Monday 28 April 2014

அருள்வாக்கு - அசரீரி

சின்ன சின்ன மழைத் துளிகள் பட்டு மண் மணம் எழுப்பிக் கொண்டு இருந்தது. மண் மணத்தை நுகர்ந்தாவரே நடக்கலானான் குரூரம் எண்ணம் படைத்த கோபாலன். எவரையாவது கவிழ்த்து விடவேண்டும் என்பதே இவனது ஆவல். இருப்பத்தி இரண்டு வயது ஆகிவிட்டது. ஆனால் விளையாட்டுத்தனம் இன்னும் இவனை விட்டு போகவில்லை. நல்ல மாநிறம், நல்ல உயரம், குறுகிய விழிகள், குறுகிய உடல்.

இவனது குணங்களை கண்டு எவருமே இவனுக்கு பொண்ணு தர முன்வருவதே இல்லை. இவனுக்கு கூட ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் கேசவன். கேசவன் நல்ல உயரம், கருத்த நிறம். பெரிய விழிகள். சில வருடங்கள் முன்னர் சிரித்த முகத்துடன் வலம் வருவான். கேசவன், கோபாலனை விட மூன்று வயது அதிகம். கடந்த வருடம் திருமணம் ஆகி இருந்தது. நல்ல மனைவி. ஆனால் கேசவன் ஒரு பெண்ணை காதலித்து குடும்ப சூழலால் அந்த பெண்ணை மணம் முடிக்காது போய் அந்த பெண் விஷம் குடித்து இறந்து போனாள் என்றால் எவருமே நம்ப மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் நடந்தது.

கேசவனின் குடும்பத்தில் அம்மா, அப்பா, அவனுக்கு என ஒரு தங்கை. தங்கை மிக நல்ல நிறம். அழகானவர். நன்கு படித்து இருந்தார். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தார்கள். அனேகமாக சில மாதங்களில் திருமணம் நடைபெறும் என்றே நம்பி இருந்தார்கள்.

கேசவனும், கோபாலனும் எப்படி நண்பர்கள் ஆனால் என்பதே ஒரு சுவாரஸ்யம். ஒருமுறை சிறுவயதில் ஆசிரியர் கேசவனை நன்றாக அடித்துவிட அழுதபடி நின்று இருந்தான் கேசவன். எதுக்கு அழற என விசயம் தெரிந்து அந்த ஆசிரியரை அவருக்கே தெரியாமல் கோபாலன் கல்லால் அடித்தது கேசவனுக்கு சந்தோசமாக இருந்தது. அப்படித்தான் முதல் பழக்கம். இப்படி ஏதேனும் பிரச்சினை வரும்போதெல்லாம் கோபாலன் கேசவனுக்கு உதவி செய்வதில் குறியாக இருந்தான். அதற்கு காரணம் கேசவனின் தங்கை அவனது வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தாள் என்பதை எல்லாமா எழுதி வைக்க வேண்டும்.

கோபாலனுக்கு கேசவனின் தங்கை வசந்தி மீது ஒருவித ஈர்ப்பு இருந்தது. அதை கேசவனின் மீது காட்டி கொண்டு இருந்தான். நண்பன் என கேசவனின் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டான் கோபாலன். இப்படி முன் அறிவிப்பு எல்லாம் எழுதி எதை எதையோ நியாயப்படுத்த வேண்டி இருக்கிறது. சரி கதைக்கு வருவோம். என்னா கதை உலகம்.

''கேசவா, என்ன ஒரு மாதிரியாக இருக்க''

''ஒன்னுமில்லைடா''

''உன்னோட ஒய்ப் உன்னை அடிச்சிட்டாங்களா''

''அது எல்லாம் ஒண்ணுமில்லை''

''உன்னோட தங்கச்சிக்கு நல்ல வரன் அமையலையா''

''தங்கச்சிதான் பிரச்சினை''

''என்ன பிரச்சினை?''

''தங்கச்சிக்கு பிறக்க போற பொண்ணுதான் என்னை கொல்லுமாம்''

''எந்த படுபாவி அப்படி சொன்னது?''

''பனைமரத்து ஜோசியர் அருள்வாக்கு அய்யாவு தான் சொன்னார்''

''அவரை எதுக்கு பாக்க போன''

''நல்ல அருள்வாக்கு சொல்றாருறு சொன்னாங்கனு நான் பார்க்க போனேன், ஆனா இப்படி தலையில இடி விழறமாதிரி பண்ணிட்டார்''

''எத்தனாவது குழந்தை, எப்படி கொல்லும், எதுக்கு கொல்லும், எத்தனை வயசில கொல்லும் இதெல்லாம் விளக்கமா சொன்னாரா?''

''அதெல்லாம் சொல்லலை, ஆனா முத பொண்ணு குழந்தை ஐஞ்சு வயசு ஆனப்பறம் கொல்லுமுனு சொன்னார்''

''பஞ்ச பரதேசி, தன்னோட பொழைப்புக்காக எப்படி எல்லாம் கதைவிட்டு திரியறான் அந்த ஆளு, அவரைப் போய் நீ நம்புறியே''

''இல்லை, அவர் ரொம்ப பேருக்கு எல்லாம் சொல்றதில்லை, குறிப்பிட்ட பேருக்கு சொல்றார் எல்லாம் அப்படியே நடக்குது''

''இப்ப என்ன பண்ணலாம்''

''எங்காவது தனியா போயிரலாம்னு இருக்கேன்''

''நீ எதுக்கு போற, உன் தங்கச்சிய கொன்னு போட்டுருவோமா''

''என்ன சொல்ற?''

''பிரச்சினை, உன்னோட தங்கச்சி பொண்ணு தானே, உன் தங்கச்சிய கொன்னு போட்டா பிரச்சினை முடிஞ்சது''

''ஆனா, எப்படியாவது இது நடந்தே தீரும்னு சொல்லி இருக்கார்''

''அவர் கிடக்கார், ஒன்னு கொன்னு போடுவோம், இல்லை நான் கட்டிக்கிறேன், குழந்தையே பிறக்காம நான் பாத்துகிறேன்''

''உன் புத்திய காட்டுற பாத்தியா. அவளை கொன்னா காலகாலத்திற்கும் என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்''

''இங்க பாரு, உன்னை காப்பாத்திக்க இரண்டே வழிதான், என்ன சொல்ற''

''உன்னை நம்பலாமா? ஆனா உனக்கு வீட்டுல பொண்ணு தரமாட்டாங்களே''

''நா குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறவா?''

''பேசாம என் தங்கையை குடும்ப கட்டுப்பாடு பண்ண வைச்சிட்டா ஈசியா போயிரும்''

''அவளை கொல்றது ஈசி, ஆனா அவளை குடும்ப கட்டுப்பாடு பண்ண சொல்றது எல்லாம் கஷ்டம்''

''அவகிட்ட இந்த விசயத்தை சொல்லி என்னை காப்பாதிக்கிரலாமா''

''நாசமா போச்சு, இதெல்லாம் நடக்காது''

''அப்ப என்னதான் பண்றது''

''குழந்தை பிறந்தப்பறம் எங்கனயாவது விட்டுரலாம், இது மூணாவது வழி, அல்லது குழந்தைய கொன்னுரலாம் இது நாலாவது வழி''

''இல்லை, அவ கல்யாணம் பண்ணவ கூடாது''

''சரி பார்ப்போம்''

கோபாலன் வசந்தியை கல்யாணம் பண்ணிக்கொள்வது என நினைத்து இருந்த திட்டம் பாழாகிப் போனது. கேசவன் நிச்சயம் இனி சம்மதிக்கமாட்டான். இந்த விபரத்தை வசந்தியிடம் சென்று சொல்லி வைத்தால் என்ன என யோசித்தான் கோபாலன்.

''வசந்தி, உன்னை உன் அண்ணன் கொல்லப் போறான், உன்னோட முத குழந்தை ஐஞ்சி வயசில உன் அண்ணனை கொல்லுமாம். அய்யாவு சொன்னாராம்''

''நிசமாவா சொல்ற, என் அண்ணன் அப்படி பண்ணாது, நீதான் என்னை மிரட்டுற''

''வேணும்னா அய்யாவு கிட்ட போயி கேளு''

வசந்தி அய்யாவுவிடம் கெஞ்சி கூத்தாடி அவர் சொன்ன விசயத்தை தெரிந்து கொண்டாள். வீட்டில் அனைவருக்கும் தெரிந்தது. கேசவனின் மனைவி யாசவி வசந்தியை கெஞ்சி கூத்தாடினாள். அது எல்லாம் புரட்டு என கேசவனின் பெற்றோர் சமாதானம் செய்து பார்த்தார்கள். வசந்தி கடைசியாக திருமணம் பண்ண மாட்டேன், குழந்தை பெற்று கொள்ள மாட்டேன் என உறுதி கொடுத்தாள்.

ஏழரை வருடங்கள் கழிந்தது. வசந்தியின் தோழி மாதவி தனது கணவன் வசந்தராஜ், தன ஐந்து வயது பெண் குழந்தை சுபி உடன் வசந்தி வீட்டிற்கு  எப்போதாவது வருவது போல பிறந்தநாள் அழைப்புக்கு சொல்ல வந்து இருந்தார்கள். வசந்தி திருமணம் முடிக்காமலே இன்னும் இருந்தார்.

''சுபிக்கு ஐஞ்சு வயசு நேத்து முடிஞ்சிருச்சி, அடுத்த வாரம் சனிக்கிழமை பிறந்தநாள், வந்துருடி''

''எப்படி வளர்ந்துட்டா, வந்துருறேன்''

சுபியை கேசவன் தூக்கி வைத்து கொண்டு தனது அறைக்கு சென்று பொருட்கள் காமித்து கொண்டு இருந்தான். கேசவன் அம்மா எல்லோருக்கும் காபி போட்டு வந்து இருந்தார். கேசவனுக்கும் அவனது அறையில் வைத்து சென்று இருந்தார். கேசவன் சுபியை கீழே விட்டுவிட்டு தனது அறைக்கு சென்றான்.

மாதவி, சுபி, வசந்தராஜ் கிளம்பி சென்றார்கள்.

''ஐயோ'' என  மாதவி கத்தினாள்.

எல்லோரும் ஓடிப் போய் பார்த்தார்கள். கேசவன் மரணம் அடைந்து இருந்தான். மாத்திரை பாட்டில் ஒன்று மூடி கழன்று  மேசைக்கு அடியில் கீழே விழுந்து கிடந்தது.

அருள்வாக்கு அய்யாவு சொன்னது சரியாகவே பலித்தது. எல்லோரும் வசந்தியை பார்த்தார்கள். வசந்தி தலையை குனிந்தாள். 

சரி இந்த ஏழரை வருடங்கள் முன்னர் நடந்த கதை ஒன்று சொல்வோம்.

மாதவிக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் குழந்தை இல்லை. என்ன பிரச்சினை என அறிந்த போது மாதவியிடம் உருவாகும் கரு முட்டை மிகவும் பலவீனமாக இருந்தது. முதிர்ச்சி அடைய கரு முட்டை மறுத்தன. முதிர்ச்சி அடையாத கரு முட்டைகள் கருத்தரிப்பதில்லை. FSH (follicle stimulating hormone) சிகிச்சை எடுத்த பின்னரும் எதுவும் பலிக்கவில்லை. IVF (in vitro fertilisation) கூட செய்து பார்த்தார்கள். அப்போதுதான் வசந்தியை அணுகினாள் மாதவி.

''வசந்தி, எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?''

''என்ன மாதவி?''

''எனக்கு குழந்தை பாக்கியமே இல்லை, குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு, ரொம்ப முயற்சி பண்ணினோம், ஆனா ஒன்னும் முடியலை. என்னை என் புருஷன் வெறுத்து ஒதுக்கிருவாரோனு பயமா இருக்கு. இன்னொரு முறை முயற்சி பண்ணுவோம், இல்லைன்னா வேறு வழி இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்''

''தத்து எடுத்துகிரலாமே''

''நான் பெறணும், அப்பதான் அவர் பாசமா இருப்பார்''

''என்னது இப்படி பேசற''

''என்னோட நிலைமை அப்படி இருக்கு''

மாதவியின் அழுகை வசந்தியை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.

''நான் என்ன பண்ணனும்''

''உன்னோட கரு முட்டைகள் தர முடியுமா?, டாக்டர்கிட்ட பேசி இதை வெளிய சொல்லாம பாத்துக்கிறேன்''

''இல்லை, அது வந்து''

''பிளீஸ், முடியாதுன்னு சொல்லாத, நான் செத்துருவேன்''

''கிறுக்கு மாதிரி பேசாத, எனக்கு பிறக்க போற முத பொண்ணு என் அண்ணணனை கொன்னுரும்னு சொல்லி தான் எனக்கு கல்யாணமே பண்ண வைக்க வேணாம்னு வீட்டுல சொல்றாங்க''

''உனக்கு எங்க பிறக்க போது, எனக்கு தானே பிறக்க போகுது, அது எல்லாம் அப்படி நடக்காது, எனக்கு இந்த உதவி செய்டி, உன்னோட உயிர்த்தோழி உயிரோட இருக்க வேணாமா சொல்லுடி''

மாதவியின் அழுகையும் அந்த பேச்சும் வசந்தியின் மதிதனை வேலை செய்யாமல் தடுத்தது. சரி என சம்மதம் தந்தாள்.

வசந்தியின் கரு முட்டை எடுக்கப்பட்டு, வசந்தராஜின் விந்துவுடன் இணைத்து குழந்தை கரு உருவானதும் மாதவியில் கருப்பையில் வைத்து பிறந்தவளே இந்த சுபி என்பது வசந்திக்கும், மாதவிக்கும் டாக்டருக்கு மட்டுமே தெரியும்.

இப்போது வருவோம். நிறைய மருந்து உட்கொண்டதால் கேசவன் உயிர் போனது என மருத்துவ அறிக்கை வந்தது. தற்கொலை என குறித்து வைத்தார்கள். சுபி விபரம் அறியாமல் அவளது வீட்டில் விளையாடி கொண்டு இருந்தாள்

வசந்திக்கு தன்  குழந்தைதான் தன் அண்ணனை கொன்றது என புரிந்து கொள்ள வெகு நேரம் பிடிக்கவில்லை.

(முற்றும்)

Friday 25 April 2014

கலாச்சார சீரழிவு

கிட்டத்தட்ட 23 வருடங்கள் முன்னர் ஒரு கதை எழுதினேன்.

''அண்ணன் தங்கை
உடன் பிறந்தவர்கள்
சிறுவயதில்  பிரிகிறார்கள்.

ஒரு கால கட்டத்தில்
கல்லூரியில் பயில்கிறார்கள்
இருவருக்கும் காதல் வருகிறது

திருமணம் வரை வருகிறார்கள்
உண்மை தெரிய வருகிறது
திருமணத்திற்கு தடை போடபடுகிறது

இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள். ''

இதை காந்தியடிகளின் 125வது பிறந்த தினம் என நினைக்கிறேன். அனுப்ப நினைத்து தூக்கி குப்பையில் போட்டுவிட்டேன். அப்போது அவர்களுக்குள் காதல் மட்டுமா, களவும் இருந்ததா என்றெல்லாம் விவரிக்கும் தைரியம் இல்லை.

அதற்கு பின்னர் மறுபதிப்பு என ஒரு கதை எழுதி அனுப்பி ஆறுதல் பரிசு கிடைத்தது. வசன கவிதையில் எழுதி இருந்தேன்.

எப்போது அண்ணன் தங்கை கதையை எழுதி தூக்கி குப்பையில் போட்டேனோ அடுத்த வருடமே  அது போன்ற கதை படிக்க நேர்ந்தது. நொந்து கொண்டேன்.

திடீரென ஒரு கதை சிந்தனை.

அன்னை மகன்.
மகன் சிறுவயதில் தொலைந்து போகிறான்

இன்னுமொரு மகள் பிறக்கிறாள்
மகள் பிறந்த சில வருடம்
கணவன் இறந்து போகிறார்.

தொலைந்த மகனை
பதினெட்டு வயதில் காண்கிறாள் அன்னை

இருவரும் காதல் கொள்கிறார்கள்
தாய் மகன் என தெரியாமல்.

தாய் மீது மகன் காதல் கொள்வதை கூட கலாச்சார சீரழிவு என்றே சமூகம் கருதும்.

காதலை காமத்துடன் இணைத்து பார்த்த சமூகத்திடம் என்ன எதிர்பார்க்க இயலும். கதை முடிகிறது. இதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிட்டு போகிறேன். 

Wednesday 2 April 2014

காதலே இல்லைன்னு சொன்னா

அவளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன்.
ஒருவழியாய் தைரியம் வரவழைத்து 'உன்னை எனக்குப் பிடிச்சி இருக்கு, நான் உன்னை காதலிக்கிறேன்' என சொன்னதும் 'செருப்பு பிஞ்சிரும்' என திட்டிவிட்டு போய்விட்டாள்.

எனக்கு அவமானமாக இருந்தது. அவளை பின் தொடர்ந்துசெல்ல என் மனம் இடம் தரவில்லை. வாழ்வது வீண் என்றே எண்ணிக் கொண்டு இருந்தேன். வீட்டில் சொல்லவும் தயக்கம்.

ஒருநாள் எதேச்சையாக அவளைப்  பார்த்தேன். பார்த்த மறுகணம் தலைகுனிந்தே இடம் அகன்றேன். இப்படியாக எனது காதல் தத்தளித்தது. அம்மாவிடம் சொல்லி பெண் கேட்டு வர சொன்னேன். அம்மா பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினார்.

வாழ்வா சாவா என போராடிக் கொண்டு இருந்தேன். வாழ்வது என முடிவு எடுத்தேன். 

சாமியார் ஆகிவிட்டேன்.