Thursday 5 February 2009

லெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 2 தொடர்ச்சி.

இந்த காலங்காத்தாலே எழுந்திருக்க பழக்கம் சின்ன வயசில இருந்து வந்தது. நாங்க இரண்டுபேரும் ஸ்நானம் பண்ணிட்டு தியானத்தில உட்கார்ந்துருவோம். இன்னைக்கும் அதுதான் செஞ்சோம். அதுக்கு முன்னால ஒன்னு சொல்லனும், என் வீட்டுக்காரி நல்லா கோலம் போடுவா. வாச கூட்டி, தண்ணி தெளிச்சி கோலம் போடற வழக்கம் இன்னும் மாறலை.
'மனுசாளைப் பத்தி யோசிச்சேளான்னா' னு கேட்டா. 'யோசனையில தூங்கிட்டேன், ஆனா நீ சொன்ன மாதிரி ஒரு வரி எழுதி வைச்சிருக்கேன், படிக்கிறேன்'னு சொல்லி உங்களுக்கு காட்டுன அந்த வரியை படிச்சேன். என் கையைப் புடிச்சி அவ கண்ணு இரண்டையும் தொட்டுக்கிட்டா. என் மனசுல சந்தோசம் அலைமோதிச்சி. 'ரங்கநாதர் நிச்சயம் சொல்வாருண்ணா, அவர் சொல்றதைக் கேட்டு எழுதுங்கோண்ணா' னு சொல்லிட்டு பால் சுட வைக்கப் போனா.

'நாயகி உன் முகம் தூங்கறப்போ கூட மலர்ந்து இருந்துச்சி, மனுசனுக்கு பாராட்டு கிடைக்கறப்ப எவ்வள சந்தோசம் பார்த்தியா'னு சொன்னதும் 'அது இல்லைண்ணா, ரங்கநாதர் என் குரலை கேட்டுருப்பாருனு தெரிஞ்சதால வந்த சந்தோசம்ண்ணா' னு சொன்னதும் அந்த காலையில என்னை அறியாம அவ காலுல சாஷ்டாங்கமா விழுந்துட்டேன். 'என்ன காரியம் பண்றேள்ண்ணா' னு பதறிப்போய்ட்டா.

அப்புறம் வீட்டு நடுக்கூடாரத்தில கட்டியிருக்க ஊஞ்சலிலே இரண்டு பேரும் உட்கார்ந்து பால் குடிச்சிட்டு இருந்தோம். 'நீங்க மனுசாளைப் பத்தி எழுதறதை நான் படிக்கனும்ண்ணா, ஆனா நீங்க மனுசாளைப் பத்தி என்ன என்ன மனுசுல வைச்சிருக்கீங்களோண்ணு தெரியலைண்ணா' னு சொன்னதும் 'ஏன் அப்படி சொல்ற நாயகி' னு கேட்டேன்.

'பாராட்டு கிடைக்கறப்ப சந்தோசம் மனுசாளுக்கு வரும்னு நீங்க சொன்னேளே, அதைவிட மத்தவா சந்தோசமா இருக்கறதைப் பார்த்துத்தான் மனுசாளுக்கு உண்மையான சந்தோசம் வரும்ண்ணா, என்ன சொல்றேள்' னு என்னையவேப் பார்த்தா. அவ சொல்றது உண்மைனு சொன்னேன். சிரிச்சா.
'உண்மையைத்தான் பேசனும்ண்ணா, உங்களுக்கு தெரியாததாண்ணா' சொல்லிட்டு டம்ளரை எடுத்து கழுவி வைச்சிட்டு ஸ்ரீரங்கநாதரை சேவிக்க கிளம்பினோம். வழக்கம்போல மல்லிகைப்பூ, அதோட கொஞ்சம் பிச்சிப்பூ வாங்கி தலையில வைச்சி விட்டேன். பூ விற்கிற அம்மா எங்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிடுவா. நாங்களும் அந்த அம்மாவை கும்பிடுவோம். அவகிட்டதான் வழக்கமா பூ வாங்குறது. எந்த நாளைக்கு எந்த பூ வாங்குவோம்னு கூட அந்த அம்மாக்குத் தெரியும்.

'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்' னு பாடல் காதுல விழுந்தது. என் வீட்டுக்காரியோட கைகளை அழுத்தினேன். எப்பவும் கைகோர்த்துட்டு நடக்கறதுதான் வழக்கம். அவளும் என் கைகளை அழுத்தினா. அந்த அழுத்தத்தில காதலோட பலம் எங்க இரண்டு பேரு மனசுக்கும் தெரிஞ்சது. அந்த பாட்டு கேட்டதும் எப்பவும் ஒருத்தரை ஒருத்தரைப் பார்த்துப்போம். எதுவும் பேசமாட்டோம்.

கோவிலுக்குள்ள போனோம். ஸ்ரீரங்கநாதரை ரொம்ப நேரமா சேவிச்சிட்டு நின்னா. கண் மூடி சேவிக்கற வழக்கம் எங்ககிட்ட இல்ல. ஸ்ரீரங்கநாதரை நா சேவிச்சிட்டு என் வீட்டுக்காரியைப் பார்த்தப்போ அவ கண்ணுல இருந்து கண்ணீர் சொட்டிட்டு இருந்துச்சி. ரங்கநாதானு மனசுல சொல்லிட்டே அவ கண்ணைத் துடைச்சிவிட்டேன். அப்பவும் அவ ரங்கநாதரையேப் பார்த்துட்டே இருந்தா, கண்ணுல நீர் கொட்டுறது நிற்கலை. அங்கே சேவிக்க வந்தவங்க எல்லாம் அப்படியே நின்னுட்டா. பட்டாச்சாரியார்கள் ஓரமா நின்னுட்டாங்க. நேரம் போய்க்கிட்டே இருக்கு, சேவிக்க வந்தவங்க எல்லாம் அமைதியா இருந்தாங்க, எனக்கு ஆச்சரியமா இருந்தது.

சேவிச்சி முடிச்சதும் அப்பத்தான் சுத்தி சுத்திப் பார்த்தா. ஒரே கூட்டமா இருந்தது. பட்டாச்சாரியார்கள் எல்லோரும் ஒரு சேர புன்முறுவலிட்டாங்க. அங்க இருக்குறவங்களைப் பாத்து 'எல்லோரும் என்னை மன்னிச்சிருங்கோ'னு சொன்னா. பட்டாச்சாரியாரும், கூடியிருந்தவங்களும் கையெடுத்து கும்பிட்டாங்க. நாங்க மெல்ல நடந்து ஓரிடத்தில உட்கார்ந்தோம். சேவிக்க வந்தவங்கல சில பேரு வந்து 'எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ மாமி'னு கேட்டாங்க. உட்கார்ந்து இருந்தவ என்னையும் கூட எழுந்து நிற்கவைச்சி அவங்க கேட்டாங்களேனு ஆசிர்வாதம் பண்ணினா. ஒரு சிலரு நின்னு பேசிட்டு போனாங்க.

இத்தனை வருசத்தில நடக்காத அதிசயம் இது, இன்னைக்கு நடந்துருக்கேனு நினைக்கிறப்ப எனக்கு ரங்கநாதர் ஏதோ சொல்ல வராருனு தெரிஞ்சது. என் வீட்டுக்காரிகிட்ட 'என்ன நடந்தது'னு கேட்டேன். 'மனுசாள் எவ்வள உயர்ந்தவா, ஒவ்வொரு அவதாரமா வந்தப்ப மனுசாளை கவுரவிச்சிருக்கார் இந்த ரங்கநாதர், மனுசாளை அன்போடவும் கருணையோடவும் இருக்கச் சொல்றதுக்கு மனுசாளாவே இவா வந்துருக்காளேனு நினைச்சிட்டு அப்படியே நின்னுட்டேண்ணா. மத்தவாளுக்கு இடைஞ்சல் பண்ணிட்டேண்ணா'னு சொன்னா. அடுத்தவங்க சந்தோசமா இருக்கனும்னு எப்பவும் சந்தோசமா வேண்டிப்பா. மனுசாளைப் பத்தி எனக்கு என் வீட்டுக்காரி சொன்னதும் மனசில சந்தோசம் இன்னும் அதிகமாச்சுது. 'நீ இடைஞ்சல் பண்ணலை, எல்லாம் அமைதியா வேண்டிட்டு இருந்தா'னு சொன்னேன்.

பிரசாதம் சாப்பிட்டோம். சாப்பிட்டுட்டு இருக்கறப்பவே 'ஏண்ணா லைப்ரரி போலாமாண்ணா'னு கேட்டா. 'தாராளாம போகலாம்'னு சொன்னேன். அங்கே இருந்து நாங்க இரண்டு பேரும் திருவானைக்கோவிலுக்கு ஒரு ஆட்டோவில போனோம். ஆட்டோவை அந்த பையன் ரொம்ப மெதுவா ஓட்டிட்டுப் போனான். எங்க உடம்பு அலுத்துக்கப்படாதுனு மெதுவா ஓட்டுறதா சொன்னவன், அவனுடைய குடும்பம், ஊரு உலகம் பத்தி சொல்லிட்டே வந்தான். நாங்க திருவானைக்கோவிலுல இறங்கியதும் அந்த பையனை ஒரு நிமிசம் நிற்கச் சொல்லி கடையில ஆப்பிள் ஆரஞ்சு எல்லாம் வாங்கி ஆஸ்பத்திரியில இருக்குற அவங்க அம்மாகிட்ட கொடுக்கச் சொன்னோம். அப்போ அவனோட கண்ணுல கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்துச்சு, எனக்கு சங்கடமா இருந்திச்சி.

லைப்ரரிக்குள்ள போனோம். 'வாங்கோண்ணா'னு எங்களை லைப்ரரியன் வரவேற்றார். என் வீட்டுக்காரி ஸ்ரீமத் பாகவதத்தை கையில் எடுத்துக்கிட்டா. நா மனுசாளைப் பத்தி எழுதற யோசனையிலே இருந்தேன். அப்பத்தான் ஒரு விசயம் மனசில பட்டுச்சு. அன்பே கருணையா உருவான மனுசாளைப் பத்தி எழுதனும்னு அப்பத்தான் தோணிச்சி. இப்போ இருக்கறமாதிரி அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கற மனுசாள் மாதிரி எல்லாருமே அன்பும் கருணையும் கொண்டவங்களா இருக்கற உலகத்தை பத்தி நினைக்க ஆரம்பிச்சேன். கண்ணுல ஒரு புத்தகம் பட்டுச்சு. அந்த புத்தகம் லெமூரியாவைப் பத்தியது. எடுத்து புத்தகத்தில எதார்த்தமா திறந்து எழுபதாவது பக்கம் எடுத்து படிச்சேன். ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. அந்த சந்தோசத்தில 'மனுசாளைப் பத்தி எழுத யோசனை வந்துருச்சினு' என் வீட்டுக்காரிக்கிட்ட முணுமுணுத்தேன். ரொம்ப சந்தோசப்பட்டா. நானும் என் வீட்டுக்காரியோட ஆவலை நிறைவேற்ற அந்த ரங்கநாதர் வழிகாட்டிட்டாருனு நினைச்சி சந்தோசப்பட்டேன். நீங்களும் சந்தோசமா இருக்கீங்களா?

No comments: