Saturday 1 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 2

வீட்டிற்கு வந்த கோவிந்தசாமி வீட்டுப் பத்திரம், தோட்டத்துப் பத்திரம் என எல்லாத்தையும் எடுத்து வைத்தார். அன்று மாலையே தனது மகன்களைப் பார்க்கச் சென்றார். அடுத்தநாள் காலையில் மகன்கள் இருவரையும் சந்தித்து தனது முடிவினையும், உயில் எழுதவும் ஏற்பாடு செய்யவும் கூறினார். அதற்கு அவரது மகன்கள் அந்த வீடும், தோட்டமும் தங்களுக்கு வேண்டாமென கூறிவிட்டனர். சொத்து எதுவும் வேண்டாம் எனவும் இனிமேல் நாங்கள் சென்று அதைப் பராமரிக்க இயலாது என கூறினர். கோவிந்தசாமி தனது மகளிடம் சென்று தனது எண்ணத்தைக் கூறினார். அவரது மகளும் வீடும் தோட்டமும் வேண்டாம் என சொன்னார்.

முதலில் பணம் தருகிறேன் என சொன்னவர்கள், நிலத்தையும் வீட்டையும் விற்று வரும் பணத்தைக் கொண்டு காசி செல்லுமாறு அம்மூவரும் சொல்லி வைத்தார்போல் கோவிந்தசாமிக்கு அறிவுரை கூறினர். கோவிந்தசாமி கோடியலூருக்கு அன்று இரவே திரும்பினார். வசந்தராஜுவைச் சந்தித்தார். தான் காசிக்குச் செல்வதாக அவரிடம் கூறியவர் நிலத்தையும் வீட்டையும் சுப்புராஜ் பெயருக்கே மாற்றித் தருவதாகவும் சுப்புராஜுக்கு உயில் எழுதித் தருவதாகவும் சொன்னார். இதைக்கேட்ட வசந்தராஜ் கண்கள் கலங்கியது.

வசந்தராஜ் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். காலங்காலமாக கூலி வேலை செய்து வருபவர். கோவிந்தசாமியின் வியாபாரத்திற்கு உதவியாக இருந்தவர். கோவிந்தசாமி பலமுறை இவருக்கு உதவிகள் புரிந்து இருக்கிறார். இப்படி கோவிந்தசாமி வந்து சொன்னதும் எதுவும் சொல்லமுடியாமல் வசந்தராஜ் நின்றார். நிலத்தை நீங்க திரும்பி வந்தப்பறம் உங்களுக்கே நான் தந்துருரேன், நீங்க ஏத்துக்கிறதா இருந்தா எங்களுக்கு எழுதிக்கொடுங்க என வசந்தராஜ் சொன்னதும் சுப்புராஜும் ஆமாம் என தலையாட்டினான். உங்க பேரிலேயே இருக்கட்டும், மனுசருடோ மனசு எப்படின்னாலும் மாறும் என வசந்தராஜ் மனைவி குருவம்மாள் சொன்னார். ஆனால் கோவிந்தசாமி தனது முடிவில் மாற்றம் இல்லை என சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

அடுத்தநாளே நிலத்தையும், வீட்டையும் சுப்புராஜ் பெயரில் எழுதிக்கொடுத்தார் கோவிந்தசாமி. தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும், வியாபாரம் செய்து கிடைத்த பணத்தையும் எடுத்துக்கொண்டார். ஆனால் இந்த நிலம், வீடு மாற்றமானது ஊரில் மற்ற எவருக்கும் தெரியாமல் இருக்குமாறு மிகவும் கவனமாக சற்று தொலைவில் உள்ள ஊரில் சென்று பத்திரம் எழுதினார். உயிலும் சுப்புராஜ் பெயருக்கே எழுதித் தந்தார்.

கோவிந்தசாமி காசிக்குச் செல்ல இருப்பதை அறிந்தார்கள் ஊர்மக்கள். இவருடன் செல்ல ஊரில் உள்ள சிலர் திட்டமிட்டு இவருடன் வருவதாக ஆயத்தமானார்கள். கோவிந்தசாமியும் சரியென சொன்னார். ஆனால் தான் நடைபயணம் செய்தும், பேருந்திலும், புகைவண்டியிலும் செல்ல இருப்பதாக சொன்னதும் அனைவரும் பின்வாங்கினர். கோவிந்தசாமி தனியாக செல்ல வேண்டியதாகவே போனது.

வியாபாரம் செய்தபோது வடநாட்டுக்காரர்களுடன் பழகி இருந்ததால் இந்தி மொழி கோவிந்தசாமிக்கு ஓரளவு தெரியும். அதனால் மிகவும் தைரியமாகவே கிளம்பினார். தன்னுடன் உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டார். வடநாட்டுல குளிரும் என சொன்னதைக் கேட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டார்.

ஊரில் இருந்த சிவன் ஆலயத்தில் சென்று வழிபட்டார். முதலில் நடைபயணமாகவே பயணத்தைத் தொடங்கினார். தனது இடுப்பைச் சுற்றி பணத்தைக் கட்டிக்கொண்டார். மிகவும் சாதாரண மனிதரைப் போல் பயணிக்கத் தொடங்கினார். வசந்தராஜ் தனது குடும்பத்துடன் தனது வீட்டிலேதான் வசித்தார்.

ஊரிலிருந்து வந்தவர் மாலையில் மதுரையினை அடைந்தார். அங்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் வந்து காசிக்கு செல்லும் வழியையும் எந்த ஊரெல்லாம் செல்ல வேண்டும் எனும் முழு விபரத்தையும் கேட்டு எழுதி வாங்கிக்கொண்டார். அவர்கள் எழுதித்தந்தது சற்று சுற்றுப்பாதையாகத்தான் இருந்தது. கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். நடைபயணத்தால் கலைத்தவர் அந்த கோவிலிலே சற்று நேரம் வெளியில் சாய்ந்தவாரே தூங்கினார். காசியில் இருந்த அந்த புனித ஆலயம் மிகத் தெளிவாக கனவில் தெரிந்தது. விழித்தவர் பேருந்தினைப் பிடித்து சென்னைக்குப் பயணமானார். பேருந்திலே நன்றாகத் தூங்கினார். சென்னையை பேருந்து அதிகாலை அடைந்தது. கோவிந்தசாமி தன்னிடம் இருந்த பணத்தைக் காணாமல் போனது கண்டு மனம் தவித்தார்.

(தொடரும்)

2 comments:

Raju said...

இரண்டாவது பகுதியும் அருமை.
மூன்றாவதுக்கு செல்கின்றேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி டக்ளஸ் அவர்களே.