Monday 9 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - 4

அந்த வேளைப்பார்த்து பழனியம்மாள் பழரசம் கொண்டு வந்து கொடுத்தார். நாங்கள் பேசிய விசயத்தை பழனியம்மாளிடம் பழனிச்சாமி சொன்னதும் ''ரொம்பச் சந்தோசமான விசயம்'' என மனம் மகிழ்ச்சியுடன் சொன்னார். வேகமாக பழரசம் குடித்துவிட்டு அங்கிருந்து ஊருக்குக் கிளம்பினோம். வந்தது வந்தீங்க தங்கிட்டுப் போகலாமே என சொன்னார்கள் ஊரில் இருந்தவர்கள். வேலை இருக்கிறது என நொண்டிச் சாக்கு சொல்லிவிட்டு கிளம்பியே விட்டோம்.

வழியில் என் கணவர் ஒரு உலகமகா கேள்வியைக் கேட்டு வைத்தார். ''நம்மை பழிவாங்குவதற்கு சரியென அவர் சொல்லி இருப்பாரோ?'' எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. மனம் தேற்றி ''பேசியாச்சு, இனி நடக்கறபடி நடக்கட்டும், நாம என்ன நிச்சயதார்த்தமா பண்ணிட்டு வந்திருக்கோம்'' என ஆறுதல் சொன்னேன்.

வீட்டுக்குப் போனபோது இரவு ஆகி இருந்தது. நாவரசன் மட்டும் தூங்காமல் இருந்தான். நாங்கள் சென்றதும் கடைசிப் பெண் எழுந்துவிட்டாள். ''அம்மா, அண்ணா இன்னும் சாப்பிடலை'' என சொல்லிவிட்டு தூங்கிப் போனாள். சாப்பிடலை என்பதை கூட இவன் சொல்லமாட்டான் என நினைத்துக்கொண்டே தூங்கி இருப்பாள் போல.

சாதம் எடுத்து வைத்தேன். சாப்பிட்டான், நாங்களும் அவனுடன் சாப்பிட்டோம். அவனது முகத்தில் ஆயிரம் கேள்விகள். வாயைத் திறந்துதான் கேளேடா என கத்த வேண்டும் போலிருந்தது. என் மனதை புரிந்து கொண்டவன் போல மிங்கி மிங்கி பா என்றான். சம்மதம் சொல்லிவிட்டார்கள் என்றேன். அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. எனக்கும் அழுகையாய் வந்தது.

பவளக்கொடியிடம் விசயத்தைச் சொன்னேன். ''என்னோட வேலையை சுலபமாக்கிட்டீங்க அத்தை'' என்றாள். அவள் அத்தை என என்னை அழைத்தது எனக்கு சந்தோசமாக இருந்தது. இப்படியே நிமிடங்கள், நாட்கள், மாதங்கள் வருடங்கள் என கடந்து சென்றது. ஆனால் நாவரசன் மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்லிக் கொண்டு இருந்தான்.

நேற்று பவளக்கொடி வீட்டிற்கு வந்திருந்தாள். படிப்பை முடித்துவிட்டாள் எனவும், ஊருக்குச் செல்லாமல் நாவரசன் வேலைப் பார்க்கும் இடத்திலேயே கணக்காளாராக வேலைக்குச் சேர இருப்பதாகவும் சொன்னதும் எனக்கு நிம்மதியாக இருந்தது. ''எப்பொழுது திருமணம் வைத்துக்கொள்ளலாம்'' என நான் தான் அந்தச் சின்னப்பெண்ணிடம் கேட்டு வைத்தேன். ''அடுத்த முகூர்த்தத்திலேயே வைச்சிக்கிரலாம் அத்தை, ஏன்னா நான் விடுதியிலே தங்க வேண்டியிருக்காதுல்ல'' என்றாள். எனக்கு சுர்ரென்றது. உடனே பெட்டி படுக்கையோடு நேற்றே வரச் சொல்லிவிட்டேன். எங்களுடன் தான் அவள் தங்கி இருக்கிறாள்.

இன்று பழனிச்சாமியும் பழனியம்மாளும் எங்கள் வீட்டிற்கு வருவதாக சொல்லி இருந்ததாக பவளக்கொடி சொன்னாள். நானும் மிகுந்த ஆர்வத்துடனே காத்திருந்தேன்.

(தொடரும்)

1 comment:

cheena (சீனா) said...

கதை நன்கு செல்கிறது - நல்வாழ்த்துகள் வெ.இராதாகிருஷ்ணன் - நட்புடன் சீனா