Wednesday 18 December 2013

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 15

2003ம் வருடம் ஒரு ஆய்வகத்தில் இருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு மாற்றம் ஆகி இருந்தது. அப்போதுதான் கிட்டத்தட்ட பல எலிகளை கொன்று முடித்து ஒரு ஆய்வு முடிந்து இருந்தது. புது ஆய்வகத்தில் விலங்கினத்துடன் வேலை செய்ய வேண்டிய சூழல் மறுபடியும் வந்தது. வேலை செய்ய ஆரம்பித்த சில நாட்களிலேயே கண்களில் எரிச்சல், இருமல் என வந்துவிட்டது. இதை இப்படியே விட்டுவிட்டால் சரிப்படாது என அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் சென்று விசாரித்தேன்.

நீ இந்த வேலையை விட்டுவிடு என்றும் வேறொரு வேலையை தேர்ந்தெடுத்துக் கொள் என்றும் சொன்னார். எனக்கோ இந்த வேலையை விட்டுவிட விருப்பமில்லை. மாசுக்கள் எல்லா இடங்களிலும் உண்டு, அதற்காக நாம் வீட்டிலேயா முடங்க முடியும் என அந்த மருத்துவரிடம் சொன்னதும் உனது உடல் நலனுக்காகவே சொல்கிறேன் என்றார். ஆனால் செத்தால் வேலை இடத்திலேயே செத்து விடுவது என முட்டாள்தனமான எண்ணத்துடன் மாற்று காரணி இருக்கிறதா என கேட்டேன். மாஸ்க் அணிந்து வேலை செய்து பார், ஏதேனும் பிரச்சினை எனில் என்னை வந்து பார் என்றார்.

மாஸ்க் அணிந்தவுடன் பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்தது என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் பிரச்சினைகள் சற்றே குறைய செய்தன. அடிக்கடி உடல் நல குறைவு ஏற்பட்டு கொண்டே இருந்தது. கொடுமை, ஒருமுறை vertigo எனப்படும் நோய் போல வந்து தொலைந்தது. நடக்க முடியாது, தள்ளாடும். உடனடியாக மருத்துவரை அணுகினேன். ear imbalance என சொல்லிவிட்டு antipsychotic மாத்திரை கொடுத்தார்.  மூன்றே தினங்கள் உடல்நலம் சரியாகிவிட்டது.

அதற்கடுத்து அவ்வப்போது அலர்ஜி வரும். அதற்கென மாத்திரை ஒன்று தந்து இருந்தார்கள், அதை எடுத்துக்கொண்டு வேலை செய்ய சொன்னார்கள். நான் அந்த மாத்திரையை இதுவரை எடுக்கவும் இல்லை, எடுக்க துணிந்ததும் இல்லை. இப்போது எனது நுரையீரல் எப்படி இருக்கிறதோ என தெரியாது, ஆனால் அதிகம் சிரித்தால் மூச்சுப்பிடிப்பு போல வந்து தொலையும். பிரணாயமம் செய்ய நினைத்து தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்.

இந்த உலகில் நிறைய நபர்கள் தங்களது உடல்நலனை பொருட்படுத்தாது கடுமையான வேலைகள் செய்து வருகிறார்கள். அவர்களது நோக்கம் சம்பாதிக்க வேண்டும் என்றோ, சாதிக்க வேண்டும் என்றோ இல்லை. இவ்வுலக மக்களின் நன்மைக்காக மட்டுமே அவ்வாறு செயல்படுகிறார்கள். ஊர் உலகில் வேறு வேலையா இல்லை என்றே என்னை பலரும் கேட்டதுண்டு.

நான் படித்து முடித்த பார்மசி துறையில் ஒரு கடையை போட்டு என்னால் அமர்ந்து இருக்க முடியும். அன்றைய சூழலில் அது எளிதான காரியமாக இருந்தது. ஆனால் உள்ளிருக்கும் ஈசன் என்ன நினைத்தானோ அதுதானே நடக்கும். ஆராய்ச்சி துறையை தெரிவு செய்தேன். இன்று பல வருடங்கள் போராட்டம். எப்படியாவது ஒரு நல்ல மருந்தினை ஆஸ்த்மா சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கண்டுபிடித்துவிடலாம் என ஒரு நப்பாசை.

இந்த பணியில் எல்லாம் நிறைய சம்பாதிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான். பணம் மட்டுமே குறிக்கோளாக நினைப்பவர்கள் வியாபாரம் செய்வதுதான் சிறந்தது. ஆனால் இந்த பணிக்காக  நிறைய பணம் இல்லையெனில் ஒன்றும் செய்ய இயலாது. உதாரணத்திற்கு ஒரு வினையூக்கி 5 மில்லிகிராம், நமது ஊருக்கு 2 லட்சம் ரூபாய். இந்த அளவை வைத்து என்ன செய்ய முடியும். கிராம் கணக்கில் தேவைப்படும்! இப்படியாக ஒவ்வொருமுறை பணம் வேண்டும் என பணம் தருபவர்களிடம் கையேந்தும் நிலைதான் இருந்து வருகிறது. அதுவும் பணம் தருபவர்கள் அத்தனை எளிதாக தந்துவிட மாட்டார்கள்.

இந்த மருந்து நோய்தனை தீர்க்கும் வல்லமை உடையது என கொஞ்சமாவது நம்பிக்கை அவர்களுக்கு வர வேண்டும். ஒரு சிலர் முழுதாக படிக்காமல் அவர்களது சொந்த கற்பனையில் தங்களது விளக்கத்தை எழுதிவிடுவார்கள். அவர்களை எல்லாம் என்ன செய்வது? ஆனால் ஆராய்ச்சி துறைக்கு நிறைய பெண்கள் வருகிறார்கள். அவர்களின் பொறுமைக்கு, சிந்தனைக்கு  இது ஒரு நல்ல வேலை தான்.

சமீபத்தில் என்னுடன் வேலை பார்த்த பெண் 'அவர் அழகாக இருப்பதால் வேலைக்கு செல்ல பயப்படுகிறேன் எனவும், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் எனவும் woman in science என எழுதப்போவதாக நாளிதழ் ஒன்றில் பேட்டி கொடுத்ததுடன் டிவியில் வந்து சொல்லிவிட்டார். ஆனால் உண்மை நிலை வேறு. அந்த பெண் குறித்து இங்கு மேலும் எழுதுவதை தவிர்த்து விடுகிறேன். பிழைத்துப் போகட்டும்.

ஆனால் உண்மையில் இந்த ஆராய்ச்சிக்கு வந்தபிறகு பலர் வெருண்டு ஓடியதை கண்டு இருக்கிறேன். மூன்று வருடம் முடித்த பின்னர் கூட சிலர் ஓடி இருக்கிறார்கள். நிறைய தோல்விகளே இந்த வேலையில் அதிகம். Depression is common in scientific research என்பார்கள். இன்னும் இந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதுதான் அடுத்த கட்ட முயற்சி. பாதை கரடு முரடுதான் ஆனால் இலக்கு மிகவும் இனிமையான ஒன்று. அதற்காகவே பயணம் தொடரும்.

(தொடரும்)

Thursday 12 December 2013

நான் வரைந்த ஓவியம்

எனக்கு ஓவியம் வரையவே தெரியாது. ஏதேனும் ஒன்று வரைய வேண்டும் என நினைத்து உன் முகம் தனை பலமுறை மன கண்களில் கொண்டு வந்தேன்.

தூரிகையை எடுத்த போது கைகள் வெடவெடவென நடுங்கி தொலைந்தது. அறையின் கதவுகள் எல்லாம் மூடினேன். என்றைக்கும் இல்லாத திருநாளாய் தூரிகையை கீழே வைத்துவிட்டு ரவிவர்மனை நெஞ்சுருக வேண்டினேன்.

அறையின் சிறு வெளிச்சத்தில் நடுங்கிய கைகளுடன் மீண்டும் தூரிகையை கையில் எடுத்தேன். உனது முகம் மின்னலாக வந்தது. தாளினை சரி செய்தேன்.

வரைய எத்தனித்தபோது அறையின் கதவு தட்டப்பட்டது. வெகுவேகமாக தாள், தூரிகை என மறைத்து வைத்தேன். கதவினை திறந்த போது நீ வந்து நின்றாய்.

இருட்டு அறையில் என்ன செய்கிறாய் என கேட்டாய். உன்னை வரைய முனைவதாக சொன்னேன். கலகலவென சிரித்தே உனக்கு வரைய வராதேடா என்றாய்

எனக்குள் அழுகை வந்ததை நீ அறிந்திருக்க மாட்டாய். சரி, கிறுக்கித் தொலை என சிரித்து நகர்ந்து விட்டாய். நீ கொடுத்த தைரியம். வரையத் தொடங்கினேன்.

ஈஸ்வரா எனக்கு வரையத் தெரியாதே. மனம் அடக்கி வரைந்தேன். ரவிவர்மன் மண்டு இது என்ன கண்ணா? கடுகு மாதிரி இருக்கு என மனதில் இருந்து திட்டினார்.

கூந்தலை வரைந்த போது மனம் கூனியது. ஒரு தேவதையை, பேய் மாதிரியா வரைவது, உன் விரல்களை உடைக்க வேண்டும் என்றார் ரவிவர்மன். மீண்டும் கதவு தட்டும் ஓசை.

நீ வந்து நின்றாய். வரைந்த ஓவியத்தை தயக்கத்துடன் உன்னிடம் காட்டினேன். என்ன சொல்வாய் என எச்சில் விழுங்கினேன்.

டேய், என்னை மாதிரியே செமையா வரைஞ்சிருக்கேடா என்றாய். இனிமே என்னை மட்டும் வரைடா, உனக்கு வரைய வரும் என்றே நகர்ந்தாய்.  நான் கண்கள் கலங்கி நின்றேன். ஏன் தெரியுமா?

என் மீதான உன் காதலை நான் புரிந்து கொண்ட தருணம் அது. ரவிவர்மன் தலைகுனிந்தார்.


Friday 6 December 2013

ராமனின் சீதை தீ குளித்தாரா?

என் அம்மா இறந்தபின்னர் பத்து நாட்கள் எனது சின்னம்மா இரவில் ராமாயணம் புத்தகம் எடுத்து வைத்து படித்து கொண்டிருந்தார். அவரை சுற்றி சிலர் அமர்ந்து இருந்தார்கள். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அதுவும் எனக்கு எங்கள் வீட்டில் ராமயாணம் புத்தகம் இருக்கும் என்றே தெரியாது. ராமாயணம் புத்தகத்தை படித்தால் இறந்தவர்களின் ஆத்மா சொர்க்கத்தை அடையும் என்பது ஒருவகையான ஐதீகம் என பின்னர் தெரிந்து கொண்டேன். அன்று கூட ராமாயணம் படிக்க வேண்டும் என நினைத்தது இல்லை. நான் அதிகம் படித்த புத்தகங்கள் கவிஞர் கண்ணதாசனின் புத்தகங்கள், (அர்த்தமுள்ள இந்துமதத்தை பலமுறை படித்து இருக்கிறேன்) மற்றும் அகிலனின் சிறுகதை தொகுப்பு மட்டுமே. நண்பன் ஸ்ரீதர் கொடுத்த பட்டுகோட்டை பிரபாகர், சுபா போன்றோரின் கதைகள் என சில. பாடபுத்தகங்களை மட்டுமே அதிகம் படித்து வளர்ந்தேன்.

நான் இதுவரை ராமாயணம் முழுவதுமாக படித்ததே இல்லை. என்னிடம் இப்போது ராமாயணம் புத்தகம் இருக்கிறது. திடீரென சில பக்கங்களை புரட்டி அதில் இருக்கும் பாடல்களை எப்போதாவது வாசிப்பது வழக்கம். ஆனால் ராமாயணம் குறித்து பல விசயங்கள், விவாதங்கள் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் 'விடிய விடிய கதை கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பானு  சொன்னானாம்' எனும் வழக்கு மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் இப்படித்தான் பலர் ராமாயணத்தை அரைகுறையாக தெரிந்து கொண்டு அதில் குறைகள் என குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றது சரியா? என்பன போன்ற வாதங்கள என கேட்டு இருக்கிறேன். மூலக்கதையை சற்று தமிழ் பண்பாட்டிற்கு ஏற்ப கம்பர் மாற்றி விட்டார் எனும் சொல் பேச்சும் கேட்டதுண்டு. ராவணன் மிகவும் நல்லவர், அவர் சைவ சமயத்தை சார்ந்து இருந்ததால் சைவ சமயத்தை மட்டமாக்க வைணவ சமயத்தை சேர்ந்த ராமனை உயர்த்தி சொல்ல எழுதப்பட்டது என்பார்கள்.

ராமாயாணத்தை கேலி செய்வதற்காக படிக்க தொடங்கிய நான் ராமாயாணத்தின் பெருமை பேச தொடங்கினேன் நான் என்றார் கன்ணதாசன்.
ஒரு கதாசிரியர் என்ன நினைத்தாரோ அதைத்தான் அவரால் எழுத முடியும், நாம் நினைப்பதை எல்லாம் எழுத கதாசிரியர் எதற்கு? ஒரு கதையின் தன்மை எழுதுபவரை விட புரிந்து கொள்பவர்களின் மன நிலையினை பொருத்தே அந்த கதையின் தன்மை இருக்கும், இல்லையெனில் திருக்குறளுக்கு இன்னும் பலர் உரை எழுதிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

அப்படித்தான் ராமாயணமும் சரி, மகாபாரதமும் சரி மிகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ராமன் தனது மனைவியை சந்தேகம் கொண்டதால் சீதை தீயில் குதித்து தனது புனித தன்மையை நிலைநாட்டினார் என்றே பேசப்படுகிறது.

இந்த விஷயத்தை வால்மீகியும் சரி, கம்பரும் சரி எப்படி எதிர்நோக்கினார்கள் அல்லது எப்படி எழுத்தில் வைத்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் எங்கள் ஊரில் சொன்ன கதையை இனிமேல்தான் சென்று இந்த நூல்களில் பார்க்க வேண்டும்.

ஒரு வண்ணான் ராமர் நகர்வலம் வந்தபோது தனது மனைவியிடம் 'என்னை என்ன ராமன் என நினைத்தாயா? எவனோ ஒருவன் வீட்டில் பலநாட்கள் இருந்துவிட்டு வந்தவளை பத்தினி என ஏற்றுக் கொள்ள என சொல்லிவிடுகிறான்' இதைக் கேட்ட ராமன் தன் மனைவிக்கு இப்படி அவப்பெயர் நேர்ந்து விட்டதே என மனம் கலங்குகிறான். ராமனுக்கு தெரியும் சீதை பத்தினி என. ஆனால் இங்கே கதாசிரியர் ராமனை ஒரு சாதாரண மனிதராகவே பாவிக்கிறார்.

ஊர் பழி நேர்ந்துவிட்டதே என நினைத்த ராமன் ஊருக்கு சீதை பத்தினி தான் என சொல்லவே தீக்குளிக்கும் வைபவம் நடைபெறுவதாக அந்த காவியத்தில் காட்டபடுகிறது. ராமன் தன மனைவியை சந்தேகபட்டுவிட்டான் என நினைப்பது நமது அறியாமை. ஊரின் சந்தேகம் போக்கவே அந்த நிகழ்வு என்பதை தெரிந்து கொளல் வேண்டும். மேலும் கதாசிரியர் ஊரின் வாயை அந்த வண்ணான் நிகழ்வை காட்டாமல் தவிர்த்து இருக்கலாம். ஆனால் பின்வரும் சந்ததியினர் ஒருவேளை இந்த கேள்வி எழுப்பினால் என்ன செய்வது என அதற்கும் பதில் வேண்டுமென்றே அந்த நிகழ்வை வைத்து இந்த தீக்குளிப்பு வைபவத்தை நிறைவேற்றி இருக்கலாம்.

எங்கள் ஊரில் ஒரு கதை சொல்வார்கள். அதாவது பத்தினியாக இருப்பவர் தனது சீலையில் நெருப்பை வாங்கிக் கொண்டால் அந்த சீலை பொசுங்காது என! என்ன பைத்தியகாரத்தனம். கற்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் பொது, ஆனால் பெண்ணின் மீது அதை ஏற்றிவைத்து சமூகம் அழகு பார்த்தது. பத்தினிக்கும் நெருப்புக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தமோ?நெருப்பு எதையும் எரித்துவிடும் தன்மை உடையது. பெண் நெருப்பை போன்றவள் என வசனம் எல்லாம் உண்டு.

நெருப்பை பொசுக்கிவிடும் சீலையை போலவே உரிய சாதனம் உடலில் பொருத்திக் கொள்ளாமல் நெருப்பில் குதித்தால் பொசுங்கி போவார்கள். நமது உடல் நிலை அப்படி. நமது தோல், செல் அமைப்பு எல்லாம் கருகிப் போய்விடும். இது கூட அறியாத சமூகத்திலா  நாம் இருக்கிறோம். தீயில் குதித்துதான் பாருங்களேன்.

அப்படி எனில் எப்படி சீதை தப்பித்து இருக்க இயலும்? அதுதான் கதாசிரியரின் வெற்றி. சீதையை தெய்வ அவதாரமாக காட்டவே இந்த யுக்தி. வால்மீகி இப்போது இருந்து இருந்தால் பல விளக்கங்கள் கேட்டு இருக்கலாம், அல்லது அயோத்தி காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் சந்ததி இப்போது இருந்தால் அதையும் கேட்டு வைக்கலாம். ஆனால் எதுவுமே இல்லை. எனவே ஒரு காவியத்தை காவியமாக படித்துவிட்டு அதில் இருக்கும் விசயங்களை அதீத கற்பனைகளுக்கு விடாமல் அது ஒரு நிகழ்வு என கடந்து செல்ல பலரால் முடிவது இல்லை.

இந்த உலகில் நிறைய கருத்துகளுடன் பலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் என்ன செய்வது!