Saturday 14 February 2009

பழங்காலச் சுவடுகள் -1

பரந்து விரிந்த வானத்திற்கு வெள்ளை மேகங்கள் வைத்த நீல வண்ண சேலையில் ஜரிகையாக மழை பொழிந்திட தயாராகிக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் திருநகரைத் தாண்டியதும் ஒரு சாலை வடக்குப் புறமாகச் செல்லும். அந்த சாலையின் வழியாக நடந்தால் சற்றுத் தொலைவில் ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது. வீடு இருக்கும் இந்த நிலமானது முன்னர் விளைநிலமாக இருந்தது. இங்கே இந்த நிலம் வீட்டுமனைகளாக மாற முன்னேற்பாடுகள் எல்லாம் நடந்து முதன்முதலாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வீடும் வந்துவிட்டது. மற்ற இடங்களும் விற்பனையாவதில் கால தாமதம் ஏற்படுவதாக அறிந்து கொள்ள முடிந்தது.

அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் சின்னச்சாமி. வயது இருபத்தி ஆறு. அவரது மனைவி அகிலா. வயது இருபத்தி மூன்று. குழந்தை தற்போது வேண்டாம் என தற்காலிகமாக தள்ளிப்போட்டார்கள், வருடம் மூன்று உருண்டோடி விட்டது. சின்னச்சாமியுடன் அவரது தந்தை சாமிமுத்துவும், அன்னை தமிழ்மணியும், இளைய சகோதரி பூர்ணிமாவும், இளைய சகோதரர் சகாதேவனும் வசித்து வந்தார்கள்.

சின்னச்சாமி திருநகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புவியியல் பாடம் மற்றும் கணிதம் சொல்லித்தரும் ஆசிரியர். அவரது மனைவி அகிலா அதே பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியை. பூர்ணிமா மதுரையில் ஆயுர்வைசியா கல்லூரியில் இரண்டாம் வருட இயற்பியல் துறை படித்து வந்தார். சகாதேவன் தல்லாகுளத்தில் மின்சாரத் துறையில் சேர்ந்து சில மாதங்களே ஆகிறது. சாமிமுத்துவும் தமிழ்மணியும் திருநகரில் உள்ள சின்னச்சாமி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

தேன்நிலவுக்காக சென்ற வருடம் திட்டமிட்டபடி இந்த வருடம் கோடை கால விடுமுறையில் எகிப்து மற்றும் பெரு நாடுகளுக்குச் செல்ல தீர்மானித்தார் சின்னச்சாமி. அதற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் முறையாக செய்தார். அகிலா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். மதுரையும், திருநெல்வேலியும், கன்னியாகுமரியும் மற்றும் சென்னையும் மட்டுமே சுற்றிப்பார்த்து இருந்த அகிலாவுக்கு எகிப்து என்றதும் மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. பிரமிடுகளின் பிரமிப்பை நேரில் காணும் ஆவல் அதிகமானது. பெரு நாட்டிற்குச் செல்வதில் அத்தனை விருப்பமில்லை, இருந்தாலும் தனது கணவருடன் தனியாய் இந்த விடுமுறையினை கழிக்கப் போவதில் மகிழ்ச்சியாக இருந்தது. சின்னச்சாமியும் எகிப்து மட்டும் பெரு செல்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். சில வருடங்களாக எகிப்து நாட்டிற்கும் பெரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தார்.

மழை விழ ஆரம்பித்தது. அனைவரும் வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து இருந்தார்கள். தொலைகாட்சி துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. சாமிமுத்து கேட்டார்.

''எப்போடா பிளைட்டு''

''நாளன்னைக்கு காலையில எட்டு மணிக்குப்பா''

''எல்லாம் எடுத்து வைச்சாச்சா''

''எடுத்து வைச்சாச்சுப்பா''

''எடுத்து வைச்சதெல்லாம் திருப்பி கீழ எடுத்து வைச்சிடுங்க, இப்போ போக வேண்டாம்''

''என்னப்பா திடீருன்னு இப்ப சொல்றீங்க''

''கொல்கத்தாவில நிலைமை சரியில்லை, அதனால நீ சொன்ன மாதிரி டிசம்பர்ல போகலாம்'''

'அப்பா, நாங்க போகப் போறது எகிப்து நாட்டுக்கு''

''மறந்துட்டேன்பா, நீ கொல்கத்தாவுக்குப் போகனும்னு சொன்னியே அதான் சொன்னேன்''

''அப்பா நான் சொன்னது பஞ்சாப்புக்கு, அங்கதான் இந்த டிசம்பர்ல போகனும்னு சொன்னேன்''

''வர வர எல்லாம் மறந்துட்டே வருதுடா''

''இனி உங்களுக்கு நீங்க வைத்தியம் பார்க்க வேண்டியதுதான்''

அனைவரும் சிரித்தார்கள் சாமிமுத்து உள்பட. ஒவ்வொருவரும் தனக்கு இதுதான் வேண்டும் என குறிப்பு எழுதிக் கொடுத்தார்கள். சந்தோசமாக வாங்கிக்கொண்டார் சின்னச்சாமி. அகிலாவுக்கு இரண்டுதின இரவுகள் இப்பொழுதே கழியாதா என்று இருந்தது. இவர்களின் இனிய வரவை நோக்கி எகிப்து உற்சாகமாகிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

No comments: