Showing posts with label தொடர்கதை அ.நா.மொ. Show all posts
Showing posts with label தொடர்கதை அ.நா.மொ. Show all posts

Wednesday 11 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 7 முடிவு முடிவு பா.

நாங்கள் பார்க்கச் சென்றவர் அதிக வயதானவராகத் தெரிந்தார். இதைப் படிம்மா என ஒரு காகித்தைத் தந்தார். நானும் படித்தேன்.

மண்ணில் துளையிட்டு
குடிகொள்ளும் ஈசல்களை
பெற்றோர்களும் உற்றார்களும்
வந்திருப்பதாய் பொய்க்கதை சொல்லி
ஆசையோடு வெளிவரும்போது
சிறகை உடைத்து நெருப்பிலிட்டு
சுவைகொள்ளும் நாவு
அன்பினை கேடயமாய்
அநீதிக்கு வைத்துக்கொள்ளும்
தீராநோய் கொண்ட நாவு

மானிட உயிருக்குள்
உள்ளிருக்கும் ஈசனை
மதிமயக்கும் மந்திரங்கள்
சொல்லி வெளிக்கொணர்ந்து
வீடொன்று கட்டி
தொலைத்துத் திரியும் நாவு
பக்தியை பகட்டுக்காக
பரவசத்துடன் சூறையாடும்
பாவநோய்கொண்ட நாவு

மெளனம்தனை மருந்தாய்
உட்கொண்டு மரிக்கும் நாள்வரை
இருக்குமெனின் தீராத நோயெல்லாம்
தீர்ந்து போகும்
பண்ணிய பாவமெல்லாம்
ஓடிப்போகும்
உள்ளுக்குள்ளே ஓசையொன்றை
உதடசைவின்றி
சொல்லிச் சிறக்கும் நாவு
இவ்வார்த்தைகளை உச்சரிக்காத நாவு!

இந்த கருமத்தை என்கையிலே ஏன் கொடுக்கிறாருனு நினைச்சிக்கிட்டு, அதுக்காக பேசாமலேயே நாம வாழ்ந்திர முடியுமானு அவர்கிட்ட வெடுக்கெனு கேட்டு வைச்சேன். சுந்தரி சும்மா இரு சரசு அப்படினு சொன்னா. பவளக்கொடி என்கிட்ட இருந்து வாங்கிப் படிச்சிட்டு மிங்கி மிங்கி பா அப்படினு சொன்னா. நாவரசன் ஒருவித தோரணையா மிங்கி மிங்கி பா சொன்னான். பத்தாததுக்கு மிங்கியும் மிங்கி மிங்கி பா சொன்னான்.

என்கிட்ட, மிங்கிகிட்ட, என் கணவர்கிட்ட, நாவரசுகிட்ட இரத்தம் எடுத்தவர் ரொம்ப நாளைக்கப்பறம் எங்களை வரச் சொன்னார். வரச் சொன்னவர் இது அறுபத்திநான்காம் மொழி அப்படினு சொல்ல ஆரம்பிச்சார். எனக்கு தலையை சுத்த ஆரம்பிச்சது. சங்கரியும் கூட வந்திருந்தா. அவர் சொன்னது சங்கரிக்கு ரொம்ப நல்லாவே புரிஞ்சிருச்சி போல. எனக்கு அவதான் விளங்கறமாதிரி சொன்னா.

நம்ம உடம்புல ஜீன் இருக்குதுல்ல அந்த ஜீன் புரோட்டின் எல்லாம் உருவாக உதவியா இருக்குமாம். பரம்பரை பரம்பரையா விசயங்களை பெற்றோரிலிருந்து பிள்ளைக்குக் கடத்தறது இந்த ஜீன் தானாம். ஒருத்தர் எப்படி இருக்கார், எப்படி வளருராருனு இந்த ஜீன் தீர்மானிச்சி வைச்சிருமாம்.

சகல ஜீவராசிகளுக்கும் இந்த ஜீன் இருந்தாலும் மனுசனைத் தவிர எந்தவொரு சிந்தனையும் இல்லாம தன்னையும் தன் வட்டத்தையும் காப்பாத்திக்கிட்டு மற்ற ஜீவராசிகள் வாழப் பழகிருக்காம். அப்படிப்பட்ட அந்த ஜீன், புரோட்டின் உருவாக்கறப்போ அதை நிறுத்த மூணு கோடான்கள் வைச்சிருக்குமாம். அந்த கோடான்களை உபயோகப்படுத்தி புரோட்டின் உருவாகறதை நிறுத்திக்குமாம். நம்ம சிந்தனையை கட்டுப்படுத்தக்கூடிய செயல்பாடு நரம்பு மண்டலத்தைச் சார்ந்து இருந்தாலும் இந்த ஜீன்களுக்கும் சம்பந்தம் இருக்காம். அறுபத்தி நாலு கோடான்கள்தான் மொத்தமாம். ஆனா மூணு கோடான்கதான் நிறுத்துமாம். அந்த கோடான்கள் என் பையன் விசயத்துல என் பையன் என்ன நினைச்சாலும் பேசற வார்த்தை மட்டும் இதுதானு தீர்மானிச்சிருச்சாம். என் பையனால எல்லாமே சிந்திக்க முடியும், எல்லாம் செய்ய முடியும், ஆனா வார்த்தை மட்டும் மிங்கி மிங்கி பா தானாம்.

இதுல என்ன கொடுமைன்னா அந்த ஜீன் என்கிட்டயும் இருக்காம். ஆனா அது என்கிட்ட வெளிப்படாம அடங்கிப் போயிருச்சாம். இல்லைன்னா நான் மிங்கி மிங்கி பா தான் சொல்லிட்டு இருந்திருப்பேனாம்.

சங்கரி சொன்னதும் அவர்கிட்ட ஏன் இப்படி வார்த்தைனு மிழுங்கி மிழுங்கிக் கேட்டேன். அய்யோ திரும்பவும் மிழுங்கியா? அதுக்கு அவர் சொன்னதை அப்படியே சொல்றேன்.

பொதுவா நமக்கு ஆசையோ விருப்பமோ இருந்தா பயத்துல அதை விழுங்கிருவோம். சூழ்நிலை சரியில்லைன்னா சொல்லவே மாட்டோம். இப்படி மனுசனோட அமைதியா வாழனும்ங்கிற ஆசை எல்லாம் சூழ்நிலையினால உள்ளுக்குள்ளே அமிழ்ஞ்சி போயிருச்சி. மேலோட்டமா எல்லாரும் அமைதியா வாழனும்னு சொன்னாலும் அந்த ஆசை நிறைவேறாத ஒண்ணுனு ஆயிருச்சி. இப்படி விழுங்கி வாழும் சமூகமாகவே மாறிட்டோம். யாரு எப்படிப் போனா, எந்த நாட்டுல குண்டு விழுந்தா நமக்கு என்னனும், சுனாமி பூகம்பம் வந்தா பூமிக்கு பாரம் தாங்கலை அதான் விழுங்குதுனு நாமதான் சரியான விழுங்கும் சமூகமா மாறிட்டோம். எதுக்கெடுத்தாலும் அந்த கவிதையில வரமாதிரிதான் வாழ பழகிட்டோம். மிங்கி அப்படின்னா தமிழுல முடிவு னு அர்த்தம். முடிவு முடிவு பா.

அதாவது அமைதிக்கு முடிவு கட்டிட்டோம், இந்த உலகத்துல அமைதியாவே இருக்க முடியாது அதைச் சொல்றதுதான் மிங்கி மிங்கி பா. முடிவு முடிவு பா.

ஆனா இதை மட்டுமே சொல்ற உங்க மகன்கிட்ட இருக்கிற அமைதி நம்மகிட்ட இல்லாம போனது துரதிர்ஷ்டம்தான்.

நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்ல ஆரம்பித்து இருந்தேன்.

முற்றும்.

Tuesday 10 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 6

அப்படி ஒரு வார்த்தையை நான் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. சங்கரி அந்த பொண்ணு பாலையம்பட்டியைச் சேர்ந்தவள் என்று சொன்னாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. பழனிச்சாமி அடுத்த முகூர்த்தத்திலேயே பவளக்கொடியின் திருமணம் வைக்கலாம் என்று சொன்னாலும் சங்கரியின் மகன் கல்யாணம் தடையாய் இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு திருமணம் வைக்கலாம் என முடிவு செய்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். முறைப்படியான நிச்சயதார்த்தம் எல்லாம் செய்து முடித்தோம்.

கல்யாணமும் சிறப்பாக நடைபெற்றது. கல்யாணம் முடித்து எங்க ஊருக்கு கிளம்பு முன்னர் உனக்கொரு பிள்ளை பிறந்து அந்த பிள்ளையும் மிங்கி மிங்கி பா சொன்னா என்ன பண்ணுவ என ஒரு விளங்காத பாட்டி பவளக்கொடியிடம் விளக்கம் கேட்டு வைத்தாள். நானும் பயத்தோடு பவளக்கொடி என்ன சொல்வாளோ எனக் கேட்டுக்கொண்டிருந்தேன். பவளக்கொடி மிங்கி மிங்கி பா வை மட்டுமே நான் பேசுவேன் என்றாள். அடி ஆத்தி என முகவாயில் கையை வைத்தாள் பாட்டி.

பவளக்கொடி சொன்னதைக் கேட்டதும் எனக்கு பெரிய தப்பு பண்ணிவிட்டோமோ என மனசு பதறியது. நானும் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசி இருக்க வேண்டுமோ என நினைத்தேன். அப்படியெல்லாம் குழந்தை பிறக்காது. இது என்ன சாபமா என இருந்துவிட்டேன். மாதங்கள் ஓட கருவுற்றாள் பவளக்கொடி. எனக்குப் பயமாகத்தான் இருந்தது. நாவரசன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே சொன்னான். ஒருநாள் பவளக்கொடியிடம் நீ அவனுக்கு பேசக் கற்றுக்கொடுப்பாய் என ஆசைப்பட்டேன். நீ முயற்சிக்கவில்லையா என்றேன். எனக்கு மிங்கி மிங்கி பா தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லி மட்டும் நிறுத்திக்கொண்டாள்.

குழந்தை பிறந்தது. மிங்கி என பெயர் வைத்தாள். எனக்கு கோபமாகப் போய்விட்டது. என்ன நீ, இப்படி பெயர் வைத்திருக்கிறாய் என்றேன். இந்தப் பெயருக்கு என்ன அத்தை? என சொல்லிவிட்டாள். நான் பவளக்கொடியிடம் சண்டையே போடுவதில்லை. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

குழந்தை வளர்ந்தது. ங்கா சொல்லாமலே வளர்ந்தது. ம்மாவும் சொல்லவில்லை. ஆனால் முகமெல்லாம் புன்னகை. நாட்கள் வளர என் பேரப்பையன் வார்த்தை பேச ஆரம்பித்தான். மி...ங்...கி மி...ங்...கி பா. எனக்கு பகீரென ஆகிவிட்டது. பவளக்கொடியோ சந்தோசமாக கொஞ்ச ஆரம்பித்தாள். அவளும் பதிலுக்கு மிங்கி மிங்கி பா என்றே சொன்னாள். நாவரசன் பற்றி சொல்லவா வேண்டும். என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். ஹூம், தந்தையைப் போல பிள்ளையாம்.

இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட சங்கரி என் வீட்டுக்கு ஓடி வந்தாள். ''சரசு சரசு உன் மகனையும், பேரனையும் என்னோட அனுப்பறியா, நான் அவங்களை ஒருத்தர் கிட்ட கூட்டிட்டுப் போய்ட்டு வரேன்'' என சொன்னாள். ''உன் பேத்தி நல்லாதானே பேசுறா'' என்றேன். ''ஆமா சரசு அவ நல்லாதான் பேசுற, நீயும் கூட வா'' என அழைத்தாள். ஆச்சரியமா இருந்தாலும் சரி போய்தான் பார்ப்போமே என நாங்கள் சங்கரியுடன் கிளம்பினோம்.

(தொடரும்)

அறுபத்தி நான்காம் மொழி - 5

பழனிச்சாமிச்சியின் குடும்பமே வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அத்தனை பேரையும் வாங்க என அழைத்து உட்கார வைத்தேன். எனக்கு என்ன ஆச்சரியமாகவும் அதே வேளையில் பயமாகவும் இருந்தது எனில் பழனிச்சாமியின் ஒரே தங்கை சங்கரியும், அவளது கணவருடன் வந்து இருந்தாள். பேசுவாளோ மாட்டோளோ என நினைத்துக்கொண்டே ''எப்படி இருக்க சங்கரி'' என்றேன். ''நல்லா இருக்கேன் சரசு'' என புன்னகையுடன் சொன்னாள்.

பவளக்கொடியும், மிங்கி மிங்கி பாவும், அடச் சே, நாவரசனும் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். நாவரசனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார் பழனிச்சாமி. எனக்கு எதுவும் புரியவில்லை.அதற்குள் சின்னவள் பலகாரங்கள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டிருந்தாள். பல கதைகள் பேசினோம், ஆனால் பழைய கதை ஒன்றை மட்டும் பேசாமல் விட்டோம். எனது கணவரும் வந்தார். சங்கரியைப் பார்த்தவர் எனது கண்களைப் பார்த்தார். வயசானால் என்ன, எனக்கா கண்களால் பேசத் தெரியாது, எல்லாம் சுகமே என்றேன். அவரது முகத்தில் புன்னகை படர்ந்தது.

பேசிக்கொண்டே இருந்தால் போதுமா, சமைக்க வேண்டும் என எழுந்தேன். அதெல்லாம் வேண்டாம் என சொன்னார்கள். ஆனால் நான் சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சமையல் அறைக்குள் செல்ல நினைக்கையில் ஒரு நிமிசம் சரசு என சங்கரி சொன்னாள்.

என்னவென திரும்பிப் பார்க்க சங்கரி திருமணப் பத்திரிக்கை ஒன்றை எடுத்தாள். எனக்கு திக்கென ஆகிவிட்டது. இத்தனை நேரம் பேசியபோது திருமணம் பற்றி ஒன்றுமே மூச்சு விடவில்லை. என்ன இது பத்திரிக்கை எனப் பார்த்தேன். அப்படியே பவளக்கொடியையும் பார்த்தேன், அவளது முகம் வெட்கப்பட்டு கொண்டிருந்தது. நம்பவைத்து இப்படி செய்துவிட்டார்களே என வெகு வேகமாக மனம் பிற்காலத்துக்குச் சென்று நின்றது. ''என்னோட பையனுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வைச்சிருக்கேன், நீங்க எல்லாரும் கட்டாயம் வரனும்'' என பத்திரிக்கைத் தந்தாள் சங்கரி. அவளோட கணவர் சேலை, வேஷ்டி குங்குமம் எல்லாம் எடுத்து சங்கரியிடம் கொடுத்தார். ''யார் பொண்ணு'' என்று மிழுங்கி மிழுங்கி கேட்டேன். என்ன சொன்னேன், மிழுங்கி??? என்ன சொன்னேன், மிழுங்கி???

(தொடரும்)

Monday 9 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 4

அந்த வேளைப்பார்த்து பழனியம்மாள் பழரசம் கொண்டு வந்து கொடுத்தார். நாங்கள் பேசிய விசயத்தை பழனியம்மாளிடம் பழனிச்சாமி சொன்னதும் ''ரொம்பச் சந்தோசமான விசயம்'' என மனம் மகிழ்ச்சியுடன் சொன்னார். வேகமாக பழரசம் குடித்துவிட்டு அங்கிருந்து ஊருக்குக் கிளம்பினோம். வந்தது வந்தீங்க தங்கிட்டுப் போகலாமே என சொன்னார்கள் ஊரில் இருந்தவர்கள். வேலை இருக்கிறது என நொண்டிச் சாக்கு சொல்லிவிட்டு கிளம்பியே விட்டோம்.

வழியில் என் கணவர் ஒரு உலகமகா கேள்வியைக் கேட்டு வைத்தார். ''நம்மை பழிவாங்குவதற்கு சரியென அவர் சொல்லி இருப்பாரோ?'' எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. மனம் தேற்றி ''பேசியாச்சு, இனி நடக்கறபடி நடக்கட்டும், நாம என்ன நிச்சயதார்த்தமா பண்ணிட்டு வந்திருக்கோம்'' என ஆறுதல் சொன்னேன்.

வீட்டுக்குப் போனபோது இரவு ஆகி இருந்தது. நாவரசன் மட்டும் தூங்காமல் இருந்தான். நாங்கள் சென்றதும் கடைசிப் பெண் எழுந்துவிட்டாள். ''அம்மா, அண்ணா இன்னும் சாப்பிடலை'' என சொல்லிவிட்டு தூங்கிப் போனாள். சாப்பிடலை என்பதை கூட இவன் சொல்லமாட்டான் என நினைத்துக்கொண்டே தூங்கி இருப்பாள் போல.

சாதம் எடுத்து வைத்தேன். சாப்பிட்டான், நாங்களும் அவனுடன் சாப்பிட்டோம். அவனது முகத்தில் ஆயிரம் கேள்விகள். வாயைத் திறந்துதான் கேளேடா என கத்த வேண்டும் போலிருந்தது. என் மனதை புரிந்து கொண்டவன் போல மிங்கி மிங்கி பா என்றான். சம்மதம் சொல்லிவிட்டார்கள் என்றேன். அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. எனக்கும் அழுகையாய் வந்தது.

பவளக்கொடியிடம் விசயத்தைச் சொன்னேன். ''என்னோட வேலையை சுலபமாக்கிட்டீங்க அத்தை'' என்றாள். அவள் அத்தை என என்னை அழைத்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. இப்படியே நிமிடங்கள், நாட்கள், மாதங்கள் வருடங்கள் என கடந்து சென்றது. ஆனால் நாவரசன் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தான்.

நேற்று பவளக்கொடி வீட்டிற்கு வந்திருந்தாள். படிப்பை முடித்துவிட்டாள் எனவும், ஊருக்குச் செல்லாமல் நாவரசன் வேலைப் பார்க்கும் இடத்திலேயே கணக்காளாராக வேலைக்குச் சேர இருப்பதாகவும் சொன்னதும் எனக்கு நிம்மதியாக இருந்தது. ''எப்பொழுது திருமணம் வைத்துக்கொள்ளலாம்'' என நான் தான் அந்தச் சின்னப்பெண்ணிடம் கேட்டு வைத்தேன். ''அடுத்த முகூர்த்தத்திலேயே வைச்சிக்கிரலாம் அத்தை, ஏன்னா நான் விடுதியிலே தங்க வேண்டியிருக்காதுல்ல'' என்றாள். எனக்கு சுர்ரென்றது. உடனே பெட்டி படுக்கையோடு நேற்றே வரச் சொல்லிவிட்டேன். எங்களுடன் தான் அவள் தங்கி இருக்கிறாள்.

இன்று பழனிச்சாமியும் பழனியம்மாளும் எங்கள் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்ததாக பவளக்கொடி சொன்னாள். நானும் மிகுந்த ஆர்வத்துடனே காத்திருந்தேன்.

(தொடரும்)

Saturday 7 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 3

பவளக்கொடி பேசிவிட்டுச் சென்றுவிட்டாள். நாவரசன் வந்ததும் கேட்டுவிட வேண்டும் என நினைத்திருந்தேன். நாவரசன் வீட்டுக்குள் வந்ததும் பவளக்கொடி வந்துவிட்டுச் சென்றாள் என்றேன். அவனது முகம் மிகவும் சந்தோசமானது. என்ன சொன்னாள்? ஏது சொன்னாள் என்று கேட்கமாட்டானா என நானும் அவனையேப் பார்த்திருக்க ஒன்றுமே பேசாது முகம் அலும்பச் சென்றுவிட்டான். என்ன இது? ஒன்றுமே சொல்லாமல் செல்கிறான் என பின் தொடர்ந்தேன். அவ என்ன சொன்னாளுனு கேட்கமாட்டியா என்றேன். திரும்பிப் பார்த்தவன் புன்னகைத்தான். அவ்வளவுதான், எனக்கு ஐயோ என்றாகிவிட்டது. போடா என சொல்லிவிட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.

என் மற்ற பிள்ளைகள் கொஞ்சம் கூட இதில் தலையிடுவதில்லை, என் கணவரும் கூட. நான் தான் கவலை துரத்தியதில்லை என சொல்லிவிட்டு இப்படி கவலைப்படுகிறேனோ எனத் தோணியது. அன்று இரவே பவளக்கொடி பற்றி கணவரிடம் பேசினேன். நான் பயந்ததைவிட பழனிச்சாமியா என அவரும் பதறினார். நான் ஊருக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருந்தேன். என்னுடன் உடன் வருவதாக அவர் சொன்னார். அப்பாடா என இருந்தது எனக்கு. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம். நாவரசன் மிகுந்த சந்தோசத்தில் இருந்தான்.

நானும் என் கணவரும் எனது பிறந்த ஊரான சிங்கம்புணரியைச் சென்றடைந்தோம். என்னை ஊரில் அடையாளம் கண்டுகொண்டவர்கள் இப்பத்தான் வழி தெரிஞ்சதோ எனக் கேட்டார்கள். வழி தெரியனும்னு வந்திருக்கேன் என்று சொல்லி எங்கள் பூர்விக வீட்டிற்குப் போனோம். கொஞ்ச நேரத்தில் பழனிச்சாமியைப் பார்க்கச் சென்றோம். எனக்கு படபடவென நெஞ்சு அடித்துக்கொண்டது.

பழனிச்சாமி வீட்டில்தான் இருந்தார். அவரது மனைவி பழனியம்மாள் என்னைப் பார்த்து உள்ளே வா சரசு என அழைத்துச் சென்றார். பழனிச்சாமி என்மேல் கோபமாகவே இருப்பார் என்று எதிர்பார்த்து வந்தது பொய்த்துப் போனது. ''வாம்மா தங்கச்சி, ஊரை விட்டு ஒரேயடியா ஒதுங்கிப் போய்ட்ட'' என்றார். எனக்குப் பழசெல்லாம் மறந்து போனது அப்போது.

என் குழந்தைகள் பற்றியெல்லாம் விசாரித்தார். மூத்தவன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே தான் சொல்றானா? என்றார். பின்னர் பவளக்கொடி பற்றியும் சொன்னார். அவரது தங்கை மணமுடித்த இடத்தில் சிறப்பாக இருப்பதாக சொல்லி சந்தோசப்பட்டார். எனக்கு ரொம்பவே தைரியம் வந்தது. ஆனால் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசும் என் மகனை மருமகனாக எப்படி இவர் ஏற்றுக்கொள்வார். சின்னவனை வேண்டுமெனில் கல்யாணம் பண்ணிக்கிரட்டும் என சொன்னால் மறுபடியும் இவரை பகைத்துக்கொள்ள முடியாது. என் கணவர் வாயேத் திறக்கவில்லை.

நான் வந்தது காரணம் என்னன்னா அண்ணே என நான் முழுவதையும் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்து கொட்டி விட்டது. ''ஓ தாராளமா பண்ணிக்குவோம்'' என்றாரேப் பார்க்கலாம். எனக்கு உடல் புல்லரித்தது. அதற்குள் அதுவரை ஒன்றுமே பேசாமல் இருந்த என் கணவர் ''நிசமாத்தான் சொல்றீங்களா'' என்றார். ''உங்களை மாதிரியா, என்னை நினைக்கிறீங்க'' என்றார் பழனிச்சாமி. எதுவும் விபரீதமாகி விடக்கூடாதே என மிங்கி மிங்கி பா தனை மனதுக்குள் பலமுறை சொல்லிக்கொண்டேன். (தொடரும்)

Friday 6 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 2

2. ஜெயராணியையும் உடன் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவளை அழைத்தபோது வேலை இருக்கிறது என மறுத்துவிட்டாள். நான் மட்டும் தனியாக நாவரசன் வேலைப் பார்க்கும் இடத்துக்குச் சென்றேன். ஜெயராணி சொன்னதுபோலவே ஒரு பெண் நாவரசனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது. மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்லும் இவனிடம் அப்படி என்ன இவள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கக்கூடும் என நினைத்தவாரே நெருங்கிச் சென்றேன். அவள் பேசி முடித்துவிட்டாள் போலும், என்னை நோக்கி நடந்து வரத் தொடங்கினாள்.

அவளை நிறுத்தினேன். நீ யார் எனக் கேட்டேன். நல்லவேளை அவள் நன்றாகவே பேசினாள். எங்கே இவளும் மிங்கி மிங்கி பா என்று சொல்லி விடப்போகிறாளோ என ஆத்திரத்துடன் பயமும் இருக்கத்தான் இருந்தது. அதற்குள் நாவரசன் அங்கேயிருந்து சென்றிருந்தான். என்னை கவனிக்கவில்லை போலும். பெயர் பவளக்கொடி எனவும் ஊர் பேர் சொன்னதும் எனக்கு ஆர்வம் வரத்தொடங்கிவிட்டது. யார் மகள் எனக் கேட்டபோது பழனிச்சாமி மகள் என சொன்னதும் எனக்குப் புரிந்தது. ஜபராஜ் கல்லூரியில் படிப்பதாகவும் மாலை நேரத்தில் இங்கு வந்து வேலை பார்ப்பதாகவும் சொன்னாள்.

அவன் எனது மகன் தான் என்று சொன்னேன். ஓ அப்படியா? என ஆர்வமாகக் கேட்டாள். பிறந்த ஊருக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் எங்களை அவளுக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்ன பேசினாய் எனக் கேட்டேன். மிங்கி மிங்கி பா என்றாள். அவளை ஓங்கி அறைந்து விடலாம் போல் இருந்தது எனக்கு. தொலைவில் இருந்து பார்த்தபோது நீ சிரித்துப் பேசினாயே என்றேன் சற்றும் வெட்கமில்லாமல். நான் பேசினேன், அவர் மிங்கி மிங்கி பா என பல தோரணைகளில் சொன்னார் என்றாள். இனிமேல் எனது உணர்ச்சிகளை இப்படி தேவையில்லாமல் அலைபாய விடக்கூடாது என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

காபி போட்டுக் கொடுத்தேன். இரசித்துக் குடித்தவள் ஏன் நாவரசன் மிங்கி மிங்கி பா சொல்கிறார் தெரியுமா என்றாள். நானும் அவளுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்துக்கொண்டு தெரியாது, உனக்குத் தெரியுமா என்றேன் ஆவலுடன். நானும் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து கேட்கிறேன், அவர் சொல்ல மறுக்கிறார். ஆனால் வேலை இடத்தில் எல்லோரும் அவரை மிகவும் மதிக்கிறார்கள். புன்முகத்துடன் மிங்கி மிங்கி பா என சொல்லி செல்கிறார்கள். சற்றுக்கூட கோபம் கொள்வதில்லை அவர் மேல். இவரும் புன்னகையுடன் நன்றாக வேலை செய்கிறார் என சொன்னதும் எனக்கு இது தெரிந்ததுதானே என்றுதான் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் ம் அப்புறம் என்றேன்.

என்னிடமே தைரியமாக எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னாள். என்னதான் என் ஊரு மண்ணாக இருந்தாலும் என்னிடமே இப்படிச் சொல்லலாமா என நினைத்தாலும் மனதுக்குள் சந்தோசமாகத்தான் இருந்தது. யார் இவனுக்கு வாழ்க்கைப்படுவா என இருந்த நான் எங்கள் ஊர்ப் பெண்ணே வந்து சொல்வது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பழனிச்சாமிக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என நினைக்கும்போது நான் மிங்கி மிங்கி பா சொல்லிவிடுவேன் போல.

(தொடரும்)

Tuesday 6 January 2009

அறுபத்தி நான்காம் மொழி - தொடர்கதை

1.

பிறந்து வளர்ந்தபோது ங்கா சொல்லாமல் வளர்ந்த குழந்தை. மேலும் வளர்ந்தபோதும் ம்மா என்று சொன்னதே இல்லை. பள்ளிக்குச் சென்று சேர்த்தபோது உன் பெயர் என்ன என இவனைக் கேட்டபொழுது 'மிங்கி மிங்கி பா' என்று மட்டுமே சொன்னது. ஆனால் நாங்கள் வைத்ததோ நாவரசன். இன்று நாவரசனுக்கு இருபது வயதாகிறது. மிங்கி மிங்கி பா வைத் தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை. நாங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது. சாதாரணமானவனாகவே இருந்தான். பள்ளிக்குச் சென்றபோது பிறர் இவனைக் கேலி செய்ததால் நாங்கள் வலுக்கட்டாயமாக இவனை பள்ளிக்குச் செல்லாமல் நிறுத்திவிட்டோம்.

யார் என்ன கேட்டாலும் மிங்கி மிங்கி பா மட்டுமே. எத்தனையோ மருத்துவர்களை பார்த்தாகிவிட்டது. எந்த குறையும் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். சிறு வயதாக இருக்கும்போதே பேச்சுப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றோம். அங்கே அவர்கள் பேச இவன் பார்த்துக் கொண்டே இருப்பான், ஆனால் அவர்கள் சொல்வது போல சொல்லவும் மாட்டான். ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் எனக் கேட்டபோது மிங்கி மிங்கி பா என்று மட்டுமே சொல்வான். அவர்களால் எதுவும் செய்ய இயலாது என கூறிவிட்டார்கள். வேண்டாத கோவில் இல்லை. எப்படியாவது இவனை பேச வைத்துவிடு என எத்தனையோ விரதம் இருந்துவிட்டேன்.

முதலில் எரிச்சலாக இருந்த எங்களுக்கு பின்னர் பழகிப் போனது. இப்பொழுதெல்லாம் எதையுமே கேட்பது இல்லை. எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என ஒருநாளும் வந்து கேட்டதும் இல்லை. எழுதப் பழகிக்கொண்டாலாவது எழுத்தில் மூலம் கேட்கட்டும் என எழுதச் சொல்லிக்கொடுத்தோம். ஒரு எழுத்தையும் படிக்காமல் சரியாக மிங்கி மிங்கி பா மட்டும் படித்துக் கொண்டான். எழுத்து மாற்றி எழுதவே மாட்டான். மிங்கி என்பதை அம்மா என சொல்லிக் கொடுத்திருக்கலாமோ என சில நேரங்களில் எனக்குத் தோன்றும். அவன் அம்மா என எழுதியாவது நான் பார்த்திருப்பேன். எங்களுக்கு மேலும் சில குழந்தைகள் இருந்ததால் இவனைப் பற்றிய கவலை அதிகம் துரத்தியதில்லை.

எந்த வேலைக்குச் செல்வான் எப்படி வாழ்வான் என இருந்தால் சரியாக பதினாறு வயதானபோது எங்கள் ஊருக்கு அருகாமையில் இருந்த ஒரு உடல்நலமற்றோர் காப்போர் இல்லத்துக்குச் சென்று அவனாகவே வேலைக்குச் சேர்ந்துவிட்டான். இதை என் கணவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னால் என்ன கேட்க முடியும்? மிங்கி மிங்கி பா என்று மட்டுமே பதில் சொல்லப் போகிறான். ஆனால் நான் அவன் வேலை சேர்ந்த இடத்தில் சென்று விசாரித்தேன். மிங்கி மிங்கி பா என்று மட்டுமே சொன்னதாக சொன்னார்கள். அவனது அம்மாதான் நான் என சொல்லி அவன் மனவளர்ச்சி குன்றியவன் இல்லை என்று மட்டும் சொன்னேன். என் கணவர் இதற்கு முன்னரே இதை சொல்லியிருக்க வேண்டும், எங்களுக்குத் தெரியும் என்றே சொன்னார்கள்.

இப்படியாய் இருந்த நிலையில் ஒரு பெண் இவனைப் பார்த்து மிகவும் நேசமாக சில நாட்கள் பழகி வருவதாக பக்கத்து வீட்டு ஜெயராணி நேற்றுதான் சொல்லிவிட்டுப் போனாள். எனக்கு மனதில் சின்ன ஆசை பிறந்தது. ஒருவேளை அந்தப் பெண் இவனுக்குப் பேச கற்றுக்கொடுத்துவிடலாமே எனத் தோன்றியது. யார் அந்தப் பெண் என்று விசாரிக்கத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

(தொடரும்)