Saturday 1 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 1

கோடியலூர் கிராமத்தின் வடக்குத் தெருவில் வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார் கோவிந்தசாமி. அவருக்கு இப்போது அறுபது வயதாகிறது. இவரது மனைவி ஓரிரு வருடங்கள் முன்னால்தான் வைகுண்ட பதவி அடைந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகி நகரங்களில் நல்ல வசதிகளுடன் குடியேறிவிட்டார்கள். எப்போதாவது இவர் நினைத்தால் மகன்கள் வீட்டிற்கோ, மகள் வீட்டிற்கோ சென்று சிலநாட்கள் தங்கிவிட்டு வருவது இவரது வழக்கம். அங்கு செல்லும்போதெல்லாம் மிகவும் அன்புடனே இவரை அவர்கள் நடத்துவார்கள். அவர்களும் இந்த கோடியலூருக்கு வந்து தந்தையைப் பார்த்துச் செல்வது வழக்கம்.

இவர் கோடியலூரிலே வியாபாரியாகத்தான் வேலை செய்து வந்தார். கோழி வியாபாரம், பருத்தி வியாபாரம், ஆடு வியாபாரம், என அனைத்து வியாபாரங்களிலும் கொடிகட்டி பறந்தார். மிகவும் நேர்மையான மனிதர். வியாபாரம் என்றால் லாபம் பார்க்கும் தொழில்தான் எனினும் கொள்ளை லாபம் பார்ப்பதை அறவே வெறுத்தவர். ஆடம்பரமற்ற வாழ்க்கையையும், அமைதியான வாழ்க்கையையும் விரும்பியதால் எதிலும் சிக்கனமாகவே இருந்தார். சிறு வயதில் இவர் கண்ட ஒரு கனவானது பலமுறை திரும்ப திரும்ப வந்து போயிருந்தது. இவர் அதை வெறும் கனவுதான் என புறக்கணித்து இருந்ததாலும் அந்த கனவு இன்னும் இவரை வாட்டிக்கொண்டுதான் இருந்தது. காசிக்குச் செல்லவேண்டும் எனும் ஆசை இவருக்கு பலநாட்களாக இருந்தும் வந்தது. கனவும் ஆசையும் ஒன்றாக இருந்திட்டாலும் வியாபாரத்திலே மனம் ஒட்டி இருந்ததால் எங்கும் செல்லவில்லை.

தூங்கிக் கொண்டு இருந்த கோவிந்தசாமிக்கு மீண்டும் அதே கனவு வந்தது. காசிக்குச் செல்வது போலவும் அங்கே புனிதத் தலத்தின் அருகில் ஒரு புதையலை இவர் எடுப்பதாகவும் கண்ட கனவு மீண்டும் வந்துவிட விழித்து எழுந்தார். ஏன் இந்த கனவு தன்னைத் தொடர்ந்து வருகிறதே என சலிப்புடன் எழுந்து தனது சிறு தோட்டத்திற்குச் சென்றார்.

இந்த தோட்டம் இவரது உழைப்பில் பல வருடங்களுக்கு முன்னர் வாங்கியது. அதிக நிலங்கள் வாங்காமல் இருந்த நிலத்திலே பயிர்செய்து வரும் பணத்தில் சமூக சேவை செய்தும் பிள்ளைகளைப் படிக்க வைத்தும், மனைவியை அன்புடன் கவனித்தும் வந்த இவருக்கு இந்த கனவு இடைஞ்சலாகத்தான் இருந்தது.

நிலத்தில் பயிர் செய்து இருந்த மிளகாய்ச் செடியைப் பார்த்தார். மிகவும் நன்றாக வளர்ந்து இருந்தது. தென்னை மரம் மிகவும் செழிப்பாக வளர்ந்து காட்சி தந்து கொண்டிருந்தது. வாழை மரங்கள் வளப்புடன் இருந்தது. இப்படியாக ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டே வந்தவர் இதையெல்லாம் விட்டுவிட்டு இனிமேல் காசிக்குப் போய் புதையல் எடுத்து என்ன செய்யப்போகிறோம் என பேசாமல் தோட்டத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒருமுறை இவரது மனைவியிடம் கூட இந்த விசயத்தைச் சொல்லிப்பார்த்தார். அவர் போகலாம் ஆனா பிள்ளைக என சொல்லி வேண்டாம் என மறுத்துவிட்டார். இப்படியாக ஆசை வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தால் காசி பயணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. போன மாதம் கூட மகன்களிடமும், மகளிடமும் சொன்னபோது சிரித்துவிட்டார்கள். காசிக்கு போகிற செலவு நாங்க தரோம் ஆனா எங்களால இப்போ காசிக்கு வர முடியாது என கூறிவிட்டார்கள்.

தோட்டத்தில் அமைதியாக அமர்ந்துவிட்டார் கோவிந்தசாமி. பலமான யோசனையாக இருந்தது. சின்னத் தோட்டம் எனினும் வயதாகியதால் அவர் தோட்டத்து வேலைக்கு என ஒரு ஆள் நியமித்து இருந்தார். அவன் கோடியலூர் கிராமத்தில் வசிக்கும் வசந்தராஜுவின் இளைய மகன் சுப்புராஜ். தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த சுப்புராஜை அழைத்தார் கோவிந்தசாமி. அவனுடன் சிறிது நேரம் தோட்டம் பற்றி பேசிக்கொண்டு இருந்தவர் அனைத்தையும் கவனித்துக்கொள்ள இயலுமா எனக் கேட்டார். அவனும் சரி என சொன்னான். மனதில் காசிக்குச் செல்வது என முடிவெடுத்தார் கோவிந்தசாமி.

(தொடரும்)

2 comments:

Raju said...

அருமையா எழுதி இருக்கீங்க ஸார்..!
சூப்பர்.

Radhakrishnan said...

மிக்க நன்றி டக்ளஸ் அவர்களே.