Thursday 14 February 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3

பகுதி  2 

மகிமா என்பது மலை போன்று பெரிதாவது என்றே குறிப்பிடபடுகிறது. விஸ்வரூபம் என்பது கூட ஒருவகையான சித்தி என்றே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஒரு சிறு விதை விருட்சமாவது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் விருட்சமான மரமானது மேலும் அதுவும் கணநொடியில் மேலும் விருட்சம் என்பது அபூர்வமான ஒன்றாகவும், நம்ப முடியாத விசயமாகவே நமது எண்ணத்திற்கு தோற்றம் அளிக்க கூடியவனாக இருக்கின்றன. 

ஆனால் இப்படிப்பட்ட மகிமா சக்தியை சித்தர்கள் பெற்று இருந்தார்கள் என்றே இன்னமும் சொல்லப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில் வரும் விஷ்ணுவின் அவதாரம், கிருஷ்ணரின் விஸ்வரூபம் கூட இந்த கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை எவரும் மனித உருவினை விஸ்வரூபம் எடுத்து பெரிதாக காட்டியதாக வரலாறு குறிக்கவே இல்லை. அப்படியெனில் இந்த மகிமா சாத்தியமா? சாத்தியம் அற்றதா? ஒன்று நம்மால் முடியாதவரை அது சாத்தியம் அற்றது என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான முயற்சியும் திறனும் நம்மிடம் நாம் வளர்த்து கொள்ள வேண்டும். 

இப்படிப்பட்ட முயற்சி பற்றி எண்ணிடும்போது சூரிய சித்தாந்தம் பற்றி நினைவுக்கு வந்தது. இந்த சூரிய சித்தாந்தம்தனை எழுதியவர் எவர் என்று குறிப்பில் இல்லை. இந்த சூரிய சித்தாந்தம் சூரிய கடவுள் மாயன் எனும் அசுரனுக்கு தரப்பட்டது என்று ஒரு ஐதீகம் உண்டு. தேவர்கள், அசுரர்கள் என அக்காலத்தில் இருந்து குறிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசுரர்கள் அழிக்கும் கூட்டம் எனவும், தேவர்கள் காக்கும் கூட்டம் எனவும் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. இந்த சூரிய சித்தாந்தத்தில் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் பல குறிப்புகள் சூரியன் பற்றியும், அதன் கோள்கள் பற்றியும் இருக்கின்றன. கால சூழல் வேறுபாட்டால் பல ஸ்லோகங்கள் தொலைந்து போனதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு கோளின் அளவினை எல்லாம் இந்த சூரிய சித்தாந்தம் குறிப்பிட்டு இருப்பது, இன்றைய அளவுக்கு மிகவும் சரியாகவே இருப்பது, சைன், டேன், காஸ் டீட்டாகளை எல்லாம் கணக்கில்  வைத்தது பிரமிக்கவைக்கும் செயல் அன்றி வேறு என்னவாக இருக்க இயலும்.

பஞ்சாங்கம் என்பது இந்த சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான். எந்த எந்த நேரத்தில் எந்த கோள்கள் எங்கிருக்கும் என்றெல்லாம் கணக்கீடு செய்து வைத்து இருக்கிறார்கள். அதன் காரணமாகவே சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எல்லாம் தெரிந்து இருக்கிறது. இப்படிப்பட்ட பிரமிப்பில் ஒரு மலையை சூரியனும், கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என சொன்னால் எப்படி இருக்கும்?

இந்த மலைகள் எப்படி உருவானது என்பதற்கு பூமித்தட்டுகள் முட்டிக்கொண்டு மேல் எழுந்ததுதான் என்கிறார்கள் இன்றைய அறிவியல் வல்லுனர்கள். இந்த பூமியானது பல தட்டுகளால் உருவானது என்றும் ஒவ்வொரு தட்டுகளும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, அப்படி நகர்தலின் காரணமாக நிலநடுக்கம், மலைகள் உருவாதல் எல்லாம் நடைபெறுகிறது என்றே சொல்கிறார்கள். தரைமட்டமாக இருந்த நிலபரப்பு திடீரென மலையாய் மாறுதல். மகிமா!

 
இது இமயமலைத் தொடர். இதற்கு பெரிய கதையே உண்டு. இப்போதைக்கு அகிலாண்டீஸ்வரியையும், சிவபெருமானையும் விட்டுவிடுவோம். நமது இந்திய நிலபரப்பு பல்வேறு வருடங்களில் நகர்ந்து வந்து மோதியதால் உருவானது இந்த இமயமலை என்பது ஒரு கணக்கீடு. நன்றி: விக்கிபீடியா 



ஆங்காங்கே இந்திய நிலபரப்பு மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள மலைகள் இப்படித்தான் உருவாகி இருக்கும் என்பது ஒரு கணக்கீடு. 


இது ஆல்ப்ஸ் மலைத்தொடர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் என உலகில் ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பதாகவும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து சதவிகிதம் பூமி மலைகளால் ஆனது என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் மேரு மலை என்று ஒன்று குறிப்பில் உள்ளது. இந்த மேரு மலையில் தான் பிரம்மா மற்றும் அனைத்து கடவுளர்களும் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். இதுவரை இந்த மேரு மலையை எவருமே கண்டதில்லை. இது எங்கு இருக்கிறது என்பதற்கான ஒவ்வொருவரின் எண்ணமும் வெவ்வேறு விதமாகவே இருக்கிறது. இந்த மலையின் உயரம் கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோமீட்டர் உயரம் என்றும், இதனின் குறுக்களவு பூமியைவிட எண்பத்து ஐந்து மடங்கு பெரிதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உயரத்தை குறிப்பிட யோஜனா என்றும் ஒரு யோஜனா பதினோரு கிலோமீட்டர் என்றும் கணக்கு சொல்கிறார்கள். 

முன்னர் குறிப்பிட்டது போல இந்த மலையை சூரியன் முதற்கொண்டு பிற கோள்கள் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம். இந்த மேரு மலையை சூரிய சித்தாந்தம் மத்திய பூமியில் இருப்பதாக கணக்கீடு காட்டுகிறது. ஒருவேளை பூமி  வெடித்து சிதறி அதிலிருந்து வேறு பல கோள்கள் உருவாகும் முன்னர் இந்த மலை ஒன்று பூமியில் இருந்து இருக்கலாம் என சூரிய கடவுள் மாயனுக்கு சொல்லி இருக்கலாம். பூமியை சூரியன் சுற்றிய காலமும், சூரியனுக்குள் இருந்த பூமி வெளியே எறியப்பட்ட காலமும் இருந்திருக்கலாம். எவர் கண்டது? ஆனால் இப்படி சூரிய சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட மேரு மலை இல்லாதது கண்டு பின் வந்தவர்கள் மேரு மலை ஒன்று முன்னர் இருந்தது ஆனால் தற்போது பூமியில் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இந்த மேரு மலை ஒருமுறை கர்வம் கொண்டதாகவும், அந்த மேரு மலையின் கர்வத்தை போக்கிட நாரதர் வாயு பகவானின் உதவியுடன் மேரு மலையை சிதறடித்ததாகவும் அதிலிருந்துதான் இலங்கை எல்லாம் உருவானது என  ஒரு கதை எல்லாம் உண்டு. அதுவும் லெமூரியா கண்டம் பற்றி எல்லாம் பரபரப்பாக நாம் பேசித் திரிந்த காலம் கூட இங்கே குறிப்பிட வேண்டியதுதான். 

மகிமா என்று சொல்லிவிட்டு மலைகள் பற்றி சொல்லிட வேண்டிய அவசியம் என்ன? பகவான் விஷ்ணு சொல்கிறார் மலைகளில் நான் மேரு. ஒரு மனிதன் தனது எண்ணத்தால், செயலால் உயரும்போது மலையை உதாரணமாக சொல்கிறார்கள். 

உருவத்தில் மனிதன் உயர்வதல்ல மகிமா. மனிதன் தனது உள்ளத்தில், எண்ணத்தில், உணர்வில், செய்கையில் உயர்வது மகிமா. இந்த மகிமா எனும் அஷ்டசித்திகளில் ஒன்றான இதை நாம் பற்றி கொண்டால் உலகம் சுபிட்சமாகவே இருக்கும். 

(தொடரும்)

Tuesday 12 February 2013

மூர்க்க ஜந்துகள்

அரிவாளுடன் என் முன்னே
அவர் அப்படி வந்து நிற்பார்
என்று ஒருபோதும்
 நான் கனவில்
நினைத்ததும் இல்லை.

அவரது பெண்ணை
நான் இழுத்து சென்று
திருமணம் செய்வேன் என்று
அவர் ஒருபோதும் கனவில்
நினைத்து இருந்திருக்க
மாட்டார் என்றே
எண்ணிட பயமாயிருக்கிறது.

நான் மார்க்கமானவன்
எனக்கு
நான் மூர்க்கமானவன்
அவருக்கு

இப்படியாய் பல விசயங்களில்
மூர்க்கத்தனம்
இரண்டு 'கறை'களாய்
வாழ்க்கையை
அலங்கரிக்கிறது. 

Friday 8 February 2013

எந்திரனை வீழ்த்திய விஸ்வரூபம்

ரஜினி-கமல் படங்களுக்கு நேரடி போட்டி வெகுவாகவே குறைந்து போய்விட்டது. ரஜினி ரசிகர்கள், கமல் ரசிகர்கள் ஒரே நேரத்தில் விவாதிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். கமலின் திரைப்படங்களைவிட விஜய் திரைப்படங்கள் வசூலில் ரஜினிக்கு அடுத்த நிலை என்றெல்லாம் உருவாகிவிட்ட காலம். தமிழ் திரையுலகினை புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல பல இயக்குனர்கள் உருவாகிவிட்டார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி கமல் தனது இயக்கத்தின் மூலம் வித்தியாசமான இயக்குனர் என்பதை நிரூபித்து கொண்டு வருகிறார். 

சமீபத்திய விஸ்வரூபம் சாதாரண கதைதான் எனினும் கமல் கையாண்ட தொழில்நுட்பம் படம் பார்த்த அனைவரையும் பாராட்டத்தான் செய்யும், ஒரு சிலரைத் தவிர. எந்திரனை விட மிக சிறப்பான படம் என்று விஸ்வரூபம் பெயர் எடுத்து இருக்கிறது என்பதை ரஜினி ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்ள கூடிய சூழல் தான் இப்போது அமைந்து இருக்கிறது. சர்ச்சைகள் இல்லாமல் விஸ்வரூபம் வெளியாகி இருந்தால் இத்தனை அளவுக்கு பேசப்படுமா என்றால் எந்திரன் கூட அளவுக்கு அதிகமான விளம்பரத்தில் தான் வெளிவந்தது. ரஜினி தன்னை ஒரு சூழ்நிலை கைதி என அறிவிக்கவே செய்தது எந்திரன் திரைப்படம். 

ஒரு படத்தில் என்ன இருக்கிறது எனும் எதிர்பார்ப்பை தூண்டிவிடுவதே ஒரு படத்தின் வெற்றியாகும். ரஜினி நடித்தால் அந்த படமே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி விடும் சூழல் தான் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கமலுக்கு அப்படியல்ல. மன்மதன் அம்பு என்றொரு படம் வந்த சுவடே தெரியாமல் ஒளிந்து கொண்டது. ரஜினி கௌரவ வேடத்தில் வந்தாலும் கூட  குசேலன் ரஜினிக்கு ஒரு தோல்விப்படம் என்றே பேசப்பட்டது. 

அத்தகைய சூழலில் இப்போது விஸ்வரூபத்தின் வசூல் எந்திரனை மிஞ்சிவிட்டது எனும் செய்தி வெளியாகிவருகிறது. எந்திரன் தமிழக திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதால் எந்த ஒரு படம் வெளியானாலும் எந்திரன் வசூலுக்கு இணையாக வைத்து பார்க்கப்படுகிறது. பல நாட்கள் ஓடிய அல்லது ஓட்டப்பட்ட சந்திரமுகியை பலரும் மறந்து போனார்கள். 

தமிழகத்தில் இந்த வசூல் கணக்கெல்லாம் ஒழுங்காகவே இருக்காது என்பது காலம் கண்டு கொண்ட செய்தியாகும். இல்லையெனில் ஒன்றரை கோடி நஷ்டம் என ஒரு கோஷ்டி எந்திரன் படத்திற்கு கணக்கு காண்பித்து இருக்காது. விஸ்வரூபம் முதல் நாளே தமிழில் பத்து கோடி சம்பாதித்து விட்டது எனும் வசூல் கணக்கு கூட அதிகாரப்பூர்வமானது அல்ல என்றே சொல்கிறார்கள். ஒரு வேளை அதற்கு அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். 

ஐம்பது நாள், நூறு நாட்கள், வெள்ளிவிழா என்றெல்லாம் முன்பு போல் படங்கள் இப்போது கொண்டாடுவது இல்லை. ஒரு வாரம் ஓடினாலே பெரிய விசயம் என்று ஆகிவிட்டது. கடல், டேவிட் எனும் சமீபத்திய திரைப்படங்கள் பெரும் சரிவினை அடைந்து இருக்கின்றன. 

முன்பு ரஜினி, கமல் படங்கள் எத்தனை நாட்கள் ஓடும் என்பதில் போட்டி இருக்கும். காரணம் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும். இப்போதெல்லாம் அறுநூறு, ஆயிரம் என்று சொல்கிறார்கள். ''ஒரே காலகட்டத்தில் ரஜினி கமல் படம் வெளியாகி அப்போது வசூல் விபரங்கள் வெளிவந்தால் அப்போது யார் வசூல் சக்ரவர்த்தி என்பது தெளிவாகும். அதுவரை எந்திரன் ஒவ்வொருமுறை ஒவ்வொரு படத்தினால் வீழ்த்தப்பட்ட கதை சொல்லப்பட்டு கொண்டே இருக்கும்'' என்கிறார் ஒரு ரஜினி ரசிகர். ஆனால் என்னைப் பொருத்தவரை விஸ்வரூபம் எந்திரனை வீழ்த்திவிட்டது படம் அமைப்பில் மட்டுமல்ல, வசூலிலும் என்றுதான் மதிப்பீடு செய்ய முடிகிறது. 


Thursday 7 February 2013

உணர்வுகளின் பரிணாமம்

இறைவனும் இறை உணர்வும் - 4

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம் - 6

நரம்பியல் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கால சூழல் அமைய வேண்டும் என்றே எண்ணுவது உண்டு. அப்படிப்பட்ட நரம்பியல் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் எனும் கேள்வி எழுப்பும்போதே நரம்பியிலின் நுண்ணியதன்மை வெளிப்பட்டுவிடுகிறது.

ஐந்து வகையான உணர்வுகள், தொடுதல், சுவாசித்தல் , பார்த்தல், கேட்டல், சுவைத்தல்,  பற்றி பாடப்புத்தகத்தில் படித்த காலங்கள் உண்டு. பார்வைக்கு கண் என்றும், தொடுதலுக்கு தோல் என்றும், சுவாசித்தலுக்கு (வாசனைக்கு) நாசி என்றும், கேட்டலுக்கு காது என்றும் வகைப்படுத்தப்பட்டது.

ஒளி இருப்பின் பார்வையும், ஒலி இருப்பின் கேட்டலும் என்றே ஆனது. ஆனால் நமது பார்வையும் சரி, கேட்டலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் மட்டுமே இருந்து வருகிறது என்பதை நாம் அறிவோம்.

ஆனால் இந்த உணர்வுகளைத் தாண்டி மேலும் பல உணர்வுகள் இருப்பதாகவே அறிவியல் நமக்கு அறிவுறுத்துகிறது. தொடுதலில் மென்மை, வலி, காமம் என எவ்வாறு நாம் வேறுபடுத்தி கொள்கிறோம் என்பதும்  அதைப்போல நாம் பார்க்கும் பொருளின் தன்மையை வேறு வேறு விதமாக நாம் எவ்வாறு உருவகித்து கொள்கிறோம் என்பதும்  சற்றே வித்தியாசமான ஒன்றுதான். நமது எண்ணமே இந்த உணர்வுகளைத் தூண்டுகிறதா? அல்லது உணர்வுகளால் நமது எண்ணங்கள் தூண்டப்படுகிறதா? என்பது சற்றே சிந்திக்கக் கூடிய விசயம்.

ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதா உபதேசத்தில் ஒரு தேரானது உடம்பாகவும், அந்த தேரினை இழுத்து செல்லும் ஐந்து உணர்வுகள் ஐந்து குதிரைகளாகவும், தேரோட்டியை மனமாகவும் சித்தரித்து உள்ளதாக குறிப்பு உள்ளது.

தாயைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும், தாரத்தைத் தொடும்போது உள்ள தொடுதல் உணர்வுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது மனம் சம்பந்தம் கொண்டதா, அல்லது உணர்வு சம்பந்தம் கொண்டதா? இந்த விசயத்தில்தான் பகுத்தறிவு என ஆறாம் உணர்வினை சொன்னார்கள். நமது மனதின் எண்ணவோட்டத்தின் பொருட்டே உணர்வுகளின் நிலை வேறுபடுகிறது என்றுதான் தொன்று தொட்ட காலம் முதல் சொல்லப்பட்டு வருகிறது.




உணர்வு நரம்பு, கடத்தும் நரம்பு, வெளிபடுத்தும் நரம்பு என மூன்று வகையாக நரம்பினைப் பிரிக்கலாம். பார்வை, கேட்டல், தொடுதல் என உணர்வு நரம்பு மூலம் கடத்தும் நரம்புக்கு சென்று பின்னர் மூளையின் செயல்பாடு, அல்லது செயல்பாடற்ற தன்மைக்கு பின்னர் வெளிப்படுத்தும் நரம்பு மூலம் ஒன்றை உணர முடிகிறது.

உதாரணமாக, ஒரு மிகவும் சூடான பாத்திரத்தை கையால் தூக்கும்போது சூடு தாங்க முடியாமல் கீழே போட்டுவிடுகிறோம். அப்படி கீழே போட வேண்டும் என மூளையின் கட்டுபாடுகளுக்கு நாம் காத்து இருப்பது இல்லை. அதே வேளையில் சூடாக இருந்தாலும் அதில் இருக்கும் பொருளின் மதிப்பை கண்டு நாம் கீழே போடாமல் இருக்க நாம் நமது மூளைக்கு கட்டுபடுகிறோம. இப்படியான ஒரு செயலை தனிச்சை செயல் என்றும் அனிச்சை செயல் என்றும் பிரிக்கலாம்.

ஏதாவது ஒன்று நம்மிடம் சொல்லும்போது சற்று கூட யோசனை செய்யாமல் பேசிவிடுவது கூட மூளைக்கு சம்பந்தம் உள்ளதா? இல்லையா என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு.

நன்றி: கூகிள்

இப்படி ஒவ்வொரு உணர்வும் எப்படி வேறுபாடு அடைகின்றன என சிந்திக்கும் வேளையில் இந்த ஐந்து உணர்வுகளில் எந்த உணர்வு முதலில் தோன்றி இருக்க கூடும்?

தொடுதல் என்கிறார்கள் சிலர். கேட்டல் என்கிறார்கள் சிலர். வாசம் என்கிறார்கள் சிலர். பார்த்தலும், சுவைத்தலும் இறுதியாக வந்து இருக்கலாம் என்றே சொல்கிறார்கள். இன்னும் எத்தனையோ உணர்வுகள் இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இது குறித்து பின்னர் பார்ப்போம். அதில் ஒன்றுதான் இறை உணர்வு, முக்காலமும் உணரும் தன்மையான உணர்வு.

(தொடரும்)

Wednesday 6 February 2013

அவள் இறங்கிவிட்டாள்

எட்டிப் பிடித்த பேருந்து ஒன்றில்
முட்டி மோதி இடம் பிடிக்கையில்
பட்டுபோன்ற கன்னம் கொண்டவள்
சிட்டாக அமர்ந்து இருந்தாள்
எதிர் இருக்கையில்

இதயத்தில் மொட்டு ஒன்று
உதயம் ஆனது போன்று
புன்னகை பூக்கள்
மென்னகையாய் விழுந்தது
எதிர் இருக்கையில்

அவள் செல்லுமிடத்து
நானும் சென்றிடவே
எண்ணம் கொண்ட வேளையில்
நடந்துவந்த நடத்துனரிடம்
நளினமாக பேசிய அவள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
இறங்கியே போனாள்
எவரேனும் இனி அமரக்கூடும்
எதிர் இருக்கையில். 

Monday 4 February 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12

முன் பகுதி 

கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்த காயத்ரியின் கண்களை நான் உற்று நோக்கினேன்.  அம்மாவும், காயத்ரியின் அக்காவும் வேறு வேலைகள் செய்ய சென்றார்கள். காயத்ரி என்னை நோக்கி கேட்டாள்.

''என்ன அப்படி பார்க்கிற''

''நீதான என்னை முறைச்சிப் பார்க்கிற''

 ''உனக்கு பெண்கள் மேல மட்டு மரியாதையே இல்லையா?''

அவள் அப்படி கேட்பாள் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. இருந்தாலும் சுதாரித்து கொண்டேன்.

''நீ அப்படி என்னத்தை கண்ட?''

''தூசி துகள் ஈர் பேன் பெருமாள் அப்படின்னு சொல்ற''

''உள்ளதைத்தான் சொன்னேன், இந்த பேரண்டம் தோன்றியதற்கு காரணமே தூசிதானே''

எனது பதில் அவளிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவளது முகத்தில் சிறு மாற்றம் கண்டேன். சட்டென முகத்தைத் திருப்பி கொண்டாள்.

''பாரு காயூ, இந்த பேரண்டம் தூசியினால் மட்டுமே உருவாக்கப்பட்டது, அப்படி இந்த பேரண்டம் உருவாக உதவியாக இருந்த தூசினை மாசு படுத்திவிட்டார்கள். தூசு என்றால் மாசு என்றே பொருள் ஆனது. அதனால் தான் எதையாவது குறைத்து மதிப்பிட வேண்டுமெனில் என் கால் தூசிக்கு சமம் என பேசுவார்கள். புரிந்து கொள்''

நான் காயூ என காயத்ரியை முதன் முதலில் அப்போதுதான் அவ்வாறு அழைத்தேன். காயூ என்பது கூட நன்றகாத்தான் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

''என்னை எப்படி கூப்பிட்ட?''

''காயூ''

அவளிடம் இருந்த கோபம் சட்டென மறைந்தது. புன்னகை பூத்தாள்.

''ம்ம் ரொம்ப நல்லாருக்கு''

''எது தூசு பத்திய விசயமா?''

''காயூனு என்னை கூப்பிடுறது''

''தூசு பத்தி என்ன நினைக்கிற?''

''நீ ஒரு லூசுனு நினைக்கிறேன்''

''எப்பவும் அப்படித்தானே என்னை நினைக்கிற, எதுவும் புதுசா சொல்லு''

''நான் பெருமாளை நம்புறவ, நீ தூசியை நம்புறவன், இருந்தாலும் உன்னை நானும், என்னை நீயும் நேசிக்கிறது அபூர்வம் தான்''

அவள் அப்படி சொன்னபோது எனக்குள் ஒருவித சலனம் உருவானது. இவள் இறைபக்தி உடையவளாக இருக்கலாம், இருந்துவிட்டு போகலாம். அதற்காக என்னை இறைபக்தி இல்லாதவன் என்று எப்படி முடிவுக்கு வந்தாள். ஒரே மாதிரி உணர்வு உள்ளவர்கள் மட்டுமே காதலித்தல் சாத்தியமா? கர்மவினை என்றாள், இப்போது அபூர்வ விசயம் என்கிறாள், என்னதான் இவளின் மனதில் எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றே எண்ணத் தொடங்கினேன்.

''காயூ, நீ என்னதான் சொல்ல வர, நாம நேசிக்கிறது எல்லாம் கர்மவினைனு சொல்றியா?''

''அப்படித்தான் வச்சிக்கோயேன்''

''அப்படித்தான் வச்சிக்கிறதுனா, என்ன அர்த்தம்?''

''நாம பார்த்தது, பழகினது, என் அம்மா இறந்தது, எங்க அப்பா எங்களை விட்டு போனது அப்புறம் இப்படி உங்க வீட்டுல நாங்க இருக்கிறது, எல்லாமே''

காயத்ரி இப்படி பேசுவாள் என்று நான் சற்று கூட  எதிர்பார்க்கவே இல்லை. அவள் பேசியதில் உறுதி தெரிந்தது. தாயின் மரணம், தந்தையின் செயல்பாடுகள் அவளுக்குள் வாழ்வினைப் பற்றிய விரக்தியை ஏற்படுத்தி இருக்க வேண்டும், அவளது தந்தையின் மீதான ஏமாற்றம் என் மீதும் வந்து தொலைந்து இருக்க வேண்டும் என்றே என் மனம் நினைத்தது. காயத்ரியின் கைகளைப் பிடித்தேன். தொடுதல் உணர்வில் எனது எண்ணம் அவளுக்குள் சென்று தொலைய வேண்டும் என்கிற ஒரு நட்பாசை.

''காயூ, இந்த பூமியில் வாழுற வரைக்கும் உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டேன். நீ உன் அப்பா மேல இருக்கிற கோவத்தை என் மேல காட்டாதே, கர்மவினை எல்லாம் ஒன்னும் இல்ல, இதை மனசுல பதிய வைச்சிக்கோ''

''அதெல்லாம் இல்ல முருகேசு, கர்மவினை தான்''

''எல்லாம் என் கர்மவினை''

''என்ன சொன்ன, என்ன சொன்ன''

''வாய் தவறி வந்து விழுந்த வார்த்தை அது''

எனது கைகளை அவளது கன்னங்களில் ஒட்டிக்கொண்டவள் கலகலவென சிரித்தாள். முருகேசு முருகேசு என சிரித்தாள். அவளது சிரிப்பிற்கான காரணங்கள் என்னவென முழித்தேன்.

''தானா தவறியதா?''

அவளது அந்த கேள்வியில் நிலைகுலைந்து போனேன். அப்போது என்னை காப்பது போல காயத்ரியின் அக்கா எங்களை நோக்கி வந்தார். எனது கைகள் விடுபட்டு இருந்தது.

''நீங்க எப்ப அவரைப் பார்க்கப் போறீங்க''

''இன்னும் அரைமணி நேரத்தில போலாம்னு இருக்கேன்''

''அவர்கிட்ட தகராறு பண்ண வேண்டாம். எனக்கு மனசுக்குப் பிடிக்கலை. மனசு தாங்காம அம்மாகிட்ட சொல்லிட்டேன்''

''ம்ம்''

நான் எதற்கு தகராறு பண்ண போகிறேன். ஒவ்வொருவரிடம் வம்பு பண்ணிக்கொண்டு இருப்பதுதான் என்னோட வேலையா? அந்த அவர் குறித்து காயத்ரியின் அக்காவிடம் எப்படி பழக்கம், எத்தனை நாள் பழக்கம் என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் தோணவில்லை. காயத்ரி அக்கா கொடுத்த முகவரியை சரிபார்த்து கொண்டேன்.

நான் கிளம்பியபோது காயத்ரி என்னுடன் வருவதாக சொன்னாள். நான் வேண்டாமே என்றே மறுத்தேன். ஆனால் அவள் செவிகொடுக்கும் நிலையில் இல்லை. நாங்கள் இருவருமாக சேர்ந்து அந்த அவரின்  முகவரியை அடைந்தோம். அந்த அவரின் பெயர் ரங்கநாதன்.

வீட்டினைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. சுற்று சுவர்கள் கட்டப்பட்டு, கம்பிக் கதவு எல்லாம் போடப்பட்டு இருந்தது. மலர்களின் வாசனை ரம்மியமாக இருந்தது. கதவினை திறந்து கொண்டு நடக்கும்போது மல்லிகையும், கனகாம்பரமும் வாசம் அதிகமாக தந்து கொண்டு இருந்தது. வாயிற்கதவு மணியை அழுத்தினேன். வாசலில் ஒரு பெண்மணி வந்து நின்றார். ரங்கநாதனின் அம்மாவாக இருக்க கூடும். எங்கள் இருவரையும் ஏற இறங்க பார்த்தார்.

''யார் வேணும்?''

''ரங்கநாதன் சாரைப் பார்க்கனும்''

''உள்ளே வாங்க''

நாங்கள் இருவரும் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டோம். உள்ளே சென்றவர் எங்களுக்காக பலகாரங்கள், பழச்சாறு எல்லாம் எடுத்து வந்தார். உலகில் சக மனிதர்களின் மீதான நம்பிக்கை உடையவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது. இந்த நம்பிக்கையினை பயன்படுத்தி மோசம் செய்பவர்களும் இருக்கிறார்களே என கூடவே மனம் நினைத்தது.

சில நிமிடங்களில் ஒரு அறையினில் இருந்து எனது வயது மதிக்கத்தக்க என்னை விட சற்று உயரமான உருவத்தில் வந்தது ரங்கநாதன் என்றே யூகித்து கொண்டேன்.

''உன்னைத்தான் பார்க்க வந்திருக்காங்க''

எங்களை நோக்கி வந்தவர் ஹலோ என கைகள் குலுக்கினார். காயத்ரியின் அக்காவின் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவரது அம்மா அருகினில் இருக்கும்போதே நேரடியாகவே கேட்டேன்.

''சார், காயத்ரியின் அக்கா பயப்படுறாங்க, நீங்க அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இன்னிக்கு தகராறு பண்ணினது ஏன் ?''

''என்னப்பா சொல்ற, என் பையன் தகராறு பண்ணினானா?

''உங்க பையன் கிட்ட கேளுங்கம்மா''

அடுத்து சில நிமிடங்கள் நடந்த உரையாடலில் நான் உறைந்து போனேன். காயத்ரியை போலவா, காயத்ரியின் அக்காவிற்கும் தன காதலன் மீது வெறுப்பு வந்து சேர வேண்டும். எல்லாம் கர்மவினை என தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

(தொடரும்)

Saturday 2 February 2013

விஸ்வரூபம்

கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் படத்தை பார்த்துவிட்டு இறுதி காட்சி முடிந்த பின்னர் ப்பூ என்றும், படம் மண்ணு போல இருக்கிறது என்றும் வாய் முணுமுணுத்தது. இருப்பினும் இது தமிழ் பட  உலகின் ஒரு புதிய அவதாரம். ஆப்கானிஸ்தானின் வறண்ட பிரதேச மலைகள் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. தமிழ் பட உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திட இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். மிகவும் சிரமமான இடங்களில் எல்லாம், அதுவும் போர் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்.

மிகவும் சிரமமான கதைக்கருவை மிகவும் நேர்த்தியாக கையாளத் தவறிவிட்டார் என்றே சொல்லலாம். முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள் என்று வாய்க்கு வாய் வெளியில் சொல்லியவர் அப்படி ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. ஒரு இந்து, அதுவும் ஆராய்ச்சியாளர், புற்று நோய் எனும் கொடிய நோயிற்கு கதிரியக்கம் மூலம் தீர்வு காண முயல்பவர்,  முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவியாக இருக்கிறார் என்பதில் இருந்து முஸ்லீம்கள் மட்டுமே தீவிரவாதிகள் அல்ல என்பது தெள்ளத் தெளிவு. மேலும் உலகில் நடைபெறும் தீவிரவாதம் அனைத்திற்கும் முஸ்லீம்கள் பொறுப்பல்ல என்பது மிகவும் கண்கூடு. எதற்கும் உதாரணத்திற்கு அமெரிக்க தீவிரவாதம் படித்து பாருங்கள்.

வானம் என்ற ஒரு திரைப்படம். அதில் முஸ்லீம்கள் பெருமைப்படும் அளவிற்கு காட்சி அமைப்புகள் இருந்தது. ஒரு முஸ்லீம் சமூகம் எப்படி தீவிரவாத சமூகமாக பார்க்கப்படுகிறது என்றும் அதே வேளையில் ஒரு முஸ்லீம் எப்படி உதவுகிறார் என்றும் காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த திரைப்படம் இந்த அளவிற்கு காசில்லாத விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. எவரும் அந்த படத்தில் காட்டப்படும் தீவிரவாதம் குறித்து அதிக அளவில் கேள்வி எழுப்பவில்லை.

இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சிறு வயதில் தீபாவளி சமயத்தில் துப்பாக்கி வெடி வெடித்த நியாபகம் வந்து தொலைந்தது. திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம் நினைவில் வந்து போனது. எப்போதுமே ஒரு சமூகம் அமைதியில் மட்டுமே திளைத்திருக்க விரும்பும். இயக்குனரின் இறைமறுப்பு எண்ணம் ஆங்காங்கே தென்படுகிறது. இந்து மதத்தையும் விட்டுவைக்கவில்லை. விநாயகரை கடலில் கரைப்பது போன்ற விசயங்கள் சிரிப்பலைகள் எழுப்பின எனலாம். இந்துக்கள் சிரித்துக்கொண்டு போய்விடுவார்கள், ஏனெனில் இந்து சமயம் ஒரு அழுத்தத்தில் இருந்து புறப்படவில்லை. அது மனதில் இருந்து கிளம்பிய ஒன்று. பகவத் கீதை எல்லாம் இந்துக்களின் புனித நூல் அல்ல.

அப்படியெனில் முஸ்லீம் சமூகம்! முகம்மது நபிகளின் வரலாறுதனை புரட்டிப் பார்த்தால் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சி எத்தகைய போராட்டத்தில் இருந்து தொடங்கியது என்பதை கண்கூடாக காணலாம். ஒரு குரான் மட்டும் இல்லையெனில் இந்த முஸ்லீம் எனும் மதம் இல்லாது ஒழிந்து போயிருக்கும் நிலைதான் அன்று இருந்தது. எப்படியெல்லாம் குரான் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை மற்றொரு நேரத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இயக்குனரின் இறைமறுப்பு கொள்கைக்கு மதிப்பு தரும் வகையில் டாகின்ஸ் எனப்படும் இறைமறுப்பாளர் பெயரை ஒரு கதாபாத்திரத்திற்கு சூட்டி பெருமைப்பட்டு கொள்கிறார். நான் சிறுமைப்பட்டு கொண்டேன்.

'டர்டி பாம்' எனப்படும் கதிரியக்க ஐசோடோப்களின் மூலம் உருவாக்கப்படும் குண்டுகளினால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இது அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகமான அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் இல்லை. மேலும் இது போன்ற விசயங்களால் நேரடி பாதிப்பு குறைவுதான், ஆனால் மக்களில் ஏற்படும் பய உணர்வு மிகவும் அபாயகரமானது. மனதளவில் பெரும் பாதிப்பினை இதுபோன்ற கதிரியக்க குண்டுகள் ஏற்படுத்திவிடும் என்றே கருதப்படுகிறது. பெரும்பாலும் சீசியம் எனும் உலோகத்தின் ஐசோடோப்கள் பயன்படுத்தபடுகிறது. இந்த சீசியம் பற்றியும் கதிரியக்க விளைவுகள் பற்றியும் மற்றொரு முறை பார்க்கலாம். செர்னபில் அணு உலை வெடிப்பின் போது இந்த சீசியமே அதிக அளவில் வெளிப்பட்டதாக தகவல் இருக்கிறது.

அப்படிப்பட்ட கதிரியக்க விளைவைத்தான் இந்த திரைப்படம் ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் இஸ்லாமிய அமைப்புகளின் மனதில் குறிப்பாக தமிழகத்தில் வந்து சேர்ந்து இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகம்மது ஓமர் பற்றி பெயர் குறிப்பிட்டதோடு பல காட்சிகள் அதீத கற்பனைகளுக்கு உட்பட்டவைதான். அவருடைய அமெரிக்க வெறுப்பு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. ஆப்கானிஸ்தான் ஒரு போர் நிலமாகவே திகழ்ந்து வந்து இருக்கிறது. இதையெல்லாம் படத்தில் ஒரு சில வரிகளில் ஒரு மூதாட்டியின் சொல்லில் இருந்து முடித்து கொள்கிறார்கள். தலிபான் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருந்தவரை தான் பெண்கள் ஒடுக்குமுறை எல்லாம் இருந்தது எனலாம். தலிபான் இயக்கம், ஷ்ரியா விதிகள் எல்லாம் ஒரு சமூகம் தனக்கு விதித்து கொள்ளும் கட்டுபாடுகள். இதைத்தான் குரானும் செய்கிறது. தனது சமூகத்தை தன்னுள் ஒரு கட்டுப்பாட்டினை கொண்டு வரச் செய்ய அது மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றே இருக்கிறது. இல்லையெனில் க்வரைசி எனும் குழுக்களில் இருந்து முஸ்லீம் முன்னேறி இருக்குமா என்பது கேள்விக்குறியே!

வாமன அவதாரம் மகாபலிக்காக! கிருஷ்ண அவதாரம் கம்சனுக்காக பின்னர் பாண்டவருக்கு உதவிட. இதில் விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து இருப்பார் அதிலும் குறிப்பாக கிருஷ்ண அவதாரத்தில். சகோதர போராட்டத்தில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் அது. விஸ்வரூபம் எல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. போர் நடந்தே ஆனது.

ஆனால் இந்த நிழல் விஸ்வரூபம், குரானை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்து இருக்கிறது, தமிழகத்தில் மட்டும்! 

Friday 1 February 2013

லைப் ஆஃப் பை - வாழ்வியல் விசித்திரம்

கிறிஸ்துமஸ் கால விடுமுறையில் எங்குமே செல்ல இயலாத சூழல். லண்டன் நகரிலேயே பொழுது கழிந்தது. பனி விழும் என எதிர்பார்த்து பனி விழவே இல்லை. அதற்கு பின்னர் இந்த ஜனவரி மாதம் பனி விழுந்தது வேறு கதை.

கிறிஸ்துமஸ் முன்னர் ஒரு படம் பார்க்கலாம் என சென்றோம். படத்தின் பெயர் லைப் ஆப் பை என முடிவு எடுத்தோம். படம் பற்றிய கதை என எதுவும் அறிந்திருக்கவில்லை. சில பாகங்கள் பாண்டிச்சேரியில் எடுத்து இருக்கிறார்கள் என கேள்விபட்டதுடன் சரி. முப்பரிமாணத்தில் பார்க்கலாம் என முடிவு எடுத்து சென்றது நன்றாகவே இருந்தது.

முதலில் படம் ஆரம்பித்த போது ஒரு பாடல். அதுவும் தமிழில். கண்ணே கண்மணியே! நான் பொதுவாக படங்களில் பாடலை கொஞ்சம் கூட விரும்புவதில்லை. கதையின் போக்கினை பாடல்கள் சிதைக்கின்றன என்றே கருதுவேன். ஆனால் முதன் முதலில் தொடங்கிய பாடல், அதை காட்சி அமைத்த விதம் என ஒரு அந்த பாடல் முடியும் வரை பிரமிப்பாக இருந்தது. இத்தனை தத்ரூபமாக காட்சி எவரேனும் அமைத்து இருப்பார்களா என அந்த பாடல் முடியும் வரை நினைத்து கொண்டே இருக்க செய்தது. தமிழ் கண்டு மனம் மிகவும் பூரிப்பு அடைந்தது.

இந்த படத்தின் கதை என பாண்டிச்சேரியில் தொடங்கி அதற்கடுத்து கடலிலேயே பல காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் அயர்ச்சி ஏற்பட்டது உண்டு. கதை வேகமாக நகராதா என எண்ணம் வந்து சென்றது.

அதுவும் படத்தில் ஒரு இயற்கை காட்சி, அதுவும் இரவில் ஒளிரும் தாவரங்கள் என காட்டிய இடம் பிரமிக்க வைத்தது. இந்த இடம் உண்மையிலேயே இருக்கிறதா என ஏக்கம் கொள்ள வைத்துவிட்டது. அத்தனையும் தாண்டி படத்தின் இறுதி காட்சி வாழ்க்கையின் பெரிய அனுபவத்தைச் சொல்லி சென்றது. படம் முடிந்து வெளிவருகையில் உணர்வுப்பூர்வமான படம் என்று சிலர் கண்களை கசக்கி கொண்டிருந்தார்கள். சிலர் இருக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல் அமர்ந்து கொண்டிருந்தார்கள். மிகவும் உணர்வுப்பூர்வமான படம் என்று வயதான இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் அந்த படத்தின் கடைசி காட்சியில் பிரமித்து போனேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனம் புரியாத ஒரு இறுக்கம் மனதில் எட்டிப் பார்த்தது.

பன்னிரண்டு சிறுவனுடனும், பத்து வயது சிறுமியுடன் படம் பார்த்தோம்.  படம் எப்படி என்று அவர்களிடம் கேட்டேன். இட்ஸ் ஓகே என்றார்கள். படத்தின் அர்த்தம் புரிகிறதா என்றேன். புரியவில்லை என்றார்கள் வாழ்வியல் தத்துவம் சொன்ன திரைப்படம் இது என புலி பற்றிய கதாநாயகனின் எண்ணவோட்டத்தை விளக்கினேன். விளங்கியது போன்றே தலையாட்டினார்கள். கடைசியில் கதாநாயகன் சொன்ன விசயம் வாழ்வியலில் விசித்திரம்.

எனது வாழ்வில் எத்தனையோ திரைப்படங்களை பார்த்தது உண்டு. ஆனால் எப்படி இந்த படத்தில்  முதல் பாட்டு ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்கியதோ அதைப்போல இறுதி காட்சியும்  பிரமிப்பை உருவாக்கியது.

இந்த படம் ஒரு புத்தகத்தின் தழுவல் என தெரிந்து அந்த புத்தகம் பற்றி தெரிந்து கொண்டபோது கிட்டத்தட்ட ஐந்து புத்தக நிறுவனங்கள் அந்த புத்தகத்தை வெளியிட மறுத்துவிட்டன. அதன் பின்னர் அந்த புத்தகம் வெளிவந்து சிறந்த பரிசும் பெற்றுவிட்டது. எனது அக்கா மகன் இந்த புத்தகத்தை முன்னரே படித்து இருந்ததாக சொன்னான். நீ எல்லாம் நாவல் ஆசிரியர், முதலில் இது போன்ற புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் பட்டேன். வாசிப்பு அனுபவம் மிக மிக குறைவுதான்.

இது போன்ற கதைகள் நான் இந்தியாவில் இருந்தபோது நிறையவே கேள்விபட்டது உண்டு. அத்தனை நம்பிக்கைக்கு உரிய கதைகள் அவை. இந்த படத்தில் கேட்கப்படும், இது எதற்காக நடந்தது, எனக்கு மட்டும் எப்படி நடந்தது போன்றே பல விசயங்கள் பகிரப்படுபவை.

சிறு வயதில் கேட்ட ஒரு கதை என்னை இன்னமும் பிரமிப்பில் வைக்கும்.

சந்தோசமாக இருந்த போது
நான்கு கால் தடங்கள் இருந்தது
இரண்டு உன்னுடையது
மற்ற இரண்டு இறைவனோடது

துன்பமாக இருந்தபோது
இரண்டு கால் தடங்களே இருந்தன.
இரண்டு இறைவனோடது

அப்படியெனில் நான் எங்கே?
உன்னை இறைவன் தூக்கி கொண்டு நடந்தான்!

இதுதான் அந்த கதை. இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகிறர்கள. எனக்கு இது மிக மிக பிடித்து போனது.

ஒரு நிகழ்வு - அதில் இரண்டு கதைகள்.

இந்த உலகம் உருவானது குறித்து கூட உண்டு.

இறைவன் உருவாக்கிய உலகம். இதில் நம்புமாறு எந்த ஒரு விளக்கங்களும் இல்லை. ஆனால் சுவராஸ்யமாக இருக்கும். இருப்பினும் பைபிள், குரான், பகவத் கீதை என எல்லாம் தோற்று போவது போலவே தோற்றம் அளிக்கின்றன.

பெருவெடிப்பில் உருவாக்கிய உலகம். இதில் காஸ்மிக் கதிர்கள், ரெட் ஷிப்ட் என பல விசயங்கள் உண்டு.

இந்த இரண்டில் எது உண்மை என கேட்டால் ஏழு பில்லியன் மக்களில் பலரும் இன்னமும் இன்ஷா அல்லா என்றும், இயேசுவே பரம பிதாவே என்றும், நமோ நாராயணா என்றும் ஓம் நமசிவாயா என்றும் இறைவன் உருவாக்கிய உலகம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

லைப் ஆப் பை - இறைவன் பெருமை சொல்லும் மாபெரும் காவியம்.

இப்படி ஒரு நல்ல படத்தை பார்த்த கண்கள் மற்றொரு படம் பற்றியும் நாளை எழுதும். அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் என்ன!