Wednesday 7 March 2012

ஜீரோ எழுத்து -3 (ஒண்ணுமில்லை கோட்பாடு)

உலகில் எல்லாவகையான சிந்தனையாளர்கள் உண்டு. ஆனால் இவர்களை ஒரே மாதிரி சிந்திப்பவர்கள், வித்தியாசமாக சிந்திப்பவர்கள் என பிரித்து விடலாம். இதன் காரணமாகவே ஒருவரைப் பற்றி அவரா, அவர் அப்படித்தான் எனும் சிந்தனை கூட நம்மில் வந்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட சிந்தனையில் வறட்டு சிந்தனை, தெய்வீகச் சிந்தனை, காதல் சிந்தனை, காம சிந்தனை, வேலை சிந்தனை, வெட்டிவேலை சிந்தனை என பல சிந்தனைகள் அடக்கம்.

நாம் இயங்கி கொண்டே இருக்க வேண்டும். நாம் ஏதும் செய்யாமல் இருந்தால் நமக்குள் விபரீத சிந்தனைகள் எல்லாம் எழும் என்பார்கள். ஏதும் செய்யாமல் எவரேனும் இருக்க இயலுமா? உறங்குதல் கூட ஒரு செயல் என ஆனபின் எப்படி ஏதும் செய்யாமல் எவராலும் இருக்க இயலும்? 'சும்மா இருப்பதே சுகம்' என்றார்கள்.

ஒரு நபரை சந்திக்கிறோம். நாம் அவரிடம் கேட்கிறோம். ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என! அவர் தனது பைகளில் எல்லாம் தேடிப்பார்த்துவிட்டு என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது தன்னை எப்படி அவர் மறந்தார் எனும் கேள்வி எழ வேண்டும். ஒரு மனிதரை விடவா அவரிடம் இருக்கும் பொருள்கள் பெரிது? அவர் என்ன சொல்லி இருக்க வேண்டும், என்னைத் தவிர என்னிடம் வேறு பொருட்கள் இல்லை. ஆனால் எவரும் அப்படி சொல்வதில்லை. என்னிடம் ஒன்னும் இல்லை என சொல்வதன் மூலம் அவர் இருக்கிறார் எனும் புரிதல் தானாக வர வேண்டும் என்பதுதான் அந்த பதிலின் அர்த்தம். ஆனால் இந்த உலகம் பொருள்கள் இல்லாத ஒருவரை 'வெறும் பயல்' என்றுதான் பட்டம் சூட்டுகிறது.

எதற்கு இப்படி இருக்கிறாய்?

ஒண்ணுமில்லை.

ஏதாவது பிரச்சனையா?

ஒண்ணுமில்லை.

ஒண்ணுமே இல்லைன்னா எதுக்கு இப்படி இருக்கிறாய்?

அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டேனே.

இப்படி ஒண்ணுமில்லை, மனிதர்களின் வாழ்வில் ஒரு பெரும் அங்கம் வகிக்கிறது. அறிவியல், தத்துவம், இறையியல் எல்லாம் இந்த ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி என்ன சொல்கிறது?

அறிவியல் குறிப்பாக இயற்பியல் விதிப்படி இந்த உலகம் ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து தொடங்கி ஒன்றுமே இல்லாத ஒன்றில் முடிவடையும் என்பதுதான். ஒன்றுமே இல்லாமல் எப்படி ஒன்று இருந்திட முடியும் எனும் போது 'அப்படித்தான், இப்போது என்ன செய்யப்போகிறாய்' என இயற்பியல் விதிகள் நமது சிந்தனைகளை கட்டுப்படுத்த எத்தனிக்கும்போது அங்கே 'ஒண்ணுமே சொல்ல இயலாமல்' போய்விடக்கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமே. ஆனால் இது ஒரு விதண்டாவாதம் என எவரும் நினைப்பதில்லை, ஏனெனில் இது அறிவியல்.

ஒரு முழு உருவம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். இப்போது அந்த உருவம் இருக்கிறது. இதற்கு முன்னர் அந்த உருவம் எங்கே இருந்தது? எங்கேயும் இல்லை என சொன்னால் நம்மால் நம்ப இயலுமா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது தத்துவம் சொல்லும் ஒண்ணுமில்லை. இப்பொழுது அதே உருவத்தை சின்னாபின்னாமாக்கி தூள் தூளாக்குவோம். நமது கண்ணுக்கே தென்படாத துகள்கள் இப்போது அந்த உருவம் ஆகிவிட்டது. அந்த உருவம் ஒன்றுமே இல்லையா எனில் ஆம் அப்படித்தான் ஆகிவிட்டது. துகள்கள், முடிந்தால் கண்டுபிடித்து கொள் என்கிறது தத்துவம். பிறக்கும் முன்னர் நாம் எப்படி இருந்தோமோ அப்படியே இறந்து பின்னர் ஆகிவிடுவோம் என மிக சர்வசாதாரணமாக சொல்லி செல்கிறது இந்த தத்துவம் சார்ந்த ஒண்ணுமில்லை. இதைத்தான் எதைக்கொண்டு வந்தாய், எதைக் கொண்டு செல்லப்போகிறாய் என பகவத் கீதை பேசுகிறது என ஒரு சிந்தனையாளர் எழுதினார்.

அடுத்ததாக இறையியல் சொல்லும் ஒண்ணுமில்லை. கடவுள் இருக்கிறார். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார். எவரேனும் தெரிந்து கொண்டனரா என்றால் ஒண்ணுமில்லை என ஆகாயத்தை விளிக்கிறார்கள். இந்த ஒண்ணுமில்லை தன்னை தானே அறிந்து கொள்தல் என பொருள்கொண்டு அதில் இறைவனை அறிவது என்பதுதான் இறையியல் தத்துவம்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் வானத்தில் இருந்து பார்த்தால் பூமியில் உள்ள எல்லாம் ஒரே மாதிரிதான் தெரியுமாம்.  சமநிலை கோட்பாடு என்பதைத்தான் ஒண்ணுமில்லை கோட்பாடு அடைய துடிக்கிறது என்கிறது இந்த அறிவியல், தத்துவம், இறையியல் கோட்பாடுகள்.

சமநிலையை நோக்கிய ஒரு இழுவை என அறிவியலும், சமநிலையை நோக்கிய ஒரு பார்வை என தத்துவம், இறைவனுடன் கலந்து சமநிலை கொள்தல் என இறையியலும் ஒண்ணுமில்லை கோட்பாடு பற்றி குறிக்கிறது.

ஆனால் சம நிலையும், ஒண்ணுமில்லை என்பதும் வெவ்வேறானவை என்பதை இந்த மூன்று பார்வைகளும் பார்க்காமல் விட்டுவிட்டன. எப்படி ஒண்ணுமில்லை சமநிலை ஆக இயலும்? எல்லாம் இருப்பது கூட சமநிலை அடைய முடியும் அல்லவா.

ஒண்ணுமில்லை என்பதெல்லாம் நமது சிந்தனையை கட்டிப்போட சொன்ன ஒரு வழி. எனது தாய் சொன்ன ஒண்ணுமில்லை இன்னும் நினைவில் ஆடிக்கொண்டுதான் இருக்கிறது. இயற்பியல் விதிகள் அனைத்தையும் தகர்த்துவிடத்தான் ஆசை. ஆனால் இயற்பியல் விதிகளே ஒன்னுமில்லாதபோது இல்லை என சொல்லியபின்னர், இல்லாத விதிகளை எப்படி தகர்ப்பது?

கந்தகம் நிறைந்த மண்ணில் இருந்துதான் உயிரினங்கள் தோன்றின என எவரேனும் சொன்னால் என்ன செய்வீர்கள்? அது உண்மையாக இருக்காது என ஒதுங்கி போய்விடுவீர்களா? அப்படி கந்தகம் நிறைந்த மண் எங்கே இருக்கிறது என தேடித்தான் போவீர்களா?

(தொடரும்)

Sunday 4 March 2012

இறைவனும் இறை உணர்வும் - 4

பகுதி - 3 

'என்ன திடீரென அமைதியாக இருக்கிறாய், உன்னை நினைத்து நாங்கள் வருத்தப்பட்டு கொண்டிருந்தோம்' என்றார் சக தொழிலாளி. 

'இறைவனிடம் மனம் லயிக்கும் போதெல்லாம் இவ்வாறு ஆகிவிடுவேன், எதற்கு இந்த வாழ்க்கை, எதற்கு இந்த போராட்டம், எதற்கு மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள், இந்த உலக வாழ்க்கையில் இருந்து எப்படி தனித்து கொள்தல், வாழ்வின் ஆதாரம், வாழ்க்கையின் இயல்பு, இருப்பு என்பதெல்லாம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவேன், அதுதான் காரணம்' என்று நான் சொன்னதும் என்னை சக தொழிலாளி வித்தியாசமான பார்வையில் பார்த்தார். 

நான் சொன்னதில் அதுதான் உண்மையா? இந்த உண்மை குறித்தும், உண்மை வேறு, நம்பிக்கை வேறு என்பது குறித்தும் முன்னரே எழுதிவிட்டேன். மீண்டும் அதே இடத்துக்கு செல்ல விருப்பம் இல்லையெனினும் நான் மேற்சொன்ன வாக்கியங்களை திரும்பவும் யோசிக்கிறேன். நான் உண்மையிலே அதற்காகத்தான் அப்படி அமைதியாக இருந்தேனா? இல்லை என்று மட்டுமே தோன்றுகிறது. நான் எதற்காக அமைதியாக இருந்தேன் என்பது குறித்து என்ன சிந்திப்பது, ஆனால் அந்த நேரத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன. சமயோசித வார்த்தைகள், எதற்கு பேசுகிறோம், பிறரிடம் பேசி அதன் மூலம் என்ன ஆதாயம் தேட நினைக்கிறோம் என்பதெல்லாம் நினைத்து கொண்டிருக்க சமீபத்தில் நண்பர் ஒருவர் மனப்புழுக்கத்தை இங்கே கொட்டி தீருங்கள் என ஒரு பொது மன்றத்தில் எழுதி வைக்க அதைப் படித்ததும் எனக்கு மூன்றே வாக்கியங்கள் எந்த ஒரு சிந்தனையும் இன்றி வந்து விழுந்தது. 

அற்றதெனினும் உற்றதாய் கேட்டு உவகை கொள்ளச் செய்வான் எம்பெருமான் 
சொற்றொடர் கொண்டு வருவோர் போவோரிடம் சொல்லித்திரிமின்
கற்றதனால் என்ன பயன், நன்று இல்லையெனின் அன்றே மற.

இந்த வாக்கியம் எழுதிய பின்னர் சில நாட்களாக யோசனை. எதற்கு இந்த வாக்கியம் வந்து விழுந்தது. மனிதர்கள் தங்கள் கவலைகளை, தங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை, துரோகங்களை  பிறரிடம் பரிமாறிக்கொள்ளும் போது ஆறுதலான வார்த்தைகளும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் கிடைக்கும் பட்சத்தில் மனிதர்கள் தங்கள் கவலைகளை தூக்கி எறிந்து விட்டு வாழ இயலும் என்கிற தொனியில் தானே நண்பர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம், எம்பெருமானிடம் சொல்லுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என சொல்வதன் அர்த்தம் என்ன எனும் சிந்தனை வலுப்பெற்றது. 

நமது மனது நமது கட்டுபாட்டில் இருக்க வேண்டும். நாம் ஒருவரே நம்மை ஆறுதல் படுத்த முடியும், பிறரது வார்த்தைகள் நமக்கு முள்ளாகவோ, மெத்தையாகவோ இருக்க நம்மால், நமது எண்ணத்தால்  மட்டுமே இயலும். நண்பர்கள் நமக்கு முக்கியம், உறவுகள் முக்கியம். ஆனால், தவறாக எடுத்து கொள்ளாதீர்கள், பெரும்பாலனவர்கள் ஏதாவது ஒரு சூழலில் பிறரை எள்ளி நகையாடும் மனப்போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். நகைச்சுவைக்காகவேனும் நாம் பிறரின் செயல்களை நம்மிடம் மதிப்பு கொடுத்து பேசியதை குறிப்பிட்டு கேலி பேசிவிடுவோம். இதனால் தான் இறைவன் என்பவர் இங்கே வருகிறார். 

அற்றதெனினும் உற்றதாய் கேட்டு! இங்கே எனக்கு இந்த இரண்டு வார்த்தைகளில் அற்றது என்பது என்ன பொருள் என தெரியாது. ஆனால் உற்றது என்பதற்கு அற்றது எதிர்பதமாக இருக்கலாம் எனும் ஒரு நினைவில் வந்து விழுந்த வார்த்தைகள் அது. அப்படி இறைவனிடம் நமது குறை நிறைகளை சொல்லும்போது நம்மை உவகை கொள்ள செய்வான். நாம் நம்மை தேற்றி கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இதன் மூலம் வரும், வர வேண்டும். 'கடவுள் மீது பாரத்தை போட்டுவிடு' என எதற்கு சொன்னார்கள். அவன் நமது பாரத்தை எல்லாம் சுமப்பான் என்றா? இல்லவே இல்லை, நமது பாரம் நம்மில் இருந்து இறங்கி நாம் சுகமாகிவிடுவோம் என்பதை அறிந்தே அப்படி சொன்னார்கள். இது எத்தனை பேருக்கு உண்மையாக நடக்கிறதோ எனக்கு தெரியாது, ஆனால் இறைவனே கதி என நமது பணியை நாம் செய்து கொண்டிருப்பது ஆனந்தத்திலும் ஆனந்தம். 

முதன் முதலில் பேரின்பத் தழுவல்கள் கவிதையை எழுத நினைத்தபோது இப்படித்தான் முதல் கவிதை வரிகள் வந்து விழுந்தது. இப்போதும் யோசித்து பார்க்கிறேன், அந்த கவிதைகள் எல்லாம் எழுதிய தருணத்தில் எனது உணர்வுகள் எல்லாம் எப்படி இருந்தன. அதுதான் இறை உணர்வா என்றெலாம் யோசிக்க இயலவில்லை. 

பொய் சொல்ல நினைத்தபின் இதில்
உண்மை உரைந்திருக்கும் என ஒருவரேனும்
நினைத்து ரசிப்போர் இப்பாரினில் உளரேனெனில் 
உன்னையன்றி வேறு எவர் இறைவா? 

அடுத்து எழுதிய ஐந்தாம் கவிதையில் 

உன்புகழ் பாடிட எண்ண வரம்வேண்டுமென 
கேட்டிட வெகுளியாய் ஒதுங்கி 
படிதாண்டி வந்துன் அருட்கரம் பற்றியதும்
வேண்டுதல் ஏதுமில்லை இறை வா. 

இப்போது நினைத்தால் கூட கண்கள் கலங்குகிறது. எவர் என்னை இப்படியெல்லாம் எழுதச் சொன்னது. எனக்கு என்ன அப்போதைய இந்த எண்ணத் தேவை இருந்தது. மிகவும் மதிப்பிற்குரிய நண்பர் அப்போதே கேட்டார். என்னவா? எண்ணவா? இறை வா!  

இதெல்லாம் நடந்த காலம் என பார்த்தால் இரண்டு மூன்று வருடங்கள் முன்னர் என்றே நினைக்கிறேன். அதற்கு பின்னர் இந்த இறைவன் எனும் பற்றுதல் விட்டு சற்று விலகியது போன்றே ஒரு உணர்வு. உண்மையிலேயே ஒதுங்கியா இருந்தேன்? அல்லது அப்போதும் இதே மன நிலைதானா? அடுத்து சில நாட்கள் பின்னர் எழுதிய கவிதை இப்படித்தான் வந்து இருந்தது. 

பற்றிய கரம்தனை விட்டே தவித்து
சுற்றியே இடங்கள் தேடி கொற்றவன்
தன்புகழ் ஏற்றிட மக்கள் காப்பதுபோல் 
உன்புகழ் ஏற்றிட  ஏதுசெய்தாய்.  

இப்படியெல்லாம் இருந்து கொண்டிருக்க சக தொழிலாளியிடம் பேசிய தினத்தன்று இரவில் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பிற மதத்தினரில் இருந்து ஒரு சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கி இருக்க எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதுதான். அதில் சில முஸ்லீம்கள், சில கிருத்துவர்கள் என இருந்தார்கள். இதில் ஒரு முஸ்லீம்  தினமும் மசூதிக்கு சென்று ஐந்துமுறை தொழுகை செய்யக் கூடியவர். மற்றொரு முஸ்லீம்  இந்த தொழுகை எல்லாம் அத்தியாவசியம் இல்லை என கருதக்கூடியவர். இப்படி இருக்க அந்த தொழுகை செய்யக்கூடிய முஸ்லீம்தனை தங்களுடன் வெளியே செல்ல அழைக்கிறார்கள். அவர் செல்லும் இடத்தில் மசூதி எல்லாம் இல்லை. முதலில் மறுக்கிறார், எல்லாரும் வற்புறுத்துகிறார்கள். மற்றொரு முஸ்லீம் கூட 'நீ செய்வது சரியில்லை' என்கிறார். சரி என இறுதியாக தொழுகை செய்யும் முஸ்லீம் வெளியில் செல்ல சம்மதம் சொல்கிறார். ஒரு இடத்துக்கு செல்கிறார்கள். 

அங்கே ஒரு நிகழ்வு நடக்கிறது. அனைவரும் ஆங்காங்கே பேசி கொண்டிருக்க 'தொழுகை நடத்தும் முஸ்லீம்' ஒரு பாயை விரித்து அதன் மீது அமர்ந்து ஒரு திசையை நோக்கி தொழுகை செய்கிறார். இதைக் கண்ட ஒருவர் கண்கள் கலங்குகிறது. இறைவன் மீது எத்தனை அலாதிப் பிரியம் இருந்தால் தன்னுடன் இருப்பவர்களின் மீது மனம் நோகாமல், பயணத்திற்கும் வந்து அதே வேளையில் இறைவனை விடாமல் தொழும் அந்த மனிதரை கண்டு பலரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒரு நண்பர் எழுதியது நினைவுக்கு வருகிறது. 'மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார்'. தொழுகை செய்யும் முஸ்லீமிடம் சொல்கிறார்கள். வாழ்க்கையில் பலர் தங்களது கொள்கையில் வறட்டு பிடிவாதம் கொண்டிருப்பதால் பிணக்கங்கள் ஏற்படுகிறது என. 'விட்டு கொடுப்பவர் கெட்டுப் போனதில்லை' என்கிறார்கள். இதே தொழுகை செய்யும் முஸ்லீமை எதற்கு அவர்கள் விட்டு கொடுத்திருக்க கூடாது எனும் எண்ணம் எழலாம். இருப்பினும் இதெல்லாம் தாண்டி அவர் கொண்டிருந்த இறைவன் மீதான பற்று என்னை நிறையவே சிந்திக்க வைத்துவிட்டது. மேலும் ஒரு நிகழ்வில் அந்த மனிதர் சொன்ன எல்லாதரப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வில் நாம் தவறுகள் செய்வது வாடிக்கை, ஆனால் மன்னித்து நடந்து கொள்ளும் மனப்பான்மை நமக்கு வேண்டும், அதைத்தான் இறைவன் சொல்கிறார் என நினைவு கூர்ந்தது கண்டு இப்படி எல்லாரும் எல்லா நேரங்களிலும் நடந்து கொண்டால் எத்தனை சுகமாக இருக்கும் என்றே நினைக்க தோணியது. மேலும் நிறைய நிகழ்வுகள் மனதில் நிழலாடியது. மீண்டும் இறைவனிடம் நெருங்கி செல்ல இயலுமா என நினைத்து கொண்டிருக்கும்போதே உன்னுள்ளே தான் நான் எப்போதும் இருக்கிறேன் என மனம் கட்டி கொண்ட இறைவனை பற்றி என்ன என்னால் சொல்லிவிட முடியும். 

'தெளிவின் நிலைக்கு சென்றவன் தெளிதல் எளிதில்லை என திரும்பி விடுவானோ' எனும் அச்சம் இனி எனக்குத் தேவையில்லை என்றே கருதுகிறேன். 

(தொடரும்)




Friday 2 March 2012

தேடிக் கொண்ட விசயங்கள் - 5

ஆர் என் ஏ பற்றி குறிப்பிடுவது எனில் நமது எண்ணத்திற்கு வருவது புரதம். இந்த புரதம் நமது உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த எண்ணற்ற புரதங்களை உருவாக்க அமினோஅமிலங்கள் உபயோகப்படுகின்றன. மொத்தம் இருபத்தி இரண்டு அமினோஅமிலங்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த இருபத்தி இரண்டு அமினோமிலங்களில் இருபது அமினோஅமிலங்கள் நமது மரபணு குறிப்புகள் மூலம் சேர்ந்து பலவிதமான புரதங்களை உருவாக்குகின்றன.  இதில் ஒன்பது அமினோ அமிலங்கள் நமது உடல் மூலம் உருவாக்க முடியாத காரணத்தால் அவை உணவு வகையில் இருந்து பெறப்படுகிறது. மற்ற அமினோ அமிலங்கள் நமது உடலில் உருவாக்கப்படுகிறது. உணவுகளில் இருந்து மூலமே பெறப்படும் அமினோ அமிலத்தை 'முக்கியத்துவம் வாய்ந்த அமினோ அமிலங்கள்' என அழைக்கிறார்கள்.

நமது உடலில் வினையூக்கிகள், ரிசெப்டார், சில ஹார்மோன்கள் எல்லாம் இந்த புரதத்தினால் ஆனவையே. அதனால் தான் இந்த புரதம் தனை உடலின் அடிப்படை மூலக்கூறுகள் என்று அழைக்கிறார்கள். அதன் காரணமாகவே புரத சத்து அதிகமுள்ள உணவினையும் நம்மை உட்கொள்ள சொல்கிறார்கள். புரத சத்து உணவை நாம் உண்ணும்போது அந்த புரதம்தனை நேரடியாக நமது செல்கள் உறிஞ்சி கொள்ள முடியாததால் அவை எல்லாம் சிறு அமினோ அமிலங்களாக புரோட்டியேஸ் எனப்படும் வினையூக்கியால் மாற்றப்பட்டு பின்னர் நமது உடல் நமக்கு தேவையான புரதத்தை மாற்றி கொள்கிறது.

அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது உடலில் இருந்தாலும் அது ஆபத்துதான். அப்படி அதிகப்படியான அமினோ அமிலங்கள் நமது கல்லீரலில் சென்று அவை உயிர்வினைக்கு உட்பட்டு யூரியாவாக மாற்றம் கொள்கிறது.



இந்த யூரியா நமது உடலில் இருந்து சிறுநீரகம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றபடுகிறது. அப்படி வெளியேற்றபடாத பட்சத்தில் நமது உடலில் விஷத்தன்மை ஏற வாய்ப்பு உள்ளது. ஆர் என் ஏ பற்றி பேச ஆரம்பித்துவிட்டு புரதம், அமினோ அமிலங்கள் பற்றி கூறுவதற்கு காரணம் இருக்கிறது. இந்த அமினோ அமிலங்களை புரதத்தை உருவாக செய்வது ஆர் என் ஏ தான். என்னதான் டி என் ஏ தன்னிடம் எல்லா விசயங்களையும் சேமித்து வைத்தாலும் இந்த ஆர் என் ஏ க்கள் இல்லை என்றால் எந்த ஒரு வேலையும் நடக்காது. இதற்கு முக்கிய காரணம் டி என் ஏ வால் நமது செல்லின் கருவில் இருந்து வெளியேற முடியாது.

அப்படி கருவில் இருந்து வெளியேற முடியாவிட்டால் எப்படி தனக்குள் இருக்கும் சிந்தனைகளை டி என் ஏ வெளியே சொல்ல இயலும்? அதற்காக உருவானதுதான் ஆர் என் ஏ. இந்த புரதம் எல்லாம் ரிபோசொம்ஸ் எனும் செல்லின் ஒரு பகுதியில் நடைபெறுகிறது. இது கருவுக்கு வெளியே இருக்கிறது. எனவே இந்த ஆர் என் ஏவானது டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெற்று கொண்டு அதை வெளியே கொண்டு வந்து புரதம் தனை உருவாக்க வழி செய்கிறது. ஒரு ஆர் என் ஏ மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை. ஆர் என் ஏக்கள் ஐந்து வகைப்படும்.

மேசன்ஜெர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ தான் டி என் ஏ விடம் இருந்து விசயத்தை பெரும் ஆர் என் ஏ.

டிரான்ஸ்பர் ஆர் என் ஏ. இந்த ஆர் என் ஏ அமினோ அமிலத்தை மெசஞ்சர் ஆர் என் ஏ வில் உள்ள மரபு குறிப்புகளுக்கு ஏற்ப கொண்டு வந்து சேர்ப்பவை.

ரிபோசொம் ஆர் என் ஏ. இவை புரதத்தை உருவாக்க உதவுபவை.

மைக்ரோ ஆர் என் ஏ. ஸ்மால் இண்டர்பிரோன் ஆர் என் ஏ எல்லாம் இருக்கின்றன.

ஆர் என் ஏக்கும் டி என் ஏக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. டி என் ஏ இரட்டை சங்கிலி. ஆர் என் ஏ ஒரு சங்கிலி. ஆர் என் ஏவில் தைமின் பதில் யுராசில் எனும் அமைப்பும், ரிபோஸ் எனும் சர்க்கரையும் உண்டு.

டி என் ஏ வில் உள்ள பல விசயங்களை புறந்தள்ளுவது இந்த ஆர் என் ஏ க்கள். இந்த ஆர் என் ஏ க்கள் முதன் முதலில் உருவாகி அதன் பின்னரே டி என் ஏ உருவாகி இருக்கலாம் என்றே கருதுகிறார்கள். ஆர் என் ஏ வைரஸ் உலகின் முதல் உயிரற்ற செல்.

எப்படி உயிரற்ற ஒன்றிலிருந்து உயிருள்ள ஒன்று உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டவே இந்த வைரஸ் இன்னும் உலவி கொண்டிருக்கிறது. உடல் நோய் தருவது வைரஸ் எனும் கிருமி. அதை போலவே கணினி கட்டுப்பாட்டினை செயல் இழக்க செய்வது வைரஸ் என்றே அழைத்தார்கள்.

பாக்டீரியா தரும் நோயிற்கும், வைரஸ் தரும் நோயிற்கும் வித்தியாசம் இருக்கத்தான் இருக்கிறது. வைரஸ் பற்றிய கவிதை என்றோ எழுதியது.

ஒடுக்கப்பட்ட உயிர் 
அடக்கப்பட்ட உயிர் 
தனித்து இருந்தால் மயான நிலை 
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை 

மண் துகள்களுக்கு 
விமோசனம் தந்து 
உயிரற்ற பொருளுக்கும் 
உயிர் கொண்ட பொருளுக்கும் 
பாலமும் பகையுமாய் 

ஒற்றை கயிறு ஆர் என் ஏ 
கொண்டு 
இரட்டை கயிறு டி என் ஏ 
திரித்து 
உலக உயிர்களின் வழியானாய் 
உலக உயிர்களுக்கு வலியுமானாய் 

உன்னில் தேடுகிறேன் 
எனக்கான இறைவனை!



(தொடரும்)