Monday 3 August 2009

எழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு?

வலைப்பதிவர் திரு.கிரி அவர்கள் எனது இடுகை ஒன்றிற்கானப் பின்னூட்டத்தில் ஒரு விண்ணப்பம் வைத்தார். அது என்னவெனில், எனது எழுத்து நடையை எளிமையாக்கினால் எனது இடுகைகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதேயாகும்.

அவரது வேண்டுகோளுக்கிணங்க, எழுத்து நடையை எவ்வாறு எளிமையாக்குவது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்தபோது சில விசயங்கள் புலப்பட்டது. அவை,

1. சொல்ல வருவதை மிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் வண்ணம், எளிய தமிழ் சொற்கள் கொண்டு எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவது.

2. வாசிப்பவரைத் தேவையில்லாத குழப்பத்தில் ஆழ்த்தி அவர்களது நேரத்தை வீணாக்காமல் இருப்பது.

3. ஒரே சொல்லை அவசியமில்லாது மீண்டும் மீண்டும் உபயோகிக்காமல் இருப்பது.

4. அளவுக்கு அதிகமாக, நீண்ட தேவையற்ற வார்த்தைகளை உபயோகிக்காமல் இருப்பது. அதாவது வள வள என இல்லாது வளமையுடன் எழுதுவது.

5. எழுதியதைப் படித்துப் பார்த்து ஏதேனும் புரிகிறதா என சோதித்துப் பார்த்துவிட்டு பின்னர் இடுகையை வெளியிடுவது.

6. 'ஏதோ எழுதுகிறோம்' எனும் மனப்பக்குவத்தை அகற்றிவிட்டு 'சாதனை புரிய எழுதுகிறோம்' எனும் நம்பிக்கையுடன் எழுதுவது.

7. பயன் தரும் விசயங்களை பக்குவத்துடன் எழுதுவது.

8. வாசிப்பவர்களின் மனதில் நல்லெண்ணத்தையும், நல்லதொரு நம்பிக்கையையும், நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்துவது. இதுமட்டுமின்றி எழுதும்போது மிகவும் இயல்பாகவே எழுதுவது.

மேலே சொல்லப்பட்ட விசயங்களை மனதில் முன்னிறுத்தி எழுதுவோம் எனில் வாசகர்கள் பயன் அடைவார்கள் என்பது உறுதி. இத்தருணத்தில் வலைப்பதிவர் திரு.கிரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 comments:

கிரி said...

சார் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. நீங்கள் கூறிய அனைத்தையும் நான் பின்பற்றுகிறேன் அல்லது பின்பற்ற முயற்சி செய்து வருகிறேன்

என்னை குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி

Radhakrishnan said...

இதில் ஒரு மகிழ்ச்சியான விசயம் என்னவெனில் இந்த இடுகையை நல்ல இடுகை என யூத்புல் விகடன் நேற்றுச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தது. மிக்க நன்றி கிரி அவர்களே.