Wednesday 12 August 2009

வாழ்வைத் தேடும் விழிகள்

முன்னுரை:-

'ஆரம்பத்தைப் பார்க்காதே முடிவினைப் பார்' என்பது சொல் வழக்கு. அதாவது ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது மரணம் ஒன்றுதான் உண்மையாய் குறித்து வைக்கும். எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள், வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், ஒவ்வொருவரிடமும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டும் எனும் ஆர்வமும், தேடலும் இருக்கத்தான் செய்கிறது. வாழ்க்கை ஒன்றாக தெரிந்தால் பிரச்சினை இல்லை, பலருக்கு வாழ்க்கை பலவிதமாக அல்லவா தெரிகிறது. பல வாழ்க்கை சொல்லும் தத்துவம் ஒரு வாழ்க்கை தான் என இந்த விழிகள் வாழ்க்கையை தேடுகிறது.

இயந்திர வாழ்க்கை:

'இப்பொழுதெல்லாம் வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது' என குறைப்பட்டு கொள்வோர் பலர் உள்ளனர். அதாவது செய்வதையே செய்து சிந்தனையற்று போய்விடும் தன்மை. ஆனால் செய்யும் முறையில் மாறுபாடு காண இவர்கள் முயல்வதில்லை. இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் சோகங்கள் மிஞ்சுகிறது. இந்த வாழ்க்கையைப் பார்க்கும் விழிகள் இயந்திர வாழ்க்கையில் அன்பு இணைந்திருக்குமானால் இந்த இயந்திர வாழ்க்கை இனிமையாகிவிடுமே என இதனைத் தேடலில் தேக்கி வைத்துக்கொள்கிறது. ஆக இயந்திர வாழ்க்கையைத் தேடும் விழிகள் இயந்திரத்தனத்தை தொலைக்க தயாராக இருக்க வேண்டும்.

இதில் அன்றாடம் உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலான விழிகள் தேடிக்கொள்கின்றன.

அமைதி வாழ்க்கை:-

''எல்லாம் அவன் அருள்'' என உள்ளமது எதிலும் பற்று கொள்ளாது இறைவனிடம் மட்டும் பற்று கொண்டு வாழ்வதாக சொல்லப்படும் அமைதி வாழ்க்கை. பொதுவாக இந்த அமைதியானது எல்லா வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என விரும்புவோர்கள்தான் அதிகம். இயந்திர வாழ்க்கையிலும் ஒரு அமைதி கிடைத்துவிட்டால் பெரும் மகிழ்வைத் தரும் என்பதில் ஐயமில்லை. எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டபடாமல், நிதானித்து எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடைய மனதினைத் தரும் அந்த அமைதி வாழ்க்கையை இந்த விழிகள் உயர்வாக கருதுகிறது, இதனை தேடலின் முதன்மையாக வைத்துக்கொள்கிறது ஆனால் இந்த அமைதி வாழ்க்கை ஏனோ விழிகளுக்கு எட்டும் விசயமாகவும், நடப்பிற்கு எட்டாத விசயமாகவும் இருப்பது ஆச்சரியம்.

சித்தர்கள், முனிவர்கள் என பலரும், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகாநந்தர், இரமணர் புத்தர் என பலரும் இந்த வாழ்க்கையை அணுகி பெரும் வெற்றியடைந்தவர்கள்.

சாதனை வாழ்க்கை:-

''இவ்வுயிர் மண்ணில் பிறந்தது சாதிக்கத்தான், சாதனையால்தான் ஒரு மனிதர் உலகறியப்படுவார்'' இப்படிப்பட்ட வாழ்க்கையைத் தேடும் விழிகள் வழியில் பல விச்யங்களைத் தொலைத்து விடுகிறது. ஆனால் தேடிக்கொண்ட சாதனை அளவை எட்டிவிடும் என சொல்வதற்கில்லை. வாழ்வில் சாதனையாளர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக பித்தோவன் எனும் மாபெரும் இசை மேதையை சொல்லலாம். இந்த சாதனையாளரை பிள்ளையாய் பெற பல சாதாரண மனிதர்களை இவர்கள் பெற்றோர்கள் பெற வேண்டியிருந்தது.

உலகத்தலைவர்கள் ஒரு சிலரே, ஆனால் அவர்களுக்கு கீழ் இருக்கும் மக்கள் கோடி. இப்படிப்பட்ட சாதனை வாழ்க்கையை தேடும் விழிகள் களைப்படைந்து விடுகின்றன. களைப்பிலும் தெளிவாய் பார்க்கத் தெரிந்த விழிகளுக்கு சாதனை வாழ்க்கை கிட்டிவிடும். இந்த சாதனை வாழ்க்கையில் வரும் சோதனைகளை அமைதியாய் அன்பாய் பார்த்து சென்றால் தான் இந்த சாதனை வாழ்க்கை சாதித்ததாக பொருள்படும்.

சி.வி.இராமன், தாகூர், பாரதியார், காந்தியடிகள், நியூட்டன், கலிலியோ, ஆபிரஹாம் லிங்கன், என பலரை இங்கு குறிப்பிடலாம்.

முடிவுரை:

வாழ்க்கை இதுதான் என முதலில் தேடும் விழிகள் விலகிப்போய் வேறு வாழ்க்கையைத் தேடிக்கொண்ட வரலாறு பல உண்டு. அப்படி வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பதை முழுவதுமாக உணர்ந்து அந்த வாழ்க்கையைத் தேடி வாழ்வதில்தான் விழிகளுக்கு சந்தோசம் தரும். எந்த ஒரு வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும், சாதாரண வாழ்க்கையிலிருந்து சாதனை வாழ்க்கை வரை, அன்பும் அமைதியும் கண்டு கொள்ளும் விழிகள் தான் ஒரு உண்மையான சத்தியமான வாழ்க்கையை வாழ்ந்ததாக கருத முடியும்.

'தேடும் விழிகளே, தேடலில் அன்பையும், அமைதியையும், கருணையையும் தொலைத்து விடாதீர்கள்' என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.

No comments: