Friday 13 February 2009

தலைவிதி தலைமதி - 7 பிளாசிபோ

தண்ணீர் சிகிச்சை முறை கூட ஒருவகை பிளாசிபோ தான். ஆனால் தற்போதைய ஆய்வின் படி ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கும் என்பதால் வெறும் கற்பனை என தெரியவந்துள்ளது.

இந்த பிளாசிபோவுக்கு எனது ஆய்வுக்கூடத்தில் நடந்த ஒரு சின்ன உதாரணம். இருமலைக் கட்டுப்படுத்த ஒரு மூலக்கூறுதனை கண்டுபிடித்து இருக்கிறோம். அந்த மூலக்கூறு உண்மையிலே சிறந்ததா என கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம். இதனை மேலும் உறுதிபடுத்த குவைத் நாட்டில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு என்னைச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். நானும் சரி என சொன்னேன். அந்த ஆய்வகமானது இங்கு பயின்ற மாணவரால் நடத்தப்பட்டு வருகிறது. சில வாரங்கள் முன்னர் என்னிடம் அந்த ஆசிரியர் வந்து குவைத் ஆய்வகத்திற்கு தண்ணீர் மட்டும் அனுப்பி மருந்து என சொல்லி இருப்பதாகவும் வரும் முடிவு பொறுத்தே நாம் மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டும் என கூறிவிட்டார். என்னால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. நான் சிரித்ததும் அவரும் சிரித்துவிட்டார். இதுதான் பிளாசிபோ!

சிரிப்பாக எனக்குத்தான் இருக்கும் ஆனால் பீச்சர் எனும் ஆய்வாளருக்கு அப்படியில்லை. பீச்சர் 15 வித வித நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியை கையில் எடுத்தார். அந்த 15 ஆராய்ச்சிகளை ஆராய்ந்தவர் இந்த பிளாசிபோ மூலம் 35 சதவிகிதம் தேர்ச்சி அடைந்தார்கள் என தனது ஆய்வுக்கட்டுரையில் எழுதினார். ஆனால் அதற்குப் பின்னால் நடந்த ஆராய்ச்சிகளை ஆராய்ந்தபோது பீச்சர் சொன்னதைவிட பிளாசிபோ சற்று அதிகமாகவே நோயினை தீர்த்து இருப்பதாக தெரியவந்தது. இந்த பிளாசிபோவுக்கு நோய் தீர்க்கும் ஆற்றலுண்டு என மின்னல் வேகத்தில் பல ஆராய்ச்சிகளை ஆராய ஆரம்பித்த பெருமை பீச்சர் எனும் ஆய்வாளருக்குத்தான் சேரும்.

வலி, மனநிலை பாதிப்பு போன்ற நோய்களில் 60 சதவிகிதம் பிளாசிபோவால் முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள் எனவும், மனநிலை நோயாளிகளில் மருந்துக்கும், பிளாசிபோவுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியில் எதையுமே சரி என அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், 1997 ல் கீய்ன்லே மற்றும் கீய்ன் பீச்சர் கூறிய அனைத்து ஆராய்ச்சியையும் திரும்பவும் சரிபார்த்து பீச்சர் சொன்னது அப்பட்டமான பொய் என காட்டினார்கள். பிளாசிபோவுக்கு இங்கே என்ன வேலை என கூறி ஒரு நோயில் ஏற்படும் முன்னேற்றத்திற்கு வேறு சில காரணிகளும் உண்டு, அதனை கருத்தில் கொள்ளவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பாவ்செல் எனும் ஆய்வாளர் சொன்ன வாசகம் மிகவும் யோசிக்க வேண்டியது. பொதுவாக ஒரு நோய் தானாக, இயற்கையாக மாற்றம் கொள்ளக்கூடியது மருந்து உட்கொண்டாலும் சரி, உட்கொள்ளாவிட்டாலும் சரி, எனவே அதைக் கருத்தில் கொள்ள வேண்டும் அதை விடுத்து பிளாசிபோ நோய் தீர்க்கும் என சொல்வது விந்தையானது என கடந்த வருடம் அறிவித்து உள்ளார்.

ஒரு ஆராய்ச்சியில் பிளாசிபோவால் முன்னேற்றம் என சொன்னபோது அதுகுறித்து மற்ற ஆராய்ச்சியாளர் சொன்னது இந்த முடிவுகள் எதைத் தெரிவிக்கின்றது எனில் ஒன்று செய்முறையில் குளறுபடி இருக்க வேண்டும் அல்லது முடிவுகளை கண்மூடி எழுதி இருக்க வேண்டும். இப்படி பிளாசிபோ முன்னேற்றம் தந்ததாக கூறும் ஆய்வுகள் ஒருபக்கமும், அது கண்கட்டு விளையாட்டு என மறுபக்கமும் கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

பிளாசிபோ என்பது மருந்து மற்றும் சிகிச்சை முறை அற்றது என அர்த்தப்படும். ஒரு ரத்தநாளம் உடைகிறது எனில் அதை நாம் கட்டி நிறுத்தினால் அது சிகிச்சை முறை. ஆனால் அதே ரத்தநாளத்தை கட்டுவது போல் கட்டி ஆனால் கட்டாமல் விட்டுவிட்டு என்ன ஆகிறது எனப் பார்ப்பது பிளாசிபோ.

பாரசிட்டமாலை தண்ணீரில் கலந்து கொடுத்தால் அது மருந்து. அது உடலில் என்ன செய்கிறது எனப் பார்ப்பது மருந்தினால் என்ன விளைவு.

பிளாசிபோ என்றால் வெறும் தண்ணீரை மருந்து கலக்காமல் தருவது. பல சிகிச்சை முறைகள் குறிப்பாக பிரார்த்தனை கூட பிளாசிபோ வகையில் சாரும்.

மருந்து ஒன்றைத் தராமல், நோய் தீர்க்கும் மருந்து தந்திருக்கிறேன், சரியாகிவிடும் என மனதில் நம்பிக்கையை விதைக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் நோயாளியும் மருந்து உட்கொள்வதால் நோய் குணமாகிவிட வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்கிறார்கள்.

நமக்கு என்ன நடக்கப்போகிறது எனும் நம்பிக்கையே நோய் தீர்க்கும் மருந்து என்கிறார் கிர்ஸ்ச். இவர் பல ஆராய்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தபின்னர் சொன்ன முடிவு இது. ஒரு மனிதனின் நம்பிக்கை நமது உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தவல்லவை எனவும் மனிதனின் எண்ணம் நரம்பியல் மற்றும் உயிர்வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையே என்கிறார்கள்.

இதைத்தானே ஆன்மிகமும் சொல்கிறது, அப்படியெனில் ஆன்மிகமும் அறிவியலும் வேறு என எப்படி சொல்லலாம் என்றால் அறிவியல் விளக்கம் சொல்லப்பார்க்கிறது, ஆன்மிகம் விளக்கம் தேவையில்லை என்கிறது அதனால்தான் இரண்டும் வெவ்வேறு. இந்த மனநிலைதான் பிளாசிபோ ஏற்படுத்தும் முன்னேற்றத்திற்கான காரணம் என நம்பப்படுகிறது. ஒருவரிடம் பிளாசிபோவை தந்து அதிக சக்தி வாய்ந்த மருந்தை தந்திருக்கிறேன் என சொல்லி அவரது நோய் குணமான பின்னர் அவரிடம் நான் தந்தது பிளாசிபோ என சொன்னால் அவர் எல்லாம் மனதில்தான் இருக்கிறது என்று நினைக்கக்கூடும் அல்லவா! ஆனால் இந்த மனநிலைதான் ஒட்டுமொத்த காரணம் என சொல்லிவிடமுடியாது என்கிறார்கள் பலர்.

நமது எண்ணம் நமது உடலில் ஓடும் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வேண்டும் என்கிறார்கள். சரிதான்! இதுமட்டுமல்ல காரணம், அன்பு, கருணை, உற்சாகம் போன்ற காரணிகள் அவசியம் என்கிறார்கள். இதைத்தானே ஒரு திரைப்படத்தின் மூலம் சொல்ல வந்தார்கள்.

No comments: