Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Friday 10 January 2020

அசுரனும் தர்பாரும்

திரையரங்கு சென்று படம் பார்ப்பது என்பது அரிதானதால் பார்க்கின்ற அனைத்து தமிழ் திரைப்படங்கள் குறித்து எல்லாம் எழுதுவது என்பது சற்று இடைஞ்சல்தான். அக்டோபர் மாதம் 12ம் தேதி அன்று அசுரன் திரையரங்கு சென்று பார்த்தபோது உடன் வந்தவர்கள் படத்தின் உட்பொருளை புரிந்து கொள்ளமுடியாமல் நிறைய வன்முறையாக இருக்கிறது என்றார்கள். ஆனால் அந்தப் படத்தின் வலியை வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர இயலும். 

ஒடுக்கப்பட்டவர்களின் வலி என்பது அசுரன் போன்ற படைப்புகளின் மூலம் வெளிக்கொண்டு வந்தாலும் சமூகத்தின் மாற்றம் என்பது உடனடியாக நிகழும் நிகழ்வு அல்ல. ஏதேனும் ஒரு வகையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். பணம் இருப்பவருக்கு, செல்வாக்கு உள்ளவருக்கு அதனால் பெரும் பாதிப்பு இல்லை, ஆனால் அல்லல்படுவது எல்லாம் பிறரால் அடக்கி அடிமைப்படுத்தப்பட்டவர்கள்தான். 

கல்வி என்ற ஒன்றே சமூக மாற்றத்திற்கு வழி என்று சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது போல படித்தவர்கள்தான் பெரும்பாலும் புத்தியற்று வலம் வருகிறார்கள். இது இந்த உலகத்தின் சாபக்கேடு. படைப்பாளி எப்படியாவது இச்சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடாதா எனும் ஏக்கத்தில் வெளிக்கொணரும் படைப்புகளில் வலி அதிகம். இந்தப் படைப்புகள் எல்லாம்  வெறும் கை தட்டல்களுக்கு அல்ல. 

கிராமத்தில் நிலத்தகராறு, வெட்டுக்குத்து, செருப்பை கையில் எடுத்துக் கொண்டு போவது என ஒரு ஒடுக்கப்பட்டச் சமூகத்தினூடே வாழ்ந்து வந்த காரணமோ என்னவோ படைப்பின் ஆழம் நிறையவே பாதித்தது. ஆனால் நகரங்களில் எல்லாம் இப்படி எல்லாம் இருப்பது இல்லை எனும் ஒரு கருத்து உண்டு, அங்கே பணத்தைத் தேடி அலைபவனுக்கு யார் என்ன ஆள் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு ஏது பேதம், இருந்தாலும் கிராமத்தில் இருந்து பயணப்பட்ட பலரின் உள்ளுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் விஷச்செடி முற்றிலுமாக அழிக்கப்பட்டது இல்லை. இனி வரும் சந்ததிகள் வர்க்க பேதங்கள் பார்க்காமல் அனைவருக்கும் உதவி புரிந்து அன்புடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே இன்னும் பல வருடங்களுக்கு பெரும் கனவாகவே இருக்கும். மக்கள் திருந்த நினைத்தாலும் குட்டி குட்டித் தலைவர்கள் மக்களை விடுவதாக இல்லை, ஊர் நாட்டாமைகள் உறங்குவதாகவும் இல்லை. 

மிகச் சிறப்பான படைப்பு தந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள். தனுஷ் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இசை அருமை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 

அதன்பிறகு திரையரங்கு சென்று இன்று பார்த்த படம். தர்பார். ரஜினி என்பதைத் தவிர வேறு என்ன சொல்லிவிட முடியும். படம் ஆரம்பித்ததில் இருந்தே திரையரங்கில் ஆர்ப்பாட்டங்களும், சப்தங்களும் என இருந்தது. ரஜினியின் படங்களை அமைதியாகப் பார்க்கும் வழக்கம் எங்குமே இல்லை போல. இது ஒரு சினிமா எனும் மனநிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற படங்களை இரசித்து வர இயலும். படம் வேகமாக முடிந்துவிட்டது எனும் திருப்தியும் நிம்மதியும் இருந்தது. இப்போதெல்லாம் எந்தப் படம் என்றாலும் முழுவதுமாகப் பார்த்து விடுகிறேன். எனக்கு இரசனை குறைந்துவிட்டது என்றில்லை, அப்படி என்னதான் ஒரு படைப்பாளி சொல்ல வருகிறார் எனும் ஆர்வக்கோளாறுதான். இது சினிமா அல்ல, மாபெரும் ஒரு படைப்பு என சுயதம்பட்டம் அடிக்கும் இயக்குநர்கள் நிச்சயம் கொஞ்சமாவது அறிவோடு இருந்தால்தான் நல்லது அப்போதுதான் என்ன மாதிரியான வசனம் எழுதுகிறோம், எந்த மாதிரியான காட்சிகள் அமைக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்கும். தமிழ் சினிமா காலா, அசுரன், பரியேறும் பெருமாள், நேர் கொண்ட பாதை  போன்ற பாதையில் பயணித்தாலும் பேட்ட, விசுவாசம், பிகில், தர்பார் போன்றவைகளும் தேவையாகத்தான் இருக்கிறது. 

இப்படி பிறரது படைப்புகள் குறித்து எழுதும் போது நாம் எழுதுகின்ற படைப்புகள் குறித்தும் ஒரு குற்ற உணர்வு வராமலும் இல்லை. திருக்குறள் தராத சமூக மாற்றத்தை, இராமானுசர் மகான்கள், பெருந்தலைவர்கள் சொன்ன கருத்துக்களால் உண்டாகாத சமூக மாற்றத்தை கொண்டு வர வேண்டி படைப்பாளிகள் பலர் தங்கள் படைப்புகளில் சுமந்து கொண்டு அலைகின்றார்கள். காலம் என்ற ஒன்றே ஒன்றுதான் அத்தனையையும் புரட்டிப் போடும் பேராற்றல் கொண்டது. காலத்தை மாற்றும் வல்லமை மனித இனத்துக்கு வசப்படட்டும். 

நன்றி. 


Friday 5 August 2016

போதை தரும் போதனைகள்

''பக்தா''

''சுவாமி வாருங்கள், வாருங்கள். உங்களைப் பார்த்து எத்தனை மாமாங்கம் ஆகிவிட்டது''

''ஆச்சர்யம் பக்தா''

''எதைப் பற்றி சுவாமி?''

''பயபக்தியுடன் என்னை நீ அழைப்பதுவும், வரவேற்பதுவும்''

''நீங்கள் சொல்லும் விஷயங்களை பின்பற்றினால் மோட்சம் கிட்டும் என்று கேள்விப்பட்டேன்''

''வேறு என்ன என்ன கேள்விப்பட்டாய் பக்தா?''

''நோய் உடலைத் தீண்டாது. மனம் விசாலமாக பேரமைதியுடன் இருக்கும்''

''வேறு என்னவெல்லாம் பக்தா?''

''நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்''

''பக்தா உனக்கு சுயபுக்தி என்பதே கிடையாதா?''

''என்ன சுவாமி?''

''நான் சொல்வதை நீ பின்பற்றினால் இதுவே நடக்கும் எனில் நீ சொல்வதை நீ பின்பற்றினால் என்னவெல்லாம் நடக்கும் என யோசித்தாயா?''

''நான் சொல்வதை எப்படி சுவாமி?''

''உனக்கு நல்லது எது கெட்டது எது என்பதை சிந்திக்கும் அறிவு வைத்து இருப்பதற்கு காரணமே சுயபுத்தியுடன் நீ செய்லபட வேண்டும் என்பதுதான். ஆனால் நீயோ வேறு எவருடைய சொல்பேச்சு கேட்டு நடந்தால் உனக்கு நன்மை பயக்கும் என முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு இருக்கிறாய். ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்பது உணவு, உடை, இருக்க இடம். இந்த மூன்றும் வேண்டுமெனில் பணம் அவசியம். பணம் சம்பாதிக்க வேலை அவசியம். வேலை வேண்டுமெனில் திறமை அதைச்சார்ந்த அறிவுக்கூர்மை அவசியம். இதோடு மட்டுமில்லாமல் தெளிவான நோக்கம். இப்படி எல்லாமே உனக்கே நீ செய்து கொள்ள முடியும் எனும்போது எதற்கு பக்தா இப்படி பிறர் பின்னால் சுற்றிக்கொண்டு அலைய வேண்டும் என கருதுகிறாய்''

''சுவாமி நீங்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும் எனக்குள் ஒரு பரவச நிலை உண்டாகிறது. இது எல்லாம் எனக்குப் புரியாமல் இருந்தது. இதை உங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது''

''பக்தா மடத்தனமான காரியங்களில் மதி கெட்ட மடையர்களே ஈடுபடுவார்கள். நீ பள்ளிக்குச் செல்கிறாய். பாடங்கள் படிக்கிறாய். அத்தோடு அந்த பாடங்கள் உனக்குத் தரும் அறிவினை வளர்த்துக்கொண்டு இருக்க வேண்டுமேயன்றி பள்ளிதான் எல்லாம் கதி  என கிடந்தால் உன் நிலை என்னவென யோசி பக்தா''

''சுவாமி, உங்கள் போதனைகள் என்னை மெய் மறக்கச் செய்கின்றன''

''ஒரு பாடல் பரவசம் தருவதும், ஒருவரின் கருத்துக்கள் நமக்குப் பிடித்துப் போவதும் இயல்புதான் பக்தா. ஆனால் நீ சொல்கிறாயே, பரவசம் அடைதல் மெய் மறக்கச்  செய்தல் எல்லாம் நீயே உன்னை ஏமாற்றிக்கொள்வதுதான். எதற்கு இப்படி அறிவீனமாக யோசிக்கிறாய் என்றுதான் புரியவில்லை. எவருமே லாபம் இன்றி எந்த ஒரு பணியையும் செய்வது இல்லை. உடற்பயிற்சி செய்ய எதற்கு நீ ஒரு இடம் செல்ல வேண்டும். உனது வீட்டில் இருந்து செய்தால் ஆகாதா. ஆனால் நீ உனது மனதை மயக்கிச் செயல்படும்போது இது இதுதான் சரி என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாய். பின்னர் உன்னை அறியாமல் அதற்கு அடிமைத்தனம் ஆகிறாய். இதில் இருந்து நீ விடுபடவேணும் பக்தா''

''ஏன்  சுவாமி, நானா உன்னை வீட்டுக்கு வா வானு கூப்பிட்டேன். நீயே வந்துட்டு பெரிய இதாட்டம் போதனை சொல்லிட்டு இருக்க. உன்னை நான் கேட்டேனா, இல்லை கேட்டேனா. நீயும் என்னை மாதிரி ஒரு மனுஷன் தான, ஒரு நாலு ஐஞ்சி புத்தகம் படிச்சிட்டு இவ்வுலகம் அப்படி இப்படினு பேசறியே. நான் அதை எல்லாம் பிடிச்சி இருக்குனு சொன்னா கேட்டுட்டு போக வேண்டிதானே, அதைவிட்டுட்டு என்ன வியாக்கியானம் வேண்டி கிடக்கு''

''பக்தா, என்னை இப்படி பேச உனக்கு எப்படி மனம் வந்தது''

''பிறகு எப்படி பேசனும் சுவாமி? நீயே மதிகெட்டுப் போய்த்தான் ஒவ்வொருவரும் இன்னல்களில் இருக்கிறீர்கள், உங்கள் இன்னல்களை போக்குவேன் என சொல்லி மதி மயக்குற. எவனாச்சும் எதிர்த்துக் கேட்டா உடனே நான் அப்படி இல்லைனு சொல்றது. மனுசனா மனுசனா இருக்க விடு சுவாமி''

''எனது போதனைகள் உன்னில் இப்போது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. நீயே சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாய். நான் வருகிறேன்''

''சுவாமி, கொஞ்சம் விஷம் இருக்கிறது, அருந்திவிட்டுப் போறியா?''

''வேணாம் பக்தா, நானும் ஒன்னும் ஆலகால நீலகண்டன் இல்லை''

''யாரு அது ஆலகால நீலகண்டன்?''

''எனக்கு நேரம் இல்லை, இன்னொருமுறை சொல்கிறேன்''

''ஏன் சுவாமி உனக்கு அறிவே இருக்காதா, இப்பதான் சுயமா நான் சிந்திக்கிறேன் சொல்ற அப்புறம் நேரம் இல்லை பிறகு சொல்றேன்னு சொல்ற. சுயமா சிந்திக்கவே விடமாட்டியா. நான் கேட்டதும் என்ன சொல்லி இருக்கனும். சுயமாக சிந்திக்க வேணும் பக்தானு ஆனா நீ சொன்ன''

''பக்தா, உன்னைப்போல் தெளிவான மனநிலையில் அனைவரும் இருந்துவிட்டால் எனது போதனைகள் எல்லாம் எதற்கு பக்தா. ஆனால் நிறைய மக்கள் தாங்கள் செய்வது புரியாமல் இந்த உலகில் பல ஆண்டுகள் உயிரோடு இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களையேத் தொலைத்து விடுகிறார்கள். இப்படி அவர்களை தொலைய விடாமல் பாதுகாக்க நான் சில விஷயங்களை சொன்னால் எனது காலடியில் வந்து கிடக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய இயலும் பக்தா?''

''சுவாமி, திருந்தவே மாட்டியா? இதை எல்லாம் கேட்டனா? ஆமாம்னு சொல்றதுக்கு பதில் என்ன என்னமோ பேசற''

''பக்தா இந்த உலகில் பலர் தெளிவற்ற மனோ நிலையில் இருக்கிறார்கள். பெரும் குழப்பத்தில் அவர்கள் தடுமாறுவது கண் கூடு. இதற்கு பல காரணங்கள் இருப்பதால் எந்த காரணங்கள் என புரியாமல் ஏதேனும் ஒன்றில் தஞ்சம் அடைய நினைத்து என்னவென்னவோ செய்து கொண்டு இருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. மனதுக்கு திருப்தி என்ற ஒரு சில வார்த்தைகளை அவர்கள் எடுத்துக்கொண்டு செயல்படுவது எத்தனை தவறான விஷயம் என அவர்கள் புரிந்து கொள்வது இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எவரும் நினைப்பதும் இல்லை''

''சுவாமி, என்ன பேசிக்கிட்டே போற. நேரம் இல்லைனு சொன்னில கிளம்பு''

''பக்தா போதனைகள் இந்த உலகில் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. அந்த போதனைகளை சொல்வதற்கென நான் அவதாரம் எடுத்து வந்து இருக்கிறேன். இப்படி எனது செயல்பாடுகளை நீ முடக்குவது எவ்விதத்தில் நியாயம்.''

''சுவாமி, அதுதான் சொன்னேன். பரவச நிலை என. ஆனால் நீங்கள் தான் என்னை குழப்பிவிட்டீர்கள். உங்கள் போதனைகளை கேட்டு உங்களோடு வருகிறேன் சுவாமி''

''டேய் எங்கடா தூக்கத்திலே தூங்கிட்டே நடந்து போற''

சட்டென விழித்துப் பார்த்தேன்.

''சும்மா கண்ணு மூடி நடந்து பார்த்தேனம்மா''

அப்போதுதான் தோனியது. இந்த உலகத்தில் மக்கள் தூங்கிக்கொண்டே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எழுப்பி விடுகிறேன் என பலர் அவர்களை ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சாமியார் இனிமேல் கனவில் வராமல் இருக்க விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.



Tuesday 29 December 2015

நமது திண்ணை டிசம்பர் மாத இணைய இதழ்

ஒன்றின் வளர்ச்சியானது அவை பெறும் எதிர்ப்புகளைப் பொருத்து அமைகிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதுவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.

நமது திண்ணை இணைய இதழ் தற்போது ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் சிலருக்கு மிகவும் பரிச்சயமாக மாறி எரிச்சல்தனை ஒரு சிலரின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்த இணைய இதழில் இடம் பெற்றுள்ள அவனதிகாரம் எனும் ட்விட்டர் பயன்பாட்டு தமிழரின் எழுத்துக்கள். நமது திண்ணையில் எதற்கு அப்படி சர்ச்சையை அந்த அவனதிகாரம் உண்டு பண்ணின எனப் பார்த்தால் குழந்தைத்தனமான எழுத்துக்கள். குழந்தையின் செயல்களை எப்படி ரசித்து மகிழ்கிறோமோ அதைப்போலவே இது போன்ற அழகிய காதல் ரசிப்புகளை ரசிக்க வேண்டும், ஆனால் ஒரு பிரமாண்டமான படைப்பையே விமர்சிக்கும் விமர்சகர்கள் அதிகமாகிப் போன சூழலில் இதுபோன்ற எழுத்துக்கள் விமர்சனம் பெறவே செய்யும். ஆனால் அவனதிகாரம் எல்லாமே வெகு அழகு.

மதுப்பிரியாவின் ''அவனா வந்தான். சினிமா டயலாக்க அளந்தான். நான் ஙே-னு  சொன்னேன். அவன் கிர்ர்ர்ர்-னு சொல்லிட்டுப் போயிட்டான்'' இந்த ஙே கிர்ர்ர்ர் எல்லாம் ட்விட்டர் பயன்பாட்டு மொழிகள். ஒரு படைப்பாளி தனது எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்துவதே மொழி. அதுவும் டார்லின்ரெதா உவமை எல்லாம் காதலின் உச்சம். ''எரியும் நெருப்பாய் நீ, திரியாய் நான், நீ பிரகாசமாய் எரிய என்னை நான் எரிப்பேனடா'' இங்கே நெருப்பின் நிலையை திரியே அதிகரித்து விடுவதாக ஒரு அழகிய கவித்துவம். ஜீவசுசியின் அழகிய சொல்லாடல். 'உன்னைப் பிடிக்கும் அதைவிட உன் இதயம் பிடிக்கும்' என சொல்லப்பட்டதாக இருக்கிறது. இங்கே உன்னைத்தவிர வேறு எனக்கு எதுவுமே பிடிக்காது என சொல்வது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் எனது கவிதைகளை ட்விட்டரில் எழுதியது உண்டு. இவரது கவனத்தை ஈர்த்த எனது கவிதைகளை நான் கவிதைகள் என்றே அங்கீகரித்தது இல்லை.

இப்படியான அவனதிகாரம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணி ஆசிரியரை பேட்டி  எடுக்கும் அளவுக்கு கொண்டு போயிருக்கிறது. ஆசிரியரின் பொறுமையான பதில்கள் கூட கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளம்பரம் தேடும் பிரியராக ஆசிரியரை சித்தரித்து இருப்பது கண்டு எல்லாம் கவலைப்படத் தேவை இல்லை. நமது திண்ணையின் இணைய இதழின் வளர்ச்சி கண்டு பெருமைப்படலாம். இதைவிட பெரும் பரிசு எனக்கு சிறந்த சகிப்புத்தன்மையாளர் விருது பெற வழி செய்ததே இந்த நமது திண்ணை இணைய இதழ் தான். ஏளனம் செய்கிறார்களோ அல்லது உண்மையில் பாராட்டுகிறார்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நம்மை ஒருவராக மதித்து நமது செயலுக்காக நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நன்றி நமக்கு இருக்க வேண்டாமா? அதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஸ்வான் எழுதிய மழை கவிதை மிகவும் அருமை. கொலையுண்ட மரம் கொண்டு யாகம். அட. பாட்டி அறிந்திடா பாட்டில் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். முன் அட்டைப்படம் சினிமா இதழ் போன்ற பிரமையை உண்டு பண்ணி இருக்கிறது.

மகனதிகாரம் அன்பின் மிகுதி. வெகு சாதாரண செயல்களை சொல்லும் விதத்தில் அற்புத செயலாக்கி காட்டிவிடுகிறார்கள். ஒரு பருக்கை அமிர்தம். அதுவும் மகளதிகாரம் எல்லாம் நிறையவே அன்பை சொல்லுக்குள் அடக்கிவிடுகிறது. ஏன் ஊசி போடறாங்க?

மணல் கவிதை சற்று வித்தியாசம். மண் தின்று மண் திங்கும். மண்ணில் பெயர் எழுதும். சுசீமா அம்மா அவர்களின் திருவடி சேவை எனும் புதிய தொடர். மோட்சம், வீடுபேறு, ஆன்ம விடுதலை என்று தொடங்குகிறது. மனிதனின் அதிகபட்ச தேர்வு முக்தி அடைதலே அதற்கு திருவடி பற்ற வேண்டும் என அருமையாக விளக்கி இருக்கிறார். பல திருக்குறள்களை மேற்கோள் காட்டியதோடு மட்டுமில்லாமல் திருவாசகம் கூட துணைக்கு அழைத்து இருக்கிறார். திருமூலர் குறிப்பிட்ட திருவடி சிறப்பும் உள்ளது. திருநாவுக்கரசர் குறிப்பிட்ட திருவடி, திருவெம்பாவையில் திருவடி என திருவடிகள் பெருமையை சொல்லி இருப்பது வெகு சிறப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடர் இது.

அவளதிகாரம் அவனதிகாரத்திற்கு சளைத்தது அல்ல. கான் அவர்களின் போடா என்றாள். போயிடவா என்றேன். போகாத லூஸு  என்று இறுக் க அணைத்துக் கொள்கிறாள். நம்மில் சிரிப்பை உண்டாக்கும் சொல்லாடல். கண்ணனின் அவளதிகாரம் எழுத தேவையில்லை. அவளே... அதிகாரம் தான். சுகிபாலாவின் காதல் செய்யும் முடிவு அவளே கழட்டிவிடும் முடிவு அவளே. இவை எல்லாம் இப்படி எழுதப்படுவதற்கு காரணம் ட்விட்டர் தான். ஒரு பெரும் கவிதையை சில வரிகளில் எழுதி வெளிப்படுத்தி விடுகிறார்கள். அதற்கு நிச்சயம் ஒரு தனித்திறமை வேண்டும்.

நண்பர் ரவியின் பரங்கிக்காய் துவையல் வெகு சிறப்பு. உதயாவின் வாடகை எனும் தலைப்பின் வாடகைத் தாய் பற்றிய ஒரு சின்ன கதை. கதையில் வெறுமை தலைதூக்கித் தெரிகிறது. உமா க்ருஷ்  அவர்களின் பாடல் பரவசம். காதல் ஊர்வலம் இங்கே எனும் பாடல் கேட்டதில்லை. ஆனால் டி ஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் வெகு சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.ஆசிரியரின் புருஷ்லீ குறித்த பார்வை சிறப்பு.

நமது திண்ணை மென்மேலும் புகழும் வளர்ச்சியும் பெற இதில் வரும் படைப்புகள் எல்லாம் வெகு சிறப்பாக கொண்டு வர வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. நிச்சயம் முயற்சி வெற்றி பெறும். வாழ்த்துக்கள், வடிவமைப்பு வெகு அருமை.


Sunday 22 November 2015

நமது திண்ணை நவம்பர் மாத இணைய இதழ்

சற்று தாமதமாகவே வெளிவந்த இந்த இணைய இதழில் எப்போதும் போல வழக்கமான இராமானுசர் தொடர் இல்லாதது ஒரு குறையாகவே தெரிந்தது. பல வேலைகள் காரணமாக உடனே இந்த இதழை வாசிக்கவும் இயலவில்லை. வேலைக்கு முன்னுரிமை தரும்போது தமிழ் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இந்த இதழின் ஆசிரியருக்கு பெருமளவில் உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்டைப்படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  ரிஜ்ஜியின் மழலைக் கடிதம் மிகவும் கவலை தரக்கூடிய கவிதை. இந்த உலகம் மிகவும் பொல்லாத ஒன்றாகவே தெரிகிறது. இறைவனுக்கு வணக்கங்கள் எனத் தொடங்கும் கவிதையில் நிறைய வலிகள். பெண்ணாக பிறப்பது பெரும் இடர் என இந்த கவிதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. பல இழிநிலை மனிதர்களால் குழந்தைகள்  படும் பெரும் துயரத்தை பல வரிகளில் நாம் காணலாம். இவ்வுலகம் மாற வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக இருக்கிறது.

உதயாவின் புகையிலை தவிர்ப்போம் எனும் விழிப்புணர்வு முத்தம் குறித்த கதை. ஒரு விஷயத்தை சமூகத்திற்கு சொல்ல முற்படும்போது வலி தரும் விசயங்களை சொல்லும்போது மனதில் படியும் என்றே எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் கதைப்பாத்திரங்கள் அத்தனை பாதிப்பை நம்மில் உண்டாக்குவது இல்லை. புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் என பல பழக்கவழக்கங்கள் உடல் நலத்திற்கு இடையூறு என சொன்னாலும் இன்றும் பெரும்பாலான மனிதர்கள் அதை விட்டுவிட்டதாகத் தெரியவில்லை.

அழகிய ஓவியங்கள் மிகவும் சிறப்பு. ஓவியங்கள் நமக்கு பாடம் நடத்தும். கொக்கின் வாயில் இருக்கும் மீன், கண்ணாடியில் விசித்திர முகம் என ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் சொல்லவே வரையப்பட்டு இருக்கும்.

அவளதிகாரம் மகளதிகாரம் அவனதிகாரம் எல்லாம் எப்போதுமே மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் அந்தந்த வரிகளில் வாழ்ந்து விடுகிறார்கள். முடி கலைவதே இன்பம். தேவதையுடன் உலா வருகிறேன். மௌனம் எப்போதுமே அழகு. பெரிய ஆபிசராம். என்னிடம் குழந்தையாகிப் போவான். சோறு ஆக்கிடுவான். குருடாக ஆசை. நானும் எத்தனையோ அவளதிகாரம் எழுதி இருக்கின்றேன் என்றே கருதுகிறேன். இதற்கு காரணம் எவர் என என்னைக் கேட்டால் அன்றில் இருந்து இன்று வரை பல பெயர்களை சொல்ல இயலும். எவரேனும் ஒருவர் கருப்பொருளாகி நிற்பார்கள். அதை எவராலும் அறிந்து கொள்ள இயலாதபடி எனது எழுத்து அமைந்து விடும்.

மெழுகுவர்த்திகள் குறித்து மேலும் பல விபரங்கள் தந்து இருக்கலாம். எங்கே செயல்படுகிறது, அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் யார் யார். எத்தனை வருடமாக தொண்டு புரிகிறார்கள், அவர்களை தொடர்பு கொள்வது எப்படி போன்ற விபரங்கள் இல்லாமல் இருப்பது முழுமையற்று இருக்கிறது. ஆசிரியர் இதை அடுத்தமுறையாவது இணைத்தால் நன்றாக இருக்கும்.

உதயாவின் கபாலி மிகவும் நகைச்சுவையான அதே வேளையில் நல்லதொரு கருத்து சொல்லும் கதை. ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என எனவும் சில அபத்தமான காரியங்கள் நல்லதில் சென்று கூட முடியும்.

நவராத்திரி விழாவா, பண்டிகையா சுசீமா அம்மா அவர்களின் பயன்மிக்கத்  தொடர். இதுவரை படி அமைத்து கொலு பொம்மைகள் எல்லாம் செய்ததாக எனக்கு நினைவில் இல்லை. இந்தத் தொடரில் குறிப்பிட்டபடி பாடல்கள் பிறர் வீட்டுக்குச் செல்லுதல் எல்லாம் நான் கண்டதே இல்லை. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடுவோம். கலப்பை, புத்தகம் என கொண்டாட்டம் இருக்கும். தனிப்பட்ட சமூகம் கொண்டாடுமா, அல்லது எல்லா சமூகத்தினரும் கொண்டாடுவார்களா எனத் தெரியாது. சகோதரி ஷக்திபிரபா கூட இதுகுறித்து எழுதியாக ஞாபகம். எப்படி எடுத்துக் கொண்டாலும் இந்த நவராத்திரி ஒரு விழாதான். ஒன்பதாம் எண்ணுக்கு உரிய பலன்கள். நிறைய விசயங்களை உள்ளடக்கிய பகுதியை அனைவரும் பயன்பெறும் வண்ணம் எழுதி இருப்பது வெகு சிறப்பு. எல்லாமே புதிய விசயங்கள்தான்.

ஆசிரியரின் திரு தனஞ்ஜெயின் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு. தேசிய விருது பெற்ற ஒரு எழுத்தாளர். ஒரு தயாரிப்பாளர். சினிமா குறித்த அவரது பார்வை மிகவும் சிறப்பு. அவர் தொழில் குறித்த தொடர்பான கேள்விகள் எல்லாம் சிறப்பு.

நண்பர் ரவியின் கிச்சன் டைம் பால் பேடா. இது பால்கோவாவுக்கு சளைத்தது அல்ல என்றே கொள்ளலாம். எவரேனும் செய்து பார்த்தவர்கள் எப்படி வந்தது என சொன்னால் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்.

டிவிட்டரில் சிந்தனை எல்லாம் எப்படி இருக்கும் எனில் சமூகத்தில் சினிமா முதற்கொண்டு அரசியல் வரை ஏதும் பிரச்சினை எனில் அனைவருமே அது குறித்து தங்களது எண்ணங்களை பதிவு செய்வார்கள். அப்படித்தான் துவரம் பருப்பு குறித்த சிந்தனையை இதில் காணலாம்.

உமாக்ருஷ் அவர்களின் பாடல் பரவசம். இந்த பாடலை நான் கேட்டதே இல்லை. வித்யாசாகரின் இசை மிகவும் மென்மையாக இருக்கும். பாடல் வரிகள் என்னவெல்லாம் சொல்ல வருகிறது என மிகவும் தெளிவாக ஆராய்ந்து இருக்கிறார். நல்ல நல்ல பாடல் வரிகள். எப்படி பாடுவது என்பதே இந்த பாடலுக்கான வெற்றி.

மதிப்பிற்குரிய ஆச்சி மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை பண்ணுவோம்.

பத்து இதழ்கள் கண்ட நமது திண்ணை தனது எல்லையை விரிவாக்கி இன்னும் பல எழுத்தாளர்களின் எழுத்துகளை தன்னுள கொண்டு வர வேண்டும் என்பதே எனது அவா. அற்புதமான நமது திண்ணை இணைய இதழ் மென்மேலும் வளர எமது வாழ்த்துகள்.


Tuesday 6 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 28

அடுத்த தினம் காவல் நிலையத்திற்கு சென்று கோரன் பற்றி விசாரித்தேன். அவர்கள் கோரன் வெளியில் சென்றுவிட்டதாக கூறியது பெரும் வருத்தம் தந்தது. அவன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் என்ன காரியம் பண்ணி இருக்கிறீர்கள் என சத்தம் போட்டேன். என் மீது வழக்குப் பதிவு செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

எங்கே இந்த கோரன் போயிருப்பான் என அவனது வீட்டிற்கு சென்று பார்த்தால் அங்கே கோரன் இருந்தான். ஆனால் நான் மறைந்து கொண்டேன். அவனது வீட்டிற்குள் சிலர் சென்றார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே சிரித்த முகத்தோடு வந்தார்கள். கோரன் வாசல் வரை வந்து அவர்களை அனுப்பி வைத்தான். இந்த வயதில் இவனுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன். ஒருவேளை சுபத்ரா சொன்னது போல பரிணாமத்தின் கர்மவினையோ.

வீட்டிற்குள் சென்ற கோரன் கையில் ஒரு பையுடன் வெளியேறினான். என்னை எவரும் பார்த்துவிடக்கூடாது என்பது போல நடந்து கொண்டேன். அவனை மெதுவாக பின் தொடர ஆரம்பித்தேன். நிச்சயம் இவன் சுபத்ராவை நோக்கித்தான் செல்ல வேண்டும் என எண்ணியது தவறாக முடிந்தது. அவன் கரியனேந்தல் செல்லும் பேருந்தில் ஏறினான். அவனை பின் தொடர்வதா வேண்டாமா என எண்ணியபடி நின்றேன். காயத்ரியின் தந்தையை இப்படித்தான் தொடர்ந்தது நினைவில் வந்து ஆடியது. ஒன்றும் தெரியாதது போல அவன் இருந்த பேருந்து பக்கமாக நடந்தேன். அவன் அமர்ந்து இருந்த சன்னல் பக்கம் சென்று அழைத்தேன்.

''கோரன்''

பெயர் கேட்டதும் திடுக்கிட்டான். என்னைப் பார்த்தவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

''கோரன், கோரன்''

அவன் என்னைத் தவிர்க்க நினைப்பது புரிந்தது. பேருந்தில் ஏறி அவனருகே சென்றேன்.

''கோரன் எங்கே போகிறாய்?''

இருக்கையில் இருந்து எழுந்தவன் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி சில பேருந்துகளில் ஏறி இறங்கினான். எனது கண்ணில் இருந்து எப்படியோ மறைந்தான். அங்கே காத்து இருப்பதில் அர்த்தமில்லை என பேருந்து நிலையம் விட்டு வெளியேறினேன். கோரன் மிகவும் புதிராகவே தெரிந்தான்.

வீட்டிற்கு சென்றபோது காயத்ரி மிகவும் கோபமாக இருந்தாள் .

''என்ன விசயம் காயூ''

''எங்க போன''

''கோரன் என்ன பண்றானு பாக்கப் போனேன்''

''அந்த சனியனை விட்டுத் தொலைக்க முடியாதா''

''அவன் சுபாவை கொல்லப்போறேனு  சொல்லி இருந்தான்''

''அதான் சுபா அவனை கொல்வேனு சொன்னால''

''சுபா எங்கே''

''லைப்ரெரி போய்  இருக்கா''

''சாப்பிட்டாளா''

''சாப்பிட்டுத்தான் போனாள்''

''அம்மா எங்கே''

''கோவிலுக்குப் போனாங்க, இன்னும் வரலை''

''நீ போகலை''

''நீ எங்கே போனேனு சொல்லாம போயிட்ட, நீ வந்தா சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிட்டு அத்தைப் போயிட்டாங்க''

''நானா சாப்பிடமாட்டேனா''

''எனக்கு உன் மேல கோபம் தீரலை''

''சுபா எதுவும் சொன்னாளா''

''சொன்னா, உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா. உன்னை அவளுக்கு  விட்டுத்தரும்படி சொன்னா, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது''

''விளையாட்டுக்கு பேசி இருப்பா''

''முருகேசு உனக்கு எது விளையாட்டு, எது உண்மைனு தெரியாதா, அவ ரொம்ப சீரியசா பேசறா, எனக்கு பயமா இருக்கு''

''என்ன பயம்''

''என்னை கொலை பண்ணிட்டா''

''என்ன பேசற நீ, அவ அப்படிபட்ட  பொண்ணு இல்ல''

''இல்லை முருகேசு, நீ அவளை வேறு வீடு பாக்கச் சொல்லு''

''எதுக்கு இப்படி பயப்படற, சொன்னா கேளு காயூ, அவ ஒன்னும் பண்ணமாட்டா''

அம்மா கோவிலில் இருந்து வந்தார்கள்.

''என்னடா சாப்பிட்டியா?''

''இல்லைம்மா''

''காயத்ரி, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கலை''

''நான் சாப்பிட்டுக்கிறேன்மா, இப்போதான் வந்தேன்''

''அந்த பொண்ணு இங்கேதான் தங்கப்போறா''

''ஆமாம்மா, ஏன்?''

''சும்மா கேட்டேன்டா''

''காயூ சொன்னாளா, எதுவும் சுபா சொன்னாளா ?''

''இல்லையே, நீ போய்  சாப்பிடு, காயத்ரி சாப்பாடு எடுத்து வைம்மா''

சாப்பாடு எடுத்து வைக்கும்போது காயத்ரி சுபத்ராவை வெளியே போகச் சொல்லு என்பதை பலமுறை சொல்லிவிட்டாள்.

''காயூ, எல்லாம் கர்மவினை''

''ஆமா, எது நடக்கணுமோ அதுதான் நடக்கும்னு பேசிட்டு இரு''

காயத்ரி அழாத குறைதான். எனக்கு சுபத்ராவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மனம் இல்லை. கோரன் பற்றிய அச்சம் எனக்கு நிறையவே இருந்தது.
மதியம்தான் சுபத்ரா வீட்டிற்கு வந்தாள்.

''டேய், ஒரு புது வீடு வாடகைக்கு எடுத்துட்டேன். ஒரு ரூம் மட்டும் தரேன்னு சொல்லி இருக்காங்க. லைப்ரெரி பக்கம் தான். அப்படியே இந்த ரெங்கநாதனை நல்லா திட்டிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் என் வீட்டுல சொல்லிட்டான். நீ ஒண்ணும்  பரிணாமம் எல்லாம் ஆராய்ச்சி பண்ண வேணாம் வீட்டுக்கு வானு சொல்லிட்டாங்க. அடம் பிடிச்சி இன்னும் ஆறு மாசம்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். ஏன்டா  இந்த ஆம்பளை பசங்களுக்கு அறிவே இருக்காதா? அந்த கோரன் மடையன் எனக்கு போன் பண்ணி இன்னும் ஆறு மாசம் கழிச்சி உன்னை கொல்றேன்னு சொல்றான். உன் அட்ரஸ் தாடா இப்பவே வரேன் உன்னை கொல்றேன்னு சொன்னதும் போன  வைச்சிட்டான்''

சுபத்ரா மளமளவென பேசியது கண்டு என் அம்மா அப்படியே ஓரிடத்தில் தூணில் சாய்ந்து கொண்டார்கள். காயத்ரிக்கு முகமெல்லாம் சந்தோசம்.

''என்னடா ஒன்னும் பேசமாட்டேங்கிற, டேய் நான் உன்கூட இருந்தா இவ இருக்காளே அவளுக்கு இருப்பு கொள்ளாது, அதான் நான் வெளியே போய் உன்னை தொடர்ந்து காதல் பண்ணப் போறேன். உன் அம்மா கூட பாவம் ரொம்பவே இடிஞ்சி போயிட்டாங்க, இல்லையாம்மா''

''இந்த சின்ன வயசுல இப்படி இருக்கியே''

''எப்படி இருக்கேன், இல்லை எப்படி இருக்கேன், உங்க மகனுக்கு ஏத்த ஜோடி நான் தான், இவ யாரு? என்னை நீங்க மறந்து போயிட்டீங்களோ''

''ஏதோ  வீடு பாத்து இருக்கேன்னு சொன்னயில, போம்மா''

அம்மா அப்படி சொன்னதும் சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு வரேன்டா என என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினாள். சுபத்ராவை இருக்கச் சொல்ல எனக்கு வாய்ப்பு இன்றி போனது.

''அம்மா, அவ ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பெரிசு படுத்துறாமா''

''நீ பேசாம போடா, அவ எவ்வளவு திமிரா பேசுறா, காலையில காயத்ரியை ஓங்கி அடிக்கப் போயிட்டா. நான் அவளை நல்லா திட்டினேன் அதான் எங்கேயோ போயி வீடு பாத்து வந்துருக்கா''

''அம்மா அவ பாவம்மா, காயூ எதுக்கு இதை என்கிட்டே சொல்லலை''

''பாவம் அவ மேல தான் இருக்கும், அதான் சொல்லலை''

''காயூ என்ன நீ இப்படி பேசற''

''அவளை கண்டிச்சி வை''

''நீங்க ரெண்டு பேரும்  அடிச்சிக்க வேணாம்''

பல தினங்களாக சுபத்ராவை நாங்கள் பார்க்கவே இல்லை. ஒருமுறை கோரன் வீட்டுக்குப் போனபோது வேறு ஒரு குடும்பம் அங்கே குடி வந்து இருந்தது. விசாரித்துப் பார்த்ததில் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாக சொன்னார்கள்.

இந்த உலகில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என இதுவரை எவருமே சரியாக சொன்னது இல்லை.

(தொடரும்)









Thursday 1 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27

''சுபாவை கூப்பிடுடா''

''வேண்டாம் கோரன்''

''நீ அவளை வரச் சொல்லிட்டுப் போடா''

''கோரன் நீ ஏன்டா இப்படி நடந்துக்கிற''

''நான் சொன்னதை செய்டா''

சுபத்ராவை  அழைத்தேன்.சுபத்ரா வெளியே வந்தாள். நான் அங்கிருந்து மறைந்து கொண்டேன். கோரனைப்  பார்த்த சுபத்ரா நேராக வந்து கோரன் எதிர்பார்க்காத வண்ணம் மூர்க்கமாகத் தாக்கினாள். கோரன் சுதாரிக்கும் முன்னர் நான் அவன் மீது கல் எடுத்து எறிந்தேன். நிலைகுலைந்து விழுந்தான் கோரன். எவ்வித சப்தமும் போடாமலே கோரன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

சுபத்ரா போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு காத்து இருந்தாள். கோரனின் கால் கைகளை கட்டிப்போட்டேன். அதோடு நானும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது. ரங்கநாதன், சுபலட்சுமிக்கு  இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுபத்ராவை நாளையே வீட்டை காலி பண்ணி வேறு எங்காவது தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். சுபத்ரா மறுப்பேதும் சொல்லாமல் சரி என சொல்லிவிட்டாள்.

போலிஸ் உடனடியாக வந்தது. சுபத்ரா எல்லா விபரங்களையும் சொன்னதும் கோரனை போலிஸ் அழைத்துச் சென்றது. என்னையும் சுபத்ராவையும் காலையில் காவல் நிலையத்திற்கு  வரச் சொன்னார்கள்.

''டேய் நான் உன்னோட இப்போ உன் வீட்டுக்கு வரட்டுமா?''

''சுபா''

''அவங்கதான் இங்க என்னை தங்க வேணாம்னு சொல்லிட்டாங்க, அங்க வந்து தங்கிட்டு நாளை வேற இடம் போயிக்கிறேன்''

''சரி சுபா''

சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் நடக்கலானாள். ரங்கநாதன் சுபத்ராவை தடுக்கவே இல்லை. காயத்ரி அக்காவாவது தடுப்பார் என்றால் அதுவும் இல்லை.

''சுபா, என்னை காதலிக்கிறது உண்மையா?''

''ஆமாடா, என்னடா சந்தேகமா?''

''சுபா, நான் காயூவை காதலிக்கிறேன், ப்ளீஸ் எங்க வாழ்க்கையை குழப்பாதே''

''உன்னை என்னை காதலிக்க சொன்னேனாடா''

''எத்தனை பிரச்சினை?''

''சரி செய்துடலாம்டா''

''சரி செய்துரலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான், எதையும் சரி செய்யமுடியாது''

பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தோம். சுபத்ராவை கண்டதும் காயத்ரி குழப்பம் அடைந்தாள். அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரி இருக்கட்டும் என்றார். அப்பா என்னை தனியாக அழைத்து என்னப்பா தேவையில்லாத பிரச்சினைகளோட வாழுற, படிக்கிறதுக்கு பாரு என அறிவுரை சொல்லி அனுப்பினார்.

காயத்ரியின் அறையில் தான் சுபத்ரா தூங்க வேண்டி இருந்தது. காலையில் எழுந்து கிளம்பியபோது காயத்ரிதான் சுபத்ரா இங்கேயே இருக்கட்டும் என்றாள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அப்பாவும் காயத்ரி சொன்னாள் என்பதற்காக சம்மதம் சொன்னார்கள்.

நாங்கள் மூவரும் காவல் நிலையம் செல்ல இருந்தோம். அப்பாவும் உடன் வருகிறேன் என்றதால் நால்வரும் சென்றோம். அப்பாவுக்கு அங்கிருந்த காவல் அதிகாரியை தெரியும் என்பதால் எவ்வித பிரச்சினை இன்றி எல்லாம் முடிந்தது. ஆனால் கோரனை வெளியில் விட இயலாது என்றார் அவர்.

நாளிதழ் ஒன்றை பார்த்தபோது கோரன் சொன்னது போலவே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விசயம் வெளி வந்து இருந்தது. அதை காவல் அதிகாரியிடம் தந்து கோரன் தான் இந்த கொலையை செய்தான் என நான் சொன்னதும் என்னை போகச் சொன்னவர் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள்.

சுபத்ரா காயத்ரியின்  நெருங்கிய தோழி ஆனது ஆச்சரியம். அன்று கல்லூரியில் எப்படி ஒரு மனிதன் கொடூர எண்ணம் கொண்டு உருவாகிறான் என பாடம் எடுத்தார் எனக்குப் பிடித்த ஆசிரியர்.

''சார், கோரன் ஒரு கொலைகாரனாக மாறியதற்கு என்ன காரணம்?''

''கொலைகாரனா?''

மொத்த வகுப்பும் என்னை பயத்துடன் பார்த்தது.

''நமது கல்லூரி ஆசிரியர் ஒருவரை கோரன் கொலை செய்து தற்போது ஜெயிலில் இருக்கிறான் சார். அவன் நிறை புத்திக்கூர்மை கொண்டவன் ஆனால் எதற்கு இப்படி நடந்து கொண்டான் என நினைக்கும்போது இந்த கொடூர எண்ணம் அவனுள் எப்படி வந்து இருக்கக் கூடும் சார்''

''நீ அதுகுறித்து இங்கு பேசுவது தேவை இல்லை, கொடூர எண்ணம் கோபத்தின் வெளிப்பாடு, இன்று வேறு பாடம் பார்க்கலாம்''

கோரன் பற்றிய பேச்சு கல்லூரி முழுக்க பரவியது. பலர் பரிதாபம் கொண்டார்கள். மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சுபத்ராவைப் பார்த்தோம். சுபத்ராவிடம் கோரன் பற்றி கேட்டபோது ஒரே வரியில் சொன்னாள்.

''பரிணாமத்தின் கர்ம வினை''

''கர்மவினையா?''

''ஆமாடா, நமது மூளை வளர வளர நமக்கு நம்மை பாதுகாக்க வேண்டி எண்ணம் வந்தது, அதன் விளைவாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டோம்''

காயத்ரி குறுக்கிட்டாள்.

''சிலருக்கு அன்புள்ளமே அவர்களுக்கு பெரும் எதிரி''

நான் காயத்ரி என்ன அர்த்தத்தில் சொன்னாள் என புரிந்து கொள்ள முடியவில்லை. சுபத்ராதான் சொன்னாள்.

''கோரன் நிச்சயம் வெளியே வருவான், அவன் ஒரு ஜீனியஸ், ஆனால் முட்டாள்தனமா நடந்துக்குவான்''

''அவன் வெளியே வந்தா உன்னை கொலை பண்ணிருவான்''

''இல்லைடா, நான் அவனை கொலை பண்ணுவேன்''

காயத்ரி பயம் கொண்டாள்.

(தொடரும்)

Wednesday 30 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 26

அன்று மாலை கோரனின் வீட்டிற்கு நானும் காயத்ரியும் சென்றோம் ஆனால் கோரனின்  வீடு பூட்டப்பட்டு இருந்தது. எங்கு சென்று இருப்பான் என எண்ணுவதற்கு வழியில்லை. அப்படியே காயத்ரியின் அக்காவை பார்க்க ரங்கநாதன் சார் வீட்டிற்கு சென்றோம்.

காயத்ரியைப் பார்த்ததும் அவளது அக்கா அத்தனை பாசமாக வரவேற்றார்.  நாங்கள் சிறிது நேரம் அங்கு இருக்கும்போதே சுபத்ரா அங்கு வந்தாள். எங்களைப் பார்த்தவளின் முகம் அத்தனை சந்தோசமாக இல்லை. வாங்க என சொல்லிவிட்டு நேராக மாடிக்குப் போனாள். காயத்ரியின் அக்காவின் கவனத்தை என் பக்கம் திருப்பினேன்.

''சார் எப்போ வருவாங்க?''

''அவர் வர எப்படியும் மணி எட்டு ஆகும்''

''நீங்க வேலைக்குப் போறதை எதுக்கு நிறுத்தினீங்க''

''வேணாம்னு சொல்லிட்டார், நிறுத்திட்டேன், நீ சொன்னா காயத்ரியும் கேட்பா''

''வேலைக்குப் போக வேணாம்னு நான் சொல்லமாட்டேன்''

''ஆனா இது கூட நல்லா இருக்கு''

''அவங்க அம்மா எங்கே?''

''அத்தை வெளியூர் போயிருக்காங்க, வர ஒரு வாரம் ஆகும்''

பேசிக்கொண்டு இருக்கும்போதே சுபத்ரா வந்தாள்.

''சுபா, கோரன் எங்க போனான்னு தெரியுமா''

''எனக்குத் தெரியாது''

''சொல்லு சுபா, அவன் வீடு பூட்டி இருந்தது''

''எனக்குத்  தெரியாதுடா''

சுபத்ரா அவ்வாறு சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள். காயத்ரி அவளது அக்காவிடம் எல்லா விபரங்களையும் சொல்லி வைக்க காயத்ரி அக்காவோ சுபத்ராவிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். நாங்கள் இருவரும் வீட்டிற்கு வந்துவிட்டோம்.

அடுத்த நாள் கல்லூரியில் கோரன் வந்து தனது மாற்று சான்றிதழ் வாங்கிச் சென்றதாக பேசிக்கொண்டார்கள். நானும் தான் கல்லூரியில் இருக்கிறேன் ஆனால் எனக்குத் தெரியாமல் என்னைப் பார்க்காமல் அவன் அவ்வாறு செய்தது ஆச்சரியமாக இருந்தது. தலைவலி என சொல்லிவிட்டு கோரன் வீட்டிற்கு சென்றேன். அவனது வீடு பூட்டப்பட்டுதான் இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஒரு மணி நேரம் முன்னால வெளிய கிளம்பி போனாங்க என தகவல் சொன்னார்கள். எனக்கு இப்படி துப்பறியும் வேலையாகவே போய்விட்டது.

கல்லூரியில் படிப்பு தடைப்பட்டுக் கொண்டு இருந்தது. காயத்ரியும் படிப்பு மீது அக்கறை செலுத்த வேண்டும் என சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு வாரம், இரண்டு வாரம் என வாரங்கள் கடந்து சில மாதங்கள் கடந்தது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வந்தது கண்டு கொஞ்சம் சந்தோசம் என்றாலும் கோரன் எங்கு போனான் என தெரியவில்லை. இந்த சில மாதங்களாக சுபத்ரா முகம் கொடுத்து பேசவும் இல்லை.

திடீரென எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

''டேய் முருகேசு, நான் கோரன் பேசறேன்''

''கோரன், எங்க இருக்க''

''நான் எங்க இருக்கேனு உனக்குத் தெரிய வேணாம், அந்த வாத்தியானை கொன்னுட்டேன், அடுத்து சுபத்ராதான்''

''என்ன சொல்ற''

''அவ உன்னை காதலிச்சேன்னு என்கிட்டே பொய் சொன்னால அதுக்கு அவளை கொலை பண்ணிட்டுதான் மறு வேலை''

''கோரன் உன்னோட புத்தி எதுக்கு இப்படி போகுது''

''நம்பிக்கைத் துரோகிகளை இந்த உலகம் சகித்துக்கிட்டு இருக்கவே கூடாதுடா, நீ காயத்ரிக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணின உன்னையும் கொல்வேன்டா''

''இப்படி எத்தனை பேரை கொல்லப் போற''

''எனக்கு ஏதாவது சம்பந்தபட்டவங்க மட்டும் தான்''

''நீயே நம்பிக்கைத் துரோகம் பண்ணினா உன்னை நீயே கொல்வியா''

''மூடன் மாதிரி பேசாதடா, நான் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் பண்ணமாட்டேன்டா''

''எனக்குப் பண்ணி இருக்கியே''

''என்னடா சொல்ற''

''உன்னை நல்லவன்னு நம்பினேன் ஆனா நீ கொடூர மனம் கொண்டவனா இருக்கே, நீ பதில் சொல்றது எல்லாம் நினைச்சி எவ்வளவு நினைச்சி இருந்தேன்''

''டேய் வாயை மூடுடா, நாளைக்கு அந்தாளு முகத்தோட பேப்பர்ல வரும், படிச்சிக்கோடா''

அத்துடன் அழைப்பைத் துண்டித்தான். அவனை மீண்டும் அழைத்தபோது அழைப்பில் இல்லை என்றே பதில் வந்தது. இதை காயத்ரியிடம் சொன்னபோது காயத்ரி சுபத்ராவை எச்சரிக்கைப் பண்ணலாம் என சொன்னாள் . சுபத்ராவிற்கு போன் போட்டபோது சுபத்ரா எடுக்கவே இல்லை. அன்று இரவு சுபத்ராவை சந்திக்கப் போனேன். எனது அழைப்பு கேட்டும் சுபத்ரா பேச மறுத்தாள். சிலமுறை முயற்சி செய்து கடைசியாக பேசினேன்.

''சுபா ஒரு முக்கியமான விஷயம், சொன்னா கேளு, வெளியே வா''

சுபா வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

''என்னடா''

''உன்னை கோரன் கொல்லப் போறதா எனக்கு போன் பண்ணினான்''

''என்னடா உளறுற''

''சொன்னான், அந்த வாத்தியானை கொன்னுட்டானாம், அடுத்து நீதான் அப்படின்னு சொன்னான்''

''எந்த நம்பர்ல இருந்து பேசினான், என்கிட்டே இருக்க நம்பருக்கு அவனை கூப்பிட முடியலையேடா''

''நம்பர் அழிச்சிட்டான்''

''நீ போடா நான் பாத்துக்கிறேன்டா, முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியாடா''

''என்ன உதவி''

''அடுத்தமுறை கோரன் போன் பண்ணினா எனக்கு இப்படி வந்து சொல்லாதே, அவ மேல கை வைச்சி பாருடா, உன்னை நானே கொலை பண்ணுவேன்னு சொல்லு''

''ஏன்''

''டேய், உன்னோட காதலி என்னை ஒருத்தன் கொல்லப்போறேனு சொல்றான், அதை கேட்டுட்டு என்கிட்டே வந்து தகவல் சொல்ற''

''அது இல்லை''

''என்னடா அது இல்லை, ஒழுங்கு மரியாதையா காயத்ரியை மறந்துரு''

''சுபா நீ என்னை காதலிக்கிறது பொய்னு தெரிஞ்சிதான் கோரன் உன்னை கொல்ல இருப்பதா சொன்னான்''

''சரிடா, ஆனா நான் காதலிக்கிறது உண்மைடா''

''வேணாம் சுபா''

''பாருடா என்ன நடக்குதுன்னு''

அவள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். நான் வெளியில் நின்று கொண்டு இருந்தேன். என் மீது எவரின் கையோ பட்டது. திரும்பிப் பார்த்தேன். கோரன் நின்று கொண்டு இருந்தான். எனக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கியது.

(தொடரும்)





Tuesday 29 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 25

''முருகேசு, உனக்கு சில உண்மைகளை சொல்றேன் கேளுடா, அதுக்கு அப்புறம் உனக்கும் ஒரு விஷயம் சொல்றேன்டா, அதுபடி நீ நடக்கணும்டா, இல்லை...''

''சொல்லு''

''அவனின் மனைவி எனது அம்மாவுக்கு  தங்கை முறை, என் அப்பாவுக்கும் தூரத்து சொந்தம். அவனும் சித்தியும்ஓடிப்போய்த்தான் காதல் திருமணம் பண்ணிக்கொண்டார்கள். முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். சித்தி எங்கள் வீட்டுக்கு வருவார்கள், போவார்கள். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். இதனால் இவனால் எனது சித்தி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது. இதற்கு சற்று ஆறுதலாக இருந்த எங்களை பார்க்கக்கூடாது என அவன் கட்டளை போட்டதால் எப்போதாவது வர ஆரம்பித்தவர் சில மாதங்களாக வருவதை அடியோடு நிறுத்திவிட்டார். என் அம்மா அங்கே செல்லும்போது அவன் என் அம்மாவை கண்டபடி பேசியதை என் அம்மா எங்களிடம் சொல்லவில்லை. சித்தியைப்  பார்க்கவும் செல்லவில்லை.

மன அழுத்தம்தனை காரணம் காட்டி பலமுறை மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் சென்று இருக்கிறான். தான் நல்லவன் போல எல்லோரிடமும் காட்டிவிட்டு தாட் பொரசெஸ் என கதைகட்டிவிட ஆரம்பித்தான். ஒருமுறை சித்தியைப் பார்த்தபோது கோரன் எனக்கு பயமா இருக்குடா, நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன் என்றபோது இவன் வேறொரு மணம்  முடிக்க திட்டமிடுவதை சொன்னார். நான் அவனை முழுமையாக நம்பியதால் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு வந்த ஒரே வாரத்தில் சித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவனிடம் இருந்தே தகவல் வந்தது. தற்கொலைதான் என நம்பும்படி எல்லா ஆதாரங்களும் இருந்தன அதனால் போலிஸ் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் நான் அப்பா அம்மா இது ஒரு கொலை என்றே எண்ணினோம். அவன் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவனை கொல்வது  எனத்  திட்டமிட்டோம். ஆனால் படுபாதகன் நீ குறுக்கே வந்துவிட்டாய், உன்னை கொலை பண்ணினால்தான் அவனை கொலை பண்ண முடியும் என எனக்குள் ஒரு ஆத்திரம் இருந்து கொண்டே இருந்தது. இன்று நான் சொன்னது பொய் என்று சொன்னாய் பார் அதுதான் எனக்கு மேலும் ஆத்திரம் அதிகம் ஆனது.

இப்போது சொன்னது உண்மை. நான் அவனை எங்கேனும் தேடி கொலை பண்ணாமல் விடமாட்டேன். நீ இதற்கு மேல் இதில் தலையிடுவது என இருந்தால் இப்போதே சொல், உன்னை இங்கேயே கொன்று போட்டுவிடுகிறேன்''

''கோரன், இது எல்லாம் தப்பு என தெரியவில்லையா''

''எதுடா தப்பு, சொல்டா, இவ்வுலக உயிர்கள் எல்லாம் பிரசவிக்கின்றன, அந்த பிரசவம் என்பது பெண்ணுக்கு என உண்டானதுடா, ஒரு பெண் பிரசவிக்க முடியாமல் போனால் வேறு ஒரு பெண்ணை நாடுவது அந்த பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, ஆனால் அப்படியே விருப்பம் கொண்டு போகட்டும் அதற்காக மனநிலை பாதிக்கப்படும்படி செய்து கொலை செய்யும் மனநிலையை எப்படியடா மன்னிப்பது''

''கோரன் சொல்வதைக் கேள், கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் நீ தவறான முடிவை எடுக்காதே''

''உன்னோடு பேசினதே தப்புடா, இதோ பார் உன்னை...''

நான் சுதாரித்து எழுந்து கதவைத் திறந்து ஓட எத்தனித்தேன். ஆனால் அவன் விருப்பம்படி செய்யட்டும் என அப்படியே உட்கார்ந்து இருந்தேன். கோரன் சமையல் அறைக்குள் என நினைக்கிறேன், அங்கிருந்து ஒரு கத்தியுடன் வந்தான். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

''சொல்டா, நீ தலையிடுவாயா''

''கோரன், இனி அது உன்னோட விருப்பம், நான் விலகிக் கொள்கிறேன்''

''போலிஸ் கேட்டால் எதுவும் தகவல் சொல்வாயாடா''

''இல்லை சொல்லமாட்டேன்''

''அந்த சுபாவை நீ ஏமாற்றினால் இதே கதிதான் உனக்கும். அதென்னடா நீ நினைத்தபடி பெண் மாற்றுவது, முதலில் அவன், அடுத்து நீ. அதுக்கு ஒரு அடையாளம் உன்னில் போடவேண்டும்''

கோரன் பேசிக்கொண்டே என் அருகில் வந்தான். நான் அப்படியே அமர்ந்து இருந்தேன். என் அருகில் வந்ததும் அப்படியே எழுந்து அவனது வயிற்றில் ஓங்கி முட்டினேன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். எங்கிருந்து வந்த தைரியமோ அவனது உடலில் கைகளில் சரமாரியாக மிதித்தேன். அவன் கொஞ்சம் கூட கத்தவில்லை. இனி அங்கு இருப்பது ஆபத்து என கதவைத் திறந்து வேகமாக வெளியேறினேன். இனி கோரன் பரம எதிரிதான் என நினைக்கும்போது பயமாக இருந்தது.  சுபத்ராவிடம் விஷயத்தை சொல்லி நிலைமையை சரி செய்ய வேணும் என எண்ணிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

காயத்ரி தூங்காமல் காத்துக்கொண்டு இருந்தாள். எல்லா விபரங்களையும் சொல்லி முடித்தேன். அவள் பதறினாள்.

''முருகேசு, என்ன காரியம் பண்ணி இருக்க?''

''நீ கவலைப்படாதே, அவன் எப்படியும் அந்த ஆசிரியரைத் தேடித்தான் போவான் அதுக்குள்ளாற சுபா கிட்ட பேசுவோம்''

''அவதான் எல்லாம் தூண்டி விட்டு இருக்கா, அவகிட்ட எதுக்குப் பேச்சு''

''இல்லை காயூ, நீ தூங்கு''

காயத்ரியிடம் சொல்லிவிட்டு நான்  தூங்காமல் இருந்தேன். காயத்ரியின் அம்மாவின் உடல்நிலையை காரணம் காட்டித்தான் காயத்ரியின் தந்தை இன்னொரு பெண்ணுடன் ஓடிப்போனார். அதேபோல கோரன் சொன்னது போல இருந்தால் ஆசிரியர் எதற்கு கொலை பண்ண வேண்டும். யோசித்தவாரே உறங்கினேன்.

மறுநாள் சுபத்ராவைப் பார்க்கச் சென்றேன். சுபத்ரா எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

''சுபா, முக்கியமான விஷயம் பேசணும், நீ கோரன் கிட்ட என்னை காதலிக்கலை, கதைதான் சொன்னேன்னு சொல்லிரு, அவன் என்னை கொல்லணும்னு  சொல்றான்''

''இன்னும் உன்னை கொல்லலையா?, இன்னுமா விட்டு வைச்சிருக்கான், நான் எதுக்குடா பொய் சொல்லணும், நீயும் நானும் காதலிச்சோம், என்ன மறைக்கப் பாக்கிறாய, ஒழுங்காப் போயிருடா''

''நீ பரிணாமம் பத்திதான் படிக்க வந்த, எதுக்கு இப்படி என்னை வம்பில கோர்த்துவிட்ட''

அவளிடம் நேற்று நடந்த விசயங்களை சொன்னதும் அதிர்ச்சி ஆனாள்.

''என்னடா சொல்ற''

''ஆமா சுபா, இதுதான் நடந்தது''

''இருடா''

அவளது செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள்.

''கோரன், என்ன காரியம் பண்ண இருந்த, முருகேசு என்னோட பிரெண்ட் அவனுக்கு ஏதவாது  ஆச்சு உன்னை என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. ஏன்டா  அறிவுகெட்டவனே அவனை என்ன பண்றதுனு  எனக்குத் தெரியும் உன் வேலை எதுவோ அதைமட்டும் பாரு''

பதில் கூட பேசாமல் அழைப்பைத் துண்டித்தாள். அவளது அலைபேசி மீண்டும் அழைத்தது.

''என்னடா, ஒழுங்கா இரு''

''-----''

''புரிஞ்சதுல நீ அந்த வாத்தியானை பழி வாங்கு என்னமும்  செய், என் பிரெண்ட் பக்கம் நீ தலை வைச்ச உன் தலை இருக்காது, வைடா போனை''

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வுலகில் எனக்குத் தெரியாதது என்று நிறைய இருக்கிறது, அதில் மிகவும் முக்கியமான ஒன்று நான். சுபாவின் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.

''நீ தைரியமா இரு, ஆனா நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிரனும், இல்லைன்னா கோரன் பண்ணவேண்டிய வேலையை நான் பண்ணுவேன்''

சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள்.

''எங்கடா உன் பொய் காதலி, நான் எது சொன்னாலும் சிரிப்பாளே''

''சுபா சீரியஸா பேசு''

''ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஊதி  பெரிசாக்கி விட எனக்குத் தெரியும், எவ்வளவோ பெரிய விஷயத்தை ஒண்ணுமே இல்லாம ஆக்க என்னால முடியும்''

''சுபா, நல்லா படிச்சி வேலைக்குப் போகணும்னு இருக்கேன்''

''அப்படின்னா அவளை மறந்துரு''

''சுபா''

''டேய் இந்த உலகத்தில உயிரற்றதில் இருந்து உயிர் உருவாகியதா எந்த வரலாறும் இல்லை. அதனால நான் உன்னோட உயிர். நீ என்னோட உயிர்''

சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள். பிறரது உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது . சைக்கோ! நானா? அவளா?

(தொடரும்)


Thursday 17 September 2015

எங்ஙனம் தொலைந்தீர்கள்?

அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அம்மா, நான் தொலைந்து போனால் நீ அழுவாயா? சிரிப்பாயா?

அம்மா சற்றும் யோசிக்காமல் நீ தொலைந்தால் அழவும் மாட்டேன் சிரிக்கவும் மாட்டேன் நீ கிடைக்கிற வரைக்கும் உன்னை நான் தேடுவேன்டா

அம்மாவின் அந்த சொல் என்னை அப்படியே உலுக்கிவிட்டது.

''பக்தா, எங்கே தொலைவதாக உத்தேசம்?''

''சாமி, நீங்கள் எப்படி இப்போது, அதுவும் நான் என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் ஒட்டு கேட்டுவிட்டு இப்படி குறுக்கே வந்து பேசலாமோ''

''பக்தா, உன் அன்னை அப்போதே எழுந்து சென்றுவிட்டார், அதை கவனித்துதான் நான் உள்ளே வந்தேன் ஆனால் நீயோ உன் அன்னையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறாய்''

''சாமி, அமருங்கள்''

''என்ன பக்தா, வரவேற்பு மாறுகிறதே, சாமியார் ஆக வேண்டும் என சொல்லி இருந்தாய் என்ன நடவடிக்கை எடுத்தாய்''

''அதெல்லாம் இல்லை சாமி, என் அம்மா நான் கல்யாணம் பண்ண வேண்டும் என ஒரேயடியாக பிடிவாதம் பிடிக்கிறார் அதனால் நான் குழப்பத்தில் இருக்கிறேன்''

''பக்தா, உனக்காக நீ முடிவுகள் எடுக்காதவரை அது உன்னை எப்போதும் வருத்திக்கொண்டே இருக்கும். நீயாக சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவுகளே உனக்கு நல்வழி தரும்''

''சாமி, எனக்கு சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசை உள்ளுக்குள் இருக்கிறது, உங்களைப் போல சுதந்திரமாக எங்கும் செல்லலாம், குழந்தை குடும்பம் என உழன்று திரிய வேண்டியது இல்லை. என்னைப்போல ஒவ்வொருவரை சென்று தேடிப்பார்த்து ஒரு கதை சொல்லலாம்''

''பக்தா, அப்படி எல்லாம் திட்டமிட்டு ஒன்றை பற்றி நீ முடிவு எடுக்காதே''

''சாமி, நான் பேசாமல் ஏதேனும் காட்டிற்கு ஓடி விடட்டுமா?''

''பக்தா, நான் உன் பின்னால் வருவேன்''

''நீங்க வந்தால் எனக்குப் பயமில்லை. ஆனால் இந்த திருமணம் தான் என்னை பயமுறுத்துகிறது. அது எப்படி சாமி இந்த மனிதர்கள் திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, அது எல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லும் பதில் உனக்கு திருப்தி அளிக்காது. வா, நான் உன்னை ஓரிடம் அழைத்துச் செல்கிறேன்''

''இங்கேயே சொல்லுங்கள். வேறு எங்கும் நான் வரத் தயாரில்லை''

''பக்தா, என் தந்தை என் தாய் என எவருமே எனக்குத் தெரியாது, ஆனால் நான் பிறப்பதற்கு காரணம் அவர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நான் தந்தை ஆகும் வாய்ப்புதனை  எல்லாம் நான் தேடிச்  செல்லவில்லை, என்னை தேடி எதுவும் வரவும் இல்லை. எனக்கு ஐந்து வயது ஆன போது  நான் சாமியார் ஆனேன்''

''சாமி உங்க கதை நான் கேட்கவில்லை, மனிதர்கள் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்''

''பக்தா, உனக்கு ஒரு காதலி இருக்கிறாள் அல்லவா, அவளிடம் நீ திருமணம் செய்து கொள் என கேட்டால் அவள் மாட்டேன் என சொல்லமாட்டாள் அல்லவா, அப்படித்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்''

''எனக்கு காதலி இருப்பது என்பதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் சரி, சாமி  காதலிக்காமல் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, இதை நீ என்னிடம் கேட்பது கொஞ்சமும் நன்றாக இல்லை. எனக்கு திருமண பந்தம் என்று எதுவும் இல்லை''

''சாமி, உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து வைத்து இருக்கிறேன், அவரை திருமணம் பண்ணிக்கொள்ள இயலுமா''

''பக்தா, என்ன விளையாடுகிறாயா? யாரிடம் என்ன பேச்சு பேசுகிறாய்''

''அப்படியெனில் என்னிடம் நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்''

''பக்தா, தாய் தந்தையர் தனது மகனுக்கு மகளுக்கு இன்னார்தான் என முடிவு செய்து திருமணம் பண்ணி வைக்கிறார்கள்''

''அதையேதான் என் தாயும் செய்கிறார் சாமி, நான் காதலிக்கும் பெண்ணையே எனக்கு மணம் முடித்து வைக்க வெகுவாக போராடுகிறார். காதலித்தால் மட்டும் போதாதா, எதற்கு இந்த திருமணம் எல்லாம் எனக் கேட்டாலும் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என என்னை திட்டிவிடுகிறார்''

''பக்தா, நீ திட்டுகள் வாங்கவே பிறந்தவன், அதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை, ஆனால் நீ திருமணம் பண்ண வேண்டியவன் அதில் இருந்து விலகி விட வேண்டாம்''

''எனக்குப் பிடிக்கவில்லை''

''பக்தா, பிடிக்காத விசயங்களை செய்பவர்கள் தன்னைத் தொலைத்தவர்கள் ஆவார்கள்''

''சாமி, எப்படி இப்படி எல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள் என ஆச்சர்யம் கொள்கிறேன்''

''பக்தா, நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. நாம் தான் இந்த உலகத்தின் நேரத்தை காலத்தை நடத்துகிறோம் எனும் மனப்பாங்கு ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. இதனால் பல மன இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இப்போது ஓரிடத்தில் நீ இருக்கிறாய், அங்கு உன்னைச் சுற்றியே பல வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உனக்குள் ஒரு மாயை உருவாகிறது. நாம் இங்கே இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்பதான மாயை. உன் மீது அநேகர் பிரியம் கொண்டு உள்ளதாக உன்னுள் உவகை கொள்கிறாய். எங்கே நீ இல்லாமல் போனால் அனைவரது பிரியமும் உனக்கு கிடைக்காமல் பொய் விடுமோ என அச்சம் கொள்கிறாய், அதனால் பிடிக்காத இடத்திலும் நீ உழன்று திரிகிறாய். நீ அந்த இடம் விட்டு வெளியேறி விடு. உனக்கு ஒரு உண்மை புரியும். நீ இல்லாமலும் எல்லாம் நடக்கும், நீ இல்லாமல் கூட அவர்கள் பிரியம் கொண்டு இருப்பார், ஆக தொலைவது என்பது நமக்குப் பிடிக்காத விசயங்களை செய்வது, பிடிக்காமல் வாழ்வது என்பதுதான்.

உடலால் தொலைவது கண்டுபிடித்துவிடலாம். மனதால் தொலைந்தால் உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். எனவே இப்போதே திருமண வாழ்வுக்கு எல்லாம் முடியாது என சொல்லி என் பின்னால் வா, நீ தொலையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்''

''சாமி, என் அம்மா என்னைத் தேடுவார்களே''

''பக்தா, உன் அம்மா உன்னைத் தேடவில்லை, தன்னைத் தேடுகிறார். தனக்குப் பிரியமான ஒன்றைத் தேடுகிறார். நீ அவர்களின் பிரியம்''

''அப்படியெனில் எப்படி நான் தொலையாமல் இருப்பது''

''பிடித்த விசயங்களைச் செய்''

அம்மா என அலறினேன். அம்மா என்னடா ஆச்சு என ஓடோடி வந்து விளக்கைப் போட்டார். வியர்த்து விறுவிறுத்து இருந்த நான் அம்மாவை நோக்கியபடி சொன்னேன்.

''அம்மா அந்த சுபாவோட எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிருமா நான் தொலையவே மாட்டேன்''.

''என்னடா அந்த சாமியார் கனவா?''

''ஆமாம்மா''

''உனக்கு மந்திரிச்சி விடனும்''

 எனக்குள் ஒரு பெரும் கேள்வி ஒன்று உங்களை நோக்கி எல்லாம் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

இவ்வுலக வாழ்வில் பிடிக்காத செயல்களை எல்லாம்  செய்யும் அளவுக்கு நீங்கள் எல்லாம் எங்கனம் தொலைந்தீர்கள்? 

Friday 28 August 2015

தமிழ் மின்னிதழ் - 3 சுதந்திரம் இதழ் - 2

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் இந்த இதழில் 64 பக்கங்கள் வரை அலங்கரிக்கின்றன. எதற்கு இப்படி செய்தேன் என்பதற்கான விளக்கம் ஆசிரியரின் எழுத்து மூலம் புரிய முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை இறந்துவிட்டான் என அறிவிக்கலாம் ஆனால் அவரது எழுத்துகள் எப்போதுமே இறப்பது இல்லை என்பதையே இந்த எழுத்தாளரின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் தாங்கி வந்திருக்கும் இந்த தமிழ் மின்னிதழ் சொல்கிறது.

ஒவ்வொருவரின் பார்வையில் ஒரு எழுத்தாளரின் நூல்கள் குறித்த பார்வை வேறுபடத்தான் செய்யும். சிலர் பாராட்டுவார்கள், சிலர் திட்டுவார்கள். நான் இதுவரை இவரது நூல்களை படித்து இருக்கவில்லை என்பதால் இவரது கருத்து, நோக்கம் என்னவென தெரியாது. எப்படி ஒரு திரைப்படம் பார்க்கும் முன்னர் விமர்சனம் படிக்கிறோமோ அதைப்போலவே ஒரு நூல் குறித்த விமர்சனமும் அமையும். சில விமர்சனங்கள் பார்க்க, படிக்கத் தூண்டும். சில விமர்சனங்கள் அறவே வெறுக்க வைக்கும். மாதொருபாகன் எனும் நூல் குறித்த பிரச்சினை தெரியாது போயிருந்தால் இந்த எழுத்தாளர் பற்றி எழுத்துலகம் தவிர்த்த பிறருக்கு தெரிந்து இருக்குமா எனத் தெரியாது.

மிகவும் கவனமாக விமர்சனம் குறித்து விமர்சனம் எழுதும் முன்னர் தனிப்படைப்புகள் குறித்து ஒரு பார்வை.

1. விலைமகள் - சௌம்யா

முரணாக இல்லையா என்பதான கேள்வி வரும்போதே விலைமகளின் நிலையை எண்ணி இந்த கவிதை கலங்குகிறது என தெரிந்து கொள்ளலாம். காதல், காமம், கள்ளக்காதல் என விவரித்து எவர் உடலையும் காமுற்று ரசித்திருந்தால் எனும் வரிகள் மனதிற்கும் உடலுக்குமான ஒரு ஒப்பீடு. மிகவும் அருமையாக ஒரு கொடூர சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்ணின் நிலையை வடிவமைத்து கடைசியில் தாலிக்கு அனுமதியுங்கள் என கனத்துடன் முடிகிறது கவிதை.

2. ரஸ்கின் பாண்ட் ஒரு சந்திப்பு - என் சொக்கன் 

ஒன்று எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமா பல எழுத்தாளர்கள், அவர்தம் நூல்களை அறிந்து வைத்து இருப்பது மிகவும் சிறப்பு. ஒரு எழுத்தாளரே மற்றொரு எழுத்தாளரை சந்தித்தது பற்றி விவரிக்கிறது  இந்த கட்டுரை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். பிரமாதம். எனக்கு  மனிதர்களைப் பற்றிப் பேசும்  புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள்
வாசித்த கையோடு அதைப்பற்றி  ஒரு கருத்து சொல்லவே ண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அடடா! எத்துனை உண்மை. நிச்சயம் இந்த சந்திப்பு கட்டுரை பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

3. காமத்தின் பரிமாணம் - அப்பு 

இந்த கட்டுரை குஷ்வந்த்  சிங் என ஆரம்பித்து புத்தகங்களை குறித்து விவரிக்கிறது. அப்பு தனது அனுபவங்களை மிகவும் அருமையாக விவரிக்கிறார். இதில் நாமும் தெரிவோம் என்பது உறுதி. சில எழுத்தாளர்கள் அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து சிறப்பாக இருக்கிறது. காமம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எதுவுமே பிறர் தெரிய எவரும் வாசிப்பது இல்லைதான். ஒரு எழுத்தாளர் தனக்கான அடையாளம் ஏதுமின்றி எல்லாம் எழுதும் வல்லவராக இருத்தல் அவசியம் புரிய முடிகிறது. இது வேற கை, அது வேற கை. 

4. உயிர் தப்பிய கவிதை - ஷக்தி 

நான் உங்கள் கவிதைகளை அரவணைத்து கொள்கிறேன். கவிதைப் பற்றிய கவிதை. எப்படியானது, எங்கிருந்து வந்தது என இந்த கவிதை தன்னையே சொல்லி உயிர் தப்பியதாக கூறி  அரவணைப்பு கேட்கிறது. நல்ல நல்ல வரிகள்.
குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் 
கடவுளர்கள்  கோலோச்சும் நரகத்திலிருந்தோ . 
சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய
நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது 


5. செல்வமடி நீயெனக்கு - சொரூபா 

ஒவ்வொரு வீட்டின் கதவை ஓங்கி ஒரு உதைவிட்டு செல்கிறது இந்த கதை. வீட்டின் கதவுக்குப் பின் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஒரு நட்பை மென்மையாக சொல்லி அந்த நட்பினால் உண்டாகும் ஒரு சந்தோசம் அதோடு மணவாழ்க்கை தரும் வலி, சுமையை அழுத்தமாக  சொல்கிறது கதை. பால்  ஈர்ப்பு கொ ள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப் பிறந்த அன்னியோன்யம்  யானரயும் உறுத்துவதில்லை. பிளாட்டோனிக் காதல் என்பார்கள். அது அங்கங்கே கதையில் ஆழமாக ஊடுருவி செல்கிறது. விவகாரத்து பண்ணுவது அத்தனை எளிதா என்ன எனும் எனது எழுத்தை ஒருநிமிடம் சுண்டிவிட்டுப் போனது இந்த கதை.

6. நாராயணன் - முரளிகண்ணன் 

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் முரளிகண்ணன். எத்தனை அழகிய வர்ணனை, காட்சிகள் கண்முன் வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் நாராயணன் போல இருந்துவிட்டால் எத்தனை அருமையாக இருக்கும். ஊர் மரியாதையை விட உலக மரியாதை பெறுவது எத்துனை சிறப்பு.

நாராயணன் திக்கியவாறே  ஆவாசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய்ச் சொன்னான். 

ஏராளனமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட் டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது. 

7. 'போல' கவிதைகள் - தமிழ் 

பாதம் போல, நிறைக்கும் இசை போல, சில்காற்றைப் போல, இசை போல, நின்று பருகிய தேநீர் போல, சந்தப்பாடலைப் போல, உருக்கிய நெய் வாசம் போல. 

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு விசயங்களை ஒப்புமைபடுத்தி தமிழ் அவர்கள் தமிழை அழகுப்படுத்தி இருக்கிறார். நண்பனின் நினைவுகள் என கடைசிவரி கவிதையில் சொன்னாலும் காதல், நட்பு என உருகி இருக்கின்றது.

8. பாலாவின் நிழலோவியம் அருமை.

9. கன்னி நிலம் - மீனம்மா கயல் 

ஒருவர் பற்றிய உங்கள் மனதில் இருக்கும் பிம்பத்தை முதலில் தூக்கி எறியுங்கள், அவர்களுக்குள் தாங்க முடியாத ரணம் இருக்கலாம். ஒரு பெண்ணின் மனநிலை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதையின் கரு தலைப்பில் தெரிய வந்தாலும்  எழுதப்பட்ட கதையில் இருக்கும் விவரணைகள், மன ஓட்டங்கள், எழுதப்படும் வார்த்தைகள் கதையை வெகு சுவாராஷ்யமாக்கி விடுகின்றன.

அதுவும் ''கலக்கல் அண்ணா'' என்ற கமென்ட். அதனால் தான் அவளை மன்னித்தாள். 

பொண்ணு போட்டோல  ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம். 

மனம் பார்த்து எவருமே மணம் முடிப்பது இல்லை. அக்கா தங்கை பாசமும் அழகு.

10. குவியொளி - மகள் 

அம்மா அப்பாவின் பெருமையை ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் . ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கிறது.

11. அஜ்னபி கவிதைகள் 

இன்டர்நெட் பற்றிய ஒரு பார்வையில் பேராண்மை. மிகவும் நன்றாக இருக்கிறது. பசியின் கொடுமையை சொல்கிறது மற்றொரு கவிதை.

திறன்பேசித் தொடுதிரையின்
ஒத்திசைந்த ஒற்றல்களில்

12. கனவுகளின் நாயகன் - எஸ். கே. பி கருணா 

படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இவரது கட்டுரையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அரசியல், சினிமா என்ற உலகம் தொடாத ஒரு மனிதர் பரவலாக மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை, பத்திரிகை, ஊடகங்கள் பெரும்பாலும் அத்தனை முன்னுரிமையும் தருவதில்லை. இப்படி ஒரு மாமனிதர் இருந்தாரா எனும் எண்ணுமளவுக்கு அவரது வாழ்வியல் செயல்பாடுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. இதற்கெல்லாம் தனி மனோதிடம் வேண்டும். எவர் என்ன சொன்னாலும் தனக்குப் பிடித்ததை செய்த மாமனிதர். மாணவர்களே உலகம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று. மறைந்த அப்துல் கலாம் அவர்கள் குறித்து பல அறியாத தகவல்களை அறியத்தந்து இருக்கிறார்.

நாகராஜ் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் மிகவும் நன்றாகவும் அதுவும் இங்கே இணைக்கப்பட்டது பொருத்தமாகவும் இருந்தது.

13. பா சரவணன் கவிதைகள் 

முரண் தொகை ரசிக்க வைத்தது. பசலையுற்றவன் ஒரு மனிதனின் வாழ்வை சொல்லி கடைசி வரியில் காவியம் ஆனது. வெக்கை, மோகமுள்ளின் முனை, அற்பாயுளின் தாகம் எல்லாம் அதன் சுவை உணர  மீண்டும் வாசித்து கொள்ளவேண்டும்.

14. கடவுள் அமைத்து வைத்த மேடை - ஜிரா 

மெல்லிசை மன்னர்  இசையின் மீது இவருக்கு எத்துனை பாசம். வியந்து போகிறேன். இசையை அவர் எப்படி எல்லாம் நேசித்தார் என ஜிரா அவர்களின் வரிகளில் நாம் உணர முடியும். அதுவும் இசையில் கூட குறில் நெடில் எல்லாம் நான் கேள்விப்படாத ஒன்று. பிரமாதம். குருபக்தி, தமிழ்பக்தி இசைபக்தி என வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசைமேதை என்பதை அறிய முடிகிறது.

அதுவும் மிகவும் பொருத்தமாக பரணிராஜன் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் வெகு சிறப்பு. மெல்லிசை மன்னரின் சிரித்த முகத்தை எத்தனை சாதுர்யமாக வரைந்து காண்பித்துவிட்டார்.

அனைவருக்கும் பாராட்டுகள். ஒரே ஒரு மொழிபெயர்ப்பு கதையை இப்போது விட்டுவிட்டேன். எழுத்தாளர்களுடன் எழுத்துக்களுடன் தொடரும்.

(தொடரும்)



Tuesday 23 June 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? இன குழுக்கள்

 முந்தைய பகுதி 

மனிதர்கள் இனக்குழுக்களாக அன்றைய நாளில் வசித்து வந்தார்கள். பொதுவாக அரசர் அவருக்கு கீழ் ஒரு கூட்டம் என இருந்த காரணத்தினால் அரசரின் மனப்போக்குப்படியே இந்த இனக்குழுக்கள் செயல்பட்டன. இனக்குழுக்களின் தலைமை அந்த இனத்தின் வளர்ச்சி மற்றும் அழிவுக்கு காரணமாக அமைந்தது. 

இஸ்ரேலிய மக்கள் என அழைக்கப்பட்டதன்  காரணம் இஸ்ரேலின் மகன்கள், இஸ்ரேலின் குழந்தைகள் என்ற அடிப்படை என அறியப்படுகிறது. இந்த இஸ்ரேலிய மக்கள்தான் யூதர்கள், சமாரிட்டன்கள், ஹீப்ரூக்கள் என பிரிந்தார்கள். இங்குதான் இனக்குழு தலையெடுக்கிறது. யூதர்களுக்கு என சில பழக்கவழக்கங்கள் அவர்களது வாழ்க்கை முறை என உண்டாக்கும்போது அதில் ஈடுபாடு கொள்ள இயலாத மக்கள் அதில் இருந்து தனித்து வெளியேறுகிறார்கள். எப்படி நமது நாட்டில் தமிழர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தெலுங்கர்கள் என பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் என சொல்லிக்கொள்வது போல அன்றைய நாளில் இந்த சமரிட்டன்கள் தங்களை யூதர்கள் என ஒருபோதும் அடையாளப்படுத்திக் கொண்டது இல்லை மாறாக தங்களை இஸ்ரேலிய மக்கள் என சொல்லிக்கொள்ள தயங்கியது இல்லை. 

யூதர்கள் பின்பற்றியதுதான் ஜூடாயிசம். இந்த ஜூடாயிசம் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருந்தாலும் மூவாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. யூதர்களின் மதம், தத்துவ வாழ்க்கை, கலாச்சாரம் என அனைத்தையும் விளக்குவதுதான் ஜூடாயிசம். யூதர்களாக பிறந்தால் அவர்கள் ஜூடாயிசம்தனை பின்பற்றி ஆக வேண்டும் எனும் நிர்பந்தம் இருந்து வந்தது. இந்து மதம் தனில் பிறந்தால் இந்துக்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தால் முஸ்லீம்கள், கிறிஸ்துவம் தனில் பிறந்தால் கிறிஸ்துவர்கள் என்றே பார்க்கப்பட்டு வருகிறது. பிறப்பால் இவர் என்ற ஒரு இனம் தொன்று தொட்டு பின்பற்ற படுகிறது. 

ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமற்ற குழந்தைதான். மதம்,  சாதி, இனம், பெயர் என திணிக்கப்பட்டு குழந்தைகள் சுதந்திரமர்றுப் பிறக்கின்றன. இப்படி பிறக்கும் குழந்தைகள் அந்த இனத்தில் இணைக்கப்பட்டு வேறு வழியின்றி அதை பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இந்த ஜூடாயிசம் தான் கிறிஸ்துவம், முஸ்லீம் எல்லாம் உருவாக பெரும் காரணமாக இருந்தது. இதனுடைய கருத்துகளின் தாக்கங்கள் பின்பற்றப்பட்டன. எப்போதும் இந்த இனக்குழுக்களிடம் ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எதையும் உறுதியாக நம்பமாட்டார்கள். 

தங்களுக்கு என்று வரைமுறையை தனி நபரோ சில நபர்களோ  வைத்து எழுதினாலும் அதை பின்பற்றி செல்லாமல் அதை நம்பவும் மாட்டார்கள். இப்படி எல்லா இன குழுக்களில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு உதாரணத்திற்கு விடுதலைப்புலிகள் என்பது தமிழ் இனத்தில் ஒரு இனம். எதற்கு அப்படி குறிப்பிடுகிறோம் எனில் தமிழர்களை தீவிரவாதிகள் என சொல்லாமல் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என அடையாளம் காட்டிய வரலாறு சமீபத்திய ஒன்றுதான். போராளிகள் என்ற ஒரு இனக்குழு இன்றைய காலகட்டத்தில் தீவிரவாத இனக்குழு. 

இன்றைய சூழல் போலவே அன்றைய சூழலில் இந்த யூதர்கள் இனக்குழு இருந்தது. ஒரு இனத்தின் பற்றிய வரலாறு செவிவழி, கல்வெட்டு, புத்தகங்கள் மூலம் வழி வழியாக சொல்லப்பட்டு வரும். அன்றைய சூழலில் நம்ப இயலாத ஒன்றை அழிக்கவே முற்படுவார்கள். நமக்கு கிடைத்திருக்கும் செய்திகள் எல்லாம் எத்தனை உண்மை என தெரியாது. ஆனால் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள், இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள் என்பதின் மூலம் முற்றிலும் கதை என எதையும் ஒதுக்கிவிட இயலாது. இன்றும் 14மில்லியன் யூதர்கள் உலகில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. 

யூதர்களின் வரலாறு குறித்து தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பைபிளில் குறிப்பிட்டு இருப்பதற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இப்போது இதைப் பற்றி எழுதும்போது யார் பாபிலோனியர்கள், யார் அஷ்ஸ்ரீயர்கள் என எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு வந்து இருப்பது தெரியும். அந்த பகுதியில் வாழ்ந்த பல இனக்குழுக்கள் ஒவ்வொரு பெயர் கொண்டு தங்களை அடையாளப்படுத்தியதோடு தங்களது திறமையை, தங்களது நிலையை நிலைநாட்டிட பெரும் போராட்டங்களை செய்து கொண்டு இருந்தன. இந்த போர் முறைகளால் மனிதம் தோற்றதுதான் உண்மையான வரலாறு. 

இது குறித்து மனம் போன போக்கில் எல்லாம் எழுத முடியாத விசயங்கள் என்பதுதான் இப்போதைக்கு பெரிய போராட்டமாக இருக்கிறது. 

(தொடரும்) 

Sunday 24 May 2015

தமிழ் மின்னிதழ் - 2 இந்துத்வா

7. இந்து அடையாளமிலி - ரோஸாவசந்த் ( கருத்து)

பல விசயங்களை அலசி ஆராய்ந்து இருக்கும் கட்டுரை என்றால் மிகையாகாது. இணைய பரபரப்பு என்று தொடங்கி நாவல், இந்து, இந்துத்வா என பயணித்தபோது எனக்கு சற்று குழப்பம் நேர்ந்தது உண்மை. எப்போது ஒருவர் தெளிவு இல்லையோ அப்போது ஒருவர் குழப்பம் அடைவார். எனக்கு இந்த கட்டுரையில் குறிப்பிட்ட விஷயங்கள் குறித்தத் தெளிவு இல்லை என்பதால் எனக்கு குழப்பம் நேர்ந்தது உண்மை. கட்டுரையை இரண்டு முறை வாசித்தபின்னர் ஓரளவுக்குத் தெளிவு பிறந்தது. மாதொரு பாகன் நாவல் குறித்தும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், அதன் பின்னணி அலசி இருக்கிறது. சாதியம் குறித்த விசயங்களை திரைப்படம், படைப்புகள் எப்படி கையாண்டன என்பது என்னைப்போன்று  அறியாமையில் இருப்போருக்கு  வைக்கக்கூடிய ஒன்றுதான்.

ஒரு படைப்பை எப்படி எல்லாம் சாதகமானவர்கள், பாதகமானவர்கள் கையாள்வார்கள் என்பது இந்த மாதொருபாகன் நாவல் ஏற்படுத்திய தாக்கம்தனில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஆனால் மக்கள் காலப்போக்கில் இதை எல்லாம் மறந்து போவார்கள். அப்படி ஒரு பரபரப்பு என்பது கால காலத்திற்கும் நிலைத்து நிற்காவண்ணம் இயங்குவதுதான் ஊடகத்துறை. இந்துத்வர்கள், யார் இவர்கள், எப்படி இந்த விஷயத்தை நோக்கிச்  சென்றார்கள் எனத் தொடங்கி இந்து, காந்தி என பெரும் சுற்று சுற்று வந்து இருக்கிறது இந்த கட்டுரை.

இந்துத்வா என்றால் என்ன? எனக்கு இதுபற்றி தெரியாது என்பதால் சற்று தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்துத்வா என்ற வார்த்தை 1923ம் ஆண்டு விநாயக் தாமோதர் சவார்கர் என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதை 1989ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தனது கொள்கையாக எடுத்துக்கொள்ள , விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் அமைப்பு எல்லாம் இதை முன்னிறுத்தி செயல்பட்டன.

According to the Oxford English Dictionary, Hindutva is an ideology seeking to establish the hegemony of Hindus and the Hindu way of life. According to theEncyclopedia Britannica, "Hindutva ('Hindu-ness'), [is] an ideology that sought to define Indian culture in terms of Hindu values". (விக்கிப்பீடியா) 

மேற்குறிப்பிட்ட விஷயத்தை மொழிப்பெயர்ப்பு செய்தால் இந்து யார் எனும் கேள்வி வரும்? இந்து என்றால் என்ன? இந்துக்களின் மதிப்பு என்ன? Hindu as one who was born of Hindu parents and regarded India as his motherland as well as holy land. (விக்கிப்பீடியா) 

இப்போது எனக்கு எனது தாத்தாவிற்கு தாத்தா அதற்கு முன்னர் இருந்த தாத்தா பாட்டி எல்லாம் இந்துக்களாக இருந்தார்களா எனும் கேள்வி எழுகிறது. எனது சந்தத்தி இந்தியாவை விட்டு வெளியேறியதால் அவர்கள் தாய்நாடு வேறு என்பதால் இந்து எனும் அடையாளம் இழந்து விடுகிறார்களா? எதுவும் எனக்குத் தெரியாது. இந்துத்வா என்றால் ஒரே குலம், ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அதாவது சமஸ்கிருத கலாச்சாரம். அப்படிப்  பார்த்தால் இந்தியாவின் நிலை என்ன ஆவது. இந்த கட்டுரை இந்துத்துவம் பற்றி நிறைய எழுத்தாளர்களின் நிலை, மற்றும் ஒரு நாவல் குறித்து எழும் சூழல் விவரிக்கிறது. தனிப்பட்ட மனிதனின் கருத்து சமூக கருத்தாக முடியாது. அதே வேளையில் தனிப்பட்ட மனிதனின் கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் எனில் அது சமூக கருத்து ஆகும்.

எந்த ஒரு இந்துவும் தன்னை இந்துத்வா என அடையாளம் காட்டிக்கொள்ள அச்சம் கொள்வார். இதற்கு காரணம் இந்துத்வா தன்னை முன்னிறுத்தும் விசயம். ஒரு இந்து எப்படி இருப்பார் என மகாத்மா காந்தி குறித்து எழுதியதைப் படிக்கும்போது எதற்கு கோட்சே ஒரு இந்துத்வா என புரியமுடிகிறது.

மனிதர்களில் இரண்டு வகை ஒன்று மிதவாதிகள், மற்றொன்று தீவிரவாதிகள். மதவாதிகள் பெரும்பாலும் தீவிரவாதிகளாகவே வலம் வருகிறார்கள். இந்த கட்டுரையில் சொல்லப்படும் இந்துமதம் வேறு, இந்துத்துவம் வேறு எனும் கருத்து பலருக்கு ஏற்புடையதே. ஒரு இந்து என்பவர் பிறரை துன்புறுத்தமாட்டார் என்பது பொது கருத்து . ஆனால் ஒரு இந்துத்வா இந்துவை கூட துன்புறுத்த தயங்கமாட்டார். 

இந்துக் கடவுள்களை நம்பும் இவ்வளவு பெரிய  மக்கள் கூட்டம் , திைாதிராவிட அரசியலை மனத்தடையின்றி ஆதரித்து வந்ததற்கும், வருவதற்கும் கூட, இந்து அடையாள உணர்வின்மை ஓர் அடிப்படை காரணம். இது சற்று ஆச்சரியமான வாக்கியம். தான் ஒரு இந்து என்பதால் பிறரை சகித்துக்கொள்ளும் தன்மை உண்டு, மேலும் தனது மதத்தை முன்னிறுத்தி எந்த ஒரு இந்துவும் நடப்பது இல்லை. சாதியின் அடிப்படையில் செயல்படும்போது அங்கே இந்து என்பது எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இந்து அடையாளமிலி என இந்த கட்டுரை எழுப்பிய சிந்தனைகளுக்கு கட்டுரையாளர் ரோஸாவசந்த் அவர்களுக்கு மிக்க நன்றி. 

8. லஜ்ஜா : மதவாதத்தின் வன்முறை - லேகா இராமசுப்ரமணியன் (விமர்சனம்)

ஒரு நாவல் என்பது எப்படி இருக்க வேண்டும் என இந்த விமர்சனம் மூலம் அறிய முடிந்தது. தீவிர சிந்தனை கண்மூடித்தனத்தை எதிர்க்கும் என்பதான வாசகம் போற்றத்தக்கது. அந்த தீவிர சிந்தனை மதம் எனும் போர்வையில் நிகழும் போது  மதம் ஒரு கண்மூடித்தனம் என்ற நிலை உண்டாகிறது. பெண்களின் உரிமைக்காகப் போராடும் ஒரு எழுத்தாளர் நிச்சயம் அதன் வலியை மிகவும் திறமையாக சமூகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதே இந்த நாவல் குறித்த விமர்சனம் மூலம் அறிய முடிகிறது.  எப்படி அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப்பார்க்கின்றன என்பது பலரும் உணர்ந்த ஒன்றுதான். நாவல் குறித்து ஆவல் எழுப்பியமைக்கு லேகா அவர்களுக்கு மிக்க நன்றி. 

9. அவ்வாறெனில் இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது - தமிழில் எம். ரிஷான் ஷெரீப் (மொழிப்பெயர்ப்பு)

சினுவா ஆச்சிபி என்பவரின் சிறுகதையை மொழிபெயர்த்து சொல்லப்பட்டு இருக்கிறது. சினுவா பற்றிய குறிப்பும் பயனுள்ளதாக இருந்தது. வித்தியாசமான சிறுகதை. படித்த மனிதன் ஒருவன் இவ்வாறென ஒன்றை ஏன்  செய்தான்? இந்த கேள்விக்கு பல நிகழ்வுகளை வைத்து கேட்டுக்கொள்ளலாம். 

இப்படியாக வெகுசிறப்பாக பல விசயங்களை கொண்டுள்ள தமிழ் மின்னிதழ், தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட விஷயம் ஆண்டாள். அடுத்துப் பார்க்கலாம். 

(தொடரும்) 

Friday 1 May 2015

நமது திண்ணை மே மாத இணைய சிற்றிதழ்

ஒரு விசயத்தை தனலாபம் இல்லாமல் தொடர்ந்து செய்வதற்கு ஒரு தனித்துவமிக்க ஈடுபாடு மிக மிக அவசியம். அது மட்டுமில்லாமல் மிகச் சிறந்த வரவேற்பும் அதைச் சார்ந்த மக்களிடம் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது ஒரு விஷயம் பெரும் தொய்வினை சந்திக்கும் என்பது வலி தரும் செய்தி. இந்த உலகத்தில் பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வத்தினால் உண்டானவை, அவர்களது வெற்றிக்கு காரணம் அவர்களுக்குத்  தொடர்ந்து பிறரது ஆதரவு இருந்ததுதான். நல்லதொரு ஆதரவை ட்விட்டர் மக்கள் நமது திண்ணை (சிற்றிதழுக்கு இங்கே அழுத்தவும்) இணைய சிற்றிதழுக்கு வழங்கி வருவது இணைய சிற்றிதழின் ஆசிரியர் மற்றும் சிற்றிதழ் வடிவமைப்பாளர் திரு அல்  அமீன் அவர்களின் ஆர்வத்தை மென்மேலும் உற்சாகமாக வைத்து இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆசிரியரின் கருத்தும் இதையே பிரதிபலிக்கிறது.

ஸ்ரீராமானுஜர். சுசீமா அம்மா அவர்கள் எழுதும் ஒரு புதிய தொடர். இந்த தொடர் மூலம் பல புதிய விசயங்கள் அறிய முடிகிறது. எனக்கு அதிகமாக ஸ்ரீராமானுஜர் பற்றி தெரியாது  என்பதால் இந்த தொடர் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய ஒன்றாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. இங்கொன்று அங்கொன்று என இவர் குறித்த விசயங்கள் மட்டுமே அறிந்து வைத்து இருக்கிறேன். நாலாயிர திவ்விய பிரபந்தம் தனில் இவரது புகழ் பேசப்பட்டு இருக்கிறது. சமய ஒற்றுமை, மனித ஒற்றுமை குறித்து பாடுபட்ட ஒரு நற்பண்பாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அரங்கனின் கண்கள். விசிட்டாத்துவைதம். எனக்கு அத்வைதம், துவைதம் அடிக்கடி குழப்பத்தைத் தரக்கூடிய ஒன்று. விசிட்டாத்துவைதம் பற்றி எனக்குத் தெரியாமல் கல்லுக்கும் உணர்வு உண்டு, உணர்வற்ற நிலையில் உன் உணர்வு உண்டு என நாராயணனை நோக்கி எழுதியவை நினைவுக்கு வருகின்றன. நல்லதொரு அற்புத தொடர் அம்மா. வாழ்த்துக்கள்.

கமலா அம்மா அவர்களின் புற்றுநோய் குறித்த பதிவு அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. சமீபத்தில் நண்பர் புகழ் அவர்கள் ஒரு சாமியார் எனது புற்றுநோயை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னால் அந்த சாமியாரை நம்பமாட்டேன், எனக்கு புற்றுநோய் என்று சொன்ன வைத்தியரைத்தான் சந்தேகிப்பேன் என்று எழுத அவருடனான எனது வறட்டுத்தனமான விவாதங்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதை ஒட்டிய கருத்துடன் இந்த பதிவு. மிக மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள் அம்மா. மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் எப்படி மக்களின்  பலவீனத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள் என தான் கண்ட நண்பரின் நிகழ்வு மூலம் விரிவாக சொல்லி இருக்கிறார். முந்தைய காலத்தில் ஹோமியோபதி, மூலிகை மருத்துவம் பயன்பாட்டில் இருந்து இருக்கிறது, இப்போது தொடர்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மருத்துவ ஆராய்ச்சி உலகம் எப்போதும் ஒரு சந்தேகப்பார்வை கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான். இந்த புற்று நோய்க்கு மருந்து எட்டாத கனி போலத்தான். இப்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள முன்னேற்றம் அம்மா அவர்கள் சொன்னது போல முறையாக பரிசோதனை செய்து கொண்டு வாழ்வதே நல்லது. வாழ்த்துக்கள் அம்மா.

உமாகிருஷ் அவர்களின் பாடல் அலசல். இந்த பாடலை நான் கேட்டது உண்டு. இத்தனை உன்னிப்பாக கேட்டது இல்லை. இத்தனை விசயங்களை இந்த பாடல் சொன்னது என இன்றே இவரது பாடல் அலசல் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதைத்தான் இலக்கியம் படைத்தல் என்பார்கள். அதாவது எழுதப்படும் வரிகள் அந்த மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். அதை இந்த பாடல் வெகு சிறப்பாக செய்து இருக்கிறது என அறிய முடிந்தது. எத்தனை கிராமத்து வார்த்தைகள். இவர் குறிப்பிட்ட வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பரிச்சயம். வெள்ளாமை, பொட்டக்காடு, கூழ், கஞ்சி என வாழ்ந்த வாழ்க்கையில் இருந்தது இவரது எழுத்தை அதிகம் நேசிக்க செய்தது எனலாம். வாழ்த்துக்கள். நாலு வரி நோட்டு போல இந்த தொடர் உருவாகலாம்.

சாய்சித்ரா அவர்களின் நகைச்சுவை என்றுமே என்னை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவரது பெயர் பார்க்காமல் படித்தும் கூட டிஷ் பற்றிய நகைச்சுவை சிரித்துக் கொண்டே இருக்க வைத்தது. மற்ற நகைச்சுவைகள் இம்முறை சுமார் ரகம் தான். விடுகதை இந்த முறை விடுபட்டு போய்  இருக்கிறது. சோபியா தங்கராஜ் அவர்களின் கவிதை ஒரு காதல் தொலைத்த சோகம் தான். நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விசயங்கள் என டிவிட்கள் அனைத்துமே வெகு சிறப்பு. எழுதியவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் என நம்பலாம்.

அக்ஷ்ய திரியதை பற்றி ரவிக்குமார் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். வருடா வருடம் வீட்டில் எனக்கு இந்த நாளை ஞாபகபடுத்தி விடுவார்கள். நானும் இவரைப்போல கதை எல்லாம் சொல்லிப் பார்ப்பேன். ஆனால் வாழ்வில் சந்தோசம் என்பது சில நம்பிக்கைகள் உண்டாக்கி தருவது. எனவே எத்தனை சொன்னாலும் மக்களின் மனதில் சில விசயங்களை அகற்ற இயல்வதில்லை. இந்த வருடம் தான் அப்படி என்ன இந்த நாளுக்கு சிறப்பு எனத் தேடி அறிந்து கொண்டேன். அதைப்போல அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள்.

ஒரு முழு பக்கத்தை நளபாகத்திற்கு ஒதுக்கி இருக்கலாம். நாங்கள் வீட்டில் ரொட்டியை வெட்டி பஜ்ஜி செய்வது வழக்கம். ஆனால்  இத்தனை விசயங்களை கொண்டு செய்வது என்பது இன்றுதான் அறிந்தது. சமையல் கலையை அறிந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். பசித்தால் உடனே விருப்பப்பட்ட ஒன்றை செய்து சாப்பிட்டுவிடலாம். நண்பர் ரவி வீட்டிற்கு விருந்தாளியாக சென்றால் நிச்சயம் வீட்டு சமையல் அதுவும் அவரின் சமையல் இருக்கும் என உறுதியாக நம்பலாம். எங்கள் வீட்டிற்கு வந்தால் ஏதேனும் ஒரு கடை பலகாரம் மட்டுமே.

திருப்பூர். இந்த ஊர் பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கிறார் மணி. இவர் ஒரு நல்ல சிந்தனையாளர் கூட. எனக்கு கொடிகாத்த குமரன் மூலமே இந்த ஊர் அறிமுகம் என நினைக்கிறேன். பின்னர் பனியன் பற்றிய அறிமுகம். அடுத்து இந்த ஊரில் இருந்து நிறைய டிவிட்டர்கள் உண்டு என்பது தெரிய வந்தது. கோவை, திருப்பூர் போன்ற ஊர்கள் எல்லாம் தொழில் ஊர்கள் போலத்தான். தென்னிந்திய மான்செஸ்டர், குட்டி ஜப்பான் என பட்டப்பெயர்கள். இந்த ஊருக்கு இதுவரை சென்றது இல்லை. இந்த ஊரை சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டுபண்ணி இருக்கிறது எழுத்து. வாழ்த்துக்கள்.

ரீவிஷாலின் ஓவியங்கள் வெகு அருமை. சிறுவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில்  நல்லதொரு தொடக்கத்தை நமது திண்ணை உருவாக்கி இருக்கிறது. சோபியா துரைராஜ் அவர்களின் கவிதை மற்றுமொரு காதல் வலி சொல்லும் கவிதை. நல்ல நல்ல வரிகள் கையாளப்பட்டு மழையில் ஆரம்பித்து மழையில் முடிகிறது.

மழலையர் மன்றம் புகைப்படங்கள் மிகவும் அருமை. அர்விந்த் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. மேடையில் நேரடி நகைச்சுவை சற்று கடினமான ஒன்று. பேசினால் அறுவை ஜோக் என சொல்லும் சமூகத்தில் ஒவ்வொரு வரிக்கும் சிரிப்பு என்பது எத்தனை கஷ்டம் என பல ஆங்கில நிகழ்வுகள் கண்டு எண்ணியது உண்டு.

புத்தகங்கள் குறித்தும் ஒரு எழுத்தாளனின் நிலையை குறித்தும் முத்தலிப் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். பாராட்டுக்குரிய விசயங்கள். புத்தகங்கள் பல வீணர்களை திருத்தி இருக்கிறது என்றே புத்தகத்தின் பெருமையை சொல்லும்போதே சாமி அறையை விட ஒரு நூலக அறையே வீட்டினை அலங்கரிக்க இயலும்.

பாடல் கேட்பது குறித்து ஹேமாமாலினி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். பாடல் பாடி பிறர் கேட்கும் வண்ணம் வைப்பது. அதாவது எல்லோருக்கும் பாடும் திறமை உண்டு. அதை உற்சாகப்படுத்தும் வண்ணம் இது அமையும்.

வாலி குறித்த ஆசிரியர் பார்வை வெகு சிறப்பு. ''ஒரே ஒரு விமர்சனம் மட்டும் தெளிவா வரணும்'' என தனது பணி குறித்து வடிவமைப்பாளர் அல்  அமீன் அவர்கள் கூறி இருப்பதால் அதை தனி பதிவாக வைக்கப் போகிறேன். சற்று பொறுத்துகொள்ளுங்கள் நண்பரே.

நமது திண்ணை நல்ல நல்ல விசயங்களுடன் வெகுசிறப்பாக இருக்கிறது ஆசிரியர் அவர்களே. உங்கள் நமது திண்ணை அனைவரது வீட்டிலும் வெகு விரைவில் கட்டப்பட வேண்டும் எனும் ஆசையை இங்கே எழுதி வைக்கிறேன்.

(தொடரும்)


Friday 3 April 2015

நமது திண்ணை ஏப்ரல் மாத இணைய சிற்றிதழ்

நமது திண்ணை  (இணைப்பு) மூன்றாவது மாத இணைய சிற்றிதழ் இன்று வெளியிடப்பட்டது. இது பாராட்டுக்குரிய விஷயம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகளை ஆசிரியர் மனமுவந்து தெரிவித்து இருக்கிறார். ஒரு இணைய சிற்றிதழ் மூலம்  சிறப்பான படைப்புகளை கொண்டு வருவது அந்த இணைய சிற்றிதழ் ஆசிரியர் மற்றும் குழுவுக்கு மட்டுமல்ல அதில் எழுதுபவர்களுக்கும் ஒரு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர் தனது பார்வையில் இதை  மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.  மேலும் தமிழ் எழுதுபவர்களை இது உற்சாகம் கொள்ளச் செய்யும். தமிழ் கீச்சர்கள் சந்திக்க இருக்கும் விழா ஒன்று குறித்த அறிவிப்பு இதில் இருப்பது ஆச்சரியம் அடையச் செய்தது. உண்மையிலேயே இந்த இணைய சிற்றிதழ் தமிழ் எழுத்துக்காக பெரும் பங்காற்ற இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். ஆசிரியருக்கு பாராட்டுகள்.

தமிழ் கீச்சர்கள் பற்றி நான் விரிவாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. என்னால் புரிய முடியாத ஓர் உலகம் அங்கு உண்டு. அந்த உலகத்தை முற்றிலும் புறக்கணிக்கிறேன். ஆனால் இந்த இணைய சிற்றிதழ் காட்டும் உலகம் எனக்குப் பிடித்த ஒன்று. எப்போதும் அதில் மட்டுமே பயணிக்க விரும்புகிறேன்.  இந்த சிற்றிதழின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. வெயில் காலத்தை குறிப்பிடும் வண்ணம் குளிர்ச்சியான பழ வகை, நொங்கு போன்றவைகளை கொண்டு மிகவும் அழகாக சிந்தித்து இருக்கிறார்கள். சிற்றிதழுக்கென உருவாக்கப்பட்ட வடிவம் சிறப்பு. அருமையாக வடிவமைப்பு செய்து வரும் நண்பர் அல் அமீன் அவர்களுக்கு பாராட்டுகள். எப்படி எல்லாம் இந்த இணைய சிற்றிதழ் உருவாகிறது அதற்கான பின்னணி என்ன என்பதை அறியும் போது  பிரமிப்புதான்.

முதலில் நாம் காண இருப்பது சுஷீமாசேகர் அம்மாவின் 'குகன்' எனக்கு இந்த குகன் பற்றி முன்னரே அறிந்து இருந்தாலும் பல புதிய விசயங்கள் தெரிந்து கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும் அதற்கு மிக்க நன்றி அம்மா. மொத்தமாக ஒரு கதை படிப்பது என்பது வேறு. அதில் ஒரு கதாபாத்திரம் குறித்து படிப்பது வேறு. ஒரு படகோட்டிக்கு குகப் பெருமாள் எனும் பட்டமெல்லாம் அன்பினால் மட்டுமே சாத்தியம் என்பதை திருக்குறள் மூலம் ஆரம்பித்து வால்மீகி சொல்லாத விசயங்களை கம்பர் சொன்னார் என முடித்தபோது அருமை என சொல்லாமல் எவரும் இருக்கமாட்டார். குகன் பற்றிய வர்ணனை கம்பர் பார்வையில் இருந்து அம்மாவின் பார்வை அருமை. நீங்கள் என்றுமே பார்க்காத ஒருவர் மீது பிறர் சொல்வதைக் கேட்டு அன்பு கொள்வீர்களேயானால் நீங்களும் குகப் பெருமாள் தான். அடடா! இன்றுதான் திருமங்கையாழ்வார் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அதே திருமங்கையாழ்வார் குறிப்பிட்டு ஒரு பாசுரம். என்ன தவம் செய்தனை! இந்த உலகம் கொஞ்சம் விசித்திரமானது, நாம் புரிந்து கொண்டால் விசாலமானது. குகனின் பண்பு நலன்கள், பரதனிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதெலாம் படிக்க படிக்க நமக்கே அப்படி இருக்க ஓர் ஆசை வரும். பாராட்டுகள். இன்னும் பல அதிசய மனிதர்களை இந்த சிற்றிதழ் காட்டும் என்றே நம்புகிறேன்.

அடுத்து விருதுநகர். எனது தந்தை நடந்து சென்று படித்த ஊர். எனது கைராசி மருத்துவர் டாக்டர் வெள்ளைச்சாமி இருக்கும் ஊர். சிறுவயதில் கை முறிந்து லைசாண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஊர். என் அம்மா, மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்த ஊர். திரைப்படம் பார்த்துவிட்டு நாங்கள் தொலைந்து போனதாக பிறரை எண்ண வைத்த ஊர். இப்படிப்பட்ட எங்கள் பக்கத்து ஊரை செல்வி. நந்தினி எங்கள் ஊர் என எழுதி இருக்கும் விதம் என்னை அந்த ஊருக்கே மீண்டும் அழைத்துச்  சென்றது. எத்தனை நினைவுகளை இந்த பதிவு கீறிவிட்டது என எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம். அத்தனை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்.

 எனது முதல் நாவலில் இந்த மாரியம்மன் கோவிலை மனதில் வைத்தே எழுதினேன். என் பேரு எப்படி இந்த சாமிக்கு தெரியும் என்பது கதைநாயகனின் கேள்வி. கதைநாயகி சொல்வாள், அணுவுக்கும் அணு கூட அந்த சாமிக்கு தெரியும் என்பது போல ஒரு காட்சி. அப்படி பட்ட அந்த கோவில் சிறப்பு என அந்த பங்குனி மாதம் விழாவை குறிப்பிட்டது நாங்கள் மாட்டுவண்டியில், ட்ராக்டரில் சென்ற காலங்களை நினைவில் கொண்டு வந்துவிட்டது. இதை நாங்கள் அஞ்சாம் திருநாள் என்றே அழைப்போம். நான் சிறுவயதில் சென்றதால் அவர் குறிப்பிட்டது போல காதல் மங்கையர்களை கண்டது இல்லை. அப்போது எல்லோரும் அக்காக்களாக கண்ணுக்குத் தெரிந்து இருப்பார்கள். பொருட்காட்சி என்றால் மதுரை தான் என்றாலும் இங்கேயும் இந்த விழாவினை முன்னிட்டு விருதுநகர் ஜொலிக்கும் என்பது கண்ணில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

கல்வி. இவர் விருதுநகர் பற்றி எழுதி இருக்கிறார் என்று சொன்னபோது நிச்சயம் கல்வி பற்றி இருக்கும் என்றே எண்ணினேன். ஆமாம், அங்கு ஒரு பள்ளிக்கூடம் உண்டு. நான் படித்த காலத்தில் கூட கல்வியில் முதலிடம், இப்போதும் தான். எங்கள் கரிசல் மண் அப்படி. விழுந்து விழுந்து படிப்போம். கல்வி காலங்களை கொண்டு வந்து காட்டியதற்கு மீண்டும் நன்றி. விருதுநகர் வியாபாரிக்கு வித்துப்போடு செல்லக்கண்ணு என பாடும் அளவுக்கு பெருமிதம் உள்ள ஊர் என சொல்லிவிட்டார். ஆமாம், எங்கள் ஊர் வியாபார ஸ்தலம் கூட அதுதான். விவிஎஸ் இதயம் நல்லெண்ணெய் முதற்கொண்டு. கல்வித்தந்தை காமராஜர் என ஒரு குறிப்பு போதும் ஓராயிரம் கட்டுரைகள் எழுதலாம் என மிகவும் சிறப்பாக சொல்லிவிட்டார்.

அதானே, எங்கே புரோட்டா இல்லாமல் போகுமா? அதுவும் சிறப்பாக சொல்லி இருக்கிறார். நான் எண்ணெய் புரோட்டா வாரம் ஒருமுறை சாப்பிட்டு விடுவேன். மதுரை புரோட்டா தினமும் படித்த காலத்தில் சாப்பிட்டது உண்டு. என்னதான் மதுரை புரோட்டா என்றாலும் அவர் சொன்னது போல விருதுநகர் விருதுநகர் தான். பங்குனி திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் என அழைப்பு விடுத்தது அன்பின் வெளிப்பாடு. திருமணம் ஆகாதவர்களை அழைக்கிறார் என நீங்கள புரிந்துகொண்டால் அதற்கு அவர் பொறுப்பல்ல. அருமையான எழுத்துங்க, பாராட்டுகள். நந்தினி என்றால் தமிழ் ட்விட்டர் ட்ரென்ட் செட்டர் என்ற ஒரு பெயர் உண்டு. அதை இங்கும் நிரூபித்துவிட்டீர்கள். அவரது கள்ளம் அற்ற உள்ளம் போலவே அன்பு சிறப்பினை சொல்லி இருக்கிறார். சிறப்பு பார்வை சரிதானா என நந்தினிதான் இனி சொல்லவேண்டும்.

களவு போகும் உழவு எனும் கவிதை - ரிஸ்வான். உழவுத்தொழில் நசிந்து வருகிறது. ஏன்  இப்படி இருக்கிறீர்கள் என சமூக அக்கறை சொல்லும் அருமையான கவிதை. உழைப்பை நம்பி கலப்பை சுமந்து என தொடங்கி ஓர் உழவன் மண்ணில் விதையாவான், அவள் மனைவி விதையாவள் என்பது எத்தனை வலி தரும் என அந்த மண்ணில் வசிப்பவரை கேட்டுப்பாருங்கள். அந்த வலியை  வார்த்தைகளால் உணர வைத்துவிட்டார்.

நச்சுனு சிரிங்க. எல்லாமே சிறப்பாக சிரிக்க வைக்கும் ரகம் தான். எத்தனை நகைச்சுவை மிக்க மனிதர்கள் நம்மில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சாமி சத்தியமா என்பது நல்ல விழிப்புணர்வு கதை. விஜய் என்பவர் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு மனிதரும் இப்படி திருந்திவிட்டால் இந்த உலகம் எப்படி சிறப்பாக இருக்கும். ஒருவர் திருந்த ஒரு சிறு பொறி போதும். அந்த பொறி எப்படி பற்றிக்கொள்கிறது என அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாராட்டுகள். பொன்ராம்  அவர்களின் நீரின்றி அமையா உடம்பு அருமையான பதிவு. தண்ணீர் சிகிச்சை முறை என்ற ஒன்று உள்ளது. முறையாக எல்லாம் செய்துவர எல்லாம் சிறப்பாக இருக்கும், நல்ல தகவல்கள் கொண்ட பகுதி. இன்னும் பல விசயங்கள் எழுதி இருக்கலாமோ என தோணியது. நற்பணி தொடரட்டும். ஆங்காங்கே சின்ன சின்ன விஷயங்கள் சிந்திக்கும் வண்ணம் ஆங்காங்கே செதுக்கப்பட்டு இருக்கின்றன.

கவிஞர் இளந்தென்றல் திரவியம் அவர்களின் அழகிய அழுத்தமான பலகாரக் கிழவி  முக்கு கவிதை. ஒரு கவிஞரின் கவித்தன்மைக்கு ஒரு சில வரிகள் போதும். அந்த கடைசி வரிகள்தான் பலரது மூக்கை உடைக்கும் வரிகள். இன்றுவரை பிள்ளைகள் ஏதும் பெறாத எந்த பெண்ணும் பலகாரக் கிழவியாய் வந்தது இல்லை. எங்கள் ஊர் அரசுப்பள்ளியினை நினைவில் கொண்டு வந்து விட்டீர்கள் சார். அட்டகாசம். பாராட்டுகள். அடுத்து சத்யா அவர்களின் அவள். ஆஹா அவள் உங்கள் கைகளில் அழகாகவே தவழ்ந்து இருக்கிறாள். கவிதையில் காதல் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது.

கீர்த்திவாசன் மற்றும் சக்திவேல் அவர்களால் எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. இந்த சிற்றிதழில் முடிந்த மட்டும் தமிழ் தலைப்பு இருப்பது நலம் என்பது எனது எண்ணம். பழமொழியும் அர்த்தங்களும் எழுதுவது எவர் எனத் தெரியவில்லை. மிகவும் சிறப்பு. போக்கத்தவன், வக்கத்தவன் என்பதான எனது அர்த்தம் வேறாக இருந்தது. ஆனால் உண்மை அர்த்தம் இப்போதே கண்டு கொண்டேன். நன்றி. வழக்கம்போல விடுகதைகள் பதில் சில தெரிந்தது. அதோடு மஹியின் பாராமுகம், பாலைவனம் ஒரு நல்ல கவிதை. பெண்கள் இதுபோன்ற கவிதைகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது இல்லை. இப்படிப்பட்ட கவிதைகள் தான் பலரால் எழுதப்படுகின்றன. நானும் ஒன்பது வருடங்களாக பார்க்கிறேன், புரட்சி கவிதாயினிகளை காண இயலவில்லை. ஏதேனும் சொன்னால் எழுத வருவதுதானே வரும் என ஹூம் என சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள்.

மாறா மரபு. நான் இந்த தொடர்கதை குறித்து என்ன சொல்வது. ட்விட்டரில் கதை சொல்வது எனது வழக்கம். கதைசொல்லி என பட்டம் கொடுத்து திருமதி.மீனம்மாகயல் தந்த பரிசுதான் நான் எனது பெயர் கொண்டு இந்த வலைப்பூவில் அலங்கரித்து வைத்து இருப்பது. 'சிறந்த கதை சொல்லி' அல்ல. 'கதைசொல்லி', அவ்வளவுதான். ஒரு கதையை எந்த முகாந்திரம் இல்லாமல் தொடங்குவேன். ஒரே ஒரு வரி கதைக்கான கரு. அப்படியே அதை ஒரு நாடகத்தொடர் போல வளர்த்து செல்வேன். அப்படி ட்விட்டரில் எழுத ஆரம்பித்த கதை இது. திடீரென நிறுத்தி நாளைத் தொடரலாம் என இருந்தபோது நண்பர் அல் அமீன் கேட்டதும் மறுக்க மனம் இல்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் எவரேனும் திட்டினால் நிறுத்திக்கொள்ளும் உரிமையும், கதையில் மாற்றம் செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டு என்றேன். ஆனால் அவர் தைரியம் தந்த காரணமே இந்த கதை இந்த சிற்றிதழில். நன்றி சார். கதை தலைப்பு என்ன எனக் கேட்டார். உடனே மாறா மரபு என  சொன்னதுதான், தலைப்பு.  இந்த கதையை தொடர்கதையாக வெளியிடுவோம் என நண்பர் அல் அமீன் அவர்கள் சொன்னதும் எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. என்னவொரு நம்பிக்கை! ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே வெளியிட்டு இருக்கிறார்கள். இதைவிட எழுதுபவருக்கு என்ன சுதந்திரம் வேண்டும்? இதுவரை எந்த ஒரு தமிழ் அல்லது ஆங்கில இதழில் எனது எழுத்து வந்தது இல்லை. இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தந்த அவருக்கும் ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் எழுத்துக்கான பெரும் பாக்கியம் அது.

ஆஹா பிரமாதம் குழந்தைகள் படம். அதுவும் மாஸ்டர் கானபிரபா அவர்களின் எழுத்தும், சுஷீமா அம்மாவின் எழுத்தும் என்னவொரு பொருத்தம். மனதை கொள்ளைகொண்டன எழுத்தும் குழந்தைகளும். கருப்பையா அவர்களின் வாசிப்பு அனுபவம் கேள்விபட்டது உண்டு. அவர் ஒரு அற்புத கவிஞர். அவருக்குள் ஒரு அற்புத எழுத்தாளர் இருக்கிறார். அவர் பார்வையில் சுமித்ரா எனும் நாவல் குறித்த அவரது அனுபவம் நம்மை அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் வண்ணம் வெகு சிறப்பாக எழுதி இருக்கிறார். அருமைங்க. பாராட்டுகள். அதுவும் நூல் விமர்சனம் முடிக்கும்போது எழுதப்பட்ட வரிகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சிந்தனை போல உள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும். சுமித்ரா ஒரு பிரமிப்பு.

சாப்பாடு பக்கம். நளபாகம் ரவி அவர்களின் அக்கி ரொட்டி தயாரிப்பு. பெயரே வித்தியாசம். சப்பாத்தி போல ஆனால் இது சப்பாத்தி அல்ல என அழகாக சொல்லி இருக்கிறார். மைதா மாவு இல்லாதபோது இந்த அரிசி மாவு கொண்டு அக்கி ரொட்டி செய்து மனம் மகிழுங்கள். பாடல் பரவசம் மூலம் நம்மை பரவசபடுத்தி இருப்பவர் செல்வி.உமாகிருஷ். எடுத்துக்கொண்ட பாடல் வெகு சிறப்பு. மிகவும் அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் எனக்குப் பிடித்த ரஜினி. நான் இப்படி எல்லாம் ரசித்தது இல்லை. எனக்கு ரஜினி திரையில் இருந்தால் போதும், ரஜினியாகவே நான் உணர்வேன். இவரது எழுத்து வாசித்த பின்னர் ரஜினியை யோசித்துப் பார்த்தேன். பிரமாதம். வரிகள், இசை சிலாகித்த விஷயம் சரி.

ஒரு கவிஞர் என்ன மனோபாவத்தில் எழுதினார் என்பது கவிஞருக்கே வெளிச்சம். அவர் குறிப்பிட்டது போல பாடியதில் தவறு சாத்தியம்தான். ஆனால் இது ஒரு கவிஞரின் எழுத்து என வரும்போது நினைத்தாயோ என்பதை விட நிலைத்தாயோ ஒரு படி மேல்தான். அப்படித்தான் புரிந்து கொண்டேன் என்கிறார். அதுதான் சரி. மறப்பேனா என்ற ஒரு மன நிலையில் நீ நிலைத்துவிட்டாயா? என்ன ஒரு அக்கிரமம் என்பது போல அந்த வரியை எடுத்துக்கொள்ளலாம். அட! இத்தனை தூரம் வரிகள் சிலாகிப்பார்களா என ஆச்சரியமூட்டும் விசயங்கள்.

தேசிய விருது குறித்து எழுதி இருப்பது மகிழ்ச்சி. இறுதியாக ஆசிரியரின் தெரிந்த பிரபலங்கள் தெரியாத உண்மைகள். சந்திரபாபு, நான் ரசித்த ஒரு அற்புத கலைஞன். பல தகவல்கள் அறிய முடிந்தது.

ஆக மொத்தத்தில் இந்த சிற்றிதழ் ஒரு அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. எல்லோர் மனதிலும் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இந்த இணைய சிற்றிதழ். நமது எழுத்தை எப்போது இந்த சிற்றிதழ் ஏற்றுக்கொள்ளும் என பலரை எண்ண வைத்து இருப்பது  இந்த சிற்றிதழ் பெற்றுவிட்ட மாபெரும் பெருமை. சிறந்த வடிவமைப்பு, நல்ல கருத்துகள் தாங்கி வந்து இருக்கிறது என்றே சொல்லி மகிழ்வர். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்தினைத் தாண்டி பாருங்கள். பிரமிக்க வைத்து இருக்கிறார் நண்பர் அல்  அமீன்.

அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

'தமிழ் வளர்த்த நமது மண்ணை 
தமிழ் கொண்டு சிறக்க 
வைப்பது நமது திண்ணை' 

நன்றி 

Thursday 29 January 2015

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - யூதர் உலகம்

முந்தைய பகுதி   சென்ற பதிவுக்கு சில எதிர்ப்புகள்  இருந்தது என்பதால் இந்த தொடரை எழுதுவதை தள்ளிவைக்கவில்லை. அவ்வப்போது எழுதுவதுதான் வாடிக்கை. என்றோ வாழ்ந்து அழிந்தவர்களின் வரலாற்றை அருகில் இருந்து பார்த்தது போல  எழுதப்படும் விசயங்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க இயலாது.

எகிப்து, பாபிலோனிய பயணத்தின் போது  இந்த இஸ்ரேல் குறித்து என்னவென பார்க்க ஆவல் பிறந்தது. இன்றைய இஸ்ரேல் குறித்து எழுதப்படும் பார்வை அல்ல இது. மேலும் பைபிளில் குறிப்பிடப்படுவது எல்லாம் அத்தனையும் பொய் புரட்டு என ஒதுக்கி விட இயலாது, அதே வேளையில் எல்லாம் உண்மை எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சுவாரஸ்ய வாசிப்புதனை முன்னர் எழுதப்பட்டு இருப்பவை தந்து போகின்றன. அதை எடுத்துக்கொண்டு பிரம்மனின் நெற்றியில் இருந்து பிறந்தவர்கள் என இப்போதும் கட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் ஒன்றின் மீது நம்பிக்கை, தைரியம் இல்லாதவன் எதிரியை பலவீனப்படுத்தும் முறை என ஒன்று உண்டு.

இந்த இஸ்ரேல் முன்னர் எகிப்தியர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இறைத்தூதர்கள் என அறியப்பட்டவர்களின் கட்டுபாட்டில் இருந்தது என பைபிள் குறிப்பிடுகிறது. கிட்டத்தட்ட 3035 வருடங்களுக்கு முன்னர் சால் என்பவன் ஒரு பேரரசனாக இருந்தான். இவனைப் பற்றி குறிப்பிடும்போது இவன் ஸ்திரதன்மை  அற்றவனாக இருந்து இருக்கிறான். மன உறுதி அற்றவர்கள் வாழ்க்கையில் சீரழிந்து போவார்கள் என்பதற்கு இவன் ஒரு உதாரணம். அதற்குப் பின்னர் வந்த டேவிட் என்பவன் இந்த இஸ்ரேலிய பேரரசுதனை விரிவாக்கம் செய்தான். இவனது காலத்தில் ஜெருசலம் புனித தலமாக  விளங்கி வந்தது. இவனது மகன் சாலமன் ஒரு மாநிலத்தை பன்னிரண்டு மாவட்டங்களாக பிரித்தான். இவனது காலத்தில் வியாபாரம் பெருகியது. ஜெருசலத்தில் பெரிய கோவில் ஒன்றை கட்டினான் சாலமன்.

பழங்குடியினரை இந்த சாலமன் மிகவும் மோசமாக நடத்தினான் எனும் குற்றச்சாட்டு உண்டு. இந்த காலகட்டத்தில் இஸ்ரேலில் வன்முறைகள் வெறியாட்டம் போட்டன. எப்போது ஒரு மக்களின் உரிமைகளை மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் வன்முறை தலைவிரித்தாடும். அது அந்த காலம் என்றல்ல, எந்த காலமும் அப்படித்தான். அஷ்ஷிரியர்கள் இந்த இஸ்ரேலை குறி வைத்து இருந்தார்கள். வட  பகுதியில் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி அஷ்ஷ்ரியர்கள் இஸ்ரேலை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். இஸ்ரேலின் தென் பகுதி மட்டுமே சாலமன் மற்றும் அவனது மகனின் வசம் இருந்தது. சாலமன் வட  பகுதி மக்களை ஒழுங்காக நடத்தி இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்காது.

இந்த அஷ்ஷிரியர்களை எதிர்த்து வந்தவன் ஹெசக்கியா. பெர்சியன் அரசன் பாபிலோனியாவை கைப்பற்றியதும் யூதர்களை அங்கு அனுமதித்தான். அவர்களுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டது. இடிக்கப்பட்ட கோவில்கள் எல்லாம் ஜெருசலத்தில் கட்டப்பட்டன. இஸ்ரேலியர்கள் இதுதான் சமயம் என மத வழிபாடுகளில் மிகவும் ஈடுபாடு கொண்டார்கள். பெர்சியர்களின் தலைமையில் யூதர்கள் பெரும் சமூகமாக உருவானார்கள். இந்த மத சுதந்திரம் எல்லாம் ஒரு முன்னூறு ஆண்டுகள் செழிப்பாக இருந்தது.

கோவில்கள் கட்டுவது என ஒரு கூட்டமும், கோவில்களை இடிப்பது என ஒரு கூட்டமும் அன்றே இருந்து இருக்கின்றன. மேலும் கோவில்கள் மூலம் சேர்க்கப்படும் பொருளை கைப்பற்றி அரசையே மாற்றியவர்கள் இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் ரோமானியர்கள் இஸ்ரேலில் காலடி எடுத்து வைத்தார்கள். ஒற்றுமையின்மையை பயன்படுத்தி ரோமானியர்கள் ஜெருசலத்தினை கைப்பற்றினார்கள், அதோடு கோவில்களை இடித்து தள்ளினார்கள்.

யூதர்கள் இஸ்ரேலில் இருந்து உலகம் எல்லாம் பரவிய காலம் அது. யூதர்கள் ஜெருசலத்தில் தங்கக்கூடாது என கிட்டத்தட்ட 2125 வருடங்கள் முன்னர் ஒரு அரசர் கொண்டு வந்த சட்டம் யூதர் சமூகத்தை அலங்கோலம் செய்தது. இப்போது நமது இலங்கையை எடுத்துக் கொள்வோம். இலங்கையில் ஒரு கொடுங்கோலன் ஆட்சி செய்தான், தமிழர்களை இலங்கையில் இருக்கவே விடாமல் உலகம் எல்லாம் விரட்டிட செய்தான் என 2025 வருடங்கள் கழித்து படிப்பவனுக்கு அது எல்லாம் உண்மை அல்ல என நினைப்பான் எனில் நாம் கண்டது எல்லாம் பொய்யா?

ஒற்றுமையின்மை, பலமின்மை வாழ்க்கையில் தனி மனிதரை மட்டுமல்ல, ஒரு சமூகத்தையே சீரழித்து விடும்.

(தொடரும்)


Monday 19 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை நிறைவு 4

நிறைய நாட்கள் கழித்து முதன் முறையாக ஒரு தமிழ் இதழை வாசித்து முடித்து இருக்கிறேன். முத்தமிழ்மன்றத்தில் நிறைய பேர் நிறைய எழுதுவார்கள். 2006 ம் வருடத்தில் இருந்து அங்கே உறுப்பினராக இருந்தேன். அப்போது திரு. ரத்தினகிரி, திருமதி பத்மஜா போன்றவர்களின் எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவர்கள் தந்த கருத்துகளால் எனது நுனிப்புல் முதல் பாகம் நாவல் வளர்ந்தது என்றால் மிகையாகாது, அந்த நன்றியை அவர்களுக்கு முதல் நாவலில் தெரிவித்தேன். அதற்குப் பின்னர் அவர்களது ஊக்கம் இருந்தாலும் எழுதுவது எனது எண்ணமாக இருந்ததால் இரண்டாம் பாகம் அவர்களின் அதிக பங்களிப்பு இன்றி எழுதி முடித்தேன். மூன்றாம் பாகத்திற்கு எவரேனும் என்னோடு பயணிக்க கூடும். குழு மனப்பான்மை, சச்சரவுகள் என பல இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று. அப்படித்தான் எழுதினேன். பின்னர் வலைப்பூ ஆரம்பித்தபிறகு முத்தமிழ்மன்றம் மட்டுமல்ல எனது வலைப்பூவில் எழுதுவது கூட குறைந்து போனது. இதற்கு நான் 2010 ல் மீண்டும் ஆலயம் ஒன்றில் தொண்டுபுரியும் அறங்காவலராக பணிபுரிய சென்றது என்று சொல்லலாம். அவ்வபோது எழுதி வந்து இருக்கிறேன், முற்றிலும் நிறுத்தியது இல்லை. அப்படி இந்த ட்விட்டரில் கடந்த ஒரு வருடம் முன்னர் எழுத ஆரம்பித்து தமிழ் எழுத்துகள் வாசித்து வந்தது மகிழ்வாக இருந்தது.

அப்படி ட்விட்டரில் எழுத்து மூலம் பழகியதால்  திரு. என். சொக்கன், திரு கண்ணபிரான் ரவிசங்கர், 'திருப்பூர் இளவரசி' சு.ஐஸ்வர்யா இவர்களின் பழக்கம் அவ்வளவாக இல்லாதபோதும் இவர்களிடம் நுனிப்புல் பாகம் 2 க்கு அவர்களது எண்ணங்களை வாங்கி புத்தகம் வெளியிட முடிந்தது. அதுவும் திரு என். சொக்கன் அவர்கள் என் நாவலை திருத்தித் தந்தது இங்கு நினைவுகூறத்  தக்கது. இப்படி பலர் எழுதிக்கொண்டு இருக்கும் ட்விட்டரில் இருந்து ஒரு மின்னிதழ் வெளியே வந்து இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஆசிரியர் ஒரு எழுத்தாளர் என்றாலும் முதல் பார்வையில் சொன்னது போல ரைட்டர் என செல்லமாக அழைக்கப்பட்டாலும், ட்விட்டர் உலகில் இருந்து பலரை இந்த தமிழ் மின்னிதழில் அறிமுகம் செய்து இருக்கிறார். அது எழுத்துக்கு கொடுக்கப்பட்ட கௌரவம்.

பொதுவாக நான் எதையும் விமர்சனம் பண்ணும் தகுதி உள்ளவன் என என்னை எண்ணுவதில்லை. அதனால் எனது சினிமா விமர்சனம் கூட மேலோட்டமாகவே இருக்கும். விமர்சனம் என்பது ஒன்றை பண்படுத்த உதவ வேண்டும், பழுதுபடுத்த அல்ல. மென்மேலும் முயற்சிக்க வைக்க வேண்டும், முடங்க வைக்கக்கூடாது. இங்கே இந்த தமிழ் மின்னிதழில் எனது பார்வையை முன் வைத்து இருக்கிறேன், இது எனக்கே கூட ஒரு புது அனுபவமாக இருந்தது. பக்கத்து ஊர்க்காரர் எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துலக பயணம் எனக்கு ஆச்சரியம் உண்டுபண்ண வைத்தது. எங்கள் ஊரில் கூட சில எழுத்தாளர்கள் உண்டு. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் எல்லாம் எங்கள் கிராமத்தில் உண்டு. அப்படி சிறு வயதில் எழுத ஆரம்பித்தேன். கல்லூரியில் படித்தபோது இப்படி நோட்டில் கிறுக்கிக் கொண்டே இருக்காதே என அறிவுரை எல்லாம் எனக்குத் தந்தார்கள். நான் எழுத்துலகில் ராமனுஜனாக எழுத்தில் பரிமாணம் எடுக்க இயலாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் எனது திமிர், ஈகோ. எழுதி ஏமாற்றுகிறார்கள் என்பதே எனக்குள் இருக்கும் எழுத்து மீதான விமர்சனம். எழுதுபவன் எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும்  இறங்க வேண்டும் என எண்ணுபவன், அதனால் எனது எழுத்துகளில் ஒருவித ஏக்கப் பெருமூச்சு அவ்வப்போது இருந்து கொண்டே இருக்கும். அதை எல்லாம் தாண்டிப் பார்த்தால் எழுத்து ஒரு தவம். அது சிலருக்கே கை வந்து இருக்கிறது. அப்படி பலரை கௌரவம் செய்து இருக்கிறது இந்த தமிழ்  மின்னிதழ். அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

தமிழ் திரைப்பட விருதுகள் - 2014  எனக்கு சிறு வயதில் இந்தவிருதுகள் பட்டியல் எல்லாம் பார்க்க பேரானந்தமாக இருக்கும். இப்போது கூட தேசிய விருதுகள் பட்டியலை ஆர்வத்தோடு பார்ப்பேன். எனக்கு பிலிம்பேர் விருதுகள், இன்னபிற விருதுகள் எல்லாம் பல வருடங்களாக ஈடுபாடு தந்தது இல்லை. தேசிய விருது மட்டுமே நான் அதிகம் விரும்பி பார்ப்பது. இங்கே என்ன விருதுகள் என்ன தரப்பட்டு இருக்கிறது என்று பார்த்தால் பெரும்பாலான படங்கள் நான் இன்னமும் பார்க்கவில்லை. இதற்கு ஒரு காரணம் நமது ஊரில் உள்ளதுபோல திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு படங்கள் வருவது இல்லை. குறிப்பிட்ட சில படங்களே வரும். மேலும் பெரும்பாலான படங்கள் இணையம் அல்லது டிவிடியில் பார்க்க வேண்டிய சூழல். ஊரில் இருக்கும்போது பாடல்கள் நிறைய கேட்பது உண்டு, இங்கே வெகுவாக குறைந்துவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கலை உலகினருக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுவாக விருது என்பது விமர்சனத்திற்குரியது, பலருக்கு திருப்தி தருவதைவிட அதிருப்தி தந்துவிடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விருது வழங்குவது தொடர்ந்து நடைபெறுவது நல்ல விஷயம்.

அடுத்து படித்த எழுத்து சற்று வித்தியாசமானது.  முதலில் சில வரிகள் படித்ததும் தமிழ் - மின்னிதழை மூடிவிட்டேன். பொதுவாக இப்படி இருப்பவர்கள் என குறிப்பிட்டு வாசிக்க வேண்டாம் என சொல்லிவிட்டால் அதில் ஏதேனும் ஒன்று எனக்குப் பொருந்தும் எனில் கூட நான் வாசிப்பதே இல்லை. எழுதுபவருக்குத்  தரும் மரியாதையாகவே நான் அதை கருதுவேன். அப்படித்தான் படிக்கவே வேண்டாம் என முடிவு செய்தேன். ஆனால் இந்த தமிழ்-மின்னிதழ் அந்த கொள்கையை தகர்த்த சொன்னது. முழுமையாகப் படிக்காமல் வாசிப்பது முழுமை அடையாது என வாசித்தேன். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. புதிய எக்சைல் - புனைவும் புனைவற்றதும் - சுரேஷ் கண்ணன் எழுதி இருக்கிறார். அதிலும் எழுதுவதற்கு ஆசிரியரின் பரத்தை கூற்று தனை காரணம் காட்டுகிறார். உங்ககளை  வாசிக்கக் வைக்கவே அப்படி தொடக்கத்தில் எழுதினேன் என்கிறார். அப்படி எல்லாம் வாசிக்கமாட்டேன் சுரேஷ்கண்ணன். வாசிக்காதே என்றால் வாசிக்கவே மாட்டேன். எவருக்காகவும் எழுத்து சமரசம் செய்யக்கூடாது, தனது நிலையை எழுத்து மாற்றக்கூடாது என எண்ணுபவன் நான். காமக்கதைகளுக்கு இங்கு மவுசு அதிகம் என நான் எழுதிய கதை ஒன்றில் ஒரு வார்த்தை கூட வேறு விதமாக எழுதி இருக்க மாட்டேன். வாசகனுக்கு எழுத்தாளனை விட கற்பனை சக்தி அதிகம் என நினைப்பேன். கதாபாத்திரங்கள் மூலம் அழகாக பல விசயங்களை எழுதி இந்த புதிய எக்சைல்  எனும் தமிழ் நாவலுக்கு இரண்டு விமர்சனங்கள் வைத்து இருக்கிறார். அவரே குழப்பம் அடைந்து இருக்கிறார் என முடிவில் நையாண்டியாக முடிக்கிறார். சுவாரஸ்யமான எழுத்து.

காமத்தை முன்னிறுத்தி எழுதப்படும் கதைகளில் சமீபத்தில் ராஜன் என்பவர் எழுதிய தேர்க்கால் எனும் சிறுகதை அப்படியே மனித உலகில் உபயோகிக்கப்படும் வார்த்தைகளை பிரயோகித்து இருப்பார். வாசகன் இதைக் கண்டு அஞ்சக்கூடாது அதுதான் நிதர்சனம். இதைவிட மோசமான வார்த்தைகளை எங்கள் கிராமத்தில் உபயோகம் செய்வார்கள். சுரேஷ் கண்ணன் மறைமுகமாக சில வார்த்தைகளை உபயோகம் செய்கிறார். ஜ்யோவரம் சுந்தர் என நினைக்கிறேன், ஒரு கட்டுரையில் அப்படியே வார்த்தைகளை உபயோகம் செய்து இருப்பார்.  எழுத்து நாகரீகம் கருதி அப்படியே எவரும்  எழுதுவதில்லை. ஆங்கில நாவல்கள் விதிவிலக்கு என கருதுகிறேன். இப்போதெல்லாம் எவ்வித மன சஞ்சலம் இன்றி எதையும் வாசிக்க முடிகிறது. எனது மனம் சிறுவயது கட்டுக்கோப்பில் இருந்து வெகுவாக வெளியேறிவிட்டது ஆனால்  என்னால் இப்படி எழுதவே இயலாது, எழுத வேண்டிய நிர்பந்தமும் எனக்கு இல்லை. எழுதுபவர்கள் எழுதட்டும்.

இசை - இசையை நோக்கி நகர நகர இசையை விட்டு வெளியேறிக்கொண்டே இருக்கிறேன். ராகங்கள் எல்லாம் கற்று தாளங்கள் கற்று நானும் ஒரு இசை மேதை ஆக விருப்பம். ஆனால்  சாத்தியமற்ற ஒன்று. இளையராஜா, இசைஞானி. இவரது ரமண மாலை, திருவாசகம் எல்லாம் நான் திரும்பத் திரும்ப கேட்பவை. ஆனால் என்ன ராகம் என்ன இசை வாத்தியங்கள் என்ன என்றெல்லாம் மனம் சஞ்சரிப்பது இல்லை. வார்த்தைகளுக்காக நான் மயங்குவேன். காரணமின்றி கண்ணீர் வரும் என்றவுடன் எனக்கு கண்ணீர் வரும். ஆனால் எஸ். சுரேஷ் சுவப்னம் கனவுகளுக்கான இசை என ஒரு ஆல்பத்தை அழகாக இசைத்து இருக்கிறார். கானடா, காம்போதி, ஜோக், பிலஹரி என பல ராகங்கள், மிருதங்க இசை, பாடல் பாடும் அழகு என ஆராதனை செய்து இருக்கிறார். நிச்சயம் இவரை நம்பி இந்த ஆல்பம் கேட்டு மகிழலாம் என நினைக்கிறேன்.

இந்திரன் எழுதிய பந்து புராணம். அட்டகாசம். எனது கிரிக்கெட் வாழ்நாளை அசைபோட வைத்தது. என்ன இந்திரன் வேறு ஊர்களுக்கு சென்று விளையாடவில்லையா என்றே கேட்கவேண்டும் என இருக்கிறேன். வேறு ஊர் அணிகளில் அவர்களுக்காக களம் இறங்கவில்லையா என்ற கேள்வியும். எங்கள் ஊரில் பெண்கள் கிரிக்கெட் விளையாண்டது இல்லை. அவர் குறிப்பிட்டது போல ஊரில் உள்ள அக்காக்கள் எல்லாம் வேற பொழப்பே இல்லையா இப்படியா வேகாத வெயிலில் விளையாடுறீங்க நீங்க சின்ன பசங்க எங்க மாமாவை எல்லாம் ஏன்டா  இப்படி விளையாட இழுத்துட்டு போறீங்க என திட்டாத நாளில்லை. வெயிலில் விளையாடியே கருத்து போனேன் என வீட்டில் சொல்வார்கள். பழைய நினைவுகளை அசைபோட வைத்த அற்புத விபரிப்பு, அதுவும் கடைசியில் முடிக்கும் போது  ஒரு காவியம் போல முடித்து இருக்கிறார்.

பாலா மாரியப்பனின் நிழோலோவியம். ஏதேனும் தென்படுகிறதா என பூவினை தாண்டி பார்த்தேன். புகைப்படம் அருமை. எனக்கு ஓவியம் என்றால் கொள்ளைப்பிரியம். ஓவியத்தில் மனதை அழகாக சொல்லலாம். ட்விட்டரில் ஓவியம் வரையும் ராகா, பாரதி, அகழ்விழி, அண்ணே ஒரு விளம்பரம், தமிழ்பறவை, பிரசன்னா மீனம்மாகயல் என ஒரு பெரிய ஓவியர்கள்  பட்டாளமே உண்டு. எனது  நுனிப்புல் பாகம் 2 நாவலுக்கு அகழ்விழி தான் ஓவியம் வரைந்து தந்தார். அப்படியே நான் அவரது ஓவியத்தை எடுத்துக்கொண்டது அவருக்கு சற்று ஆச்சரியம். இந்த தமிழ் மின்னிதழில் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த இயக்குனர் கே பாலசந்தர் அவர்களைப் பற்றிய நினைவு கூறல் என தனது அருமையான அனுபவத்தை அவர் ஒரு தொடர்கதை என கார்த்திக் அருள் அழகாக எழுதி இருக்கிறார். அதுவும் அவருடன் நேரடியாய் பேசிய அனுபவம் சிறப்பு. நானும் கே பாலசந்தர் படங்களை பார்க்கலாம் என இருக்கிறேன்.  தமிழ் மின்னிதழின் கடைசி பக்கத்தில் பரணிராஜன் வரைந்த பாலசந்தர் ஓவியம் அப்படியே பாலசந்தரை ஒரு விழாவில் அமர்ந்து இருப்பதை பார்ப்பது போன்ற போன்ற உணர்வைத் தந்தது. இவர் வரையும் ஓவியங்கள் அத்தனை தத்ரூபமாக இருக்கும். மாதுளம் பழம் ஒன்று உரித்து அது தட்டின் மேல் இருக்கும் ஒரு ஓவியம் பிரமிப்பு தரும், பாராட்டுகள். எப்படி இப்படி வரைவது என இவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ளவும் ஆசைதான்.

இணைய நூற்றாண்டு குறித்து சிறகு அவர்கள் மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார். மிகவும் உண்மை. இந்த உலகம் இணையம் மூலம் பெரும் உதவியையும் அச்சுறுத்தலையும் சந்தித்து வருகிறது. அருமையான  எழுத்து. இறுதியாக திறமைசாலிகள்  என ட்விட்டர் மூலம் அடையாளம் காட்டப்படும் எழுத்து என எஸ்கே செந்தில்நாதனின் குவியொளி வெகு சிறப்பு. ஆத்திசூடி போன்று டிவிட்டர்சூடி. எழுதிய அனைவருக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த தமிழ் மின்னிதழ் குறித்து இரு வாக்கியங்களில் ஒரு விமர்சனம்.

'நிர்வாணத்தை மறைக்க விரும்பாத ஒரு அழகியல் -தமிழ் மின்னிதழ்' 

'நிர்வாணத்தை மறைத்த பின்னும் கண்களை அகற்ற இயலாத பேரழகியல் - தமிழ் மின்னிதழ்'

எனது பார்வை நிறைவுப் பெற்றது. இந்த தமிழ் மின்னிதழ் காலாண்டு இதழாக தொடரும். அன்றும் தமிழ் - மின்னிதழில்  பகிரப்படும் படைப்புகள் குறித்து இங்கே எழுதுவேன் எனும் நம்பிக்கையுடன் வாழ்த்தி மகிழ்கிறேன்.

 (முற்றும்)