Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Sunday 10 October 2010

குழந்தை ஒன்றின் காமம்

அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது.

சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங்கள். பரிச்சயமில்லாதவர்கள். பழகுவது ஒன்றும் அவனுக்கு சிரமமாக இல்லை.

நாட்கள் நகர நகர நண்பன் என ஒருவனை சேர்த்துக் கொண்டான். அவனது பார்வை தன்னுடன் படிக்கும் ஒரு பெண் குழந்தையின் மீது பட்டது.

அழைத்தான் அந்த சின்னஞ்சிறு சிறுமியை. 'அம்மா, அப்பா விளையாட்டு விளையாடலாம் என்றான். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது.

உடன் அழைத்தான் நண்பனை. சிறுமியின் ஆடைகளை கலைத்துவிட்டு நிற்க சொன்னான். சிறுமியும் நின்றாள். இந்த நிகழ்வினை ஒரு ஆசிரியை கவனித்தார், அதிர்ச்சி அடைந்தார்.

என்ன செய்கிறாய்? என்றார் ஆசிரியை. சிறுவன் நிதானமாகவே சொன்னான். ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்.

இது தவறு. பிறரது உடல் உறுப்புகளை இப்படி ஆராய கூடாது. அது போல உனது உடல் உறுப்புகளை பிறருக்கு காட்ட கூடாது.

புரியாத வயது. புரிந்ததா என அறிந்து கொள்ள இயலாத வயது.

அந்த சிறுவனின் அன்னையிடம் விசயம் சொன்னபோது, அன்னை கோபம் உற்றார். இது நடவாத காரியம் என சாதித்தார்.

சில நாட்கள் அமைதியாகவே சென்றது. மீண்டும் ஒரு நாள்.

தனது நண்பனை அழைத்தான். ஆடைகளை களைய சொன்னான். ஆடைகள் களைந்து நின்றான் அந்த நண்பன். அந்த சின்ன சிறு நண்பன் சொன்ன வார்த்தைகள் திடீரென அங்கு வந்த ஆசிரியையை நிலைகுலைய வைத்தது. என்ன பேசுகிறாய் என்றார் ஆசிரியை.

இதோ இவன்தான் சொல்ல சொன்னான் என ஆடைகள் கலைந்த வண்ணமே நின்றான். அவ்வாறு சொல்ல சொன்ன அந்த சின்ன சிறுவன் மீண்டும் கண்டிக்கப்பட்டான். மீண்டும் அன்னையிடம் சொல்லப்பட்டது. அன்னை மறுத்தார். அறியாத வயது. புரியாத வயது.

நாட்கள் அமைதியாக சென்றது. மீண்டும் ஒரு நாள். போர்வை ஒன்றை எடுத்தான். அழைத்தான் உடன் படிக்கும் சிறுமியை. போர்வைக்குள் நுழைந்தார்கள். அப்போது இதை கண்ட ஆசிரியை போர்வையை விலக்கி என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

சிறுமியும் சொன்னாள். எனக்கு முத்தம் கொடுத்தான் என. அதிர்ந்தார் ஆசிரியை. இது தவறு என்றார்.

அன்னையிடம் தகவல் தரப்பட்டது. எங்குமே இவன் இப்படி நடந்து கொள்வதில்லை. இங்கு மட்டும் எப்படி என நம்ப மறுத்தார்.

ஒரு விபரீதம் அந்த சிறுவனுக்குள்  நடந்து கொண்டிருக்கிறது.

எங்கிருந்து கற்றான்?

தான் செய்வது தவறு என புரியாது. எங்கிருந்து பார்த்தான் இவை எல்லாம்!

எங்குமே இப்படி நடந்து கொள்ளாதவன்? பள்ளியில் மட்டும் அப்படி நடப்பானேன். எதற்கு குழந்தையின் மீதான பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள் அந்த பெற்றோர்கள்.

முளைத்து மூன்று இலை விடவில்லை என நமது ஊர் பக்கம் சொல்வார்கள். பிஞ்சிலே பழுத்துவிட்டது என பழமை பேசுவார்கள்.

யாரிடம் கற்றான்!

பெற்றோர்களா! தொலைக்காட்சி, கணினி போன்ற தொழில் நுட்பங்களா!

எதிர்கால சந்ததியினர்!!! குழந்தைகளை காம வயப்படுத்தி அவர்களது வாழ்க்கையையே பாழடிக்கும் வக்கிரம் நிறைந்த மனிதர்கள்.

குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க!

(இது ஒரு உண்மை சம்பவம், குழந்தையின் வயதோ நான்கு)

கலிகாலம்டா சாமி,  கிலி பிடித்து சொல்கிறார்கள்.


Wednesday 30 June 2010

காமம் - 6

கண்ணம்மா பற்றி எழுதும்போது இப்படித்தான் எழுதுகிறார் பாரதியார். இந்த பாடல்களில் இருக்கும் காதல் ஒரு சஞ்சலமாகவே பாரதிக்குத் தோணவில்லை. அது ஒரு மாபெரும் இன்பமாகவே அவருக்கு இருந்து இருக்கிறது.

1 காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்; - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே -இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே.

2 . நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று
சரண மெய்தினேன்

காதல்தனை மையமாக வைத்து வேண்டும்போது மிகவும் அழகாகவே பாடுகிறார்.

பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டு தரவேணும்.

இந்த காதல் ஆசை மோகம் எனும் கட்டுக்குள் விழுந்துவிடும் போது பாரதியார் தள்ளாடுகிறார். ஒரு விரக்தியின் நிலையில் இருந்தே மகாசக்திக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு.

இந்த பாடலை கேட்கும்போது மோகம் அத்தனை கொடியதா? என்றே கேள்வி எழுந்துவிடுகிறது. மனைவியின் விருப்பத்திற்கோ, கணவனின் விருப்பத்திற்கோ எதிராக இருவருக்குள் ஏற்படும் கலவி கள்ளத்தனம் என்கிறது சட்டம். மனைவியானவர், கணவன் தன்னை மோசம் செய்துவிட்டார் என வழக்கு போடலாம் என்கிறது அந்த சட்டம். இதோ இப்படிப்பட்ட மோகம் மிகவும் கொடியதுதான். அவரவர் சுய விருப்பத்திற்காக காதல் இங்கே பலி கொடுக்கப்படுவதுதான் உண்மை.

ஒரு பாடலை (பாடல் கீழே தரப்பட்டு உள்ளது) எழுதிய காரணத்திற்காக மட்டுமல்ல, துறவி வேடம் கொண்ட துரோகத்தனத்திற்காக பட்டினத்தார் மேல் எனக்கு கோபம் இருந்தது  உண்டு. புத்தரை  துறவி என கருதுவதில்லை, ஒரு துரோகியாகத்தான் அவர் எனது கண்ணுக்கு தென்பட்டது உண்டு.

பட்டினத்தார் ஒரு தாம்பத்ய உறவை எத்தனை கீழ்த்தரமாக எழுதிவிட்டார் என்றுதான் தோன்றியது. தான் வாழும் வாழ்க்கை முறையை உயர்த்திப் பேசி அடுத்தவர் வாழும் முறையை தாழ்த்திப் பேசும் சராசரி மனிதரை போல்தான் அந்த பாடல் தோன்றியது. இதில் காதல் எங்கே இருக்கிறது. வெறும் காமம் என்றுதான் பார்த்து இருக்கிறார் பட்டினத்தார். அதன் காரணமாக பரிதாபம் மட்டுமே அவர் மீது மிஞ்சுகிறது.

நாப்பிளக்கப் பொய் உரைத்துனவநிதியம் தேடி
நலன் ஒன்றும் அறியாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே.

இதோ பத்திரகிரியார். என்ன விளையாடுகிறாரா? கவிதையின் வரிகளுக்கு வேண்டுமெனில் மிகவும் அட்டகாசமாக இருக்கிறது.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?

வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்?

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்?

இந்த பாடல் எல்லாம் வந்தவிதத்திற்கான காரணம் காதல் தொலைந்து போனதுதான். காமம்தனை முன்னிறுத்தி வாழ்ந்த மன்னர் கால வழக்கம் இவருக்கு பெரும் எரிச்சலை தந்து இருக்கலாம். ஆக, காமம் அத்தனை கொடியதா?

சூர்ப்பனகை கொண்ட காம வேட்கையை கம்பர் இப்படித்தான் விவரிக்கிறார்.

நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள்

வான்தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள்
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள்

நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்றுஎனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவேன் போக்கு அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள்

எவர் மீதும் எப்படி வேண்டுமானாலும் ஆசை வந்து தொலையும். ஆனால் காதல் ஒரு முறையோடு வந்துதான் நிற்கும். காதல் வேறு, ஆசை வேறு. காதல் ஆசையாய் மாறாதவரை பாரதியின் மோகத்தை கொன்றுவிடு வரி அவசியமில்லை. ஆசை காதலாக மாறும்போது அங்கே நின்னை சரணடைந்தேன் என்றுதான் பாடத் தோன்றும்.

எனக்கு நின்னை சரணடைந்தேன் எனும் பாடல் மிகவும் அதிகமாகவே பிடித்து இருக்கிறது.

Thursday 6 May 2010

காமம் - 5

காமம் - 4

எந்த ஒரு ஆணும்  சரி, பெண்ணும் சரி தனது அந்தரங்கங்களை  அத்தனை எளிதாக வெளியே சொல்வதில்லை. விளையாட்டாகப் பேசித் திரிதல் வேறு வகை சார்ந்ததாகும். தனது ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் எவரும் விரும்புவார்கள். தன்னால் வெளிப்படையாக உலகில் நடத்த முடியாதவற்றை கனவுகள் மூலம் தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு பலர் தங்களை தள்ளிக் கொள்வது நடந்து வரும் செயலாகும். சமுதாய கட்டமைப்பில் இருந்து கொண்டு பாலியல் சிந்தனைக்கு உட்பட்டு இருக்கும் பலர் காமத்திற்கு அடிமைப்படுதலோடு தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட காமம் அவசியமா என்பதை சிந்திக்கும் திறன் கூட இருப்பதில்லை.

எவருக்கும் தெரியாமல் தப்பு செய்வதில் இருக்கும் ஈடுபாடு மன நிலை நோயாளியாக ஒருவரை மாற்றி விடுகிறது. விளையாட்டாக ஆரம்பிக்கும் செயல்கள் பல விபரீதமான நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. இதில் காமத்தின் செயல்பாடு மிகவும் கொடுமையானது. பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் ஆணின் கண்கள் போலவே, ஆண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பெண்கள் என சமுதாயத்தில் அதிகம் இருப்பதில்லை. இத்தகைய வேறுபாடுகள் இடத்திற்கு இடம் மாறுபாடு அடையும். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் என்பது ஒரு ஆணுக்கு பெருமை தரக் கூடிய விசயமாகவும், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை விபச்சாரி எனும் பட்டத்துடனும் பார்க்கும் இந்த சமுதாயத்தின் புத்தி மிக மிக கோணலானது.

தாய், சகோதரி என  வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவுக்கு சிந்தனை பெருகிப் போன கட்டத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களைப் பார்க்கும் போது மட்டும் ஏன் இந்த காம உணர்வு ஒரு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இதற்கு  வயதில் ஏற்படும் கோளாறு என்றோ, இயற்கையான விஷயம் இது என்றோ எவரும் காரணம் கற்பித்துக் கொள்ள இயலாது. சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

பிறன் மனை கள்வர்கள் என ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எச்சரிக்கை செய்துதான் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் தான் பார்க்கும் எல்லா பெண்களையும், ஒரு பெண் தான் பார்க்கும் எல்லா ஆண்களையும் காதல் செய்ய, திருமணம் முடித்துக் கொள்ள நினைப்பது சுரப்பிகளினால் ஏற்படும் மாற்றம் என்று எவரும் சொல்லித் திரிய இயலாது. சுரப்பிகள், நரம்புகள் செயல்பாட்டினை மீறி எண்ணங்கள் ஒன்று அனைவரிடமும் இருந்து கொண்டு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.

பயத்துடனே எவரும் தப்பினை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த தப்பானது தண்டிக்கப்படாமல் போகும்போது மேலும் மேலும் அந்த தப்பை தெரிந்தே செய்கிறார்கள். ஒரு பெண் தனது கணவனுடன் வாழ்ந்து கொண்டே மற்றொரு மணமான ஆணுடன் தவறான உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டபோது ஆண் மட்டுமே தண்டிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வெறும் வசவு பேச்சுகளோடு நின்று போனது. ஏனெனில் ஆண் மட்டுமே தவறு செய்பவனாக பார்க்கப்படுகிறான். இதில் பெண்களுக்கு என விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற பெண்களை  கிராமத்து வழக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை தள்ளி வைக்கிறேன். இப்படிப்பட்ட மறைமுகமான தவறான நடைமுறைக்கு என்ன காரணம் எனில் சமுதாய கட்டமைப்புகள் மட்டுமல்ல, தனது காமத்தை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள தெரியாதவர்கள் தான். மேலும் வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் யோக்கியர்கள் என சொல்லக் கேள்விப்பட்டிருப்பதையும்  காணும்போதே, மானம் பெரியதென பலர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி எனும் கட்டுப்பாடுடன் வாழும் பல கோடி மக்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

காமத்தை முன்னிறுத்தி எவரும் காதல் புரிவதில்லை. காதல் வசப்படும் போது காமம் தொலைப்படும். குடும்ப வாழ்க்கைக்கு முன்னர் ஏனோ தானோவென திரியும் பலரும் குடும்ப அமைப்பில் உட்படும் போது எப்படி ஒரு கட்டுக் கோப்புடன் வாழச் சாத்தியப்படுகிறார்கள்? சமுதாய அமைப்பில் தங்களுக்கென ஒரு நிலையை ஏற்படுத்தி கொள்ளும்போது ஒரு அச்சம் வந்து சேரும். ஆனால் அதையும் மீறி தனது நிலை தெரிந்தே தப்பினை செய்யத் தூண்டுவது கட்டுப்பாடில்லாத காமம்.

இந்த காமத்தை அறவே துரத்துவது பிரம்மச்சரியம். ஆனால் பிரம்மச்சரியம் என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. என்னைப் பாதித்த ஒரு கதை உண்டு.  உயர் வகுப்பை சேர்ந்த ஒருவரின் மனைவி கடும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவே தினமும் அவர் தனது மனைவிக்கு பணிவிடைகள் செய்து வருவதையே பெரும் பேறாக கருதி வருகிறார். ஊரில் இருப்பவர்கள்  தருவதை  மட்டும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார். இவ்வாறு இருக்கும்போது ஒரு பணியாக அவர் ஒருமுறை தனியாய் காட்டின் வழியில் நடந்து செல்லும் போது எதிர்ப்பாதையில் தாழ்ந்த வகுப்பினை சார்ந்த பெண் ஒருவர் வருவதை காண்கிறார். அப்பொழுது அவரின் மனம் அல்லாடுகிறது. சல்லாபத்தில் தள்ளாடுகிறது. இப்பொழுது தான் பல வருடங்களாக கட்டிக்காத்த பிரமச்சர்யம் பற்றி, மனிதரில் ஏற்றத் தாழ்வு பற்றி அவருக்கு எந்த சிந்தனையும் எழவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். எவரும் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை உறுதி செய்ததும் அந்த பெண் அருகில் வந்ததும் அந்த பெண்ணின் கையைப் பிடிக்கிறார். பிரம்மச்சர்யம் தொலைந்து போகிறது.

இப்படித்தான் பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இருக்கும் நன்மதிப்பு என பல விசயங்களை இந்த கட்டுப்பாடில்லாத காமத்திற்கு பலியாக்கி விடுகின்றனர். இது இயற்கையான விசயமா? அல்லது கட்டுப்பாடில்லாத மனதினால் ஏற்படும் அசிங்கமா?

(தொடரும்)

Friday 12 March 2010

காமம் 4

வர்ணனைகள், வார்த்தைகள் காமத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாலுணர்வு தொடர்புடைய வார்த்தைகள் மிகவும் கொச்சையாகவேப் பார்க்கப்படுகிறது. அவை பிறரை அவமானப்படுத்தவும், கேவலப்படுத்தவும், திட்டவுமே உபயோகப்படுகிறது. சாதாரணமாக எழுதப்படும் கதைகளில், கவிதைகளில் இது போன்ற வார்த்தைகள் தாராளமாக உபயோகிக்கப்படுவதில்லை. அது எழுதுபவரின் எண்ணத்தைப் பொருத்தும் அமைந்துவிடுகிறது, மேலும் என்ன இப்படியெல்லாம் எழுதி இருக்கிறார் எனும் கண்டனத்திற்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் எழுத்துகள் திருத்தி அமைக்கப் பட்டுவிடுகிறது. இது போன்ற எழுத்துகளை தவிர்ப்பது என்பது அவரவர் மனதிற்கு உட்பட்டதாகவே அமைந்து விடுகிறது. அங்கே ஒரு சாரரின் பார்வையில் வார்த்தைகள் ஆபாசத்தன்மைகளை பெற்று விடுகின்றன. ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளை தமிழில் திட்டத்தான் உபயோகப்படுத்துகிறோம், ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் சாதாரணமாகவே பேசுகிறார்கள்.

ஒருமுறை ஒருவரின் பேட்டிதனை வலைப்பூவில் படித்தபோது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது, ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவரது பார்வையில் பார்த்தபோது ஓரளவுக்கு அவர் சொல்வது நியாயமாகத்தான் தெரிந்தது. விளையாடும்போது, திட்டும்போது உபயோகிப்படும் வார்த்தைகள் எழுத்தில் இருந்தால் எழுத்தின் நாகரிகம் குறைந்தா போய்விடும் என்கிறார் அவர். எழுத்து நாகரிகம் குறையாது, ஆனால் படிப்பவர்கள் மனதில் ஒருவித வெறுப்பு ஏற்படும். ஆனாலும் பலரும் அப்படித்தான் எழுதுகிறார்கள். இது தவறு, இது தவறில்லை என்பது எழுதும் விசயத்தைப் பொருத்து அமைந்து விடுகிறது என்பதை உற்று நோக்குதல் அவசியமாகும்.

'வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது' என ஊர் வழக்கில் சொல்வார்கள். நாம் கோபப்படும்போது உபயோகிக்கப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் நாம் உபயோகிக்க வேண்டியதன் அவசியமே இருக்காது. இருப்பினும் அதனை அவசியமாக்கிக் கொள்கிறோம். கோபத்தினை வெளிக்காட்டும் ஒரு பெரிய ஆயுதம் மெளனம் ஒன்றுதான். பேசாத வார்த்தைகளையெல்லாம் இந்த மெளனம் பேசிவிடும்.

கவர்ச்சிகமான வார்த்தைகள், துள்ளலுடன் கூடிய ஆபாசமான வார்த்தைகள் காமம்தனை விரும்புவோர்க்கு மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணும், காமம் பிடிக்காதோர்க்கு மனதில் எரிச்சலை ஏற்படுத்தும். காமத்தின் மூலதனம் ஆசை மொழி, வார்த்தைகளை மென்மையான வருடலாக மாற்றும் நெருடல் இல்லாத மொழி.

ஆண்குறி, பெண்குறி என்றே பொதுவாக தமிழில் எழுதுவது சரியாகப்படும். ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்தபோதுதான் பெண்குறிக்கு யோனி என்று மற்றொரு பெயர் உண்டு என அறிந்தேன். அந்த பாடத்தை மறைத்து வைத்துப் படிக்கத்தான் தோன்றியது, மறைத்து வைத்துத்தான் பார்க்கத் தோன்றியது. அப்போதெல்லாம் இலக்கியம் எவர் படித்தது.

ஆண்குறிக்கு இதுவரை வழக்கத்தில் இல்லாத வேறு மொழி அறிந்தது இல்லை. கல்லூரிகளில் கவிதை எழுதத் தொடங்கியபோதுதான் பெண்குறிக்கு இலக்கிய வார்த்தை என்னவென்று அறிய முடிந்தது. தமிழ் அகராதியில் தேடிப் பார்த்ததில் அல்குல் என்றே இருந்தது. தமிழ் இலக்கியமோ, தமிழ் அகராதியோ படிக்காதவர்களிடம் போய் இந்த வார்த்தையைச் சொல்லி வேறு அர்த்தம் சொன்னால் தவறாகவா நினைக்கப் போகிறார்கள்? வார்த்தை, அது வார்த்தை தான். அதை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் வார்த்தையின் அமைப்பு இருக்கிறது.

திருப்பாவையில் ஒரு பாடல் வரும், அந்த பாடலில் அல்குல் என்றே ஆண்டாள் எழுதி இருப்பார். இதுகுறித்து பெரும் சர்ச்சைகள் இலக்கிய வரலாறில் எழுந்தது உண்டு. அதே வரியில் ஆண்குறி பற்றியும் எழுதி இருப்பதாக சொல்வார்கள். எனக்கு இலக்கியமோ, அல்லது ஆண்டாள் என்ன சொல்ல வருகிறார் என்பதை பிறரின் விளக்கவுரையில் இருந்து அறிந்து கொள்ள முடியாததாலோ ஆண்டாளின் எண்ணம் நிச்சயம் கொச்சைப்படுத்துதலில் இல்லை என்பதை என்னால் உறுதி செய்து கொள்ள இயலும், பிறர் அதை உறுதி செய்ய கொள்ள வேண்டுமென வாதிட எனக்கு அவசியமில்லை. அதோ அந்த பாடல்.

''கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, 
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் 
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.'' 


பெண்களின் மார்பகங்கள் காமத்தின் ஒரு பெரும் அங்கமாகவே இருக்கிறது. காமம் பற்றிய வர்ணனைகளில் மார்பகங்கள் கிளர்ச்சியூட்டுவதாகவே அமைந்துவிடுகிறது. 'கச்சணிந்த கொங்கை மாந்தர்' எனும் பாரதியின் வரிகளைப் படித்தபோது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. எப்படி இப்படி இவர் எழுதலாம் என நினைத்தேன். 'வசந்தவள்ளி பந்து பயின்றாலே' எனும் பாடலிலும் இந்த கொங்கை எனும் வார்த்தை உபயோகிக்கப்பட்டு இருப்பதாகவே நினைவில் இருக்கிறது. ஆனால் அங்கே எழுதப்பட்டதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை, இருப்பதை அப்படியே மிகைப்படுத்தாமல் சொல்லப்பட்டது. இதில் எந்த தவறு இருப்பதாகவோ, இவை காமம்தனை அதிகரிப்பதாகவோ எனக்குத் தெரியவில்லை.

கொங்கை என்பது சற்று நாகரிகமாகத்தான் இருக்கிறது, 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' எனும் பழமொழியை சற்று அநாகரிகமாக பெண்களின் மார்பகங்களை காட்டி ஒரு திரைப்பாடல் காட்சி அமைத்து இருந்தபோது என்ன ரசனை என்றேதான் தோன்றுகிறது. நேரடியாகவே முலை என்ற வார்த்தையை அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் படித்தபோது அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் இவை காமத்தை கிளர்ச்சி அடையச் செய்வதில்லை. மேலும் எவருமே தாய்ப்பால் என்றுதான் சொல்வார்களே தவிர முலைப் பால் என்றோ கொங்கை பால் என்றோ சொல்வதில்லை. அந்த பாடல் உங்கள் பார்வைக்கு.

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் 
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை 
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் 
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே 


நேரடியாகச் சொல்லப்பட்டதன் காரணமாக இது அநாகரிமாகவே இல்லை என்றே பலர் வாதிடலாம். ஆனால் ஒன்றின் மேல் வேறொரு பொருள் வைத்து பேசுவது, எழுதுவது சற்று அநாகரிகமாகவேத் தெரிகிறது. இப்படித்தான் சென்னை மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அன்பழகன் கவிதை எழுதினான்.

'நீ என்னை கைகாட்டி வழியனுப்பிய போது
கைகள் மட்டுமா ஆடியது அந்த
கயிலாய மலைகளும் அல்லவா ஆடியது'

இதில் வக்கிரம் இருக்கிறதா? காமத்தைத் தூண்டும் பொருள் அமைந்திருக்கிறதா என்பதை படிப்பவர்களைப் பொருத்தே அமைந்துவிடும். இப்படி நிறைய விசயங்கள் சொல்லலாம். சொல்லப்பட்ட வார்த்தையில் அகங்கார அர்த்தம் தேடுவதும் நம்மில் இயல்பு. இவையெல்லாம் கேட்கும்போது நமக்குத் தெரியாமலேயே சிரித்து மகிழ்வோம் என்பதை அறியத் தொடங்குங்கள்.

இப்படித்தான் இந்த தொடர் எழுதுவதற்காக பல இடங்களில் தேடிப் பார்த்தபோது சிறுவயதில் ஒரு பாடல் ஒன்றுக்காக நூறு தடவை தங்கமகன் எனும் திரைப்படம்தனை பார்த்த ரசிகர் ஒருவர் இருந்தார் என்றே கேள்விபட்டு இருந்தேன். அந்த பாடலைப் பற்றிதான் அந்த இணையதளத்தில் வெகுவாக விவாதிக்கப்பட்டு இருந்தது. 'மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே' எனும் வரிகள். இந்த வரிகளுக்கான அர்த்தம் இரட்டை அர்த்தம் தெரிந்து கொண்டவருக்கும், இரட்டை அர்த்தத்தில் பார்ப்பவருக்கும் மட்டுமே புரியும், இப்படி எழுதி வைத்துவிட்டார்களே, இதை நானும் பாடிக்கொண்டு திரிந்தேன் அப்போது என் அன்னை என்னைக் கண்டித்தார் என ஒருவர் எழுதி இருந்ததைப் பார்த்தபோது அப்படி அர்த்தம் பார்த்தால் பல தமிழ் திரைப்பாடல்களை முணுமுணுக்கவே இயலாது. இங்கே இவை எல்லாம் காமம் எனும் உணர்வை கிளர்ச்சியூட்டச் செய்கின்றனவா? இல்லை என்றே சொல்வாரும் உளர்.

இப்படி ஒன்றின் மீது பொருள் வைத்து பேசப்படும் வார்த்தைகள், வர்ணனைகள் கிளர்ச்சியூட்டுவதை விட நகைச்சுவையாகவேப் பார்க்கப்படுகிறது, அது மட்டுமில்லாமல் எரிச்சல் ஊட்டுவதாகவும் அமைந்து விடுகிறது. தமிழ் இலக்கியங்களில் எழுதப்படாததா என்றே பலரும் கேட்கிறார்கள், காமம் பரவலாகவே பரந்து கிடக்கிறது என சொல்வாரும் உளர், அங்கே காமம் ரசிக்கப்படுகிறது, காம உணர்வுகள் கிளறப்படுவதில்லை. காமசூத்திரமும் சரி, சமண முனிவர் எழுதிய இலக்கியமும் சரி, ஜெயத்தக்கத் தேவர் எழுதிய பாடல்களும் சரி காமம் மென்மையானது என்றே சொல்லிவிட்டுப் போகும்.

ஒரே விசயத்தை ஆபாசம் என்றும், இலக்கியம் என்றும் நமது மனம் ஏன் அப்படி ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறது?

Thursday 11 February 2010

காமம் - 3

காமம் 1  காமம் 2  படிக்க.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.  (நன்றி 



1997 ல்,  முதன் முதலில் திருப்பாவை மனப்பாடம் செய்ய ஆரம்பித்த காலம் அது. திருப்பாவையை மனனம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது எனத்  தெரியாது.  முப்பது பாடல்களையும் மனனத்தில் வைத்திருந்தேன். காலையில் எழுந்ததும் வழக்கம் போல பத்தியும், சூடமும் ஏற்றி வைத்து சில நிமிடங்களாவது இறை வணக்கம் செலுத்தாமல் கல்லூரிக்கு சொல்லித் தர செல்வதில்லை. 

இந்த பாடலை இன்று பாடினாலோ, கேட்டாலோ  கூட கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும். பல பாடல்கள் மறந்து போயின. ஆனால் இன்னும் மனதில் ஒரு ஆசை இருக்கிறது,  எப்படியாவது என்னை மீண்டும் தேடி எடுத்து விடவேண்டும் என. 

'மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்' எனச்  சொல்லும்போதே வாழ்க்கை இன்ன பிற ஆசைகளுக்கு அடிமையாகிவிடுமோ எனும் அச்சம் எழத்தான் செய்கிறது. அப்படி அடிமையாவதன் பொருட்டு கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் கோலோச்சத் தொடங்கிவிடுகின்றன.  சாந்த நிலையை அடைய வேண்டிய மனம் தள்ளாடி திரிகிறது.  காமம் அத்தனை மோசமானதா? இறைவன் மேல் வைக்கப்படும் காமம் மட்டும் என்ன தனிச் சிறப்பு உடையதா? 

காமம் ஒரு உணர்வு. அது பக்குவப்படுத்தப்படாத வரைக்கும் அந்த காமத்தினால் சீரழியும் மனிதர்களை எதுவும் செய்ய இயலாது. பக்குவப்படுத்தப்பட்ட காமம் காதலுக்கு பெருமை சேர்க்கும், ஒரு போதும் சிறுமை சேர்க்காது. பக்குவப்படுத்தப்பட்ட காமம் வாழ்க்கைக்கே பெருமை சேர்க்கும். பேரின்பத் தழுவல்களில் இறைவனை பற்றி சொல்லும் போது கூட இப்படித்தான் எழுத முடிகிறது. 

உணர்வுகளினை உறுப்புகளில் உலர வைத்து
திணறும்படி இச்சைதனை பரப்பி வைத்து
ஒதுக்கித் தள்ளி உன்னிடம் ஒட்டிக்கொள்ள
பதுக்கிய உணர்வு எவ்விதம்

இதே  வரிகளை வேறு கண்ணோட்டத்தில் நினைத்துப்  பார்க்கிறேன். உலகமெல்லாம் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உள்ளத்தில் உணர்வுகள் கிளறப்படுகின்றன. இப்போது உணர்வுகளினை கட்டுப்பாடுக்குள் வைத்திருப்பது என்பது அவரவர் மன வலிமையை பொறுத்தே அமைந்து விடுகிறது. தவறில்லை என நினைத்து செயல்புரிவோர்கள் பற்றி எதுவும் சொல்ல இயலாது. 'இதிலென்ன இருக்கு' என விளையாடும் மனிதர்களை பற்றி எதுவுமே எழுதவும் முடியாது. 

இந்த காமம் பற்றி மகாத்மா காந்தி தனது சுயசரிதையில் எழுதியதைப் படித்தபோது மனதில் பெரும் கலக்கம் ஏற்படத்தான் செய்தது.  மனைவியைத்  துன்புறுத்தும் கணவர்களில் ஒருவராகத்தான் காந்தி எனது கண்ணுக்கு தெரிந்தார். மகாத்மா எனப் போற்றபடுவதால் அவர் தவறே இழைத்து இருக்கமாட்டார் என்றெல்லாம் நான் நினைத்து இருக்கவில்லை ஆனால் அவரது வாழ்க்கை முறை என்னை ஆச்சரியப்படுத்தியது. சக உயிரை அடிமைப்படுத்தும் எண்ணமும், மிரட்டி உருட்டி வைக்கும் கொடுமையும் இன்றும் உலக அளவில் பெரும்பாலும் நடந்து வருவது கண்டு மனதில் ஏற்பட்ட கலக்கமே அது. இந்த காமம் எந்த வகையில் சேர்க்கப்படும்? 

மனித இனத்தில் இனப்பெருக்கம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்தால் உருவாவது என்பதுதான் அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறாதவரைக்கும் இருந்த நிலை. இன்றைய சூழல் எத்தனையோ மாறிவிட்டது. ஆண் மற்றொரு ஆண் மீது கொள்ளும் காமம், பெண் மற்றொரு பெண் மீது கொள்ளும் காமம் என  சமுதாயம் எந்த நிலையையும்  ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துக்கு வந்துவிட்டது.  எப்படிப்பட்ட காமமும் சரிதான் என ஏற்றுக்கொள்ளும் சமுதாயமாகத்தானா மாறிவிடப் போகிறது? 

'மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்'

Tuesday 2 February 2010

காமம் - 2

காமம் - 1 படிக்க இங்கே அழுத்தவும்.

காமம் பற்றி எழுத வேண்டியதன் அவசியம் என்ன? இதனை எழுதுவதன் மூலம் பிறருக்கு என்ன பயன் இருந்துவிடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது என என்னிடம் கேட்கப்பட்டபோது என்னால் என்ன பதில் சொல்லியிருக்க முடியும் என்பதை இப்போதைக்கு நீங்கள் யூகம் செய்து கொள்ளுங்கள்.

பலரின் கவனமானது மறைத்து வைத்திருக்கப்படும் விசயங்களில்தான் அதிகமிருக்கும் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள், அதாவது அது என்னவாக இருக்கக்கூடும், எப்படி இருக்கக்கூடும் என்கிற ஒருவித தேடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடிய விசயங்களில் மனம் நாட்டம் கொள்கிறது.

ஆடைகளே இல்லாமல் எத்தனை பேர் உலகில் நிர்வாணமாக வாழத் தயார் எனக் கேட்கப்பட்டால் 'அடச் சீ, இதென்ன மானங்கெட்ட நினைப்பும், கேள்வியும்' என்றே பதில் வந்து சேரும். ஆனால் சமணர்கள், சில முனிவர்கள் நிர்வாணமாக வாழ்ந்தார்கள் எனும் கதை கேட்டதுண்டு,  நிர்வாணமாக வட இந்தியாவில் வாழும் 'சித்தர்கள்' என அழைக்கப்படும் மனிதர்கள் பற்றிய விசயத்தை, நிர்வாணமாகவே இருந்திட வேண்டும் என்கிற கட்டுப்பாடோடு கூடிய கடற்கரை பகுதிகள், வீட்டினுள் நிர்வாணமாகவே வாழ்ந்து வரும் 'இயற்கைவாதிகள்' என தொலைகாட்சியில் காட்டியது உண்டு.

இப்பொழுது மானம் என்பது அங்கங்களை மறைத்து வாழ்வது எனச் சொன்னால் மருத்துவ உலகத்தை கொஞ்சம் உற்று நோக்குங்கள். மருத்துவ உலகத்தில் காமம் என்கிற வார்த்தைக்கு கொஞ்சமும் இடம் கிடையாது. இந்தியத் திருநாட்டில் எப்படி எனத் தெரியவில்லை, ஆனால் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எல்லாம் ஆண்களும் மருத்துவ தாதிகளாகப் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் எவரும் எந்த நாட்டிலும் நிர்வாணமாக செல்ல முடியாது. நிர்வாணமாக விளையாட்டு அரங்குகளில் ஓடித் திரிந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாணமாக எவரேனும் வாழ நினைத்தால் அவர்கள் மனநிலை பிறழ்வுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கக் கூடும் என்கிறார்கள். கிழிந்த ஆடையில் தங்களை மறைத்துக் கொள்ள இயலாமல் தவிக்கும் மனிதர்கள் எத்தனை பேர். உண்ணவே உணவின்றி உலகத்தில் ஒரு பகுதி தத்தளித்துக் கொண்டுதானிருக்கிறது.  எனினும் விலங்குகளின் நிர்வாணம், குழந்தைகளின் நிர்வாணம் நமது கண்களுக்கு ஏன் அருவெறுப்பாகத் தெரிவதில்லை! மனதில் எழுதப்பட்டது எல்லாம் தவறுதலாகவே எழுதப்பட்டு வந்திருக்கிறது. எதை எதை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டுமோ அது மட்டுமே வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் எனப்படும் நாகரீகம் விதைத்தது மனிதர்களாகிய நாம் தான். மறுப்பதற்கில்லை.

நமக்குச் சொந்தம் அல்லாத பிறிதொரு பொருளின் மீது ஆசைப்பட்டாலே அங்கே நமது மானம் தொலைந்துவிடுகிறது என்கிறது நமது முன்னோர்களின் சொல்வளம். அப்படியெனில் எத்தனை பேர் மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும் கேள்வி எழுமெனில் கிராமத்து வழக்கச் சொல்லாகிய 'மானங்கெட்ட பொழப்பு' என எளிதாகச் சொல்லிவிடலாம்.

காமத்துப்பால்தனை இப்பொழுதெல்லாம் படிக்கும்போது மனதில் எவ்வித குற்ற உணர்வுகளும் ஏற்படவில்லை. காமம் பற்றிய திருவள்ளுவரின் பார்வை காதலைச் சார்ந்தே இருக்கிறது எனச் சொன்னால் அங்கே காதல் என்று அவர் எழுதியிருக்கலாம், ஆனால் காமம் என்றே எழுதப்பட்டு இருக்கிறது. காமத்தினால் பயன் எதுவெனின் எனச் சொல்லும்போது ஊடல், உணர்தல், புணர்தல் என்கிறார். காதலில் ஊடல் இல்லை, புணர்தல் இல்லை, காதலில் உணர்தல் மட்டுமே உண்டு. இதைத்தான் ஒரு கவிதையில் எழுதினேன், காதல் புரிந்து கொள்ளும் என. இதைப் படித்தவர்கள் காதல் புரிந்து கொல்லும் என்றார்கள். சில திருக்குறள்களைப் பார்வைக்கு இணைக்கிறேன்.

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

எத்தனை பேர்தனை வேண்டுமெனிலும் காதல் செய்யலாம், ஆனால் காமம் ஒருவரின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதுதான் சரியெனச் சொன்னால் காதலை கொச்சைப்படுத்தியதாகவேத் தோன்றும்.

இப்பொழுது கவிதையை நினைவுபடுத்துவோம், காதலில் ஆசை கடுகளவும் இல்லை, காதலில் காமம் தர்மம் இல்லை. காதல் ஒருபோதும் கொச்சைப்படுவதில்லை. மாறாக இச்சை கொண்ட காமம் கொச்சைப்பட வைக்கிறது.

முதன்முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன பதில் உலகில் எவருக்கேனும் எப்பொழுதேனும்  பயன் பெறும் என்கிற நோக்கத்தில்தான் எனது எழுத்துதனை அமைத்துக் கொண்டேன், அதில் காமம் மட்டும் விதிவிலக்கா?

(தொடரும்)

Wednesday 27 January 2010

காமம் - 1

1. எனக்கு மிகவும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கேனும் எவரேனும் இதனைப் படித்துவிட்டு என்ன நினைப்பார்களோ என்கிற அச்சம் அதிகமாகவே இருக்கிறது. இதனை எழுதி முடித்த பின்னர் ஒளித்து வைத்துவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எழுதியதை ஒளித்து வைத்து இருப்பேனோ எனும் ஒரு தேடல் உங்களுக்குள் இப்போதைக்கு எழுந்து இருக்கலாம்.

'காமம்' என்ற சொல் மிகவும் அருவெறுப்பாகவேத் தெரிகிறது. காமம் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் எனும் ஒரு தேடல் என்னுள் இருந்தது. இப்பொழுதெல்லாம் ஏதேனும் தேவையெனின் நூலகங்களுக்கோ, அறிவிற்சிறந்தவர்களைத் தேடியோ செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது ஒரு செளகரியமாக இருக்கிறது.

காமம் என்ற சொல்லுக்கு ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல் எனவும்  காமம் என்பதின் விளக்கம் காம சூத்திரத்தில்

'ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்'

எனும் சுலோகம் மூலம் சொல்லப்பட்டு அதற்கு விளக்கமாக காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது கண்டு அதிசயமாக இருந்தது.

இந்த காமசூத்திரத்தை வாத்சயானர் எனும் முனிவர் எழுதினார் என பலமுறைக் கேள்விபட்டதுண்டு. அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என இதுவரை படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. ஆனால் இந்த காமசூத்திரம் பலரால் பின்னர் தொகுத்து எழுதப்பட்டது என தமிழ்விக்கிபீடியா சொல்கிறது.

அதுவும் காமசூத்திரத்தின் முதல் வரிகள் 'தர்மார்த்த காமேப்யோ நம' அதாவது 'அறம் பொருள் இன்பமே போற்றி' எனவும் சொல்கிறதாம். அதோடு மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் ஒவ்வொரு பருவகாலத்திலும் என்ன என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வதாகவும் ஒரு சுலோகம் அமைந்திருக்கிறது.

அந்த சுலோகத்தின் விளக்கமாக குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள் எனவும், இளமைப் பருவத்தில் காமம் எனவும் முதுமைப்பருவத்தில் தர்மம் செய்யவும் அதனால் மோட்சம் கிட்டும் என்பது போல் எழுதப்பட்டு இருக்கிறது.

ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச

காமம் என்றாலே தலைதெறிக்க ஓடிய காலங்களும், காமம் பற்றி பேசினால் அவர்கள் தவறானவர்கள் எனும் எண்ணம் கொண்ட அந்த சிறு வயது முதலான இளமைப் பருவ காலங்கள் நினைவுக்கு வந்தது. ஒரு அறிவியல் நோக்கோடுப் பார்க்க வேண்டும் எனும் நிர்பந்தமோ, சொந்த அறிவோ இருந்திருக்கவில்லை.

திருக்குறளில் எழுதப்பட்ட காமத்துப்பால் பக்கம் எட்டி கூடப் பார்ப்பதற்கு அத்தனை அசெளகரியமாக இருந்தது. அசிங்கமான வார்த்தைகளாகக் எனக்குக் காட்டப்பட்டவைகள் என எதையுமே எப்போதும் பிரயோகம் செய்தது இல்லை. அப்படி பேசினால் நான் மோசமானவன் எனும் எண்ணம் என்னுள் ஆழ வேரூன்றியிருந்தது. எழுத்து நாகரீகம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு, 'கொச்சையான வார்த்தைகள் எல்லாம் அவற்றை கொச்சையாகப் பார்ப்பதில்தான் இருக்கிறது என பலர் உரக்கச் சொல்லிக்கொள்வதோடு எழுத்திலும் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருப்பாவை எழுதிய ஆண்டாள் எழுதவில்லையா எனவும் கேட்கிறார்கள். இலக்கியத்தரத்தோடு ஒரு விசயத்தை பார்க்க வேண்டும், வக்கிர புத்தியோடு பார்த்தால் எல்லாம் வக்கிரமாகத்தான் தெரியும் எனவும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருந்துவிடட்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் உண்மையிலேயே நமது கலாச்சாரத்திற்கு அவையெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளாகவே இன்றுவரை எனக்குத் தெரிகிறது. இலைமறை காயாகவே எல்லாம் உணர்த்தப்பட்டு வந்திருக்கிறது. வெளிப்படையாக பேசுவது என்பது நாகரிகமற்ற செயலாகவே கருதப்பட்டு வருகிறது. இனப்பெருக்கம் பற்றிய விசயங்களை பாடம் சொல்லித்தர  ஒருவித தயக்கமாகத்தான் இருக்கிறது. நிற்க.

'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' எனும் கவிதையை மனதில் பதிவு செய்தபோது 'மோகம்' என்றால் பெண் மோகம் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேன். மோகம் என்பதற்கான அர்த்தங்கள் நன்றாக தமிழ் தெரிந்ததும் பலவகையில் புரிந்து  போனது.

காமம் சம்பந்தமான விசயங்கள் எதுவெனினும் கெட்டவர்கள் செய்யக்கூடியது என்றும் 'நீலப்படம்' பார்ப்பவர்கள் அயோக்கியர்கள், அங்க அவயங்களை வெளிக்காட்டும் எந்த ஒரு இதழ்களையும் பார்ப்பவர்கள் கேவலமானவர்கள் என்றெல்லாம் மனதில் சித்திரம் வரைந்து வைத்திருந்தேன்.

ஏன் அப்படி இருந்தேன், எதற்காக அப்படி இருந்தேன் என என்னுள் கேட்டுக் கொண்டபோது எனக்குள் ஒரே ஒரு விசயம் தெரிந்தது. என்னை எவரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதுதான் அது. அதாவது நல்லவன் என்றால் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, பிற பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது போன்றவைதான் எனக்குத் தெரிந்தவைகள். கல்லூரிக் காலங்களில் பெண்களிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டு ஓடி ஒளிந்திருக்கிறேன். அவர்களாகவே நான் எழுதிய கவிதையைப் பாராட்டிய போது என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.

இந்த காமம் வாழ்க்கையில் ஒருவர் அடைய வேண்டிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்பன ஒருவர் வாழ்வில் அடைய வேண்டிய செயல்களாகும்.

ஆனால் சமீபத்தில் எழுதிய 'காதல் மட்டும்' கவிதை ஒன்றில் இப்படியும் எழுதினேன்.

நான் உன்னை காதலிக்கிறேன் என்றோ
நீ என்னை காதலிக்கிறாய் என்றோ
ஒருபோதும் சொல்லியதுமில்லை
காதல் சொல்லித்தான் தெரிவதில்லை

காதலில் ஆசை கடுகளவும் இல்லை
காதலில் காமம் தர்மம் இல்லை
உணர்வினால் மட்டுமே காதலி
அதுதானே காதலின் உயிர்மொழி.

நான் காமத்திலிருந்து காதலைப் பிரித்துப் பார்க்கிறேன். காதலை காமத்திலிருந்து விலக்கி வைத்திடவே விளைகிறேன். காதல் கொண்ட பார்வைக்கும், காமம் கொண்ட பார்வைக்கும் வேறுபாடு இருப்பதாகவேத்தான் நான் பார்க்கிறேன்.

காமம் இன்பம் தருவதில்லை, மாறாக காதல் இன்பம் தருகிறது. இப்பொழுது காமம் என்பதற்கான அர்த்தம் எனக்குள் வேறுபடுகிறது.

(தொடரும்)