Monday 16 February 2009

பழங்காலச் சுவடுகள் - 3

குளித்துவிட்டு வெளியே வந்த அகிலா அறையினில் சின்னச்சாமி இல்லாதது கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தாள். கதவைத் திறந்திட முயற்சித்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். பொதுவாக வெளியில் கதவை பூட்டினால் உள்ளிருந்து திறக்கும் வண்ணம்தான் பெரும்பாலான விடுதிகளில் வைத்திருப்பார்கள், ஆனால் இங்கு அப்படியில்லாமல் இருந்தது. அகிலா அச்சம் அடைந்தாள். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யாமல் உடைகள் மாற்றிக்கொண்டு சகஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாள். சின்னச்சாமி சில உணவுப்பொருட்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார். அகிலா, சின்னச்சாமியின் கைகளில் இருந்த பொட்டலங்களைப் பார்த்தாள்.

''வெளியே போனா சொல்லிட்டுப் போங்க''

''நீ குளிச்சி முடிக்கிறதுக்குள்ள திரும்பிரலாம்னு நினைச்சேன்''

''பயந்துட்டேன்''

''பயம் வரத்தானேச் செய்யும்''

''என்ன சொல்றீங்க''

''நான் உன்னைத் தொலைக்கமாட்டேனு உனக்கு நம்பிக்கை வரவரைக்கும் பயம் வரத்தானேச் செய்யும்''

''கடவுளை வேண்டிக்கிற ஆரம்பிச்சிட்டேன்''

''காப்பாத்துவார்னு நம்பிக்கையா''

''நீங்க என்னைத் தொலைக்கவிடமாட்டாருனு நம்பிக்கை''

''நான் குளிச்சிட்டு வரேன்''

''நான் வெளியே போகமாட்டேன்''

இருவரும் சிரித்தார்கள். இருவருக்குமான நெருங்கிய அன்பு மேலும் அதிகரித்தது. வருடங்கள் ஆக ஆக அன்பு அதிகரிக்க வேண்டும். சின்னச்சாமி குளித்துவிட்டு வந்தார். இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அகிலா கண் அயர்ந்தாள். சின்னச்சாமி குறிப்பு எழுதத் தொடங்கினார்.

'எகிப்து நாட்டின் விமானத்தளத்தில் எங்களை வரவேற்க யாரும் இல்லை, ஆனால் நிறைய மனிதர்கள் தென்பட்டார்கள். அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். சிலர் புன்னகைத்தார்கள், சிலர் முகம் திருப்பிக்கொண்டார்கள். வெளியில் வந்ததும் புதிய புதிய கட்டிடங்கள் பழங்கால எகிப்து எப்படி இருந்து இருக்கும் என்பதை முற்றிலுமாக மறைத்துவிட்டது. கட்டிடங்கள் வானை நோக்கி வளர்ந்து கொண்டு இருந்தது. பூமிக்குத்தான் ஈர்ப்பு சக்தி இருக்கும் என்றில்லை, வானுக்கும் உண்டு என்பதுபோல் அந்த கட்டிடங்கள் அமைந்து இருந்தது.

நகரங்கள் செல்வச் செழிப்புடன் இருந்தது. மக்கள் வேகமாக பயணித்தனர். எகிப்து நாட்டின் கைரோ விடுதியில் அமர்ந்து இருப்பது, திருநெல்வேலியில் சென்ற வருடம் தங்கியிருந்த விடுதியைப் போல் இருந்தது. அங்கே தாமிரபரணி ஆறு, இங்கே நைல் நதி'

அகிலா சட்டென விழித்தாள். சின்னச்சாமி மும்முரமாக எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

''என்ன எழுதறீங்க''

''உனக்கு கடைசி கடிதம் எழுதறேன், உன்னை விட்டுட்டு ஓடிப்போக தயாராயிட்டேன்''

''கொடுங்க பார்ப்போம்''

'இந்தா''

அகிலா படித்துப் பார்த்தாள்.

''இதுக்கு எதுக்கு இத்தனை செலவழிச்சி இவ்வளவு தூரம் வரனும்''

''இங்க வராட்டி தெரிஞ்சிருக்காது, சாயந்திரமா நைல் நதிக்குப் போவோம்''

''என்னைத் தள்ளிவிடமாட்டீங்களே''

''என்னை பயமுறுத்திட்டே இருக்க, நீ இப்படியே பேசினா எனக்கு அந்த நினைப்பு வந்தாலும் வரும்''

அகிலா அமைதியானாள். இருவரும் மாலை நேரத்தில் விடுதியிலிருந்து நடந்து நைல் நதியினை அடைந்தார்கள். அந்த இடத்தில் ஆள் அரவமற்று இருந்தது. காற்று சிலுசிலுவென அடித்தது. நதியின் ஓரமாகவே இருவரும் நடந்தார்கள்.

''அந்த காலத்தில நைல் நதியை ஒட்டியேதான் மக்கள் வாழ்ந்து இருக்காங்க, நைல் நதிதான் கடவுள். நைல் நதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளை அழிச்சி இருக்கு, அப்போ கடவுள் கோபிக்கிறார்னு நினைக்கிறாங்க, மனித நாகரிகம் தொடங்கினது இங்கதானு சொல்வாங்க, அது மட்டுமில்லாம சமய கோட்பாடுகள் எதுவும் இல்லாத சமூகமாகத்தான் இருந்து இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் வாழ்ந்திருக்காங்க''

''எந்த புத்தகத்தில படிச்சீங்க, இப்ப நீங்களும் நானும் இருக்கற மாதிரி''

''ஆமா ஆமா நீயும் நானும் மாதிரி, ஆனா அப்போ மொத்த சமூகம்''''எப்படி மாறிச்சி''

''பேராசை, தானே பெரியவன், தனக்கே எல்லாம் தெரியும் அப்படிங்கிற அகந்தை''

சின்னச்சாமி அகிலாவைத் தோளில் தொட்டார். அகிலா சின்னச்சாமியின் கைகளைத் தட்டிவிட்டார்.

''இந்த பயம் தான் அன்பை அடியோட அழிக்க பயன்பட்ட முதல் ஆயுதம். தற்காப்புனு சொல்லி அழிவைத் தொடங்கி வைச்ச பெரும் ஆயுதம்''

அகிலா திடுக்கிட்டாள். சும்மாதானே கையைத் தட்டிவிட்டோம், இப்படி நினைக்கிறாரே இந்த மனுசன் என நினைக்கத் தோன்றியது. சின்னச்சாமி ஈரம் எனப் பார்க்காமல் அங்கேயே அமர்ந்தார். அகிலாவும் உடன் அமர்ந்தாள். தொலைவில் யாரோ வருவதுபோல் இருந்தது. ஐந்து நபர்கள் இவர்களின் அருகில் வந்ததும் இவர்கள் எழுந்து கொண்டார்கள். அகிலாவுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம் மனதில் சொல்ல ஆரம்பித்தாள்.

(தொடரும்)

No comments: