Friday 6 February 2009

லெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 4 நிறைவுப் பகுதி.

மனுசாளைப் பத்தி கதையை மிகவும் பக்குவமா எழுதி முடிச்சிட்டேன். மூணு பக்கம்தான் வந்துச்சு. பக்கம் பெரிசில்ல சொல்ற விசயம்தான் பெரிசுனு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும்தான. என் வீட்டுக்காரிகிட்ட காட்டுனேன். ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்டா. இப்படித்தான் மனுசாள் தெய்வீக உணர்வோட அன்போட வாழனும்ண்ணானு சொன்னா. அவகிட்ட என்னோட ஐஞ்சாவது கதையும் ஜெயிச்சிருச்சிங்கிற மன நிறைவு என்கிட்ட இருந்துச்சு, அதைவிட அவ ஆசைப்பட்டதை செஞ்சிட்டோம்ங்கிற ஒரு மனநிம்மதி வந்துச்சு.

மனுசாள் பத்தின கதையை மட்டும் உங்களுக்கு காட்டுறேன். மத்த கதையெல்லாம் நீங்க எங்க வீட்டுக்கு வந்தா பார்க்கலாம். நேத்துதான் எல்லா கதையையும் டைப் அடிக்கச் சொல்லி லேமினேசன் பண்ணி பிரேம் போட்டு வரிசையா சுவத்தில தொங்கவிட்டுருக்கேன். டைப் அடிச்சதுக்கு அப்புறம் எல்லா கதையுமே மூணு பக்கத்து மேல தாண்டலை. வீட்டுக்கு வாங்க வாங்கனு உங்களை சொல்லிட்டு அட்ரஸு தராம இருந்தா எப்படி? ஸ்ரீரங்கத்து கோவிலுக்கு கிட்ட வந்து பிச்சிப்பூ அக்ரஹாரம் தேவநாதன் வீடு எதுனு கேளுங்க, எல்லோரும் சொல்வாங்க. மறக்காம ஒருநாளாச்சும் வரனும்.

இப்போ கதையை படிங்க.

அன்பு நிறைந்த மனிதர்கள்மீனாக வந்த ரங்கநாதா, தானாக எழுத நினைக்கையில் தேனாக விசயம்தனை நீ சொல்லிடுவாய், என் மனையாளின் அகலாத அன்பை நிறைவேற்றவே.

மனிதர்கள் ஆசையும், பாசமும், அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். சகல உயிர்களிடத்திலும் கருணையுடன் இருப்பவர்கள். வேற்றுமையுணர்வு அன்பினை விரட்டியடித்துவிடும் என்பதை அறிந்து கொண்டவர்கள். அன்பினை அமிழ்த்தி வைக்கும் வேற்றுமை எண்ணத்தை மனதில் எழவிடாமல் பாதுகாப்பாக வாழ்ந்து வருபவர்கள்.

மனிதர்கள் மிகவும் நேர்மையானவர்கள். நீதி நியாயத்துக்கு கட்டுப்பட்டவர்கள். கடமையை ஒருபோதும் மறவாதவர்கள். உண்மையை நேசிப்பவர்கள். உள்ளத்தில் எப்பொழுதும் உயர்வாகவே எண்ணுபவர்கள். பிறருக்கு நல்லதை செய்வதை முதன்மையாக கருதுபவர்கள். மனிதர்கள் உருவானதிலிருந்து பல்வேறு உருவ வேறுபாடு கொண்டவர்கள், இருப்பினும் அன்பை மாற்றம் செய்து கொண்டவர்கள் அல்லர்.

லெமூரியா எனும் நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அந்த நிலப்பரப்பு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லையெனினும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிற இடங்களுக்குச் சென்று அன்பை வழியுறுத்தி வந்துள்ளார்கள் என்பதற்கு சான்றாக இனியும் மனிதர்கள் அந்த மனிதர்களை நினைவு கூர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

லெமூரியாவில் வாழ்ந்த மனிதர்கள் உயர்நிலை கொண்டவர்களாக விளங்கினார்கள். தெய்வீக உணர்வு நிறைந்தவர்களாக காணப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென தனி தெய்வங்களையோ, தனி வழிபாட்டு முறைகளையோ பின்பற்றவில்லை. பிறரிடம் அன்பு செலுத்துவதையே முக்கியமாக கருதினர். அவர்களுக்கு மத கோட்பாடு பற்றியெல்லாம் தெரிந்திருக்கவில்லை. ஒற்றுமையாய் ஒன்றாக தெய்வீக உணர்வுடன் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அவர்களது ஆயுட்காலம் எண்ணூறு ஆண்டுகள். இப்படி தன்னிகரற்று வாழ்ந்த அவர்கள் இன்றைய கணக்குப்படி சுமார் இருநூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருப்பார்கள் என இன்றைய நிலையில் கணக்கு சொல்கிறார்கள். ஆனால் அதைவிட அவர்களின் அன்பு வாழ்க்கையும் பிறரிடம் வீண்விவாதங்கள், வழக்காடுதலில் ஈடுபடாமல் அமைதியை விரும்பி வாழ்ந்தவிதம் போற்றத்தக்கது.

தவத்திலும், தியானத்திலும் தானத்திலும் சிறந்தவர்களாக விளங்கினார்கள். லெமூரியர்கள் முக்காலம் உணர்ந்தவர்களாக வாழ்ந்து வந்தனர். லெமூர் எனும் குரங்கினமானது சிம்பன்ஸி, மனிதருக்கு முந்தைய உயிரினம் ஆகும். அதனை சிறப்பு செய்யும் பொருட்டே லெமூரியா என ஆங்கிலேயர் ஒருவர் இந்த பகுதிக்கு பெயரிட்டதாக வரலாறு குறிக்கிறது. அது எப்படியிருப்பினும் இத்தகைய மனிதர்கள் நமது முன்னோடிகளாக இருந்து இருக்கிறார்கள் என்பது நமக்கு பெரும் மகிழ்வைத் தருகிறது.

சுமார் நாற்பதாயிரம் காலகட்டத்துக்கு முன்னர் அட்லாண்டிஸ் எனப்படும் பகுதியில் வேறொரு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்த அட்லாண்டிஸ் பற்றி தத்துவஞானி பிளாட்டோ குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த நிலப்பரப்பு இருந்ததா என சரிவரத் தெரியவில்லை. ஒரு பகுதி அமெரிக்கர்கள் பலர் இவர்களின் வழித்தோன்றல் என கூறி இனியும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என மதிநுட்பம் உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களுக்கு லெமூரியர்கள் பற்றி தெரியவந்தது. லெமூரியர்களின் தெய்வீக உணர்வு இவர்களுக்கு அதிசயமாக இருந்தது. ஆனால் இவர்கள் லெமூரியர்கள் போலவே அமைதியை விரும்பியதால் எந்தவித வேற்றுமை உணர்வு இல்லாமல் பலவித கண்டுபிடிப்புகளில் இறங்கினார்கள். இரண்டு இடத்து மனிதர்களும் ஒருவரை நேசித்தனர்.

ஆனால் இயற்கை விளையாடத் தொடங்கியது. பூமியின் நிலப்பரப்பு கடலுக்கடியில் ஒன்றுக்கொன்று உரசத் தொடங்கியது. இதனை முன்னமே அறிந்திருந்த லெமூரியர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பலவழிகளைச் செய்தனர். ஆனால் அனைத்தையும் மீறி வெள்ளம் வந்தது. வந்த வெள்ளமானது ஒட்டு மொத்த லெமூரியாவையும் உள்வாங்கியது. தப்பித்தவர்கள் வெகு சிலரே. தெய்வீக உணர்வுடைய மனிதர்களின் காலம் முடிவுக்கு வந்தது பேரிழப்பாகும்.

அவர்கள் விட்டுச் சென்ற அந்த தெய்வீக உணர்வு இன்று பிரிவுகளினால் பேதங்களினால் அலைக்கழிக்கப்படுகிறது.சுமார் பத்தாயிரம் வருடங்கள் முன்னர் வரை வாழ்ந்த அட்லாண்டிஸ் மக்கள் லெமூரியர்களின் அழிவை அறிந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல வருடங்கள் தங்களுடைய அறிவாற்றலால் பல விசயங்களை அறிய முன்வந்தனர். இதன்விளைவாக இவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடிக்கொண்டனர். இதே பகுதியில் வெள்ளம் வந்தது. அந்த அமைதியான அட்லாண்டிஸ் மனிதர்களும் மறைந்தார்கள். இப்படி விஞ்ஞானத்தில் வேருன்றி வாழ்ந்த மனிதர்கள் அமைதியில் திளைத்த அந்த மாபெரும் மனிதர்களின் இழப்பு நமக்கு பேரிழப்பாகும்.

அதற்கு பின்னால் சரித்திரம் குறிக்கத் தொடங்கியது. மனிதர்கள் கருணையும் அன்பும் உடையவர்கள் என பலர் வலியுறுத்தி வந்தனர், இனியும் வருகின்றனர். அன்பு நிறைந்த மனிதர்கள்தான் இந்த மனுசாள் எல்லாம்.

முற்றும்

கதையைப் படிச்சீங்களா? அன்போட நீங்க எல்லாரும் இருக்கனும். நாங்க ஸ்ரீரங்கநாதரை சேவிக்கப் போறோம். கொஞ்ச நேரத்து முன்னாடி கோவில் பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சோம். 'பழமை பழமையென்று பாவனை பேசலன்றி பழமை இருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்' னு பாட்டு கேட்டுச்சு.

கைகோர்த்துக்கிட்டே நடந்தோம். பட்டாச்சாரியார் பதறிக்கிட்டே எல்லாரும் ஓடுங்கோ ஓடுங்கோனு ஓடி வந்தார். நாங்க பதட்டமானோம். நாளன்னைக்கி ஸ்ரீரங்கநாதர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்னு சொல்லி இருந்தவங்க இன்னைக்கே திமுதிமுனு வாராங்கோனு கத்திட்டே பிரகாரம் சுத்தினார். கொஞ்ச நேரத்தில ரொம்ப பேரு ஓடி வந்தாங்க. பதட்டத்தில ஒதுங்கினோம். ஓடினவங்க எங்க மேல மோதினாங்க. நாங்க ரங்கநாதானு கத்தி நிலைகுலைஞ்சி விழுந்துட்டோம். அங்கிருந்த பட்டச்சாரியார்களும், கூட்டமா ஓடினவங்க சிலரும் மயக்கமான எங்களை வீட்டுல வந்து சேர்த்துட்டாங்க போல இருக்கு.

கண்விழிச்சிப் பார்க்கறப்போ எல்லாரும் கூட்டமா நின்னுருந்தாங்க. என் புள்ளைக பேரப்புள்ளைக எல்லாம் அழுதுட்டு இருந்தாங்க. தொண்டு நிறுவனத்துக்காரங்க, சூசையப்பர், இன்னும் ரொம்ப பேரு நின்னுட்டு இருந்தாங்க. மெல்ல என் வீட்டுக்காரியப் பார்த்தேன். கண்ணை மூடி திறந்தா. பெரிய புள்ளைய கூப்பிட்டு நா செஞ்சிட்டு வந்த தொண்டு தொய்வில்லாம தொடர்ந்து செய்யனும்னு மெல்ல சொன்னேன். தலையாட்டுனான். பேரப்புள்ளைக பார்த்துட்டே நின்னாங்க. சின்னவா முதற்கொண்டு எல்லாம் கதறினா. யாரும் அழவேணாம்னு சொன்னேன். ஒவ்வொரு புள்ளையா கூப்பிட்டு தொண்டு செய்றதை தொடரனும்னு சொன்னேன். கதை எழுதினதை சொல்லி சுவரை காட்டினேன். என் வீட்டுக்காரி என்னைப் பார்த்து புன்னகைச்சா. இரண்டு பேரும் கையை பிடிச்சிக்கிட்டோம். ரங்கநாதானு ரெண்டு பேரும் முணுமுணுத்தோம். எங்க உசிரு மெல்ல பிரிய ஆரம்பிக்குது இப்போ. எங்களோட இறுதிச்சடங்குல கலந்துக்கிறதுக்கு நீங்க எல்லாம் வருவீங்களா?

முற்றும்.

No comments: