Friday 13 February 2009

தலைவிதி தலைமதி - 6 பிளாசிபோவும் மருந்தும்

பிளாசிபோ (placebo) வினை என்பது மருந்து மற்றும் பிற சிகிச்சை முறைகள் இல்லாமல், உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை அளவிடக்கூடியது, பார்க்கக்கூடியது ஆகும். உதாரணத்திற்கு ஜலதோசத்தை குறிப்பிடலாம். மருந்து எடுத்துக்கொண்டாலும் சரி, எடுத்துக்கொள்ளாவிட்டாலும் சரி, ஏழு நாட்களில் ஜலதோசம் குணமாகிவிடும் என சொல்வார்கள். ஒரு மருத்துவரை அவர் கைராசிக்காரர் என பலர் தங்களுக்கென ஒரு மருத்துவரைக் குறிப்பிடுவதை நாம் அறியலாம். எனக்கு இந்த அனுபவம் உண்டு.

எனது தந்தையுடன் சிறுவயதில் பயின்று பின்னர் மருத்துவத்துறைக்குச் சென்று விருதுநகரில் சொந்தமாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த மருத்துவர் வெள்ளைச்சாமி என்பவரே நான் குறிப்பிடப்போகும் மருத்துவர். காய்ச்சல் என வந்துவிட்டால் அவரிடம் ஓடிச் சென்று ஒரு பென்சிலின் கேட்டுப் போட்டுக்கொள்வதுண்டு. முதலில் பென்சிலின் அலர்ஜி இருக்கிறதா என ஆராய்ந்துவிட்டு தொடர்ந்து பென்சிலின் மறுக்காமல் போட்டுவிடுவார். காய்ச்சல் ஒரு வருடத்திற்கு எட்டிப் பார்க்காது.

1993 என நினைக்கின்றேன். நான் மதுரை கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டு இருந்தபோது 'தண்ணீர் சிகிச்சை முறை' என தினமும் காலையில் பல் துலக்கியதும் 500 மில்லி லிட்டருக்கு மேல் தண்ணீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த சிகிச்சை முறையை ஆரம்பித்து ஒரு மாதம் இருக்கும். திடீரென ஒருநாள் காய்ச்சல் வந்துவிட்டது. அங்கே இருந்த ஒரு மருத்துவரிடம் சென்று எனக்கு பென்சிலின் போடுங்கள் என கேட்டபோது, நான் ஸ்டெப்ட்ரோமைசின் தான் போடுவேன் என மறுத்துவிட்டார். இரண்டு தினங்களாக அதே மருந்தை போட்டும் பலனில்லை. மூன்றாவது நாள் மாதத் தேர்வு. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனது கல்லூரி ஒரு பள்ளியை போல் செயல்பட்டது, நான் அகில இந்திய அளவில் நடந்த தேர்வில் வெற்றி பெற உதவியது எனலாம். மாதத் தேர்வு எழுதவில்லை என நினைக்கின்றேன்.

விடுதி காப்பாளர் என்னை ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். 'பார்மகாலஜி' தேர்வு ஆதலால் பார்மகாலஜி ஆசிரியரிடம் கூறிவிட்டு அன்றே வெள்ளைச்சாமி மருத்துவரை அணுகினேன், விபரங்கள் கூறினேன். 'பென்சிலின் வேண்டாம், இரத்த பரிசோதனைக்கு சென்று வா' என அனுப்பினார். இரத்த பரிசோதனை முடிவில் டைபாய்ட் என தெரிய வந்தது. டைபாய்டோ இருக்குமோ எனும் அச்சமே நான் உன்னை அனுப்பியதன் காரணம் என ஆருடம் சொன்னார்.

கவலைப்படாதே, சரியாகிவிடும் என குளோரம்பெனிக்கால் மாத்திரைகளை எழுதி தந்தார். நம்பிக்கையுடன் அந்த மருந்துகளை உட்கொண்ட பின்னர், பத்து நாட்கள் பின்னரே குணமாகும் டைபாய்ட் நான்கே நாட்களில் குணமாகியது. குணமான அடுத்த தினமே கல்லூரிக்குச் சென்றேன், நண்பர்கள் ஆச்சரியப்பட்டனர். 'பார்மகாலஜி' ஆசிரியர் நீ பாடம் படித்தே உனக்கு நோய் விரைவில் குணமாகிவிட்டது என நகைச்சுவையாய் சொன்னார்.

ம் பாடம் படிப்பது? அன்றெல்லாம் கந்த சஷ்டி கவசம் அல்லவா தினமும் மனனமாய் படிப்பேன். மனன சக்தியை அதிகமாக்கிட உதவியது கந்த சஷ்டி கவசம் என்றால் மிகையில்லை. ஒரு வார்த்தை இடறினாலும் 'முருகா' என நினைப்பதுண்டு. இப்பொழுது ஒருவித அசட்டுத்தன்மை இருக்கிறது. ஆக அந்த வெள்ளைச்சாமி மருத்துவர் எனக்கு நோய் தீர்த்து வைப்பவராகவே தெரிந்தார். இப்பொழுதெல்லாம் ஒரு 'பாரஸிட்டமால்' நோய் தீர்க்கும் மருத்துவராக தெரிகிறது.

இப்படி பிளாசிபோ வினையை பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கி வைத்தார்.

'மருத்துவர் தான் மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் வைத்திருக்கும் நம்பிக்கையும், நோயாளி அந்த மருத்துவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது, இந்த பரஸ்பர நம்பிக்கை தரும் முடிவு ஒரு சக்தி வாய்ந்த சிகிச்சை முறையை உருவாக்குகிறது மட்டுமின்றி நோயினில் நல்ல முன்னேற்றமும் அந்த நோயை தீர்த்துவிடவும் உதவுகின்றது' - பிடர் ஸ்காரபேனக், ஜேம்ஸ் மெக்கார்மிக்.

பிளாசிபோ குறித்து இனி பார்ப்போம்.

No comments: