Monday 4 February 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12

முன் பகுதி 

கோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்த காயத்ரியின் கண்களை நான் உற்று நோக்கினேன்.  அம்மாவும், காயத்ரியின் அக்காவும் வேறு வேலைகள் செய்ய சென்றார்கள். காயத்ரி என்னை நோக்கி கேட்டாள்.

''என்ன அப்படி பார்க்கிற''

''நீதான என்னை முறைச்சிப் பார்க்கிற''

 ''உனக்கு பெண்கள் மேல மட்டு மரியாதையே இல்லையா?''

அவள் அப்படி கேட்பாள் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. இருந்தாலும் சுதாரித்து கொண்டேன்.

''நீ அப்படி என்னத்தை கண்ட?''

''தூசி துகள் ஈர் பேன் பெருமாள் அப்படின்னு சொல்ற''

''உள்ளதைத்தான் சொன்னேன், இந்த பேரண்டம் தோன்றியதற்கு காரணமே தூசிதானே''

எனது பதில் அவளிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவளது முகத்தில் சிறு மாற்றம் கண்டேன். சட்டென முகத்தைத் திருப்பி கொண்டாள்.

''பாரு காயூ, இந்த பேரண்டம் தூசியினால் மட்டுமே உருவாக்கப்பட்டது, அப்படி இந்த பேரண்டம் உருவாக உதவியாக இருந்த தூசினை மாசு படுத்திவிட்டார்கள். தூசு என்றால் மாசு என்றே பொருள் ஆனது. அதனால் தான் எதையாவது குறைத்து மதிப்பிட வேண்டுமெனில் என் கால் தூசிக்கு சமம் என பேசுவார்கள். புரிந்து கொள்''

நான் காயூ என காயத்ரியை முதன் முதலில் அப்போதுதான் அவ்வாறு அழைத்தேன். காயூ என்பது கூட நன்றகாத்தான் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

''என்னை எப்படி கூப்பிட்ட?''

''காயூ''

அவளிடம் இருந்த கோபம் சட்டென மறைந்தது. புன்னகை பூத்தாள்.

''ம்ம் ரொம்ப நல்லாருக்கு''

''எது தூசு பத்திய விசயமா?''

''காயூனு என்னை கூப்பிடுறது''

''தூசு பத்தி என்ன நினைக்கிற?''

''நீ ஒரு லூசுனு நினைக்கிறேன்''

''எப்பவும் அப்படித்தானே என்னை நினைக்கிற, எதுவும் புதுசா சொல்லு''

''நான் பெருமாளை நம்புறவ, நீ தூசியை நம்புறவன், இருந்தாலும் உன்னை நானும், என்னை நீயும் நேசிக்கிறது அபூர்வம் தான்''

அவள் அப்படி சொன்னபோது எனக்குள் ஒருவித சலனம் உருவானது. இவள் இறைபக்தி உடையவளாக இருக்கலாம், இருந்துவிட்டு போகலாம். அதற்காக என்னை இறைபக்தி இல்லாதவன் என்று எப்படி முடிவுக்கு வந்தாள். ஒரே மாதிரி உணர்வு உள்ளவர்கள் மட்டுமே காதலித்தல் சாத்தியமா? கர்மவினை என்றாள், இப்போது அபூர்வ விசயம் என்கிறாள், என்னதான் இவளின் மனதில் எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றே எண்ணத் தொடங்கினேன்.

''காயூ, நீ என்னதான் சொல்ல வர, நாம நேசிக்கிறது எல்லாம் கர்மவினைனு சொல்றியா?''

''அப்படித்தான் வச்சிக்கோயேன்''

''அப்படித்தான் வச்சிக்கிறதுனா, என்ன அர்த்தம்?''

''நாம பார்த்தது, பழகினது, என் அம்மா இறந்தது, எங்க அப்பா எங்களை விட்டு போனது அப்புறம் இப்படி உங்க வீட்டுல நாங்க இருக்கிறது, எல்லாமே''

காயத்ரி இப்படி பேசுவாள் என்று நான் சற்று கூட  எதிர்பார்க்கவே இல்லை. அவள் பேசியதில் உறுதி தெரிந்தது. தாயின் மரணம், தந்தையின் செயல்பாடுகள் அவளுக்குள் வாழ்வினைப் பற்றிய விரக்தியை ஏற்படுத்தி இருக்க வேண்டும், அவளது தந்தையின் மீதான ஏமாற்றம் என் மீதும் வந்து தொலைந்து இருக்க வேண்டும் என்றே என் மனம் நினைத்தது. காயத்ரியின் கைகளைப் பிடித்தேன். தொடுதல் உணர்வில் எனது எண்ணம் அவளுக்குள் சென்று தொலைய வேண்டும் என்கிற ஒரு நட்பாசை.

''காயூ, இந்த பூமியில் வாழுற வரைக்கும் உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டேன். நீ உன் அப்பா மேல இருக்கிற கோவத்தை என் மேல காட்டாதே, கர்மவினை எல்லாம் ஒன்னும் இல்ல, இதை மனசுல பதிய வைச்சிக்கோ''

''அதெல்லாம் இல்ல முருகேசு, கர்மவினை தான்''

''எல்லாம் என் கர்மவினை''

''என்ன சொன்ன, என்ன சொன்ன''

''வாய் தவறி வந்து விழுந்த வார்த்தை அது''

எனது கைகளை அவளது கன்னங்களில் ஒட்டிக்கொண்டவள் கலகலவென சிரித்தாள். முருகேசு முருகேசு என சிரித்தாள். அவளது சிரிப்பிற்கான காரணங்கள் என்னவென முழித்தேன்.

''தானா தவறியதா?''

அவளது அந்த கேள்வியில் நிலைகுலைந்து போனேன். அப்போது என்னை காப்பது போல காயத்ரியின் அக்கா எங்களை நோக்கி வந்தார். எனது கைகள் விடுபட்டு இருந்தது.

''நீங்க எப்ப அவரைப் பார்க்கப் போறீங்க''

''இன்னும் அரைமணி நேரத்தில போலாம்னு இருக்கேன்''

''அவர்கிட்ட தகராறு பண்ண வேண்டாம். எனக்கு மனசுக்குப் பிடிக்கலை. மனசு தாங்காம அம்மாகிட்ட சொல்லிட்டேன்''

''ம்ம்''

நான் எதற்கு தகராறு பண்ண போகிறேன். ஒவ்வொருவரிடம் வம்பு பண்ணிக்கொண்டு இருப்பதுதான் என்னோட வேலையா? அந்த அவர் குறித்து காயத்ரியின் அக்காவிடம் எப்படி பழக்கம், எத்தனை நாள் பழக்கம் என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் தோணவில்லை. காயத்ரி அக்கா கொடுத்த முகவரியை சரிபார்த்து கொண்டேன்.

நான் கிளம்பியபோது காயத்ரி என்னுடன் வருவதாக சொன்னாள். நான் வேண்டாமே என்றே மறுத்தேன். ஆனால் அவள் செவிகொடுக்கும் நிலையில் இல்லை. நாங்கள் இருவருமாக சேர்ந்து அந்த அவரின்  முகவரியை அடைந்தோம். அந்த அவரின் பெயர் ரங்கநாதன்.

வீட்டினைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. சுற்று சுவர்கள் கட்டப்பட்டு, கம்பிக் கதவு எல்லாம் போடப்பட்டு இருந்தது. மலர்களின் வாசனை ரம்மியமாக இருந்தது. கதவினை திறந்து கொண்டு நடக்கும்போது மல்லிகையும், கனகாம்பரமும் வாசம் அதிகமாக தந்து கொண்டு இருந்தது. வாயிற்கதவு மணியை அழுத்தினேன். வாசலில் ஒரு பெண்மணி வந்து நின்றார். ரங்கநாதனின் அம்மாவாக இருக்க கூடும். எங்கள் இருவரையும் ஏற இறங்க பார்த்தார்.

''யார் வேணும்?''

''ரங்கநாதன் சாரைப் பார்க்கனும்''

''உள்ளே வாங்க''

நாங்கள் இருவரும் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டோம். உள்ளே சென்றவர் எங்களுக்காக பலகாரங்கள், பழச்சாறு எல்லாம் எடுத்து வந்தார். உலகில் சக மனிதர்களின் மீதான நம்பிக்கை உடையவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது. இந்த நம்பிக்கையினை பயன்படுத்தி மோசம் செய்பவர்களும் இருக்கிறார்களே என கூடவே மனம் நினைத்தது.

சில நிமிடங்களில் ஒரு அறையினில் இருந்து எனது வயது மதிக்கத்தக்க என்னை விட சற்று உயரமான உருவத்தில் வந்தது ரங்கநாதன் என்றே யூகித்து கொண்டேன்.

''உன்னைத்தான் பார்க்க வந்திருக்காங்க''

எங்களை நோக்கி வந்தவர் ஹலோ என கைகள் குலுக்கினார். காயத்ரியின் அக்காவின் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவரது அம்மா அருகினில் இருக்கும்போதே நேரடியாகவே கேட்டேன்.

''சார், காயத்ரியின் அக்கா பயப்படுறாங்க, நீங்க அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இன்னிக்கு தகராறு பண்ணினது ஏன் ?''

''என்னப்பா சொல்ற, என் பையன் தகராறு பண்ணினானா?

''உங்க பையன் கிட்ட கேளுங்கம்மா''

அடுத்து சில நிமிடங்கள் நடந்த உரையாடலில் நான் உறைந்து போனேன். காயத்ரியை போலவா, காயத்ரியின் அக்காவிற்கும் தன காதலன் மீது வெறுப்பு வந்து சேர வேண்டும். எல்லாம் கர்மவினை என தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

(தொடரும்)

No comments: