Friday 28 September 2012

தூக்கம் - வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்

மிகவும் கடுமையான உழைப்பு உழைத்தால் நன்றாக தூக்கம் வந்துவிடுகிறது. இது உடல் அயர்ச்சியை போக்க நமது உடல் தேர்ந்தெடுத்த பாதை என்கிறார்கள். மன அயர்ச்சி இருந்தால் அத்தனை எளிதாக தூக்கம் வந்து தொலைப்பதில்லை. எனக்கு மிகவும் உடல் அயர்ச்சியாக இருக்கவே நன்றாகவே உறங்கிப் போனேன். எனது குறட்டை சத்தம் கேட்டு 'கொடுத்து வைச்ச மகராசன்' என எவரோ சொன்னது காதில் விழுந்தது. உடல் உபாதைகளும், மன அழுத்தமும் இல்லாத பட்சத்தில் மிகவும் ஆழ்ந்த தூக்கம் வருமாம். 'அடிச்சிப் போட்டது போல தூங்குறான் பாரு' என இன்னொரு சத்தமும் எனது காதில் விழுந்தது. நான் தூங்குகிறேனா, அல்லது தூங்குவது போல நடிக்கிறேனா? எனக்கே மிகவும் சந்தேகமாக போய்விட்டது.

ஒருவர் நான் குறட்டை விடுகிறேன் என்கிறார், ஆனால் எனக்கு குறட்டை சத்தம் கேட்கவில்லை. அவர் பேசும் சப்தம் மட்டும் கேட்கிறது. எதைக் கேட்பது, எதை கேட்க கூடாது என்று எனது சிந்தனைகள் வரையறுத்து கொண்டுவிட்டனவா? எவருமே என்னை அடிக்கவில்லை. இன்று மிகவும் கடுமையான உழைப்பு. அந்த அலுப்பில் தூங்கிவிட்டேன். ஆனால் 'இந்த தூக்கம் உடல் அசதியை போக்க வந்தது அல்ல' என்றார் ஒருவர். விழித்து பார்க்கையில் சாமியார் நின்று கொண்டிருந்தார்.

''எதுவெல்லாம் இயற்கை தேர்வு என்று கண்டுபிடித்துவிட்டாயா'' என்றார் சாமியார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ''நான் என்ன டார்வினா? எல்லாம் இயற்கை தேர்வு என பறவைகளின் உடல் அமைப்பு, விலங்குகளின் உடல் அமைப்பு என சிறு வயதிலேயே தீவுகளுக்கு எல்லாம் சென்று ஆராய்ச்சி செய்து சொல்ல. எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? எதுவெல்லாம் இயற்கையாக தோற்றம் கொள்கிறதோ அதுவெல்லாம் இயற்கை தேர்வு'' என்று முடித்தேன். ''

நன்றாக தூங்கினாய் போலிருக்கிறது'' என்றார்.

 ''ஆமாம் உடல் அலுப்பு'' என்றேன்.

 ''அது உடல் அலுப்பு மூலம் வருவது அல்ல, அது உனது மூளைக்கு தேவையான ஒரு இளைப்பாறுதல், பசித்தவுடன் சாப்பிடுவது போல அல்ல இந்த உறக்கம். இந்த தூக்கம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதை மிகவும் அதிகமாக கடைப்பிடித்தாலும் ஆபத்து, மிகவும் குறைவாக கடைப்பிடித்தாலும் ஆபத்து. கும்பகுர்ணன் அதிகம் தூங்கியதால் லங்கேஷ்வரம் ராமனால் வெல்லப்பட்டது'' என்றார் சாமியார்.

 ''சாமி இப்போ என்னதான் சொல்ல வரீங்க'' என்றேன் கலையாத தூக்கத்துடன்.

''இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் துயில் கொள்கின்றன. இந்த துயில் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றன. எத்தனை விதமான சோகம் இருந்தாலும் ஒரு கணத்தில் கண்களை சொக்க வைக்கும் தூக்கம்தனை எவரும் என்னிடம் வராதே என வெறுத்து ஒதுக்க இயலாது. தூக்கம் வந்தே இயலும். நாம் கொட்டாவி விடும்போதே நமது மூளை தூங்கிக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டது. நமது செயல்பாட்டில் வேகமானது குறைந்து போய்விடக் கூடும். இறைவனுக்கு கூட இந்த இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. அதனால் தான் அவரை உறங்க வைக்கும் சமய சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சயன நிலையில் இருக்கும் ரங்கநாதர்'' என சொல்லி முடிக்கும் முன்னர் நான் குறுக்கிட்டேன்.

''சாமி, தூக்கம் பத்தி சொன்னீங்க சரி, இப்போ எதுக்கு இறைவன் துயில் கொள்கிறான், சயன நிலை என வம்பு செய்கிறீர்கள்'' என்றேன்.

''இறைவனே துயில் கொள்ளும்போது அவன் படைத்த ஜீவராசிகள் எங்கனம் என்பதை குறிப்பிடவே அவ்வாறு சொன்னேன். அது இருக்கட்டும். இந்த தூக்கத்தின் மூலம் நாம் சாதிப்பது என்ன? இந்த தூக்கத்தினால் நமது உடல் மூலக்கூறுகள் அளவில் என்ன நடக்கிறது என்பதை இதுவரை முழுவதுமாக கண்டு கொள்ள முடிந்தது இல்லை. பகலெல்லாம் இருமல் மூலம் பாதிக்கப்படுவர் தூங்கியபின்னர் இருமலே இல்லாமல் உறங்கிவிடுகிறார். இது போன்ற பல விசயங்கள் புரிபடமாலே இருக்கின்றன என்பதுதான் பரந்தாமனின் விளையாட்டு'' என்றார் சாமியார்.

''பரந்தாமனின் விளையாட்டு என்பதெல்லாம் நீங்கள் ஆடும் விளையாட்டு, தூங்குவதால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கிறது. விளையாடாமல் சொல்லுங்கள்'' என்றேன். எனக்கு அதிகம் தூக்கம் வந்து தொலைப்பதால் அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனும் ஒரு எண்ணம்.

''பரந்தாமனின் விளையாட்டு பற்பல. அதை முழுவதும் கண்டுகொண்டார் எவரும் இல்லை. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின்போது ஆக்சிஜன்  சூப்பர் ஆக்சைடாக ( O2- )  மாறிவிடுகிறது. இது நமது செல்களை பாதிக்க செய்கிறது. அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஜீன்கள் தூங்கும்போது மிகவும் அதிக அளவில் தனது வேலைப்பாடுகளை செய்கின்றன. சதா இறைவன் மீது பக்தி செல்லும் தொண்டர்கள் கூட சிறிது நேரம் இளைப்பாறுதல் அவசியம். மதியம் குட்டித் தூக்கம் போடுகிறேன் என்பது நம்மை சசுறுசுறுப்பாக வைக்கத்தான். அதிகம் சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் வெகுவேகமாக நடைபெறும். அப்போது இந்த சூப்பர் ஆக்சைடு அதிக அளவில் உற்பத்தி ஆகும். அதன் மூலம் ஏற்படும் சேதாரம் சரி செய்ய இந்த தூக்கம் தேவை. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள்'' என்றார் சாமியார்.

''தொண்டர், குண்டர் அப்படி எல்லாம் பேசமா விசயத்தை மட்டும் தெளிவுபடுத்தினால் போதும்'' என்றேன்.

''இதோ உனது பக்கத்தில் உறங்கி கொண்டிருக்கும் இந்த எலி இருபது மணி நேரம் அசராமல் தூங்கும். ஆனால் யானைக்கோ இரண்டு மணி நேர தூக்கம் போதும். ஏனெனில் வளர்சிதை மாற்றம் சிறிய உயிரினங்களில் வெகு வேகமாகவும், பெரிய உயிரினங்களில் மிகவும் மெதுவாகவும் நடைபெறுவதே காரணம். அளவுக்கு அதிகமாக உண்டதால் கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்க வேண்டியதாகிவிட்டது'' என்றார் சாமியார்.

''கும்பகர்ணன் பக்கத்தில இருந்து பாத்தீங்க'' என நான் சொன்னதும்

''''முக்காலமும், எக்காலமும் யாம் அறிவோம், ஆனாலும் தூக்கத்திற்கான இந்த காரணம் தவறு என்போர் உண்டு. வேறு சில காரணங்கள் என நமது உடல் உணவை செரிக்கும்போது உண்டாகும்  சக்தி மூலக்கூறு அளவு குறைந்துவிடும் பட்சத்தில் நமக்கு தூக்கம் வந்தவிடும். இந்த தூக்கம் மூலம் அடினோசின் ஏஎம்பி உருவாக தயாராக இருக்கும். மேலும் மூளையின் நரம்பு மண்டலமானது ஒரு நாளில் பல புதிய புதிய நரம்பியல் பாதையை உருவாக்கி வைத்து இருக்கும். அதில் எது எது அவசியமற்றதோ அதை எல்லாம் நீக்கி நம்மை புத்துணர்வுடன் வைக்கும். அதோடு மட்டுமல்லாமல் நமது மூளை நமது நினைவுகள், கற்று கொண்டவை போன்ற பல விசயங்களை பரிசீலனைக்கு உட்படுத்தவே இந்த தூக்கம் வருகிறது'' என்றார் சாமியார்.

''நீங்க சொன்னது எல்லாம் இயற்கை தேர்வு. தூக்கம் நமக்கு இயற்கை கொடுத்தது. தூக்கம் கிடக்கட்டும், நாம எதுக்கு முழிச்சிட்டு இருக்கனும்?'' நான் கேட்ட கேள்வியில் சாமியார் நிலைகுலைந்து போயிருப்பார் என்றே கருதினேன்.

''நாம முழிச்சிட்டு இருக்கிறதுக்கு எப்போதும் பரந்தாமன் புகழ் பாடத்தான். நாம சாப்பிட, நம்மை பாதுகாக்க, நமது இனத்தைப் பெருக்க நாம முழிச்சிட்டு இருக்கணும்னு சாதாரண மனுசாள் சொல்வாங்க. ஆனா எப்பவும் அவன் புகழ் பாடத்தான் நாம முழிச்சிட்டு இருக்கணும்'' என்று சாமியார் சொல்லி முடித்ததும் சட்டென விழித்தேன்.

''நல்லா குறட்டை விட்டடா'' என அப்பாவும், ''அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கினடா'' என அம்மா சொன்னதும் தூக்கத்தில் வரும் இந்த கனவு மூளையின் வேலையோ? என புரியாது களைத்திருந்தேன்.




Wednesday 26 September 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 10

வெகு வேகமாக அருகில் வந்த அந்த ஆசிரியர் அவனது கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டார். எனக்கு திடுக்கென இருந்தது.

''நீங்கள் என்னை அறைந்ததற்கான காரணம் எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் நினைத்து இருந்தால் என்னை அறையாமல் இதே காரணத்திற்காக இருந்து இருக்கலாம் என்றான் எனது அருகில் இருந்தவன்''.  அந்த ஆசிரியர் மறு பேச்சு பேசாமல் அப்படியே நின்றார். 

''என்னை அடித்த குற்றத்திற்காக உங்கள் மீது என்னால் புகார் செய்ய இயலும், ஆனால் நான் அப்படி ஒன்றும் செய்யப் போவதில்லை'' என்றான் அவன் மேலும். சிறிது நேரம் அங்கு நின்றவர் வேறு எதுவும் பேசாமல் அவரது இருக்கைக்கு சென்றார் அந்த ஆசிரியர். 

இருக்கையில் அமர்ந்தவர் வேறு எதுவும் பேசவில்லை. வகுப்பு மிகவும் அமைதியாக இருந்தது. அப்பொழுது முன் வரிசையில் இருந்த ஒருவன் சார், நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி தொடரலாம் என அவர் சொன்ன வாசகத்தை அப்படியே அச்சு பிறழாமல் சொன்னான். 

''இதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை' என அவன் சொல்லி முடிக்க மீண்டும் எனது அருகில் இருந்தவன் எழுந்து 'நீயும் அவரோட சேர்ந்து வெட்டித்தனமா பேசாதடா' என்றான். 

மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. இம்முறை இவனுக்கு எந்த அறையும் விழவில்லை. We always look for the reasons for our actions. For certain kind of actions, we blame it on something rather than own it ourselves. This is an extra-ordinary behaviour by human beings in the world to protect them from criticism and have a security as well. When I questioned our professor, he could not answer my comment, but he tried to distract by acting in another way. Action for a reason, reason for an action, this is not a proper way. 

அருகில் இருந்தவன் மடமடவென பேசி முடித்ததும் எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. நீ தமிழ் மீடியமா என்றேன். ஆமாம் என்றான் அவன். நானும் தான், எனக்கு நீ சொன்னது விளங்கவே இல்லை என்றேன். முறைத்துப் பார்த்தான். இவன் பேசியதை மாணவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள். 

எதற்கு முறைக்கிற? என்றேன். நான் சொன்னது விளங்கவில்லைன்னு சொன்னியே என்றான். அப்போ முறைக்கிறதுக்கு அது ஒரு காரணம்! என்று நமட்டு சிரிப்பு சிரித்தேன். For an action, there will be a reaction. Action can't be only reason for that reaction. என்றான். எனக்கு ஜிவ்வென கோபம் வந்தது. கோவத்தை அடக்கி வைத்து கொண்ட வேளையில் ஆசிரியர் எழுந்தார். 

''எண்ணங்களை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தால் காரணமும், காரியமும் அடிபட்டு போகும், அதை எனக்கு மிகவும் அருமையாகவே இந்த மாணவன் விளங்க வைத்துவிட்டான். அவனுக்கு எனது நன்றி'' என அவர் சொல்லி முடிக்க அருகில் இருந்தவன் எழுந்து நீங்க எப்போதான் வெட்டித்தனமா பேசறதை நிறுத்திட்டு பாடம் எடுக்கப் போறீங்களோ தெரியலை என்றான். அனைவருமே மீண்டும் சிரித்தார்கள். ஆசிரியரின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. 

அவனை வகுப்பறையை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கத்தினார். அவன் போக மறுத்தான். நீங்கள் எங்களுக்கு ஒன்றும் மனோதத்துவ பாடம் எடுக்க வரவில்லை. அதைப்போல தத்துவ இயல் ஒன்றும் சொல்லி தர அனுப்பி வைக்கப்படவில்லை. நீங்கள் எடுக்க வேண்டிய பாடம் மட்டும் எடுத்தால் போதும். இப்போதே அரை மணி நேரம் செலவாகிவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் என்ன சொல்லித் தர இயலும்? என அவன் பேசியது கண்டு அவரது கோபம் அதிகம் ஆகியது. 

This is my class. I choose what I teach. என்று அவர் கத்தியதும் I choose what I listen என இவன் இங்கிருந்து சத்தம் போட்டான். எனக்கு அருகில் இருந்தவனை அடிக்க வேண்டும் போலிருந்து. அதனால் அவனது காலை ஓங்கி மிதித்தேன். ஆ எனும் அலறல் சத்தம் கேட்டது. சாரி என்றேன். என்னை மீண்டும் முறைத்துப் பார்த்தான். 

அதற்கடுத்து அந்த ஆசிரியர் பாடம் நடத்தும் மனநிலையில் இருப்பதாகவே தெரியவில்லை. இவனை வகுப்பறையை விட்டு துரத்துவதற்காகவே மனித எண்ணங்கள் குறித்தே பேசினார். எப்போதுதான் வகுப்பு முடியும் என இருந்தது. அருகில் இருந்தவனை பிரின்சிபால் அழைப்பதாக சொன்னார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து வந்தவன் அமைதியாக அமர்ந்து இருந்தான். 

மதிய வேளையில் என்ன நடந்தது என கேட்டேன். இனிமே எதிர்த்து பேசினா சஸ்பென்ட் பண்ணிருவேன்னு சொன்னார் என சொல்லி முடித்து கொண்டான். எதிர்த்து பேசறது ஒரு காரணம், உன்னை சஸ்பென்ட் பண்றதுக்கு என சிரித்தேன். நங் என எனது தலையில் கொட்டியவன் சாரி என்றான். காயத்ரியை நோக்கி வந்துவிட்டேன். 

'இன்னைக்கு கிளாஸ் எப்படி?' என்றேன். 'அவன் என்ன லூசா' என்றாள். 'நீதான் கேட்கணும்' என்றேன். 'காரணம், காரியம். நீ என்ன நினைக்கிற' என்றாள். கர்மம் என்றேன். 'என்ன சொல்ற' என்றாள். அதாவது கர்ம வினை. கற்றறிந்த மாந்தர்கள் கூட இந்த கர்ம வினைக்கு தப்பிக்க முடியாது. எல்லோரும் சிக்கி அல்லாடனும் அதுதான் இந்த உலகியல் நியதி'. 

'ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம், காரியம்' என்றாள். 'ம்ம் சில ஏத்துக்க முடியும், சில ஏத்துக்க முடியாது' என்றேன். 'என் அப்பாவை நினைச்சாத்தான் இன்னும் என்னால தாங்கிக்க முடியலை' என்றாள். அவரைப் பத்தி பேச வேணாம்னு சொல்லியாச்சு என்றேன். 'மனசு கேட்கலை' என்றாள். அவளது கைகளை பிடித்தபோது சில்லென இருந்தது. 

'காயத்ரி, இனிமே கவலைப்படாதே. மறந்துரு' என சொன்னதும் சரி என தலையாட்டினாள். மீண்டும் வகுப்பு. எனக்குப்  பிடித்த ஒரு ஆசிரியர் வந்து இருந்தார். அவர் பேசியது தாலாட்டு போன்று இருக்கவே நன்றாக தூங்கிவிட்டேன். என்னை எவரோ தொடுவது போன்றே உணர்ந்து முழித்து பார்த்தேன். அந்த ஆசிரியர் எனது அருகில் சிரித்து கொண்டு இருந்தார். 

நாளைக்கு வரும்போது தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துட்டு வா, அதோ அங்க நல்லா படுத்து தூங்கலாம், எதுக்கு சிரமப்படற, அடுத்த வகுப்பு ஆரம்பிக்க போகுது என சொல்லிவிட்டு நான் பதில் ஏதும் பேசும் முன்னர் அவர் வகுப்பை விட்டு வெளியேறினார். வகுப்பே அமைதியாக இருந்தது. பக்கத்தில்  இருந்தவர்கள் என்னை மாட்டிவிட்ட மகிழ்வில் இருந்தார்கள். 'தூங்கு முருகேசு, தூங்கு' என எல்லோரும் ஒரு சேர சத்தமிட்டார்கள். அவர்களது சத்தத்தில் எனது தூக்கம் தொலைந்து இருந்தது. 

அன்று மாலையில் காயத்ரியிடம் எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ன நடத்தினார் என கேட்டேன். நினைவுகள் பற்றி நடத்தினார் என்றாள். நான் கேட்கும்போது தூக்கம் பற்றித்தானே ஆரம்பித்தார், அதுதான் தூங்கிட்டேன் என்றேன். காயத்ரி சிரித்தது எனக்கு மகிழ்வாக இருந்தது. தூக்கம் பற்றி பேசினவர் நினைவுகள் பற்றி பேசினார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது என்றாள். நமக்கு மிகவும் பிடித்தமான்வைகள், பிடிக்காதவைகள், பாதிப்புக்கு உள்ளாக்கினவைகள் என  இவைகளை நாம் அவ்வளவு எளிதா மறக்கவே மாட்டோம்னு சொன்னார். தெரிஞ்சது தானே என்றேன். ஆனா காலையில என்ன சாப்பிட்டோம்னு மறந்திருவோம்னு சொன்னார். 

அப்படின்னா என்னை நீ மறக்கவே மாட்டியா என்றேன் நான். யோசித்தவள் கர்ம வினை என்றாள். எனக்கு  குழப்பமாக இருந்தது. 

(தொடரும்)

Friday 21 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 5

கிராமம் நோக்கிய பயணம். மின்சார தட்டுபாடு பற்றி இதுவரை ஒன்றும் அறிய வாய்ப்பு இல்லை. சென்னையில் கால் வைத்ததில் இருந்து கிராமத்திற்கு வந்த ஒரு நாள் வரை மின்சாரம் நின்றதாக தெரியவே இல்லை. மின்சார வெட்டு என்றெலாம் பேசினார்களே என யோசிக்க தோணியது. ஆனால் அன்று இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மின்சாரம் வெட்டப்பட்டது. மின்சாரம் மீண்டும் ஒரு மணிக்கு வந்தது. இந்த வேளையில்  யுபிஎஸ் உதவியது. அடுத்தடுத்து மின்சாரத் தட்டுபாடு வெகுபாடு படுத்தியது. ஒருமுறை ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. மறுமுறை அதுவும் கும்பாபிஷேக விழா செல்ல காலையில் எழுந்து தயாராக மின்சாரம் இல்லாமல் போனது. யுபிஎஸ் இருந்தும் உபயோகமின்றி இருந்தது. எப்பொழுது மின்சாரம் வரும் என காத்திருந்ததுதான் மிச்சம். 

தினம்தோறும் மதுரை பயணம். துணிக்கடைகள். பாத்திரக்கடைகள். வேறு என்ன சொல்ல. பல வருடங்கள் கழித்து ஒரு நாள் மாலையில் மீனாட்சி அம்மன் ஆலயம் சென்ற திருப்தி. பணம் எதுவும் கொடுக்காமல் சாதாரண வரிசையில் நின்று சென்றபோது அலாதி இன்பம். அப்போது கூட்டம் அவ்வளவாக இல்லை. கோவில் சுற்றி வந்தபோது சரியான கூட்டம். நல்லவேளை முன்னரே சென்று வந்தோம் என நினைத்துக் கொண்டோம். 

மதுரையில் கிளி ஜோசியரை தேடித் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்குமே கிளி ஜோசியரை காண இயலவில்லை. கடைசிவரை கிளி ஜோசியமே பார்க்க இயலவில்லை. இந்த ஜோசிய அனுகூலங்கள் எல்லாம் ஒருவகையான பொழுதுபோக்கு. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த ஜோசியம், நட்சத்திரம் எல்லாம் பித்தலாட்டங்கள், இதனால் நான் அடைந்த பாதிப்புகள் நிறைய என இந்த கிளி ஜோசியம் பற்றி பேசியபோது வெகுண்டு எழுந்த ஒரு மாணவியின் வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கத்தான் செய்தது.

இந்தியாவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் குறைவு என்று சொல்வார்கள். இதற்கு காரணம், உறவு, பந்தங்கள் எல்லாம் இருப்பதால் ஆறுதலுக்கு என இருப்பார்கள், அதன் காரணமாக மன அழுத்தம் வர வாய்ப்பு குறைவு என்பார்கள். ஆனால் இன்று மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டு கொண்டு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். 

கேரளாவிற்கு பயணம். எங்கு சென்றாலும் ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் ஆகிவிடுகிறது. படகு வீட்டில் ஒரு நாள் தங்கிய அனுபவம் நன்றாகவே இருந்தது. அதற்கு முன்னர் பதநீர் குடிக்க வேண்டும் என பல நாள் ஆசையை கேரளா செல்லும்போது வழியில் காரை நிறுத்தி குடித்தோம். பதநீர் பதநீர் போன்றே இல்லை. பாட்டில்களில் அடைத்து விற்றார்கள். அளவுக்கு அதிகமாக குடித்ததால் வாந்தி எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் பெரும் அவஸ்தை தான். அதற்கு பின்னர் ஒரு முறை பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கதை எல்லாம் அப்பப்பா. விமான நிலையம் செல்வோமா, மாட்டோமா என பெங்களூர் நகருக்குள்ளேயே வழி தெரியாமல் இரண்டு மணி நேரம் செலவழித்தது. மதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர் - மதுரை. இரண்டே தினத்தில் சென்று வந்ததும் மூன்றாம் நாள் எங்கும் செல்ல முடியாத நிலை. 

என்றுமே செல்லாத குற்றாலம் இந்த முறை செல்ல வாய்ப்பு வந்தது. அருவிகளில் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது. குற்றாலத்தில் வந்து தங்கி விடலாமா என்கிற சீதோஷ்ண நிலை. ஒரு திருமணத்திற்கு சென்றபோது திருமணம் முடிந்த மறுகணமே மனிதர்கள் பறந்து போயிருந்தார்கள். 

சில நண்பர்கள் கோவித்து கொண்டார்கள். ஒரே ஒரு நண்பர் பல வருடங்கள் கழித்து வந்து பார்த்தார். பழைய கதைகள் பேசிய பொழுது நன்றாகவே இருந்தது. உறவினர்கள் எவரும் பார்க்க வேண்டும் என வரவில்லை. நானாக தேடி சென்று பார்த்த வரை மட்டுமே. 

இந்தியா என்றால் உறவுகள் , விருந்தோம்பல். திருவிழாக்கள். என்ன சொல்லி தந்தது இந்தியா என்று எண்ணி பார்க்கையில் என்ன நான் கற்று கொண்டேன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. திருவள்ளுவர் சொன்னதுதான். கனியிருப்ப காய் கவர்ந்தற்று. இந்தியா என்றுமே நல்லதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. எடுத்துக் கொள்பவர்கள் மாறிவிட்டார்கள். 

முற்றும். 

Wednesday 19 September 2012

கசாப்பு கடைக்காரர் கையில் காப்பு கட்டலாமா?

இந்தியா பயண கட்டுரைத் தொடரில் இருந்து சற்று விலகிச் செல்லலாம் என நினைக்க வைத்த ஒரு விசயம் இது. பொதுவாகவே இந்த இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் மனிதனை ஒரு கட்டுபாடுக்குள் இருக்க கொண்டு  வரப்பட்டவைதான் என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை, இருப்பினும் இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் எந்த அளவுக்கு பின்பற்ற முடியும் என்பதில் ஒரு பல பரீட்சையே செய்து கொள்ளலாம் என்றுதான் எண்ணத் தோணுகிறது.

 சென்ற வருடம் லண்டனில் உள்ள கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்ற போது, கையில் காப்பு கட்டச் சொன்னார்கள். இந்த பிரமோற்சவம் வருடாந்தோரும் ஆகஸ்ட் மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும். பத்து நாட்களில் கடைசி ஞாயிறு அன்று தேர்த்திருவிழா நடைபெறும். திங்கள் கிழமை அன்று விழா இனிதே முடிவடையும். இப்படி இருக்கும் பட்சத்தில் சில கட்டுபாடுகள் சொன்னார்கள். மனைவியுடன் உறவு கொள்ளாது இருத்தல். அசைவ உணவு சாப்பிடாது இருத்தல், சுருக்கமாகஸ் சொன்னால் அக சுத்தம், புற சுத்தம் என சுத்தமாக இருத்தல். லண்டனுக்கு வெளியில் செல்லாது இருத்தல் போன்ற கட்டுபாடுகள். நான் ஏற்கனவே ஸ்பெயின் தீவான மயோர்கா செல்ல முடிவு எடுத்து இருந்ததால் காப்பு கட்ட வேண்டாம் என நினைத்து காப்பு கட்ட மறுத்துவிட்டேன்.

ஆனால் இந்த வருடம் காப்பு கட்ட வேண்டிய சூழல் வந்தது. முதலில் வேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஏனெனில் எனக்கு இது போன்ற சடங்கு சாத்திரங்களின் கட்டுபாடுக்குள் சிக்கி கொள்ள விரும்புவதில்லை. இதைக் கட்டினால் இது எல்லாம் செய்யக் கூடாது என சொல்லப்படும்போது அதைக் கட்டிக்கொண்டு செய்யக் கூடாததை செய்தால் என்ன நடக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் சற்று அதிகமாகவே உண்டு. எனக்கு காப்பு கட்ட வேண்டிய நேரம் வந்தபோது ஐயர் சற்று அதிகமாகவே தயங்கினார். எனது மன நிலை அவர் அறிந்து வைத்து இருந்தாரா என தெரியவில்லை. விழா முடிந்ததும் கேட்டுவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

சரி, கட்டுங்கள் சாமி என்று சொல்லி கெட்டியாக கட்டியாகிவிட்டது. எதுக்கு கட்டினோம் எனும் மனநிலை வேறு. வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் காப்பு கட்டிவிட்டு வந்துவிட்டேன் என காட்டினேன். எதற்கு இதெல்லாம் என்றே கேட்டார்கள். ஏனெனில் நான் எப்போதுமே இதுபோன்று செய்து கொண்டது இல்லை. கட்டிவிட்டு விட்டார்கள் என்றேன் அப்பாவியாய். உங்கள் சம்மதம் இல்லாமலா கட்டினார்கள் என்றதும் இல்லை வேறு வழியின்றி கட்டிக்கொண்டேன் என சொன்னதோடு நாம் எனது கையில் காப்பு இருக்கும் வரை சற்று தள்ளி இருக்க  வேண்டும் என்றேன். இதை  மீண்டும் மீண்டும் சொல்லி வைத்தேன். அருகில் அருகே தூங்குவது கூட தவறோ என்று மனைவி சொல்ல அதெல்லாம் எவர் சொன்னது என்று அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றே சொல்லியாகிவிட்டது.

முதல் நாள் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் அன்பின் மிகுதி அதிகமாகவே இருந்தது. அடுத்த நாள் இரவு மிகவும் அன்பாக பல விசயங்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில் எங்கள் இருவருக்குள் ஒன்றுமே இல்லாத விசயம் குறித்து கருத்து வேறுபாடு வந்தது.  ஏதேனும் ஒரு மாலை வேளையில் ஒரு புது வீடு பார்க்கலாமா என்றார் மனைவி. நானோ இந்த பத்து நாட்கள் என்னை எங்கும் அழைக்காதே என்று சொன்னேன். இதுதான் நடந்தது. அதற்கடுத்து எதற்கு பத்து நாட்கள் எதுவும் செய்ய கூடாது என்று ஆரம்பித்து சின்ன ஊடல். எனக்கோ என்ன இது என தோணியது. நம்மை இறைவன் பிரித்து வைக்க சதி பண்ணுகிறான் என்று காப்பு மீது பழியை போட்டு விட்டு இரண்டாம் கழிந்தது. காப்பு குறித்து எனது மனைவி சற்று பயந்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காப்பு கையில் இருக்கிறது, கவனம் என்றே சொன்னார். அன்னியோன்யம் அநியாயத்திற்கு விலகி நின்றது. எனக்கே ஆச்சர்யம்.

மூன்றாம் நாள் மீண்டும் சகஜ நிலை. அன்றுதான் நினைவு வந்தது, அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும், அங்கே இந்த வாரம் கிட்டத்தட்ட ஐம்பத்தி நான்கு கினி பிக்ஸ் கொல்ல வேண்டும் என. அது எனது ஆய்வகத்தில் உள்ள மற்ற நபரின் வேலை. அவருக்கு முன்னரே இதே வேலையில் உதவியதால் இந்த முறையும் செய்ய வேண்டிய நிலை. இந்த வேலையை ஒரு வாரம் தள்ளிப்போட்டு இருந்து இருக்கலாம். ஆனால் காப்பு கட்டப் போகிறேன் எனும் நினைப்பு எல்லாம் முன்னரே இல்லை. அதனால் எல்லா கினி பிக்ஸ் வந்து சேர்ந்துவிட்டது. செய்தே ஆக வேண்டிய சூழல்.  அடடா, ஆராய்ச்சி வேலையில் பல உயிரினங்களை கொல்ல வேண்டி இருக்கிறதே, இதை மறந்து கையில் காப்பு கட்டிவிட்டோமே என நினைத்தேன். அதை மனைவியிடம் சொல்லி வைக்க, உங்களை எல்லாம் எவர் காப்பு கட்ட சொன்னது என்றார்.

வேலைக்கு சென்றேன். கையில் இருக்கும் கயிறு குறித்து தற்போது எவரும் கேள்வி கேட்கவில்லை. இதற்கு முன் சில வருடங்கள் முன்னர் இந்தியா சென்று திரும்பிய போது கையில் கோவிலில் வாங்கிய கருப்பு கயிறு கட்டி இருந்தேன். வேலை இடத்தில் ஒரு உணவு விருந்தில் கையில் என்ன கருப்பு கயிறு என சைனா மாணவன் கேட்க நான் பதில் சொல்லும் முன்னரே கடவுள் நம்பிக்கை இல்லாத எனது ஆசிரியர் அந்த கயிறு இவன் உயிரை காப்பற்றும் என்று சிரித்து வைத்தார். அன்று மாலையே கயிறுதனை கழற்றிவிட்டேன். இந்தியாவில் இருந்தபோது எல்லாம் முருகன் டாலர் வைத்த கயிறு, கையில் கருப்பு கயிறு. அட அட என்ன பக்தி மாயம். எல்லாம் தொலைந்து போனது, என்னையும் சேர்த்து.

முதல் நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. அடுத்த நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. கையில் இருந்த காப்பு மனதை உறுத்தவே இல்லை. எந்த ஒரு விசயத்திற்கும் காழ்ப்புணர்வு கழித்த மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்றே உலகில் சொல்லி இருக்கிறார்கள். காப்பு கட்டிய காரணத்தால் மட்டுமே அக சுத்தம், புற சுத்தம் கவனிக்க வேண்டிய ஒன்றில்லை. அக சுத்தம், புற சுத்தம் எல்லாம் எல்லா நேரங்களிலும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை எவரேனும் மனித குலத்திற்கு பொட்டில் அடித்தாற்போல் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தினம் தினம் கையில் இருக்கும் காப்பு நினைவுறுத்துவதை போல சொல்லி வைப்பார்களா?

இதற்குதான் இந்த மதத்தில் கசாப்பு கடைக்காரர் மற்றும் நிமிடந்தோறும் நாராயண நாராயணா என சொல்லும் நாரதர் கதை உலகுக்கு சொல்லப்பட்டது. கசாப்பு கடைக்காரர் மோட்சம் அடைந்ததை கண்டு, உன் பெயரையே இரவும் பகலும் உச்சரிக்கும் தனக்கு இன்னமும் மோட்சம் கிட்டாதது குறித்து நாராயணரிடம் கேட்கிறார் நாரதர். அதற்கு நாரணனோ இதோ இந்த கிண்ணத்தில் இருக்கும் எண்ணையை கொட்டிவிடாமல் சுற்றி வா என்கிறார். சுற்றி வருகிறார் நாரதர். எத்தனை முறை நாராயணா சொன்னாய் என்கிறார் நாரணன். நமோ நாராயணா, எனது கவனம் எல்லாம் கிண்ணத்தில் இருக்கும் எண்ணை கொட்டிவிடக்கூடாது என்பதில் தான் இருந்தது, பெயர் உச்சரிக்கவே மறந்து போனேன் என்கிறார் நாரதர். நாராயணன் சிரிக்கிறார். நாரதர் அர்த்தம் புரிந்து கொள்கிறார். இறைவன் பெயரில் மட்டும் சுத்தம் என விரதம், முடி கட்டுதல், பாதை யாத்திரை நடத்தல் என செய்வதை விட எல்லா காலங்களிலும் மனிதர்கள் நியாயம், தர்மம் என கட்டுபாடுக்குள் இருக்க ஒரு காப்பு வேண்டும். அதை எங்கே பெறுவது, எப்படி எல்லாருக்கும் கட்டுவது? 

Friday 14 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 4

முதலில் நல்லியில் துணிகள் வாங்கலாம் என ஐயர் அழைத்து சென்றார். வேஷ்டிகளும், துண்டுகளும் மட்டுமே அதிகமாக வாங்கினார். நல்லியில் முடித்து கொண்டு லிஸ்ட் கொடுத்த பொருட்கள் வாங்க மீண்டும் அதே இடத்திற்கு சென்றோம். ஆடி கார்த்திகை என்பதால் கோவிலில் கூட்டம் நிறைந்து இருந்தது, அதோடு அந்த பாதையை அடைத்து வைத்து இருந்தார்கள். காரினை நிறுத்த எங்குமே இடம் இல்லை. என்ன செய்வது என புரியாமல் முழித்து நின்றோம். 

அப்போது ஒரு சின்ன கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்த பக்கத்தில் அப்படி அப்படியே கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடம் நோக்கி காரினை நிறுத்தினோம். ஐயர் பைக்கில் முன்னமே அந்த இடம் சென்று இருந்ததால், டிரைவர் நண்பர் காரிலிருந்து கடையை நோக்கி சென்றார். அப்போது ஒரு வேன் பக்கத்தில் வந்து நின்றது. மற்றொரு கார் எங்கள் கார் மறித்து நின்றது. எப்படி இந்த வேன், கார் எல்லாம் எடுப்பது என மலைப்பாக இருந்தது. 

நிறைய பொருட்கள் என்பதால் ஒரு சைக்கிள் ரிக்சாவில் கொண்டு வருகிறோம் என தகவல் வரவே காத்து இருந்தோம். அதே போல எடை நிரப்பும் வண்டி ஒன்றில் அனைத்து பொருட்களும் வந்து இருந்தது. அதற்கு முன்னர் அருகில் இருந்த வேன் மிகவும் குறுகிய இடைவெளியில் அந்த இடத்தை விட்டு சென்றது கண்டு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் காருக்கு முன் இருந்த கார் அப்படியே நின்று கொண்டு இருந்தது. 

சாக்கு மூட்டைகள் காரின் பின்புறம் ஏற்றினார்கள். துரியோதனன் தனது வீட்டினை வைக்கோல் மூலம் அடைத்து விட்டது போல காரின் பின்புறம் அடைக்கப்பட்டது. ஹோமம் கட்டைகள் சில வண்டியின் மேற்புறம் போட்டார்கள். அதே குறுகிய இடைவெளியில் கார் பயணித்தது கண்டு ஹூம் என்றே பெருமூச்சு விடத் தோணியது. எத்தனை நெரிசல்களிலும் லாவகமாக கார் ஓட்ட வேண்டுமெனில் இந்தியாவில் மட்டுமே கற்று கொள்ள இயலும். 

கார் பயணித்த சில வினாடிகளில் போக்குவரத்து போலீசார் காரினை ஓரம் கட்ட சொன்னார். மறுபடியும் குளிர் தாளுக்கு பிரச்சினையா என நினைக்க, டிரைவர் நண்பர் சென்று பேசிக்கொண்டே இருந்தார். என்ன பிரச்சினையோ என தெரியாமல் காருக்குள் அமர்ந்தே இருந்தோம். திரும்பி வந்தவர் காரில் லோடு ஏற்றியது குற்றம் என சொல்வதாக சொன்னார். அப்போது இன்சூரன்ஸ் படிவம் கேட்க இவரோ இரண்டு நாட்கள் காலாவதியாகிப் போன இன்சூரன்ஸ் படிவம் வைத்து இருந்தார். புதுப்பிக்கப்பட்ட இன்சூரன்ஸ் படிவம் வீட்டில் இருப்பதாக சொல்ல எனக்கோ 'அடக்கடவுளே' என்று இருந்தது. கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் வரை கேட்பதாக சொன்னார். சரி கட்டிவிட்டு வாருங்கள் என்றேன். அதெல்லாம் தேவையில்லை என சொன்னவர் போலிஸ் ஒருவருக்கு தொலைபேசி போட்டு பேசினார். 

அந்த நேரம் வந்த ஐயர் சென்று அவர்களிடம் பேச, அவர்களோ மிகவும் உறுதியாக இருப்பதாகவே தெரிந்தது. நம் மீது தான் குற்றம், இதில் அவர்கள் மீது என்ன கோபப்பட வேண்டி இருக்கிறது என்று நினைத்தே நான் எப்போதுதான் காரினை விடுவார்கள் என யோசித்தவாறே அமர்ந்து இருந்தேன். காரினை பிடித்து வைத்துக் கொள்வார்களா என்று அப்பாவியாய் கேட்டேன். இதோ வருகிறேன் என டிரைவர் நண்பர் சென்றார். அவர் கையில் வைத்து இருந்த போனை எடுத்து போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்தார். அவரும் சிறிது நேரம் பேசிவிட்டு இவரிடம் போனை கொடுத்தார். சிறிது நேரத்தில் டிரைவர் நண்பர் முன்னூறு ரூபாய் கட்டிவிட்டு வந்தார். அந்த ரசீது பார்த்தபோது வேகமாக சென்றதற்காக அபாரதம் போட்டு இருந்தது. ஹூம் இந்தியா. 

எல்லோரும் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள். நேர் வழியில் இங்கே வாழ்வது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் இந்த இந்தியாவை ஒருபோதும் சீர்திருத்த போவதில்லை. இன்சூரன்ஸ் படிவம் வைக்காத குற்றத்திற்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். லண்டனில் எல்லாம் இன்சூரன்ஸ் படிவம் எல்லாம் கையில் வைத்து இருப்பதில்லை. கார் எண் தட்டினால் போதும், காரின் மொத்த வரலாறும் தெரியும். இன்சூரன்ஸ் புதுபிக்கபட்டதா நகல் வேண்டும் என்று வேறு அந்த போலீசார் கேட்டாராம். அங்கேயே பேக்ஸ் வசதி வைத்து இருந்தால் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி ஏதேனும் தவறு எனினும் இத்தனை நாளுக்குள் நகல் அனுப்பி வை என விட்டுவிடலாம். காரினில் லோடு ஏற்ற கூடாது என்பதற்கான சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. 

எனக்கு இனி எத்தனை போலீசார் பிடிப்பார்களோ எனும் அச்சம் வேறு. அடுத்த நாள் ஹோட்டலில் இருந்து கிளம்பும் முன்னர் இன்சூரன்ஸ் படிவம் வந்தால் மட்டுமே காரை எடுத்து செல்லலாம் என நான் சொல்லி வைத்தேன். அதைப்போலவே டிரைவர் நண்பரின் அண்ணன் அங்கும் இங்கும் அலைந்து மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். கிராம பகுதியில் ஸ்கேன், பேக்ஸ் எல்லாம் வசதி ஒன்றும் பெருகிவிட வில்லை. டிரைவர் நண்பர் எவ்வளவோ சொல்லியும் நான் இன்சூரன்ஸ் படிவத்துடன் தான் செல்ல வேண்டும் என சொன்னது வீணான விசயமாகவே இருந்தாலும், முக்கியமான விசயமாகவே எனக்கு தெரிந்தது.  அதற்கு பின்னர் எவரும் காரை பிடிக்கவே இல்லை. 

நகரத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என நினைத்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு வரை செல்ல வேண்டிய நிர்பந்தம். எனவே மீண்டும் அதே போக்குவரத்து நெரிசல். விஜயகாந்த் வீடு சென்றபோது மாலை மணி மூன்று. சாலையில் குழி தோண்டி போட்டு இருந்தார்கள். அவரது வீட்டில் காவல் போடப்பட்டு இருந்தது. இருப்பினும் எவரும் எளிதாக செல்லுமாறு வீட்டின் வெளிவாயில் திறந்தே இருந்தது. 

சென்னையில் இருந்து கிராமம் நோக்கிய பயணம். நகரத்தை விட்டு வெளியேறவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிப்போனது. கார் சென்ற வேகம் மிரள செய்தது. இடம் செல்கிறார்கள், வலம் செல்கிறார்கள். ஒரு ஒழுங்கு முறை இல்லை. மெதுவாக செல்லும் வண்டி வலம் செல்கிறது. ம்ஹூம். போதும் போதும் என்றாகிவிட்டது. 

இரவெல்லாம் பயணித்து வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி ஒன்று. அப்பாடா என்று இருந்தது. தமிழகம் மட்டுமே இப்படியா! 

(தொடரும்) 

Wednesday 12 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 3

கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என்பதால் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க லண்டனில் இருந்து வருகை தந்த ஐயர் அவர்களை சந்திக்கும் ஏற்பாடு இருந்தது. நேராக கோயம்பேடு வந்து விடுங்கள் அங்கே இருந்து பாரிமுனை பக்கம் செல்லலாம் என சொன்னார். 

நாங்கள் அவரை சந்தித்த நேரம் மாலை நான்கு மணி மேல் இருக்கும். பைக்கில் வந்தவர் காரில் ஏறாமல் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நேரம் ஆகி கொண்டு இருக்கிறதே, கடைகள் எல்லாம் மூடிவிடுவார்கள் எனும் அச்சம் வேறு. சின்ன சின்ன தெருக்களில் கார் சென்றபோது எத்தனைவிதமான இடைஞ்சல்களில் இந்தியாவில் வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது என எண்ணிக் கொண்டேன். 

அவரது வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் சென்றபோது நேரத்தின் மீதுதான் கண் இருந்தது. சில இயந்திரங்களை  முன்னரே வாங்கி வைத்ததாக காட்டினார். இவர் லண்டனில் ஏற்கனவே பணி புரிந்துவிட்டு மீண்டும் லண்டனில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்காக ஓராண்டு முன்னர் தான் லண்டனில் உள்ள கோவிலில் இணைந்தார். வெளிநாட்டில் பணி புரிவதன் மூலம் வாழ்க்கையின் தரம் உயர்ந்துவிடுவதாக அவர் சொன்னபோது மறுக்க இயலவில்லை. ஆனால் அதற்கடுத்து நான் கண்ட காட்சிகள் இந்தியாவில் உள்ள திறமைமிக்க வியாபாரிகள் போல உலகில் காண்பது சற்று கடினம் தான் என்றே எண்ண தோன்றியது. 

முதலில் தேவையான ஆராதனை பொருட்கள், கலசங்கள், குத்துவிளக்கு, குடை என வாங்கிட மிகவும் குறுகலான தெரு ஒன்றில் சென்றோம். இருபுறமும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவ்வப்போது சாலையில் ஆட்டோ வந்து போய் கொண்டிருந்தது. நடப்பதற்கே மிகவும் கடினமாக இருந்தது. அந்த தெருவில் இருந்த சில கடைகளில் விசாரிக்க ஒரே பொருளின் விலை வேறு வேறாக இருந்தது. சரி என ஐயர் தனக்கு தெரிந்த ஒரு கடைக்கு அழைத்து சென்றார். கடை மிகவும் சிறிதாக இருந்தது. இந்த கடையில் என்ன பொருட்கள் இருந்து விடப்போகிறது என நினைக்க மாடிக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நிற்கவே இடம் இல்லாமல் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. எந்த பொருள் கேட்டாலும் அங்கே வேலை செய்தவர் ஓடோடி எடுத்து காண்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. இல்லாத பொருளை கூட இல்லை என சொல்லாமல் இரண்டு நாட்கள் கழித்து வாங்கி கொள்ளுங்கள் என கணக்கு போட்டபோது ஓரிரு மணி நேரங்களில் லட்சம் ரூபாய்க்கான வியாபாரம்! சில்லறை வியாபார கடைகள் முதலாளிகளிடம் பேசினால் தான் கடைகளின் நிலவரம் புரியும் என நினைக்க கடைகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து போய் கொண்டிருந்தார்கள் மக்கள். 

அடுத்தொரு கடை. அங்கே ஹோமத்திற்கு தேவையான கட்டைகள், குங்குமம் போன்ற பொருட்கள். அந்த கடையும் சிறிதாகத்தான் இருந்தது. நாங்கள் அந்த கடையை சென்றடைந்தபோது இரவு பத்து மணி இருக்கும் என்றே நினைக்கிறேன். கடையை மூடும் நேரம். லிஸ்ட் கொடுங்க, இரண்டு நாள் கழிச்சி வாங்கிகோங்க என்றார். அவரது மேசையில் கணினி இல்லை, கால்குலேட்டர் இல்லை. ஒவ்வொன்றாக சொல்ல விலை போட்டு கொண்டே வருகிறார். இது கிடைக்கும், இது பக்கத்து கடையில்  வாங்கிகொள்ளுங்கள் என வேகமாக சொல்லிக்கொண்டே செல்கிறார். அடுத்து விறு விறுவென மொத்த கணக்கையும் போட்டு காட்டியபோது எனக்கு சரிபார்க்க மனமே வரவில்லை. சரி முன் பணம் கொஞ்சம் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். 

துணிகள் இனிமேல் வாங்கமுடியாது, நல்லி சில்க்ஸ் நாளை வாருங்கள் என ஐயர் இடம் சொல்லி அனுப்ப இரவு சாப்பாடு மெக்டோனல்ட்ஸ் சென்று நாங்கள் சாப்பிட்டோம். நான் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. அவனுக்கு தமிழ் தெரியாதோ என நான் நினைக்க அங்கே வேலை பார்க்கும் மற்றொரு பையனிடம் தமிழில் பேசினான். சரி என நான் மீண்டும் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் மட்டுமே என்னிடம் பதில் சொன்னான். தமிழில் சொல்லுங்க என நான் சொன்னது அவனது காதில் விழவே இல்லை. மொழி தொலைந்து போய் விடும் அநாகரிகம்! நகரத்தில் மட்டுமே இப்படி, அதனால் அச்சப்பட தேவையில்லை என்றே டிரைவர் நண்பர் சொன்னார். 

பன்னிரண்டு மணிக்கு ஹோட்டல் அடைந்தபோது அன்றைய தின அலைச்சல் எல்லாம் தொலைந்திட மீண்டும் பெய்த மழைத் தூறலில் சிறிது நேரம் நடந்தோம். காலையில் எழுந்தபோது எட்டு மணி மேல் ஆகி இருந்தது. கிளம்பி தயாராக பத்து மணி ஆகி இருந்தது. இனி சாப்பாடு கிடையாது என நினைத்து ஹோட்டலில் இருக்கும் உணவகம் செல்ல பத்தரை மணி வரை உணவகம் திறந்து இருக்கும் என்றார்கள். கொஞ்சம் நிம்மதி. இட்லி, பொங்கல் வடை என நமது உணவு. பேசாமல் இந்த உணவுக்காகவே இந்தியாவில் வாழ்ந்துவிட்டு போகலாம் என்றே தோணியது. 

திடீரென எனது மனைவி, அதோ ஒரு நடிகை என்றார் (வீட்டில் சன் டிவி, டிவிடி படம் நாங்கள் பார்ப்பது உண்டு). நாங்கள் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து மூன்று நாற்காலி தள்ளி தனது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார் நடிகை ஜெனிலியா. அவரைப் பார்க்க வேண்டும் என எவரும் ஓடவில்லை. அங்கே பலரும் சாதாரணமாகவே இருந்தார்கள், நாங்கள் உட்பட. அங்கே மிகவும் சாதாரணமாக அவராலும்  இருக்க முடிந்தது. இந்தியாவில் சினிமாவிற்கு என ஒரு தனி இடம், சினிமா கலைஞர்களுக்கு என தனி மரியாதை இருந்தாலும் அங்கே எதுவும் தென்படவில்லை. 

ஹோட்டலில் இருந்து சென்னை வரவே மதியம் ஆகிப்போனது.  மீண்டும் வேறு சில கடைகள் சென்றோம். நல்லியில் சாமிக்கு தேவையான உடைகள் வாங்கினோம். புது நல்லி, பழைய நல்லி என இருப்பது அன்றுதான் தெரிந்து கொண்டேன். சென்னையில் இருந்த சகோதரர் வீடு சென்றோம். அங்கிருந்து மற்றொரு உறவினர் வீடு சென்றோம். மேலும் சில உறவினர்கள் வீடு இருந்தாலும் செல்ல இயலவில்லை. உறவினர் வீடு சென்றபோது இரவு பத்து மணி. தைக்க கொடுக்கப்பட்ட துணி வாங்கிட அன்று முடியாமல் போனது. நாளை எப்படியாவது வாங்கித்தான் ஆக வேண்டும். சென்னையில் இருந்த போக்குவரத்து நெரிசல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல ஆகும் நேரம் எல்லாம் கணக்கில் வைத்து ஹோட்டலில் இருந்து நாளை மறுநாள் அப்படியே அங்கிருந்து நகரத்திற்குள் வராமல் கிராமம் சென்று விடலாம் என நினைத்தோம். 

அடுத்த நாள் வழக்கம்போல காலை உணவு. அன்று போக்குவரத்து போலீசார்... இந்தியா என்றுமே இந்தியாதான். 

(தொடரும்) 

Friday 7 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 2

காரினை நடு சாலையில் நிறுத்திவிட்டு, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களிடம் பேசி அவர்களை அழைத்து வந்தார் டிரைவர். நானும் இறங்கி கொள்கிறேன் என நான் சொல்ல, வேண்டாம் சார் என்றே சொன்னவர் அந்த மூன்று நபர்கள் காரினை தள்ள, கார் ஏனோ கிளம்பவே இல்லை. அவர்கள் காரினை சாலையின் ஓரமாக தள்ளிவிட்டு  சென்றுவிட்டார்கள். 

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் எதுவுமே வேகமாக செல்லாமல் இருந்தது மனதில் அச்சத்தை விலக்கி இருந்தது. மீண்டும் காரில் இருந்து இறங்கிய டிரைவர் வேறு ஆட்களிடம் பேசிவிட்டு வந்தார். வாகனங்கள் கிளம்ப, பேசி வைத்த ஆட்கள் மறக்காமல் வந்து காரினை தள்ளினார்கள். கார் இந்த முறை கிளம்பியது. காரினை தள்ளியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். ஓகே என ஒரு வார்த்தையோடு விலகிப் போனார்கள். யார் இவர்கள்? உதவி என கேட்டதும் ஓடோடி வந்து செய்துவிட்டு போகும் யார் இவர்கள்? 

லண்டனில் ஏழு வருடங்கள் முன்னர் மாலை ஏழு மணிக்கு சாலையில் திடீரென நின்று போன எனது காரினை நான் மட்டுமே தள்ளி சென்ற நினைவுகள் வந்தது. அதிகமான வாகனங்கள் சாலையை அலங்கரித்தாலும் அவரவர் வேகம் அவரவருக்கு தெரிந்தே இருக்கிறது. யார் மீதும் அத்தனை எளிதாக மோதமாட்டார்கள் என டிரைவர் சொன்னபோது எத்தனை நெருக்கடியிலும் வாழப் பழகிப் போன இந்திய சமூகம் மனதோடு நின்றது. 

மகாபலிபுரம் சாலை என நான் தவறாக தகவல் தர, ஈ சி ஆர் சாலையில் செல்லாமல் மகாபலிபுரம் சாலையில் சென்று ஓரிடத்தில் விசாரித்தபோது இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என சொன்னார் ஒருவர். அவர் சொன்ன பின்னர் தான் எனக்கு ஈ சி ஆர் சாலையே நினைவுக்கு வந்தது. ஈ சி ஆர் சாலை நேர் பாதை. மகாபலிபுரம் சாலை சுற்றுப் பாதை. ஒரு வழியாக ஹோட்டல் வந்தடைந்தபோது போதும் போதும் என்றாகிவிட்டது. இத்தனை தொலைவிலா ஹோட்டல் என சற்று அயர்ச்சியாக இருந்தது. சென்னை நகரத்துக்குள் செல்ல மலைப்பாக இருந்தது. 

ஹோட்டல் சென்றதும், அங்கே மாலை போட்டு வரவேற்றார்கள். மிகவும் சிறப்பான வரவேற்பாக இருந்தது. தனியாக வில்லா ஒன்றை பதிவு செய்து இருந்தோம். வில்லாவிற்கு வெளியே ஊஞ்சல். வில்லாவில் இருந்து நடக்கும் தொலைவில் கடல். மிகவும் ரம்மியாமாக இருந்தது. அறையின் அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. திறந்த வெளியில் குளிக்கும் வண்ணம் ஒரு அறை இருந்தது. அந்த அறையை சுற்றிய சுவர் இருப்பினும், வெளியில் இருந்து பார்த்தால் மூங்கில் வைத்து கட்டப்பட்டு இருந்தது. விலை அதிகம் தான். ஆடம்பரத்திற்கு எப்போதுமே விலை அதிகம் தான். சில நேரங்களில் வாய்ப்புகளை பயன்படுத்தாது போனால் வேறொரு வாய்ப்பு அத்தனை எளிதாக வந்துவிடுவதில்லை. சிறிது நேரம் ஒய்வு எடுத்துவிட்டு சென்னை நகரத்திற்குள் சென்றோம். 

வாகனத்தை ஒரு சாலை விதி கண்காணிப்பாளர் நிறுத்தினார். டிரைவர் அவரிடம் சென்று பேசி நூறு ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வந்தார். என்னவென விசாரித்ததில் வாகனத்தின் கண்ணாடியில் குளிர்ச்சிக்காக ஒட்டப்பட்ட தாளினை அகற்ற வேண்டும் எனும் விதி உள்ளது என சொன்னார். இருப்பினும் இது குறித்து வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என சொன்னதும், இதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சொன்னார். எனக்கு ஏனோ எதற்கு விதிகள் மதிக்கப்படுவதில்லை என்றே தோன்றியது. உடனே எடுத்துவிடுங்கள் என டிரைவர் நண்பரிடம் சொல்லிவைத்தேன். மதுரைக்கு சென்ற பின்னர் எடுத்துவிடலாம் என்றே சொன்னார். 

சாலையின் தன்மை என்னை மிரள செய்தது. வேலை நடக்கிறது என எங்கே பார்த்தாலும் சாலைகள் தங்களது அழகை சூறையாடிக் கொண்டிருந்தன. புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பெராஸ் மால் சென்றோம். கட்டிடத்திற்குள் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. ஆடம்பரத்திற்கு விலை மிக மிக அதிகம். மனைவிக்கு மிகவும் சந்தோசம். சிறிய சிறிய கடைகளாக இருந்தாலும் மிகவும் அழகிய பொருட்கள் நிறைந்தே காணப்பட்டன. இந்தியா கலைக்கு மட்டுமல்ல, கலைத்துவம் வாய்ந்த பொருட்களுக்கும் உன்னதமான இடம். கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. ஒரு கடையில் அந்த பொருட்களை செய்து கொண்டிருந்தவரை கண்டபோது பிரமிப்பு மிஞ்சியது. எத்தனை திறமையான மனிதர்களை கொண்டது இந்தியா என்று நினைக்கும் பொது பெருமிதமாக இருந்தது. அவரிடம் நான் பேசிய தமிழ் அவருக்கு புரியாமல் போனதற்கு காரணம் அவர் வடநாட்டினை சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது. 

துணிகள் வாங்கி அங்கேயே தைக்க கொடுத்துவிட, மாலை ஆறு மணிக்கு வாருங்கள் என அவர்கள் சொல்லி வைக்க, நகைக் கடை ஒன்றுக்கு சென்றோம். பணம் இல்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம். மக்கள் நிறைந்த கடைகள் என மறுபக்கம். மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள். எல்லா நாட்டிலும் உண்டு. பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்க இந்தியா ஒன்றே சிறந்த இடம். 

லண்டனில் பழைய நகை கொடுத்தால் பத்து சதவிகிதம் கூட நகைக்கான பணம் தரமாட்டார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே பழைய  நகை எனினும் நகைக்கான பணத்தை ஓரளவு மதிப்புக்கு தருகிறார்கள் என்றே தோணியது. கையில் இருந்த பிளாஸ்டிக் அட்டையை கொடுத்ததும், பணம் எடுக்க இயல வில்லை என கடையில் இருந்த பெண் சொன்னதும் திடுக்கென இருந்தது. சரி என கிரெடிட் கார்ட் வாங்கி பார்த்தால் முடிந்து போன கிரெடிட் கார்ட். அடக்கடவுளே, என்ன செய்வது என திகைக்க எதை உபயோக்கிக்க கூடாது என்று இருந்தேனோ அந்த கார்டுகளை கொடுத்து நிலைமையை சரி செய்து  நகை வாங்கி கொண்டு வெளியே வந்தால் மழை. அந்த மழை சத்தத்தில் எத்தனை முறை சொன்னேன், எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து வாருங்கள் எனும் மனைவியின் அன்பு பாராட்டு வேறு. 

இந்த மழை கிராமப் பகுதியில் விழுந்து தொலைய கூடாதா எனும் ஆதங்கம் மனதை தொட்டு சென்றது. மழை விடும் வரை கடையின் வாசலிலேயே நின்றோம். உடலில் பட்டு தெறிக்கும் மழை குமிழிகள், அந்த மழையோடு வந்து போகும் காற்று. இந்தியா இன்னும் இதமாகவே இருக்கிறது. 

துணிகள் தைக்க கொடுத்த கடைக்கு தகவல் சொல்லலாம் என அவர்கள் கொடுத்து இருந்த அட்டையில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, இந்த எண் தற்போது தொடர்பில் இல்லை என்றே வந்தது. அருகில் இருந்த நபரை தொடர்பு கொள்ள சொன்னேன். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் தொடர்பு பண்ணியவர், இந்த நம்பர் இணைப்புல இல்லையே சார் என்றார். இந்தியா என்னதான் சொல்லி தந்தது?

(தொடரும்) 


Wednesday 5 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா?

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்திய  விடுமுறை பயணம்  முடிந்து போன அலுப்பு மனதை அழுத்தத்தான் செய்கிறது. மீண்டும் விரைவில் இந்தியா செல்ல வேண்டும் எனும் ஆர்வம் இருப்பினும், எப்போது லண்டன் சென்று சேர்வோம் என்கிற மனநிலையை இந்த விடுமுறை பயணம் விதைத்து சென்றது. 

இரண்டு வருடங்கள் முன்னர் சென்ற பயண நினைவுகள் மனதை அழுத்த, காளையார்கரிசல்குளம் ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்தனை முன்னிட்டே இந்த பயணம் முடிவானது. சென்னையில் எத்தனை நாட்கள் தங்குவது என்று சில மாதங்கள் போராட்டத்திற்கு பின்னர் மூன்று நாட்கள் தங்கி செல்லலாம் என முடிவானது. இந்த மூன்று நாட்களில் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்வதாகவே திட்டம், அதோடு சென்னையில் கடைகள் எல்லாம் வேடிக்கைப் பார்த்து செல்லலாம் என நினைத்து தங்குவதற்கு ஹோட்டல் தேடினோம். சென்னையில் இருக்கும் உறவினர்கள் ஏதேனும் நினைப்பார்களோ எனும் எண்ணம் எட்டிப் பார்த்தாலும் ஹோட்டலில் தங்குவது என முடிவு செய்து தாஜ் ஹோட்டல் தெரிவு செய்தோம். இந்த தாஜ் ஹோட்டல் ஒன்று நகரத்திலும், மற்றொன்று நகரத்தை தாண்டியும் இருந்தது. நகரம் வேண்டாம் என முடிவு செய்து ஈ சி ஆர் சாலையில் கோவளம் கடற்கரையில் அமைந்து இருக்கும் விவான்டா தாஜ் ஹோட்டல் முன்பதிவு செய்தோம். 

பெரும் ஆவலுடன் லண்டனில் இருந்து கிளம்பி அதிகாலை சென்னை வந்தடைந்தது விமானம். என்றுமில்லாத திருவிழாவாக மேலும் இரண்டு விமானங்கள் துபாய் மற்றும் இன்னொரு இடத்தில் இருந்து அதே வேளையில் வந்து இறங்க விமானநிலையத்தை விட்டு வெளியே வரும் முன்னர் போதும் போதும் என்றாகிப்போனது. நேராக விளாச்சேரியில் உள்ள ஆள் இல்லாத உறவினர் வீட்டில் சென்று முதலில் இறங்கினோம். புதிதாக கட்டப்பட்ட வீடுகள். அந்த இடத்திற்கு செல்லும் பாதையோ கிராமப் பாதை போல் மோசமாக இருந்தது. 

காலை உணவு சாப்பிடலாம் என கடைக்கு சென்று பொட்டலம் வாங்க சென்றவர்கள் வர நாழிகை ஆகி கொண்டே இருந்தது. ஓரிரு மணி நேரம் பின்னர் அவர்கள் பொட்டலங்கள் வாங்கி வர, சாப்பாடு கடைகள்  எல்லாம் ஏழர மணிக்கு மேல் தான் திறப்பார்கள் என்றதும் இத்தனை தாமதமாகவா திறப்பார்கள் என்றே மனம் எண்ணியது. 

லண்டனில் இருந்து எங்களுடன் வந்து இருந்த உறவினர்கள் கிராமம்  நோக்கி கிளம்பி செல்ல நாங்கள் ஹோட்டல் நோக்கி சென்றோம். மதியம் இரண்டு மணிக்கு பின்னர் தான் அறை கிடைக்கும் என்றாலும், வாருங்கள் அறை காலியாக இருந்தால் தருகிறோம் என ஹோட்டல் பணியாளர் வர சொல்லவே தைரியமாக சென்றோம். 

இரண்டு வருடங்கள் முன்னர் வாங்கிய கார். சோளிங்கநல்லூர் அருகில் சென்றபோது சென்னையில் போக்குவரத்து நெரிசலை புரிந்து கொள்ள முடிந்தது. திடீரென எங்களது கார் நின்று போனது. எத்தனையோ முறை முயற்சி செய்தும் கார் கிளம்பவே இல்லை. சாலை நடுவே கார். இருபுறங்களிலும் வாகனங்கள் விலகி சென்று கொண்டு இருந்தது. காரினை தள்ளிவிட்டால் கிளம்பிவிடும், பேட்டரி பிரச்சினை என டிரைவர் சொல்ல எவர் வந்து தள்ளுவது என நினைக்க, எங்கள் இருவரை காரிலியே இருக்க வைத்துவிட்டு காரினை அப்படியே விட்டுவிட்டு டிரைவர் இறங்கி சென்றதும் திக் திக் என்று இருந்தது. பயமுறுத்திய கார். 

(தொடரும்)