Showing posts with label ட்விட்டர். Show all posts
Showing posts with label ட்விட்டர். Show all posts

Monday 15 May 2017

திருநெல்வேலி ட்வீட்டப் கவிதை - TnMegaTweetup2017

டிவிட்டரில் எழுதும் தமிழ் கீச்சர்கள் வருடந்தோறும் ஒருமுறை ஓரிடத்தில் ஒன்று கூடி விழா எடுப்பது வழக்கம். இதற்காக கவிதை எழுதி பேரும் புகழும் பெற வேண்டும் என்பது என்னுடைய பேராசைகளில் ஒன்று. நான் டிவிட்டரில் எழுத ஆரம்பித்த ஆண்டு ஆகஸ்ட் 2013. அதற்கு முன்னரும் விழா நடந்து இருக்கிறது. ட்விட்டரில் சேர்ந்த பிறகு எழுதிய முதல் எழுத்து இது  அதற்குப்பிறகு ஒரு கதை எழுதி அப்படியே நிறுத்தி வைத்து இருக்கிறேன். 
எவ்வளவு விளையாட்டுத்தனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் எதற்கு இதையெல்லாம் ஒரு பெரிய விசயமாக கருதக்கூடாது என நினைக்க வைத்த கற்றறிந்த கயவர்கள் பற்றி எழுதியது. 



திருப்பூரில் நடந்தபோது நான் எழுதவில்லை 

இம்முறை இத்திருவிழா திருநெல்வேலியில் நடந்தது. நண்பர் பாண்டித்துரை அவர்களிடம் கவிதையை கொடுத்து அனுப்பினேன். கவிஞர் திரவியம் அவர்கள் கவிதையை சிறப்பாக வாசித்தார்கள். அவர்களுக்கு நன்றி. விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருமளவுக்கு ஒருங்கிணைப்பைச் சரியாகச் செய்து இருந்தார்கள் என உறுதியாக சொல்லலாம். வாழ்த்துக்கள். 

ஒரு உறுத்தலான விசயம், அதுதான் குறை சொல்லாமல் இருக்க இயலாதே, இந்த அசைபடத்தில் ஒலிக்கும் சில குரல்களை கேளுங்கள் நான் சொல்வது உங்களுக்குத் தெரிய வரும் அப்படி இல்லாதபட்சத்தில் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவும்.   

எனக்குள் எப்போதுமே இப்படியொரு எண்ணம் எப்போதும் உண்டு அதாவது ஒன்றை உயர்த்திப் பேச மற்றொன்றை தாழ்த்திப் பேச வேண்டிய அவசியமே இல்லை மேலும் ஒன்றை உயர்த்திப் பேசினால் மற்றொன்று தாழ்ந்தது என்ற பொருளும் இல்லை. அதை இந்தக் கவிதையில் தவறவிட்டது போல இருக்கிறது. ஆனால் இதை கவிதை என்று இலக்கியவாதிகள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், அதுவரைக்கும் பரவாயில்லை. அடுத்தமுறை இத்திருவிழா பாண்டிச்சேரியில். அதற்கும் இப்போதே வரிகள் யோசிக்கத் தொடங்கி  இருக்கிறேன். 


அசைபடத்தில் கவனித்தால் எனது பெயர், நான் வசிக்கும் இடம் எல்லாம் மிகவும் தவறாகவே சொல்லப்பட்டு இருக்கிறது, இது என்னுடைய தவறுதான். இராதாகிருஷ்ணன், லண்டன் என எழுதித் தந்து இருக்க வேண்டும். இப்படித்தான் எதையுமே முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் எவர் என ஒரு விபரமும் புரியாமல் அந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும். எவருடன் பழகுகிறோம், எவருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது கூட பல நேரங்களில் தெரியாது. நாம் எழுதுவதை எல்லாம் ஏதோ  இந்த உலகத்தையே மாற்றி அமைத்து விடும் வலிமை கொண்ட சொற்றொடர்களாக எண்ணி வாதிட்டு கொண்டு இருப்பார்கள், எரிச்சல் அடைவார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக மன உளைச்சல் அடைபவர்களும் உண்டு. எப்படி இருப்பினும் முகம் காட்டாதவர்கள் மத்தியில் முகம் காட்டும் சிலர் கொண்டாடும் திருவிழா இது. எனது கவிதை எப்போதும் தொடரும். 


நெல்லைக்கு ஒரு வாழ்த்து

நெல்லுக்கும் திரு என மரியாதையிட்டு
அன்பின் வேலியால் கட்டப்பட்டு
நெல்லையப்பர் காந்திமதி சுவாசிக்கும்
ஊரின் பெருமை உரக்கச் சொல்வேன்
இரக்கமனம் கொண்ட மக்கள் உள்ள
தாமிரபரணி ஆறு புகழ் கொண்ட
திருநெல்வேலி மிகச் சிறந்த ஊரு

அன்பைத் தொல்லையாய் எவரும்
இங்கே கண்டதுமில்லை
பண்பைத் தொலைத்து எவரும்
இங்கே வாழ்வதும் இல்லை
தமிழ்ச்சொல்லை சொல்லும் விதத்தில்
இத்தரணியில் எவருமே இவர்களுக்கு
ஓர் நிகருமில்லை

நெல்லையின் பெருமையைச் சொல்லவே
எல்லையில்லா புகழ்கொண்ட தமிழ்
நாடினேன்
இல்லையென சொல்லாது நல்விசயங்கள்
செய்யும் இதயம் கனிந்த மக்களை
தன்னுள்ளே கொண்ட நெல்லையில்
குடிபுகுந்தேன்

நெல்வளம் கொண்ட நகரம்
சொல்வளம் கொண்ட நகரம்
தேவாரப் புகழ் பெற்ற திருத்தலம்
எம்சிவன் நடனமிட்ட தாமிர திருச்சபை
இனிப்பின் சுவை அல்வா
நெற்கதிர் அறுக்கும் அரிவாள் – நெல்லை
புகழ் பாடுவேன்

தமிழின் வீரம் சொன்ன நெல்லை
பாளையக்காரர்கள் வலம் வந்த எல்லை
தாமிரம் நல்ல மின்கடத்தி
நாமும் இங்கே கூடினோம் தமிழ் கடத்தி
நமது புலமையைச் சொல்ல
நெல்லைபோல ஒரு இடமும்
இல்லை

எழுத்தால் அறிமுகம் ஆனோம்
கருத்தால் மனதில் கூடினோம்
நம் நட்பை உலகறியச் செய்து
இதை எந்த நாளும்
நல்வழியில் தொடர்வோம்
வளர்வோம் வாழ்வோம்
வாழ்க தமிழ்




Wednesday 24 June 2015

வெட்டித் தருணங்கள் - 4 (டிவிட்டர் உலகம்)

பகுதி - 3   இனி... கதையில் வருவன எவரையும் குறிப்பிடுவன அல்ல. உங்களை குறிப்பிடுவதாக நீங்களாக நினைத்தால் ஒன்று மாறிக்கொள்ளுங்கள், கதையை மாற்ற இயலாது. 

4. ''நன்மையையும் தீமையும் கலந்த ஓர் நிழல் உலகம்''

ஒரு மாதம் நன்றாக கவனித்தேன். நிறைய படித்த மேதாவிகள் கண்ணுக்குத் தென்பட்டார்கள். அந்த ஒரு மாதத்தில் நான் அமைதியாக கவனித்தபோது ஒவ்வொருவனும் கேவலமாக நடந்து கொண்டதை இங்கே எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அப்போது நான் எதுவுமே எழுதாமல் இருந்தேன். ட்விட்டரில் டைம் லைன். நேரடி தகவல் தொடர்பு என இருவகை இருந்தது. இதில் என்னைப் பின்தொடர்ந்த ஒருத்தி என்னிடம் நேரடி தகவல் மூலம் படு கேவலமாக பேசினாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவளின் நோக்கம் ஒரு விலைமகளை விட கேவலமாக இருந்தது. இவள் எல்லாம் படித்ததற்கு செத்துப் போயிருக்கலாம் என்றே எண்ணினேன். எனது ஆசைகளைத்  தூண்டி சபலம் கொள்ளும் கயமைத்தனம் அது. நல்லவேளையாக நான் எதுவும் திரும்பி பேசாமல் இருந்தபோதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. அது என்னவெனில் பேக் ஐடி எனும் மடத்தனம்.

அது என்னவென கேட்கிறீர்களா, அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் பெயர் கொண்டு அற்பத்தனமாக நம்மிடம் நடந்து கொள்வான். எனக்கு என் தலைவர் விஜய் பற்றியே பெருமை பேச நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு கேவலமான எண்ணம் கொண்ட கொடிய மிருகங்கள் நடமாடும் தளம்  ட்விட்டர் என எனக்குத் தெரியவில்லை. டிவிட்டருடன் சேர்த்து பேஸ்புக் திறந்து வைத்தேன். அதில் தானத்தலைவர் தங்கத்தலைவர் இளைய தளபதி விஜய் அவர்களின் படத்தை வைத்து கொண்டேன். ஒவ்வொரு பாடலாக அதில் எழுதுவது அப்போது வழக்கமாக்கி கொண்டேன்.

இந்த ட்விட்டரின் டைம் லைனில் பெண்ணின் கணவன், பிள்ளை, அம்மா அப்பா என கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் கண்டேன். ஹாஷ்  டாக் அதாவது எழுதி உலக அளவில் ட்ரென்டு  ஆக்குவது என இருந்தது தெரிய வந்தது. முதலில் =vijaysuperstar என ட்ரெண்டு பண்ணினேன். என்னைக் கண்டு பல விஜய் ரசிகர்கள் பின் தொடர்ந்தார்கள். அஜீத் ரசிகர்களின் மனம் என்னைக் கண்டு பொங்கியது. சிலர் என்னை அசிங்க அசிங்கமாக பேசினர் . நானும் அசிங்கம் அசிங்கமாக பேசி வைத்தேன். நான் எதற்கும் சளைத்தவன் அல்ல என என்னைக் கண்டு மிரள வேண்டும் என திட்டமிட்டேன். நிறைய தத்துவங்கள் எல்லாம் அதில் வலம்  வந்தன. அதில் சாக்கடை கல் பன்றி யானை கூட்டாஞ்சோறு கறிவேப்பிலை என்றெல்லாம் வெளியில் கேள்விப்பட்ட விஷயத்தை எழுதி  தான் பெரிய சிந்தனை முத்துக்களாக காட்டிக்கொண்டார்கள். தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்ளும் கயமைத்தனம் கூட்டம் ஒன்று இருந்தது.

இவர்களில் எவரேனும் நல்லவர் கண்ணுக்குத் தென்பட மாட்டாரா என நினைத்தபோது ஒரு பெண் பழகினாள். ட்விட்டரில் 140  எழுத்துகள் மேல் எழுத இயலாது. நேரடி தகவல் பண்ணாமல் டைம் லைனில் எழுதினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''தாமரைச்செல்வி, நீ எந்த ஊரு?''

''மதுரை, நீ எந்த ஊரு?''

''மதுரை''

''மதுரையில் எங்க?''

''மேலமாசி வீதி''

''நானும் மேலமாசி வீதி''

''மேலமாசி வீதியில் எங்க?''

அவ்வளவுதான். அத்துடன் அவளுடன்  பேசுவது நின்று போனது. அதற்கடுத்து அவளது ஐடி என்பார்கள் அதை காணவில்லை. என்னவென அறிந்து கொண்டபோது டீஆக்டிவேட் அதாவது ட்விட்டர் கணக்கை மூடிவிடுவது. ஆனால் தினமும் தானைத்தலைவர் விஜய் அவர்களை கேவலப்படுத்தி எழுதும் கூட்டம் அதிகரித்து வந்தது. எதற்கு எடுத்தாலும் தலைவர் விஜய் அவர்களை பேசிய கூட்டம் மிரளும்படி எனது நடவடிக்கை இருந்தது.

அப்போதுதான் ஒரு பெண் பச்சை பச்சையாக டைம் லைனில் எழுதினாள். அருவருக்க வைக்கும் வார்த்தைகள். அவளது செயல்களைப் போற்றிப் பாட ஒரு கூட்டம் உருவாகியது. ஆண்கள்தான் பச்சையாக எழுத வேண்டுமா என அந்த பெண் எழுதியதை ஆதரிக்கும் கூட்டம். ஆனால் அந்த பெண் பெண்ணல்ல ஆண் என்றே பலர் சொல்லிக்கொண்டார்கள்.

முகம் மறைத்த சுதந்திரம் வக்கிரம் என்ற வார்த்தை ட்விட்டர் கற்றுத் தந்தது. வக்கிரம் நிறைந்த கூட்டம் ஒன்று இருந்தது. இணையம் ஒரு ஆபத்தானது இந்த ட்விட்டர் கொடியது என எனக்குள் எண்ணம் தோன்றியது.

அப்போது திடீரென் வேறொரு பெண் வந்து பேசினாள்.

''உன் பேரு என்ன?''

''விஜயபாண்டி, உன் பேரு என்ன?''

''சுந்தரி, உன் ஊரு என்ன?''

''மதுரை, மேலமாசி வீதி,உனக்கு''

''திருச்சி, சுப்பிரமணியபுரம்''

எனக்கு இவள்தான் தாமரைச்செல்வி என ஒரு சந்தேகம் வந்தது. சரி என அவளது நேரடி தகவல் சென்று நீதானே தாமரைச் செல்வி என்றேன். யார் எது என சமாளித்து பேசியதால் பேசாமல் விட்டுவிட்டேன்.

தினமும் அஜீத் விஜய் சண்டை. அதோடு ராஜா ரகுமான் சண்டை. அதையும் தாண்டி ஆத்திக நாத்திக சண்டை. இந்த எல்லா சண்டைகளிலும் நான் பங்கேற்று கொண்டு இருந்தேன். விஜயபாண்டி என்றாலே வந்துட்டாண்டா என சொல்லும் அளவுக்கு இருந்தது. எனக்கு பெண் ரசிகைகள் ஆதரவு அதிகம் இருந்தது. இதில் பெண்கள் சேர்ந்து சரிக்கு சரியாக எழுதினார்கள். நான்கே மாதத்தில் ஐந்தாயிரம் பேர் பின்தொடர்ந்தனர். நான் இருநூறு மேல் எவரையும் பின்பற்றாமல் இருந்தேன்.

ஆனால் டாக், டைம்லைன் , லிஸ்ட் என பிறரின் எழுதுவதை படித்து கண்டமானிக்கு எழுதினேன். அப்போது ஒழுக்க சிகாமணிகள் இப்படி எழுதினால் க்ரைம் பாயும் க்ரைம் ஆயும் என்றார்கள். என்னை பேசியவனை திருத்தப் பாருங்கடா என சொன்னதும் ஒதுங்கினார்கள். நான் சட்டத்திற்கு புறம்பாக எழுத ஏதும் அங்கு இல்லை.

அங்கொன்று இங்கொன்று பார்க்கையில் பெண்ணியவாதிகள் என சிலர் சொல்லிக்கொண்டு அலைந்தார்கள். இந்த பெண்ணியவாதிகள் எல்லாம் பெண்ணியவியாதிகள் என குற்றம் சொல்லப்பட்டு இருந்தது. அதிலும் என்னை அட்டென்சன் சீக்கர் என ஒரு முத்திரை குத்தினார்கள்.

நான் டிவிட்டரில் பேஸ்புக்கில் இருப்பது எனது கல்லூரியில் தெரிய ஆரம்பித்தது. சிவகுமார் என்னை குறி வைத்து தாக்க ஆரம்பித்து இருந்தான். ஆனால் நாள்பட நாள்பட நான் சுந்தரி மீது காதல் கொள்ள ஆரம்பித்தேன். பத்து நாட்கள் தினமும் அவளுடன்  ஒரு அரை அரை மணி நேரம் நேரடி தகவலில் பேசினேன். ஒருநாள் சுந்தரி என்னிடம் நேரடி தகவலில் பேசியபோது

''நான் அஜீத் ரசிகை''

''செருப்பால அடி, ஒழுங்கா விஜய் ரசிகையா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''போடா நாயே, நீ அஜீத் ரசிகனா மாறு, இல்லை என்கிட்டே பேசாதே''

''யாரடி நாய்னு சொன்ன''

''உங்கப்பனையா சொன்னேன், நான் பொண்ணே இல்லை''

எனக்குத் தூக்கிவாரி போட்டது. டிவிட்டரில் ப்ளாக் என்று ஒரு வசதி  உண்டு. பிடிக்கவில்லை எனில் ப்ளாக் பண்ணிவிடலாம். அவள் அதாவது அவன் என்னை ப்ளாக் பண்ணினான். அப்போதுதான் பல அஜீத் ராஜா ரசிகர்கள் என்னை ப்ளாக் பண்ணி இருந்தது என தெரிய வந்தது. எல்லா அஜீத் ரசிகர்களை ராஜா ரசிகர்களை ப்ளாக் பண்ணினேன். அப்போது சண்டை போட முடியாமல் இருந்தது.

ஒரு நல்லவன் ஐடி தொடங்க அப்போதுதான் யோசித்தேன். ஆனால் இந்த நல்லவன் ஐடி எனது விஜய் கொண்டை வெளியே தெரியாமல் எப்படி மறைப்பது என திட்டம் போட்டேன்.

தினமும் எப்படியும் ஒரு நான்கு மணி நேரம் டிவிட்டரில் இருந்து வந்தேன். இனிமேல் நல்லவன் ஐடிக்கு இரண்டு  மணி நேரம் விஜய் ஐடிக்கு இரண்டு மணி நேரம் என முடிவு செய்தேன்.

நல்லவன் ஐடிக்கு சில சுவாரஸ்யமான நபர்கள் சிக்கினார்கள். நான்தான் விஜயபாண்டி என்பது தெரியாமல் இருக்க சுகுமார் என்ற பெயர் வைத்து சுகுமார்@supersukku எனத் தொடங்கினேன்.

(தொடரும்) 

Sunday 24 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 இந்துத்வா

7. இந்து அடையாளமிலி - ரோஸாவசந்த் ( கருத்து)

பல விசயங்களை அலசி ஆராய்ந்து இருக்கும் கட்டுரை என்றால் மிகையாகாது. இணைய பரபரப்பு என்று தொடங்கி நாவல், இந்து, இந்துத்வா என பயணித்தபோது எனக்கு சற்று குழப்பம் நேர்ந்தது உண்மை. எப்போது ஒருவர் தெளிவு இல்லையோ அப்போது ஒருவர் குழப்பம் அடைவார். எனக்கு இந்த கட்டுரையில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்தத் தெளிவு இல்லை என்பதால் எனக்கு குழப்பம் நேர்ந்தது உண்மை. கட்டுரையை இரண்டு முறை வாசித்தபின்னர் ஓரளவுக்குத் தெளிவு பிறந்தது. மாதொரு பாகன் நாவல் குறித்தும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், அதன் பின்னணி அலசி இருக்கிறது. சாதியம் குறித்த விசயங்களை திரைப்படம், படைப்புகள் எப்படி கையாண்டன என்பது என்னைப்போன்று  அறியாமையில் இருப்போருக்கு  வைக்கக்கூடிய ஒன்றுதான்.

ஒரு படைப்பை எப்படி எல்லாம் சாதகமானவர்கள், பாதகமானவர்கள் கையாள்வார்கள் என்பது இந்த மாதொருபாகன் நாவல் ஏற்படுத்திய தாக்கம்தனில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் மக்கள் காலப்போக்கில் இதை எல்லாம் மறந்து போவார்கள். அப்படி ஒரு பரபரப்பு என்பது கால காலத்திற்கும் நிலைத்து நிற்காவண்ணம் இயங்குவதுதான் ஊடகத்துறை. இந்துத்வர்கள், யார் இவர்கள், எப்படி இந்த விஷயத்தை நோக்கிச்  சென்றார்கள் எனத் தொடங்கி இந்து, காந்தி என பெரும் சுற்று சுற்று வந்து இருக்கிறது இந்த கட்டுரை.

இந்துத்வா என்றால் என்ன? எனக்கு இதுபற்றி தெரியாது என்பதால் சற்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்துத்வா என்ற வார்த்தை 1923ம் ஆண்டு விநாயக் தாமோதர் சவார்கர் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதை 1989ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தனது கொள்கையாக எடுத்துக்கொள்ள , விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அமைப்பு எல்லாம் இதை முன்னிறுத்தி செயல்பட்டன.

According to the Oxford English Dictionary, Hindutva is an ideology seeking to establish the hegemony of Hindus and the Hindu way of life. According to theEncyclopedia Britannica, "Hindutva ('Hindu-ness'), [is] an ideology that sought to define Indian culture in terms of Hindu values". (விக்கிப்பீடியா) 

மேற்குறிப்பிட்ட விஷயத்தை மொழிப்பெயர்ப்பு செய்தால் இந்து யார் எனும் கேள்வி வரும்? இந்து என்றால் என்ன? இந்துக்களின் மதிப்பு என்ன? Hindu as one who was born of Hindu parents and regarded India as his motherland as well as holy land. (விக்கிப்பீடியா) 

இப்போது எனக்கு எனது தாத்தாவிற்கு தாத்தா அதற்கு முன்னர் இருந்த தாத்தா பாட்டி எல்லாம் இந்துக்களாக இருந்தார்களா எனும் கேள்வி எழுகிறது. எனது சந்தத்தி இந்தியாவை விட்டு வெளியேறியதால் அவர்கள் தாய்நாடு வேறு என்பதால் இந்து எனும் அடையாளம் இழந்து விடுகிறார்களா? எதுவும் எனக்குத் தெரியாது. இந்துத்வா என்றால் ஒரே குலம், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அதாவது சமஸ்கிருத கலாச்சாரம். அப்படிப்  பார்த்தால் இந்தியாவின் நிலை என்ன ஆவது. இந்த கட்டுரை இந்துத்துவம் பற்றி நிறைய எழுத்தாளர்களின் நிலை, மற்றும் ஒரு நாவல் குறித்து எழும் சூழல் விவரிக்கிறது. தனிப்பட்ட மனிதனின் கருத்து சமூக கருத்தாக முடியாது. அதே வேளையில் தனிப்பட்ட மனிதனின் கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் எனில் அது சமூக கருத்து ஆகும்.

எந்த ஒரு இந்துவும் தன்னை இந்துத்வா என அடையாளம் காட்டிக்கொள்ள அச்சம் கொள்வார். இதற்கு காரணம் இந்துத்வா தன்னை முன்னிறுத்தும் விசயம். ஒரு இந்து எப்படி இருப்பார் என மகாத்மா காந்தி குறித்து எழுதியதைப் படிக்கும்போது எதற்கு கோட்சே ஒரு இந்துத்வா என புரியமுடிகிறது.

மனிதர்களில் இரண்டு வகை ஒன்று மிதவாதிகள், மற்றொன்று தீவிரவாதிகள். மதவாதிகள் பெரும்பாலும் தீவிரவாதிகளாகவே வலம் வருகிறார்கள். இந்த கட்டுரையில் சொல்லப்படும் இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு எனும் கருத்து பலருக்கு ஏற்புடையதே. ஒரு இந்து என்பவர் பிறரை துன்புறுத்தமாட்டார் என்பது பொது கருத்து . ஆனால் ஒரு இந்துத்வா இந்துவை கூட துன்புறுத்த தயங்கமாட்டார். 

இந்துக் கடவுள்களை நம்பும் இவ்வளவு பெரிய  மக்கள் கூட்டம் , திைாதிராவிட அரசியலை மனத்தடையின்றி ஆதரித்து வந்ததற்கும், வருவதற்கும் கூட, இந்து அடையாள உணர்வின்மை ஓர் அடிப்படை காரணம். இது சற்று ஆச்சரியமான வாக்கியம். தான் ஒரு இந்து என்பதால் பிறரை சகித்துக்கொள்ளும் தன்மை உண்டு, மேலும் தனது மதத்தை முன்னிறுத்தி எந்த ஒரு இந்துவும் நடப்பது இல்லை. சாதியின் அடிப்படையில் செயல்படும்போது அங்கே இந்து என்பது எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இந்து அடையாளமிலி என இந்த கட்டுரை எழுப்பிய சிந்தனைகளுக்கு கட்டுரையாளர் ரோஸாவசந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. 

8. லஜ்ஜா : மதவாதத்தின் வன்முறை - லேகா இராமசுப்ரமணியன் (விமர்சனம்)

ஒரு நாவல் என்பது எப்படி இருக்க வேண்டும் என இந்த விமர்சனம் மூலம் அறிய முடிந்தது. தீவிர சிந்தனை கண்மூடித்தனத்தை எதிர்க்கும் என்பதான வாசகம் போற்றத்தக்கது. அந்த தீவிர சிந்தனை மதம் எனும் போர்வையில் நிகழும் போது  மதம் ஒரு கண்மூடித்தனம் என்ற நிலை உண்டாகிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு எழுத்தாளர் நிச்சயம் அதன் வலியை மிகவும் திறமையாக சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதே இந்த நாவல் குறித்த விமர்சனம் மூலம் அறிய முடிகிறது.  எப்படி அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப்பார்க்கின்றன என்பது பலரும் உணர்ந்த ஒன்றுதான். நாவல் குறித்து ஆவல் எழுப்பியமைக்கு லேகா அவர்களுக்கு மிக்க நன்றி. 

9. அவ்வாறெனில் இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது - தமிழில் எம். ரிஷான் ஷெரீப் (மொழிப்பெயர்ப்பு)

சினுவா ஆச்சிபி என்பவரின் சிறுகதையை மொழிபெயர்த்து சொல்லப்பட்டு இருக்கிறது. சினுவா பற்றிய குறிப்பும் பயனுள்ளதாக இருந்தது. வித்தியாசமான சிறுகதை. படித்த மனிதன் ஒருவன் இவ்வாறென ஒன்றை ஏன்  செய்தான்? இந்த கேள்விக்கு பல நிகழ்வுகளை வைத்து கேட்டுக்கொள்ளலாம். 

இப்படியாக வெகுசிறப்பாக பல விசயங்களை கொண்டுள்ள தமிழ் மின்னிதழ், தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட விஷயம் ஆண்டாள். அடுத்துப் பார்க்கலாம். 

(தொடரும்) 

Friday 1 May 2015

நமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்

ஒரு விசயத்தை தனலாபம் இல்லாமல் தொடர்ந்து செய்வதற்கு ஒரு தனித்துவமிக்க ஈடுபாடு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த வரவேற்பும் அதைச் சார்ந்த மக்களிடம் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது ஒரு விஷயம் பெரும் தொய்வினை சந்திக்கும் என்பது வலி தரும் செய்தி. இந்த உலகத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தினால் உண்டானவை, அவர்களது வெற்றிக்கு காரணம் அவர்களுக்குத்  தொடர்ந்து பிறரது ஆதரவு இருந்ததுதான். நல்லதொரு ஆதரவை ட்விட்டர் மக்கள் நமது திண்ணை (சிற்றிதழுக்கு இங்கே அழுத்தவும்) இணைய சிற்றிதழுக்கு வழங்கி வருவது இணைய சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் சிற்றிதழ் வடிவமைப்பாளர் திரு அல்  அமீன் அவர்களின் ஆர்வத்தை மென்மேலும் உற்சாகமாக வைத்து இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆசிரியரின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

ஸ்ரீராமானுஜர். சுசீமா அம்மா அவர்கள் எழுதும் ஒரு புதிய தொடர். இந்த தொடர் மூலம் பல புதிய விசயங்கள் அறிய முடிகிறது. எனக்கு அதிகமாக ஸ்ரீராமானுஜர் பற்றி தெரியாது  என்பதால் இந்த தொடர் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இங்கொன்று அங்கொன்று என இவர் குறித்த விசயங்கள் மட்டுமே அறிந்து வைத்து இருக்கிறேன். நாலாயிர திவ்விய பிரபந்தம் தனில் இவரது புகழ் பேசப்பட்டு இருக்கிறது. சமய ஒற்றுமை, மனித ஒற்றுமை குறித்து பாடுபட்ட ஒரு நற்பண்பாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அரங்கனின் கண்கள். விசிட்டாத்துவைதம். எனக்கு அத்வைதம், துவைதம் அடிக்கடி குழப்பத்தைத் தரக்கூடிய ஒன்று. விசிட்டாத்துவைதம் பற்றி எனக்குத் தெரியாமல் கல்லுக்கும் உணர்வு உண்டு, உணர்வற்ற நிலையில் உன் உணர்வு உண்டு என நாராயணனை நோக்கி எழுதியவை நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு அற்புத தொடர் அம்மா. வாழ்த்துக்கள்.

கமலா அம்மா அவர்களின் புற்றுநோய் குறித்த பதிவு அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. சமீபத்தில் நண்பர் புகழ் அவர்கள் ஒரு சாமியார் எனது புற்றுநோயை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னால் அந்த சாமியாரை நம்பமாட்டேன், எனக்கு புற்றுநோய் என்று சொன்ன வைத்தியரைத்தான் சந்தேகிப்பேன் என்று எழுத அவருடனான எனது வறட்டுத்தனமான விவாதங்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதை ஒட்டிய கருத்துடன் இந்த பதிவு. மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் எப்படி மக்களின்  பலவீனத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என தான் கண்ட நண்பரின் நிகழ்வு மூலம் விரிவாக சொல்லி இருக்கிறார். முந்தைய காலத்தில் ஹோமியோபதி, மூலிகை மருத்துவம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது, இப்போது தொடர்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி உலகம் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். இந்த புற்று நோய்க்கு மருந்து எட்டாத கனி போலத்தான். இப்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள முன்னேற்றம் அம்மா அவர்கள் சொன்னது போல முறையாக பரிசோதனை செய்து கொண்டு வாழ்வதே நல்லது. வாழ்த்துக்கள் அம்மா.

உமாகிருஷ் அவர்களின் பாடல் அலசல். இந்த பாடலை நான் கேட்டது உண்டு. இத்தனை உன்னிப்பாக கேட்டது இல்லை. இத்தனை விசயங்களை இந்த பாடல் சொன்னது என இன்றே இவரது பாடல் அலசல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத்தான் இலக்கியம் படைத்தல் என்பார்கள். அதாவது எழுதப்படும் வரிகள் அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். அதை இந்த பாடல் வெகு சிறப்பாக செய்து இருக்கிறது என அறிய முடிந்தது. எத்தனை கிராமத்து வார்த்தைகள். இவர் குறிப்பிட்ட வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளாமை, பொட்டக்காடு, கூழ், கஞ்சி என வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது இவரது எழுத்தை அதிகம் நேசிக்க செய்தது எனலாம். வாழ்த்துக்கள். நாலு வரி நோட்டு போல இந்த தொடர் உருவாகலாம்.

சாய்சித்ரா அவர்களின் நகைச்சுவை என்றுமே என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவரது பெயர் பார்க்காமல் படித்தும் கூட டிஷ் பற்றிய நகைச்சுவை சிரித்துக் கொண்டே இருக்க வைத்தது. மற்ற நகைச்சுவைகள் இம்முறை சுமார் ரகம் தான். விடுகதை இந்த முறை விடுபட்டு போய்  இருக்கிறது. சோபியா தங்கராஜ் அவர்களின் கவிதை ஒரு காதல் தொலைத்த சோகம் தான். நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் என டிவிட்கள் அனைத்துமே வெகு சிறப்பு. எழுதியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் என நம்பலாம்.

அக்ஷ்ய திரியதை பற்றி ரவிக்குமார் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். வருடா வருடம் வீட்டில் எனக்கு இந்த நாளை ஞாபகபடுத்தி விடுவார்கள். நானும் இவரைப்போல கதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். ஆனால் வாழ்வில் சந்தோசம் என்பது சில நம்பிக்கைகள் உண்டாக்கி தருவது. எனவே எத்தனை சொன்னாலும் மக்களின் மனதில் சில விசயங்களை அகற்ற இயல்வதில்லை. இந்த வருடம் தான் அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு எனத் தேடி அறிந்து கொண்டேன். அதைப்போல அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு முழு பக்கத்தை நளபாகத்திற்கு ஒதுக்கி இருக்கலாம். நாங்கள் வீட்டில் ரொட்டியை வெட்டி பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால்  இத்தனை விசயங்களை கொண்டு செய்வது என்பது இன்றுதான் அறிந்தது. சமையல் கலையை அறிந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பசித்தால் உடனே விருப்பப்பட்ட ஒன்றை செய்து சாப்பிட்டுவிடலாம். நண்பர் ரவி வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் நிச்சயம் வீட்டு சமையல் அதுவும் அவரின் சமையல் இருக்கும் என உறுதியாக நம்பலாம். எங்கள் வீட்டிற்கு வந்தால் ஏதேனும் ஒரு கடை பலகாரம் மட்டுமே.

திருப்பூர். இந்த ஊர் பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் மணி. இவர் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட. எனக்கு கொடிகாத்த குமரன் மூலமே இந்த ஊர் அறிமுகம் என நினைக்கிறேன். பின்னர் பனியன் பற்றிய அறிமுகம். அடுத்து இந்த ஊரில் இருந்து நிறைய டிவிட்டர்கள் உண்டு என்பது தெரிய வந்தது. கோவை, திருப்பூர் போன்ற ஊர்கள் எல்லாம் தொழில் ஊர்கள் போலத்தான். தென்னிந்திய மான்செஸ்டர், குட்டி ஜப்பான் என பட்டப்பெயர்கள். இந்த ஊருக்கு இதுவரை சென்றது இல்லை. இந்த ஊரை சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டுபண்ணி இருக்கிறது எழுத்து. வாழ்த்துக்கள்.

ரீவிஷாலின் ஓவியங்கள் வெகு அருமை. சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்  நல்லதொரு தொடக்கத்தை நமது திண்ணை உருவாக்கி இருக்கிறது. சோபியா துரைராஜ் அவர்களின் கவிதை மற்றுமொரு காதல் வலி சொல்லும் கவிதை. நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு மழையில் ஆரம்பித்து மழையில் முடிகிறது.

மழலையர் மன்றம் புகைப்படங்கள் மிகவும் அருமை. அர்விந்த் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. மேடையில் நேரடி நகைச்சுவை சற்று கடினமான ஒன்று. பேசினால் அறுவை ஜோக் என சொல்லும் சமூகத்தில் ஒவ்வொரு வரிக்கும் சிரிப்பு என்பது எத்தனை கஷ்டம் என பல ஆங்கில நிகழ்வுகள் கண்டு எண்ணியது உண்டு.

புத்தகங்கள் குறித்தும் ஒரு எழுத்தாளனின் நிலையை குறித்தும் முத்தலிப் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுக்குரிய விசயங்கள். புத்தகங்கள் பல வீணர்களை திருத்தி இருக்கிறது என்றே புத்தகத்தின் பெருமையை சொல்லும்போதே சாமி அறையை விட ஒரு நூலக அறையே வீட்டினை அலங்கரிக்க இயலும்.

பாடல் கேட்பது குறித்து ஹேமாமாலினி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பாடல் பாடி பிறர் கேட்கும் வண்ணம் வைப்பது. அதாவது எல்லோருக்கும் பாடும் திறமை உண்டு. அதை உற்சாகப்படுத்தும் வண்ணம் இது அமையும்.

வாலி குறித்த ஆசிரியர் பார்வை வெகு சிறப்பு. ''ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தெளிவா வரணும்'' என தனது பணி குறித்து வடிவமைப்பாளர் அல்  அமீன் அவர்கள் கூறி இருப்பதால் அதை தனி பதிவாக வைக்கப் போகிறேன். சற்று பொறுத்துகொள்ளுங்கள் நண்பரே.

நமது திண்ணை நல்ல நல்ல விசயங்களுடன் வெகுசிறப்பாக இருக்கிறது ஆசிரியர் அவர்களே. உங்கள் நமது திண்ணை அனைவரது வீட்டிலும் வெகு விரைவில் கட்டப்பட வேண்டும் எனும் ஆசையை இங்கே எழுதி வைக்கிறேன்.

(தொடரும்)


Monday 19 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை நிறைவு 4

நிறைய நாட்கள் கழித்து முதன் முறையாக ஒரு தமிழ் இதழை வாசித்து முடித்து இருக்கிறேன். முத்தமிழ்மன்றத்தில் நிறைய பேர் நிறைய எழுதுவார்கள். 2006 ம் வருடத்தில் இருந்து அங்கே உறுப்பினராக இருந்தேன். அப்போது திரு. ரத்தினகிரி, திருமதி பத்மஜா போன்றவர்களின் எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவர்கள் தந்த கருத்துகளால் எனது நுனிப்புல் முதல் பாகம் நாவல் வளர்ந்தது என்றால் மிகையாகாது, அந்த நன்றியை அவர்களுக்கு முதல் நாவலில் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் அவர்களது ஊக்கம் இருந்தாலும் எழுதுவது எனது எண்ணமாக இருந்ததால் இரண்டாம் பாகம் அவர்களின் அதிக பங்களிப்பு இன்றி எழுதி முடித்தேன். மூன்றாம் பாகத்திற்கு எவரேனும் என்னோடு பயணிக்க கூடும். குழு மனப்பான்மை, சச்சரவுகள் என பல இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அப்படித்தான் எழுதினேன். பின்னர் வலைப்பூ ஆரம்பித்தபிறகு முத்தமிழ்மன்றம் மட்டுமல்ல எனது வலைப்பூவில் எழுதுவது கூட குறைந்து போனது. இதற்கு நான் 2010 ல் மீண்டும் ஆலயம் ஒன்றில் தொண்டுபுரியும் அறங்காவலராக பணிபுரிய சென்றது என்று சொல்லலாம். அவ்வபோது எழுதி வந்து இருக்கிறேன், முற்றிலும் நிறுத்தியது இல்லை. அப்படி இந்த ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் முன்னர் எழுத ஆரம்பித்து தமிழ் எழுத்துகள் வாசித்து வந்தது மகிழ்வாக இருந்தது.

அப்படி ட்விட்டரில் எழுத்து மூலம் பழகியதால்  திரு. என். சொக்கன், திரு கண்ணபிரான் ரவிசங்கர், 'திருப்பூர் இளவரசி' சு.ஐஸ்வர்யா இவர்களின் பழக்கம் அவ்வளவாக இல்லாதபோதும் இவர்களிடம் நுனிப்புல் பாகம் 2 க்கு அவர்களது எண்ணங்களை வாங்கி புத்தகம் வெளியிட முடிந்தது. அதுவும் திரு என். சொக்கன் அவர்கள் என் நாவலை திருத்தித் தந்தது இங்கு நினைவுகூறத்  தக்கது. இப்படி பலர் எழுதிக்கொண்டு இருக்கும் ட்விட்டரில் இருந்து ஒரு மின்னிதழ் வெளியே வந்து இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஆசிரியர் ஒரு எழுத்தாளர் என்றாலும் முதல் பார்வையில் சொன்னது போல ரைட்டர் என செல்லமாக அழைக்கப்பட்டாலும், ட்விட்டர் உலகில் இருந்து பலரை இந்த தமிழ் மின்னிதழில் அறிமுகம் செய்து இருக்கிறார். அது எழுத்துக்கு கொடுக்கப்பட்ட கௌரவம்.

பொதுவாக நான் எதையும் விமர்சனம் பண்ணும் தகுதி உள்ளவன் என என்னை எண்ணுவதில்லை. அதனால் எனது சினிமா விமர்சனம் கூட மேலோட்டமாகவே இருக்கும். விமர்சனம் என்பது ஒன்றை பண்படுத்த உதவ வேண்டும், பழுதுபடுத்த அல்ல. மென்மேலும் முயற்சிக்க வைக்க வேண்டும், முடங்க வைக்கக்கூடாது. இங்கே இந்த தமிழ் மின்னிதழில் எனது பார்வையை முன் வைத்து இருக்கிறேன், இது எனக்கே கூட ஒரு புது அனுபவமாக இருந்தது. பக்கத்து ஊர்க்காரர் எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துலக பயணம் எனக்கு ஆச்சரியம் உண்டுபண்ண வைத்தது. எங்கள் ஊரில் கூட சில எழுத்தாளர்கள் உண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எல்லாம் எங்கள் கிராமத்தில் உண்டு. அப்படி சிறு வயதில் எழுத ஆரம்பித்தேன். கல்லூரியில் படித்தபோது இப்படி நோட்டில் கிறுக்கிக் கொண்டே இருக்காதே என அறிவுரை எல்லாம் எனக்குத் தந்தார்கள். நான் எழுத்துலகில் ராமனுஜனாக எழுத்தில் பரிமாணம் எடுக்க இயலாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் எனது திமிர், ஈகோ. எழுதி ஏமாற்றுகிறார்கள் என்பதே எனக்குள் இருக்கும் எழுத்து மீதான விமர்சனம். எழுதுபவன் எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும்  இறங்க வேண்டும் என எண்ணுபவன், அதனால் எனது எழுத்துகளில் ஒருவித ஏக்கப் பெருமூச்சு அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். அதை எல்லாம் தாண்டிப் பார்த்தால் எழுத்து ஒரு தவம். அது சிலருக்கே கை வந்து இருக்கிறது. அப்படி பலரை கௌரவம் செய்து இருக்கிறது இந்த தமிழ்  மின்னிதழ். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

தமிழ் திரைப்பட விருதுகள் - 2014  எனக்கு சிறு வயதில் இந்தவிருதுகள் பட்டியல் எல்லாம் பார்க்க பேரானந்தமாக இருக்கும். இப்போது கூட தேசிய விருதுகள் பட்டியலை ஆர்வத்தோடு பார்ப்பேன். எனக்கு பிலிம்பேர் விருதுகள், இன்னபிற விருதுகள் எல்லாம் பல வருடங்களாக ஈடுபாடு தந்தது இல்லை. தேசிய விருது மட்டுமே நான் அதிகம் விரும்பி பார்ப்பது. இங்கே என்ன விருதுகள் என்ன தரப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால் பெரும்பாலான படங்கள் நான் இன்னமும் பார்க்கவில்லை. இதற்கு ஒரு காரணம் நமது ஊரில் உள்ளதுபோல திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு படங்கள் வருவது இல்லை. குறிப்பிட்ட சில படங்களே வரும். மேலும் பெரும்பாலான படங்கள் இணையம் அல்லது டிவிடியில் பார்க்க வேண்டிய சூழல். ஊரில் இருக்கும்போது பாடல்கள் நிறைய கேட்பது உண்டு, இங்கே வெகுவாக குறைந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கலை உலகினருக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக விருது என்பது விமர்சனத்திற்குரியது, பலருக்கு திருப்தி தருவதைவிட அதிருப்தி தந்துவிடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விருது வழங்குவது தொடர்ந்து நடைபெறுவது நல்ல விஷயம்.

அடுத்து படித்த எழுத்து சற்று வித்தியாசமானது.  முதலில் சில வரிகள் படித்ததும் தமிழ் - மின்னிதழை மூடிவிட்டேன். பொதுவாக இப்படி இருப்பவர்கள் என குறிப்பிட்டு வாசிக்க வேண்டாம் என சொல்லிவிட்டால் அதில் ஏதேனும் ஒன்று எனக்குப் பொருந்தும் எனில் கூட நான் வாசிப்பதே இல்லை. எழுதுபவருக்குத்  தரும் மரியாதையாகவே நான் அதை கருதுவேன். அப்படித்தான் படிக்கவே வேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால் இந்த தமிழ்-மின்னிதழ் அந்த கொள்கையை தகர்த்த சொன்னது. முழுமையாகப் படிக்காமல் வாசிப்பது முழுமை அடையாது என வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. புதிய எக்சைல் - புனைவும் புனைவற்றதும் - சுரேஷ் கண்ணன் எழுதி இருக்கிறார். அதிலும் எழுதுவதற்கு ஆசிரியரின் பரத்தை கூற்று தனை காரணம் காட்டுகிறார். உங்ககளை  வாசிக்கக் வைக்கவே அப்படி தொடக்கத்தில் எழுதினேன் என்கிறார். அப்படி எல்லாம் வாசிக்கமாட்டேன் சுரேஷ்கண்ணன். வாசிக்காதே என்றால் வாசிக்கவே மாட்டேன். எவருக்காகவும் எழுத்து சமரசம் செய்யக்கூடாது, தனது நிலையை எழுத்து மாற்றக்கூடாது என எண்ணுபவன் நான். காமக்கதைகளுக்கு இங்கு மவுசு அதிகம் என நான் எழுதிய கதை ஒன்றில் ஒரு வார்த்தை கூட வேறு விதமாக எழுதி இருக்க மாட்டேன். வாசகனுக்கு எழுத்தாளனை விட கற்பனை சக்தி அதிகம் என நினைப்பேன். கதாபாத்திரங்கள் மூலம் அழகாக பல விசயங்களை எழுதி இந்த புதிய எக்சைல்  எனும் தமிழ் நாவலுக்கு இரண்டு விமர்சனங்கள் வைத்து இருக்கிறார். அவரே குழப்பம் அடைந்து இருக்கிறார் என முடிவில் நையாண்டியாக முடிக்கிறார். சுவாரஸ்யமான எழுத்து.

காமத்தை முன்னிறுத்தி எழுதப்படும் கதைகளில் சமீபத்தில் ராஜன் என்பவர் எழுதிய தேர்க்கால் எனும் சிறுகதை அப்படியே மனித உலகில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளை பிரயோகித்து இருப்பார். வாசகன் இதைக் கண்டு அஞ்சக்கூடாது அதுதான் நிதர்சனம். இதைவிட மோசமான வார்த்தைகளை எங்கள் கிராமத்தில் உபயோகம் செய்வார்கள். சுரேஷ் கண்ணன் மறைமுகமாக சில வார்த்தைகளை உபயோகம் செய்கிறார். ஜ்யோவரம் சுந்தர் என நினைக்கிறேன், ஒரு கட்டுரையில் அப்படியே வார்த்தைகளை உபயோகம் செய்து இருப்பார்.  எழுத்து நாகரீகம் கருதி அப்படியே எவரும்  எழுதுவதில்லை. ஆங்கில நாவல்கள் விதிவிலக்கு என கருதுகிறேன். இப்போதெல்லாம் எவ்வித மன சஞ்சலம் இன்றி எதையும் வாசிக்க முடிகிறது. எனது மனம் சிறுவயது கட்டுக்கோப்பில் இருந்து வெகுவாக வெளியேறிவிட்டது ஆனால்  என்னால் இப்படி எழுதவே இயலாது, எழுத வேண்டிய நிர்பந்தமும் எனக்கு இல்லை. எழுதுபவர்கள் எழுதட்டும்.

இசை - இசையை நோக்கி நகர நகர இசையை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறேன். ராகங்கள் எல்லாம் கற்று தாளங்கள் கற்று நானும் ஒரு இசை மேதை ஆக விருப்பம். ஆனால்  சாத்தியமற்ற ஒன்று. இளையராஜா, இசைஞானி. இவரது ரமண மாலை, திருவாசகம் எல்லாம் நான் திரும்பத் திரும்ப கேட்பவை. ஆனால் என்ன ராகம் என்ன இசை வாத்தியங்கள் என்ன என்றெல்லாம் மனம் சஞ்சரிப்பது இல்லை. வார்த்தைகளுக்காக நான் மயங்குவேன். காரணமின்றி கண்ணீர் வரும் என்றவுடன் எனக்கு கண்ணீர் வரும். ஆனால் எஸ். சுரேஷ் சுவப்னம் கனவுகளுக்கான இசை என ஒரு ஆல்பத்தை அழகாக இசைத்து இருக்கிறார். கானடா, காம்போதி, ஜோக், பிலஹரி என பல ராகங்கள், மிருதங்க இசை, பாடல் பாடும் அழகு என ஆராதனை செய்து இருக்கிறார். நிச்சயம் இவரை நம்பி இந்த ஆல்பம் கேட்டு மகிழலாம் என நினைக்கிறேன்.

இந்திரன் எழுதிய பந்து புராணம். அட்டகாசம். எனது கிரிக்கெட் வாழ்நாளை அசைபோட வைத்தது. என்ன இந்திரன் வேறு ஊர்களுக்கு சென்று விளையாடவில்லையா என்றே கேட்கவேண்டும் என இருக்கிறேன். வேறு ஊர் அணிகளில் அவர்களுக்காக களம் இறங்கவில்லையா என்ற கேள்வியும். எங்கள் ஊரில் பெண்கள் கிரிக்கெட் விளையாண்டது இல்லை. அவர் குறிப்பிட்டது போல ஊரில் உள்ள அக்காக்கள் எல்லாம் வேற பொழப்பே இல்லையா இப்படியா வேகாத வெயிலில் விளையாடுறீங்க நீங்க சின்ன பசங்க எங்க மாமாவை எல்லாம் ஏன்டா  இப்படி விளையாட இழுத்துட்டு போறீங்க என திட்டாத நாளில்லை. வெயிலில் விளையாடியே கருத்து போனேன் என வீட்டில் சொல்வார்கள். பழைய நினைவுகளை அசைபோட வைத்த அற்புத விபரிப்பு, அதுவும் கடைசியில் முடிக்கும் போது  ஒரு காவியம் போல முடித்து இருக்கிறார்.

பாலா மாரியப்பனின் நிழோலோவியம். ஏதேனும் தென்படுகிறதா என பூவினை தாண்டி பார்த்தேன். புகைப்படம் அருமை. எனக்கு ஓவியம் என்றால் கொள்ளைப்பிரியம். ஓவியத்தில் மனதை அழகாக சொல்லலாம். ட்விட்டரில் ஓவியம் வரையும் ராகா, பாரதி, அகழ்விழி, அண்ணே ஒரு விளம்பரம், தமிழ்பறவை, பிரசன்னா மீனம்மாகயல் என ஒரு பெரிய ஓவியர்கள்  பட்டாளமே உண்டு. எனது  நுனிப்புல் பாகம் 2 நாவலுக்கு அகழ்விழி தான் ஓவியம் வரைந்து தந்தார். அப்படியே நான் அவரது ஓவியத்தை எடுத்துக்கொண்டது அவருக்கு சற்று ஆச்சரியம். இந்த தமிழ் மின்னிதழில் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த இயக்குனர் கே பாலசந்தர் அவர்களைப் பற்றிய நினைவு கூறல் என தனது அருமையான அனுபவத்தை அவர் ஒரு தொடர்கதை என கார்த்திக் அருள் அழகாக எழுதி இருக்கிறார். அதுவும் அவருடன் நேரடியாய் பேசிய அனுபவம் சிறப்பு. நானும் கே பாலசந்தர் படங்களை பார்க்கலாம் என இருக்கிறேன்.  தமிழ் மின்னிதழின் கடைசி பக்கத்தில் பரணிராஜன் வரைந்த பாலசந்தர் ஓவியம் அப்படியே பாலசந்தரை ஒரு விழாவில் அமர்ந்து இருப்பதை பார்ப்பது போன்ற போன்ற உணர்வைத் தந்தது. இவர் வரையும் ஓவியங்கள் அத்தனை தத்ரூபமாக இருக்கும். மாதுளம் பழம் ஒன்று உரித்து அது தட்டின் மேல் இருக்கும் ஒரு ஓவியம் பிரமிப்பு தரும், பாராட்டுகள். எப்படி இப்படி வரைவது என இவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ளவும் ஆசைதான்.

இணைய நூற்றாண்டு குறித்து சிறகு அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். மிகவும் உண்மை. இந்த உலகம் இணையம் மூலம் பெரும் உதவியையும் அச்சுறுத்தலையும் சந்தித்து வருகிறது. அருமையான  எழுத்து. இறுதியாக திறமைசாலிகள்  என ட்விட்டர் மூலம் அடையாளம் காட்டப்படும் எழுத்து என எஸ்கே செந்தில்நாதனின் குவியொளி வெகு சிறப்பு. ஆத்திசூடி போன்று டிவிட்டர்சூடி. எழுதிய அனைவருக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த தமிழ் மின்னிதழ் குறித்து இரு வாக்கியங்களில் ஒரு விமர்சனம்.

'நிர்வாணத்தை மறைக்க விரும்பாத ஒரு அழகியல் -தமிழ் மின்னிதழ்' 

'நிர்வாணத்தை மறைத்த பின்னும் கண்களை அகற்ற இயலாத பேரழகியல் - தமிழ் மின்னிதழ்'

எனது பார்வை நிறைவுப் பெற்றது. இந்த தமிழ் மின்னிதழ் காலாண்டு இதழாக தொடரும். அன்றும் தமிழ் - மின்னிதழில்  பகிரப்படும் படைப்புகள் குறித்து இங்கே எழுதுவேன் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்.

 (முற்றும்)

Thursday 15 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1

நூற்றி முப்பத்தெட்டு பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள தமிழ் மின்னிதழ் ஒன்று தமிழ் ட்விட்டர் சமூகத்தில் 'ரைட்டர்' என செல்லமாக அழைக்கப்படும் திரு சி சரவணகார்த்திகேயன் அவர்களின் முயற்சியால் இன்று வெளிவந்து உள்ளது.

தமிழ் மின்னிதழ். அட்டையில் ஓ!  இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. "எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!" நேர் வாழ்க்கை தெரியும், எதிர் வாழ்க்கை தெரியும். நிகர்வாழ்க்கை எனக்குப் புதிது.  ஜெயமோகன் எழுத்து நிறைய கேள்விபட்டதுண்டு. வாசித்தது இல்லை.

"தமிழ்" எழுத்து வடிவமைப்பு மிகவும் எளிமையுடன் கூடிய சிறப்பு. 'தமிழ் சிற்பி' மீனம்மாகயலுக்கு பாராட்டுகள். சமூக இருள் போக்க வரும் தமிழ். ஆசிரியர் சி சரவணகார்த்திகேயன் அவர்களை இந்த முயற்சிக்கு வெகுவாக பாராட்ட வேண்டும். இவருக்கு பக்கபலமாக இருந்த ஆலோசனைக்குழு கௌரவ குழுவிற்கும் ஆசிரியருக்கும் உளம்கனிந்த பாராட்டுகள். தை என எழுதாமல் பொங்கல் என இதழ் 1 வந்தது தித்திக்கும் இனிப்புதான், தமிழுக்கு தமிழருக்கு வெகு சிறப்பு.

பிரசன்னகுமார் அற்புதமான ஓவியர் சமீபத்தில்தான் இவரது ஓவியங்கள் கண்ணுக்குப்பட்டது. வெகுநேர்த்தியாய் எழுத்தாளனாக ஒரு ஜெயமோகனை வடிவமைத்த விதம் பாராட்டுகள். புதியன விரும்பு என்பது கட்டளைச் சொல். தமிழுக்கு அந்த உரிமை உண்டு. ஆசிரியர் உரை படிக்கிறேன். கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது. உலகம் யாவையும் என வாசித்ததும் அப்படியே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஓடும் அது அந்த பாடலின் வலிமை. இது ஒரு தொடக்கம் என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து  சிறப்பாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமரர் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பணம் செய்தது வெகு சிறப்பு என தமிழ் மின்னிதழைப் போற்றி மகிழ்கிறேன்.

 எனக்கு தமிழ் எழுத்துலகம் தெரியாது. பெயர்கள் மட்டுமே பரிச்சயம் எவருடைய நாவல்களும் பல ஆண்டுகளாக வாசித்தது இல்லை. எனது வாசிப்பு blog twitter மட்டுமே. அப்படி வாசித்தபோது பழக்கமான சிலர் முகங்கள் இங்கே இந்த தமிழ் மின்னிதழில் உண்டு. எவருடனும் நெருங்கி பழகிய அனுபவம் இல்லை.

நான் போற்றும் மனிதர்களான  எனது நூல்களை வெளியிட்ட பொன்.வாசுதேவன், தமிழ் உயிர்மூச்சு என இருக்கும் 'முருகனுருள்' 'சிலுக்கு சித்தன்' புகழ் கண்ணபிரான் ரவிசங்கர், வெண்பா புகழ் என் சொக்கன், பிரமிக்க செய்யும் நர்சிம், முத்தமிழ்மன்ற தொடர்பு ஜி ராகவன், நல்ல வாசகி லேகா,  இந்த எழுத்துலகில்  எனக்கு புதிதாக அறிமுகம் ஆன மீனம்மாகயல், முத்தலிப், சங்கீதா பாக்கியராஜா, கர்ணா சக்தி, மிருதுளா, சொரூபா  மற்றும் ட்விட்டரில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் வைத்திருக்கும் சௌம்யா.

நான் Facebook படிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் பெருமாள் முருகன் சமீபத்தில் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் குறித்த சர்ச்சை ட்விட்டரில் கேள்விபட்டேன். அது குறித்து கிருஷ்ணபிரபு இந்த மின்னிதழில் எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை அப்படியே வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்த மதமும் சாதியையும் துள்ளிக்கொண்டு திரிகிறது என தெரியவில்லை. எத்தனை பிரம்மானந்தா, நித்யானந்தா இந்த சமூகம் கண்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்காமல் விட்டது இந்த சமூகத்தின் தவறு.

எங்கள் கிராமத்தில் கூட முன்னொரு காலத்தில் பிடித்தவனோடு பிள்ளை பெறும்  கலாச்சாரம் உண்டு என சில வருடங்கள் முன்னர் என் பெரியம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன சொல்றீங்க என கேட்டபோது ஆமாம் எடுபட்ட  சிறுக்கிக  என திட்டிய காலம் என் பெரியம்மா காலமாக மாறி இருக்கலாம். வைப்பாட்டி எல்லாம் இல்லாமலா? ஆனால் என்ன இந்த சமூகத்தில் சாமியால் நடைபெறும் விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இறைவன் தூய்மையானவன், இறைவனை பின்பற்றுபவர்கள் தூய்மையானவர்கள் எனும் ஒரு மனநிலை மனிதர்களில் பதிந்துவிட்டது.

பெருமாள் முருகன் எழுதாமல் விட்டால் அது தமிழ் எழுத்து உலகிற்கு நல்லதல்ல எனவும் நல்லது எனவும் கூறுகிறார்கள். எனக்கு நாவல் படித்தது இல்லை என்பதால் எதுவும் சொல்ல இயலாது. ஆனால் காலங்கள் பல தடைகளை பல கலாச்சாரங்களை கடந்தே வந்து இருக்கின்றன. தொன்மைபழக்கங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

கானல் - மீனம்மாகயல் எழுதிய ஒரு கதை. இந்த கதையை சற்று கவனமாக வாசிக்கத் தவறினால் என்ன சொல்ல வருகிறது என புரியாமல் போகும். கதையில் குறிப்பிடப்பட்ட நேரமே இரண்டு நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு. இவருக்கு நல்ல தமிழ் சிந்தனை உண்டு, ஆனால் என்ன எழவோ காமத்தை சுற்றியே இவரது எழுத்தும் எண்ணமும் அமைந்துவிடுவது இவருக்கான பலமும் பலவீனமும். ஒட்டுமொத்த சமூகம் காமத்தினால் அல்லல்படுவது இயற்கைதான். வெளிச்சொல்ல இயலாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதே பாலியல் வன்முறையை எழுத்துகளில் சாடும் பெண் என்றாலோ, எழுத்துகளில் வைத்திடும் பெண் என்றாலோ அந்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பார்வைதான் நான் குறிப்பிட்ட 'என்ன எழவோ'. அந்த கதையில் குறிப்பிட்ட 'தா..' என்ற வார்த்தையை கூட நான் எழுதுவதும்  உச்சரிப்பதும்  இல்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நிலை ஆசிரியர் அந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அட ஆசிரியர் சொல்கிறார், சொல்வதற்கு நன்றாக இருக்கிறதே என நானும் சில நாட்கள்  சொன்னேன். ஒரு பனங்காடி  நண்பன் அழைத்து அது கெட்ட வார்த்தை என சொன்னதில் இருந்து அந்த வார்த்தை நான் உபயோகம் செய்வது இல்லை.

ஆனால் சமீபத்தில் என் அத்தை ஒருவர், என் அப்பா அந்த வார்த்தை உபயோகித்தபோது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த கதையில் சொல்லப்படும் விசயங்கள் கானல் தான். ஒரு பெண்ணை பலவந்தபடுத்த சமூகம் தயாராக காத்து இருக்கிறது. அதை எதிர்த்து போராட வழி இல்லை. இதே போன்று ஒரு உண்மையான நிகழ்வை ட்விட்டரில் பூங்குழலி எனும் மருத்தவர்  எழுதி இருந்தார். மகளை பறிகொடுத்த தந்தை. கிராமங்களில் நிறைய நடைபெறுகிறது. பாதுகாப்பற்ற சமூகம்.

சௌம்யாவின் கவிதைகளுக்கு தாவினேன். சௌம்யாவின் எழுத்து எவரையும் காயப்படுத்தாது. அவரின் பண்பு அவரை எல்லோருக்கும் பிடித்த ஒருவராகவே இந்த ட்விட்டர் சமூகம் பார்த்து வருகிறது மீ காதல் ஒரு எளிய அன்பின் வெளிப்பாடு. பெண்ணியம் என்ற வார்த்தை இப்போது நிறைய பயன்பாட்டில் உள்ளது. இதழதிகாரம், அதிக காரம் எல்லாம் இல்லை.மிகவும் இனிப்புதான். அதுவும் என் பெண் முத்தங்கள் என்றே முடிகிறது கவிதை.அவளதிகாரம்  அவனதிகாரம், மகளதிகாரம்  மனைவியதிகாரம் என நிறைய இருக்க இதழதிகாரம். இலக்கியமாக சொல்லிச் செல்லும் ஊடலுணவு. கோபத்தில் பாசம் வெளிப்படும் என்பதை வெளிச்சொல்லும் கவிதை.

நாளை நர்சிம், கண்ணபிரான், சொக்கனோடு பிரயாணிக்கிறேன்

(தொடரும்)


Sunday 4 January 2015

வெட்டித் தருணங்கள் - 3

அடுத்த நாள் சிவக்குமாரை சந்தித்தேன். ஓங்கி ஒரு குத்து விட்டேன்.

''என்னடா''

''இனிமே நீ சொல்வியா?''

''டேய் என்னடா சொன்னேன்''

''நேத்து சொல்லலை''

''அணிலா?''

திரும்பி ஓங்கி ஒரு அறைவிட்டேன். அவனுடனான சண்டை அன்று பெரும் பிரச்சினையில் முடிந்தது. அவன் என்னோடு இனிமேல் பேச மாட்டேன் என கூறினான். போடா வெங்காயம் என திட்டிவிட்டேன். என்னைக் கண்டு அங்கிருந்தவர்கள் பயந்தார்கள். நான் இப்போது கல்லூரியில் எனக்கான அடையாளம் ஒன்றை உருவாக்கிக் கொண்டேன்.

சில நாட்களில் இணைய இணைப்பு வீட்டில் வந்தது. முதலில் ட்விட்டர் திறந்தேன். www.twitter.com சென்று vijayathma என பெயரிட்டு @vijaysole என வைத்தேன். புதிய உலகம் கண்ணுக்கு பட்டது. முதலில் ஒரு விஜய் ரசிகர் டேய் அது vijaysoul என்றார். உடனடியாக அக்கவுண்ட் டெலிட் பண்ணிவிட்டு @soulvijay எனத் தொடங்கினேன்.

விஜய் ரசிகர்களாக தேடி தேடி இணைந்தேன். அவர்களும் என்னைத் தேடி தேடி இணைந்தார்கள். விஜய் படத்தை இணைத்தேன். பின் அட்டையில் பெரியார் படத்தை இணைத்தேன். முதல் நாள் மட்டுமே நூறு பேர் பாலோ பண்ணினேன். முன்னூறு பேர் பாலோ பண்ணினார்கள்.

வெளி உலகத்தை விட இந்த உலகம் மிக நன்றாக இருந்தது. தமிழில் எப்படி எழுதுவது என தெரியவில்லை. அப்போது ஒருவர் தமிழில் எழுதுவது எப்படி என சொல்லித் தந்தார். ஒரு மாதம் எதுவும் எழுதுவதில்லை என முடிவு செய்து என்ன நடக்கிறது என பார்த்தேன். (தொடரும்)