Thursday 12 December 2013

நான் வரைந்த ஓவியம்

எனக்கு ஓவியம் வரையவே தெரியாது. ஏதேனும் ஒன்று வரைய வேண்டும் என நினைத்து உன் முகம் தனை பலமுறை மன கண்களில் கொண்டு வந்தேன்.

தூரிகையை எடுத்த போது கைகள் வெடவெடவென நடுங்கி தொலைந்தது. அறையின் கதவுகள் எல்லாம் மூடினேன். என்றைக்கும் இல்லாத திருநாளாய் தூரிகையை கீழே வைத்துவிட்டு ரவிவர்மனை நெஞ்சுருக வேண்டினேன்.

அறையின் சிறு வெளிச்சத்தில் நடுங்கிய கைகளுடன் மீண்டும் தூரிகையை கையில் எடுத்தேன். உனது முகம் மின்னலாக வந்தது. தாளினை சரி செய்தேன்.

வரைய எத்தனித்தபோது அறையின் கதவு தட்டப்பட்டது. வெகுவேகமாக தாள், தூரிகை என மறைத்து வைத்தேன். கதவினை திறந்த போது நீ வந்து நின்றாய்.

இருட்டு அறையில் என்ன செய்கிறாய் என கேட்டாய். உன்னை வரைய முனைவதாக சொன்னேன். கலகலவென சிரித்தே உனக்கு வரைய வராதேடா என்றாய்

எனக்குள் அழுகை வந்ததை நீ அறிந்திருக்க மாட்டாய். சரி, கிறுக்கித் தொலை என சிரித்து நகர்ந்து விட்டாய். நீ கொடுத்த தைரியம். வரையத் தொடங்கினேன்.

ஈஸ்வரா எனக்கு வரையத் தெரியாதே. மனம் அடக்கி வரைந்தேன். ரவிவர்மன் மண்டு இது என்ன கண்ணா? கடுகு மாதிரி இருக்கு என மனதில் இருந்து திட்டினார்.

கூந்தலை வரைந்த போது மனம் கூனியது. ஒரு தேவதையை, பேய் மாதிரியா வரைவது, உன் விரல்களை உடைக்க வேண்டும் என்றார் ரவிவர்மன். மீண்டும் கதவு தட்டும் ஓசை.

நீ வந்து நின்றாய். வரைந்த ஓவியத்தை தயக்கத்துடன் உன்னிடம் காட்டினேன். என்ன சொல்வாய் என எச்சில் விழுங்கினேன்.

டேய், என்னை மாதிரியே செமையா வரைஞ்சிருக்கேடா என்றாய். இனிமே என்னை மட்டும் வரைடா, உனக்கு வரைய வரும் என்றே நகர்ந்தாய்.  நான் கண்கள் கலங்கி நின்றேன். ஏன் தெரியுமா?

என் மீதான உன் காதலை நான் புரிந்து கொண்ட தருணம் அது. ரவிவர்மன் தலைகுனிந்தார்.


3 comments:

மகேந்திரன் said...

தருணம்
காதலாய்க் கனிந்துவந்த
தருணம்..

அருணா செல்வம் said...

நீங்கள் வரைந்த ஓவியம் மிகவும் அழகாக இருக்கிறது.
ரவிவர்மனையே விழ வைத்து விட்டீர்கள். அருமை.

Radhakrishnan said...

நன்றி ஐயா, நன்றி அருணா செல்வம்