Thursday 12 February 2009

தலைவிதி தலைமதி - 3

ஈர்ப்பு விசையும் மனவிசையும்:

எல்லா கோள்களும் அதன் பாதையில் ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கக்கூடிய காரணம் ஈர்ப்பு விசையும் அதனுடன் கூடிய இயக்க விசையும். எப்பொழுது ஈர்ப்புவிசையை சமநிலைப்படுத்தும் இயக்க விசை இல்லாமல் போகிறதோ அப்பொழுது கோள்கள் தடம் மாறிப் போகும். இதனை பல விண்கற்கள் இடம் மாறுவதன் மூலம் அறியலாம். சிறு துகள்களும் இந்த 'விதி'க்கு உட்படுகிறது.

இன்னதுதான் நடக்கும் என ஒரு விசயத்தை இருக்கும் பொருள் கொண்டே ஒருவர் கணித்துச் சொல்ல முடியும், இல்லாத ஒன்றை வைத்து கணித்துச் சொல்ல முடியாது. இதனால்தான் இது நடக்கும் எனும் விசயங்களுக்கு இரண்டில் ஒன்றுதான் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று நடக்கும், மற்றொன்று நடக்காது. நடந்தால் அட நடந்துவிட்டதே என சொல்லலாம், நடக்கவில்லையெனில் நம்ம கையிலா இருக்கிறது என சொல்லலாம்.

அறிவியல் கொள்கைகள் என்பது ஒன்றும் விளக்கத்தின் எல்லைக்கோடு அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள் சிந்தனை செய்ததின் பொருட்டு வந்த விசயங்கள் அவை. இப்படி இருந்து இருக்கலாம் என சொல்ல முடியுமே தவிர பல விசயங்களை அறிவியல் நிரூபிக்க முடியாது, அப்படி கடந்த கால விசயத்தை நிரூபிக்கும் பொருட்டு நிகழ்கால நிலையில் இருந்து பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்கும் பார்வை இன்றைய நிலைக்கு சரியென வருமே தவிர என்றைக்குமே அது சரியென வராது.

நமது மூளையில் சில விசயங்கள் திணிக்கப்பட்டு விடுகின்றன, நம்மை நாம் அறியாமல் சில விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்கிறோம், அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலைதான் அறிவியல் கொள்கைகளின் நிலை.

ஆன்மிகவாதிகள் இயற்கை என ஒதுக்கப்படும் விசயங்களை இறை என சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். எல்லாமே இறை என்பதுதான் அவர்களது கோட்பாடு. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதுதான் அசைக்கமுடியாத கோட்பாடு, அப்படித்தான் ஆன்மிகம் அறிவியலை சர்வ சாதாரணமாக வெற்றி கொண்டுவிடுகிறது. அந்த வகையில் பார்த்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட ஆன்மிகத்துக்கு உட்பட்டவையே என்பதுதான் முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டிய விசயம்.

துகள்களாகவும் தூசியாகவும் இருந்துதான் மனிதனாக வந்து இருக்கிறோம் என்கிறது அறிவியல்! இதே பெரிய அற்புதம்தான். நம்பிக்கை கொண்டு இருப்பவர்களுக்கு மகான்களாய் மனிதர்கள் அற்புதங்கள் செய்ததாக கருத வாய்ப்புண்டு, நம்பிக்கை அற்றவர்களுக்கு அப்படி என்ன அற்புதங்கள் செய்து விட்டதாக நினைக்கிறீர்கள் என கேட்க வழியுண்டு. சகல ஜீவராசிகளிலும் அன்பு கொண்டு இருங்கள் என ஒருவர் சொல்ல அப்பொழுது உங்களுக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. இப்படியும் நடக்கும் அப்படியும் நடக்கும் எனும் செயல்பாடுகளில் இப்படியே நடக்கிறது என வரும்பொழுது மனம் அதில் லயிக்கிறது. அப்படியே நடக்கும் என ஒரு முறை வந்தாலும் மனம் சஞ்சலம் அடைகிறது.

என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு மனிதரும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பொருட்டே பல விசயங்களை உற்று நோக்க மறந்துவிடுகிறார்கள் அதில் நானும் அடக்கம். நம்பிக்கை என வரும்போது பல விசயங்கள் மறைந்து கொள்கின்றன, ஏற்றுக்கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகின்றன. மேலும் மகான்கள் அற்புதம் செய்ததாக எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இல்லை, இது எல்லாம் தவறுதலாக கற்பிக்கப்பட்ட விசயம்.

ஒரு விசயத்தில் ஈடுபாடு கொள்ளும் மக்கள் அதனை தங்களால் தனிப்பட்ட முறையில் செய்யாமல் போகமுடியாத போது, ஒருவரை தலைமையாக ஏற்றுக்கொண்டு அவரைப் போற்றுதல் எனும் முறைதான் இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் பெரும் மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் கண்கூடாக காணலாம். எனவே மகான்களால் பெரும் அளவில் பூமியில் மாற்றம் நிகழ்ந்ததாக எனக்கு ஒன்றும் இதுவரைக்கும் தெரியவில்லை.

நம்பிக்கையாளர்கள் என்னை மன்னிக்கவும்! தெரிந்து கொண்டதாய் எண்ணும்போதே அறியாமை முன்னின்று வந்துவிடுவதை அத்தனை எளிதாக தவிர்க்க இயலவில்லைதான்!

No comments: