Monday 27 February 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 4

பகுதி - 3 

திருமூலர் கதையை பற்றி அறிந்ததும் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றே மனம் சொல்லி அமைதி கொண்டது. பேய் பிடித்து அதை விரட்ட சொல்லி எங்கள் ஊருக்கு முனியாண்டி என்ற ஒரு பூசாரியிடம் வந்த பலரின் கதையை கேட்டதுண்டு. ஒவ்வொருவரும் ஒரு விதமாகவே சொன்னார்கள். அந்த அம்மா, அந்த பொண்ணு போலவே பேசினாங்க. என்ன நடந்த்துச்சினு, எப்படி நடந்துச்சுன்னு சொன்னாங்க என்றெல்லாம் சொன்னதை கேட்டதும் மனதில் ஆச்சர்யம் பொங்கி வழிந்தது. ஆனால் இதுவரை எதையும் சோதனை செய்தது இல்லை. 

நான் உறங்கி கொண்டிருக்க, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஆவியை வைத்து விளையாடிய கல்லூரி நண்பர்கள் சொன்ன கதை பலிக்காமல் போனது கண்டு புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்தது. 

திருமூலரின் கதை சுருக்கத்தை மீண்டும் பார்க்கலாம். 

திருமூலர் சுந்தரநாதா எனும் இயற்பெயர் கொண்டவர். இவர் வாழ்ந்த காலம்  எட்டாம் நூற்றாண்டு அல்லது பதினோராம் நூற்றாண்டு என்றே கருதபடுகிறது. அதுவும் இவர் எழுதிய திருமந்திரம் மூலமே இவரது காலம் கணிக்கப்படுகிறது. அதாவது எப்போது வாழ்ந்தார், எப்படி வாழ்ந்தார் என்கிற ஒரு விபரங்கள் கிடைக்காத படச்சத்தில் இவரைப் பற்றிய ஒரு விசயம் பரவலாகப் பேசப்படுவது ஆச்சர்யமே. அதாவது இவர் கூடு விட்டு கூடு பாயும் கலையை கற்று கொண்டவராக சொல்லப்படுகிறது. இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும், அறுபத்தி மூன்று நாயன்மார்களிலும் ஒருவராகவும் போற்றப்படுகிறார். 

இவர் இமாலய மலைப்பகுதிகளில் தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது. இமாலய மலைப்பகுதிகளில் தோன்றிய இவர் தென்னிந்தியாவிற்கு வந்து அதுவும் தமிழில் மூவாயிரத்திற்கும் மேலாக பாடல்கள் இயற்றி இருப்பது  பெருமைக்குரியது. பொதுவாகவே இந்த சித்தர்கள், முனிவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் போலவே இடம் விட்டு இடம் செல்லுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மனிதர்கள் வணிகம் செய்ய செல்வார்கள், இவர்கள் எதற்கு இப்படி இடம் பெயன்றார்கள்? 

இவர் பொதிகை மலையில் இருந்த தனது நண்பர் அகஸ்தியரை  காணவே கைலாய மலைகளில் இருந்து கிளம்பினாராம். அன்றைய காலத்தில் தொலைபேசி இல்லை, கடித போக்குவரத்து புறா மூலம் இருந்து இருக்கலாம். இதை எல்லாம் உபயோகிக்காமல் நேரடியாக அகஸ்தியரை காண திருமூலர் கிளம்பிவிட்டார். அப்படி வரும்போது சாத்தனூர் எனும் ஊருக்கு அருகில் பசுக்கள் எல்லாம் இறந்து போன ஒரு மனித உயிரை சுற்றி அழுது கொண்டிருந்தனவாம். அந்த மனிதர் மூலன், அந்த மாடுகளை தினமும் மேய்ப்பவன். இப்படி மாடுகள் அழுவதை கண்டு இரக்கப்பட்ட திருமூலர், தான் ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவு செய்தார். தனது உடலை ஒரு மரக்கட்டையில் பத்திரப்படுத்திவிட்டு இந்த மூலன் உடலில் தான் உட்புகுந்தார். அந்த மாடுகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. அந்த மாடுகளை எல்லாம் வீட்டில் பத்திரமாக சேர்த்துவிட்டு தனது உடலை பார்க்க வந்த திருமூலர் உடல் காணாமல் போனது கண்டு கலக்கமுற்றார். இப்போது மாடுகள் திருமூலருக்கு வழிகாட்டியதா? அல்லது மூலனின் உடலில் நுழைந்ததால் எல்லா விசயங்களும் திருமூலருக்கு நினைவுக்கு வந்ததா? இப்போது தான் மூலன் இல்லை என்கிற ஒரு உணர்வு திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும், அதே வேளையில் மூலன் என்பவனின் எண்ணங்களும் திருமூலருக்கு இருந்து இருக்க வேண்டும். எது சரி? 

அந்த மூலனின் உடலில் இருந்து கொண்டே பல பாடல்கள் இயற்றியமையால் திருமூலர் எனும் பெயர் அடைந்தார் என்கிறது வரலாறு. இப்போது இந்த பாடலை எழுதியது மூலன் என்பவனா? அல்லது மூலனின் உடலில் உட்புகுந்த சுந்தரநாதா எனும் திருமூலரா? மூலனின் உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் சிந்தனையை உருவாக்கியது திருமூலரின் ஆன்மாவா? அல்லது மூலனின் சிந்தனைகளா? 

சுந்தரநாதா என இருந்தவரை எந்த ஒரு பாடலும் இயற்றியதாக வரலாறு இல்லை. அதுவும் சுந்தரநாதா என இருந்தபோது என்ன மொழி இவர் அறிந்து இருந்தார் என்பதற்கான ஆதாரங்களும் கிடையாது. மூலன் தமிழன். தமிழில் பாடல் இயற்றிய திருமூலர் இதை எங்கேனும் சொல்லி இருக்கிறாரா என பாடல் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறேன். 

எதற்கு திருமூலர் கதை? எழுதியவரே இப்படி எல்லாம் எழும் கேள்விகள் என ஆங்காங்கே பதில்கள் எழுதி வைத்து இருக்கிறார். அதே வேளையில் நரம்பு மண்டலத்தை அலசி பார்க்க இதுதான் ஒரு சிறந்த வழியாக தெரிகிறது. பரிணாமம், கடவுள் என்றெல்லாம் பேசி பேசி மொத்த நரம்பு மண்டலத்தை சிதைத்து கொண்டிருக்கிறோமோ என்னவோ! 

நரம்புகள் பற்றிய பார்வை மூலம் எப்படி ஒருவர் முக்காலமும் அறிந்தவராக மாற முடியுமா என்பதை காணலாம். இந்த நரம்பு மண்டலம் தான் சிந்தனைகளை தூண்டுகின்றனவா? நமது மூளைக்கும், விலங்குகளின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? இந்த மூளையை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் பகுதி என ராமச்சந்திரன் என்பவர் மூளையில் ஒரு இடத்தை கண்டுபிடித்ததாக நுனிப்புல் நாவலில் எழுதி வைத்தேன். அதாவது கடவுள் பற்றாளர்கள் மத, கடவுள் எண்ணம் எழும்போது மூளையில் ஒரு பகுதி அதிக அளவில் செயல்படுவதாகவும், அதே வேளையில் கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு மூளையில் அந்த பகுதி செயல்படுவதில்லை எனவும் சொல்லி இருப்பது விவாதத்திற்கு உரியது என்றாலும் ஒன்றை ஒன்றுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதுதான் அறிவியலில் உள்ள வேலை. 

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றும் இல்லை
அவனன்றி ஊர்புகு மாற்றி யேனே (6 )

மேற்குறிப்பிட்டபடி திருமூலர் வரலாறு என்றே திருமூலரே பல பாடல்களில் எழுதி இருக்கிறார். அதில் ஒரு பாடலில் இப்படி எழுதி இருக்கிறார். 

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது 
முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர் 
என்னைநன் றாக இறைவன் படைத்தனன் 
தன்னைநன் றாக தமிழ்ச்செய்யு மாறே (80 )

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே  சதாசிவ னாயினேன் 
நந்தி அருளால்மெய்ஞ்  ஞானத்துள்  நண்ணினேன் 
நந்தி அருளால் நானி ருந்தேனே (92 )

இந்த பாடலில் திருமூலர் ஒரு ரகசியத்தை எழுதி வைத்து இருக்கிறார். மூலனை நாடிப்பின் சதாசிவ னாயினேன். 

அதிலும் ஒரு சிறப்பு. 

சுந்தரனாதன் எழுதியது என்று திருமூலர் சொல்லவில்லை. 

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் 
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின் 
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே (99 )

யான் பெற்ற பெறுக இவ்வையகம் என்றே சொல்கிறார் திருமூலர். அதோடு மட்டுமில்லாமல் மூலனின் உடலில் உட்புகும் முன்னர் சிவனோடுதான் இருந்தேன் என்கிறார். சிவநாமங்கள் ஓதிக்கொண்டிருந்தேன். நந்தியின் இணையடிக்கீழ்  இருந்தேன் என்கிறார். 

விநாயகர் பற்றி துதி எழுதியது திருமூலர் இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுவது உண்டு. திருமூலருடன் சேர்ந்து  பல முனிவர்களை சந்திப்பதோடு நரம்பு மண்டலம் நோக்கிய பயணம் தொடரும்.  

Sunday 26 February 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - ஹிட்டிடேஸ்

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி, என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். இந்த வரிகள் உலகில் உள்ள பலருக்கும் பலவாறு பொருந்தும். சுடர்மிகு அறிவுடன் இருப்பவர்களே முட்டாள்தனமாக செயலாற்றும்போது அறிவற்று இருப்பவர்களின் நிலை குறித்து எதுவும் பேச வேண்டியதில்லை. எது சரி, எது தவறு என்பதில் காலமும், சூழலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என வரும்போது அங்கே எதுவுமே உறுதியாய் நிற்பதில்லை.

ஹிட்டிடேஸ் என்பவர்கள் இந்திய-ஐரோப்பா மொழி பேசும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போதைய துருக்கி நாடும், அன்றைய பெரும்பகுதியான அனடோலியா எனப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்கள். இந்த அனடோலியா எனும் பகுதியானது கடல்களால் சூழப்பட்டதாகும். வடக்கே  கருங்கடல். மேற்கே ஏகன் கடல். தெற்கே மெடிடேரியன் கடல். மற்றும் மலைகளால் சூழப்பட்ட இடமாகும்.



இவர்களின் கலாச்சாரமும், நாகரிகமும் மறந்து போன ஒரு வரலாறாகவே ஆகிப்போனது. மேசபோடோமியா நாகரிகத்தில் உட்பட்ட ஒரு பிரிவினர் இவர்கள் என்றே தெரிய வருகிறது. இந்த அன்டோலியா பல்வேறு நாகரிகங்களுக்கு அடித்தளமிட்ட ஒரு இடமாகும். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஆறாம் ஆண்டு, துருக்கியில் உள்ள ஒரு இடத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் எழுத்து மாத்திரைகள் இவர்களது வாழ்க்கை முறை, சட்ட திட்டங்கள் எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே இப்படியொரு நாகரிகம் இருந்தது என்பது தெரிய வந்தது. இவர்கள் மிகவும் தொன்மையான இந்திய-ஜெர்மானிய மொழி தெரிந்தவர்களாகவும், பல எழுத்து முறைகளை அறிந்தவர்களாகவும் இருந்து இருக்கிறார்கள். குறிப்பாக குநெய்பாரம் எனும் எழுத்து வடிவமாகும். சுமேரியன் காலத்தில் இந்த எழுத்து ஐயாயிரம் வருடங்கள் முன்னர் பயன்படுத்தபட்டவை. இவர்களின் மொழி நேசாலி என்றும் ஹட்டி என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் பற்றிய குறிப்பு பைபிளில் இருப்பதாக தெரிகிறது. அதனாலேயே இவர்கள் ஹிட்டிடேஸ் என அழைக்கப்படுகிறார்கள் என்கிறது வரலாறு.

இவர்களின் தோற்றம் மூவாயிரத்து எண்ணூறு வருடங்கள் முன்னர் என்றே அறியப்படுகிறது. இவர்கள் கிட்டத்தட்ட நானூறு வருடங்கள் போராடி பல பிரதேசங்களை தங்களின் ஆளுமைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். இவர்களின் காலம் வெண்கல காலம் ஆகும். அதற்கு பின்னர் இரும்பு காலத்தில் அடியெடுத்து வைத்தவர்களும் இவர்களே. இந்த இந்திய-ஐரோப்பா ஹிட்டிடேஸ் மக்கள் ஹட்டி எனும் ஒரு அரசமைப்பை அனடோலியாவில் இருந்த மக்களுடன் சேர்ந்து உருவாக்கியதாக குறிப்புகள் தென்படுகிறது. இவர்கள் வணிக வியாபாரம் செய்ய நகரங்களை உருவாக்கியபோது பக்கத்து பிரதேச மக்களுடன் சண்டை போட வேண்டி வந்ததால் ஹட்டுசா எனும் இவர்களின் நகரம் அழிக்கப்பட்டது. ஆனால் ஹட்டுசி எனும் அரசரால் அலெப்போ எனும் இடம் கைப்பற்றபட்டதும், ஹட்டுசா மீண்டும் அதி வேகத்துடன் உருவானது.

பின்னர் இவர்கள் சிரியா, லெபனான் போன்ற இடங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். லெபனான், சிரியா போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் போராட்டங்கள், வன்முறைகள், கொலைகள் எல்லாம் எதன் அடிப்படையில் என்பதை இப்போது ஆராய வேண்டியது இல்லை. அந்த காலத்தில் எதிர்ப்புகள் மற்றும் பஞ்சங்கள் ஏற்பட்டதால் தேலேபினு எனும் அரசர் ஒரு அரசியல் அமைப்பை கொண்டு வந்தார். தேலேபினு கொண்டு வந்த அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் கோவில் இடங்கள், ராணிகள் இடங்கள் எல்லாம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. சரியாக நடைமுரைபடுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் மரண தண்டனைகள், வாரிசு நடைமுறை எல்லாம் அழித்தார் தேலேபினு.

ஹிட்டிடேஸ் சூரியனை கடவுளாக கும்பிட்டு வந்தார்கள். அதே வேளையில் ஆயிரம் கடவுளர்களை கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். புதிய புதிய கடவுளர்களை அவர்கள் அறிமுகபடுத்தி கொண்டே வந்தார்கள். இவர்களின் கடவுள் கலாச்சாரம் பெருமளவுக்கு இன்றைய இந்திய நாகரிகங்களுக்கு சரியாகவே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஒரு கடவுள் என்கிற கோட்பாடு பெருமளவில் இருந்து இருக்கிறது. ஹிட்டி ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் சுப்பிழுலியுமா என்பவர். உள் நகரங்கள், வெளி நகரங்கள் என பிரித்ததோடு இல்லாமல், ஹட்டுசாவை மிகப்பெரிய தலைநகரமாக மாற்றினார். ஒரு காலகட்டத்தில் எகிப்து நகரமே இவர்களின் கட்டுபாட்டிற்கு வர வேண்டிய சூழலில் எகிப்துவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பெண் கேட்டு சென்ற ஹிட்டிடேஸ் இளவரசர் சுட்டு கொல்லப்பட்டதால் இவர்களுக்கு எந்த உறவும் இல்லாமல் போனது என்பதை விட உறவு சீரழிந்தது.

இதனால் எகிப்துவுக்கும் இந்த ஹட்டி நாட்டு பகுதிக்கும் வணிகத்தில் பெருமளவு சண்டை ஏற்பட தயாராக இருந்தது. வாழ்க்கையில் சீரழிய என்ன வேண்டும்? போர் தொடங்கியது. எகிப்து இளவரசர் ராம்செஸ் ஹிட்டிடேஸ் பகுதியை வென்றாலும் ஒரு கட்டத்தில் அவர் ஹட்டி அரசரால் கொல்லப்பட்டார். அதற்கு பின்னர் வந்த அரசர் அமைதி ஒப்பந்தம் தனை போட்டதால் இந்த இரண்டு ராஜ்ஜியங்களுக்கு இடையே நல்ல உறவு வளர்ந்தது. ஆனாலும் எல்கை அதிகரிப்பதில் ஹட்டி அரசர்கள் பின் வாங்கவில்லை. சைப்ரஸ் நாட்டினை வளைத்தார் துடாலியா. அங்கே பெருமளவு கோவில்கள் கட்டப்பட்டன.

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என்பதற்கேற்ப இவர்களின் ராஜ்ஜியத்தை அடக்க வந்தார்கள் வேறொரு மக்கள். அதே வேளையில் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடின. சரியாக மூவாயிரம் வருடங்கள் முன்னாள் மொத்த ஹட்டுசாவும் அழிக்கப்பட்டது, அவர்களின் நாகரிங்களும் தொலைந்து போனது. ஒரு அருமையான வாழ்க்கையை வாழ்ந்து ரசித்து இருக்க வேண்டிய அந்த ஹிட்டிடேஸ் மக்கள் எப்படி சீரழிந்ததற்கு நல்லுறவு பேணாமையே காரணம். அறிவுடன் இருக்க தெரியாதவர்கள் அழிவை நோக்கியே பயணிக்கிறார்கள்.

இந்த ஹிட்டுசாவை அழித்தவர்கள் யார்?

Friday 24 February 2012

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 13

பாதை 12 

13 . பகுப்பாய்வு முறைகள்

மிளகுதனில் இருந்து பைப்பெரின் எனும் மூலக்கூறினை பிரித்தெடுத்தாகிவிட்டது. அது பைப்பெரின் தானா என சரி செய்து கொள்ள வேறு சில செய்முறைகளை செய்தாகவேண்டிய சூழல். அவை அனைத்துமே ஒருவகையில் ஒளி, எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், காந்தபுலம் போன்ற விசயங்களின் மூலமே நடைபெறுகின்றன.

அப்போதுதான் ஆய்வகத்தில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு பொருளின் தனித்தன்மையை எந்த ஒரு ஆய்வும் முழுமையாக சொல்லிவிட இயலாது என்றே எழுதப்பட்டு இருந்தது. அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில் நாம் ஒரு பொருளை ஆய்வு செய்யும் பொது அதற்கான இலக்குகளை மட்டுமே வைத்து செயல்படுவது உண்டு.

ஒரு மூலக்கூறினை சரியா என அறிந்து கொள்ள பயன்பாட்டில் உள்ள எளிய முறைகள். முதலில் யு.வி. (அல்ட்ராவயலட்). அதற்கடுத்து எம்.எஸ் (மாஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி), அதற்கடுத்து ஐ.ஆர் (இன்ப்ரா ரெட்ஸ்பெக்ட்ரோஸ்கோபி) அதற்கடுத்து என்.எம்.ஆர் (ந்யுக்ளியர் மேக்னேடிக்  ஸ்பெக்ட்ரோஸ்கோபி). இப்படி ஒவ்வொரு நிலையிலும் அந்த மூலக்கூறு பகுத்தறியப்பட்டு இறுதியில் எல்லா ஸ்பெக்ட்ரம்களை ஆய்வு செய்து இதுதான் மூலக்கூறு என்று உறுதி செய்வதாகும். அப்படி இந்த முறைகளுக்கு உட்படுத்தபடாத மூலக்கூறின் வடிவமைப்பை கண்டு கொள்வது மிகவும் கடினமாகும். இதை எல்லாம் செய்தாலும், உண்மையிலேயே இந்த மூலக்கூறுதானா என்பதை இறுதியாக உறுதி செய்வது ஈ.எம் (எளிமெண்டல் அனலிசிஸ்). இந்த ஈ. எம் மூலம் அந்த மூலக்கூறில் உள்ள கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் சதவிகித அளவு கண்டுபிடிக்கப்படும். ஒரே மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டிருக்கும் ஒத்த மூலக்கூறுகள் இருந்தால் சற்று பிரச்சினைதான், எனினும் மற்ற ஆய்வுமுறைகள் மூலம் தெளிந்து கொள்ளலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களை நான் ஆய்வு மேற்கொள்ளும் முன்னர் செய்தது இல்லை. முதலில் எம்.எஸ் செய்ய வேண்டும் என மூலக்கூறினை எடுத்து கொண்டு வேறொரு இடத்தில் உள்ள ஆய்வகம் சென்றேன். அங்கே ஒரு படிவத்தை நிரப்பி கொடுத்துவிட்டு எனது மின்னஞ்சல் தர சொன்னார்கள். ஆய்வு செய்ததும் முடிவினை அனுப்பி வைக்கிறோம் என சொன்னதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. நான் கற்று கொள்ள என்ன இங்கே இருக்கிறது என நான் இந்த உபகரணத்தை இயக்கலாமா என அங்கே இருந்த பெரிய உபகரணத்தை சுட்டி காட்டினேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே இதோ இந்த மூலக்கூறினை இங்கே வைத்துவிட்டால் அதோ அங்கே இருக்கிற கணினியில் அரைமணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். இதை எங்கே பெரிதாக இயக்கப் போகிறாய் என்றார்.

மனிதர்களின் சிந்தனை, கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும் பெரிதும் ஆச்சர்யம் அடைய செய்பவை. ஒரு மூலக்கூறினை பகுதி பகுதியாக சிதைத்து அந்த மூலக்கூறின் நிறை எண்ணை கண்டு கொள்ளும் முறை தான் இந்த எம்.எஸ். இந்த எம். எஸ் மூலம் ஒரு மூலக்கூறின் நிறை எண்ணை துல்லியமாக சொல்லிவிடலாம், இருப்பினும் இந்த எம்.எஸ் மூலம் ஒரு மூலக்கூறு நூறு சதவிகிதம் தூய்மையானதா என்று மட்டும் கண்டுகொள்ள முடியாது.

அடுத்த பகுதியில் ஒவ்வொரு உபகரணம், அது எப்படி செயல்படுகிறது, எனது அனுபவங்கள் குறித்து பார்க்கலாம்.

எம்.எஸ். உபகரணம். நன்றி கூகிள்.


Wednesday 22 February 2012

ரீமேக், ரீமிக்ஸ் - சீரழிகிறதா சினிமாத்துறை

ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது அத்தனை சுலபமான வேலை அல்ல. அதே போல ஒரு எழுத்தை ரீமேக் செய்வதும் அத்தனை சுலபமான வேலை அல்ல. சிந்தனை மட்டுமே இங்கே அதிகம் வேலை செய்வதில்லை. மற்றபடி பார்த்து எழுதுவதற்கான புலமை, பார்த்ததை மீண்டும் அப்படியே செய்ய  கட்டாயம் திறமை வேண்டும்.

டப்பிங், ரீமேக் என்பதற்கு வேறுபாடு உண்டு. டப்பிங் படங்களில் வசனங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்படும். ரீமேக் படங்களில் மொத்த விசயங்களையும் மாற்றி செய்யலாம், ஆனால் மூலபடத்தினை ஒட்டியதாக அமையவேண்டும் எனும் நிர்பந்தனைகள் ரீமேக் படத்திற்கு உண்டு. இன்றைய தினத்தில் ரீமேக் படங்கள் மிகவும் அதிகம் தமிழ் சினிமாவில் எட்டி பார்த்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் 'பெரிய' நடிகர்கள் என சொல்லப்படுபவர்களே இந்த ரீமேக் கலாச்சாரத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

இவர்கள் ஆங்கிலப்படத்தை, இந்திப்படத்தை, தெலுங்கு படத்தை, மலையாள படத்தை ரீமேக் செய்வதோடு மட்டுமில்லாமல் பழைய தமிழ் படங்களை ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதைபோல தமிழ் படங்களும் வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எல்லா மொழிகளிலும் எடுத்து வெளியிடப்படும் திரைப்படங்கள் வெகு சில உண்டு. இப்படி ரீமேக் செய்வது இவர்களிடம் சிந்தனைகள் வற்றி போய்விட்டன என்பதையே காட்டுகிறது என சொல்வோர் உண்டு. 'அரைத்த மாவை அரைக்கும் மசாலா, காதல் கதைகள்' எல்லாமே ஒரு விதத்தில் ரீமேக் படம் தான் என்பதை இந்த இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் உணர்வது இல்லை.

ரீமேக் படங்கள் எல்லாமே வெற்றி பெற்றவையா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒரு மொழியில் உள்ள ரசனை மற்ற மொழியில் இருப்பது இல்லை. பொதுவாக மலையாள படங்களை தமிழில் அப்படியே ரீமேக் செய்தால் ஒரு படம் கூட ஓடாது என உறுதியாக சொல்லலாம். மலையாளத்தில் வெளியான சிறந்த படங்களை தமிழுக்கு என்றே மசாலா தடவி விற்றால் தான் வெற்றி பெறும் நிலைதான் தற்போது நிலவி வருகிறது.

ரீமிக்ஸ் பாடல்கள் அதைவிட மிகவும் கொடுமை என்போர் சிலர். மூல பாடலின் ஜீவனை ஒட்டு மொத்தமாக கொன்றுபோடும் அளவிற்கு 'டன் டன்' என இந்த காலத்து இசைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு அவை வலம் வந்து கொண்டிருக்கின்றன. தெய்வீக பாடல்கள் முதற்கொண்டு எல்லாமே இன்று ரீமிக்சியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் வெகுவாக ஜனங்களால் ரசிக்கப்படுவது என்பது ஓரளவுக்கு உண்மைதான். பாரதியார் கவிதைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி பாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தனித்தன்மை என்பதை பொறுத்தே ஒருவரின் திறமை பெரிதளவு பேசப்படுகிறது. தனக்கென ஒரு அடையாளத்தை காட்டாத எவருமே உலகில் பெரிதாக சாதித்தது இல்லை. ஒரிஜினாலிட்டி, நாவல்டி என சொல்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் எல்லா துறைகளுமே கிட்டத்தட்ட மூட்டை கட்டி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. எதற்கு கிடந்து மெனக்கெடுவானேன். சிம்பிளா ஒரு விசயத்தை செய்றதை விட்டுட்டு எதுக்கு காம்ப்ளிகேட் பண்ணனும் என்றே பலரும் நினைக்கிறார்கள். உடனடி வெற்றிதான் இப்போதைய இலக்கு. உடனடி வெற்றி உடனடியாக மறைந்து போய்விடுகிறது, அது காலத்திற்கும் நிற்பது இல்லை.

அதைப்போலவே வலைப்பூக்கள் எழுதும் பலரிடம் ஒரிஜினாலிட்டி இருப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நிலவி வருவது தவிர்க்க இயலாதது. அவசர உலகில் நின்று நிதானமாக எழுதும் நிலை எல்லாம் வெகு குறைவானவர்களிடமே இருக்கிறது என்கிற ஒரு கருத்து நிலவி வருகிறது.

நாவல்கள், கவிதைகள், உபநிடதங்கள், வேதங்கள் என முன்னோர்கள் எழுதியவற்றை பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு இருக்கிறார்கள். இங்கே மூலத்தினை சிதைக்காமல் எழுதுவது மிகவும் அவசியம் ஆகிறது. இப்படி பல காலத்திற்கு முன்னாள் எழுதியவகைகள் திரும்பவும் எழுதுவதால் எழுத்துகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன, சிந்தனைகள் சீரழிந்து கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் ஆகிவிடாது. அதைப்போலவே ரீமேக், ரீமிக்ஸ் போன்றவைகள் ஒரு துறையை சீரழித்து கொண்டிருக்கின்றன என்பது ஆகாது. பழையனவாகிய  அவை எல்லாம் புதுப்பிக்கப்பட்டு கொண்டு வருகின்றன என்றுதான் அர்த்தம் கொள்ளலாம். 

Tuesday 21 February 2012

மஹா சிவராத்திரியும் வில்வ மரமும்

பதினோராம் வகுப்பு படிக்க சென்ற போது ஒரு பாடல் என்னை மிகவும் அதிகமாக சிந்திக்க வைத்தது. அந்த பாடல் பாடிய பின்னரே பள்ளி தொடங்கும். அந்த பாடல் சிவபெருமானின் பெருமையை பற்றி பேசுகிறது என்பதெல்லாம் அந்த கணத்தில் எனக்கு தெரியாது.

உலகமெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

அன்றைய தினத்தில் இந்த பாடலானது பெரியபுராணத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்டது என்பது தெரியாது. பின்வரும் நாளில் கூட பெரியபுராணமோ, பன்னிரு திருமறைகளோ படிக்க வேண்டும் எனும் முயற்சி ஒருபோதும் எடுத்தது கிடையாது. திருவாசகம் இளையராஜாவின் சிம்பொனி இசையில் வந்தபோது கேட்டு மகிழ்ந்தது உண்டு. அப்போதுதான் திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பதன் அர்த்தம் புரிந்தது.

அதிலும் புல்லாகி பூடாகி எனும் வரிகள் மொத்த பரிணாமத்தையும் அசைத்து பார்த்துவிட்டு போகும். பல்விருகமாகி, பறவையாய் பாம்பாகி. எப்படியெல்லாம் சிந்தனைகள் வந்து குவிந்துவிடுகின்றன. புராணங்கள் மூலம் சொல்லப்பட்ட சிவன் பற்றிய கதைகள் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவை சொல்லும் ஒவ்வொரு விசயங்களும் மனதில் ஒரு சிந்தனையை எழுப்பாமல் போவதில்லை, அது நேர்மறை சிந்தனையா, எதிர்மறை சிந்தனையா என்பது சிந்திப்பவரை பொறுத்தே அமைகிறது.

நான் ஒரே ஒரு விசயத்தில் மிக மிக தெளிவாக இருக்கின்றேன். சிவன், பிரம்மன், விஷ்ணு எல்லாருமே மனிதர்கள். ஒன்று இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், அல்லது இவர்கள் படைக்கப்பட்டு இருக்கலாம். எவர் இந்த புராணங்கள் (வியாசர் என்றே சொல்கிறார்கள்) எல்லாம் தொகுத்து எழுதினாரோ அவருக்கே எல்லாம் வெளிச்சம். அதைப்போலவே அந்த அந்த காலகட்டத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தனவா என்பதை ஆராய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சொல்லப்பட்ட விசயங்களில் என்ன நீதி சொல்லப்படுகிறது என்பதை காண்பது மட்டுமே அறிவு என்றாகிறது.

கிருஷ்ணர் பற்றி நான் எழுதியதை வீட்டில் சொன்னதும் 'திமிர் பிடித்தவன்' என்றே என்னை சொன்னார்கள். உண்மையிலேயே யோசித்து பார்க்கிறேன், அத்தனை அகங்காரமா எனக்கு? தெய்வங்களாக போற்றப்படுபவர்களை நிந்திக்கும் அவசியம் எனக்கு எதற்கு வந்தது? நான் என்னை ஒருபோதும் ஆத்திகன் என்றோ, நாத்திகன் என்றோ நினைத்து கொள்வதில்லை. ஆனால் எனக்கு இறைவன் மிக மிக பிடிக்கும்.

நேற்று ஆலயத்திற்கு செல்கிறேன். மக்கள் அலைகடலென திரண்டு இருக்கிறார்கள். ஆலயத்தின் உள்ளே செல்லக்கூட இடம் இல்லை. சட்டென மனதில் நினைவுக்கு வருகிறது. அடடா, மஹா சிவராத்திரி. அத்தனை பக்தர்கள் கண்டு மனம் ஆனந்தம் கொள்கிறது. நான் நேற்று மீள்பதிவிட்ட பதிவினை நினைத்து  எனக்கே வெட்கமாக வருகிறது.  அலங்காரம் செய்யப்பட தெய்வ சிலைகள் கண்டு மனம் பூரிப்பு அடைகிறது. எங்கே எனது சிந்தனைகள். எனக்குள் எழுந்த எதிர்மறை சிந்தனைகள் எல்லாம் ஓடி ஒளிகின்றன.

பூஜைகள் நடந்து கொண்டிருக்க ஒருவர் சொற்பொழிவு செய்கிறார். நீங்கள் குரங்கு தெய்வம், மாடு தெய்வம் என விலங்குகளை எல்லாம் தெய்வமாக கொண்டாடுகிறீர்களே நீங்கள் செல்லவேண்டியது மிருககாட்சி சாலை, கோவில் அல்ல என்று ஒருவர் சொன்னாராம். அதற்கு விலங்குகளையும் மதித்து போற்றும் மனப்பான்மை உடையவர்கள் நாங்கள் என்பதில் எங்களுக்கு பெருமை உண்டு எல்லா உயிரினங்களையும் போற்றும் தன்மை படைத்தவர், நன்றியுடன் நடந்து கொள்பவர் இறைவனுக்கு சொந்தமானவர் என பதில் அளித்தாராம்.

அதற்கடுத்து சிவராத்திரி பற்றிய விசயங்களை பேசியதை கேட்டதும் எனக்கு இந்த மஹா சிவராத்திரி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என ஆவல் பிறந்தது. அதிலும் குறிப்பாக வில்வ மரம் பற்றியும், தனக்கே தெரியாமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்த ஒருவர் பற்றி கூறியதும் சிவராத்திரி பற்றி தேடி பார்த்தேன். பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இருந்தது.

இந்த மஹா சிவராத்திரியானது வருடத்திற்கு ஒருமுறை வில்வ இலைகளால் சிவனுக்கு  பூஜை செய்யப்பட்டு இரவெல்லாம் விழித்து இருந்து, விரதம் இருந்து வழிபடுவதாகும். இது கிருஷ்ண பக்ச தினத்தில் நடைபெறுமாம். வருடா வருடம் இந்த நாள் மாறி மாறி வரும். இந்த மஹா சிவராத்திரியானது பெண்களால் தங்களது கணவர்மாரும், மகன்களும் நலமுடன் இருக்க வழிபடும் தினமாம். சிவனின் மனைவி பார்வதி தேவியார் அமாவாசை அன்று (இன்றுதான் அமாவாசை) தனது கணவருக்கும், குமாரர்களுக்கும் வழிபட்டதாக சொல்கிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் பாற்கடலை கடைந்தபோது பாம்பானது கக்கிய விஷம் உலகெலாம் பரவி அனைத்து உயிரினங்களையும் அழித்துவிடும் அபாயம் ஏற்படும் நிலை வந்தபோது 'அழிக்கும் கடவுள்' என போற்றப்படும் சிவன் 'காக்கும் பணியை' எடுத்து கொண்டு அந்த விஷத்தை தானே அருந்திய செயலை கண்டு வெகுண்ட பார்வதி தேவியார் 'பாச கயிற்றால் சிவனின் கழுத்தை பிடித்து நிறுத்த' அந்த விஷமானது அப்படியே நிற்க அந்த தினத்தை மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறார்கள் என்பது ஒரு ஐதீகம்.

பிரளயம் என்று ஒன்று புராணங்களில் அதிக அளவு சொல்லப்பட்டு வருகிறது. இந்த பிரளயங்கள் ஏற்படும்போதெல்லாம் ஒரு யுகம் அழிந்து மறு யுகம் தோன்றுவது இயற்கை. அப்படி யுகங்கள் அழிந்து மறுபடியும் யுகம் தோன்றும்போது எல்லாம் அழிந்துவிட்டால் மீண்டும் உருவாக்குவது கடினம் என்பதால் சில விசயங்கள் மட்டும் பாதுக்கக்கப்படும். அப்படி பிரளயம் உருவானபோது சிவனை வழிபடுவோர் இந்த பிரளயத்தில் சிக்காமல் காக்கப்படுவது வாடிக்கை. இங்கே சிவன் அழிக்கும் தொழில் செய்பவரா? காக்கும் தொழில் செய்பவரா என்பது சிந்திக்க வேண்டியது. கெட்டதை அழித்து நல்லதை காக்கும் தெய்வமாகவே சிவனின் செயல்பாடுகள் இருக்கின்றன.

சித்ரபானு எனும் அரசர் தனது மனைவியுடன் சேர்ந்து விரதம் இருந்து சிவனை மஹாசிவராத்திரி அன்று வழிபட்டார்கள். எதற்காக இப்படி வழிபாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள அரசவைக்கு வந்திருந்த அஷ்டவக்ரா எனும் முனிவர் கேட்க சித்ரபானு சொன்ன கதை என கருட புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அர்ஜூனன் எப்படி கண்ணனிடம் 'நீ இப்போதுதானே பிறந்தாய், ஆனால் எப்படி சூரியபகவான் மகனுக்கு பகவத் கீதையை சொன்னாய் என கேட்கும்போது' கண்ணன் 'நான் எல்லா பிறப்புகளின் நினைவுகளையும் சுமந்து கொண்டிருப்பவன், ஆனால் நீயோ மற்ற மனிதர்களோ ஒரே ஒரு பிறப்பு மட்டுமே நினைவில் இருக்கும் என்கிறான்'

அதுபோலவே சித்ரபானு தனது முற்பிறவியில் நடந்த விசயங்கள் தனக்கு நினைவில் இருப்பதாக கூறி தான் ஒரு வேட்டைக்காரன் என்றும், பறவைகள், விலங்குகள் என வேட்டையாடி திரிபவனாக வாழ்ந்தேன் என்றும் கூறுகிறான். அப்போது அவனது பெயர் சுஸ்வரா. இவ்வாறு வேட்டையாட சென்ற ஒரு தினம் மானை கொல்ல நினைக்கையில், அந்த மான், அதன் குடும்பத்தின் நிலை கண்டு கொல்லாமல் விட்டுவிடுகிறான். எங்கும் தேடியும் வேறு விலங்குகள் கிடைக்காமல் போக இருள் சூழ்ந்து கொள்கிறது. அது அமாவாசை தினம். அப்போது தன்னை இரவில் காத்து கொள்ள ஒரு மரத்தின் மீது ஏறிக்கொள்கிறான். தன்னிடம் இருந்த தண்ணீர் பானையில் இருந்த சிறு ஓட்டையால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கொண்டு இருந்தது. தனக்கு பசியும் தாகமும் வேறு. இந்த இரு நிலைகள் கொண்டிருந்தால் எப்படி உறக்கம் வரும் என்கிற நிலையோடு, உறங்கினால் கீழே விழுந்துவிடுவோம் என்கிற அச்சம் வேறு. தான் உறங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளை கிள்ளி கீழே போட்டுக்கொண்டே இருக்கிறான். காலை வந்ததும் பசியோடு காத்து இருக்கும் தனது மனைவி குழந்தைகளுக்கு உணவு எடுத்து செல்கிறான். உணவு உண்ணும் தருவாயில் 'எனக்கு உணவு போடுங்கள்' என ஒருவர் வந்து கேட்க தங்களுக்கு இருக்கும் உணவில் அவருக்கு  பகிர்ந்து தருகிறான்.

இப்படி வாழ்ந்த சுஸ்வரா மரணம் அடையும் தருவாயில் அவனை சிவலோகத்திற்கு அழைத்து செல்ல தேவர்கள் வருகிறார்கள். தேவர்கள் சுஸ்வராவிடம் நீ ஒரு இரவில் வில்வ மர இலைகளை மரத்தின் கீழ் இருந்த லிங்கம் மீது போட்டு பூஜித்தாய், உனது பானையில் இருந்த நீர் லிங்கம்தனை கழுவியது. அந்த இரவு முழுவதும் உணவு அருந்தாமல் இருந்தாய்.  எனவே உன்னை சிவலோகம் அழைத்து செல்ல வந்திருக்கிறோம் என்றார்கள். தனக்கு தெரியாமலே சிவனை பூஜை செய்த தனக்கு இத்தனை பெரிய பாராட்டா என சுஸ்வரா ஆச்சர்யம் கொள்கிறான். அதற்கு பின்னர் பல வருடங்கள் கழித்து சித்ரபானுவாக அவன் பிறந்தான். அந்த நாள் நினைவில் இருந்ததால் நானும் எனது மனைவியும் பூஜை செய்கிறோம் என சொன்னான் சித்ரபானு. அப்படித்தான் இந்த மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

இந்த மஹா சிவரத்திரியானது மூன்று மணிநேரம் என நாலு கால பூஜைகள் என நடைபெறும். அப்போது வில்வ இலைகளால் சிவனுக்கு அபிசேகம் செய்வார்கள். முதல் காலத்தில் பால் அபிசேகம், இரண்டாம் காலத்தில் நெய் அபிசேகம், மூன்றாம் காலத்தில் தயிர் அபிசேகம். நான்காம் காலத்தில் தேன் அபிசேகம். நான்காம் கால பூஜை முடிந்ததும் அந்தணர் ஒருவருக்கு அன்னமிட்டு விரதம் முடித்து கொள்வது சிறப்பு என்றே சிவனே சொல்வதாக அமைந்து இருக்கிறது. இந்த மஹா சிவராத்திரி பிப்ரவரி மார்ச் மாதங்களில் வரும்.

வில்வ மரம் மருத்துவ குணங்கள் உடையது. இந்த மரத்தின் பழங்கள் மருத்துவ தன்மை உடையதாகும். வில்வ பழம்தனை காயவைத்தோ அப்படியேவோ சாப்பிடலாம். இந்த பழம் வர கிட்டத்தட்ட பதினோரு மாதங்கள் ஆகும். இந்த பழத்தின் ஓடு மிகவும் கடினத்தன்மை உடையது. மரத்தின் கீழ் நிற்கும்போது இந்த பழம் தலையில் விழுந்தால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. வில்வ பழம் மூளைக்கும், இதயத்திற்கும் நல்லதாம். காசநோய், வயிற்றுபோக்கு, வயிருவலி போன்றவைகளுக்கு நல்லதாம். வில்வ பழத்தில் ரிபோப்லவின் நிறைய உண்டு. இந்த மரத்தின் வேர்கள் மருத்துவ குணங்கள் உடையதாகும். பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை உடையதாம் மற்றும் அலர்ஜி, வீக்கங்கள், காயங்களை சரிபடுத்தும் பாங்கு இந்த வேர்களுக்கு உண்டு. தமிழ் சித்தர்கள் இந்த மரத்தை கூவிளம் என்றே அழைத்தார்கள்.

இந்த வில்வ மரத்தை இந்துக்கள் வெகுவாக போற்றுகிறார்கள். எனது வீட்டில் கூட வில்வ மரங்கள் உண்டு. அவை போன்சாய் மரத்தை போன்றே வளராமல் அப்படியே இருக்கிறது. இதுவரை அவை பழங்கள் தந்தது இல்லை. நான் மஹா சிவராத்திரி கொண்டாடினால் இந்த வில்வ மரம் பழங்கள் தர சிவன் மனம் வைப்பாரோ?!

Monday 20 February 2012

ரிவிட் அடிப்பது எப்படி? பகவத் கீதையை தீண்டியபோது - 4

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்னர் நான் எழுதியவைகள் இவை. இனிமேல் மீண்டும் பகவத் கீதையை படித்துவிட்டு எழுதலாம் என இருக்கிறேன். சகோதரி ஒருவர் அவரது பார்வையில் பகவத் கீதை பற்றி எழுத மறுமொழியாக நான் எழுதிய விசயங்கள் பல. அந்த விசயங்களை திரும்பி படிக்கும்போது எதற்கு எழுதினோம், எப்படி எழுதினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் ஒரே ஒரே எழுத்தின் மூலம் மொத்த பகவத் கீதையையும் அவமானபடுத்திவிட்டதாக, கேலி செய்துவிட்டதாக அன்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்து இருந்தார். நான் அனைத்து அத்தியாயங்க்ள படித்து முடித்த நிலையில் எழுதிய அந்த கடைசி எழுத்துகளும் அதனால் சினமுற்ற நண்பரின் எழுத்துகளும், அப்படியும் கூட எதையும் மனதில் கொள்ளாமல் நான் எழுதிய பதில்களும் என இந்த பகவத் கீதையை தீண்டியபோது எனும் பகுதியை நிறைவு செய்கிறேன். இதற்கு முன்னர் எழுதி இருந்த விசயங்களை தொகுத்து எழுதுவது எனக்கு நானே தீங்கிழைப்பது போன்றது என்பதை தமிழ் விரும்பி ஐயாவின் பின்னூட்டத்தில் இருந்து தெளிந்து கொண்டேன். இந்த பகுதிக்கு அடுத்து தொடர இருக்கும் பகவத் கீதையை தீண்டியபோது சற்று வேறு கோணத்தில் பார்க்கலாமா என யோசிக்கிறேன். 

---

மனதை என் மேல் செலுத்த வேண்டும் என கண்ணன் சொல்கிறான், அதோடு மட்டுமா என்னை உன்னத இலக்காக கொண்டால் என்னையே வந்தடைவாய் என்கிறான். அது சரி, கண்ணனிடம் சென்று நாம் அடைவதால் நமக்கு என்ன ஆகப்போகிறது?

மேலும் இந்த பகவத் கீதையை தவம் இல்லாதவர், பக்தி செய்யாதவர், சேவை மனப்பான்மை அற்றவர், கேட்க விரும்பாதவர், என்னை பழிப்பவர் போன்றோருக்கு ஒருபோதும் கூறாதே என்கிறான் கண்ணன். எனக்கு இந்த வரிகளை பார்த்ததும் 

அட கண்ணா!!! நீ சொன்ன இரகசியம்தனை சஞ்சயன் திருதிராஷ்டிரனுக்குச் சொல்லிக் கொண்டிருந்ததை அறிந்தாயோ என்னவோ!!! இல்லை நான் அறியாது போனேனோ என்னவோ!!!

நீ சொன்னதை சந்தேகிக்காதே என சொல்லியபோதே, சொன்னதில் உனக்கு எத்தனைச் சந்தேகம் இருந்திருக்கிறது, மேலும் கேள்வி எழுப்பும் உள்ளத்திற்கு நீ சொன்னதன் அர்த்தம் தெரிந்துவிடும் என நினைத்தாயோ! நீ குறிப்பிட்டவர்களில் தான் நிறையபேர் இவ்வுலகில் வாழ்கிறார்கள், என்ன அர்ஜூனன் அவர்களிடம் உன் இரகசியம் சொல்லவில்லை, அவ்வளவே. மற்றபடி உன் இரகசியம் உலகமெல்லாம் தெரிந்திருக்கிறது. 

நானே சத்தியமும் ஜீவனுமாகியிருக்கிறேன். 

ஹா ஹா கண்ணா! பாவம், நீயும்தானே இறந்தாய்? ஆனால் நீ இறக்கவில்லை எனவும் அப்படியே நீ வைகுண்டம் போனதாகவும் சொல்லிவிடுவார்கள், அதுமட்டுமன்றி ஜோதியோடு ஜோதியாய் கலந்ததாய் கதையும் சொல்வார்கள். இதில் நாங்கள் என்ன விதிவிலக்கு! பிறப்பும் இறப்பும் நிரந்தரமல்ல! அது சரி! 

யாருக்கு இங்கே மரண பயம்? எவருக்குமில்லை. இருந்தால் அனைவரும் முறையான வாழ்க்கையை முறையாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். உன்னை எல்லாம் ஒரு பொருட்டாகவே கருதியிருக்கவும் மாட்டோம் கண்ணா. நீ நடத்திய நாடகம் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பல பகுதிகளில். இன்னும் பல பகுதிகளில் அதன் சுவடு கூடத் தெரியாமல் இருக்கிறது அறிவாயோ? 

நீ உதவியது நிலச் சண்டைக்குத்தானே, அது மட்டும் தர்மம், இங்கே உன் வழிநடத்துதலன்றி மக்கள் சண்டை போட்டால் அது அதர்மம். அதென்ன ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்வது அப்புறம் ஏன் அழியும் உடலுக்கு அது செல்ல வேண்டும்! தனித்து இயங்க முடியாதா ஆன்மாவினால். 

பாவத்தின் மொத்த சொரூபமே நீதான் என உன்னை நான் குற்றம் சாட்டினால் என்ன செய்வாய் கண்ணா. உன்னை பழித்தேன் எனச் சொல்வாயா? மிகச்சரியாகவே உண்மை உரைத்தேன் எனத் தட்டிக்கொடுப்பாயா? நீ எதுவும் சொல்லப் போவதுமில்லை, உன்னால் எதுவும் சொல்ல இயலுவதுமில்லை. உன்னைச் சரணடைய வேண்டுமாம், பாவம் தீர்ப்பாயாம். நல்ல நகைச்சுவை கண்ணா. 

ஆனால் ஒன்று கண்ணா நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி உன் கூற்றுப்படி எவரும் இங்கே பலகாலம் இருக்கப்போவதுமில்லை. அப்புறம் உனக்கு எதுக்கு இந்த வேலை? கர்மம் எனச் சொல்வாயோ! கர்மம் அர்த்தப்படும் விதம்வேறு. 

நானும் சாம்பலும் வேறல்ல! எதிர்மறையான தத்துவம் இது. நான் வேறு; சாம்பல் வேறு! ஒரு திருநீறு அணிந்தோமோ இருந்தோமோ என இல்லாமல் எதை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு வாழச் சொல்கிறார்கள். 

இறந்துவிடுவோம் அதனால் நன்றாக வாழவேண்டும் என நினைப்பை விதைப்பதை விட, வாழ்கிறோம் அதனால் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பு வரவேண்டும். சாகாமல் இருந்தால் எல்லா அட்டூழியங்களும் செய்யலாமோ என்னவோ? 

எப்படியெல்லாம் உதாரணங்களும் உவமேயங்களும் இறைவனிடம் நம்மை அர்பணிக்க வேண்டுமென பணிக்கின்றன. இதையெல்லாமா ஒரு இறைவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்! 

“ அகங்காரம் இல்லாத இடத்தில் இறையின் ஸ்வரூபம் தெரிவதில் ஆச்சரியமில்லை” 

அப்படியென்றால் அகங்காரம் நிறைந்த சபையில் இவர் ஸ்வரூபம் காட்டியதும், அனைவரும் கண்டதும் என்னவாம்!!! 

எது எப்படியோ பிரபஞ்சமே மாயை என எல்லாருக்குமே தெரிந்து இருக்கிறது ஒருவிதத்தில் அதில் கண்ணனைத் தெரியாதோரும் அடக்கம். 



---------


இப்படி நான் எழுதியதும் 'நன்றாக ரிவிட் அடித்து விட்டீர்கள்' என ஒரு நண்பர் சொல்ல எனக்கு அப்போது புரியவில்லை. காரணம் எவரது மனமும் புண்படுமாறு நான் எழுத முனைவது இல்லை. மீண்டும் மீண்டும் படித்தபோது கூட என்னால் விளங்கி கொள்ள இயலவில்லை. தவறு செய்பவருக்கு தவறு கண்களுக்கு தெரிவது இல்லையோ என்னவோ? இப்படி எழுதியதன் மூலம் எவர் எவரின் கோபத்தை விலைக்கு வாங்கினேனோ அதுபற்றி தெரியவில்லை. பின்னர் நான் எழுதியது கண்டு மனம் வருந்தினேன் என சொன்னவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன் என்பது வேறு. ஒரு கருத்தை மத நூல்களில் மீதோ, மற்ற விசயங்கள் மீதோ எழுதும்போது அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாகிறது. 


-----


நண்பர்: கேள்விகள் கேட்கவேண்டும் என்பதற்காக கேட்டு, ஏன் உங்கள் அறியாமையை எல்லோருக்கும் தெரியும் படி செய்ய வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.

நான்: தெளிவின் எல்லைக்குப் போனாலும் அறியாமை நிழல் துரத்துகிறதே ஐயா, என்ன செய்வது? எப்பொழுதும் அறியாமையில் தான் இருக்கிறேன். இதை கேள்விகள் கேட்பதற்காக கேட்டால் என்ன, பதில்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்துக் கேட்டால் என்ன! யாருடைய நம்பிக்கையையும் உரசும்போது எப்பொழுது ஒருவர் சிதறாமல் இருக்கிறாரோ அவரே அந்த நம்பிக்கையில் உறுதியானவர் என்பது எனது தீர்மானம். 

நண்பர்: மரண பயம் என்று நீங்கள் எதைச்சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. மரண பயம் இல்லாத ஜீவன்களே கிடையாது. மரணத்தை சந்தோஷமாக வரவேற்கும் ஞானிகளைத்தவிர மற்ற எல்லோருக்கும் மரணம் என்றால் பயம் தான். விமானத்தில் கோளாரு என்று கேப்டன் சொன்னால், எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்களா, பயத்தில் இருப்பார்களா?... கண்ணன் எந்த சபாவில் நாடகம் போட்டார் என்று தெரியவில்லை, அது எங்கு ஓடுகிறது என்றும் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் நானும் அதை பார்க்க வேண்டும்.

நான்: எனக்கு இல்லை மரணம் பற்றிய பயம், நான் ஞானியுமில்லை. இளங்கன்று பயமறியாது என்பதை அறிந்திருப்பீர்கள் ஐயா. மரணம் என்ன என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகளும் பாரினில் உண்டு. அவர்கள் ஒன்றும் ஞானிகளில்லை. தீவிரவாதிகளும்தான் மரணத்தை சந்தோசமாக வரவேற்கிறார்கள். ஆஹா... நாடகம் என்றதும் சபா எல்லாம் கேட்கிறீர்களா? மகாபாரதப் போர் கண்ணன் நடத்திய நாடகம் அல்லவா! 

நண்பர்:அதர்மம் என்று கண்ணன் எங்கு சொன்னான்?

அதானே கண்ணன் எங்கு சொன்னான்?! எனது கருத்தைத்தானே சொன்னேன். 

நண்பர்:மின்சாரத்துக்கு சக்தி இருக்கிறது. அது எத்தனையோ ஹை வோல்டேஜில் கண்டம் விட்டு கண்டம் போகிறது. ஆனால், அது இயங்க வேண்டும் என்றால் அதுக்கு ஒரு சாதனம் தேவைப்படுகிறது இல்லியா. சாதனம் இல்லாவிட்டால் மின்சாரத்திற்கு உபயோகம் ஏது. அதுமட்டுமில்லாமல் பருப்பொருளுக்கு அழிவில்லை என்பதை நமது அறிவியல் சொல்கிறது நமது உடலில் இருக்கும் அந்த அழியா பொருளுக்கு பேர் தான் ஆன்மா.

அருமையான விளக்கம் ஐயா, ஆனால் ஆன்மாவுக்கு அழிவில்லை எனச் சொல்லிவிட்டு அழியும் பொருளைப் பற்றி அவதிப்படுவானேன் என்பதுதான் என் கேள்வி

நண்பர்:கடலில் இருந்து வந்து சேர்ந்த கடல் தவளையிடம் கிணற்றுத்தவளை, "கடல் இந்த கிணறை விட பெரிதா? நல்ல நகைச்சுவை, பெரிதாக இருக்கவே முடியாது, " என்றதாம்.

தங்களை போல் தான் துரியோதணனை சேர்ந்தவர்களும் கண்ணனின் முன்னாடியே நீ பாவத்தின் மொத்த சொரூபம், கபடதாரி, ஏமாற்றுக்காரன், மாயஜால வித்தகன் என்றெல்லாம் கூறி எள்ளி நகையாடினர். அவற்றுக்கு எல்லாம் ஒரு அழகிய புன்னகையை தானே பதிலாக கொடுத்தான். 

கண்ணன் என்னையை சரணடைய என்று சொன்னது, அவனுடைய கருத்துக்களை ஏற்று நடங்கள் என்ற அர்த்தத்தில். அப்படி நடக்கும் பட்சத்தில் எந்த பாவ காரியத்திலும் ஈடுபட முடியாது என்பது தான். பாவம் செய்த நீ சொல்லும் கருத்து எப்படி பாவத்திலிருந்து விடுவிக்கும் என்று கேட்பதாக இருந்தால், வேறு வழியில்லை திரும்பவும் நீங்கள் கருத்து ஆழத்துடன் படிக்க வேண்டி இருக்கும்.

நான்: ஹா ஹா! மன்னிக்கவும் ஐயா. கண்ணனால் எந்த பதிலும் சொல்ல இயலாது என்று சொல்லிவிட்டேன் ஐயா, புன்னகைதான் தரமுடியும். ஐயா நீங்கள் முழு பகவத் கீதையையும் படித்துப் பாருங்கள், அப்படி பாவத்திலிருந்து இந்த கண்ணனும் அவன் சொன்ன பகவத்கீதையும் விடுவிக்குமெனில் அர்ஜூனன் போரே செய்து இருக்கக்கூடாது. உயிர்களைக் கொல்வது பாவம் என்பது உலக தத்துவம் அது நுண்ணுயிர்களாய் இருந்தாலும் கூட.

நண்பர்: எங்கு சொன்னான் பலகாலம் இருக்கப்போகிறார்கள் என்று? எல்லோரும் எப்படியும் இறந்து விடப்போகிறோம் என்று யாராவது சாப்பிடமால் இருக்கிறார்களா? இல்லை வேறு எந்த காரியமும் செய்யாமல் இருக்கிறார்கள். அவனுக்கு சரி என்று பட்டதை அவன் செய்தான். அதை எதற்கு செய்தான் என்று கேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

நான்: அவனைக் கேள்வி கேட்க எனக்கு தகுதி இருக்கிறது ஐயா. எப்படி வேண்டுமெனிலும் அவனைக் கேட்பேன். அவன் புன்னகை தருவான், தராமல் போவான்.

நண்பர்: இரண்டும் எப்படி வேறுபடும். இறந்தபின் நமது உடலில் இருந்து மிஞ்சுவது சாம்பல் மட்டும் தானே. அது புரியாமல் நான் என்ற அகங்காரத்தில் செய்வது எல்லாம் துன்பத்தில் கொண்டு சேர்க்கும் என்று சொல்வது தேவையில்லை என்பது, ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை நான் எதற்கு தெரிந்து கொள்ள வேண்டும், எனக்கு எதற்கு நினைவுபடுத்தவேண்டும் என்று கேட்பது போல். தீ சுடும் என்பதையோ, தண்ணீரில் மூழ்கினால் அபாயம் ஏற்படும் என்பதையோ ஏன் குழந்தைகளுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று கேட்பது மாதிரி இருக்கிறது.

நான்: ஹா ஹா! மன்னிக்கவும் ஐயா. இறக்கும் முன் நான் வேறு தானே. இறந்தபின்னால் என்னை புதைத்தால் நான் எப்படி சாம்பலாவேன். இருப்பினும் சாம்பல் வேறு தான். நான் செய்வதையெல்லாம் சாம்பல் செய்ய இயலாது. சாம்பலுக்கு உயிரும் கிடையாது. சட்டதிட்டங்களை அறிந்து கொண்டு வாழ்வதை விட நியாய தர்மங்களை அறிந்து கொண்டு வாழ்வது சாலச் சிறந்தது. 

நண்பர்:நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. இறைவனுக்கு இதுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் மருத்துவர். வலியுடன் வருபவரிடம். இந்த மருந்தை சாப்பிடு என்று நீங்கள் கொடுத்தால். நான் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால், இதில் மருத்துவரான உங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. அதே போல், எனக்கு இந்த மருந்து வேண்டாம், நான் வேறு ஒரு மருந்து சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொன்னாலும் இதில் மருத்துவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆக இது வலி இருப்பவர் தேர்ந்தெடுக்க வேண்டியது. ஆனால், ஏன் மருத்துவர் எனக்கு இந்த மருந்தை கொடுத்தார், அவரை யார் இதை செய்யச்சொன்னது என்று நாம் கேட்க முடியாது. வலியில் இருப்பவரின் நன்மைக்கா சொன்னது அதன் படி கேட்டு வலி குறைந்தவர் அந்த மருந்தை மீண்டும் வலி வரும்பொழுது எடுத்துக்கொள்வார். அது அவர் அவரின் விருப்பம்.

நான்:அப்படியெனில் நான் சொன்ன கருத்துக்களெல்லாம் என் விருப்பம் தானே! ஏன் இப்படி கேள்வி எழுப்பினாய், நீ எழுப்பியிருக்கவே கூடாது என்பது எந்த விதத்தில் சரியாகப்படும் ஐயா. எப்படியோ உங்களுடன் கண்ணன் என்னை இப்படி பேசச் சொல்லிவிட்டான்.

நண்பர்: அகங்காரம் இல்லாத இடம் என்பது அகங்கார தோரணை இல்லாத ஜீவன் என்று பொருள். அது ஒரு இடத்தை குறிப்பதல்ல.

நான்: அகங்காரம் நிறைந்த ஜீவன்கள்தான் ஐயா
மிக்க நன்றி, நல்லவேளை அறியாமை அகன்றுவிட்டது போலும்!

Saturday 18 February 2012

பகவத் கீதையைத் தீண்டியபோது - 3 (குணம், வர்ணம், ஞானம்)

பகுதி 2 


கண்ணன் உலகம் தோன்றா காலம் முன்னரே இந்த கீதையை நண்பர்களுக்குச் சொல்லி வந்தானாம். ஒவ்வொரு முறையும் கீதை மறக்கும் பட்சத்தில் மறுபடியும் நண்பனுக்குச் சொல்வானாம். அப்படிச் சொல்லப்பட்ட, இறுதியாகச் சொல்லப்பட்ட கீதைதான் அர்ச்சுனனுக்குச் சொன்னது. அதெப்படி உலகம் தோன்றா முன்னர் சொல்லி இருக்க கூடும், அப்படி எந்த நண்பருக்கு சொல்லி இருக்க கூடும் என்றெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. 'நல்லாவே காதுல பூ சுத்துறான்' என ஒரு நமட்டு சிரிப்பும் சிரிக்க கூடாது. ஏனெனில் இது பகவத் கீதை. புரிகிறதோ? 


இப்படித்தான் புனித நூல்கள் எல்லாம் தங்களிடம் இருக்கும் 'அழுக்கினை' மறைத்துக் கொண்டு புனிதத் தன்மையினை பாதுகாத்து கொண்டு வருகின்றன என சொல்வோர்கள் உண்டு. நான் எல்லாம் அப்படி சொல்லமாட்டேன். புனிதமான விசயங்களை கூட அழுக்கு படுத்திவிடும் குணங்கள் உடையவர்கள்தான் நாம். 


மூன்று வகை குணங்கள் உடைய மனிதர்கள் என பிரிக்கலாமாம். ஆனால் இந்த மூன்று வகை குணங்கள் ஒவ்வொன்றில் கொஞ்சம் கொஞ்சம் என எல்லா குணங்களும் ஒரு மனிதரிடம் இருக்கும். இந்த மூன்று வகை குணங்களில் எது மேம்பட்டு இருக்கிறதோ அந்த குணத்தை வைத்து அவரை குணவான், கனவான் என சொல்லிக் கொள்ளலாம். ஒரே மரபணுவில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஓங்கியதன்மை உடையது, மற்றொன்று தாழ்த்திய தன்மை உடையது. ஓங்கும் தன்மை செயல்பாடே அது வெளிப்படுத்தும் என்பார்கள். அதே வேளையில் இரண்டு தாழ்த்திய தன்மை இணைந்தால் தாழ்த்திய தன்மை வெளிப்படும் என்பார்கள். நமது குணநலன்கள் மரபணுக்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தான் இனி எவர் மூலமாவது வெளியிட இருக்கும் வேத நூலில் தெளிவாக சொல்லவேண்டும். 


மூன்று வகை குணங்கள் எது. சுயநலம் அற்ற வெள்ளேந்தியான கள்ளம் கபடமற்ற சத்வ குணம். இந்த குணம் கொண்டோர் எவரையேனும் காட்டுங்கள் பார்க்கலாம். சில தினங்கள் முன்னர் தான் ஒரு பதிவில் சொன்னோம், சுயநலவாதிகளால் ஆனது உலகம் என. மனிதர்களுக்கு கொஞ்சம் இருக்கும், ஆனால் ஞானிகள், யோகிகள் எல்லாம் இந்த குணம் கொண்டவர்கள் என்கிறது வரலாறு. அப்படியெனில் மனிதர்களுக்கு இல்லை? குழந்தைகள். பொம்மையை தனக்கென வைத்து கொள்ளும் குழந்தைகள் கூட உலகில் உண்டு. இவ்வுலகை படைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும் இறைவன் கொண்டது சத்வ குணமோ? 


தானே எல்லாம், தன்னால் தான் எல்லாம் முடியும் என்று தற்பெருமை சொல்லித்திரியும் அகங்காரம் கொண்டு அலையும் தற்குறிகள் கொள்ளும் ரஜோ குணம் அடுத்தது. இதே கண்ணன் நானே எல்லாம், என்னை நீங்கள் பின்பற்றுங்கள், என்னால் மட்டுமே முடியும் என சொல்வது ரஜோ குணம் இல்லையா? இறைவனால் மட்டுமே முடியும், இறைவன் மட்டுமே உலகை படைக்க இயலும் என்பது இறைவனுக்கு ரஜோ குணத்தை தருவதில்லையா? 


எதுவுமே செய்வது இல்லை. உண்பது கூட அடுத்தவர் ஊட்டி விட வேண்டும். உறங்க வைக்க அடுத்தவர் தாலாட்ட வேண்டும் என சோம்பேறியாய் வாழ்வதே தமோ குணம். இந்த குணத்தில் இருப்பவருக்கு இவ்வுலக வாழ்க்கை பற்றி எதுவுமே தெரிவதில்லை. கடவுளா, அவன் கிடக்கான், ராஜாவா அவன் கிடக்கான் என தான் கிடந்தது உழல்பவர். இறைவன் இவ்வுலகில் எதுவுமே செய்வதில்லையே, எல்லாம் மனிதர்கள் தானே செய்து கொண்டிருப்பது அப்படியெனில் இறைவன் கொண்டது தமோ குணமா?


ஒவ்வொருவருக்கம் இந்த மூன்று குணநலன்கள் இருக்கத்தான் செய்யும். நான் சில விசயங்களில் சோம்பேறியாய் இருக்கிறேன், சில விசயங்களில் அகங்காரம் கொண்டு திரிகிறேன், சில விசயங்களில் கள்ளம் கபடமற்று சுயநலமற்று இருக்கிறேன். 


அடுத்ததாக வர்ணம் பற்றி பேசுகிறது கீதை. எனக்கு தெரிந்தது வானத்தில் மழை விழுந்த பின்னர் தெரியும் வானவில். வானவில் ஏழு நிறங்கள் கொண்டது என்றுதான் படித்து இருக்கிறேன். வயலட், இண்டிகோ, புளு, கிரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் (தமிழ் படுத்திக்கோங்க). ஆனால் மனிதர்களில் நான்கு வகை வர்ணங்கள உடையவர்கள் இருக்கிறார்களாம். மனிதர்களில் கூட நிறத்தை தருவது மெலனின் எனும் ஒரு நிறமி. இந்த மெலனின் நிறமி மூன்று வகைப்படும். இந்த மெலனின் நிறமியை உருவாக்கும் மேலநோசைட் பற்றி தான் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்தேன். இந்த மெலனின் நிறமி தராத வேறு நான்கு வர்ணங்களை இந்த கீதை பேசுகிறது. 


சென்ற பதிவில் குறிப்பிட்டோம், நம்மை தொழில் ரீதியாகவே அறிமுகப்படுத்துவோம் என, அதே போலவே இந்த வர்ணங்கள் தொழில் ரீதியாகப் பூசப்படுகிறது. அந்தணன், சூத்திரன், வைஷ்யன், சத்திரியன். 


பழியே இல்லாத தூய்மையான ஆத்மா அந்தனணன். அடடா! இழிநிலை வாழ்வு கொள்பவன் சூத்திரன். ஆஹா. அடுத்தவன் குடியை கெடுப்பவன் வைஷ்யன். சபாஷ். அழிக்கிரதையே செய்பவன் சத்திரியன். அருமை. ஆனால் மேற்சொன்ன குணங்களையும் இந்த நிலைகளையும் ஒப்புமைபடுத்தி பார்த்தால் எல்லா வர்ணங்களையும் பூசிக்கொண்டு திரிபவரகாத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவு. நான் வர்ணம் பற்றி பேசினால் எனது வலைத்தளத்தில் 'சாணி' எறிந்துவிடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். ஏனெனில் அந்த ஞானம் எனக்கு இருக்கிறது. 


அதென்ன ஞானம்? பலனை எதிர்பார்க்காமல் செயல்களை செய்வதே ஞானம் என்பார்கள். அப்படி செய்பவர்கள் ஞானி என போற்றப்படுவார்கள். ஆசை எதுவும் இருக்க கூடாது, ஆனால் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். என்னப்பா இது! இந்த உலகத்துக்கு இது அடுக்குமா? ஆசை இல்லாம ஆர்வம் வருமா? பலன் இதுதான் என நினைக்காம எதுவும் செய்ய முடியுமா? 
ஆனால் மிருகம் வேறு மனிதன் வேறு என்பதே இங்குதானாம். 

ஞானிகள் எல்லாம் ஞானம் தேடி குகைகளைத் தேடித் போவாங்க. எந்த ஞானம் தேடி போறாங்க, எந்த ஞானத்தை கண்டு கொண்டாங்க அப்படின்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை அப்படின்னு பல வருஷம் தியானம் இருந்து கண்டு சொல்வாங்க. பாவ புண்ணியம் எல்லாம் பத்தி இந்த ஞானம் தெளிவா சொல்லுமாம். ஒருத்தருடைய பாவத்தை போக்க இன்னொருத்தர் பாவம் பண்ணுறது எப்படி நியாயமாகும்? இந்த ஞானம் பெற தியானத்தை இமயமலை போன்ற இடங்களில் போய் செய்வாங்களாம். 



ம்ம். இவ்வுலக ஆசைகளும், பந்தங்களும் துன்பத்திற்கே என விட்டு ஒதுங்கி வாழ்வதா வாழ்க்கை. ஒரு வேலையும் செய்யாமல் தியானம் பண்ணுவதைவிட வேலையை தியனாமாக செய்வது சால சிறந்தது. ஞானிகள் வாழும் ஆசையற்ற, பந்தங்கள் அற்ற ஆனந்தமான வாழ்க்கை போல, ஆசையுள்ள, பந்தங்கள் உள்ள ஆனந்தமான வாழ்க்கையும் உண்டு. மனிதர்கள் எல்லாம் பாவிகளாம். இப்படி சொன்னவரை அப்பாவி என்பதா, அடப்பாவி என்பதா. 


எது பாவம்? நமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், பிறருக்கு துன்புறுத்தல் தராமல் இருக்கவேண்டும் எனில் நாம் எதையும் இவ்வுலகில் செய்ய முடியாது. ஆக பாவம் என சொல்லப்படுவதே பாவமின்றி, மற்றவை பாவம் என வரைகொட்டில் வைக்க முடியாது. இந்த பாவம் குறித்த அறியாமை நிறையவே எனக்கு இருக்கிறது. 


அறிவுள்ள ஒருவன் தனது அறிவினை உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவன் எப்படி ஞானி ஆவான்! 

பொருள் பற்று இல்லாதவனை ஞானியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அறிவு தனில் பற்று இல்லாதவனை ஞானியாக ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. அறியாமையில் இருப்பதால் நானும் ஞானியாக ஆசைப்படுகிறேன். 
நினைவுகளை நம்முடன் மறந்தே எடுத்துச் செல்கிறோம், வந்து் இருக்கிறோம், செல்லவும் செய்வோம்! அந்த நினைவுகளை மட்டும் மறக்காமல் இருந்திட பரந்தாமன் வழி சொல்வானெனில் உண்மை உணர்த்தப்பட்டுவிடும். 


ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நினைவில் கொண்டால் மறக்காது என எனக்கு நினைவில் வைப்பதின் அதிசயம் பற்றி ஒருவர் பாடம் சொல்லித் தந்தார். அவர் பெயர் இன்று என் நினைவில் இல்லை. மறதி மனிதனுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' எனப் படிக்கும்போதெல்லாம் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு செயலானது செய்யும்போது அது எவ்விதத்தில் முடிய வேண்டும் என பகுத்தாராய்ந்து செய்வதுதான் சரியான முறை. இது செய்தால் இது கிடைக்கும் என எதிர்பார்த்து செய்தல் கூடாது என்பது ஒரு வகையில் மிக அழகாக, அறிவாக இருந்தாலும் என்ன பலன் என்பதை அடிப்படையாய் வைத்து ஒரு காரியம் செய்வதுதான் நடைமுறை. பலனை எதிர்பார்க்காமல் செய்கிறேன் என நினைக்கும் போதே ஒரு எதிர்பார்ப்பு வந்து அமர்ந்து கொள்வது என்னவோ மனதை கனக்கச் செய்கிறது. எல்லாம் இருந்து, வேண்டாம் எனச் செல்வதுதான் பற்றற்ற தன்மை. அப்படி இல்லாத பட்சத்தில் அது இயலாமையாக கருதப்படும். அறியக்கூடிய தன்மை பெற்றபின் அறிவில் பற்று இல்லாதவரைத்தான் ஞானியாக ஏற்றுக் கொள்ள முடியும். அறியாமைக்கு காரணமான அறிவை அறிந்து கொண்டு அதனை பற்றாமல் இருப்பவரை ஞானியாக ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன். 

பிறப்பு இறப்பு பற்றி எண்ணும்போதெல்லாம் எதற்கு கண்ணன் என எண்ணத் தோன்றும்! இது காலம் காலமாக நடக்கும் யாகம் எனில் எதற்கு கண்ணன்? இல்லாத ஒன்று இருந்ததாய் கண்டு கொண்டதன் உண்மைதான் என்ன? மரணம் அறிவுறுத்துவதில்லை, பயமுறுத்துகிறது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள் என வரும்போது எதனை விடுப்பது என்பது கேள்வியாக நிற்கப்போவது இல்லை. எல்லாவற்றையும் விடுப்பது என வரும்போது எதனை ஏற்பது என்பது ஒரு கேள்வியாக நிற்கபோவது இல்லை. நாம் எதனையும் பெறுவதுமில்லை எதனையும் இழப்பதுமில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. 

அகந்தை என யார் எதனைச் சொல்வது? ''நானே எல்லாம்'' என கண்ணன் சொல்லும்போது எனக்கு அது மாபெரும் அகந்தையாய் தெரிகிறது! எல்லாம் அவன் என நான் சொல்லும்போது எனக்கு அது அடக்கமாய் தெரிகிறது. எனது செயல்களுக்கு பொறுப்பு யார் ஏற்பது? நான் செய்ததை நான் செய்தேன் எனச் சொல்லிக் கொள்வது அகந்தையா? என்னால் மட்டுமே செய்ய முடியும் என மார் தட்டிக் கொள்வது அகந்தையா? கர்வப்படு. எல்லாம் தொலையும் என தெரிந்தும் கர்வப்படு. 


--------------------

obsessive-compulsive disorder - இது குறித்து நான் மிகவும் அச்சப்படுகிறேன். நாம் எல்லாம் இறைவன் குறித்த விசயத்தில் இப்படித்தான் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றும்!

எட்ட முடியாத யோகம் எட்டு நிலைகளாய்! சமாதி என்பது எப்படி உணர்வு நிலையாகும்? சமாதி என்பது உணர்வற்று போகும் நிலைதானே! இங்கு உணர்வு நிலை என்பது இறை உணர்தல் நிலையை குறிக்கிறதா? எட்டு நிலை யோகத்தை பின்னர் பார்க்கலாம்.

ஹூம்... ஒரு குழந்தை ஒரு முறை ஆர்வமுடன் ஒரு விசயம் பற்றி கேட்டதும் அக்குழந்தைக்கு அதற்கான விடை சொல்லப்பட்டால் அக்குழந்தை போகிற போக்கில் எல்லா விசயமும் பற்றி கேட்க ஆரம்பித்துவிடுமாம்! அப்படித்தான் அர்ச்சுனன் தெரிகிறான். உலகம் தோன்றா முன்னர் சொன்ன இந்த கீதையை ஒவ்வொருவருக்கும் திரும்ப திரும்ப சொன்ன கண்ணனுக்கு எதற்கு சலிப்பு ஏற்படவில்லை?


Friday 17 February 2012

பன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்

முதலில் இந்த 'பன்முக பதிவர்' விருதினை எனக்கு அளித்து சிறப்பித்த சகோதரி ஷக்திபிரபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

பொதுவாகவே விருது என்றால் எனக்கு என்னை அறியாமல் பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி செல்லும் எழுத்துகள் காலப்போக்கில் சுயத்தை தொலைத்துவிடும் என்கிற அவசியமற்ற பயம் தான் அது. இதோ இவர்கள் கவனிக்கிறார்கள், அதோ அவர்கள் கவனிக்கிறார்கள் என ஒரு எண்ணம் மனதில் வட்டமிடும்போது அங்கே எதிர்பாராத ஒரு பயம் வந்து சேர்ந்துவிடுகிறது, எங்கே ஏதேனும் எவரேனும் சொல்லிவிடுவார்களோ என அத்தியாவசியமற்ற மனநிலை அனைவருக்கும் நிகழ்வது இயல்பு. ஆனால் அதை எல்லாம் தாண்டி பயமற்ற ஒரு எழுத்து என்பதுதான் ஒருவரின் சுயத்தை அடையாளம் காட்டும். ஒரு எழுத்தை மென்மையாக, இலைமறை காயாக வெளிப்படுத்துவது என்பதைத்தான் நாகரிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவர் சொல்லும் விதம் தனில் உங்களது முகம் சுளிக்கிறதா, விரிவடைகிறதா என்பதுதான் அந்த சொல்லிய விதத்திற்கு வெற்றி. ஆனால் எல்லா விதங்களில் எழுதுபவர்களைப் போலவே எல்லா விதங்களிலும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

உங்களை நீங்கள் எப்படி அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள் என எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். அனைவருமே தான் செய்யும் தொழில் சம்பந்தபடுத்தித்தான் தங்களை அறிமுகபடுத்துவார்கள்.  அதை எல்லாம் தாண்டி தனிப்பட்ட மனித குண நலன்கள் எல்லாம் எவருக்கு தேவை என்கிற போக்குதான் நம்மிடம் இருப்பது. இப்போது ஒருவர் பலதுறைகளில் புலமை பெற்றவராக இருப்பதால் ஒரு துறையில் தனித்தன்மை பெற இயலாது போகிறது என்றே சொல்வோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு தொழிலை முதன்மையாக வைத்து கொண்டு மற்ற விசயங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வோரும் உண்டு. முதன்மையான தொழிலை வைத்தே அவரது அடையாளம் பேசப்படும். இதுவரை என்னை நான் பதிவர் என எவரிடமும் அறிமுகமும் செய்தது இல்லை, நான் பதிவுகள் எழுதுகிறேன் என நேரடியாக எவரிடமும் சொல்லிக்கொண்டது இல்லை. எனக்கு இந்த பதிவு எழுதுவது எல்லாம் ஒரு எழுத்து விளையாட்டு போலத்தான். அப்படி எழுத்துவிளையாட்டில் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் பெரியது. ஏனெனில் சின்ன சின்ன பாராட்டு கூட மன மகிழ்ச்சியை தரும்.

நான் பதிவர்களுக்கு விருது தர வேண்டும் என ஆரம்பித்து இரண்டே இரண்டு பதிவர்களுக்கு மட்டும் தந்துவிட்டு நிறுத்தி கொண்டேன். விருது வழங்குவதை கூட ஒரு ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்கிற நினைப்பில் அப்படியே நிறுத்திவிட்டேன். இந்த வலைப்பூவில் நான் பெற்ற விருதுகள் என இந்த விருதுடன் சேர்த்து மூன்று விருதுகள். இந்த விருதை நான் எனக்குப் பிடித்த பதிவர் ஐந்து பேருக்குத் தந்தால்தான் நான் இந்த விருதை ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு சமம் என்ற வாசகம் என்னை சில நாட்கள் யோசிக்க வைத்துவிட்டது.

பொதுவாக மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் இப்படித்தான் வரும். இதை நான்கு பேருக்கு அனுப்புங்கள், எட்டு பேருக்கு அனுப்புங்கள் என. நான் அதுபோன்ற மின்னஞ்சல்களை இதுவரை கண்டுகொண்டதே இல்லை. ஒன்றை ஆத்மார்த்தமாக செய்வதற்கும், செய்ய சொல்லிவிட்டார்களே என செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. விருதுகள் பெற்ற நண்பர்கள் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களால் ஆத்மார்த்தமாக பதிவர்களை தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் பல பதிவர்களை மனதில் பரிசீலித்து கொண்டே இருக்கும்போதே அவர்கள் எல்லாம் விருதுகள் பெற்று கொண்டிருந்தார்கள். ஆஹா இப்படி வெட்டி வியாக்கியானம் நினைப்பு கொண்டிருந்தால் பதிவர்கள் மிச்சம் இருக்க மாட்டார்கள் எனும் நினைப்பு வந்து வெட்டிப் போனது. இருப்பினும் பரிசீலித்து கொண்டேதான் இருக்கிறேன்.

பன்முக பதிவர் என்றதும் எனக்கு 'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்' என்ற பாடல் மட்டுமே நினைவில் வந்தது. அந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னையறியாமல் ஒரு உணர்வு சில்லிட்டுப் போகும்.

எங்கிருந்தோ வந்தான்,
இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய்  மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான்

இப்படி பல வேசங்கள் தரித்து வாழும் வேடதாரியான நம்மில் பல விசயங்கள் பற்றி எழுதும் தன்மை இருப்பது இயல்போ என தெரியவில்லை. ஆனால் நம்மில் பலர் மிகவும் குறிப்பாக, ஒரு சம்பந்தப்பட்ட துறை மட்டுமே எழுதும் இயல்புடனும் இருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் பன்முக பதிவர் விருது பெரும் தகுதி அற்றவர்களா என்றால் அதுதான் இல்லை. ஒரே துறை பற்றி எழுதினாலும் அதில் கூட சில பல புதுமைகள் பற்றி எழுதுபவர்கள் கூட பன்முக பதிவர்கள் தான்.

நான் தேர்ந்தெடுக்க இருக்கும் ஐந்து பதிவர்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன். இந்த விருதினை நான் ஏற்று கொண்டேன் என முழு மனதுடன் உறுதி செய்கிறேன். அதற்கு முன்னர் எனக்கு பிடித்த ஏழு விசயங்கள் பற்றி சொல்லிவிடுகிறேன்.

1. எனக்கு சாப்பிடுவது மிக மிக பிடிக்கும்.

2. எனக்கு எழுதிக்கொண்டிருப்பது மிக மிக பிடிக்கும்

3. புராண காலத்து வேதங்கள், எழுத்துகள் எல்லாம் வாசித்து மகிழ்ந்திருக்க மிக மிக  பிடிக்கும்

4  மக்களுக்கு என்னை முன்னிறுத்தாமல் சேவகம் செய்வது மிக மிக பிடிக்கும்

5 . மலைகள், காடுகள், நாடுகள் என சுற்றிப் பார்க்க மிக மிக பிடிக்கும்

6  யாதும் ஊரே யாவரும் கேளிரும், நன்றும் தீதும் பிறர் தர வாராவும், இறைவனும் மிக மிக பிடிக்கும்.

7 பிடிக்காத விசயங்களை கூட 'வந்து இந்த பூமியில் வந்து பிறந்தோமே' என்பதற்காக செய்வது பிடிக்கும்.

Thursday 16 February 2012

காதலில் காதல் இல்லை

வருடம் தவறாமல் வாங்கி செல்கிறேன்
வாடிப்போக இருக்கும் பூக்களையும்
மடிந்துபோன மரத்திலால் ஆன வாழ்த்து அட்டையும்
உணர்வற்ற வண்ணமிகு பரிசுப் பொருளும்

எனது உணர்வுகளை இவையெல்லாம் சுமக்கின்றனவாம்
காதலை வெளிப்படுத்துவதன் அவசியம் சொல்கிறார்கள்
கட்டியணைத்து உச்சிநெற்றியில், ஓரத்து இதழில் பதிக்கும்
முத்தம் தரும் பாதிப்பைவிடவா இவை தந்துவிடப்போகின்றன.

கண்கள் கலங்க வைக்கும் கதைகள் கேட்டதுண்டு
காதலை காதலால் மட்டுமே அவை சொல்லிச் சென்றதுண்டு
கருமேகங்கள் மறைத்து நிற்க வேடிக்கைப் பார்க்கும்
மழைத்துளிகள் போன்றே காதல் தவித்து போகிறது

வருடம் தவறாமல் வாங்கிச் செல்கிறேன்
இதை ஒரு வழக்கமாக கொண்டபின்னர்
அதுவுமே பழக்கமாகிப் போனபின்னர்
காதலில் காதல் ஒருபோதும் இருப்பது இல்லை. 

Saturday 11 February 2012

சுயநலவாதிகளால் ஆனது உலகம்

இதோ ஒரு நிகழ்வு. கிட்டத்தட்ட அனைவருமே இது போன்ற நிகழ்வுகளை நேரிலோ, திரைப்படங்களிலோ கண்டு இருப்பீர்கள். ஓட்டு வீட்டின் முன்னே அரைமணி நேரம் முன்னர் இறந்து போன ஒருவரை நினைத்து அழுது கொண்டு, அரற்றி கொண்டு அவரது மனைவி, மகன்கள், மகள்கள், மருமகள்கள், மருமகன்கள், சுற்றங்கள், நண்பர்கள் என குழுமி இருந்தார்கள். அவர் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என ஒரு நண்பர் சொல்லிக் கொண்டு இருந்தார். இறந்து போனவருடன் பல நாட்கள் பகைமை பாராட்டிய ஒரு சிலரும் அங்கே வந்து வருத்தம் தெரிவித்து கொண்டிருந்தார்கள். இதோ வாழ்க்கை அவரைப் பொருத்தவரை முடிந்து போன ஒன்று. இவ்வுலகில் பிறப்பு எடுத்தவர்கள் எல்லாம் இறக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. 

இந்த வாழ்க்கையில் எப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்கிறார்கள்? மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள், துரோகிகள், நண்பர்கள், எதிரிகள், நயவஞ்சகர்கள், குள்ளநரிகள், கபடதாரிகள், வேடதாரிகள், பிறன்மனை கள்வர்கள், விபச்சாரிகள், பித்தலாட்டகாரர்கள், முடிச்சவிக்கிகள், மொள்ளைமாரிகள், கேனையர்கள், கிறுக்கர்கள், அரக்கர்கள், தேவர்கள், மதவாதிகள், தீவிரவாதிகள், மிதவாதிகள், அகிம்சாவாதிகள், துறவிகள், முனிவர்கள், மற்றும் தூதர்கள் என பல்வேறு வகையாகவே பிரித்து பார்க்கிறது உலகம். தொழில் ரீதியாகவும் இந்த மனிதர்கள் பல்வேறு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள் என பற்பல. ஆனால் இவர்கள் எல்லாமே சுயநலவாதிகள் எனும் ஒரு அடைப்புக்குள் ஒடுங்கிப் போகிறார்கள். இந்த உலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது. 

இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றே வைத்து கொள்வோம். நமது சூரிய குடும்பத்தை மட்டுமே இப்போதைக்கு பார்ப்போம். பிற கேலக்ஸிகள், நட்சத்திரங்கள் எல்லாம் இப்போது நமது பார்வைக்கு அவசியம் இல்லை. அப்படி கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் என வைக்க கடவுள் நிச்சயம் சுயநலவாதி தான். பிற கோள்களை எல்லாம் விட்டுவிட்டு பூமியில் மட்டும் உயிரினங்கள் படைத்த காரணத்தை கடவுள் இதுவரைக்கும் எந்த சுயநலவாதிகள் மூலமும் பேசியது இல்லை. மதங்களை, கடவுளின் நூல்களை உருவாக்கிய எந்த ஒரு சுயநலவாதியும் இதுகுறித்து மூச்சு விட்டதில்லை. எதற்கு படைத்தோம் என்கிற நோக்கமே இதுவரை தெளிவில் இல்லை. 

அடுத்ததாக பரிணாமங்கள் பேசும் கொள்கை சுயநலவாதிகள் என்ன சொல்கிறார்கள். இது குறித்து  கோல்டிலாக்ஸ் கோட்பாடு ஒன்று சொல்லப்பட்டு வருகிறது. அதாவது பூமியானது மிகவும் சரியான தொலைவில் சூரியனிலிருந்து இருப்பதாலும், நல்லதொரு தட்பவெட்ப நிலை நிலவுவதாலும்  அதோடு நிறைய தண்ணீரும் பூமியில் இருப்பதாலும் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. வெள்ளி சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதால், தண்ணீர் அதன் பரப்பில் இருக்க வாய்ப்பு இல்லை எனவும், அப்படியே தண்ணீர் இருந்தாலும் அவை எல்லாம் ஆவியாகக் கூடும் என்பதால் அங்கே உயிரினங்கள் வாழ வசதி இல்லை என்கிறது. அதோடு மட்டுமில்லாமல் செவ்வாய் சற்று தொலைவில் இருப்பதால் செவ்வாயின் பரப்பு மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் தண்ணீர் ஓட வசதி இல்லை. அங்கே தண்ணீர் எல்லாம் உறைந்து போகக்கூடிய சாத்தியம் மட்டுமே உண்டு. இந்த சூழலிலும் உயிரினங்கள் வாழ சாத்தியமில்லை என்றாகிறது. அப்படியெனில் இவ்வுலகம் சுயநலவாதிகளால் மட்டுமே ஆனது என்பது ஊர்ஜிதமாகிறது. 

தனக்கு ஏற்ப சூழலில் மட்டுமே வாழ பழகிக் கொண்ட உயிரினங்கள் சுயநலவாதிகள் தான். அதற்கு அடுத்து எவர் எல்லாம் இந்த உலகில் பிழைத்து கொள்வார்கள் என்பது குறித்து பரிணாமங்கள் அடிப்படையில் பார்த்தால் 'எந்த ஒரு உயிரினம் இந்த சூழலில் தன்னைப் பக்குவபடுத்தி வாழ முடியுமோ' அந்த உயிரினமே வாழ இயலும், அந்த உயிரினத்தின் சந்ததிகள் மட்டுமே வாழ இயலும். அதாவது ஒரு குறிப்பிட்ட சீதோசன நிலை மாற்றத்தை தாங்கி கொள்ள இயலாத உயிரினங்கள் மறைந்து அழிந்துவிடும் என்பது பரிணாம தத்துவம். 

இதுவே மதங்களின் அடிப்படையில் பார்த்தால் 'நானே எல்லாம், என்னை தொடர்பவர்கள் ஒருபோதும் பாவத்தின் வழி செல்லமாட்டார்கள், என்னை அணுகுபவர்களுக்கு சரணாகதி தருகிறேன்' என்பது போன்ற கூக்குரல்கள். ஆனால் எந்த இறைவனின் பாதம் தொட்டாலும் மரணம் என்பது மட்டும் எல்லா உயிர்களுக்கும் உறுதி என்பதை ஒருபோதும் எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை. இந்த உலகம் முழுக்க முழுக்க சுயநலவாதிகளால் ஆனது. நிச்சயம் இது தவறான கூற்றாகவே முடியும். அது எப்படி இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது?

ஒவ்வொரு சீதோசன நிலைக்கும் என பறந்து செல்லும் பறவைகள் சுயநலவாதிகள். தனது உயிரை மட்டுமே காத்து கொள்ள வேண்டும் என போராடும் எந்த ஒரு உயிரினமும் சுயநலவாதிகள் தான். அப்படித்தான் பெரும்பாலானோர் இருக்கிறோம், இருக்கிறார்கள். 

தியாகங்கள் குறித்து எதற்கு இதுவரை பேசவில்லை. ஒரு தியாகியை  சுயநலவாதி என சொன்னால் எப்படி இருக்கும். ஒரு அன்னை, ஒரு சேய். இங்கே உணவுப் போராட்டம் நடைபெறுகிறது. எவரேனும் ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்க இயலும். அந்த சூழலில் அன்னை தனது உயிரை மாய்த்து கொண்டு சேய் உயிரை காப்பாற்றிட மட்டுமே முனைவார். இது எப்படி சுயநலமாகும்? இது போன்று எல்லா உயிரினங்களிலும் தனது நலம் கருதாது பிறர் நலம் பேணுபவர்கள் இல்லாமல் இல்லையா? இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது எனில் அந்த தாய் நிச்சயம் சுயநலவாதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்போது அதே தாய், வேறொருவரின் குழந்தை. இந்த தாய் தன்னுயிர் தருவாளோ? இந்த் இரண்டு சூழல்களிலும் எப்படி இருவரும் உயிர் வாழ்வது என சிந்திக்கும் உயிரினமே வாழ்வில் நிலை கொள்கிறது என்பதுதான் சுயநல தத்துவம். 

இப்போது மனிதர்களை சுயநலவாதிகள், பொதுநலவாதிகள், தியாகிகள் என மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 

சுயநலவாதிகள் : அன்றாடம் தனது வேலை, தனது குடும்பம், தனது சுற்றம், தனது நண்பர்கள், தனது உறவுகள் என வாழ்ந்தே கழித்தவர்கள். முதல் பத்தியில் படித்த மனிதர் போன்றவர்கள்.

பொதுநலவாதிகள்: இங்கே தனது சுயநலத்தை முன் நிறுத்தாமல் பொது மக்களுக்கு என்றே அதாவது இன்ன பிரிவினர், இன்ன மதத்துக்காரர், இன்ன கட்சிகாரர் என எந்த பேதமும் பார்க்காமல் அனைவரும் பயன் பெறும்படி வாழ்பவர்கள். இவ்வுலகில் இது போன்ற ஆத்மாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 

தியாகிகள்: தனது உயிரை தந்து பிறர் உயிரை காப்பவர்கள். காதலில் நடக்கும் இந்த கருமாந்திரம் எல்லாம் தியாகத்தில் சேராது. அதைத் தாண்டிய தியாகம். மிக மிக அரிதாகவே தென்படும். 

இந்த மூன்று பிரிவினைப் பார்த்தால் சுயநலவாதிகள் கூட்டமே அதிகம். அதனால் தான் இந்த உலகம் சுயநலவாதிகளால் ஆனது.

Friday 10 February 2012

புற்று நோய் பரிசோதனைகள் - நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை

முன்னுரை :

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி, பலரும் மனதில் நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு அரிய வாசகம். வாழ்வில் நடந்து கொள்ளும் முறைகள் பொருத்தே இந்த நோய்கள் பெரும்பாலும் மனிதர்களை தாக்குகின்றன. வாழ்க்கை முறையில் உணவு, சுற்றுப்புறம் என பல காரணிகள் சுகாதார வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கின்றன. புற்று நோயானது மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களினால் உருவாகிறது. இந்த மரபணு மாற்றம் ஏற்பட புகையிலை, சிகரெட், கதிரியக்கம், சில வேதி பொருட்கள் சூரிய ஒளி என பல தெரிந்த காரணிகளும், சில தெரியாத காரணிகளும் அடங்கும். வருமுன் காப்போம் என்பதுவும், நோயினை முற்றிலும் குணப்படுத்துவது காட்டிலும் அதனை தடுப்பது  மிக சிறந்தது எனவும் நோய் பற்றிய அறிவு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. மக்கள் இது குறித்த சிந்தனைகள் அறிந்திருத்தல் மிகவும் அவசியம் ஆகிறது. 

நோய் தீர்க்கும் மருத்துவம்: 

ஒரு நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை ஆய்ந்து அறிந்து அதற்குரிய மருத்துவத்தை செய்ய வேண்டும் எனும் சிந்தனையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்களின் சிந்தனையில் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகவே தங்களுக்குள் ஏற்படும் மன சோர்வு, உடல் வியாதிகள் என அனைத்திற்கும் மருந்து வகைகளை மூலிகைகள் மூலம் கண்டுபிடித்து தங்களது வியாதிகளை அந்த காலகட்டத்தில் குணப்படுத்தி இருக்கிறார்கள். புற்று நோயிற்கு கூட ஒரு தாவரத்தில் இருந்தே மருந்தனாது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புற்று நோயினை முற்றிலும் தீர்க்க முடியாவிட்டாலும் அதனை தடுக்கும் முறையினை இன்று மருத்துவத்தில் கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள். 

நோய்தனை ஆரம்ப நிலையிலே தடுக்கும் வாய்ப்புகளை இப்போது மருத்துவ உலகம் உருவாக்கி கொண்டு வருகிறது. முறையான பரிசோதனைகள் செய்வதன் மூலம் புற்று நோய் முதலான மிகவும் கடுமையான நோய்களை தடுத்து நிறுத்த இயலும். கவனக்குறைவுடன் செயல்படுவதை தவிர்ப்பதன் மூலம் நோய்களை தடுக்க இயலும். கீமோதெரப்பி எனப்படும் மருத்துவ முறைகள் கொண்டு, எக்ஸ் ரே, காமா கதிர்கள் மூலம் இந்த புற்று நோய்தனை கட்டுபடுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த எக்ஸ் ரே, காமா கதிர்கள் அளவுக்கு அதிகமாக உபயோகம் செய்யப்பட்டால் அவைகளே புற்று நோய் உருவாக்கவல்லவை. 

புற்று நோய்கள் வகைகள்: 

புற்று நோய் தலை முதல் கால் வரை வரக்கூடிய ஒன்றாகும். இந்த புற்று நோயில் இரண்டு பிரிவுகள் உண்டு, ஒன்று ஒரே இடத்தில் இருப்பது, மற்றொன்று உடலெல்லாம் பரவுவது. ஓரிடத்தில் இருக்கும் புற்று நோய்தனை விரைவில் குணப்படுத்திவிடலாம். உதாரணமாக மார்பக புற்று நோய் வந்தால் மார்பகத்தை அகற்றுவதன் மூலம் புற்று நோய் தனை அகற்றலாம். ஆனால் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளை அவ்வாறு பிரித்து விடுவது எளிதானது அல்ல. இதன் காரணமாக இந்த புற்று நோய் தனை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வதால் தடுக்கலாம். 

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பது போல் புற்று நோய்தனை அறுபத்தி நான்கு வகைகளாக பிரித்து உள்ளார்கள், அதில் மூளை புற்று நோய், எலும்பு புற்று நோய், கருப்பை புற்று நோய், ரத்த புற்று நோய், மார்பக புற்று நோய், கருக்குழல் புற்று நோய், ஆண் பெண் பிறப்பு உறுப்பு புற்று நோய், தோல் புற்று நோய், வாய் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், கல்லீரல் புற்று நோய், ஆண் இனப்பெருக்க சுரப்பி புற்று நோய், கணையம் புற்று நோய், வயிற்று புற்று நோய் மற்றும் மூச்சு குழல் புற்று நோய் என்பவை குறிப்பிடத் தகுந்தவை. 

ஒவ்வொரு புற்று நோயிற்கும் ஒவ்வொரு அறிகுறிகள் தென்படும். இந்த புற்று நோயானது உடனே நாம் உடல் பாகத்தை தடவி பார்த்து ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலாது. இந்த புற்று நோய் மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைந்து உடலெல்லாம் பரவி மனிதர்களை கொல்லும் வலிமை உடையது. நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியானது பலவீனம் அடையும் பட்சத்தில் இந்த நோயின் தன்மை தீவிரம் அடைகிறது எனலாம். 

பரிசோதனை செய்ய பயம் ஏன்:

மனிதர்களில் பலர் மருத்துவம் பார்க்கவே மிகவும் அச்சப்படுகிறார்கள்.  கிராமங்களில் காவல் நிலையத்திற்கு சென்றாலே கௌரவ குறைச்சல் என்பதை போல மருத்துவமனை பக்கம் செல்வது என்றால் தான் நோயாளி என்பது போன்ற உணர்வுகள் வருவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். வெளிநாடுகளில் எல்லாம் பெண்களுக்கு கருவாயில் புற்று நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ள வருமாறு மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு அனுப்புவார்கள். இந்த பரிசோதனை இலவசமானது, ஆனால் பெரும்பாலான பெண்கள் இது போன்ற அழைப்புகளை அலட்சியபடுத்துவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அலட்சியபடுத்துவதன் மூலம் தங்கள் உயிருக்கு தீங்கிழைக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். 

உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். உடலை பேணி காப்பதில் தான் உயிர் காப்பதின் ரகசியம் இருக்கிறது என்பதை இத்தனை தெளிவாக எவரால் சொல்ல இயலும். மருத்துவ தொழில் நுட்பம் பெருகிய இந்த காலகட்டத்தில் புற்று நோயிற்கான உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் ஆகிறது. 

பரிசோதனை வகைகள்: 

நமது உடலில் புற்று நோய் உருவானால் அதை எதிர்க்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இந்த புரதமானது ஆன்டிபாடி என சொல்வார்கள். புற்று நோய் எதிர்ப்பு ஆன்டிபாடி உடலில் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து பார்ப்பது மூலம் புற்று நோய் தடுக்கலாம். இந்த பரிசோதனையில் ஒருவேளை இந்த எதிர்ப்பு ஆன்டிபாடிகள் கண்டுபிடிக்க இயலாமல் போக வாய்ப்பும் உண்டு. எனவே வேறு சில பரிசோதனை முறைகளும் உபயோகிக்கலாம். 

நமது உடலில் புற்று நோய் ஏற்பட்டால் சில வேதி பொருட்கள் உடலில் அதிகரிக்கும், இந்த வேதி பொருட்களை பரிசோதனை செய்வதன் மூலம் எந்த வகையான புற்று நோய் வந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதில் ஆல்பா பிட்டபுரதம், புற்றுநோய் ஆண்டிஜென் போன்றவை ஆகும். மேலும் ரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே இருக்கும், ஆனால் புற்று நோய் வந்தால் இந்த பொருட்கள் அளவு மாறுபடும் அதை வைத்து புற்று நோய் கண்டு பிடிக்கலாம். இவை எல்லாம் மிக மிக ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்க கூடிய வசதிகளாகும். 

சிறிது பெரிதானாலும் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் உண்டு. உடலை ஸ்கான் செய்து இந்த புற்று நோய் கண்டுபிடிக்கலாம். பெட் ஸ்கான் என சொல்வார்கள். மேலும் உடலில் ஏதாவது கட்டி இருகிறதா என உறுப்புகளின் அளவினை பார்த்து சொல்வதும் உண்டு. இப்படி பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொண்டபின்னர் உரிய மருத்துவ முறையினை பின்பற்றினால் புற்று நோய்தனை தடுக்கலாம். 

விழித்து கொள்ளுங்கள்: 

புற்று நோய் வந்தால் மரணம் நிச்சயம் எனும் உணர்வை அகற்றிவிட்டு புற்று நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து கொண்டு அந்த நோயின் தன்மையில் இருந்து காத்து கொள்ளலாம். தற்போது கரு உருவானதும் அந்த கருவில் மார்பக புற்று நோயிற்கான மரபணு இருக்கிறதா எனும் அளவிற்கு கரு பரிசோதனை எல்லாம் தற்போது மருத்துவத்தில் வந்துவிட்டது. இதை எல்லாம் கிராமங்கள், நகரங்கள் என எல்லா இடங்களிலும் ரத்த தான முகாம், கண் பார்வை முகாம் போன்றது போல, புற்று நோய் முகாம் நடத்த வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். 

இதுகுறித்த அறிவினை எங்கும் பரப்பிட பல அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது, அந்த அமைப்புகளுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்து மக்களை அறியாமையில் இருந்து காப்பது அனைவரின் கடமையாகும். 

முடிவுரை:

புற்று நோயிற்கு முற்று புள்ளி வைக்க பரிசோதனை முறைகள் மிகவும் உதவி புரியும் என்றாலும் இது குறித்த அறிவு அனைவருக்கும் அவசியமாகும். அதனை எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்திட போராடுவோம். 

Monday 6 February 2012

கோவம் ஏனய்யா? நாம சாவது

தமிழகத்தில் தென்மாவட்டமாகிய விருதுநகர் அருகில் உள்ள குண்டத்தூரில் இருந்து ஒரு சாமி தாத்தா வருடம் தோறும் எங்கள் ஊருக்கு வருவார். எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள திண்ணையில் தினமும் ஒரு வாரத்திற்கு இரவு கதை சொல்வார். வீட்டில் என்னை கதை கேட்க சொல்லி போகச் சொல்வார்கள். ஆனால் நான் இரவு எட்டு மணி ஆனதும் தூங்க போய்விடுவேன். ஒருநாள் கூட அவர் சொன்ன கதையை கேட்க நான் போனது இல்லை. 

வீட்டின் மாடியில் தான் படுத்து உறங்குவது வழக்கம். அப்போது அவர் பேசும் பேச்சுகள் காதில் காற்றோடு கலந்து வந்து விழும். அவருக்கு.நல்ல கனத்த குரல் அவர் கதை சொல்லி முடித்ததும் ஒரு பாடல் பாடுவார். ஆனால் என்ன என்ன கதை சொன்னார் என்பதெல்லாம் எதுவுமே தற்போது நினைவில் இல்லை, ஏனெனில் நான் கதையை காது கொடுத்து கேட்டது இல்லை. இந்த சாமி தாத்தா எனது உறவினர் தான். இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. குண்டத்தூர் சென்றபோது ஒரு சில முறை பார்த்து இருக்கிறேன். எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் பார்த்துவிட்டு புன்னகையோடு சென்றதோடு சரி. அவர் என்னிடம் பேசியது இல்லை, நான் அவரிடம் பேசியதும் இல்லை. 

ஆனால் அவர் கதையின் முடிவில் பாடிய பாடலின் முதல் வரிகள் மட்டும் எப்போதும் என்னில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன. எனக்கு கோபம் வரும் போதெல்லாம் இந்த பாடல் மனதில் தைத்துவிட்டு போகும். ஆனால் கோபம் வந்தது வந்ததுதான். எதற்கு இந்த கோபம் என கோபம் வந்து சென்றபின்னர் சிந்தித்து பார்த்தால் 'எல்லாம் முட்டாள்தனமாக மட்டுமே தோன்றும்'. 

அவர் பாடிய பாடலின் முதல் வரி இதுதான். 'கோவம் ஏனய்யா நாம சாவது நிசம் ஐயா' அதற்கடுத்து என்ன வரிகள் பாடினார், அந்த பாடல் எப்படி போகும் என்பதெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் இந்த வரி மட்டும் என்னை மிகவும் பாதித்த வரி. நான் மிகவும் கோபக்காரனாகவே எனது வாழ்வில் நான் வாழ்ந்து இருந்து இருக்கிறேன். என்னை எனது வீட்டில் விசுவாமித்திரர் என்றே சொல்வார்கள். 

ஆனால் நான் கோபம் கொண்டது எல்லாம் அன்றைய நாட்களின் தேவைக்கு மட்டுமே. எனக்கு சமூக அக்கறையோ, சமூகத்தின் மீதான அக்கறையில் எழுந்த கோபமோ, அல்லது தீண்டத்தகாதவர் என எனது ஊரில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமுதாயம்தனை ஒடுக்கி வைத்தவர்களின் மீதான கோபமோ, சாலை போடப்பட்ட ஒரே மாதத்தில் பழுதாகிப் போன சாலை போட்டவர்கள் மீதான கோபமோ, சாதிகள் என பல சாதிகள் கொண்ட ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, சாதியை ஒழிக்க வேண்டும் என்கிற கோபமோ இல்லை. எனது கோபம் எல்லாம் மிக மிக சின்ன சின்ன அதுவும் அற்ப விசயங்கள் என சொல்வார்களே அப்படித்தான் இருந்தது, இப்பவும் அப்படித்தான் இருக்கிறது. 

இந்த கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்றே ஒருமுறை எனக்கு ஒருவர் சொன்னார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என மற்றொருவர் சொன்னார். ஆனால் இந்த கோபம் மொத்த குடும்பத்தையே வேரறுக்கவல்லது என்பதை பல கதைகளில் கற்று தெளிந்து இருக்கிறேன். இருப்பினும் கோபம் நம்மை விட்டு அகல்வதில்லை. 

கோபத்தை எதற்காக கட்டுபடுத்த இயலாது? அல்லது கோபத்தை எதற்காக கட்டுபடுத்த வேண்டும்? எனது நண்பர் என்னிடம் சொல்வார், ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் இந்த கோபம் எல்லாம் அனாவசியம் என்பார். ஆனால் அவர் கொண்டுள்ள கோபங்கள் பற்றி எதுவுமே பேசமாட்டார். நான் மிக மிக கோபக்காரன், ஆனால் எப்படி வெளிப்படுத்துவது, எங்கே வெளிப்படுத்துவது என்பதில் நான் மிகவும் கவனமாகவே இருக்கிறேன். 

சாலையில் போய்க் கொண்டிருப்பவனிடம் நான் ஒருபோதும் எனது கோபத்தை காட்டியது இல்லை. எனது உற்றார் உறவினர் என இவர்களிடமும் கூட நான் அவ்வளவாக கோபம் காட்டியது இல்லை. ஏதேனும் அவர்கள் செய்தால் கூட புன்முறுவலுடன் விலகிப் போய்விட முடிகிறது. இவர்கள் மீது கோபம் கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்கிற உணர்வு மேலிடுகிறது. இவர்களின்பால் எனது அன்பு கூட அளவுடனே இருக்கிறது. என்னால் முடிந்தால் அவர்கள் கேட்கும் உதவிகளை செய்வதுடன் நான் எனது அன்பு எல்லாம் அங்கே நின்றுவிடுகிறது. கேட்டுவிட்டார்களே என மாய்ந்து மாய்ந்து செய்யும் பழக்கம் எல்லாம் இல்லை. எவர் எப்படி பேசினால் எனக்கு என்ன என்கிற மமதை அதிகமாகவே இருக்கிறது. 

ஆனால், எங்கு அன்பு அதிகம் செலுத்துகிறேனோ அங்கே நான் அதிகம் கோபம் கொள்கிறேன். அன்புதனை செலுத்தும் இடத்தில் அங்கே கோபத்திற்கு என்ன வேலை? புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கிறது. இந்த கோபத்தின் மூலம் நான் இதுவரை எவரையுமே அடித்தது இல்லை. ஆனால் வார்த்தைகளால் சுட்டு இருக்கிறேன் என்றே கருதுகிறேன். ஒருவேளை நான் அடித்து இருந்தால் ஏற்பட்டு இருக்கும் வலியை விட இந்த வார்த்தைகளின் வலி எனக்கு அதிகம் வலித்து இருக்கிறது. 

கோபத்தை கட்டுபடுத்த பலமுறை நினைத்துவிட்டேன், ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள். மீண்டும் கோபம் வந்து தொலைக்கிறது. எனது சாமி தாத்தா பாடிய பாடலும் மனதில் ரீங்காரம் இடுகிறது. இறுதியாக ஒரு முடிவில் வந்து நிற்க முடிகிறது, அதாவது  மனிதன் இறக்கும் வரையில் இந்த கோபம் இறப்பது இல்லை. ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொண்டு பல்லை நறநறவென கடித்து கொண்டு வார்த்தைகளை துப்பிவிடுகிறது. 

சினம் - குலத்தை அழித்துவிடும். சினம் - நண்பர்களை குலைத்துவிடும். 

நியாயமான கோபம், தார்மீக கோபம் என கோபம் பற்றி என்னவெல்லாமோ சொல்லி நியாயப் படுத்துகிறார்கள். சாவே உனக்கு சாவு வராதா என கதறி அழுதானாம் ஒரு கவிஞன்.  மனித வாழ்வில் பலரும் கோபமே உனக்கு சாவு வராதா என்று கேட்பதில் கூட கோபம் கொள்கிறார்கள். 

கோபம் பற்றி எழுத தூண்டிய சகோதரி ஷக்திப்ரபா பதிவுக்கு நன்றி. 

Friday 3 February 2012

ரஜினிகாந்தும் இலக்கியமும்

ரஜினி இலக்கிய விழாவில் பங்கு எடுக்க போகிறார் என்றதுமே எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இந்த மனிதருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என நினைப்பு வந்து அமர்ந்தது. அதோடு நான் இது சம்பந்தப்பட்ட ஒரு செய்தியை வலைப்பூ ஒன்றில் படித்தபோது எஸ் ரா மீதான குற்றச்சாட்டு கண்டு மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இப்படி எல்லாம் செய்து இருப்பார்களா என யோசிக்க வைத்தது. 

அந்த குற்றசாட்டின் சாராம்சம் என்னவெனில் எஸ் ராவுக்கும், சாகித்ய அகாடெமி விருது பெற்ற வெங்கடேசன் என்பவருக்கும் தீராத பகை என்பதாகவும், எஸ் ராவின் மரியாதை குறைந்து போனதாகவும், அதனால் அந்த மரியாதையை நிலைநிறுத்த எஸ் ரா, ரஜினியை வைத்து விழா எடுக்கிறார் என்பதுதான். 

இத்தனைக்கும் எஸ் ரா எனது பக்கத்து ஊர்க்காரர். நான் அவரை பார்த்தது இல்லை, படித்தது இல்லை. எடின்பரோ நண்பர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த 'உறுபசி' கூட இன்னமும் புத்தக அலமாரியில் உறங்கி கொண்டிருக்கிறது. சில முறை எடுத்து பார்த்துவிட்டு வாசிக்காமல் வைத்து இருக்கிறேன். சமீபத்தில் வாசித்த தமிழ் நாவல் என எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஊரில் இருந்தவரை சில புத்தகங்கள் கல்கத்தாவில் இருந்த நூலகங்களில் இருந்து எடுத்து வந்து படித்து இருக்கிறேன். என்னுடன் படித்த அன்பழகன் சார், எனது சீனியர் அண்ணாதுரை சார் இவர்கள் எல்லாம் தமிழ் புத்தகங்கள் எல்லாம் வாரம் வாரம் அள்ளிக்கொண்டு வந்து படிப்பார்கள். ஆச்சர்யபட்டு இருக்கிறேன். 

இப்படி இலக்கியங்கள் படைத்து கொண்டிருக்கும் இலக்கிய எழுத்தாளர்கள் இடையே போட்டி பொறாமை என்றெல்லாம் அந்த வலைத்தளத்தில் படித்தபோது மிக மிக வருத்தமாகவே இருந்தது. மனதில் என்னவெல்லாமோ எழுத தோன்றியது, பின்னூட்டம் எதுவும் இடாமல் வந்துவிட்டேன். ஏனெனில் சென்னையில் இருக்கும் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளமால் என்ன சொல்வது எனும் மனநிலைதான். எப்போது இந்த இலக்கிய விழா நடக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் ரஜினியும் எலக்கியமும் என தலைப்பிட்டு ஒன்றை எழுத நினைத்தபோது ரஜினியின் பேச்சை கேட்காமல் எழுதக் கூடாது என தள்ளிவைத்தேன். அது மிகவும் சரியாக போய்விட்டது. ரஜினிகாந்தும் இலக்கியமும் என நன்றாகவே தலைப்பிட்டு எழுத வைத்தது. 

ரஜினி மேடை பேச்சுகளில் எப்போதுமே குட்டி குட்டி கதை சொல்வார். அந்த கதையில் பல அர்த்தங்கள் பொதிந்து இருக்கும். எழுத்து என்பதன் வலிமை என்ன என அவர் பேசிய பேச்சு அற்புதம். அதிலும் கடவுள் இருக்கிறார் என்பதற்கான கதையை சொல்லி அதற்கு பின்னர் அவர் முடித்த விதம் அட்டகாசம். அந்த கதையின் கடைசி வரிகள் தான் ரஜினி ஒரு சிறந்த இலக்கியவாதி என காட்டியது. என்ன சொல்கிறாய் என்பதல்ல எழுத்து, எப்படி சொல்கிறாய் என்பதுதான் எழுத்து. 

எத்தனை விசயங்கள். தன்னை தாழ்த்தி பேசும் பேச்சில் மனிதர் உயர்ந்து நிற்கிறார். இதைவிட அந்த வலைத்தளத்தில் எழுதி இருந்த குற்றச்சாட்டுதனை பொடிபொடியாக்கும் வண்ணம் எப்படி இந்த விழா நடக்க காரணமானது என அவர் சொன்ன விதம் எப்படியெல்லாம் உலகில் பிறர் பொய் பேசித் திரிகிறார்கள், வன்மை வைத்து திரிகிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. ரஜினி ஏமாறவில்லை. ஏமாற்றவும் இல்லை. 

தமிழ் எழுத்தாளர்கள் என ஜெயமோகன், சாருநிவேதிதா ( இவரை பலநாட்கள் பெண் எழுத்தாளர் என்றே நினைத்து இருந்தேன், சுஜாதாவை நினைத்தது போல) இவர்களுக்கு இடையே நடக்கும் எதோ அறபோராம் , அக்கப்போராம் அதையெல்லாம் படித்து எழுத்தாளர்கள் எதற்கு இப்படி இருக்கிறார்கள் எனும் நினைப்பை அகல வைத்தது ரஜினியின் பேச்சு. 

இவரது பேச்சை கண்டு ரசிக்க இதோ இங்கே. இரண்டாம் பகுதி. 

ஒரு குட்டி சுயசரிதை எழுதப்பட்டு விட்டதாம். பிறர் மனம் நோக வேண்டாம் என வெளியிடவில்லை என அவர் சொன்னதில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள்.