Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Wednesday 2 September 2009

சனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா?

என்ன சொல்வது? எவ்வளவு தூரம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என முன்னேறினாலும், நாடுவிட்டு நாடு போனாலும் இந்த தின பலன்கள், வார பலன்கள், மாத பலன்கள் ஆண்டு பலன்கள் படிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான். அதுவும் குருப்பெயர்ச்சி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றின் முக்கியத்துவம் குறித்து தனிப் புத்தகங்கள் இருக்கக் கூடும்.

இதில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை விட அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் எனப் படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகமே உண்டு. நமது ராசியைப் போலவே உலகில் எத்தனையோ பேர்கள் இருக்க, அத்தனை பேரும் ஒரே மாதிரி வாழ்க்கை வாழாமல் இருப்பது தெரிந்தும் வாசிப்பது என்பதை மட்டும் விடத் தோணுவதில்லை. அதுவும் எழுதியதை வாசித்துவிட்டு அதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டே இருப்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

விளையாட்டுச் செய்திகள் படித்துவிட்டு கண்கள் நோக்குவது என்னவோ இன்றைய பலன்கள் செய்தியைத்தான். செய்தியில் உண்மையில்லாமலும் இருக்கக் கூடும். மேலும் ஒரு நண்பர் சொன்னது என்னவெனில் எந்த ராசி எனத் தெரியாமலே ஒரு ராசியை எடுத்துக்கொண்டு இதுதான் நம் ராசி எனப் படித்தாலும் கூட சரியாகவே இருக்குமாம். ஆனால் ராசி தெரிந்த காரணத்தினால் பிற ராசிகளைப் படிக்கும்போது அப்படி எனக்குத் தோன்றவில்லை. மனைவியின் ராசிக்குத் தவிர பிற ராசிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதில் படிப்பதில் ஒரு பிடிப்பும் இருப்பதில்லை, இருப்பினும் எழுதியவரின் மனநிலை என்ன என அறிந்து கொள்ள அனைத்து ராசிகளையும் ஒரு கண்ணோட்டம் விடுவதுண்டு.

இப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள் படித்தபோது பல ராசிகளுக்கு ஒட்டுமொத்தமாக சரியில்லை எனும் வகையில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்க நேர்ந்தது. அடடா, எழுதுபவர்கள் நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் எல்லாமே நன்றாக நடக்கும் என எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு ஒருவித மன சந்தோசம் ஏற்படுமே என்றுதான் தோணியது. வேறு எவரேனும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றுப் பார்த்தால் ஆம் ஒருவர் எழுதி இருந்தார், சனி சங்கடம் தருவார் என பயப்பட வேண்டாம் எனும் தொனியில் அனைத்து ராசிகளுக்கும் அமைந்து இருந்தது. எப்படியிருப்பினும் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதிகமே.

'மடியில் கனமிருந்தால் வழியில் பயம்' என சொல்வார்கள், அதுபோல நாம் முறையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இடப்பெயர்ச்சியாளர்களால் எதுவும் நேராதுதான், ஆனால் முறையான வாழ்க்கையையா நாம் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என கணப் பொழுது யோசித்தால் இந்த இடப்பெயர்ச்சியாளர்கள் இடம்பெயராமலே இன்னலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான். இப்போ சொல்லுங்க, சனிப்பெயர்ச்சி பலன் படிச்சாத்தான் பயம் வருமா?

ஆவலுடன் ராசிகளைப் படிக்க நினைத்து இருப்பீர்கள், அதனால் நான் விரும்பிப்படிக்கும் மாத ராசி பலன்களின் இணைப்பு இதோ. இவர் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும், மாதம் ஒரு முறை மறக்காமல் படித்துவிடுவது உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.