Thursday 5 February 2009

லெமூரியாவும் அட்லாண்டீஸும் - அத்தியாயம் 2

இதோ இந்த ராத்திரியிலே என் வீட்டுக்காரி தூங்கிட்டு இருக்கா. எனக்குத் தூக்கமே வரலை. எப்பவுமே படுத்ததும் தூங்கிருவேன். எந்த பிரச்சினைனாலும் அதுபத்தி யோசிக்கமாட்டேன். ஆனா மனுசாளைப் பத்தி எழுதுங்கோனு சொன்னதும் எனக்கு என்ன எழுதறதுனு தெரியலை. அமரர் கல்கி கண்ணுக்கு முன்னால வந்தார். தி. ஜானகிராமன், பாலகுமாரன், இந்திரா பார்த்தசாரதினு நிறைய எழுத்தாளர்கள் என் கண்ணுக்கு முன்னால வந்தாங்க. மனுச வாழ்க்கையை எல்லாரும் அலசிட்டாங்கனு மனசுக்குப் பட்டிச்சி. நான் அதிக விரும்பிப் போற நூலகம் திருவானைக்கோவிலுல இருக்கு. நானும் என் வீட்டுக்காரியும் தான் போவோம். அவ ஸ்ரீமத் பாகவதம் எடுத்துப் படிச்சிட்டு இருப்பா. வீட்டுல வாங்கி வைச்சிருக்கேன், இருந்தாலும் அங்க வந்தாலும் அதைத்தான் படிப்பா. எவ்வள சமத்தா தூங்குறா? ம்... இவ மட்டும் இல்லைன்னா நா உயிர் வாழுறதல என்ன அர்த்தம் இருக்கு. நான் நினைச்சிட்டே இருக்கறப்ப இருமிட்டே திரும்பி படுத்தவ என்னைப் பார்த்து 'என்னண்ணா தூங்கலையா'னு கேட்டா.

'மனுசாளைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்' அதான் தூக்கம் வரலைனு சொன்னேன். 'நல்லா யோசியுங்கோண்ணா' னு என்னோட யோசனைக்கு தொந்தரவு தராம பேசமா திரும்பி தூங்கிட்டா. இப்படித்தான் நா என்ன செஞ்சாலும் அன்பா கரிசனையா சொல்லிட்டு அவளோட வேலையப் பார்க்க போயிருவா. இதுலதான் காதலடோ வலிமையிருக்குனு எனக்கு மனசு சொல்லிக்கிரும். வீட்டு வெளியில அந்த ராத்திரியிலே வந்து நின்னேன். கோபுரத்தில் விளக்கு இன்னும் எரிஞ்சிட்டு இருந்தது. 'ரங்கநாதா எனக்கு மனுசாளைப் பத்தி என்ன எழுதறதுன்னு தெரியலை, நீ என்ன எழுதறதுனு வந்து சொல்ல மாட்டியா'னு சின்ன குழந்தை மாதிரி கை இரண்டையும் தலைக்கு மேல தூக்கி சேவிச்சுக்கிட்டேன்.

கொஞ்ச நேரத்தில கதவை அடைச்சிட்டு வந்து உட்கார்ந்துக்கிட்டேன். நல்லா தூங்கிட்டு இருப்பானு பார்த்தா என் வீட்டுக்காரி பால் சுட வைச்சி என்கிட்ட வந்து 'இந்தாங்கண்ணா குடிச்சிட்டு யோசனை பண்ணுங்கோ' னு தந்தா. 'என் யோசனையில உன் தூக்கத்தை கெடுத்துட்டேனே'னு சொன்னேன். சிரிச்சிட்டே தூங்கப் போறேன் ஒரு வரியாவது ஆரம்பிச்சி வையுங்கோண்ணா' னு சொல்லிட்டுப் போய்ட்டா.

நான் சிடி பிளேயரை எடுத்துட்டு வந்து வால்யூமை குறைச்சலா வச்சி ஒரு பாட்டு போட்டேன். ஓ இந்த சிடி பிளேயர் என் முத பொண்ணு எனக்கு பத்து வருசம் முன்னால வாங்கித் தந்தது. அவ்ளதான் சொல்ல முடியும். 'நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா, நின்னை சரணடைந்தேன்' அந்த பாட்டு கேட்டதும் எனக்கு என்னை அறியாம கண்ணுல நீர் கோர்த்துக்கிச்சி. அந்த பாட்டில நான் என்னையவே மறக்க ஆரம்பிச்சது அந்த பாட்டு நின்னதும்தான் தெரிஞ்சது. அடுத்த பாட்டு தொடங்கிச்சி 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' அந்த பாட்டை கேட்டதும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்கிட்ட பேசனும்போல இருந்திச்சி. எப்பேர்பட்ட கவிஞன், அந்த சின்ன வயசிலே எத்தனை அறிவுனு நினைக்கிறப்போ என்னோட கடந்த வாழ்க்கை எல்லாம் ஒரு கணம் மனசில வந்து போச்சு. அந்த பாட்டு முடிஞ்சதும் சிடி பிளேயரை நிப்பாட்டிட்டு மனுசாளைப் பத்தி யோசிச்சேன்.

திடுதிடுப்புனு விழிச்சிப் பார்த்தேன் ஐஞ்சு மணி நேரம் அப்படியே மேசையில விழுந்து தூங்கிட்டேன், காலையில நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்காரி எழுந்திருவா. இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு, மெல்ல எட்டிப் பார்த்தேன், அசையாம நல்லா தூங்கிட்டு இருந்தா. எல்லோரும் பாராட்டின சந்தோசம் அவ முகத்தில இன்னும் இருந்துச்சு. ஒரு வரியாவது எழுதச் சொன்னாளேனு ஒரு புது நோட்டு எடுத்தேன். முத வரி இப்படித்தான் எழுதினேன். எழுதறதை எல்லாம் உங்களுக்கு காட்டுறேன். நான் நீல நிறம் தான் உபயோகிப்பேன்.

மீனாக வந்த ரங்கநாதா, தானாக எழுத நினைக்கையில் தேனாக விசயம்தனை நீ சொல்லிடுவாய், என் மனையாளின் அகலாத அன்பை நிறைவேற்றவே.
அப்படி எழுதி வைச்சிட்டு என் வீட்டுக்காரி கொண்டு வந்து தந்த பால் அப்பதான் கண்ணுக்கு பட்டது, பால் சூடு ஆறி இருந்தது. அதை அப்படியே எடுத்து குடிச்சேன். நீங்களும் குடிக்கிறீங்களா? இல்லை வேண்டாம், அவ எழட்டும் சுட வைச்சி பால் தரச் சொல்றேன்.

(தொடரும்)

No comments: