடுத்துச் சூடும் போதெல்லாம்
மறுத்து ஒதுக்குவதில்லை நீ
உன்மீது எனக்கு மனம் மாறா காதல்

பால் கொண்டும் நெய் கொண்டும்
அமிர்தம் கொண்டும்
அபிஷேகம் செய்தபோதெல்லாம்
அதனை நீ ருசித்ததும் இல்லை
மெய்மறந்து ரசித்ததும் இல்லை
அன்பு நெஞ்சம் உன்மீது என் அணையாத காதல்

உலகத்துக்கு எல்லாம் ஒளி தரும் உனக்கு
ஒரு சிறு தீபம் ஏற்றி உனக்குக் காட்டி
என் தீராத காதல் சொல்கிறேன்
ஏற்றுக் கொள்வாய் எம்பெருமானே

உன்னைத் தனி அறையில் பூட்டிவைத்து
யான் உறங்கச் செல்லும்போதெல்லாம்
என்னை நீ ஆட்கொள்ளமாட்டாயோ
என்னும் அளவில்லாத காதல் உன்னோடு
பரபிரம்மமே உனக்கு பணிவிடை செய்ய
எந்தன் காதலை ஏற்றுக்கொள்
இனி ஒரு பிறவியும் வேண்டிலேன்!

Friday 28 August 2009

கடவுள்

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பிறந்ததினால் நன்றி கூற
தலைமுடி காணிக்கை
கடவுள் பழக்கம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்
சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

கோவில்களின் வேலைப்பாடுகள் மத்தியில்
கையெடுத்து கும்பிட வைக்கும்
சிலையாய் கடவுள்

கடவுள் காட்சி தருகிறார்
மனிதர் காட்டும் வித்தைகள்

எங்கும் தேடாதே
ஒளிந்திருக்கும் உன்னில் கடவுள்
சொற்பொழிவாளரின் சொல்வன்மை

எல்லாம் கடந்து உள்ளவன்
எல்லை இல்லாதவன்
தவத்தினால் வருகை தந்தவன்
வரம் எல்லாம் அள்ளி தந்தவன்
வெறும் காட்சிகளாய் கதைகளாய் இன்று

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது
கடவுள் மனிதராய்
மனிதர்களே கடவுளாய்.

Thursday 27 August 2009

திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்!

பன்னிரண்டு வயதில் எங்கள் கிராமத்தில் அமர்ந்து எழுதப்பட்ட ஒரு கதை. நானும் எனது மாமா மகனும் அந்த கதையை எட்டு காட்சிகளுடன் எழுதினோம். கதையின் தலைப்பு மறந்துவிட்டது. திரைப்பட இயக்குநர் திரு.கே.பாலசந்தர் அவர்களுக்கு அனுப்பலாம் என முடிவு செய்தோம். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த நினைப்பை அப்படியே விட்டுவிட்டோம். இப்பொழுது அந்த கதை எங்கே போனது எனத் தெரியாது.

எனது மாமா மகனுக்கு இசைத்துறையில் மிகவும் ஆர்வம். கவிதைகளும் நன்றாக எழுதுவான். திரைப்படத் துறையில் சேர வேண்டும் எனும் ஆர்வம் அவனுக்கு இருந்தது. எனக்கு ஒரு பாடலாசிரியாராக வேண்டும் எனும் எண்ணம் இருந்தது.

எனது அண்ணன் கிராமத்தில் இருக்கும் சாவடி எனப்படும் ஒரு இடத்தில் வேஷ்டியைக் கட்டித் தொங்கவிட்டு ஃபிலிம் ரோல் மூலம் படம் காட்டியதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் மிகவும் வித்தியாசமாக நால்வர் சேர்ந்து ஒரு கதையை எழுதி பேசி டேப்பில் பதிவு செய்து பலருக்குப் போட்டுக் காட்டினோம். பொறுமையாகக் கேட்டவர்கள் 'மிகவும் நன்றாக இருக்கிறதே' எனப் பாராட்டுத் தெரிவித்தார்கள். இதனை உற்சாகமாக எடுத்துக் கொண்டு 'ஜெராகாரா புரொடக்ஸன்ஸ்' என நாங்களாகவே பெயர் சூட்டினோம். நால்வரின் பெயரில் முதல் எழுத்து மட்டும் கொண்டது அது. அந்த பெயர் மூலர் ஒரு கதையை வெளியிடுவதாக ஊரில் கைப்பட எழுதிய சின்ன சின்ன போஸ்டர் ஒட்டினோம். ஆவலுடன் பலரும் வந்தார்கள். நன்றாக இருந்தது எனவும் சொன்னார்கள்.

இப்படியே திரைப்படத் துறையில் எப்படியாவது காலடி பதித்திட வேண்டும் எனும் ஆவலில் திரைப்பட இயக்குநர் திரு.ஆபாவாணன் அவர்களுக்கு ஆறு பாடல்களை எழுதி அனுப்பினோம். அதில் நடிகர் திரு.விஜயகாந்த் அவர்கள் எனக்கு மாமா, மற்ற மூவருக்கும் சித்தப்பா என அறிமுகப்படுத்தி எனது மாமா மகன் எழுதிட அனுப்பினோம். பதிலே வந்தபாடில்லை.

படிப்பு விசயமாக அவரவர் நாங்கள் பிரிந்து சென்றிட புரொடக்ஸன்ஸ் பண்ணாமலேயே முடங்கிப் போனது. நான் வாடாமலர் எனும் கதையை எழுதினேன். அதனை தையல் தைப்பவரிடம் கொடுத்துப் படித்து கருத்துச் சொல்லக் கேட்டதும், அவரும் ஆவலுடன் வாங்கினார். இரண்டு வாரம் கழித்துச் சென்று கேட்டதும் பேப்பர் நன்றாக இருந்தது, அதனால் அதை துணி அளவுக்கு வெட்ட உபயோகப்படுத்திக் கொண்டேன் என்றார். எனக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது. வயது மூத்தவர் என்பதால் எந்தவொரு பதிலும் பேசாமல் வந்துவிட்டேன். நகல் எடுக்கும் வழக்கமில்லாததால் ஒரு கதை காணாமலேப் போனது. சில நாட்கள் பின்னர் அவராகவே என்னிடம் வருத்தம் தெரிவித்தார். துணி உருவாக்கும் அவருக்கு ஒரு கதைப் படைப்பு பெரிதாகத் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

நான் எழுதித் தந்ததை மேடையில் பேசி முதல் பரிசு வென்றான் நண்பன். கல்லூரியில் கவிஞனாகப் பார்க்கப்பட்டேன். ஆனால் அதெல்லாம் எத்தனை பொய் என்பது பலரின் படைப்புகளை இப்போதுப் பார்க்கும்போதும் சரி, எனது கவிதைகள், கவிதைகளே அல்ல என விமர்சனம் செய்த ஒரு இலக்கிய ஆர்வலரின் விமர்சனம் உண்மை தெரியவைத்தது. இப்போது கவிதைகள் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரட்டும் எனும் ஆர்வம் தான்.

நான் இலண்டன் வந்தபின்னர் எனது மாமா மகன் திரைப்படத் துறையில் சேர்ந்திட முயற்சி எடுத்து பின்னர் சரிவராது என கணினித் துறையில் படித்து முன்னேறி பட்டம் பெற்று லண்டன் வந்துவிட்டான். சில வருடங்கள் முன்னர் திரு.விஜயகாந்த் எனது சகோதரர் வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் அவரைப் பார்க்கச் சென்று இருந்தோம். அமைதியே உருவாக இருந்த அவ்விடத்தில் நான் எப்போதும் போல் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். அப்பொழுது திரு. விஜயகாந்திடம் சின்ன வயது சம்பவங்களைச் சொன்னேன். அது குப்பையில போய் இருக்கும் என்றார் சிரித்துக் கொண்டே. அது சரிதான். நல்ல வேளை, பாடல்கள் வெளியாகி குப்பைக்குப் போகவில்லை.

இப்படியாக திரைப்படத் துறையில் வாய்ப்புத் தேடாமலே எனது சிறுவயது மற்றொரு கனவான ஆராய்ச்சியில் என்னைச் சேர்த்துக் கொண்டேன். ஒருவேளை திரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால் சமீபத்தில் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு 'எப்படி இப்படியெல்லாம் வீணாக பணத்தைச் செலவழித்து மோசமாக படம் எடுக்கிறார்களோ' எனக் குறைபட்டுக் கொண்டது போல இல்லாமல் தரமிக்க படங்கள் எடுத்திருப்பேனா என எனக்குத் தெரியாது. பழைய பாடல்களை போலவே அர்த்தம் பொதிந்த புது பாடல்கள் என பாராட்டும்படி பாடல்கள் எழுதி இருப்பேனா எனவும் தெரியாது.

ஆனால் ஒன்று, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்துத் துறையில், ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சித் துறையில் எனது பங்களிப்பு கண்டு நானே குறைபட்டுக் கொள்கிறேன் என்பதுதான் உண்மை.

நுனிப்புல் பாகம் - 1 (2)


வாசன் வீட்டின் வாசலில் ஏறியதும், ‘’என்னப்பா இவ்வளவு நேரமா? பொழுது சாயும் முன்னே வீடு வர்ரதுதானே?’’ என தாய் ராமம்மாள் வாசனை செல்லமாக கடிந்து கொன்டு, வந்ததும் வராததுமா கதை சொல்லப் போறேன்னு போகாத, சாப்பிட்டுப் போ என வார்த்தைகள் வீசினார். வாசன் நேசித்தான். ‘’சரிம்மா’’ என்றவாறே ‘’அப்பா இன்னும் வரலையாம்மா’’ என கேட்டான் வாசன். ‘’வரலைப்பா’’ என்றாள் தாய். பதிலில் ஒருவிதமன சலிப்பு தென்பட்டது.


வாசனின் தாய் 3ம் வகுப்பு வரைதான் படித்து இருந்தார். தோட்டத்து வேலை மற்றும் வீட்டு வேலையென வாழ்க்கையில் தன்னை ஒடுக்கிக் கொண்டவர். முதல் வாசன், இரண்டாவது தேவகி.

வாசன் சுருக்கம் பற்றிய கவிதை வாசிக்கலானான்.


"
ஏழு வார்த்தைகளில்

எழுதபட்ட ஒவ்வொரு திருக்குறளில்

கருத்துக்கள் பரந்துகிடக்கும்

விவரிக்கமுடியாத சுருக்கம்

நடந்து செல்லும் தூரம்

அடையும் காலம் விட

பரந்து செல்லும் தூரம்

அடையும் காலம்

விவேக விஞ்ஞானத்தின் சுருக்கம்

ஒரு மைல் கல் தொலைவில்

கத்தியும் செல்லாத சப்தம்

கடல் தாண்டி சென்றடையும்

கண்ணுக்கு உட்படாத சுருக்கம்

இலக்கணம் தாங்கிய

மரபு கவிதை

கருத்துக்கள் தாங்கிய

புதுக்கவிதை போய்

வந்த ஹைக்கூ

வார்த்தைகளின் சுருக்கம்

பதினைந்து பிள்ளைகள்

கொண்ட குடும்பம்

ஒரு பிள்ளையொடு ஒடுங்கிபோனது

நிலத்தின் சுருக்கம்

அட விரிந்து பரந்த உள்ளம்

கொண்ட மனிதன் மனது

எதனின் சுருக்கம்?"


‘’
கவிதை புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பிச்சிட்டியா’’ என அம்மா அவனை சாப்பிட வரச் சொன்னார்.


வாசனின் தந்தை வியாபரம் செய்பவர். 5வது வரை படித்து இருந்தார். தோட்டத்தில் விளையும் காய்கறி பொருட்கள் காலை மாலை என பக்கத்து கிராமத்து, நகரத்து கடைகளுக்கு விற்பனை செய்பவர். அவர் பலரை அறிந்து வைத்து இருந்ததால் வாசனை அவர் வியாபாரத்திற்கு ஒருபோதும் அனுப்புவது இல்லை. தந்தையின் பெயர் ராமமூர்த்தி.


'நான் அப்பா வந்ததும் வந்து சாப்பிட்டுக்கிறேன்மா' என வெளியே நடந்தான் வாசன். அம்மா வார்த்தைகளை இறைந்தார் 'கேளுப்பா' இது தாய், 'வரேன்மா' இது வாசன். வாசனுக்கு இன்னும் பெரியவரின் வாசகம் பெரும் யோசனையாக இருந்தது. வாசன் குழந்தைகளுக்கு ஒரு சின்ன கதை சொன்னான். கவிதையின் விரிவாக்கம் அது. மனிதாபிமானம் என்ற சொல்லின் விதை அன்று குழந்தைகளின் நெஞ்சில் விதைக்கப்பட்டது.


‘’
என்னம்மா வாசன் கதை சொல்லிட்டு இனியும் வரலையா’’ என்றவாறே ராமமூர்த்தி வீட்டினில் நுழைந்தார். வாசன் வீடு நுழையும் போதெல்லாம் ராமமூர்த்தி காத்து இருப்பதில்லை. ராமமூர்த்தி வீடு நுழையும் போதெல்லாம் வாசன் வீட்டில் இருப்பதில்லை. இது அவர்களிடையே ஒரு மாலை நேர ஒப்பந்தமாக இருக்கும்.


‘’
வரேன்னு சொல்லிட்டு சாப்பிடாம கூட வெளியில போனான், இன்னைக்கு தோட்டத்திலே இருந்து தாமதமாகத்தான் வந்தான். அது சரி, என்னங்க இன்னைக்கு வியாபரம் எப்படி’’ என்றவளிடம், ‘’இன்னைக்கு நல்ல வியாபரம்தான்’’ என கூறி பணத்தை எடுத்துப் பத்திரபடுத்தச் சொன்னதுடன் கிணற்று அடிக்கு முகம் அலம்ப சென்றார்.


வாசனின் வீடு ஊருக்கு தெற்கே இருந்தது. கிழக்கு பார்த்த வாசல். சின்னதாய் வரவேற்பு அறை. பெரியதாய் ஒரு அறை. தனித் தனி அறைகளாய் பூஜை அறை ஒன்று, சமையல் அறை ஒன்று. மாடியில் மூன்று அறைகள். வீட்டின் பின்புறம் சின்னதாய் தோட்டம். ஒரு கிணறு. வாசன் தினமும் காலையில் கிணற்றில் தன் முகம் பார்க்கும் வழக்கம் உண்டு. சலனமில்லாத நீரினை ரசிக்க ஆரம்பித்து இரவு தூங்கும்முன் வரை அமைதியினை ரசிக்க நினைப்பவன்.


வாசன் வந்தான். ‘’அப்பா இப்பதான் வந்தீர்களா, சாப்பிடலாம்பா’’ என்றான் வாசன். உணவு பரிமாறப்பட்டது. சாப்பிடும்போது ராமமூர்த்தி எப்போதும் பேசுவதில்லை. என்ன தேவையோ அதை கேட்கவே பேசுவார், மற்றபடி விவாதங்களில் ஈடுபட விரும்புவதில்லை. வாசன் இதை நன்கு அறிவான். உண்டு முடித்ததும் ‘’அப்பா வினாயகம் பெரியவர் நம்ம தோட்டத்தை விலைக்கு கேட்டார் அதாவது கரிசல எடுத்துக்கிட்டு அதே அளவுக்கு செவல எடுத்துக்க சம்மதமான்னு சொன்னார்’’. ராமமூர்த்தி தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் முன்னர் தன் மகன் பேச்சைக் கேட்டதும் இவை இரண்டையும் எப்படி ஜீரணிப்பது என அயர்வுற்றார்.


‘’
வாசா நீ என்ன பதில் சொன்ன’’ என கேட்டார். தன்னை கலந்து ஆலோசித்து முடிவுதனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என எண்ணினாரோ என்னவோ உணராமல் தன் மகனைக் கேட்டார். ‘’நான் உங்களைக் கேட்டு சொல்றதா சொல்லியிருக்கேன்பா' என அவனது தந்தையின் முக்கியத்துவம் சொன்னான் வாசன்.


‘’
நான் கேள்விபட்டேன் அவரு அங்கு இருக்கிற நிலத்தை எல்லாம் விலைக்கோ இல்லை மாற்றுக்கோ கேட்டுக்கிட்டு இருக்காருனு’’ என்றார் தந்தை. ‘’அவரும் கணேசன் நிலத்தை மாத்திட்டேன்னு சொன்னாருப்பா. என்ன விசயத்திற்கு இப்படி செய்றீங்கனு கேட்டேன் ஒண்ணும் பதில் இல்லை, நாளைக்கு பேசுவோம்னு போய்ட்டார். நம்ம வடக்கு நிலம் ஒட்டி இருக்க காசி நிலம் கூட தர சம்மதம்னு சொல்லிட்டதா சொன்னார்’’ வாசன் வாக்கியம் நீண்டு கொண்டே போனது. வாசன் கூறிய விசயத்தில் இருந்து இந்த நிலத்தை விற்றுவிடுவோம் என சொல்லாமல் சொல்லும் வாசகம் போல் இருந்தது.


‘’
அதான் எனக்கும் புரியலப்பா, ஏகப்பட்ட நிலம் வைச்சிருக்கார், எதுக்கு கரிசல் நிலம் வேணும்னு கேட்கிறார்னு தெரியல விவரம் சொன்னாலாவது சரி செவல் கிடைக்குதுனு விடலாம். சரி பேசிப்பாரு’’ என நிலமாற்றம்தனை சம்மதம் தந்து விட்டது போல கூறினார். ‘’என்ன சொல்றீங்க, இதே பூமியில விளையற விளைச்சல் செவல்ல விளையுமா, இது தனிமதிப்புனு சொல்வீங்களே’’ என குறுக்கே பேசிய தாய் நிலம் மாற சம்மதிக்கமாட்டாள் எனப்பட்டது வாசனுக்கு.


‘’
யோசிக்க வேண்டிய விசயம்தான் ஆனா நிலத்துக்கு நிலம் பணமும் தந்தா வேணாம்னு சொல்ல வேணாம்னு நினைக்கிறேன். உழைக்கிற உழைப்பை உண்மையாகவும் உறுதியாகவும் உழைச்சா பலைவனத்துல கூட பசுமை புரட்சி செய்யலாம்’’ என்றார் தந்தை.


‘’அப்படின்னா பெரியவர்கிட்ட நாளைக்கு பேசி எல்லாம் முடிச்சிருவோம்' என மகன் கூறியதை தந்தை ஆமோதிப்பதுக் கண்டு தாய் சின்னக் கோபம் கொண்டார். ‘’என்னங்க சிலருக்கு, அவரு கேட்டாருன்னு பணம் அதிகம் வாங்கி நிலமாத்துரது சரியில்லை, என்னதான் இருந்தாலும் அது நாம பாடுபடுற பூமி’’ தாய் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.


சிலருக்கு சில விசயங்கள் சரியோ தவறோப் பிடித்து விடுகிறது, மாற்றங்கள் அவசியம் எல்லை என பழைய விசயங்களில் ஊறிப்போய் புதிய விசயம் திணிக்கப்படுவதை அறவே வெறுக்கிறார்கள். இதன் அர்த்தம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.


‘’
வாசா உன் அம்மாவை நீ சம்மதிக்க வை அப்புறம் இது பத்தி பேசலாம்’’ தன்னால் பேசுவதில் ஒரு உபயோகம் இல்லை, மனைவியையும் பேசிப் புரிய வைத்து ஒரு முடிவுக்கு கொண்டுவர எண்ணமில்லாதவராக அவரது பேச்சு இருந்தது. தாய் யோசிக்கலானார்.