Tuesday 26 November 2013

நுனிப்புல் பாகம் 3

முன்னுரை 

முன்னோர்களுக்கு எல்லாம் தெரிந்துதான் இருந்திருக்கிறது, ஆனால் எப்படி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் இறுக்கமாக இருந்துவிட்டார்கள். ஏதேனும் ஒன்றின் மீது தன் கருத்தை சொல்வதையே பழக்கமாக வைத்து இருந்து இருக்கிறார்கள். காய்ச்சல் வந்தால் ஒரு மரத்தின் பட்டை காய்ச்சல் குறைத்துவிடும் என்றெல்லாம் சிந்திக்க தெரிந்து இருக்கிறது. தாவரங்களை வைத்தே பல அரிய விசயங்களை அவர்கள் சொல்லி சென்று இருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்கட்டும். 

வாத்தியார் பையன் மக்கு என்பது கூட அறிவாற்றல் என்பது மரபணுக்கள் மூலம் கடத்தப்படுவதில்லை என்பதை சொன்ன ஒரு வாக்கியம் தான். இன்றைய உலகம் மரபணுக்களால் சூழப்பட்டு இருக்கிறது. தாய் சொன்னால் மட்டுமே குழந்தையின் தந்தை யார் என்பது தெரிந்தது போய் இப்போதெல்லாம் மரபணு சோதனை செய்தே நிரூபிக்கிறார்கள். 

குளோனிங், தேர்ந்தெடுத்தல் முறை என்றெல்லாம் மனித உயிர்களின் சிருஷ்டியை கடவுளிடம் இருந்து எடுத்துக் கொள்ள முயன்று கொண்டு இருக்கிறார்கள். கடவுள் இனி நன்றாக இளைப்பாறலாம். இனி பிரம்ம காலங்கள் நமக்கு அவசியம் இல்லாமல் போகலாம். ஆண், பெண் எனும் இருபாலர் சேர்ந்து வாழும் அமைப்புகள் காலப்போக்கில் தொலைந்து போகலாம். 

ஓரிடத்தில் இருந்து பிறிதோர் இடம் செல்லும் காலம் குறைந்து கொண்டே வருகிறது. தகவல் தொடர்புகள் மிக அதிவேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. சிந்தனைகளை பிறரிடம் செலுத்த அதற்கான தொழில்நுட்பம் பெருகி வருகிறது. மருத்துவ துறையின் சாதனைகள் என எத்தனையோ பெருகிக் கொண்டே இருக்கின்றன. 

இருப்பினும் இது போன்ற எந்தவித சலனத்துக்கும் ஆட்படாத மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் உலகம் தனி. அந்த உலகத்தில் அவரை சுற்றி இருப்பவர்களும், அவர்களது கிராமமுமே வாழ்க்கை. விவசாயம்தனை இன்னும் பற்றிக்கொண்டு வாழும் சமூகம் மொத்தமாக ஒன்றும் தொலைந்து போய்விடவில்லை. 

வெயில், மழை என அல்லாடிக் கொண்டு இருக்கும் எனது சமூகம் இருக்கத்தான் செய்கிறது. கனவுலகில் சஞ்சரிக்கும் ஆசைகளை அது தேக்கி வைத்து இருக்கிறது. படிப்பின் அவசியம் வலியுறுத்தி மனிதாபிமானம் தொலைக்கும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்க ஆசைப்படுகிறது. கல்விக்கு செல்வத்தை விரயமாக்கி அனுபவ பாடம் தனை கற்றுக்கொள்ள மறுத்து வரும் சமூகம் கண்டு சற்று தள்ளியே நிற்கிறது. 

வானாளவிய கட்டங்கள், இரைச்சல் கூடிய பேருந்துகள், விவசாய நிலங்களை கூறு போட்டு செல்லும் ரயில் பாதைகள், சாலைகள் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு இன்னும் பழைய நம்பிக்கைகள் மீது பற்று வைத்து சாமி பார்த்துக்கொள்ளும் எனும் ஓரிரு சொல்லில் நிம்மதியாக தூங்கி பொழுதை கழிக்கும் சாவடி மனிதர்கள் இன்னும் சஞ்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

நமக்கான உலகம் வேறு என்றாகிப் போனபின்னர், நமது உலகம் தவிர வேறு உலகம் இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அந்த உலகத்தில் சில அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த அதிசயங்கள் அலட்சியப்படுத்தபடுகின்றன. அலட்சியபடுத்தபடாமல் லட்சியமாக்கி தொடர்கிறது வாழ்க்கை. இது நாவல் அல்ல... மனிதர்கள்.

Monday 25 November 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 21

காயத்ரி தூங்க சென்று இருந்தாள். அந்த இரவில் கோரனிடம் இருந்து போன் வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

''இன்னைக்கு அந்த வாத்தியானை போட்டு தள்ள முடிவு பண்ணிட்டேன்''

''அதை ஏன் என்கிட்டே சொல்ற, சொல்றவன் செய்யமாட்டான், செய்றவன் சொல்லமாட்டான்''

''உன் பேரை எழுதி வைச்சிட்டு போக போறேன், உனக்கு தான் இந்த வாத்தியானை பிடிக்காதே''

''எழுதி வைச்சிட்டு போ, கையெழுத்து என்னை மாதிரியா இருக்காது''

தைரியமாக பேசினாலும் எனக்குள் இனம் புரியாத பயம் வந்து தொற்றி கொண்டது. பேரைப் போலவே கோரபுத்தி உடையவனாக இருக்கிறானே, என்னை எதற்கு இந்த வம்பில் மாட்டிவிட வேண்டும்.

''போய் உன்னோட பையில இந்த வாத்தியானோட பாட நோட்டு இருக்கானு பாரு, அதுதான் தடயம்''

மறுமுனையில் போன் துண்டிக்கப்பட்டது. திரும்ப அழைத்து பார்த்தேன், அதற்குள்ளாகவே இணைப்பு முற்றிலும் இல்லாமல் போனது. எனக்கு வியர்க்க ஆரம்பித்து இருந்தது.

வேகவேகமாக பையில் நோட்டினை தேடினேன். அவன் சொன்னது போலவே அந்த நோட்டினை காணவில்லை. நெஞ்சு படபடவென அடித்து கொண்டு இருந்தது. மயங்கி விழுந்துவிடுவது போன்ற உணர்வு. காயத்ரியின் அறையினை மெல்ல தட்டினேன். கதவினை மெதுவாக திறந்து அறையில் விளக்குதனை போட்டேன். அவள் அழகாக தூங்கி கொண்டு இருந்தாள்.

''காயூ''

''ம்ம்''

''எழுந்திரு காயூ, ஒரு பிரச்சினை''

சட்டென விழித்தாள். அதற்குள்ளா இப்படி உறங்கிப் போனாள். கனவு என எதுவுமே காண மாட்டாளா?

''என்ன முருகேசு''

படபடப்புடன் விசயத்தை சொல்லி முடித்தேன்.

''சரி, காலையில பாத்துக்கிரலாம்''

''அவன் சாரை கொல்லப்போறான், நீ என்ன இவ்வள அசால்ட்டா சொல்ற''

''அவன் கொல்லமாட்டான், வேணும்னா அவர்கிட்ட இவன் சாவான்''

''காயூ''

''கவலைப்படாம, நீ தூங்கு முருகேசு''

''எப்படி தூங்குறது''

''இங்க தூங்கு, நான் உன்னோட ரூமில தூங்குறேன்''

''எனக்கு என்னோட ரூமில தூங்க தெரியாதா, அவன் திருப்பி போன் பண்ணுவானோ''

''என்ன திடீர் பயம் உனக்கு''

''கொலையை தடுக்கனும், பழி பத்தி பயமில்லை''

''சொன்னா கேளு, எதுவும் நடக்காது''

காயத்ரியின் அறையை விட்டு வெளியேறினேன். உடைகள் மாற்றினேன். வீட்டில் எவரிடமும் சொல்லாமல் கதவை வெளியில் பூட்டிவிட்டு வெளியேறினேன். அந்த நடு இரவில் ஆசிரியரின் வீட்டினை அடைந்தபோது மணி சரியாக 11.00.

ஆசிரியர் வீட்டின் வாசலில் கோரன் நின்று கொண்டு இருந்தான்.

''நீ இங்கு வருவாய் என எனக்கு தெரியும்''

''எதற்கு இப்படி ஒரு விபரீத விளையாட்டு''

''நான் வகுப்பில் சொன்னது மறந்து போனயா''

''அதுதான் அவர் சொன்னாரே, அது ஒரு தற்கொலை''

''அவர் சொன்னா அதை நீ நம்பிருவியா''

''அதுக்கு எதுக்கு என்னை இதுல வம்புக்கு இழுக்கிற''

''சுபத்ரா''

''யார் சுபத்ரா''

''சுபத்ராவை தெரியாது?, உன்னோட உண்மை காதலி''

''கோரன், வேண்டாம்''

''என்னடா வேண்டாம், சின்ன வயசுல இருந்து அவ உன்னை காதலிப்பா, நீ இன்னொருத்திய காதலிப்ப, அதை வந்து உன்கிட்ட சொன்னா, நீ அவளை உதாசீனப்படுத்துவ, இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, இப்பவும் சொல்றேன், நீ சுபத்ராவை ஏத்துக்கோ, காயத்ரியை எனக்கு விட்டுக் கொடுத்துரு, இல்லைன்னா நீ கொலை கேசுல உள்ள போக வேண்டி இருக்கும்''

சுபத்ராவை இவனுக்கு எப்படி தெரியும்? என்ற யோசனையில் மனம் சென்றது. அதோடு எனது காயத்ரி மீது இவனுக்கு என்ன ஆசை.

''கோரன், சுபாவை எப்படி உனக்கு தெரியும்''

''உன்கிட்ட கதை பேச நான் என்ன சினிமா வில்லன்னு நினைச்சியா, உன் பக்கத்தில உட்கார்ந்து இருந்தா நான் என்ன உன்னோட உயிர் நண்பன்னு கனவு கண்டியா''

இனிமேலும் தாமதிக்க கூடாது என அவன் எதிர்பாராதபோது அவனது மூக்கில் இரண்டு மூன்று என எண்ணிக்கொண்டே குத்துகள் விட்டேன். அந்த குத்துகளின் வேகத்தில் அவன் நிலைகுலைந்து போனான். அவன் வைத்து இருந்த பையில் உள்ள நோட்டினை எடுத்து கொண்டேன். படுபாவி, கத்திகள் இரண்டு வைத்து இருந்தான்.

பின்னந்தலையில் ஓங்கி ஒரு அடி வைத்தேன். மயக்கமாகி இருக்க வேண்டும். அப்படியே படுத்துவிட்டான். அவனை தரையில் இழுத்துக் கொண்டு ஆசிரியரின் வீட்டினை தட்டினேன். சிறிது நேரத்தில் கதவு திறந்தது.

''என்ன இந்த நேரத்தில''

''சார், இவன் உங்களை கொல்ல வந்தான்''

''யாரு''

''கோரன்''

மயங்கி கிடந்த கோரனை ஆசிரியர் பார்த்தார். வீட்டினுள் தூக்கி சென்றோம். மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. மூக்கினை மேல்வாக்கில் உயர்த்தி பிடித்தவர், தண்ணீரால் முகம் தனை துடைத்தார். விழித்து பார்த்தவன்

''நீங்க யாரு?''

நான் திடுக்கிட்டேன்.

''டேய் நான் முருகேசுடா, இவர் நம்ம சார்டா''

அவன் சுற்றும் முற்றும் பார்த்தது கண்டு எனக்கு மிகவும் பதட்டமானது.

''இவனோட வீடு தெரியுமா?''

''தெரியும் சார்''

''சரி வா, இவனை அவங்க வீட்டுல விட்டுட்டு வருவோம்''

''எப்படி சார், இந்த நிலைமையில''

''சொல்றதை செய்''

கோரனை எனது வீட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டேன்.

''சார், நான் அவங்க வீட்டுல விட்டுட்டு போறேன்''

''அவங்க அப்பாவை பார்த்து நான் சொல்லிட்டு வரனும்''

இனி எதுவும் செய்ய முடியாது என புரிந்து கொண்டு கோரன் வீட்டினை அடைந்தோம். அவருடைய காரில் தான வந்தோம். வரும் வழியில் கோரன் எங்க போறோம், நீங்க யாரு என்றே கேட்டு கொண்டிருந்தான். நடுத்தர வயது உடையவர் வீட்டு கதவினை திறந்தார்.

''உங்க பையன் என்கிட்டே படிப்பு சம்பந்தமா சந்தேகம் கேட்க வந்தவன் கிளம்பி போறப்ப கீழே தவறி விழுந்துட்டான், இப்போ தன் நினைவு இல்லை. அதான் விட்டுட்டு போக வந்தேன்''

''சரி, போ''

''நீங்க யாரு, இது யார் வீடு''

''கோரன், இது உன்னோட வீடு''

''முருகேசு, கிளம்பு அவங்க அப்பா பாத்துக்கிருவார், வா உன்னை ட்ராப் பண்ணிட்டு போறேன்''

''இல்லை சார், நான் போய்கிறேன்''

கோரன் வீட்டுக்குள் சென்றதை பார்த்து கொண்டே இருந்தேன். எனக்குள் அளவில்லா பயம் வந்து சேர்ந்தது. கதவு சாத்தப்பட்டது. வீட்டின் சன்னல் ஓரம் எனது காதை வைத்தேன்.

''போன காரியம் என்னடா ஆச்சு''

''நம்ம சுபத்ரா சொதப்ப வைச்சிட்டாப்பா''

''அவகிட்ட எதுக்குடா இந்த விசயத்தை சொன்ன''

''நேத்து அவளை எதேச்சையா பார்த்தேன், அப்போதான் இந்த முருகேசு பயலை பத்தி எல்லாம் சொன்னா. அதனால இவனை இதுல கோர்த்து விடலாம்னு திட்டம் போட்டேன். அவன் என்னை அடிச்சி மயக்கமாக்கிட்டான்''

''அந்த வாத்தியானை பதிமூணாவது நாள் காரியம் ஆக முன்னாடி முடிக்கனும்டா. இந்த முருகேசு கருகேசு எல்லாம் இதுல சேர்க்காதே''

''நான் பாத்துக்கிறேன்பா''

எனக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

(தொடரும்) 

Wednesday 20 November 2013

நான் சைவத்திற்கு மாறிய கதை

எங்கள் வீட்டில் எப்போதாவது அதுவும் விசேச தினங்களில் மட்டுமே மட்டன், சிக்கன் என வாங்குவார்கள். 'மக்காளி மாமா'தான் ஆட்டுக்கறி எல்லாம் விற்பனை செய்வார். எனக்கு இந்த ஆட்டுக்கறி, கோழி என்றால் பிடித்தும் பிடிக்காமலே இருந்தது. 

எங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடுகள், கோழிகள் கூட இரையாகி இருக்கின்றன. பலமுறை வேண்டா வெறுப்பாகவே சாப்பிட்டு இருக்கிறேன். முட்டை என்றால் மிகவும் விரும்பியே சாப்பிட்டு இருக்கின்றேன். அதுவும் எங்கள் வீட்டில் புரட்டாசி மாதம் என்றால் முட்டை கூட பொறித்து தரமாட்டார்கள். இதனால் எங்கள் வீட்டிற்கு எதிராக இருக்கும் 'உப்புநக்கி அவ்வா' வீட்டில் சென்று பிரத்தியோகமாக எனக்கென முட்டை பொறித்து சாப்பிட்டு வந்து இருக்கிறேன். 

ஒரு முட்டை இருந்தால் போதும், பழைய சாதம்தனை சாப்பிட்டுவிட்டு போய்விடுவேன் என வீட்டில் சொல்லுமளவுக்கு அத்தனை பிரபலம். உத்தங்குடியில் கல்லூரியில் படித்த போது நானும் எனது நண்பர் ராஜேசும் மதுரைக்கு சென்று ஆளுக்கொரு முழுக்கோழி சாப்பிட்டு வந்து இருக்கிறோம். 

உத்தங்குடியில் இருந்த கடை ஒன்றில் தினமும் ஒரு முட்டை கொத்து புரோட்டா சாப்பிடாமல் சென்றதில்லை. புரோட்டா அத்தனை அருமையாக இருக்கும். காத்திருந்து சாப்பிட்டு சென்று இருக்கிறோம். புரோட்டாவை போட்டு அதனை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் அழகே தனி. சமீபத்தில் நான் எழுதிய காமக் கதைகளுக்கு எப்பவும் மவுசு அதிகம் என்பதில் இந்த உத்தங்குடி கடையும், நாங்கள் கடைசி வருடத்தில் தனியாக எடுத்த வீடுமே எனது கற்பனையில் வந்து போயின. நாங்கள் ஐவர் தங்கி இருந்தோம், தினமும் காலை, மதியம் இரவு என அந்த கடையில் ஒருமுறையாவது கறியுடன் சேர்ந்தே சாப்பிடுவது உண்டு. மாதம் அறுநூறு ரூபாய் என வந்துவிடும். கல்லூரி முடிக்கும் தருவாயில் இந்த அசைவம் மீது சற்று வெறுப்பு வரத் தொடங்கி இருந்தது. 

அசைவமாக இருப்பது சற்று அசௌகரியமாக இருந்தது. விடுமுறை நாளில் வீட்டுக்கு சென்றால் வறுத்த ரத்தம், ஆடு கோழி என அம்மா சமைப்பது உண்டு. எனக்கு பிடிக்கவில்லை என சொன்னாலும் அம்மா சமைக்காமல் விட்டதில்லை. கல்கத்தாவில் படித்தபோது  மீன் சாப்பிட ஆரம்பித்தேன். அதன் முள்ளை விலக்கி சாப்பிடுவது பெரிய போராட்டமாகவே இருக்கும். அங்கே கடைகளில் முட்டையை உள்ளே வைத்து முட்டை ரோல் செய்து தருவார்கள். எப்படியும் ஒன்றாவது தினமும் சாப்பிட்டு விடுவேன். இப்படி வெறுப்புடனே அசைவத்தை மிகவும் ரசித்து சாப்பிட்டு வந்தேன். 

சென்னையில் கல்லூரியில் வேலை பார்த்தபோது கடைகளுக்கு சென்று சாப்பிடும்போது சிக்கன் எல்லாம் மிச்சம் இருந்தால் ராதாவிற்கு தந்துவிடுங்கள் என சொல்லுமளவுக்கு சிக்கனை சாப்பிடவே செய்தேன். ஆனால் ஏதோ உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. ஒருமுறை வீட்டிற்கு சென்றபோது அம்மா மட்டன் சமைத்து இருந்தார்கள். வேண்டாம் என்றே பிடிவாதம் பிடித்தேன். ஆனால் அவர்களோ நான் சாப்பிட்டே தீர வேண்டும் என சொன்னார்கள். வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு வைத்தேன். அம்மா உலகில் இல்லாது போனால் இந்த அசைவம் தொடக்கூடாது என முடிவு செய்தேன். அப்போதுதான் எனக்கு திருமணம் எல்லாம் செய்யும் திட்டம் உச்ச கட்டம் அடைந்து இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அம்மா எனக்கு திருமணம் ஆகுமுன்னரே இறந்து போனார்கள். நான் சைவம் ஆவது என முடிவு எடுத்தேன். அம்மா இறந்தபின்னர் மூன்று மாதங்கள்  முட்டை மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தேன். 

திருமணம் நிச்சயம் ஆனது. மனைவியாக வர இருந்தவரிடம் என அசைவ கதையை சொன்னேன். அவர் அசைவம் சாப்பிடுவதில்லை என சொன்னார். அதோடு முட்டையும் சாப்பிட மாட்டேன் என சொன்னார். அப்படி எனில் நானும் முட்டையை விட்டுவிடுகிறேன் என முழு சைவமாக மாறினேன். நீ எங்காவது சாப்பிட்டு வந்தால் எனக்கு என்ன தெரியும் என்றே ஒருமுறை மனைவியாக வந்தவர் சொல்லிவிட மனதில் உறுதி கொண்டேன். குளிர் நாட்டிற்கு வந்ததும் அசைவம் சாப்பிட சொல்லி வற்புறுத்தினார்கள், நான் சைவம் மட்டுமே சாப்பிட்டேன். நான் சைவத்திற்கு மாறியது மனைவிக்காகவே என பலரும், என் மனைவியோ என் அம்மாவுக்காக தான் நான் மாறினேன் என சொல்லிக் கொள்வார்கள். 

நான் சைவத்திற்கு மாறிய பின்னர் சில கனவுகள் கூட வந்தது உண்டு. நான் அசைவம் சாப்பிட்டுவிட்டு அலறியது போன்ற கனவுகள். ஒருமுறை முட்டை சாப்பிட்டுவிட்டு நான் செத்து போனேன் என்றெல்லாம் கனவு கண்டு இருக்கிறேன். கொடுத்த வாக்கு மீறக்கூடாது என்பதில் நான் கொண்டிருந்த பற்றுதான் அது. சைவத்திற்கு மாறி இன்றுடன் பதினைந்து வருடங்கள் மேல் ஆகிவிட்டது. வருடம் ஒருமுறை மருத்துவரை பார்க்க சென்றால் மீன் சாப்பிடு, முட்டை சாப்பிடு என அறிவுரை சொல்கிறார்கள். நான் புன்னகையுடன் அவர்களை கடந்து செல்கிறேன். 

என்னைப் பார்த்து ஒருவர் வைணவனா எனக் கேட்டார். எனக்கு எல்லா சமய கதைகளும் பிடிக்கும் என்றே சொல்லி செல்கிறேன். சாப்பாடு விசயத்தில் நான் சைவம் என்று சொன்னால் அது ஒரு சமய அடையாளம் என்று கூட அர்த்தப்படுத்தப்படும். அப்படித்தான் என்னை பலரும் கேட்டார்கள். நான் சைவம் என்றால் உங்கள் மதம் சொன்னதா என்றே கேட்டார்கள். மனைவி சொன்னது என இந்த சைவம் மாறிய கதை எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.