Thursday 5 February 2009

லெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 4

ஸ்ரீரங்கநாதரை சேவிச்சிட்டு வந்த வழியிலே ஒரு மனவருத்தம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு நடந்துச்சு. இதுமாதிரி மாசத்துக்கு ஒரு தடவையாவது மனவருத்தம் தர சின்னதா ஒரு நிகழ்வு நடக்கும், மனசுக்கு கஷ்டமா இருக்கும். அது என்னன்னா, அந்த சாலையோரத்தில குடிசை போட்டு வாழறவங்க இருக்காங்க. தொழிலுக்குப் போய்ட்டு வந்து நிம்மதியா தூங்குனோம்னு இருக்காம சண்டை சச்சரவுமா இருப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் திட்டிட்டு இருப்பாங்க. வழியில போறப்போ காதுல விழும். அவங்ககிட்ட இப்படியெல்லாம் இருக்கக்கூடாது, அன்பா இருக்கனும்னு சொல்ல மனசு கிடந்து அடிச்சிக்கும். அதை என் வீட்டுக்காரிகிட்ட சொல்வேன். அதுக்கு என் வீட்டுக்காரி அவா அன்பாத்தான் திட்டிக்கிறாண்ணா, திட்டிட்டு மறுபடியும் வாழ்க்கை வாழ ஆரம்பிச்சிருவாண்ணா, அதைப் பார்த்துட்டு இப்படி நீங்க மனசஞ்சலம் அடையாதேள்ணானு ஒவ்வொரு தடவையும் நா இந்த மாதிரி நிகழ்வைப் பார்க்கறச்சே சொல்றதும் அதுக்கு அவ அன்பா பதில் சொல்றதும் எனக்கு பழகிப்போச்சு.

ஆனா இன்னைக்கு வெளியிலே தன்னோட மனைவியை அவரோட வீட்டுக்காரர் அடிச்சிட்டு இருந்தார். அங்க இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தாங்க. அதுல ஒருத்தர் அடிக்கிறதை நிறுத்துனு சொன்னப்ப, என் பொண்டாட்டியை நான் அடிக்கிறேன் அதை கேட்க நீ யாருன்னு தகாத வார்த்தையால பேசினான். அதுக்கு பதிலா இவரு அவரை அடிக்கப் போனார். இப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிக்கிட்டாங்க. அதுல பொண்டாட்டிய அடிச்சவரோட கையை இவர் ஒடைச்சிட்டார். அவர் ஓ னு அலற ஆரம்பிச்சிட்டார். இனிமே இந்த பகுதியில யாராவது இப்படித் தெருவுல பொண்டாட்டிய அடிச்சா இப்படித்தான் கையை உடைப்பேனு சொன்னார். அங்கு கூடியிருந்தவங்கள ஒருத்தன் கல்லை எடுத்து இவரோட மண்டைய உடைச்சிட்டான். நா பார்த்து இப்படி நடக்கறது இதுதான் முத தடவை. அந்த கல்லு எங்க காலு பக்கத்தில வந்து விழுந்துச்சு.

பெரிய களேபரம் ஆகிப்போச்சு. என் வீட்டுக்காரி பயந்துட்டா. என்னைக்கூட ஒருத்தன் வீட்டுக்கு வேமாப் போ தாத்தா, இந்த படுபாவி பசங்க என்னனாலும் செஞ்சிருவாங்கனு எங்களுக்கு பாதுகாப்பா நின்னான். ஏன் இப்படி பண்ணிக்கிறாங்கனு எனக்கு ரொம்ப கவலையா இருந்தது. ஊரு உலகத்துல இப்படித்தான் அதிகம் நடக்குதுனு எனக்குத் தெரிஞ்ச விசயத்தை அவனும் சொன்னான். எனக்கு அங்க இருந்து போகப் பிடிக்கலை. கொஞ்ச நேரத்தில சத்தம் குறைஞ்சி அடிபட்டவங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.

இதைப் பார்த்துட்டு 'அப்படின்னா மனுசாள் அன்பே உருவானவா இல்லையா?னு' என் வீட்டுக்காரிகிட்ட நா தழுதழுத்து கேட்டேன். 'அன்பு இல்லாதவா மனுசாளே இல்லைண்ணா'னு பயத்தோட சொன்னா. வீட்டுக்கு போ தாத்தா, பாட்டி நீங்களும் போங்கனு அவன் எங்களை தள்ளாத குறையா சொன்னான். எங்களை இவன் எதுக்கு காப்பாத்த நினைக்கனும்? அன்பு மனுசாளைக் கட்டிப்போடாதா?

எனக்கு அந்த நிகழ்வு மன வருத்தத்தை தந்தது. வீட்டுக்கு வந்ததும் எழுதின நோட்டை எடுத்து மீண்டும் ஒருக்கா படிச்சிப் பார்த்தேன். என் வீட்டுக்காரி சொன்னதும் நினைச்சிப் பார்த்தேன். மனுசாளைப் பத்தி எழுதுங்கோண்ணானு சொன்னதுக்கு முழு அர்த்தம் கிடைச்சது. மனுசாள் அன்பே உருவானவா, அன்பில்லாதவா மனுசாளே இல்லை. நேரத்துக்கு நேரம் அன்பை வெறுப்புக்கு வித்துக்கிறவா நம்மகிட்ட ஜாஸ்தி. கண்டிப்புல கூட அன்பு கலந்து இருக்கனும், அன்பு மட்டும்தான் எல்லா இடத்திலும் ஆட்சி செய்யனும். இதை நினைச்சிட்டே 'அன்பா சின்ன குழந்தையிலே இருந்து வாழ கத்துக்கிட்டா எவ்வள நல்லா இருக்கும் நாயகி'னு சொன்னேன். அதுக்கு அவ 'அன்பு தன்னால வரதுண்ணா, யாரும் போதிச்சி வரதிலண்ணா எல்லார்கிட்டயும் சமமான அன்பை காட்டுறதுக்கு பக்குவம் வேணும்ண்ணா'னு சொன்னா. உண்மைதானு நினைச்சிக்கிட்டேன்.

நாட்டுல நடக்கறதைப் பார்க்கறப்போ ஒவ்வொருத்தரும் தான் செய்றதை நியாயப்படுத்தி பேசுறாங்க. அவங்க செய்றதை தப்புனு அவங்ககிட்ட சொன்னா என் நிலைமையிலிருந்து இருந்து பாருனு ஈசியா சொல்லிருறாங்க. அன்பா இருக்குறதில்ல அப்படி என்ன சிரமம் வந்துருச்சினு என்னை நானே கேட்டுக்கிட்டேன். ஒன்னு சொல்லனும் இத்தனை வருசமா நடக்கற அட்டூழியங்களை கண்டும் காணாம வாழ்ந்துட்டே வந்துட்டேன். அன்பை காட்டினா அன்பு திருப்பி வரும்னு சொல்வாங்க. நா இது மாதிரி அக்கிரமங்கள் நடக்கறச்சே காட்டின அன்புக்கு என்ன பதிலு கிடைச்சது தெரியுமோ? நீங்களும் அனுபவப்பட்டு இருப்பீங்கதான. அதனால அது இருக்கட்டும்.

'ஏண்ணா இந்தவாட்டி பத்தாயிரம் தந்துட்டுப் போயிருக்காள்ணா சின்னவா'னு இப்பத்தான் என் வீட்டுக்காரி சொன்னா. நா எதுவும் பணம் பத்தி கேட்கறதில்ல, அவ நல்லா நிர்வாகம் பண்ணுவா. நா வாங்குன சம்பளத்தையெல்லாம் அவகிட்ட கொடுத்துட்டு மாசச் செலவுனு குறிப்பிட்ட தொகையை வாங்கிப்பேன். அது புள்ளைகளுக்கும், என் வீட்டுக்காரிக்கும் சின்ன சின்ன பொருள் வாங்கித்தரதுக்கு பயன்படுத்திப்பேன். அவ்ளதான் அதுபத்தி சொல்ல முடியும்.

'ஆறாயிரத்தை எடுத்து ராகவேந்திரா குழந்தைகள் நலகாப்பகத்துக்கு எடுத்து வைச்சிருரேண்ணா, மீதி நாலாயிரத்தை சூசையப்பர் தன்னோட பேரன் படிப்புக்கு போன வாரம் வந்து கேட்டாரே, அதை அவருக்கு கொடுத்துருவோம்ணா'னு சொன்னா. ம் சரினு சொன்னேன்.

சூசையப்பர் என்னோட வேலை பார்த்தவர். ரொம்ப அன்பானவர். உதவின்னா என்னோட வீட்டுக்குத்தான் முதல வருவார். எனக்கு எதுவும் தேவையின்னா அவரோட வீட்டுக்குத்தான் நா முதல போவேன். இதுபோதும் அவரைப்பத்தி இப்போதைக்கு.

லெமூரியா பத்தி படிக்க ஆரம்பிச்சேன். லைப்ரரியில நா படிச்ச புத்தகத்தைத்தான் தொடர ஆரம்பிச்சேன். அட்லாண்டிஸ் மனுசாளோட முந்தைய காலகட்டத்து மனுசாள்தா லெமூரியா மனுசாள் எல்லாம். இந்த மனுசாளுக்கும் அவாளுக்கும் ஒருவித தொடர்பு இருந்துச்சு. படிக்க படிக்க மனவருத்தம் மெல்ல விலக ஆரம்பிச்சி இருந்துச்சு. மனவருத்தத்தோட வாழுறதை நீங்களும் நிறுத்திக்கிறீங்களா?

(தொடரும்)

3 comments:

ramachandranusha(உஷா) said...

ஐயா, நுனிப்புல் கிளிக்கினாலும் பக்கம் திறக்கவில்லையே? படம் எல்லாம் சூப்பராய் இருக்கிறது.
ஆனால் முதல் பாகத்தை படிப்பது எப்படி?

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி. புத்தகத கோப்பினை விரைவில் அனுப்பி வைக்கிறேன்.

Radhakrishnan said...

இப்பொழுது இணைப்பினைத் தந்துவிட்டேன். ஆனால் தற்போது முத்தமிழ்மன்றத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே காண இயலும்.